Thursday, October 20, 2016

துபாய், சிங்கப்பூர், மலேஷியாவுக்கு ஐ.ஆர்.சி.டி.சி., சுற்றுலா துவக்கம்

சென்னை: இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகம், துபாய், மலேஷியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு, சிறப்பு விமான சுற்றுலா பயண திட்டங்களை அறிவித்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி., என்கிற, இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகம், ரயில்கள் மூலம் சிறப்பு சுற்றுலா பயண திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது, விமானம் மூலம், வெளிநாட்டு சுற்றுலா திட்டங்களை அறிவித்துள்ளது.
 சென்னையிலிருந்து, துபாய், அபுதாபிக்கு, நான்கு நாட்கள் சுற்றுலா: விமானம், டிச., 7ல் புறப்படும். ஒருவருக்கு, 56 ஆயிரத்து, 300 ரூபாய் கட்டணம் மலேஷியா, சிங்கப்பூர், ஏழு நாட்கள் சுற்றுலாவுக்கான விமானம், நவ., 26ல், புறப்படும். ஒருவருக்கு, 71 ஆயிரத்து, 900 ரூபாய் கட்டணம் இலங்கையில், ராமாயணம் மற்றும் கதிர்காமம் யாத்திரை, ஏழு நாட்கள் சுற்றுலா: விமானம், நவ., 19ல் புறப்படும். ஒருவருக்கு, 47 ஆயிரத்து, 700 ரூபாய் கட்டணம். இக்கட்டணத்தில், நட்சத்திர ஓட்டலில் தங்கும் வசதி, நுழைவு கட்டணம், சுற்றுலா வழிகாட்டி மற்றும் விசா அடங்கும்

 மேலும் விபரங்களுக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள சிறப்பு பிரிவை, 90031 40681 என்ற மொபைல் எண்ணிலும், www.irctctourism.com என்ற, இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
திருமலையில் முன்பணம் வசூல் ரத்து

திருப்பதி: திருப்பதி திருமலையில், பக்தர்கள், தங்குவதற்காக 7,000 வாடகை அறைகள் உள்ளன. கவுண்டரில் முன்பணம் செலுத்தி, அறையை பெறலாம். அறையை, மூன்று நாட்கள் வரை நீட்டித்து கொள்ளலாம். அறையை திரும்ப அளிக்கும் போது, வாடகையை எடுத்து கொண்டு, முன் பணம் திரும்ப அளிக்கப்படும். பக்தர்கள், முன் பணத்தை திரும்ப பெற, அதிக நேரம் காத்திருக்கின்றனர். இதனால், முன் பணம் வசூலிக்கும் முறையை, தேவஸ்தானம், நேற்று முதல் ரத்து செய்தது.இனிமேல், வாடகை மட்டும் செலுத்தி, அறையை பெற்று கொள்ளலாம். 24 மணி நேரத்துக்குள் அறையை காலி செய்ய வேண்டும். தரிசனம் தாமதமானால், தரிசன டிக்கெட்டை ஆதாரமாக காட்டி, அறையை நீட்டித்துக் கொள்ள வேண்டும்.

Wednesday, October 19, 2016

ஆங்கிலத்தில் பேச தெரியாத விரக்தியில் ஏரியில் குதித்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை,


ஆங்கிலத்தில் பேச தெரியாத விரக்தியில் ஏரியில் குதித்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.


மும்பை பவாயில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தவர் சஞ்சிவ் ஜெயின் (வயது27).


மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர் மூன்று மாதங்களுக்கு முன் அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். சிஞ்சிவ் ஜெயினுக்கு சரளமாக ஆங்கிலத்தில் பேச தெரியாது. இதனால் அலுவலகத்தில் மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்ள முடியாமலும், அவர்களுடன் ஆங்கிலத்தில் பேச தெரியாமலும் தவித்து வந்தார். என்ஜினீயரான தன்னால் ஆங்கிலத்தில் பேச முடியவில்லையே என்று அவருக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டது.


இதுபற்றி தனது குடும்பத்தினரிடம் கூறி வேதனைப்பட்டு இருக்கிறார். எனவே அவர்களும் வேலையை விட்டு விட்டு வரும்படி கூறியுள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று தனது சகோதரிக்கு போன் செய்த சஞ்சிவ் ஜெயின் ஆங்கிலத்தில் பேச முடியாமல் தவிப்பதாகவும், தனது வாழ்க்கையை முடித்து கொள்ள போவதாகவும் கூறி விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதை அறிந்த குடும்பத்தினர் உடனே தானேயில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பவாய் வந்து சஞ்சய் ஜெயினை தேடினார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.


இதையடுத்து பவாய் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தனர். இந்த நிலையில், பவாய் ஏரியில் வாலிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரின் உடலை கைப்பற்றினார்கள். விசாரணையில் அந்த வாலிபர் சஞ்சிவ் ஜெயின் என்பது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் எனும் பகடைக்காய்: மதிப்பிழந்துபோன பெண் உழைப்பு

பா.ஜீவசுந்தரி

வீட்டுப் பணிப்பெண்கள் பற்றிய நகைச்சுவைத் துணுக்கு இடம் பெறாத பத்திரிகைகள் ஏதும் உண்டா? உண்மையில் வீட்டு வேலை செய்யும் இந்தப் பெண்களின் நிலை நகைச்சுவைக்கு உரியது மட்டும்தானா? வேலைக்குச் செல்லும் பெண்களைப் பொறுத்தவரை வீட்டுப் பணிப்பெண் ஒருநாள் வேலைக்கு வராவிட்டாலும்கூட அந்த வீடு வீடாக இருக்காது. வீட்டுப்பணி என்பது நச்சரிக்கும் பணி; அதற்கு முடிவென்பதே இல்லை. எவ்வளவு வேலைகள் வளர்ந்தால்தான் என்ன? வீட்டு ஆண்கள் உதவிடவா போகிறார்கள்? அந்த மனமாற்றம் இன்னமும் இங்கு வராதது ஆகப் பெரும் சோகம். விதிவிலக்குகள் எங்கும் உண்டு.

வேலைக்குப் போகும் இல்லத்தரசிகளின் இமாலயப் பணிச்சுமையைப் பகிர்ந்து கொள்பவர்கள் வீட்டுப் பணிப்பெண்கள் மட்டும்தான். பாத்திரம் தேய்த்தல், துணி துவைத்தல், வீடு பெருக்கித் துடைத்தல் இவை மூன்றும் மிக அவசியமான, கடினமான பணிகள். சில வீடுகளில் தேவை கருதி சமையலுக்கும் ஆட்களை அமர்த்திக்கொள்கிறார்கள். இன்னும் குழந்தையைக் கவனிப்பது, முதியோரைக் கவனிப்பது போன்றவையும் இதில் அடக்கம்.

இளக்காரமான பணி

இவ்வளவு பணிகளைச் செய்யும் பணிப்பெண்ணுக்கு ‘வேலைக்காரி’என்ற ஏளனமான ஒற்றைச் சொல் தவிர்த்து என்ன மதிப்பு இருக்கிறது? ஆண்டாண்டு காலமாக நம் வீட்டுப் பெண்கள் வீட்டுக்குள் செய்துகொண்டிருக்கும் இந்த வேலைகள் மீது எந்த மதிப்பும் இல்லாததே இதற்கு மூல காரணம். ஊதியம் ஏதுமின்றித் தங்கள் உழைப்பை அவர்கள் செலுத்திக் கொண்டேயிருப்பதால், அது மதிப்பிழந்து போகிறது. அதனால்தான் நாள் முழுதும் சிறுகச் சிறுக வேலைகளைக் கவனித்துக்கொண்டே ‘சும்மா’ இருப்பதாகத் தங்களைச் சொல்லிக்கொள்ளும் மனநிலையை நோக்கி ‘இல்லத்தரசிகள்’ தள்ளப்பட்டிருக்கிறார்கள். தங்கள் பணியைத் தாங்களே மதிக்காத பெண்களால் பணிப்பெண்களின் உழைப்பை எப்படி மதிப்பீடு செய்ய இயலும்? அவர்கள் கனிவோடு அணுகப்படுவதில்லை என்பது கசப்பான உண்மை.

கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழித்த சக மாணவியைப் பார்த்து ‘நீயெல்லாம் கரிச்சட்டி கழுவத்தான் லாயக்கு’ என்று ஆசிரியப் பெருந்தகை இட்ட சாபத்தைக் கேட்டு வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவள் நான்! கரிச்சட்டி கழுவுதல் அவ்வளவு கேவலமா?

வீட்டுப் பணிப் பெண்கள் யார்?

பெரும்பாலும் முறையான பள்ளிக் கல்வியை முடிக்காதவர்கள். கீழ் நடுத்தர வர்க்கம் மற்றும் அடித்தட்டு மக்கள். ஆண்களின் வருமானம் முழுமையாகக் குடும்பத் தேவைகளுக்குச் சென்று சேரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத குடும்பங்களிலிருந்து வருபவர் கள். ஏனென்றால், வந்தால் வீட்டுக்கு லாபம், இல்லையேல் நாட்டுக்கு என்று ‘டாஸ்மாக்’ கடைக்குச் சென்று சேரும்.

எளிதானதா வீட்டுப் பணி?

விடியும் முன்பே தொடங்கும் இவர்களின் ஒரு நாள் வாழ்க்கை. கணவன், குழந்தைகளுக்கான உணவு ஏற்பாடுகளைச் செய்துவிட்டு ஆறு, ஆறரை மணிக்குக் கிளம்பினால் நாலு அல்லது ஐந்து வீடுகளை முடித்துவிட்டுத் திரும்புவதற்குப் பிற்பகல் 2 அல்லது 3 மணிகூட ஆகலாம். பணி செய்யும் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு திக்கில் இருக்கும். அதற்கான போக்குவரத்து அல்லது நடை நேரம் பணி நேரமாகக் கணக்கில் வராது. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பவும் முடியாது. கொசுறாக அவர்கள் சொல்லும் வேலைகளை முடித்துவிட்டுத்தான் செல்ல முடியும். மாலையிலும் சில வீடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். மொத்தமாக வெளியில் 14 மணிநேரம், தனது வீட்டில் ஐந்து, ஆறு மணிநேரம் வேலை பார்க்க வேண்டியுள்ளது.

பணிச் சுமையை மிஞ்சும் மன வலி

தனது நேர்மையை எப்போதுமே நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஏழ்மை நிலைதான் அதற்கும் காரணம்! நம்பிக்கையின்மை, எப்போதும் சந்தேகக் கண் கொண்டு அணுகுவது, வேலைக்குதான் வந்துவிட்டார்களே என்பதற்காக மிகவும் கீழ்த்தரமாக நடத்துவது, அவர்களுக்காகவே ‘ஸ்பெஷலாக’ தயாரித்து அளிக்கப்படும் காபி, டீ, சில வீணாய்ப்போன, எஞ்சிப்போன உணவு வகைகள், ஓயாமல் வேலைகளை ஏவிக்கொண்டே இருப்பது, விடுமுறை அளிக்க மறுப்பது இப்படிப் பல.

பிரச்சினைகளிலேயே மிகவும் சிக்கலானது, வீட்டு எஜமானர்களால் ஏற்படும் பாலியல் தொந்தரவுகள். பெரும்பாலும் அதை அவர்கள் வெளியே சொல்வதில்லை; அப்படியே சொன்னாலும், உண்மை என்ன என்பது மனசாட்சிக்குத் தெரிந்தே இருந்தாலும் எந்த வீட்டு எஜமானியும் தங்கள் வீட்டு ஆணை அது கணவனோ, மகனோ, அண்ணன், தம்பியோ யாராக இருந்தாலும் விட்டுத்தரத் தயாராக இருப்பதில்லை. இங்கும் பணிப்பெண்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவாள். அவள் வேலை பறிபோகும் அபாயமும் இருக்கிறது.

பணிப்பெண்களால் ஏற்படும் பிரச்சினைகள் என்றால், ஒரு சிலர் கைக்கு அகப்படும் எளிய பொருட்களை எடுத்துக்கொண்டு போவது, முன்னறி விப்பின்றி விடுமுறை எடுத்துக்கொண்டு காலை வாரி விடுதல் போன்றவை சொல்லப்படுகின்றன.

எத்தனை காலத்துக்கு இந்த வேலை?

சரி, ஒரு பெண் எத்தனை காலத்துக்கு வீட்டு வேலைகளைச் செய்து பிழைக்க முடியும்? மேலும் அளவுக்கு அதிகமான வீட்டுப் பணிகளால் ஏற்படும் உடல் பாதிப்புக்கு யார் பாதுகாப்பு? அனைத்து விதமான துணிகளையும் சலவை இயந்திரத்தில் துவைத்துவிட முடியாது. கால் மிதி, குழந்தைகளின் துணிகள், பள்ளிச் சீருடை, அதிலும் குறிப்பாக வெள்ளைத் துணிகள், சாக்ஸ் போன்றவை இவர்களின் ‘கைவண்ண’த்துக்காகவே காத்திருக்கும்.

சோப்புத் தூள், சோப்புக் கட்டிகள், பாத்திரம் துலக்கும் பவுடர், சோப்பு, சோப்பு நீர்க் கரைசல்கள் போன்ற வேதியியல் பொருட்களை நாள் முழுவதும் கையாள்வதால் அவை கைகளைப் பதம் பார்க்கின்றன. கைகள் எப்போதும் ஈரத்தில் ஊறியபடி இருப்பதால் எந்த நேரமும் வலி இருக்கிறது. சிலருக்கு ஒவ்வாமையும் ஏற்படுகிறது. இவ்வளவு கடினமான பணிகளைச் செய்ய வேண்டுமானால் அதற்கேற்ப நல்ல சத்துள்ள உணவும் வேண்டுமல்லவா? அது இல்லாததனால் உடல்ரீதியாகவும் தளர்ந்து போகிறார்கள்.

எல்லா வீட்டிலும் எல்லா வேலைகளையும் எல்லோரும் ஏற்பதில்லை. ஏதாவது ஒரு வேலையை மட்டும் ஒவ்வொரு வீட்டில் ஏற்பது என்ற நிலையும் இருக்கிறது. அப்படியானால் எந்த வேலைக்கு எவ்வளவு ஊதியம்? வீட்டுப் பணிப்பெண்களுக்கான அமைப்புகள் இருந்தபோதும் அனைவரும் அதில் பங்கேற்பதில்லை. எத்தனையோ முறைசாராத் தொழில்களுக்கு அரசே குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கிறது. அவர்களுக்கு வாரியம் அமைக்கிறது. ஈ.எஸ்.ஐ., காப்பீடு வசதிகள் செய்யப்படுகின்றன. ஆனால் பணிப்பெண்களுக்கு இது எதுவும் இல்லை. ஊதியத்தைப் பொறுத்தவரை குத்துமதிப்பாக ஏதோ கொடுக்கப்படுகிறது.

நடப்பிலுள்ள இந்த நிலையை நாம் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். இன்றைய நடைமுறை வாழ்க்கையில் பணிப்பெண் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கிறார். அவர்களின் பாதுகாப்பில் நமக்கும் அக்கறை இருக்கிறது.

கொசுறு



கடந்த 2009-ம் ஆண்டில் வீட்டுப் பணிப்பெண்களுக்கான ஊதியத்தை நிர்ணயிப்பதற்காக ஆலோசனைக் குழு ஒன்றை அரசு நியமித்தது. வேலை செய்யக்கூடிய நகரங்களுக்கு ஏற்ப ஒரு மணி நேரத்துக்கு தலா ரூ. 25/- முதல் ரூ. 30/- வரை ஊதியமாக நிர்ணயிக்கலாம் என்று அந்தக் குழு அரசுக்கு அறிக்கை அளித்தது. ஆனால், அரசு அதைச் செயல்படுத்தவில்லை. இப்போது ஒரு மணி நேரத்துக்கு ரூ. 50/- ஊதியமாக அளிக்கப்பட வேண்டுமென்று தேசிய வீட்டு வேலைத் தொழிலாளர்கள் இயக்கம் மீண்டும் கோரிக்கை வைத்திருப்பதோடு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது நடைமுறைக்கு வருமா?

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

Maharashtra University of Health Sciences declares list of affiliated colleges

NASHIK: Maharashtra University of Health Sciences (MUHS) declared an important list of affiliated colleges, (excluding the deemed universities) who have been granted continuation/extension of affiliation for the academic year 2016-17 on Wednesday.

Aspirants trying for admissions in private medical colleges in the state should go through the list before confirmation of admission in respective institutions.

MUHS public relation officer Dr Swapnil Torne said, "This list has been published at the university's website which shows the availability of courses and seats in medical colleges across the state. The Medical Council of India (MCI) changes accreditation and number of seats available in colleges every year after reviewing the infrastructure of respective colleges. But, there are many colleges who continue admitting students without informing them about the latest change made by MCI. This creates a problem for students who get admission at college level, but are prohibited to appear for examination on MUHS level. To avoid this, the university has declared the colleges, and the available number of seats."


Last year, there were cases across the state where students were admitted in MBBS, Dental Ayurvedic, Homoeopathy and Unani courses. As their seats were not approved by MCI, the MUHS could not conduct their exams. This invited anger among the students who held MUHS responsible.

"To avoid confusion, students still seeking admission, especially for nursing and Ayurvedic colleges across the state should go through the list and confirm whether the seats are authorized or not," Torne added.

The updated list has has 38 MBBS colleges, 28 dental colleges, 35 Ayurvedic and Unani colleges, six homoeopathy colleges, 23 physiotherapy colleges, 21 BPMT Colleges, six colleges of Optometry and Ophthalmic Sciences, one college of para medical course and 56 nursing colleges.

Currently, the admissions to MBBS/BDS All India Return Seats for the 2016-2017 are under way through Personal Counseling Round. Directorate of Medical Education and Research has announced that selected Candidates should report to the College with original documents and pay the Fees upto October 19.

சமத்துவம் பயில்வோம்: ஞாயிற்றுக்கிழமையும் நங்கைக்கு இல்லை

இரா.பிரேமா

‘பெண் பிறப்பு ஆணுக்கானது’என்பது எழுதப்படாத சமூகச் சட்டம். அதனால், பெண்ணின் பிறப்பு திருமணத்தில்தான் நிறைவு பெறுகிறது என இந்தச் சமூகம் நம்புகிறது. ‘ஒருவன் கையில் பிடித்துக் கொடுப்பது’, ‘இன்னொரு வீட்டுக்குப் போகப் போகிறவள்தானே’, ‘வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு இருக்கிறேன்’, ‘எப்படா கட்டிக் கொடுத்துச் சுமையை இறக்கப் போறேனோ’போன்ற சொல்லாடல்கள், பெண்ணை அடுத்த வீட்டுக்குரிய வளாகவே வளர்க்கும் பெற்றோர்களின் மனப் பான்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.


குழந்தை வளர்ப்பில் உணவு, உடை, வாய்ப்பு, அந்தஸ்து, அதிகாரம் என அனைத்து நிலைகளிலும் ஆணுக்கு முதலிடம், பெண்ணுக்கு இரண்டாம் இடம். ஆண், பெண் என இரு குழந்தைகள் இருக்கும் வீட்டில், பொருளாதார நலிவு இருக்கும்பட்சத்தில், ஒப்பீட்டளவில் ஆண் குழந்தைக்கு உணவு, உடை, கல்வி ஆகியவை தரத்திலும் அளவிலும் கூடுதலாகத் தரப்படுகின்றன. அதன் காரணமாக அவன் உரிய பருவத்தில் அந்தஸ்து உடையவனாகவும் அதிகாரம் உடையவனாகவும் உருவாகிறான். பெண் குழந்தை இந்த வாய்ப்பு கிடைக்கப் பெறாததால், எல்லா விதத்திலும் பின்தங்கிவிடுகிறாள்.

மேலும், குடும்பத் தளத்தில் பெண்ணுக்குச் சமையல், குழந்தைப் பராமரிப்பு, வீட்டுப் பராமரிப்பு போன்றவை விதிக்கப்பட்ட பொறுப்புகள். ஆணின் மீது இந்தப் பொறுப்புகள் சுமத்தப்படுவதில்லை. காலம் காலமாக, தலைமுறை தலைமுறைகளாகப் பெண்களுக்கான பணிகளாக இவை பாவிக்கப் படுவதால்,பெண்ணுக்கு இல்லம் சுமையாகிப் போய்விடுகிறது. இதனால், குழந்தையை மட்டுமல்ல, குடும்பத்தையும் சுமக்கிறாள் பெண்.

ஆணுக்கு வீட்டு வேலைகளிலிருந்து முழுமையான விடுதலை என்பதால் அவன் பொருளாதார ரீதியாகக் குடும்பத்தைப் பராமரிக்க விதிக்கப்பட்டான். ஆனால், இன்று பெண்கள் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைத் தாங்களும் பகிர்ந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர் என்றாலும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட வீட்டுப் பராமரிப்புப் பணிகளிலிருந்து விடுதலை இல்லை. அதனால் பெண்கள் இன்று இரட்டைச் சுமைகளில் அல்லாடுகிறார்கள்.

வீட்டு வேலை என்பது குறிப்பிட்ட நேரத்தோடு முடிந்துவிடுவதல்ல. விடுமுறை இல்லாத வேலையும்கூட. இதைத்தான் தமிழ்க் கவிஞர் ஒருவர்,

நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை
ஞாயிற்றுக்கிழமையும் நங்கைக்கு இல்லை

என்று குறிப்பிட்டுள்ளார். ஒரே மாதிரியான வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது அலுப்பும் சலிப்பும் ஏற்படுவது உண்டு. தலைமுறை தலைமுறையாக பெண்கள் வீட்டு வேலை செய்துவருவதால் எந்தப் பெண்ணும் அதை மறுப்பதில்லை, ஏன் என்று கேள்வி கேட்பதும் இல்லை.

பாட்டிக்குப் பிறந்த அம்மாவும்
அம்மாவுக்குப் பிறந்த தங்கையும்
பாட்டியைப் போலவும்
அம்மாவைப் போலவும்
வாழ்ந்துகொண்டிருக்கிறோம்
போலவே வாழாமல்
புதிதாக வாழ வேண்டும்

என்று ஒரு கவிஞர், பாலினப் பாகுபாடுகள் எந்தவொரு கேள்விக்கும் உட்படுத்தப்படுத்தப்படாது தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டுவருகின்றன என்பதை வெளிப்படுத்தியுள்ளார். சமூக மதிப்பில்லாத வீட்டு வேலைக்கு ஒவ்வொரு பெண்ணும் பத்து முதல் பன்னிரண்டு மணி நேரம்வரை செலவிடுகிறார். பெண்ணின் பெரும்பாலான பொழுதுகள் குடும்பப் பொறுப்பிலும் வீட்டுப் பராமரிப்பிலும் கழிந்து விடுவதால் பெண்கள் சமூகக் கடமையாற்றுவதும், சமூகப் பணி செய்வதும் இயலாமல் போய்விடுகிறது. இனிவரும் தலைமுறைகளாவது வீட்டு வேலை என்ற இடைவிடாத பணியிலிருந்து விடுபட்டுச் சிறக்க வேண்டும். ஆண், பெண் சமத்துவத்தில், மனிதாபிமானமும் இணைந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அனைவரும் முன்வர வேண்டும்.

- கட்டுரையாளர், பேராசிரியர்
தொடர்புக்கு: premakarthikeyyan@gmail.com

எதற்காக இப்படி ஓடுகிறோம்?

இமையம்

சிறுநீர், மலம் கழிக்க உரிய நேரம் தராமல் குழந்தைகளை நோயாளிகளாக்குகின்றன பள்ளிகள்

நம் எல்லோருக்குமே வாரிசு நலன் முக்கியமானதாக இருக்கிறது. எல்லோருடைய உயர்ந்தபட்ச ஆசை, கனவு, நோக்கம், லட்சியம் எல்லாவற்றிலும் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் உட்கார்ந்திருக்கிறது. இதற்காக எந்த விலை கொடுக்கவும் தயாராகவும் இருக்கிறோம். குழந்தைகளின் எதிர்காலத்துக்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிந்திக்கிறோம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஆனால், அடிப்படையான அம்சங்களில் கோட்டை விடுகிறோம்.

சென்னையிலுள்ள பிரபலமான ஒரு மருத்துவமனைக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். அங்குள்ள ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சை மையம் (டயாலிஸிஸ் சென்டர்) பக்கம் சென்றபோது, நான் பார்த்த காட்சி அதிரவைத்தது. அந்த மையத்தில் சுத்திகரிப்பு செய்துகொண்டிருந்தவர்களில் கணிசமானவர்கள் குழந்தைகள். பள்ளி செல்லும் வயதுடையவர்கள். பின்னர், மருத்துவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.

நிலைகுலைய வைத்த சூழல்

நவீன வாழ்க்கைச் சூழல், உணவுக் கலாச்சாரம் என்று சிறுநீரகச் செயலிழப்புக் கான காரணங்களைப் பட்டியலிட்டவர், குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கான கார ணங்களில் ஒன்றாக நம்முடைய பள்ளி களில் உள்ள கழிப்பறைச் சூழலைக் குறிப்பிட்டார். “குழந்தைகள் கேட்கும் உணவு வகைகளையெல்லாம் வாங்கித் தரும் பெற்றோர், அவர்கள் உண்ணும் உணவும் பானங்களும் கழிவாக வெளியேறுவதில் எந்த அளவுக்கு அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள்?” என்று கேட்டபோதுகூட இந்தப் பிரச்சினையின் முழு உக்கிரத்தை நான் உணரவில்லை. பின் இதுபற்றி சிறுபிள்ளைகள் பலரிடமும் பேசினேன். பள்ளிச் சூழலை அவர்கள் சொன்ன விதம், ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரான என்னையே நிலைகுலையச் செய்தது. பல பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் சிறுநீர், மலத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளப் பழகியிருக்கிறார்கள். ஆசிரியர்களுக்குப் பயந்து, வெட்கப்பட்டு, நடுங்கி!

ஒரு நாள் சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கு நல்லது. ஒரு வாரம்கூட உண்ணாவிரதம் இருக்கலாம். உடல் அதை ஏற்றுக்கொள்கிறது. ஆனால், ஒரு மணி நேரம் சிறுநீர் / மலம் கழிப்பதைத் தள்ளிப்போடுவதுகூட நல்லதல்ல. அன்றாடம் இதை மணிக்கணக்கில் செய்யும்போது உடல் சித்ரவதைக்குள்ளாகிறது. உடல் உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகின்றன.

குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினை

எனக்குத் தெரிந்து, காலையில் ஏழு மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பும் மழலைகள் இருக்கிறார்கள். அவர்கள் கே.ஜி. வகுப்புகள் படிக்கிற பள்ளிக்கூடங்களுக்கு ஐந்து, பத்து கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்களில் செல்ல வேண்டும். அந்தப் பள்ளி வாகனங்கள், வழியில் உள்ள ஏனைய கிராமங்களுக்கும் சென்று குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்குச் செல்லும். பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் பதற்றத்துடன் வீட்டிலிருந்து ஓடிவந்து வாகனங்களில் ஏறும் குழந்தைகள் பள்ளிக்கு வந்தவுடனேயே சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க என்று கழிப்பறைக்கு ஓட முடியுமா? ஆசிரியர்கள் அனுமதிப்பார்களா?

இது அன்றாடம் குழந்தைகள் எதிர்கொள் ளும் பிரச்சினை. ஆனால், அன்றாடம் இப்படிக் கழிப்பறைக்கு ஒரு குழந்தை அனுமதி கேட்டால், அதை நொறுக்கியேவிடுவார்கள் ஆசிரியர்கள். வளர்ந்த பிள்ளைகளேகூட கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்கத் தயங்கும் சூழலே பள்ளியில் இருக்கிறது. அப்படிக் கேட்பதைக் கேலிக்குரியதாக, ஏளனத்துக்குரியதாகவே நாம் கட்டமைத்து வைத்திருக்கிறோம். உயர் வகுப்பு படிக்கிற பிள்ளைகளுக்கே இந்த நிலை என்றால், கே.ஜி. படிக்கிற சிறு குழந்தைகளின் நிலை என்ன?

பயமின்றிச் சொல்ல முடியுமா?

ஆசிரியர் என்ற சொல்லும், ஆசிரியர் என்ற பிம்பமும் சாதாரணமானதா அல்லது எளிதில் அணுகக் கூடிய சினேகம் மிக்கதா? ஒரு நாளில் வகுப்பறையில் ஆசிரியர்கள் அதிகமாகப் பயன்படுத்தக் கூடிய வார்த்தை ‘பேசாத!’ என்பதுதான். அதற்கடுத்த சொல் ‘வாய மூடு!’ என்பது. ‘எனக்குச் சிறுநீர், மலம் வருகிறது’ என்று எத்தனை பிள்ளைகளால் பயமின்றிச் சொல்ல முடியும்? தவறி வகுப்பறையிலேயே சிறுநீர் கழித்துவிடுகிற குழந்தைகள் எப்படியான கேலிக்கும் அவமதிப்புக்கும் ஆளாகிறார்கள் என்பதை ஏனைய குழந்தைகள் பார்த்துக்கொண்டேதானே வளருகிறார்கள்!

யோசித்துப்பார்த்தால், நம்முடைய ஒட்டுமொத்தக் கல்வி அமைப்புக்குமே இதுகுறித்து இன்னும் பிரக்ஞை வரவில்லை என்ற முடிவை நோக்கித்தான் நகர வேண்டியிருக்கிறது. நம்மூரில் எத்தனை பள்ளிகளில் போதுமான அளவுக்குக் கழிப்பறைகள் இருக்கின்றன? இரண்டாயிரம் பேர் படிக்கிற பள்ளிக்கூடத்தில் இடைவேளையின்போது ஐந்து, பத்து நிமிடங்களுக்குள் அத்தனை பிள்ளைகளும் கழிப்பறையைப் பயன்படுத்திவிட முடியுமா? அந்த அளவுக்கு வசதிகொண்ட பள்ளி என்று தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகளைக் காட்ட முடியும்? கூட்டத்தில், வரிசையில் நின்று சிறுநீர் கழிக்க, மலம் கழிக்கக் கூச்சப்படுகிற குழந்தைகள் உண்டு. கூட்டமாக இருக்கிறது, வரிசையில் நிற்க வேண்டும் என்பதற்காகவே சிறுநீர் கழிக்காமல் திரும்பி வந்துவிடுகிற பிள்ளைகள் உண்டு. சிறுநீர் கழிப்பதற்காக, மலம் கழிப்பதற்காகக் காத்திருந்த நேரத்தில் மணி அடித்துவிட்டது, நேரமாகிவிட்டது ‘மிஸ் திட்டுவார்கள்’ என்று கழிவை வெளியேற்றாமல், அடக்கிக்கொண்டு அப்படியே ஓடிவந்துவிடுகிற பிள்ளைகளும் உண்டு. குழந்தைகள் பள்ளி செல்லும் காலத்தில் மதிப்பெண்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் வேறு எதற்கும் கொடுப்பதில்லை.

அரை லிட்டர் போதாது

பள்ளிக்குச் செல்கிற குழந்தைகளில் அநேகம் பேர் அரை லிட்டர் தண்ணீருக்கு மேல் எடுத்துச்செல்வதில்லை. ஒரு பகல் முழுவதும் ஒரு குழந்தைக்கு அரை லிட்டர் தண்ணீர் போதாது. ஆனாலும், ஏன் கொஞ்சம் தண்ணீரையே எடுத்துச் செல்கிறார்கள்? காரணம் இதுதான். காலை ஏழு மணிக்கு வீட்டைவிட்டுச் செல்கிற பல குழந்தைகள், பள்ளியிலிருந்து திரும்பி வீட்டுக்கு வந்தவுடனேயே கழிப்பறைக்கு ஓடுவதைப் பார்க்கலாம். இது ஒரு சமூகம் நிகழ்த்தும் வன்முறையின் குறியீடுகளில் ஒன்று. ஒருபுறம், கழிவுகளை உரிய நேரத்தில் வெளியேற்றாததால், இன்னொருபுறம் தேவையான நேரத்தில் தண்ணீர் குடிக்காததால் உடல் பாதிப்புக் குள்ளாகிறது. இதனால், பல நோய்களுக்குக் குழந்தைகள் ஆளாகின்றனர்.

இப்படித்தான் சிறுநீரகப் பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள் என்பதை மருத்துவர் என்னிடம் விளக்கினார். “மூன்று வயதிலேயே பள்ளிக்கு அனுப்பிவிடுகிறார்கள். சிறுநீரை அடக்கி அடக்கி வைப்பதால், சிறுநீர் வெளியேற வேண்டிய பாதையில் கழிவுகள் அடைப்புகளாக மாறி, நெஃப்ரான்களைச் செயலிழக்க வைத்து, சிறுநீரகத்தைச் சுருங்கவைக்கின்றன. சிறுநீரகம் செயல்படாததால் செயற்கை முறையில் டயாலிசிஸ் மேற்கொள்ள வேண்டிய நிலை. சிறுநீரகம் செயலிழந்தால், மாற்று சிறுநீரக அறுவைச் சிகிச்சை, டயாலிசிஸ் சிகிச்சை இரண்டுதான் தற்போதிருக்கும் வழிகள். இவை இரண்டுமே முழு ஆயுள் உத்தரவாதம் இல்லாதவை. எதற்காக ஓடுகிறோம் என்பதையே உணராமல் ஓடிக்கொண்டிருக்கும் தலைமுறை நம்முடையது” என்றார் மருத்துவர்.

ஆமாம், எதற்காக இப்படி ஓடுகிறோம்?

இமையம்,

எழுத்தாளர், ‘கோவேறுக் கழுதைகள்’, ‘செடல்’ நாவல்கள் உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு:imayam.annamalai@gmail.com

NEWS TODAY 21.12.2025