Tuesday, June 28, 2016

எம்ஜிஆர் 100 | 95 - கருணை உள்ளம் கொண்டவர்!

தான் வளர்த்த கரடிக் குட்டிக்கு எம்.ஜி.ஆர். உணவு கொடுக்கிறார்.

M.G.R. விலங்குகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். தன்னுடன் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் நடிகர்களுக்கு அடிபட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார். அதேபோல, விலங்குகளுக்கும்கூட ஆபத்து ஏற்படக் கூடாது என்று நினைப்பார். தன் வீட்டிலேயே சில விலங்குகளை வளர்த்து வந்தார்!

எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு அவரது படங்களில் வரும் சண்டைக் காட்சி கள் சர்க்கரைப் பொங்கல். அவ ருடன் சண்டைக் காட்சிகளில் நடித்த நடிகர்களில் ரசிகர்களால் மறக்க முடி யாதவர் ஜஸ்டின். ‘ரகசிய போலீஸ்’, ‘அடிமைப் பெண்’, ‘இதயக்கனி’, உட்பட எம்.ஜி.ஆரின் கடைசிப் படமான ‘மது ரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை பல படங்களில் ஜஸ்டின் நடித்துள்ளார். அவரது ஆஜானுபாகுவான தோற்றத் தையும் சண்டைக் காட்சிகளில் திறமை யையும் பார்த்த எம்.ஜி.ஆர்., தன்னுடைய பல படங்களில் பெரும்பாலும் தனித்தே மோதும் வாய்ப்பை ஜஸ்டினுக்கு வழங்கினார். அவை படத்தின் ‘ஹைலைட்’டாக இருக்கும்.

‘இதயக்கனி’ படத்தில் பெங்களூர் அரண்மனையில் ஜஸ்டினுடன் மோதும் சண்டைக் காட்சியின் இறுதியில், எம்.ஜி.ஆர். அடித்ததும் மாடிப் படிகளில் குப்புறப்படுத்தவாறே ஒவ்வொரு படியாக தடதடவென்று ஜஸ்டின் சறுக்கி விழும் காட்சி ரசிகர்களின் கைதட்டலைப் பெறும். இதுபோன்ற காட்சிகளில் நடிப் பவர்களுக்கு அடிபடாமல் இருப்பதற் கான உத்திகளை அவர்களுக்கு எம்.ஜி.ஆரே சொல்லிக் கொடுப்பார்!

அந்த அளவுக்கு நடிகர்கள் மீது அக் கறை கொண்டவர். அந்த அக்கறையால் தான், புகழ்பெற்ற தயாரிப்பாளரும் இயக்குநருமான கே.சுப்பிரமணியம் மற்றும் திரைத்துறை வல்லுநர்கள் சேர்ந்து 1950-ம் ஆண்டு உருவாக்கிய ‘தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை’ அமைப்பையும், பின்னர் உருவான ‘தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம்’ என்ற அமைப்பையும் தொடர்ந்து, எம்.ஜி.ஆரின் முயற்சியால் 1952-ம் ஆண்டு ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ உருவானது. ஆரம்ப காலத்தில் அந்த சங்கம் இயங்க தன் வீட்டிலேயே ஒரு பகுதியை ஒதுக்கிக் கொடுத்ததோடு, பின்னர், இப்போது சென்னை தியாக ராய நகரில் உள்ள இடத்தை வாங்கு வதிலும் முக்கிய பங்காற்றினார். சுமார் 22 கிரவுண்டு உள்ள அந்த இடம் அப்போது 75 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டது. வசூலான 35 ஆயிரம் போக மீதமுள்ள 40 ஆயிரம் ரூபாயை எம்.ஜி.ஆர். தனது சொந்தப் பணத்தில் இருந்து கொடுத்து உதவினார்!

ஒரு தாய், நான்கு குழந்தைகளை வைத்தபடி இருக்கும் நடிகர் சங்க இலச்சினையை உருவாக்கியதும் எம்.ஜி.ஆர்.தான்! அந்த இலச்சினை பொறித்த மோதிரத்தை நீண்ட காலம் அணிந்திருந்தார். நடிகர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்து அதன் வளர்ச்சிக்குப் பணியாற்றியுள்ளார்.

‘வேட்டைக்காரன்’ படத்தின் கிளை மாக்ஸில் 20 அடி உயரமான இடத்தில் இருந்து ஸ்டன்ட் நடிகர் கே.பி.ராம கிருஷ்ணன் கீழே விழ வேண்டும். அவர் விழும் இடத்தில் பாம்புகள் இருக்கும். ராமகிருஷ்ணனைப் பார்த்து எம்.ஜி.ஆர்., ‘‘கீழே மெத்தை போடச் சொல்லட்டுமா?’’ என்றார். ‘‘இல்லண்ணே, நான் பார்த்து குதிச்சுடறேன்’’ என்றார் ராமகிருஷ்ணன்.

பின்னர், எம்.ஜி.ஆர். கூறிய வார்த்தை கள், வாயில்லா ஜீவன்களையும் அவர் எப்படி நேசித்தார் என்பதைக் காட்டும். ராம கிருஷ்ணனிடம், ‘‘பாம்புகள் மேலே படாமல் பார்த்து குதிக்கணும். பாம்புகள் மேலே விழுந்தால் அவை செத்துடும், பாவம்’’ என்று கூறினார்.

‘நல்ல நேரம்’ படத்தில் எம்.ஜி.ஆர். நான்கு யானைகளை வளர்ப்பார். தினமும் படப்பிடிப்புக்கு வரும்போது யானைகளுக்காக நிறைய உருண்டை வெல்லம், கரும்பு, வாழைத் தார்கள் வாங்கி வந்து யானைகளுக்குக் கொடுப்பார். அவைகள் சாப்பிடுவதைப் பார்த்து ரசித்து மகிழ்வார்!

தனது வீட்டில் கரடிக் குட்டியையும் நாய்களையும் எம்.ஜி.ஆர். வளர்த்து வந்தார். கரடிக் குட்டி தினமும் காலையில் அவர் கையால்தான் ஃபீடரில் பால் குடிக் கும். தன் வீட்டில் வளரும் மிருகங்களை கவனிக்க தனியே ஒரு மருத்துவரையும் நியமித்திருந்தார். கரடிக்கு மூக்கில் சங்கிலி இணைக்க வசதியாக மருத்துவரின் உதவியுடன் துளையிட முயன்றபோது அது இறந்துவிட்டது. எம்.ஜி.ஆர். மிகவும் வேதனைப்பட்டார்.

வீட்டில் இரண்டு சிங்கங்களையே எம்.ஜி.ஆர். வளர்த்தார். ஒன்றின் பெயர் ராஜா. பெண் சிங்கத்தின் பெயர் ராணி. இதில் ராஜா என்ற சிங்கத்துடன்தான் ‘அடிமைப் பெண்’ படத்தில் கிளைமாக் ஸில் எம்.ஜி.ஆர். மோதுவார். அந்தக் காட்சியை அற்புதமாக படமாக்கினார். அது ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. ‘‘சிங்கத்தின் வாயை தைத்து விடலாம்’’ என்று சிலர் யோசனை கூறிய போது எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார். ராணி சிங்கம் ‘அடிமைப் பெண்’ படம் எடுக்கும் முன்பே இறந்துவிட்டது.

பின்னர், ராஜா சிங்கத்தை மிருகக் காட்சி சாலைக்கு எம்.ஜி.ஆர். கொடுத்து விட்டார். அங்கு சில ஆண்டுகளுக்குப் பின் முதுமையால் அது இறந்துவிட்டது. அந்த சிங்கத்தின் மேல் வைத்திருந்த பிரியத்தால் அதன் உடலை வாங்கி பாடம் செய்து வைத்திருந்தார். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் எம்.ஜி.ஆரின் கருணை உள்ளத்துக்குச் சான்றாய், அவரது நினைவு இல்லத்தில் கண்ணாடிப் பேழைக்குள் இன்றும் கம்பீரமாக நிற்கிறான் ‘ராஜா’!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்




தமிழ்ப் படத்தில் முதன்முதலில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து நடித்த ஹீரோ எம்.ஜி.ஆர்.தான்! ‘நாளை நமதே’ படத்தில் சங்கர் என்ற பாத்திரத்தில் வரும் எம்.ஜி.ஆர். கான்டாக்ட் லென்ஸ் அணிந்து நடித்திருப்பார்! ‘படகோட்டி’ படத்தில் படம் முழுவதும் செருப்பு அணியாமல் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார்!

Monday, June 27, 2016

சுவாதி கொலை வழக்கில்

சுவாதி கொலை வழக்கில் அறிவியல் பூர்வ புலனாய்வு- ரயில்வே எஸ்.பி ஆனி விஜயா


சென்னை: நுங்கம்பாக்கம் சுவாதி கொலை குறித்து அறிவியல் பூர்வமாக புலனாய்வு செய்துவருவதாக திருச்சி ரயில்வே காவல்துறை எஸ்.பி ஆனி விஜயா தெரிவித்துள்ளார். ரயில்வே போலீசாரின் நத்தை வேக விசாரணையால் அதிருப்தியடைந்த டிஜிபி அசோக்குமார், சுவாதி கொலை வழக்கை சென்னை காவல்துறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூளைமேடு கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுவாதி. கடந்த வெள்ளிக்கிழமை காலையில் வேலைக்கு செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் வந்த சுவாதியை மர்மநபர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்தார். சுவாதி கொலையில் புதிய வீடியோ படங்கள் போலீசிடம் சிக்கி உள்ளன. அதில் கொலையாளியின் உருவம் ஓரளவு தெளிவாக தெரிகிறது. அதை வைத்து கொலையாளியை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள 135 போலீஸ் நிலையங்களுக்கும் கொலையாளியின் படம் அனுப்பப்பட்டு உள்ளது. அவற்றை பொதுமக்களிடம் வழங்கும்படி மேல் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். இந்த படங்களை மக்கள் கூடும்முக்கிய இடங்களுக்கு சென்று போலீசார் பொது மக்களிடம் வழங்கி வருகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே ஐ.ஜி. ராமசுப்பிரமணியம், சுவாதி கொலை தொடர்பாக துப்பு துலக்க சென்னை நகர போலீசார் உதவியையும் நாடி இருக்கிறோம். இதையடுத்து அனைத்து உதவி கமி‌ஷனர், இன்ஸ்பெக்டர்களுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொலையாளி வீடியோ படங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

சந்தேகப்படும்படியான இடங்களில் சோதனை நடத்தும்படியும், விடுதி உள்ளிட்ட மற்ற இடங்களில் கண்காணிக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளோம். விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் கொலையாளியை கண்டுபிடித்து விடுவோம் என்று கூறியிருந்தார்.

திருச்சியில் இருந்து வந்துள்ள ரயில்வே எஸ்.பி ஆனி விஜயா, கொலை செய்யப்பட்ட சுவாதி வீட்டில் நேற்றும் இன்றும் விசாரணை மேற்கொண்டார். கொலை குறித்து அறிவியல் பூர்வமாக புலனாய்வு செய்துவருவதாகவும் எஸ்.பி ஆனி விஜயா தெரிவித்தார்.

கொலை நடந்து 3 நாட்களாகியும், இதுவரை குற்றவாளியை போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. இதற்கு காரணம், ரயில்வே போலீசாரும், சென்னை மாநகர போலீசாரும் குற்றவாளியை பிடிக்க ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்ற புகார் எழுந்தது. இதற்கு நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்தது.

சுவாதி கொலை வழக்கின் புலன் விசாரணை என்ன நிலையில் உள்ளது என்ற விவரங்களை இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த உயர்நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். கொலையாளியைப் பற்றி இரண்டு வீடியோக்கள் கிடைத்த நிலையிலும் ரயில்வே போலீசாரின் விசாரணை நத்தை வேகத்தில் நகரவே, இந்த கொலை வழக்கை சென்னை காவல்துறைக்கு மாற்றி டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் சுவாதி கொலை வழக்கு விசாரணை வேகமடையும் என்று எதிர்பார்க்கலாம்.

சுவாதியை நடத்தைக் கொலை செய்யாதீர்: ராமதாஸ்


THE HINDU TAMIL

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட இளம்பெண் சுவாதியை நடத்தைக் கொலை செய்ய வேண்டாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சென்னை நுங்கம்பாக்கம் புறநகர் தொடர்வண்டி நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சுவாதி என்ற மென்பொருள் பொறியாளர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில், அவரது கொலைக்கு காரணம் கற்பித்து கற்பனையாக பரப்பப்படும் அவதூறுகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. இத்தகைய செயல்கள் கண்டிக்கத்தக்கவை.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பெண் மென்பொறியாளர் சுவாதி கடந்த வெள்ளிக்கிழமை காலை செங்கல்பட்டு பகுதியிலுள்ள அலுவலகத்திற்கு செல்வதற்காக நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையத்தில் காத்திருந்த போது, மர்ம மனிதர் ஒருவரால் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

அந்த நேரத்தில் தொடர்வண்டி நிலையத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் நடந்துகொண்ட விதம் மிகவும் வருத்தமளிக்கிறது. சுவாதியை ஒருவன் சரமாரியாக வெட்டும்போது, தொடர்வண்டி நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் அதிகாரிகளில் ஒருவர் குரல் எழுப்பியிருந்தாலோ தங்களின் கைகளில் கிடைத்த பொருளை வீசியிருந்தாலோ கொலையாளிக்கு சிறிதளவாவது அச்சம் ஏற்பட்டிருக்கக் கூடும்; சுவாதியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அதுவே போதுமானதாக இருந்திருக்கும்.

ஆனால், சுவாதியை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடும் வரை எவரும் அதற்காக முயற்சி கூட செய்யவில்லை. கொலைகாரன் கையில் கொடுவாளுடன் ஆவேசமாக இருக்கும் போது, அவனை எதிர்ப்பது விவேகமானதா? இப்படி கேள்வி எழுப்புபவர்கள் சம்பவ இடத்தில் இருந்தால் அவ்வளவு துணிச்சலுடன் நடந்து கொள்வார்களா? என்றெல்லாம் எதிர்க்கேள்விகள் எழுப்பப்படலாம். அவ்வாறு கேள்வி எழுப்புபவர்களின் குடும்பத்திலுள்ள பெண்ணுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டால், அவர்கள் இப்படித்தான் கண்டும் காணாமலும் சென்றிருப்பார்களா? என்றொரு வினாவை எழுப்பி, அதற்கு விடை காணும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டால் தெளிவு பிறந்து விடும்.

அதுமட்டுமின்றி, காலை 6.30 மணிக்கு சுவாதி கொல்லப்பட்ட நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு சுவாதியின் உடல் காட்சிப் பொருளாகவே கிடந்தது. சுவாதியின் உடலை வேடிக்கைப் பார்த்துவிட்டு சென்றவர்களில் ஒருவருக்குக் கூட அந்த உடலை துணியால் மூட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை என்பதைப் பார்க்கும்போது நாமெல்லாம் குறைந்தபட்ச மனசாட்சியும், மனிதநேயமும் அற்றவர்களாக மாறிவிட்டோமா? என்ற எண்ணம் உறுத்துகிறது. இதற்காக நமது சமுதாயமே வெட்கத்தில் தலைகுனிய வேண்டியுள்ளது.

இவற்றையெல்லாம் விட கொடுமை சுவாதி படுகொலையை அடிப்படையாக வைத்து அவதூறுகள் பரப்பப்படுவது தான். சுவாதி ஒருவரை காதலித்தார், சுவாதியை ஒருவர் காதலித்தார், ஒருவரின் காதலை சுவாதி ஏற்கவில்லை அதனால் ஏற்பட்ட பகையால் தான் சுவாதி படுகொலை செய்யப்பட்டார் என்று சமூக ஊடகங்களிலும், சில ஊடகங்களிலும் அவதூறுகள் பரப்பப்படுகின்றன.

சுவாதியின் நடத்தையை பேசுபொருளாக்கி கொடிய இன்பம் காணும் முயற்சியில் சிலர் ஈடுபடுகின்றனர். சுவாதியை கொலை செய்ததை விட இது கொடிய குற்றமாகும். சுவாதியை கொன்றவர் யார்? என காவல்துறை இன்னும் அறிவிக்கவில்லை, கொலைக்கான காரணம் என்ன? என்பதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது எழுதுவதற்கு இடம் இருக்கிறது, எழுதினால் இன்பம் கிடைக்கிறது என்பதற்காக ஒருவரைப் பற்றி தவறாக எழுதுவது எந்த வகையில் நியாயம்?

ஒருவேளை, வாதத்திற்காக சுவாதி மீது தவறு இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அவையெல்லாம் ஒருவரின் உயிரைப் பறிக்க வழங்கப்பட்ட உரிமங்களாகி விட முடியுமா? இதை உணராமல் அவதூறு பரப்புவது மன்னிக்க முடியாதது.

சுவாதி அப்பாவி, இரக்க குணம் கொண்டவர் என்று அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். சென்னை மாநகரில் கடந்த நவம்பர், திசம்பர் மாதங்களில் கடுமையான மழையால் வெள்ளம் ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெள்ள நீரில் நீந்திச் சென்று உணவு உள்ளிட்ட உதவிகளை சுவாதியும், அவரது குடும்பத்தினரும் வழங்கியதாக அப்பகுதிகளில் உள்ள மக்கள் கூறுகின்றனர்.

அப்படிப்பட்ட பெண் பொறியாளரின் நடத்தை குறித்து மனம் போன போக்கில் வதந்திகளையும், அவதூறுகளையும் பரப்புவது, புதைக்கப்பட்ட சுவாதியின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் படுகொலை செய்வதற்கு சமமானதாகும். அற்ப மகிழ்ச்சிக்காக இவ்வாறு நடந்து கொள்வதை விடுத்து, சுவாதி கொல்லப்பட்டது குறித்த தகவல் அறிந்தவர்கள் அதை காவல்துறையிடம் தெரிவித்து விசாரணைக்கு உதவ வேண்டும்.

அதேபோல், சுவாதிக்கு நேர்ந்தது போன்ற கொடுமை இனிவரும் காலங்களில் வேறு எவருக்கேனும் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக தலையிட்டு காப்பாற்றும் அளவுக்கு பொதுமக்கள் துணிச்சலுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். அதுவே சுவாதிக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

ஈ, எறும்புக்கு கூட தீங்கி நினைக்காதவர் சுவாதி: தோழிகள் கண்ணிர்...DINAMANI

ஒரு ஈ, எறும்புக்கு கூட தீங்கு நினைக்காதவர் சுவாதி என அவரது உறவினர்கள், தோழிகள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சந்தான கோபாலகிருஷ்ணன் மகள் சுவாதி (24), பரனூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளாராகப் பணியாற்றி வந்தார்.
இவரை கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன்.24) காலை அவரது தந்தை அழைத்து வந்து நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு சென்றார். ரயில் நிலையத்தில் செங்கல்பட்டு மின்சார ரயிலுக்காக காத்திருந்தபோது, சுவாதியின் தலை, முகம், கழுத்தில் கத்தியால் இளைஞர் வெட்டிக் கொலை செய்தார்.
இந்த கொலை சம்பவம் அவரது குடும்பத்தினரையும், தோழிகளையும் சொல்லொணா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. அதில் இருந்து நிச்சயமாக ஆயுளுக்கும் அவர்களால் மீண்டுவர முடியாது.

எப்போதுமே பெண் பிள்ளைகள் மீது அப்பாக்கள் அளவு கடந்த பாசம் வைத்திருப்பார்கள். சுவாதியின் மீது அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் வைத்திருந்த பாசத்துக்கு எல்லையே இல்லை. தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் துறையில் பி.இ முடித்தவுடன் இன்போசிஸ் நிறுவனத்தில் உடனடியாக பணியும் கிடைத்தது.

சிறுவயதில் இருந்தே இளகிய மனம் கொண்ட சுவாதி, வளந்த பின்னரும் அதே மனநிலையில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக சமீபத்தில் சென்னையில் பெய்த பேய்மழையில் மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தது, அப்போது சுவாதி ஓடோடி சென்று உதவிகளை செய்துள்ளார். சூளைமேடு மற்றும் அதனைச்சுற்றியுள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு பொட்டலங்களை தயார் செய்துகொண்டு போய் கொடுத்து உதவி செய்துள்ளார்.

இப்படி மற்றவர்களுக்கு புன்னகையுடன் உதவி புரிந்துவந்த சுவாதி கடந்த வெள்ளிக்கிழமை காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த காட்சியை யாராலும் மறந்து விடமுடியாது. யாரிடமும் அதிர்ந்து பேசாத குணம் கொண்ட சுவாதி, அருகில் உள்ள குடும்பத்தார்களிடமும் அன்பாக பழகியுள்ளார். எறும்புக்கு கூட தீங்கு நினைக்காத சுவாதிக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை என்று குடும்பத்தினரும், தோழிகளும் கண்ணீர் வடிக்கும் காட்சி பார்கும்போது கள்நெஞ்சம் கொண்டவர்களின் மனதையும் கரையை வைக்கிறது.
ஒட்டுமொத்த தமிழக மக்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவத்தையடுத்து, சென்னையில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வெளியூர்களிலிருந்து பேசுபவர்கள் எல்லாம் இப்போது கேட்கும் கேள்வி இதுதான் "சென்னையில... என் நடக்குது" என்று கேட்கும் அவர்கள், சுவாதியின் கொலை சம்பவம் பற்றியும் பேட்க தவறவில்லை.

சுவாதியின் மரணம் தொடர்பாக முகநூல் பக்கத்தில் பதிவிடப்படும் காரசாரமான கருத்துக்கள் மனசை போட்டு கசக்கும் விதத்தில் உள்ளன. தமிழகத்தையே உலுக்கிப் போட்டிருக்கும் சுவாதியின் கொலைக்கு உரிய நீதியும் நியாமும் கிடைக்க வேண்டும் என்பதே அனைத்து தசரப்பினரின் ஆவேச குரலாக உள்ளது. காவல்துறை அதிரடியாக செயல்பட்டு கொலையாளியை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உச்சபட்ச தண்டனையை வாங்கி கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கட்டண சலுகையை விட்டு கொடுங்கள்..! -மூத்த குடிமக்களை கேட்கும் ரயில்வே துறை

புதுடெல்லி: சமையல் கியாஸ் மானியத்தை தாமாக முன்வந்து விட்டு கொடுப்பதுபோல, மூத்த குடிமக்களும் ரயில் பயணக் கட்டணச் சலுகையை விட்டு கொடுக்க முன் வரலாம் என இந்தியன் ரயில்வே அறிவித்து உள்ளது.

ரயில்வே துறைக்கு பயணிகள் ரயில் மூலம் ஆண்டுதோறும் ரூ.34 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இதனை மத்திய அரசு வழங்கும் மானியம் மூலம் ரயில்வே துறை ஈடு செய்கிறது. இந்நிலையில், சமையல் கியாஸ் மானியத்தை தாமாக முன்வந்து விட்டு கொடுப்பது போல, மூத்த குடிமக்களும் ரயில் பயண சலுகையை விட்டு கொடுக்க முன் வரலாம் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வே துறைக்கு ஏற்படும் மானிய சுமை மற்றும் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு பயண சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. 58 வயது நிரம்பிய பெண்களுக்கு ரயில் பயணக் கட்டணத்தில் 50 சதவீதமும், 60 வயது நிரம்பிய ஆண்களுக்கு பயணக் கட்டணத்தில் 40 சதவீதமும் சலுகை வழங்கப்படுகிறது. மேலும், பயணிகளுக்காக ரயில்களில் முதியோர், விளையாட்டுத்துறையில் பதக்கம் பெற்றவர்கள், புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட 55 பிரிவினருக்கு பயணக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது.
இதற்காக கடந்த நிதியாண்டில் ரூ.1,600 கோடியை மானியமாக ரயில்வே துறை செலவழித்து உள்ளது. குறிப்பாக மூத்த குடிமக்களின் சலுகைக்காக மட்டும் கடந்த ஆண்டில் ரூ.1,100 கோடியை ரயில்வே துறை மானியமாக செலவழித்துள்ளது. அதே வேளையில் சாதாரண பயணிகள் செலுத்தும் பயணக் கட்டணத்திலும் பயணத்துக்கு ஏற்படும் செலவில் முழு தொகையை ரயில்வே துறையால் பெற முடியவில்லை.

அதாவது ஒருவரின் பயணத்துக்கு ஏற்படும் செலவில் 57 சதவீதத்தை மட்டுமே அவர் செலுத்தும் கட்டணத்தில் இருந்து பெற முடிகிறது. அந்த வகையில் ஒரு பயணியின் மூலம் கிடைக்கும் வருவாய் எவ்வளவு? என்பதை பயணச்சீட்டுகளின் கீழ் அச்சடிக்கும் புதிய முறையை ரயில்வேத்துறை கடந்த சில நாட்களாக செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், மானியத்தை குறைக்கும் வகையில் முதியவர்கள் தாமாக முன்வந்து சலுகையை விட்டு கொடுக்கும் புதிய முறையை ரயில்வே துறை அமல்படுத்தி உள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ''முதியவர்கள் பயணச்சீட்டு பெறும் முன்பாக தாங்கள் சலுகையை பெற விரும்பவில்லை என்பதை குறிப்பிடுவதற்கு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சலுகையை பெற விரும்பாதவர்கள் முழு கட்டணத்தை செலுத்தலாம். அதற்கேற்ற வகையில் தொழில்நுட்பங்களிலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது" என்றார்

வீடியோ: லஞ்சபணத்தை பிரித்து கொள்வதில் போலீசார் கட்டி புரண்டு சண்டை

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் முக்கிய சாலையில் நான்கு போலீச்சார் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு கட்டி புரளும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது

லாரி டிரைஅவர்கலீடம் இருந்து பெறபட்ட லஞ்சம் பணம் மொத்தத்தையும் ஒரே அதிகாரி கொண்டு செல்ல முற்பட்டதாகவும், அத்னால் உடன் இருந்த அதிகாரி ஒருவர் லஞ்ச பணத்தை சரி சமமாக பங்கு பிரித்துதரும் படி கூறியதாகவும். இதை தொடர்ந்து இருவருக்கும் இடையில் நடந்த வாக்கு வாதம் முற்றி சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது

வீடியோவில் மேம்பாலம் அருகே பணியில் இருந்த போது, போலீசார்களிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இருவரும், பொதுமக்கள் முன்னிலையில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.

அருகில் இருந்த சக போலீசார் அவர்களை தடுக்க முயன்றும், அதனைப் பொருட்படுத்தாத இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். போலீஸ் சீருடையில் இருந்தும் இருவரும் ஒருவரை ஒருவர்‌ தாக்கிக் கொண்டதை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்தவாரே சென்றுள்ளனர்.

இந்நிலையில், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக உள்ளுர் போலீஸ் நிலையத்தில், குற்றவாளி போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரெயில்நிலைய கேமராவில் தெரியும் நபரே கொலையாளி, ரெயில்வே போலீஸ் உறுதி

சென்னை, DAILY THANTHI


நுங்கம்பாக்கம் ரெயில்நிலைய கேமராவில் தெரியும் நபரே பொறியாளர் சுவாதியை கொலை செய்தவர் என்று ரெயில்வே போலீஸ் உறுதிசெய்து உள்ளது.


சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், நேற்று முன்தினம் கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் மர்ம ஆசாமியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மர்ம ஆசாமியை வலைவீசி தேடிவரும் போலீஸ் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணையை துரிதப்படுத்தி உள்ளது.


நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் போலீசார் நடத்திய சோதனையில் ‘டிராவல் பேக்’கில் ரத்தக்கறையுடன் கத்தி ஒன்றை கைப்பற்றினார்கள். சுவாதியை கொல்ல மர்ம ஆசாமி இந்த கத்தியை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். கத்தியில் இருந்து கை ரேகை எடுக்கப்பட்டது, இந்த ரேகையானது குற்றவாளிகள் தொடர்பான தரவுகளுடன் ஒத்து போகிறதா என்று சோதிக்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவத்தால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


ரெயில்வே போலீஸ் உறுதி


இந்நிலையில் ரெயில் நிலைய கேமரா பதிவில் தெரியும் நபரே பொறியாளர் சுவாதியை கொலை செய்தவர் என்று ரெயில்வே போலீஸ் உறுதிசெய்து உள்ளது.


கொலை செய்தநபர் தொடர்பாக கூடுதல் பதிவானது கிடைத்து உள்ளது என்று ரெயில்வே போலீஸ் தெரிவித்து உள்ளது. மர்மநபர் கொலை செய்துவிட்டு தப்பித்து செல்லும் காட்சிகள் புதிய பதிவுகளில் இடம்பெற்று உள்ளது என்றும் புதிய காட்சியில் இடபெற்று உள்ளவரின் அடையாளம் ஏற்கனவே வெளியானதுடன் ஒத்துபோகிறது என்றும் போலீஸ் குற்றவாளியை நெருங்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

NEWS TODAY 21.12.2025