Sunday, January 8, 2017

நாட்டின் வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்: பிரதமர் மோடி

பெங்களுருவில் இன்று நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் நாட்டின் வளர்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார். மேலும் அவர் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு, வெளிநாடு வாழ் இந்தியர்கள் முக்கிய பங்களிப்பை அளிக்கின்றனர்.

ஆண்டுதோறும் சுமார் 69 பில்லியன் டாலர் மதிப்பிலான பணம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்படுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பில் இந்திய அரசு முன்னுரிமை அளிப்பதாகவும், அவர்களது பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் இந்திய தூதரகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

வெளிநாட்டில் வேலை பெற முயற்சிக்கும் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்படும் என அவர் குறிப்பிட்டார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய வெளிநாடு வாழ் இந்தியர்கள் 30 பேருக்கு நாளை குடியரத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருது வழங்கி கவுரவிக்க இருப்பதாக மோடி தெரிவித்தார்.


வெளிநாடு வாழ் இந்தியர்களை கவுரவிக்கும் விதத்தில் பெங்களூருவில் இன்று முதல் 3 நாட்களுக்கு பிரவாசி பாரதிய திவாஸ் என்ற பெயரில் மத்திய அரசு நடந்தும் இந்த நிகழ்ச்சியில்  இந்திய வம்சவாழியை சேர்ந்த போர்ச்சுகல் நாட்டின் பிரதமர் அன்டோனியா கோஸ்டா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஏராளமான வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்து கொண்டனர்.

அவருக்கு மட்டன் பிடிக்கும். ஆனா, நான் சமைச்சாதானே..!' - நீயா நானா' கோபிநாத் மனைவி துர்கா கலகல









கோபிநாத் மனைவி துர்கா

ப்ளி முகமும், பட்டாசு வார்தையுமாக மேடைகளை வசீகரிப்பவர் நீயா நானா கோபிநாத். அவர் நான்-வெஜ் பிரியர். மட்டன் பிரியாணியும், மீனும் அவரோட ஃபேவரைட் லிஸ்டில் முதலிடத்தில் உள்ளது என்கிறார் அவரது மனைவி துர்கா கோபிநாத். தனது சுவையான சமையல் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் துர்கா.

‘‘அவர் வகை வகையாய் கேட்டு மலைக்க வைக்கிற உணவுப் பிரியர் கிடையாது. சமைத்துக் கொடுக்கும் எந்த உணவையும் ரசித்து சாப்பிடுவார். சின்னக் குறைகளுக்கும் முகம் சுளிக்காமல் 'நல்லாருக்கு'னு சொல்லுவார். என் மாமியார் செட்டிநாடு சமையல்ல ஸ்பெஷலிஷ்ட். அம்மாவின் சமையல்னா அவருக்கு ரொம்ப பிடிக்கும். நான் திருமணத்துக்குப் பின் மாமியார்கிட்டதான் சமையல் கத்துக்கிட்டேன்.

மட்டன் பிரியாணின்னா விரும்பிச் சாப்பிடுவார். செட்டி நாடு ஸ்டைல் சமையலானாலும் அவருக்கு காரம் குறைவாக இருக்கணும். காரம்தான் அவரோட மிகப்பெரிய எதிரி. அதனால பார்த்துப் பார்த்து சமைப்பாங்க மாமியார். மீனும் அவருக்கு ரொம்ப பிடிக்கும். மீன் வறுவல், மீன் குழம்பு என எதையும் விட்டு வைக்க மாட்டார். எங்கள் வீட்டு சமையல்ல நள மகாராணினு சொன்னா அது என் மாமியார்தான். மட்டன் பிரியாணி செய்யும் போது அவர் சொல்லச் சொல்ல தேவையான மசாலாக்களை அவர் சொல்லும் பக்குவத்தில் செய்து கொடுப்பேன். அவ்வளவுதாங்க. மத்தபடி எனக்கு சமைக்கத் தெரியாது. அவர் எந்த மூடுல இருந்தாலும் சாப்பிட உக்காரும்போது அவர் அடம் பிடிக்காத குழந்தை மாதிரி. எந்த உணவிலும் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்வார். அவருக்கு சத்தான உணவை சமைத்துக் கொடுப்பதில் அலாதிப் பிரியம் அம்மாவுக்கு’’ என்கிறார் துர்கா கோபிநாத்.
‘‘அவர் டாக் ஷோலதான் மத்தவங்களை போட்டு வாங்குவாரு. ஆனா வீட்டுக்கு வந்தா சுட்டிப் பையன் மாதிரி எப்பவும் ஹியூமர்ல கலக்குவார். என் பொண்ணு வெண்பாவும் அவரும் சேர்ந்தா எனக்கு பிபியை எகிற வைக்கிற அளவுக்கு சண்டை இழுத்து பஞ்சாயத்துக்கு வருவாங்க. நிதானமா யோசிச்சா செம ரசனையான சண்டை அது. அதே சமயம் பொண்ணுக்காக மண்டிப்போட்டு அவளோட விருப்பங்களை, கண்டிஷன்களை எல்லாம் கேட்டுப்பார். வீட்டில் எப்பவும் வெண்பா ராஜ்ஜியம்தான். அவருக்கும் வெண்பாவுக்கும் இருக்கிற கெமிஸ்ட்ரி எப்படினா, தூக்கம், வலியில கூட வெண்பா அப்பானுதான் கூப்பிடுவா. மறந்தும் அம்மானு கூப்பிட்டதேயில்லை. நாங்க மூணு பேரும் சேர்ந்து இதுவரைக்கும் பல இடங்களுக்கு டூர் போயிருக்கோம். லோக்கல் மார்கெட்டுல ஆரம்பிச்சு பெரிய மால்கள் வரை எல்லாவிதமான உணர்வுகளையும் அவளுக்கு தரணும்னு அவர் விரும்புறார். நான் அதை ரசிக்கிறேன்.

ஒரு டாப்பிக் எடுத்தா அதுல உள்ள புகுந்து ரன்னிங் கமண்ட்ரி அடிக்கிறதுல அவர மிஞ்ச முடியாது. நான் சிரிச்சு சிரிச்சு டயர்ட் ஆகிடுவேன். அவருக்கு புத்தகங்கள் மேல அவளோ காதல். 1000க்கும் மேல புத்தகங்கள் வைச்சிருக்கார். வரலாறு தொடர்பான புத்தகங்கள் விரும்பிப் படிப்பார். எந்த நாட்டின் வரலாற்றைக் கேட்டாலும் மணிக்கணக்கில் பேசும் அளவுக்கு அவ்வளவு விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறார். அவரோட வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்னு நினைக்கிறேன்" என்கிறார் துர்கா கோபிநாத்.
 வெற்று ‘கதறல்‘களாக மாறிப்போன இடிமுழக்கம்..! நாஞ்சில் சம்பத் கடந்து வந்த பாதை

பேச்சு தான் திராவிட கட்சிகளின் மூலதனம். திராவிட கட்சிகள் தமிழகத்தில் காலூன்றவும், 50 ஆண்டுகாலம் தங்களை ஆட்சி பீடத்தில் தக்க வைத்துக்கொள்ளவும் மிக முக்கிய காரணமாக இருந்தது திராவிட இயக்க பேச்சாளர்களின் நாவன்மையே. பேரறிஞர் அண்ணாவில் துவங்கி, கலைஞர், நெடுஞ்செழியன், ஈ.வெ.கி.சம்பத், மதியழகன், அன்பழகன், வைகோ, நாஞ்சில் சம்பத் என நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
எல்லா பேச்சாளர்களும் பேச்சுத் தமிழில் பேசிய போது, திராவிட தலைவர்களும், பேச்சாளர்களும் செந்தமிழில் பேசினார்கள். கல்வியறிவு இல்லாத பாமர மக்களையிடையே பேசும் போது செந்தமிழ் எதற்கு என கேள்வி எழுந்தது. ஆனால் அது தான் வெற்றி பெற்றது. காரணம் தமிழின் பெருமைகளை கொண்டு சேர்க்க, தமிழ் பண்பாட்டை சொல்லி விளக்க செந்தமிழில் தான் பேச வேண்டியிருந்தது. அதுவே அவசியப்பட்டது.
சொல் மாறாமல் பேசுபவர்...
நிகழ்வுகளை அடுக்கி, அதில் மக்களின் சந்தேகங்களை போக்கி.. தாங்கள் சொல்ல வந்ததை மக்களிடம், தங்களின் நாவன்மையால் கொண்டு சேர்த்து விடுவார்கள் இந்த பேச்சாளர்கள். அவர்களில் ஒருவர் தான் நாஞ்சில் சம்பத்
குற்றால அருவியாக கொட்டும் பேச்சாற்றல், பிசிறு தட்டாத வார்த்தை ஜாலம், குறிப்புகள் ஏதும் இன்றி உலக நிகழ்வுகளை சமகால நிகழ்வுகளுடன் எடுத்துரைக்கும் பாங்கு என எல்லா ஆற்றலும் கொண்ட நாஞ்சில் சம்பத்தின் நாவில் இருந்து நர்த்தனம் ஆடிய வார்த்தைகளுக்கு ஆயிரமாயிரம் பேர் அடிமைகளாக இருந்துள்ளனர். நாக்கு பிறழாமல், ஒரு சொல் கூட மாறாமல், சொற்களை செதுக்கும் வல்லமை வாய்ந்தவராய் இருந்தார் நாஞ்சில் சம்பத். ஆனால் இப்போது அவர் அப்படியில்லை என்பது உண்மை.
தேன் கசந்து போனது...
நாஞ்சில் சம்பத், ம.தி.மு.க.வில் இருந்த போது வைகோவின் போர்வாள் என புகழப்பட்டவர். கட்சியில் வைகோவுக்கு அடுத்தபடியாக அபாரமான பேச்சாற்றலுடன் வலம் வந்தவர். ம.தி.மு.க.வில் இருந்து நிர்வாகிகள் பலர் வெளியேறிய நெருக்கடியான காலகட்டத்தில், "கலசங்கள் விழுவதால் கோபுரங்கள் சாயப்போவதில்லை. கலசங்கள் கீழே விழத்தான் செய்யும். ம.தி.மு.க. ஒரு வெண்கலப்பானை. கீழே விழும். சத்தம் கேட்கும். ஆனால் உடையாது.  ம.தி.மு.க. என்பது தேன். தேன் தானும் கெடாது. தன்னை சார்ந்து இருப்பவர்களையும் கெட விடாது. இந்த இயக்கத்தில் இருந்தால் மரியாதை. அதை விட்டுப் போனால் அவமரியாதை என்பதை வரலாறு பல பேருக்கு கற்பித்து கொடுத்துள்ளது"  எனப்பேசி வலம் வந்தார்.
ஒரு கட்டத்தில் ம.தி.மு.க.வில் இருந்த சம்பத்துக்கும் வைகோவுக்கும் இடையே உரசல் என செய்திகள் வெளியாக அதை மறுத்தார். இது தொடர்பாக எழுந்த சந்தேகங்களுக்கு பதிலளித்து பேசிய நாஞ்சில் சம்பத், ‘‘ராமாயணத்தில் வரும் அனுமன் தனது நெஞ்சில் ராமன் இருப்பதை பிளந்து காட்டியது போல, எனது ஒரே தலைவன் வைகோ தான். அவரைத் தவிர என் நெஞ்சில் யாரும் இல்லை என மார்பை பிளந்து காட்டவும் தயாராகவும் இருக்கிறேன்’’ என உணர்ச்சி மிகுதியில் பேசினார்.
சர்ச்சையை ஏற்படுத்திய அந்த பேச்சு...
ஆனால் அடுத்த ஒரு வாரத்தில், பதவியும், பகட்டான காரையும் பெற்றுக்கொண்டு அ.தி.மு.க.வில் ஐக்கியமானார் நாஞ்சில் சம்பத். அரசியல் பற்றி பேசும்போது பிழைகள் கூடாது என்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் பிழைகளுடன் பேசவே அரசியல் தலைவர்கள் விரும்புகிறார்கள். அதற்கு உதாரணமாக மாறிப்போனார் நாஞ்சில் சம்பத். எந்த பேச்சால் விரும்பப்பட்டாரோ, அதே பேச்சால் ஓரங்கட்டப்பட்டார்.
2015 டிசம்பரில் சென்னையில் கொட்டி தீர்த்த மழையை எட்டிப் பார்க்க கூட முடியாத ஆட்சியாளர்களின் செயலை நியாப்படுத்தும் விதத்தில் பேசி மக்களை கோப்படுத்தினார். வெள்ளம் பாதித்த நிலையிலும், அதிமுக பொதுக்குழு கூட்டம் கோலாகலமாக நடைபெற்றதே என்ற கேள்விக்கு, "ஒரு வீட்டில் இழவு விழுந்து விட்டது என்பதற்காக, இன்னொரு வீட்டில் கல்யாணம் நடக்காமல் இருக்குமா?" என்றும், "யானைகள் நடக்கும் போது சில எறும்புகள் சாகத்தான் செய்யும்" என்றும் இவர் பேசிய எதுகை மோனை பேச்சை மக்கள் ரசிக்கவில்லை.
இந்த பேச்சு மக்களை மட்டுமல்லாது, ஆட்சி செய்த ஜெயலலிதாவையும் கோபப்படுத்தியது. அதனாலே மேடைகள் கொடுக்காமல் ஓரங்கட்டியது தலைமை. மீண்டும் தேர்தல் வர பிரசாரத்துக்கு ஆள் வேண்டுமே என்பதற்காக மீண்டும் சேர்க்கப்பட்டார் நாஞ்சில் சம்பத். தேர்தலுக்கு பின்னர் மீண்டும் ஒதுக்கி வைக்கப்பட்டார்.
முதலில் எதிர்ப்பும், பின்னர் ஆதரவும்...
இந்த நேரத்தில்தான் ஜெயலலிதா மரணம் நிகழ்ந்தது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாய் எழுந்த கருத்தை நாஞ்சில் சம்பத்தும் ஆமோதித்திருந்தார். ‘‘தொண்டர்கள் நினைப்பது சரிதான். தொண்டர்களின் சந்தேகத்தை  அ.தி.மு.க தலைமை தீர்த்து வைக்க வேண்டும்" "சசிகலாவுக்கு மட்டும்தான் பொதுச் செயலாளர் ஆகும் தகுதி இருக்கிறது என்றால் அவரை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்ளும் தகுதி எனக்கில்லை’’ என அவரது பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதா தனக்கு கொடுத்த காரை அ.தி.மு.க. தலைமையிடம் திருப்பிக்கொடுத்தார் நாஞ்சில் சம்பத். அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக சொன்னார். பொதுமேடையில் அரசியல் பேசுவதை தவிர்த்தார்.
ஆனால் இந்த செய்திகளின் தாக்கம் மறைவதற்குள், யாரை எதிர்த்து பேசினாரோ, யாருக்கு தகுதி இல்லை என்று மறைமுகமாக சாடினாரோ, அதே சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்று, மீண்டும் அ.தி.மு.க.வின் பேச்சாளர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
பெரும்பாலும் கட்சி விட்டு கட்சி மாறும் பேச்சாளர்கள்,  தங்கள் சுயத்தை இழந்து விடுகிறார்கள். ஏற்கெனவே இரு முறை கட்சி மாறி, இப்போது மாறிய தலைமையை ஏற்றுள்ள நாஞ்சில் சம்பத் நிலையும் இது தான். எந்த பேச்சால் பெரும்பாலானோரை கவர்ந்தாரோ, அதே பேச்சால் இப்போது அவமானப்பட்டு நிற்கிறார் நாஞ்சில் சம்பத்.
போதையில் இருப்பவர் பேச்சு நிலையாக இருக்காது என்பார்கள். நாஞ்சில் சம்பத்தும் போதையில் தான் இருக்கிறார். அது அரசியல் போதையா? பதவி போதையா? என தெரியவில்லை. அதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
- இரா.மோகன்.

Saturday, January 7, 2017

காதற்ற ஊசியும் வாராது.

அணைக்கட்டுகளையும் கோபுரங்களையும் பிரமிடுகளையும் எழுப்பிய மாமனிதர்கள் இன்றைக்கு இல்லை. பிரமிடுகளை எழுப்பியவர்கள் அதற்குள்ளே அடக்கமாகிப் போனார்கள். பிரமிடுகள்தாம் இன்றைக்கும் இருக்கின்றன. இதனால் தெரிய வருவது, மனித வாழ்க்கை நிலையில்லாதது என்பதே ஆகும். அதனால், கொடுக்கப்பட்ட வாழ்நாளை, அர்த்தமுள்ளதாக ஆக்குவதே மானுடத்தின் மாண்பாகும்.
பணத்திற்குப் பதிலாகப் பண்டமாற்றுமுறை நடப்பில் இருந்த காலத்து விற்பவனும் சிறப்பாக வாழ்ந்தான், வாங்குபவனும் சீராக வாழ்ந்தான். கருவேப்பிலை கொத்தமல்லிக்கு, அரிசியைக் கொடுத்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். பழைய இரும்பைப் போட்டுவிட்டுப் பேரீச்சம் பழம் வாங்கியவர்கள்தாம் நாம்.
சங்க காலத்தில் ஒரு தந்தை விற்கக்கொடுத்த மீனைக் கள்ளுக்கடைக்காரனிடத்து பண்டமாற்றுச் செய்யாமல், முத்து வியாபாரியிடம் கொடுத்து முத்தை வாங்கி வருகிறாள், நெய்தல் நிலப்பெண். பண்டமாற்று முறையில் தனிமனிதனும் நாணயமாக இருந்தான் சமுதாயமும் நேர்மையோடு இருந்தது. ஆனால், பாழும் பணம் வந்தபிறகு ஒட்டுமொத்த சமுதாயமே குப்புறப்படுத்துக் கிடக்கிறது.
ஊர்களை அறிவதற்கும், பயணிக்கும் தொலைவை அறிவதற்கும் பயன்படும் கருவிகள் கையகத்தே இருந்தாலும், பத்து கிலோ மீட்டருக்கு ஒரு எல்லைக்கல்லையும், தகவல் பலகையையும் நட்டு வைத்திருக்கிறார்கள், நெடுஞ்சாலைத் துறையினர் அதுபோல வாழ்க்கைப் பயணத்திலும் தடுமாறிப் போகாமல் இருப்பதற்கு நம்முடைய அருளாளர்களும் ஞானிகளும் எச்சரிக்கைப் பலகைகளை அச்சடித்து வைத்திருக்கிறார்கள்.
மனித வாழ்க்கையை எளிமையாக்குவதற்காக வந்த பணத்தைத் தேடுவதிலேயே, பலர் வாழ்க்கையைத் தொலைத்து விட்டார்கள். மூன்று தலைமுறைகளுக்குப் பயன்பட வேண்டுமென்று ஊரை அடித்து உலையிலே போட்டவர்கள் இன்று, மானம் - மரியாதையை இழந்து திகம்பர சாமியார்களாகத் திரிவதைப் பார்க்கிறோம்.
தரைதளத்திலிருந்து மேல்மாடிக்குச் செல்வதற்கு மாடிப்படிகளைக் கட்டுகிறோம். நடப்பதற்கும் கடப்பதற்கும்தான் மாடிப்படிகளே தவிர, அவற்றில் படுத்து உறங்குவதற்கும், வாழ்வதற்கும் அல்ல. அதுபோல பணமும் ஒரு பண்டமாற்றுக் கருவியே தவிர, வாழ்க்கையை அதற்குள் புதைப்பதற்காக அன்று.
பணத்தாசையால் பாழ்பட்டுப் போகின்றவர்களை முதன் முதலில் எச்சரித்தவர், திருவள்ளுவப் பெருந்தகையே. "வஞ்சனையான வழியில் பொருளைச் சேர்த்துக் காப்பாற்றுதல், சுடாத பச்சை மண்கலத்துள் நீரைவிட்டுக் காப்பாற்றுவது போன்றதாகும்' (குறள் 669) என்றார்.
மேலும், "அருளொடும் அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தைப் பெற்று மகிழாமல், அதைத் தீமை என்று நீக்கிவிட வேண்டும்' (குறள் 755) எனவும் கடிந்துரைத்தார். இவற்றை எல்லாம் பின்பற்றாத காரணத்தால், இன்றைக்கு மத்திய அரசாங்கத்தின் கஜானாவுக்கு ரூ.67,382 கோடி கணக்கில் இல்லாத பணம் வந்து சேர்ந்திருக்கிறது.
சோமநாதபுரம் ஆலயத்தின்மீது 17 முறை படையெடுத்துக் கொள்ளையடித்துக் கொண்டு வந்த நவரத்தினங்களை எல்லாம் அரண்மனையில் குவிக்கச் செய்து, அதற்கு நடுவில் படுத்துக்கொண்டே, அதனைப் பார்த்துக்கொண்டே செத்தான், கஜினி முகம்மது.
அபரிமிதமான செல்வம் அழிவுக்கே அழைத்துச் செல்லும் என்பதை நம்மாழ்வார், "கொள்க என்று கூறிக்கொண்டே வரும் செல்வம், பின்னர் அவனை நெருப்புச் சூழ்ந்தது போல் சூழ்ந்து அழிக்கிறது. பேராசையால் அச்செல்வத்தை ஏற்றுப் பின் அழிகின்ற இவ்வுலகத்தின் இயற்கைதான் என்னே' (பாசுரம் 3322) எனத் திருவாய்மொழியில் அருளிச் செய்கிறார்.
நம்மாழ்வாரைப் போலவே வில்லிபுத்தூராழ்வாரும் அளப்பரிய செல்வம் எவ்வாறு கெடுக்கும் என்பதை, "மிதமிஞ்சிய செல்வம் சிலரிடத்து வந்துவிட்டால், தெய்வமும் சிறிது பேணார் தாம் சொல்லும் சொற்களை ஆராய்ந்து சொல்லமாட்டார்கள், உறவினர் என்றும், நண்பர்கள் என்றும் இரக்கம் காட்டமாட்டார்கள் எப்படியும் வென்றுவிடலாம் என்ற சிந்தனையிலேயே இருப்பார்கள் விதி வலிது என்பதையும் எண்ணார்' எனும் விதுர நீதியால் உணர்த்துகின்றார்.
வள்ளற்பெருமானிடம் பொருளாசைப் பிடித்த உன்மத்தர்கள், இரும்பைப் பொன்னாக்கும் இரசவாதத்தைச் செய்யும்படி வற்புறத்துகின்றனர். அதற்குப் பெருமானார் "யான் படைத்த பணத்தை எல்லாம் கிணற்றிலே எறிந்தேன், ஆற்றினில் எறிந்தேன், குளத்தினில் எறிந்தேன். அன்பர்கள் வற்புறுத்திப் பொருளை என்பால் திணித்த போதெல்லாம், அவற்றைக் கொண்டுபோய் கொல்லைப்புறத்தே கொட்டினேன்.
பொருள் பெருகினால், மனம் அறியாமை இருளில் அழுந்தும். அதனால் என்னை வற்புறுத்தாதீர்கள்' என அவர்களைக் கண்டித்து அனுப்பினார்.
கூரத்தாழ்வாரும் சுவாமி வேதாந்த தேசிகரும் நாள்தோறும் காலையில் பிட்சைக்குப் (உஞ்சவிருத்தி) போவது வழக்கம். அப்போது தெருவிலுள்ளோர் வந்திருப்பவர்கள் மகான்கள் என்பதால், வெள்ளிக் காசுகளையும், தங்கக் காசுகளையும் அரிசியோடு கலந்தே கொண்டு வந்து போடுவார்களாம்.
ஆனால், இவ்விரண்டு அருளாளர்களும் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பே வாசலில் தங்க, வெள்ளிக் காசுகளைக் கொட்டிவிட்டு, வெறும் அரிசியை மட்டும் உள்ளே கொண்டு போவார்களாம். நம்மாழ்வார் செல்வத்தைக் குப்பையாகக் கருதினார் என்பதை, "கொள்ளும் பயன் இல்லை குப்பை கிளர்த்தன செல்வத்தை' எனும் பாடலால் விளக்குவார்.
ஆலிவர் கோல்ட்ஸ்மித் எனும் ஆங்கிலக் கவிஞர் குவிந்து கிடக்கும் செல்வம் தனிமனிதனை மட்டுமன்றி, ஒட்டுமொத்த சமூகத்தையும் அழிக்கும் என்பதை "டெசர்டட் வில்லேஜ்' எனும் நெடும்பாட்டின் மூலம் வரைந்து காட்டுகிறார்.
ஒரு கிராமத்தை ஓர் ஆசிரியர் செம்மைப்படுத்தி, மக்களை நல்வழியில் நடத்தி வருகிறார். ஆனால், அந்தக் கிராமத்தில் திடீரென முளைத்த சில பணக்காரர்கள், விவசாயிகளின் நிலங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து, அவர்களை ஓட்டாண்டி ஆக்கிவிடுகின்றனர்.
அதனால், வாழ்க்கையை வெறுத்த விவசாயிகள், காலம் காலமாக வாழ்ந்த அம்மண்ணை வெறுத்து நகரத்திற்குக் குடியேறுகின்றனர். அக்கவிதையை முடிக்கும்போது கோல்ட்ஸ்மித் Where the wealth accumulates, there men decay   (அபரிமிதமான செல்வம் எங்கே கொழிக்கின்றதோ, அங்கு மனிதனும் மானுடமும் அழியும்) என முடிப்பார்.
"தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம் சட்டப்படி பார்க்கப் போனால், எட்டடிதான் சொந்தம்' என எல்லாருக்குமாகப் பாடி வைத்திருக்கிறார் பட்டுக்கோட்டையார்.
பிகார் பூகம்பத்திற்கு நிவாரண நிதி திரட்டுவதற்காகக் காந்தியடிகள், முஜாபர்பூர் மகாராஜா மகேஷ் பிரவித் சிங்கின் அரண்மனைக்குச் செல்கிறார். அங்கு அவருக்கு வெள்ளாட்டுப் பாலையும், வேர்க்கடலையையும் மகாராணி பரிமாறுகிறார். மகாராணி தங்க வளையல்களோடும், வைர மாலைகளோடும் நின்றார்.
அதனைக் கண்ட காந்தியடிகள், பாலைக் கையில் வைத்துக்கொண்டே, "மகாராணியே இந்தத் தங்க நகைகள் உன்னை அலங்கரிப்பதில்லை. தங்கமும் வைரமும் இல்லாமலே நீ அழகாய் இருக்கிறாய். அவற்றையெல்லாம் என்னிடம் கழற்றிக்கொடுத்துவிடு அவற்றைப் பேரிடரில் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்குக் கொடுக்க வேண்டும்' என்கிறார்.
மகாராணியும் தாம் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கழற்றிக் கொடுத்துவிட்டு, "தாங்கள் எங்கள் மாளிகையில் விருந்தினராகத் தங்கியதே நாங்கள் செய்த பெரும் பாக்கியம். நகைகளைத் தங்களிடம் கொடுத்த பிறகு நான் மிக சந்தோஷமாக இருக்கிறேன்' என்றார்.
முறையற்ற செல்வம் நாட்டையும், வீட்டையும் கெடுக்கும் என்பதைப் பல அருளாளர்களும் ஞானியரும் எடுத்துரைத்திருக்கின்றனர் என்பதன்றி, திருவிடைமருதூர் ஆண்டவனே காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு குமாராக அவதரித்து எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
அவ்வூரில் திருவெண்காடர் குடும்பம், செல்வம் படைத்த குடும்பம். அக்குடும்பத்தில் ஒரு குழந்தையாக திருவிடைமருதூர் மகாலிங்கம், மருதவாணன் எனும் பெயரில் அவதரிக்கின்றார். சிறு வயது பையனாகிய மருதவாணரை, "திரைகடலோடி திரவியம் தேட' குடும்பத்தார் அனுப்பி வைக்கின்றனர்.
தேடிய செல்வம் அனைத்தையும் திருக்கோயில் பணிகளுக்குச் செலவிட்டுவிட்டார் மருதவாணன். அவர் கப்பலில் ஊருக்கு திரும்பியபொழுது எரு முட்டைகளாக இருக்கின்றன. அதோடு ஒரே ஒரு பெட்டியில் "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே' எனும் துண்டுச்சீட்டும் இருக்கின்றது. அதைப் படித்த பட்டினத்தார் தம் செல்வம் அனைத்தையும் நாட்டு மக்களுக்கு வாரி வழங்கிவிட்டு, துறவறம் மேற்கொள்கிறார்.
பட்டினத்தார் செல்வம் அனைத்தையும் வாரி வழங்குவதைக் கண்ட பேராசை பிடித்த அவருடைய தமக்கையார் அவரைக் கொல்வதற்குத் திட்டம் தீட்டுகிறார். பட்டினத்தாரை வீட்டிற்கு அழைத்து நஞ்சு கலந்த ஆப்பத்தை அவருக்குப் படைக்கிறார். உண்மையை உணர்ந்து கொண்ட அந்த ஞானி, அந்த ஆப்பத்தைப் பிட்டு அக்காள் வீட்டின் கூரையில் மேல் எறிந்தார்.
கூரை பற்றி எரிந்தது. அப்பொழுது பட்டினத்தார், "தன் வினை தன்னைச் சுடும். ஓட்டப்பம் வீட்டைச்சுடும்' எனப் பாடிப் போனார்.
இன்றும் சில பேருடைய பணத்தாசை வீட்டைச் சுட்டது மட்டுமல்லாமல், அவர்கள் பெற்ற பேற்றினையும் புகழையும் சுட்டுக் கொண்டிருக்கிறது.
கட்டுரையாளர்:
தி. இராசகோபாலன்  
பேராசிரியர் (ஓய்வு).

சாதனை நாயகன்!

By மணிகண்டன்  |   Published on : 06th January 2017 01:31 AM  |
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்து இந்திய ரயில்வேயில் பயணச் சீட்டு பரிசோதகராக பணிபுரிந்து அந்த வாழ்க்கை தேவையில்லை என உதறிவிட்டு தனது லட்சியமான கிரிக்கெட் நோக்கி பயணப்பட்டார் அந்த இளைஞர்.
இளம் வயதில் கால்பந்தாட்டத்தில் மிகுந்த ஆர்வமிக்கவராக இருந்த அந்த இளைஞர் தனது அணியில் கோல் கீப்பராக இருந்தார்.
ஒரு கட்டத்தில் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர் வாய்ப்பு வர அன்றிலிருந்து கிரிக்கெட்டை முழுமையாக நேசிக்கத் தொடங்கினார். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த அந்த இளைஞர், பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார்.
யார் இந்த இளைஞர் என்று ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் 148 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்து ரசிகர்களை மட்டுமல்ல, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதுவரை எந்தவொரு விக்கெட் கீப்பரும் அத்தனை ரன்கள் எடுத்ததில்லை.
அடுத்து இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 183 ரன்கள் எடுத்து தனது முந்தைய சாதனையை முறியடித்து, அனைவரின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்தார். அதிலிருந்து தொடர்ந்து பல சாதனைகளை புரியத் தொடங்கினார். அந்த இளைஞருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.
அவருடைய தொடர் சாதனையைக் கண்டு, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவி அவரைத் தேடி வந்தது. 1983-ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகக் கோப்பை வெறும் கனவாகவே இருந்து வந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு, 2011-ஆம் ஆண்டில் மீண்டும் உலகக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்து கனவை நனவாக்கினார் அந்த சாதனை இளைஞர்.
20 ஓவர் உலகக் கோப்பையையும் அவர் தலைமையிலான இந்திய அணி வென்றது. அதுமட்டுமல்ல, சிறுவயதில் இருந்து தான் மிகவும் நேசித்தவரும், கிரிக்கெட் உலகின் கடவுள் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவருமான சச்சின் தெண்டுல்கருக்கு அந்த வெற்றியை சமர்ப்பித்தார் அந்த இளைஞர்.
கடைசி ஒரு பந்துக்கு 4 ரன் எடுக்க வேண்டும். கடைசி ஒரு ஓவருக்கு 15 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும் என்ற மிக இக்கட்டான சூழ்நிலைகளில் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் தன்னை நோக்கி வரும் ஒவ்வொரு பந்தையும் தனக்கே உரிய வித்தியாசமான பாணியில் சிக்ஸராக மாற்றி அநாயாசமாக அணிக்கு வெற்றியைத் தேடி தந்தவர்; தருபவர்.
வெற்றிக் கோப்பையை வைத்துக் கொண்டு சக அணியினர் கேமராவுக்கு முன்பு நின்று மகிழ்ச்சியை வெளிப்படுத்துக் கொண்டிருக்கும் வேளையில், தனக்கும் அந்த வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் ஒரு ஓரத்தில் நின்றுகொள்ளும் தன்னடக்கம் நிறைந்தவர்.
எண் கணிதத்தில் 7 என்ற எண் ராசி இல்லாதது என்ற கருத்து உண்டு. ஆனால், 7-ஆம் தேதி பிறந்த அந்த இளைஞர் அந்த எண்ணையே தனது டீ ஷர்ட்டில் பதிந்து கொண்டு, அப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருந்தவர்களின் எண்ணத்தை மாற்றினார்.
சக அணியினர், எதிர் அணியினர், மைதானத்தில் திரண்டிருக்கும் ரசிகர்கள், தொலைக்காட்சியை கண்சிமிட்டாமல் கன்னத்தில் கைவைத்துக் கொண்டு ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் என்று அனைவரும் தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்திலும் ஸ்டம்ப்புக்கு பின்னால் நிதானத்துடன் அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருப்பார் அந்த இளைஞர்.
இப்படி தன்னகத்தே பல்வேறு நல்ல குணநலன்களைப் பெற்று, மற்ற இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் அந்த இளைஞர் வேறு யாருமில்லை உலகமே அறிந்த கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக 2014-ஆம் ஆண்டு அறிவித்த தோனி, ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, டி20 போட்டிகளில் இருந்து விலகுவதாக சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.
இவரது முடிவைக் கேட்டு கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
"உன் தலைமை இல்லா ஆடுகளம் வெறும் ஆடாகளம்'. "கடைசி பந்தில் நீங்கள் சிக்ஸர் அடித்தபோது கண்ணீர் மல்க ஆடிப் பாடிக் கொண்டாடியதை இன்னும் மறக்கல' என்று ரசிகர்களின் குமுறல்களை சமூக வலைதளங்களில் படிக்க முடிகிறது.
தோனி எப்போதும் ஒரு முடிவை ஆழ்ந்து யோசித்த பின்னரே எடுக்கக் கூடியவர்.
அவரது இந்த திடீர் முடிவை கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
"அவரது முடிவைக் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை. மற்றவர்களின் தூண்டுதல் இல்லாமல், தனக்கு தோன்றுவதை தானே தீர்மானிக்கும் தோனியின் முடிவை எப்போதும் வரவேற்பேன்' என்று இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்முதலில் உலகக் கோப்பையை பெற்றுத் தந்த கபில்தேவ் கூறியிருக்கிறார்.
தோனியின் இடத்தை இனி யாராலும் பூர்த்தி செய்ய முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. அவரின் முடிவை வரவேற்போம். தோனி தொடர்ந்து கிரிக்கெட்டில் பல சாதனைகளை புரிய வாழ்த்துவோம்.
பதினொன்றில் ஒன்றல்ல தோனி. கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென்று தனி முத்திரை பதித்துக்கொண்டுள்ள அவரை ஒரு சாதனை நாயகன் என்று கூறுவதே சரி.

Friday, January 6, 2017


பொதுத் தேர்வுக்கான விடைத்தாளில் விடைகளை எழுதி அடித்திருந்தால் அடுத்த தேர்வுகள் எழுத முடியாது : தேர்வுத் துறை எச்சரிக்கை.

பொதுத் தேர்வுக்கான விடைத்தாளில் விடைகளை எழுதிய பிறகு அனைத்து விடைகளையும் அடித்துவிட்டு விடைத்தாள் கொடுக்கும் மாணவ, மாணவியர் அடுத்த 2 தேர்வுகளை எழுத முடியாது என்று தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் ெதாடங்க உள்ளது. மார்ச் 2ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது. பத்தாம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 8ம் தேதி தொடங்கி 30ம் தேதி முடிகிறது.பொதுத் தேர்வை குளறுபடிகள் இல்லாமல் நடத்துவது குறித்து அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளையும் தேர்வுத்துறை வழங்கியுள்ளது. தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர் கடைபிடிக்க வேண்டியவை குறித்தும், தேர்வு மையங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சில தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை காட்ட வேண்டும் என்ற நோக்கில் சில முறைகேடுகளில் ஈடுபடுவதாக தேர்வுத்துறைக்கு பல புகார்கள் வந்துள்ளன. தனியார் பள்ளிகள் 100 சதவீதம் காட்டினால்தான் அடுத்த ஆண்டு அதிக அளவில் அந்த பள்ளியில் சேர வருவார்கள் என்ற வணிக நோக்கில் செயல்படுகின்றன. அதற்காக, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பல ஆலோசனைகளை தனியார் பள்ளிகள் தெரிவித்து வருகின்றன.குறிப்பாக பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்கல்வி படிப்புக்கு உரிய பாடத் தேர்வில் இடம்பெறும் கேள்விகள் குழப்பமாக இருந்தாலோ, மாணவர்களால் விடையளிக்க முடியாத நிலை ஏற்பட்டாலோ அந்த மாணவர்கள் குறிப்பிட்ட அந்த தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றுவிடுவார்கள். அதனால்,மதிப்பெண் குறையும் என்று தெரிந்தால், விடைகளை அடித்துவிட்டு விடைத்தாளை கொடுத்துவிட்டு வந்துவிட வேண்டும் என்றும், பின்னர் நடக்கும் உடனடித் தேர்வை எழுதலாம் என்றும் ஆலோசனை கூறி வருவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, எந்த ஒரு மாணவரும் தேர்வு எழுதிய பிறகு விடைத்தாளின் அனைத்து பக்கங்களையும் பேனாவால் அடித்து விட்டு கொடுத்தால், அப்படிப்பட்ட மாணவர்கள் குறித்து விவரங்களை அறைக் கண்காணிப்பாளர், தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் உடனடியாகதேர்வுத் துறை இயக்குநருக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுரை கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் அடுத்தடுத்து நடக்கும் 2 தேர்வுகளில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
மருத்துவமனைக்கு மொபைல்போன் கொண்டு செல்லாதீர்கள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை

ஐதராபாத் : மருத்துவமனையில் நோயாளிகள் இருக்கும் அறை அல்லது அவசர சிகிச்சை பிரிவுக்குள் மொபைல் போன்களை யாரும் எடுத்துச் செல்ல வேண்டாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நோயாளிகளை பாதிக்கும்:

இது தொடர்பாக ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள் கூறியதாவது: மொபைல் போன்களில் அதிக அளவில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களும், வைரஸ்களும் காணப்படுவதால், அவைகள் எளிதில் நோய்களை பரப்பக் கூடியவை. அதனால் மருத்துவமனைகளுக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்பது நோயாளியை கடுமையாக பாதிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். டாக்டர்களும், நர்ஸ்களும் கூட மருத்துவமனைக்குள் மொபைல் போன்களை கொண்டு வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர். மொபைல் போன்களில் காணப்படும் பாக்டீரியாக்களும், வைரஸ்களும் ஆன்டிபயாடிக் மருந்துகளின் மீதும் கிருமியை உருவாக்கும் திறன் கொண்டவை. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட 3 ஆய்வுகளின் அறிக்கைகள் சமீபத்தில் திருப்பதியில் நடந்த அறிவியல் மாநாட்டில் வெளியிடப்பட்டன. மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் பயன்படுத்தும் மொபைல் போன் கீபோர்டுகளில் இருந்து மட்டும் ஏறக்குறைய 100 பாக்டீரியா குழுக்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. முறையாக கைகளை சுத்தம் செய்யாமல் மொபைல் போன்களை பயன்படுத்தும் போது, மொபைல் போன் டிவைஸ்களில் ஏற்கனவே உள்ள பாக்டீரியாக்களுடன், இவைகளும் இணைந்து நோய் கிருமிகளை எளிதில் ஏற்படுத்துகின்றன என தெரியவந்துள்ளது.

DM arrives late, sparks min’s fury, reprimand

DM arrives late, sparks min’s fury, reprimand  Neha.Lalchandani@timesofindia.com  28.03.2026 Lucknow : Made to wait for 45 minutes by the di...