Sunday, July 24, 2016

வருவாயைப் பெருக்குவோம்; செலவுகளை குறைப்போம்



DAILY THANTHI   THALAYANGAM

தமிழக அரசின் பட்ஜெட் பெரிய எதிர்பார்ப்புகளை மக்களிடம் ஏற்படுத்தியிருந்தது. அதற்கேற்ப, இந்த ஆண்டு பட்ஜெட்டையும், வரியில்லாத, வரிஉயர்வு இல்லாத பட்ஜெட்டாகவே தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. ஆனால், வருவாய் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை பட்ஜெட்டாகவே இருக்கிறது. எதிர்பார்த்த வருவாய் இல்லாதநிலையில், நினைத்ததற்கும் அதிகமாக செலவுகள் உயர்ந்துவிட்டநிலையில், இனி எந்தக்கோரிக்கை வைத்தாலும், சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்ற நிலைமை உருவாகிவிட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல்செய்யும்போது, இந்த நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 4 கோடியே 23 லட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், இப்போது தாக்கல்செய்யப்பட்ட திருத்த பட்ஜெட்டில் அரசின் வருவாய் இந்த ஆண்டு ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 175 கோடியே 9 லட்சமாகத்தான் இருக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆக, வருவாய் குறைந்துவிட்டது. ஆனால், இடைக்கால பட்ஜெட் மதிப்பீட்டில் குறிப்பிட்டதைவிட செலவு அதிகமாகியிருக்கிறது. இடைக்கால பட்ஜெட்டில் இந்த நிதியாண்டில் அரசின் செலவு ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 159 கோடியே ஒரு லட்சமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டதற்கு மாறாக, ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 29 கோடியே 56 லட்சமாக செலவு உயரும் என்று திருத்தி மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த 2016–17–ம் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.15 ஆயிரத்து 854 கோடியே 47 லட்சமாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூ.40 ஆயிரத்து 533 கோடியே 84 லட்சமாக மதிப்பிடப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய நிலுவையில் உள்ள விவசாயக்கடன் தள்ளுபடி மற்றும் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் போன்ற புதிய அறிவிப்புகளை செயல்படுத்துவதாலும், ஏற்கனவே உள்ள பல்வேறு நலத்திட்டங்கள், மானியங்களை தொடர்ந்து கொடுக்கவேண்டிய இருப்பதாலும் அரசுக்கு செலவு அதிகரித்துள்ளது.

அரசின் செலவில் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய வகைகள் செலவினங்கள் மட்டும் ரூ.64 ஆயிரத்து 410 கோடியே 34 லட்சமாகும். இது மொத்தசெலவில் 39.27 சதவீதமாகும். இதுபோல, மானியம் மற்றும் உதவித்தொகைக்கான ஒதுக்கீடு ரூ.68 ஆயிரத்து 211 கோடியே 5 லட்சமாகும். அரசு வாங்கியுள்ள கடன்தொகை ரூ.2 லட்சத்து 52 ஆயிரத்து 431 கோடி என்றநிலையில் வட்டியாக மட்டும் ரூ.21 ஆயிரத்து 215 கோடியே 67 லட்சம் கட்டவேண்டியதிருக்கிறது. இது மொத்த வருவாய் செலவில் 12.93 சதவீதமாகும். ஆக, அரசின் மொத்தவருவாயில் அரசு ஊழியர்கள் சம்பளம், பென்சன், மானியம் மற்றும் உதவித்தொகை, வாங்கிய கடனுக்கான வட்டி ஆகியவற்றிற்கு மட்டும் 93.8 சதவீதம் சென்றுவிடுகிறது. மீதமுள்ள 6.2 சதவீத தொகையை வைத்துத்தான் அரசின் வளர்ச்சித்திட்டங்களுக்கான முதலீடுகள், புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான செலவுகளை சமாளிக்க வேண்டியதிருக்கும்.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைவால், ஆயத்தீர்வை வசூல் குறைந்தது உள்பட வணிகவரி வசூலும் பெருமளவு குறைந்துவிட்டது. சர்வதேச பொருளாதார வீழ்ச்சி காரணமாக, சிமெண்டு, இரும்பு, மின்சார சாதனங்கள், வாகனங்கள் விற்பனை, எல்லாவற்றிற்கும் மேலாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்டவீழ்ச்சியும் வருவாய் குறைவுக்கு காரணமாகும். 500 டாஸ்மாக் மதுபானக்கடைகளை அடைத்ததிலேயே ரூ.1,500 கோடி வருமானம் இழப்பு ஏற்படும். இந்த சூழ்நிலையில், புதிய திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், தேர்தல் அறிக்கைகளில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் நிதிவேண்டும். எனவே, வருமானத்தை பெருக்குவதிலும், செலவுகளை குறைப்பதிலும் அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசர, அவசியம் வந்துவிட்டது. தேவையற்றவர்களுக்கு மானியங்கள் செல்வதை தவிர்க்க, மத்திய அரசாங்கம் மானியங்களை நேரடியாக வங்கியில் செலுத்தும் திட்டம்போல, புதிய திட்டங்களை செயல்படுத்துவதே நல்லது.

கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன்களில் அதிகரித்து வரும் 'ரேன்சம்வேர்' தாக்குதல்; தாக்குதலுக்கு ஆளாகும் டாப்-10 நாடுகளில் இந்தியா

DAILY THANTHI


புதுடெல்லி,

உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களில் அதிகரித்து வரும் ’ரேன்சம்வேர்’ தாக்குதல் பற்றி பிரபல சைபர் பாதுகாப்பு நிறுவனமான 'சிமண்டெக்' வெளியிட்டிருக்கும் தகவல்கள் பின்வருமாறு:-

கடந்த சில ஆண்டுகளாக இண்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் மூலமாக பயனர்களை ஏமாற்ற தகவல் திருடர்கள் 'ரேன்சம்வேர்' (Ransomware) என்ற மால்வேரை பரப்பி வருகின்றனர். இந்த மால்வேர் நிரல்கள் ஒருமுறை நம் கம்ப்யூட்டரில் வந்துவிட்டால், அவை ஒட்டுமொத்த கம்ப்யூட்டரையும் முடக்கி விடும். பிறகு, பணம் செலுத்துவதற்காக ஒரு 'பாப்-அப் மெசேஜ்'-ஐ காண்பிக்கும். இதை கிளிக் செய்து அது கேட்கும் பணத்தை செலுத்திய பிறகே கம்ப்யூட்டரை மீண்டும் 'அன்லாக்' செய்ய முடியும். கம்ப்யூட்டர் மட்டுமின்றி தற்போது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் இதன் தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன.

பணம் பறிக்கும் நோக்கில் பரப்பப்படும் இந்த மால்வேர்கள் பெரும்பாலும், வியாபார நிறுவனங்களையே குறிவைக்கிறது. 2015-ம் ஆண்டு நிலவரப்படி ரேன்சம்வேரை பரப்பிய பின் கம்ப்யூட்டர்களை விடுவிக்க ஹேக்கர்கள் சராசரியாக 679 டாலர்களை வரை கேட்கின்றனர். இந்த வகை மால்வேர் தாக்குதல்களுக்கு அதிக அளவில் ஆளாகும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 9-வது இடத்தில் உள்ளது.

இதுவரை 100-க்கும் மேற்பட்ட புதிய ரேன்சம்வேர்களை கண்டறிந்துள்ளோம். குறிப்பாக, இந்த ஆண்டு கிரிப்டோ-ரேன்சம்வேர் அண்மையில் கண்டறியப்பட்ட புதிய வகை. இது கம்ப்யூட்டரை முடக்கிவிட்டால் அதை அன்லாக் செய்வது என்பது முடியாத ஒன்று. முறையாக பேக் அப் செய்திருக்காவிட்டால் ஹேக்கர்களுக்கு பணம் செலுத்துவது ஒன்றே வழியாக இருக்கும்.

இவ்வாறு சிமண்டெக் தெரிவித்துள்ளது.

Thursday, July 21, 2016

அவதிப்படும் அரசுப் பள்ளி மாணவிகள்!

கழிப்பறைக்கு ரூ.333 கோடி; தண்ணீர் யார் தருவார்?' -அவதிப்படும் அரசுப் பள்ளி மாணவிகள்!


 அரசுப் பள்ளிகளில் கழிவறை அமைக்கவும், தூய்மைப் பணிகளை மேம்படுத்தவும் 333 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்' என தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்துக் கொண்டிருக்கும் வேளையில், ' எங்கள் பள்ளி கழிப்பறையில் தண்ணீரே வருவதில்லை. பொது வெளியில் ஒதுங்க வேண்டிய துன்பத்திற்கு ஆளாகிறோம்' என வேதனைப்படுகின்றனர் திருவாரூர், அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள். 

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகில் உள்ள சேங்காலிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், நானூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, பள்ளி கழிப்பறையில் தண்ணீர் வராததால் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

நம்மிடம் பேசிய மாணவி ஒருவர், " எத்தனையோ முறை ஹெச்.எம்மை பார்த்து சொல்லிட்டோம். அவங்க எதைப் பத்தியும் கவலைப்படலை. தண்ணி இறைக்கும் மோட்டார் ரிப்பேர் ஆகிவிட்டது. அதை சரி செய்யாமல் விட்டுட்டாங்க. ' ஸ்கூல்ல நிதி இல்லை, சரி பண்ண முடியாது' ன்னு சொல்றாங்க. வகுப்பு நேரத்தில் அவசரத்திற்குக் கூட பாத்ரூம் போக முடியலை. இடைவேளையில் மறைவான இடம் பார்த்து ஒதுங்க வேண்டிய அளவுக்கு அவஸ்தைப்படறோம். டீச்சர்களுக்கும் இதே நிலைமைதான். நாங்க எல்லாம் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து படிக்கிறோம். கல்வி அதிகாரிகள்கிட்ட புகார் கொடுத்தும் கவனிக்க மாட்டேங்கறாங்க. கொஞ்சம் சொல்லுங்க சார்..." என்கின்றனர் வேதனையோடு. 

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியயை விஜய கவுரியிடம் பேசினோம். " இங்கு நிலத்தடி நீர் மட்டம் ரொம்பவே குறைந்து போய்விட்டது. மாணவர்கள் குடிப்பதற்காக ஊராட்சிமன்ற தண்ணீர் வருகிறது. கழிப்பறைக்குப் போதுமான தண்ணீர் இல்லை. கழிப்பறையைப் பயன்படுத்த முடியவில்லை என்பது உண்மைதான். மோட்டாரும் ரிப்பேர் ஆகிவிட்டது. அதைச் சரி செய்வதற்காகத்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் சரி செய்யப்படும்” என்றார்.

' சுத்தமான கழிப்பிடங்களே நாட்டின் தேவை' என்ற குரல்கள் வலுத்து வரும் வேளையில், கழிப்பறையைப் பயன்படுத்த முடியாமல் மாணவர்கள் பொது வெளியில் ஒதுங்குவதைப் பற்றி திருவாரூர் மாவட்ட நிர்வாகம் கவலைப்படுமா?

-ஆ.விஜயானந்த்

குற்றச்சாட்டை மறுக்கும் பள்ளி தாளாளர்!

பிளஸ் 2 தேர்வும் 'சென்டம்' ரகசியமும்.... குற்றச்சாட்டை மறுக்கும் பள்ளி தாளாளர்!


பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடிப்பது மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வு பணிகளை கண்காணிக்கவும் சென்னையில் இருந்து இயக்குநர்கள், இணை இயக்குநர்களை ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைப்பது வழக்கம்.

நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பிரபலமான தனியார் பள்ளிகளில், மாணவர்கள் 'மாஸ் காப்பியிங்கில்' ஈடுபடுவதாக நீண்ட நாளாகக் குற்றச்சாட்டு உண்டு. இதற்கிடையே ஈரோட்டில் பிரபலமான ஆதர்ஷ் மற்றும் ஐடியல் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் 'பிட்' அடிப்பதாக அப்போதைய இணை இயக்குநரும் தற்போதைய மெட்ரிக் பள்ளி இயக்குநருமான கருப்பசாமிக்கு தகவல் கிடைத்தது.

ஈரோட்டில் உள்ள அந்த பிரபலமான பள்ளிக்கு இணை இயக்குநர் வரும் தகவல் கிடைத்ததும் மாணவர்களுக்கு சிக்னல் கொடுத்தனர், அங்குத் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள். அந்த பள்ளியில் இரு மாடிக்கட்டடங்களிலும் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். அப்போது அவசர அவசரமாக மாணவர்கள் ஜன்னல் வழியாக பிட்டுகளை தூக்கி எறிந்தனர். அந்த பிட்டுகள் பள்ளி வளாகத்தில் நுழைந்த இணை இயக்குநர் கருப்பசாமி தலை மீதே விழுந்ததுதான் வேடிக்கை.

தன் மீது விழுந்த பிட்டு பேப்பர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அந்த இரு பிரபலமான தனியார் பள்ளிகளில் 'மாஸ் காப்பியிங்' நடப்பதாக அரசுத் தேர்வுத்துறைக்கு அறிக்கை அனுப்பியதோடு தனது வேலையை முடித்துக்கொண்டார்.

இது ஒரு புறம் இருக்க, பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இனிதே தொடங்கியது. திருச்சி லால்குடியில் ஒரு பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது வேதியியல், இயற்பியல், உயிரியல், கணக்கு உள்ளிட்ட பாடங்களின் விடைத்தாள்களில், குறிப்பிட்ட 5 மாணவர்கள் 200க்கு 200 மார்க் வாங்கியிருந்தனர். அந்த குறிப்பிட்ட 5 மாணவர்களின் விடைத்தாள்களில் இருந்த கையெழுத்து ஒரே மாதிரியாக இருந்ததை விடைத்தாளை திருத்திய ஆசிரியர் கண்டுபிடித்தபோதுதான் 'சென்டம்' ரகசியம் அம்பலமானது. அதாவது ஒரே நபரே 5 மாணவர்களுக்கும் விடைத்தாள்களில் விடைகளை எழுதியிருக்கிறார்.

இதில் ஆச்சர்யமான விஷயம்.. ஈரோட்டில் இணை இயக்குநர் கருப்பசாமி தலை மீது பிட்டுகளை வீசிய அந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களின் விடைத்தாள்கள்தான் அது என்று தெரியவந்தது. எங்கேயோ உதைக்கிறது, என்று கருதிய அரசு தேர்வுத்துறை, அந்த விடைத்தாள்களை, தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பிய போது, அவை ஒரே ஆளால் எழுதப்பட்டு, அந்த 5 மாணவர்களின் விடைத்தாள்களோடு இணைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த குறிப்பிட்ட 5 மாணவர்களை வரவழைத்து தனித்தனியாக அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் விசாரித்தபோது, அது தங்களது கையெழுத்து இல்லை, என்று ஒத்துக் கொண்டனர்.



இது தொடர்பாக, இப்போது ஈரோட்டில் பிரபலமான அந்த இரு தனியார் பள்ளிகளில் தேர்வுப்பணியில் ஈடுபட்ட அரசுப் பள்ளி தலைமையாசிரியர் நசீர் உட்பட 4 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஈரோட்டின் பிரபலமான அந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ், பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் ரேங்க் பெற்று மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் கட் ஆப் மார்க்கிலும் முதலிடம் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார். இதே பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பலர் 'சென்டம்' பெற்று மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பில்‘மெரிட்டில்’ சேர்ந்துள்ளனர்.

இப்போது அந்தப் பள்ளி மாணவர்களின் 'சென்ட்ம்' மார்க் மீது மற்றவர்களுக்கு சந்தேகக் கறை படிய தொடங்கியுள்ளது. இது தொடர்பாக விரிவாக விகடன்.டாட் காமில் நேற்று (புதன்) செய்தி வெளியானது. இது தொடர்பாக விளக்கம் கேட்க, ஐடியல் பள்ளி தாளாளர் சிவலிங்கத்தைத் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்ததாகவும் இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்க முன்வந்தால் அதனை பிரசுரிக்க தயாராக உள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில் நம்மை தொடர்பு கொண்டு பேசிய ஈரோடு ஐடியல் மற்றும் ஆதர்ஷ் பள்ளியின் தாளாளரான சிவலிங்கம், "எங்கள் பள்ளியில் எந்தத் தவறும் நடக்கவில்லை. மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபடவில்லை. இப்போது எங்கள் மீது திட்டமிட்டே அதிகாரிகள் பழி சுமத்துகின்றனர். கடந்த 35 ஆண்டுகளாக கல்விப்பணியில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. வீண் வதந்திகளைப் பெற்றோர்கள் நம்ப வேண்டாம். இதற்கு மேல் கருத்து சொல்ல விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.

- எம்.கார்த்தி

கபாலி திரைப்படமும், வினுப்பிரியா மரணமும்...!


'அனைத்து சாலைகளும் ரோமில் போய் முடிவடைகின்றன' என்று சொல்வதுபோல், இங்கு அனைத்து உரையாடல்களும் ‘கபாலி’ திரைப்படத்தில் போய்தான் முடிவடைகின்றன. அண்மையில், ஒரு துக்க வீட்டிற்கு சென்று இருந்தபோது கூட இதை உணர முடிந்தது. “நல்ல மனுஷன்... சமூகத்துக்கு எவ்வளவோ செஞ்சு இருக்காரு..” என்று துவங்கிய அந்த உரையாடல், அடுத்துப் பேசியது கபாலி திரைப்படம் பற்றி. “என்னப்பா... கபாலி டிக்கெட் விலை ஆயிரம் ரூபாயாம்ல...” என்று வருந்தினார் அந்த உரையாடலுக்கு உரியவர்.

மிகையாகச் சொல்லவில்லை, உண்மைதான். எப்போதும் நாயகர்களைக் கொண்டாடும் தமிழ் சமூகத்தில், ரஜினி கொண்டாடப்படுவதும், அந்த படத்தின் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவதும் வியப்பில்லை. ஆனால், இந்த கட்டுரை அதன் டிக்கெட் விலை குறித்தானது அல்ல...!

இணையத்தில் கபாலி!

கபாலி டிக்கெட் குறித்த சர்ச்சைகளை விட, அதிகம் ஈர்த்தது கபாலி திரைப்படம் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியாவதை தடுப்பதற்காக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுதான். இது குறித்த விவாதங்களை நாம் உரிய முறையில் செலுத்தினால், நிச்சயம் ஆரோக்கியமான சட்டத்திருத்தங்களை நம்மால் கொண்டு வரமுடியும். அதன் மூலம் சில உயிர் இழப்புகளையும் தவிர்க்க முடியும்.

சில தினங்களுக்கு முன், கபாலி திரைப்படத்தின் தயாரிப்பாளர், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகுகிறார். '"கபாலி திரைப்படம் 3500 பேர் உழைப்பில், 100 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம். ஆனால், அதை வெறும் 20 ரூபாய் செலவில் முறைகேடாக இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. அதனால் இதுபோன்ற திருட்டுகளுக்கு காரணமாக இருக்கும் இணையச் சேவை நிறுவனங்களை முடக்க, இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உத்தரவிடவேண்டும்" என்கிறார். மேலும் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடும் 225 இணையதளங்களின் முகவரியையும் தருகிறார். இதனை விசாரித்த நீதிமன்றம், 180 இணையதளங்களுக்கு இடைக்கால தடை விதிக்கிறது.





சரியான நடவடிக்கைதான். இதில் கருத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், இது அனைத்தும் நடந்தது இரண்டு நாட்களில். ஒரு திரைப்படத்தையும், அதன் வணிகத்தையும், அதன் தயாரிப்பாளரையும், 3,500 தொழிலாளர்களின் உழைப்பையும் காக்க நீதிமன்றம் இவ்வளவு துரிதமாக செயல்பட்டு இருக்கிறது.

உண்மையில் இது பாராட்டப்பட வேண்டியதுதான் என்றாலும், இயல்பாக ஒரு கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. அதாவது, நூற்றுக்கணக்கான இணையதளங்களை இரண்டு நாட்களில் முடக்க முடியும் என்னும் போது... ஏன் வினுப்பிரியா படம் தவறாக சித்தரிக்கப்பட்ட ஒரு இணையதள பக்கத்தை முடக்க நான்கு நாட்கள் ஆனது..?

வினுப்பிரியாவின் மரணம்!

வினுப்பிரியாவின் புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இணையதளத்தில் வெளியாகிறது. இதுகுறித்து கடந்த ஜூன் 23 ம் தேதி புகார் அளிக்கப்படுகிறது. காவல் துறை மிக நிதானமாக செயல்பட்டு... இல்லை இல்லை... கிட்டத்தட்ட செயல்படவே இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் தொடர்ந்து முறையிட்டதால், நடவடிக்கை எடுக்க, காவல் துறையின் சைபர் பிரிவு ஒரு கைபேசியை லஞ்சமாக கேட்கிறது. ரூபாய் 2000க்கு ஒரு கைபேசியை வினுப்ரியாவின் தந்தை வாங்கித் தந்த பிறகு,
விசாரணை நத்தை வேகத்தில் ஊர்கிறது. அப்போது, மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகிறது. வினுப்பிரியா மன அழுத்தம் தாங்காமல் ஜூன் 27 ம் தேதி தற்கொலை செய்து கொள்கிறாள்.




இது குறித்து அண்மையில் ஒரு ஆங்கில ஊடகத்தில் கட்டுரை ஒன்றை எழுதி உள்ள காவல் துறை கண்காணிப்பாளர் அமித் குமார் சிங், 'காவல் துறை மீதெல்லாம் தவறல்ல. முகநூல் நிறுவனத்திலிருந்து தகவல்களைப் பெற எங்களுக்கு நான்கு நாட்கள் ஆனது’ என்று பொருள் தரும் வகையில் கருத்து தெரிவித்திருக்கிறார். அதே நேரம், காவலர் லஞ்சம் பெற்றதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

அந்தக் கட்டுரையில் காவல் கண்காணிப்பாளர் இவ்வாறாக எழுதி உள்ளார், “ஜூன் 23 ம் தேதி நாங்கள் புகாரைப் பெறுகிறோம். அடுத்த நாள், நாங்கள் அந்த முகநூல் பக்கத்தை முடக்குவதற்கும், அந்தப் படம் எந்த கணினியிலிருந்து பதிவேற்றப்பட்டது என்பதை அறிவதற்கும், இணைய நெறிமுறை முகவரியை (IP address) கேட்கிறோம். ஜூன் 27 ம் தேதிதான் அந்த பக்கம் முடக்கப்படுகிறது. இணைய நெறிமுறை முகவரியும் கிடைக்கிறது. அதன் பின் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளியை கைது செய்கிறோம்” என்கிறார்.





அதாவது, 'காவல் துறை மீது தவறு இருக்கிறது. ஆனால், அது பெரிய தவறு அல்ல. பெரும் தவறு முகநூல் நிர்வாகத்தின் மீதுதான்.' என்பதுதான் அவரது கருத்து.

இதை சரியென்று ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், இதில் தலையிட்டு, சமூக ஊடகங்களை முறைப்படுத்த வேண்டியது யாருடைய பொறுப்பு...? அரசுடைய, அரசைச் செலுத்தும் அதிகாரவர்க்கத்துடைய பொறுப்புதானே அது...?

ஒரு பிரபலத்திற்கு ஏதாவது பிரச்னை என்றால், அதிவேகமாக இயங்கும் அதிகாரவர்க்கம், சாமான்யனுக்கென்றால் மட்டும் தன் பொறுப்பை தட்டிக் கழிப்பது என்ன நியாயம்...? நாளை இதுபோல் இன்னொரு மரணம் நிகழ்ந்தால், அப்போதும் முகநூல் மேல் மட்டுமேதான் தவறு என்று சொல்லிக் கொண்டிருப்பார்களா...? அப்படி என்றால் எதற்கு அரசாங்கம்....?
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
'ஏன் கபாலிக்கு இவ்வளவு விரைவாக செயல்பட்டீர்கள்...' என்பது எம் கேள்வி அல்ல. நிச்சயம் அது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், அதே நேரம் அனைவரையும் சமமாக மதித்துச் செயல்படுங்கள் என்பதுதான் சாமன்யனின் வாதம்.

அந்த சாமான்யனின் குரலைப் புறக்கணித்து, கடந்து செல்வது... நிச்சயம் ஆரோக்கியமான போக்கல்ல!

- மு. நியாஸ் அகமது

சிவாஜிகணேசன் நினைவு நாள்:

Inline image 1

ஜூலை 21 சிவாஜிகணேசன் நினைவு நாள்:

தமிழர்களின் 50 ஆண்டுகால அடையாளமாகத் திகழ்பவர்களின் பட்டியல் ரொம்பவும் நீளமானது. அதில் சிவாஜி கணேசனும் ஒருவர். சில ஞாபகங்களுக்கு நரைப்பதே இல்லை. சினிமா மட்டுமே நம் மக்களின் பொழுதுபோக்கு, சாயங்கால சந்தோஷமாக இருந்த வேளைகளில் சிவாஜி எனும் கலைஞன் தமிழர்களின் நெஞ்சங்களில் ஏற்படுத்திய பிம்பம் அளவிட முடியாதது.

இன்று 40 வயதைத் தாண்டிய தமிழர்களுக்குள் அந்த பிம்பம் ஏற்படுத் திய விளைவுகள் கலைடாஸ்கோப் புக்கு இணையானது. இதை இன்று தியேட்டரில் படம் பார்த்துக்கொண் டிருக்கும் அந்த நிமிடத்திலேயே ‘படம் மொக்கை’, ‘படம் சூப்பர்’ என்று மெசேஜ் தட்டுகிற, வாட்ஸ்-அப் செய்கிற தலைமுறையினரால் புரிந்துகொள்ள முடியாது.

ஒரு தடவை சிவாஜிகணேசனைப் பற்றி இலக்கிய விமர்சகர் கைலாசபதி ‘‘சிவாஜியின் நடிப்பை எல்லோரும் ஓவர் ஆக்டிங் என்று சொல்கிறார்கள். ஆமாம், அவருடையது ஓவர் ஆக்டிங் தான். ஆனால், அவர்தான் எங்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், அப்பர், ராஜராஜ சோழன், கப்பலோட்டிய தமிழன்’’ என்று குறிப்பிட்டார்.

இதை இங்குப் பதிவு செய்யக் காரணம் உள்ளது. எப்போதும் ஒன்றை விருப்பத்துடன் ஏற்றுக்கொள்வது என்பது ஒரு பக்கம். விமர்சித்து விலக்கித் தள்ளுவது இன்னொரு பக்கம். இது எல்லா விஷயத்துக்கும் பொருந்தும். சிவாஜியும் இந்த வினோதச் சதுரத்துக்குள் கொண்டு வரப்பட்டு இன்று சிவாஜியின் நடிப்பு சிலரால் நகையாடப்படுவதை சிவாஜி ரசிகர்கள் பெருங்கோபத்துடன் எதிர் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

‘தில்லானா மோகனாம்பாள்’ படத் தில் சிவாஜி எனும் பெருங்கலைஞன் காட்டிய ஜால வித்தையை வேறு எந்தத் தமிழ் கலைஞனாலும் நிகழ்த்த முடியுமா? பத்மினி பரதம் ஆடப் போவதை, அழகு மிளிரும் கோயில் தூண் மறைவில் இருந்து சிவாஜி தலையை மட்டும் நீட்டி பார்த்து ரசிக்க முற்படும்போது அவர் முகத்தில் தோன்றும் கலவையான உனார்ச்சிகளை எந்த மொழியில் பதிவு செய்வது?

1952-ல் ‘பராசக்தி’ படத்தில் சிவாஜியை நடிக்க வைக்க அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பெருமாள் முதலியார் ஆயத்த வேலைகளில் இருந்தபோது, பெருமாள் முதலி யாருக்கு நிதியுதவி செய்ய முன்வந்த ஏவி.மெய்யப்ப செட்டியார் ‘‘இது நடிப் புக்கேற்ற முகம் கிடையாது. வேறு யாரையாவது கதாநாயகனாக்குங் களேன்’’ என்று பெருமாள் முதலியா ரிடம் சொன்னதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விமர்சனங் களுக்கு அப்பாற்பட்டவரல்ல சிவாஜி என்பதற்கு, இது ஒரு வரலாற்று உதாரணம். இப்படித்தான் சிவாஜி எனும் ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயம் தடைகளை மீறிச் சிறு புள்ளியில் இருந்து ஆரம்பித்திருக்கிறது.

சிவாஜியின் நடிப்பு என்பது காலத்தோடு உறவாடிய ஒரு வெளிப் பாடு. ‘சினிமா என்பது சப்தமல்ல…’ என்பதை 1980-க்கு பிறகுதான் தமிழர்கள் உணரவே ஆரம்பித்தார்கள். அதனை ஆழமாக உணர்த்த கே.பாலசந்தரும், பாரதிராஜாவும், மகேந்திரனும், பாலுமகேந்திராவும் தேவைப்பட்டார்கள். ‘நாடக தாக்கமும், அரங்கமே எதிரொலிக்கும் உரையாடல் உத்தியும் சேர்ந்த கலவைதான் சினிமா…’ என்றிருந்த காலகட்டத்தில் திரையில் தோன்றிய ஒரு கலைஞனை இன்றைய விழுமியங்களுடன் பூதக் கண்ணாடி வைத்து நோக்குவது எப்படி நியாயமானதாக இருக்க முடியும்?

சிவாஜிக்காகவே கதை பின்னப் பட்டது. அப்படியான திரைக்கதையில் தனக்குரிய பங்கு என்ன என்பதை உணர்ந்து, தனது அனைத்துத் திறமைகளையும் கொட்டினார் சிவாஜி. மேலைநாட்டுத் தாக்கத்தால் நவீன மாயைகளில் சிக்கித் தவிக்கும் மனைவிக்கு வாய்த்த பட்டிக்காட்டு கணவனாக அவர் தோன்ற வேண்டிய திரைக்கதையில் அவர் அந்த ஜோடனைகளுடன் கூடிய கட்டுக் குடுமியுடன் வந்து கலக்குவார் ‘பட்டிக்காடா பட்டணமா’ படத்தில். ‘அடி ராக்கு என் மூக்கு என் கண்ணு என் பல்லு என் ராஜாயி…’ என்று அவர் ஆடிப் பாடுவதை அவ்வளவு சுலபமாக மறந்துவிட முடியாது.

நம்பகமான நடிப்புத் திறன்

‘சம்பூரண ராமாயணம்’ என்ற புராணப் படத்தில் பரதனாக வருவார் சிவாஜி. பொதுவாக புராணக் கதைகள் அத்தனையுமே கற்பனையின் அதீதத் தில் உருவானவைதான். அன்றைய கதைசொல்லிகளின் கற்பனை பாதை வழியே சென்றுதான் அந்தக் கதாபாத்திரங்களை நம் மனதில் உருவேற்றிக்கொள்ள முடியும். உண்மையிலேயே பரதன் என்பவன் இப்படித்தான் இருந்திருப்பானோ என்று நம்மை நம்ப வைக்கும் முயற்சியில் பெரிய வெற்றி பெற்றிருப்பார் சிவாஜி.

சினிமாவில் அப்பாவாக, அண்ண னாக, கணவனாக, முதலாளியாக, வேலையாளாக, திரைக்கதையில் வலம் வரும் நடிகர்கள் தன்னை உருமாற்றி, அந்தக் கதாபாத்திரத்துக்கு ஏற்ற உணர்ச்சியை தன் முகபாவனை களால் காட்ட வேண்டிய கட்டாயம். சிவாஜி அதில் பன்முகத் திறன் பெற்றவராக ஒளி வீசினார்.

“ராஜராஜ சோழன் சிவாஜி கணேசனாக நடித்த ‘ராஜராஜ சோழன்’ படம் பார்த்தேன்’’ என்று எழுத்தாளர் சுஜாதா எழுதியிருந்தது நேற் றைய ஆவணம். இன்றைய கோலிவுட் சரித்திரம்!

ரசிகர்களை நெருங்கும் ஆற்றல்

‘பூமாலையில் ஓர் மல்லிகை, இங்கு நான்தான் தேன் என்றது’ என்று திரையில் சிவாஜி பாடி ஆடியபோது அன்றைய ரசிகர்கள் அதில் தன் முகம் பார்த்துக்கொண் டார்கள்.

‘மலர்ந்து மலராத பாதி மலர் போல’ என்று சிவாஜி கசிந்துருகிய போது ரசிகர்கள் தங்கள் பாச உணர்ச்சியில் கண்களைத் துடைத் துக்கொண்டார்கள்.

‘என் தேவையை யார் அறிவார்? உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்’ என்று செல்லம்மாவைப் பார்த்து பிரஸ்டீஜ் பத்மநாபன் பாடியபோது, காதில் சிகை முளைத்த ஒரு அக்ரஹாரத்து மனிதர் ஞாபகத்தில் மின்னி மறைந்தார்.

ஓவியங்களில் ‘போர்ட்ரெய்ட்’ என் கிற ஓவிய வகை உண்டு. நவீன ஓவியங் களுடன் பயணிக்கிற ரசிகர்களுக்கு ‘போர்ட்ரேய்ட்’ ஓவியத்தை அவ்வள வாகப் பிடிக்காதுதான். ஆனால், நம் அப்பாவை, நம் அம்மாவை, நம் அண்ணனை, நம் காதலனை நவீன ஓவியங்களில் வரைந்து வைத்துக் கொண்டு ரசிக்க அவ்வளவாகப் பிடிக்காதுதானே!

ஒருமுறை சிவாஜிகணேசனைப் பற்றி கமல்ஹாசன் “சிவாஜி சிங்கம் போன்றவர். அவருக்கு தயிர் சாதத்தை வைத்துச் சாப்பிட சொல்லிவிட்டோம்” என்றார். எவ்வளவு உண்மை அது!

Wednesday, July 20, 2016

விவாதம்: பயணங்களும் பாதுகாப்பானவை இல்லையா? பிருந்தா சீனிவாசன்


விவாதம்: பயணங்களும் பாதுகாப்பானவை இல்லையா?
பிருந்தா சீனிவாசன்


பொதுப் போக்குவரத்துகளில் எதிர்கொள்ளும் சிக்கல்களைச் சமாளிக்க முடியாமல்தான் பலரும் தனியார் நிறுவனங்களின் சேவையை நாடுகின்றனர். வாடகை கார், ப்ரீபெய்ட் டாக்ஸி, ஆட்டோ போன்றவற்றில் பெண்களுக்குக் குறைந்தபட்ச பாதுகாப்பாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையை நீர்த்துப் போகச் செய்கின்றன அடிக்கடி கேள்விப்படுகிற தகாத நிகழ்வுகள். சமீபத்திய உதாரணம் சென்னையைச் சேர்ந்த விலாசினி ரமணிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்.

இரவு நேரத்தில் தனியார் நிறுவனத்தின் காரில் தனியாகப் பயணம் செய்திருக்கிறார் விலாசினி. ஓட்டுநர் காரை அதிவேகத்தில் இயக்க, கொஞ்சம் பொறுமையாக ஓட்டச் சொல்லியிருக்கிறார். அதற்குத் தகாத வார்த்தைகளில் பேசியதோடு நில்லாமல், பாதி வழியில் இறக்கியும் விட்டுவிட்டார் ஓட்டுநர். வேறொரு ஆட்டோ பிடித்து பயணித்தவரைப் பின்தொடர்ந்து வந்து அச்சுறுத்தியிருக்கிறார்.

தன் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற பயத்துக்கு நடுவே காவல்துறையின் உதவியை அவர் நாடியிருக்கிறார். அங்கேயும் அவருக்கு அலைக்கழிப்புதான் மிச்சம். இது எங்கள் எல்லைக்குள் வரவில்லை என்று மாற்றி மாற்றி இரண்டு காவல்நிலையங்களுக்கு அலையவைத்திருக்கிறார்கள். சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் நாளிதழ் மூலமாகவும் இந்தப் பிரச்சினை வெளியே தெரிந்தபிறகுதான் காவல்துறை புகாரை ஏற்றிருக்கிறது.

இதே போன்றதொரு சம்பவம் தன் மனைவிக்கு நேர்ந்ததாகச் சொல்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர். பயணம் இணக்கமாக இல்லாததால் பதிவுசெய்த வண்டியை ரத்து செய்ததற்காகத் தன் மனைவி தகாத வார்த்தைகளால் தாக்கப்பட்டதாகக் குறிப்பிடுகிறார் அவர்.

இது போன்ற சம்பவங்கள் நடக்கும்போது பயணங்களும் பெண்களுக்குப் பாதுகாப்பானவை இல்லையா என்ற கேள்விதான் முதலில் எழுகிறது.

நீ ஏன் தனியாகப் பயணம் செய்தாய்? இரவு நேரப் பயணம் தேவையா? துணைக்கு யாரையாவது அழைத்துச் சென்றிருக்கலாமே? ஓட்டுநர் என்ன பேசினாலும் அமைதியாக இருக்க வேண்டியதுதானே? ஏன் எதிர்த்துப் பேசி ஒரு ஆணின் கோபத்தைக் கிளற வேண்டும்? இப்படிப் பெண்களைக் கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, இதற்கான தீர்வு என்ன என்பதை நோக்கி நகர்வதில்தான் பெண்களின் பாதுகாப்பு அடங்கியிருக்கிறது. காரணம், மேலே குறிப்பிடப்பட்ட கேள்விகள் எழ வாய்ப்பில்லாத பயணங்களின் போது பெண்கள் மிகப் பாதுகாப்பாக பயணிக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது.

இப்படிப் பயணங்களின்போது எதிர்பாராமல் நடக்கிற அச்சுறுத்தல்களையும் வன்முறைகளையும் எப்படிக் கையாள்வது என்ற பதற்றமும் அச்சமும் எல்லாப் பெண்களுக்கும் ஏற்படுவது இயல்பு.

நிறுவனங்களின் பங்கு என்ன?

தங்கள் நிறுவனத்தின் வாகனங்களில் பயணம் செய்கிற பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கடமை இல்லையா? தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இந்தக் காலத்தில் ஆபத்துக் காலங்களில் அழைப்பதற்கென்று ஏதாவது தனிப்பட்ட பொத்தான் வசதியோ, எச்சரிக்கை மணியோ வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்க வேண்டாமா?

இக்கட்டான நேரங்களில் பெண்கள் காவல் துறையை நாடும்போது காவல்துறையின் அணுகுமுறை எல்லா நேரங்களிலும் அனுசரணையாக இருப்பதில்லை. பெண்கள் மீது நிகழ்த்தப்படும் இதுபோன்ற அச்சுறுத்தல்களின்போதுகூடப் புகாரை ஏற்றுக்கொள்வதிலோ அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதிலோ காவல் துறை சுணக்கம் காட்டினால் பெண்கள் எங்கே செல்வது? காவல் துறையின் விரைவான செயல்பாடுதானே அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்?

பயிற்சி தேவை

பெண்களிடம் கண்ணியக் குறைவாக நடந்துகொள்கிற ஓட்டுநர் தண்டனை பெற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவரைப் போல இன்னும் சில நூறு ஓட்டுநர்கள் உருவாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? வாடகை கார் ஓட்டுநர்களுக்கு இங்கே போதுமான பயிற்சி அளிக்கப்படுகிறதா? பயணிகளிடம், அதுவும் பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது ஓட்டுநர் உரிமத்துக்கு இணையான முக்கிய அம்சம் அல்லவா? பெண் வாடிக்கையாளர்களிடம் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்து ஓட்டுநர்களுக்கு வழிகாட்டுதலோ ஆலோசனையோ வழங்கப்படுகிறதா? நிறுவனங்களின் சார்பில் நடக்கும் போக்குவரத்துச் சேவையிலேயே இந்த நிலை என்றால் தனிநபர்களின் வாடகை வண்டிகளில் கிடைக்கக்கூடிய பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்?

இப்படிப்பட்ட கேள்விகளுக் கிடையேதான் பெண்களின் பாதுகாப்புக்கான விடை பொதிந்திருக்கிறது.

நீங்க என்ன சொல்றீங்க?

வாசகர்களே, பயணங்களின் போது சந்திக்கிற அச்சுறுத்தல்களைப் பெண்கள் எப்படிக் கையாள வேண்டும்? பாதுகாப்பான பயணத்துக்கு வழி என்ன? இந்தப் பிரச்சினையில் உங்கள் அனுபவம் என்ன? போக்குவரத்துச் சேவை நிறுவனங்களின் பங்கு, காவல் துறையின் கடமை பற்றியெல்லாம் உங்கள் கருத்து என்ன? பகிர்ந்துகொள்ளுங்கள், விவாதிக்கலாம்.

NEWS TODAY 21.12.2025