Tuesday, June 7, 2016

தன்னை உயர்த்த அடுத்தவரை தாழ்த்தலாமா?

DINAMANI

By இரா. சோமசுந்தரம்

பிகார் மாநிலத்தில் இன்டர்மீடியட் தேர்வு முடிவுகளில் மாநில அளவில் தரவரிசையில் இடம்பெற்ற முதல் 14 மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி, உண்மையாகவே அந்த கேள்விகளுக்கு அவர்கள்தான் விடையளித்தார்களா என்பதைக் கண்டறிந்துள்ளது அம்மாநில கல்வித் துறை.
 இதற்குக் காரணம், அந்த மாணவ, மாணவிகளிடம் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டி கண்ட போது, அடிப்படையான கேள்விகளுக்கும்கூட அவர்கள் தப்பான பதில்களை அளித்ததாக ஒளிபரப்பாகி, பிகார் மாநிலத்தின் கல்வித்துறையை கேலிக்கு இடமாக்கியுள்ளது என்பதுதான். இருப்பினும், பிகார் மாநில கல்வித் துறை இவ்வளவு அவசர அவசரமாக, அவர்களுக்குத் தேர்வு நடத்தும் முடிவுக்கு வந்திருக்க வேண்டியதில்லை.
 தமிழ்நாட்டில் தரவரிசையில் இடம்பெற்ற மாணவர்களைக்கூட இவ்வாறு திடீரென கேமிரா முன்பாக நிறுத்திவைத்து, கேள்விகள் கேட்டால், அந்த மாணவ, மாணவியர் பதற்றமாகிவிடுவார்கள். அவர்களால் சரியாக பதில்சொல்ல முடியாது. 
 ஆங்கிலத்தில் 100 மதிப்பெண் வாங்கிய மாணவரிடம் ஒரு வடநாட்டு தொலைக்காட்சி நிறுவனம் நுனிநாக்கு ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால், அவரால் அந்தக் கேள்வியைப் புரிந்துகொள்வதே கடினமாக இருக்கும். 
 அந்தக் கேள்விக்கு ஆங்கிலத்திலேயே "பொளந்துகட்ட' வேண்டும் என்று அந்த தொலைக்காட்சி நிறுவனம் எதிர்பார்த்தால், அவ்வாறு நடக்கவில்லை என்பதற்காக அந்த மாணவரைத் தரம் தாழ்த்தினால், அதை நாம் அனுமதிப்போமா?
 தரவரிசையில் இடம்பெறும் மாணவர்கள் பலருக்கு விடையை மனப்பாடமாக எழுத மட்டுமே தெரியும். அவர்களிடம் பதிலைச் சொல்லும்படி சொன்னால் திணறிப் போவார்கள். கோர்வையாக எடுத்துவைக்கத் தெரியாது. 
 ஏனென்றால், அவர்களது பயிற்சி முழுதும், ஒவ்வொரு நாளும், ஒரே மாதிரியான கேள்விக்கு ஒரே மாதிரியான விடைகளை எழுதிக்கொண்டே இருப்பதுதான். கேள்வியை கண்கள் பார்க்கும், விடையை கைகள் எழுதும். மூளைக்கு அங்கே வேலையே இல்லை. மதிப்பெண் பெறுவதற்காக விடைகளை எழுத மட்டுமே பயிற்சி தரப்படுகிறது. 
 பெங்களூருவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சுதா மூர்த்தி (இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மனைவி) ஒரு பள்ளியில் சிறுவர்களுக்காக தான் எழுதிய கதையை வாசித்தார். அப்போது ஒரு சிறுவன் எழுந்து, உங்களுக்குப் படிக்கத் தெரியவில்லை என்று கூறினான். ஆசிரியர்களின் மழுப்பல்களை மீறி, அந்தச் சிறுவனிடம் அவர், ஏன் அப்படிச் சொன்னாய்? என்று கேட்டார். 
 பேசியதில் அந்தச் சிறுவன் பள்ளி நாடகத்தில் ஏற்றஇறக்கத்துடன் பேசிப் பழகியிருந்ததை அறிந்துகொண்டு, "என் கதையைப் படிக்க முடியுமா?" என்று அந்தச் சிறுவனிடம் கேட்டார். சிறுவனும் கதையை வாசித்தான்; சுதா மூர்த்தியைவிட மிக அழகாக! "அப்போதுதான் எனக்குப் புரிந்தது. எழுத மட்டுமே எனக்குத் தெரியும்!' என்று கட்டுரையை முடிக்கிறார் சுதா மூர்த்தி.
 இன்றைய கல்விச் சூழலில் பல மாணவ, மாணவியருக்கு எழுத மட்டுமே தெரியும். அவர்களை குறுக்குக்கேள்வி கேட்டு, மடக்குவது எளிது. அதை புத்திசாலித்தனமான அராஜகம் அல்லது அறிவீனம் என்று எப்படியும் எடுத்துக்கொள்ளலாம். பிகாரில் குறை கூறப்பட்டுள்ள இந்த ஏழு மாணவ, மாணவியரும் ஒரே இடத்தில் தேர்வு எழுதியவர்கள் அல்லர். அவர்களும்கூட கேள்விக்கு, இயந்திரத்தனமாக, புரிதல் இல்லாமல் பதில் எழுதியவர்களாக இருக்கலாம்.
 ஒரு தொலைக்காட்சி நிறுவனம், ஒரு மாநிலத்தின் கல்வித் தரத்தை சோதிப்பதாக இருந்தால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாநிலத்திலும், மாவட்ட அளவிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் பட்டியலை எடுத்து, அந்த மாணவர்கள் இப்போது என்னவானார்கள்? அவர்கள் உயர் கல்வியில் தேர்ச்சி பெற முடிந்ததா? 
 அதே அறிவுத்திறத்துடன் கல்லூரிகளைவிட்டு வெளியேறி, பேரும் புகழும் மிக்கவர்களாக அறிவுலகில் இயங்குகிறார்களா என்பதை தேடிச் சென்று, மதிப்பீடு செய்வதுதான் சரியாக இருக்க முடியும். அதுதான் கல்வித் துறையின் பலவீனங்களை அம்பலப்படுத்துவதாக அமையும். அதைவிடுத்து, மாணவ - மாணவியரை கேள்வி கேட்டு, அவர்களை அறிவு இல்லாதவர்களாக சித்திரிப்பது முறையற்ற செயல்.
 காப்பியடித்தல், வினாத்தாள் முன்கூட்டியே வெளியாதல், வேறுநபர் தேர்வு எழுதுதல் எல்லாவற்றுக்கும் சாத்தியம் இருக்கிறது என்றாலும், இத்தகைய பேட்டி வெளியானவுடன், பிகார் மாநில கல்வித் துறை அதிகாரிகள் அந்த மாணவ, மாணவியர் படித்த பள்ளியில் அவர்களது காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை எடுத்துப் பார்த்து ஒப்பீடு செய்திருக்கலாம். அப்பள்ளியின் மற்ற மாணவர்களிடம் அவர் உண்மையாகவே வகுப்பறையில் சிறந்து விளங்கினாரா என்று விசாரித்திருக்கலாம். அதைவிடுத்து, மறுதேர்வு நடத்தியது தவறான முன்னுதாரணம். 
 நாடு முழுவதும் கற்பித்தல் முறை, மதிப்பிடும் முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்; ஒரு மாணவர் ஒரேயொரு தேர்வில் பெறும் மதிப்பெண் மட்டுமே அவருடைய கல்வித்திறனாக மதிக்கப்படும் நிலை மாற வேண்டும் என்பது உண்மை. 
 மேலும், ஒரு கல்வியாண்டில் இரு பருவம் அல்லது மூன்று பருவத் தேர்வுகளில் கிடைக்கும் மதிப்பெண்களின் சராசரியைக் கொண்டு மதிப்பிடவாகிலும் செய்யலாம். தற்போதைய கல்வி நடைமுறைகள் சரியில்லை என்பதற்காக, தரவரிசையில் இடம்பெறும் மாணவர்கள் புத்திசாலிகள் அல்ல என்பதை இப்படியெல்லாம் நிரூபிக்க வேண்டியதில்லை.
 கல்வித் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்துவது மட்டுமே ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் குறிக்கோளாக இருந்தால், பாராட்டலாம். டி.ஆர்.பி. ரேட்டிங்கை (தொலைக்காட்சி தரப் புள்ளியை) உயர்த்திக்கொள்வதற்காக இப்படியா?

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...