Wednesday, July 5, 2017

மயிலின் 1 மணி நேர 'ஆட்டம்' : விருத்தாசலம் அருகே அதிசயம்

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
22:09



விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே, தினசரி, காலையில் ஒரு மணி நேரம், மயில் தோகை விரித்து ஆடுவதை, அப்பகுதி மக்கள் பார்த்து மகிழ்கின்றனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி பகுதியில், அதிக மயில்கள் சுற்றித் திரிகின்றன. இவை, அங்குள்ள விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் வலம் வந்து தானியங்களை உண்கின்றன. இந்த கூட்டத்தில் உள்ள, ஒரு மயில், தினசரி, காலை, 6:00 முதல், 7:00 மணி வரை, குடியிருப்புகளுக்கு நடுவே, தோகை விரித்து ஆடுவதை வழக்கமாக கொண்டுஉள்ளது.மழை மேகங்கள் திரண்டு, மழை வரும் போது மட்டுமே, மயில்கள் தோகையை விரித்து ஆடும்.

ஆனால், விருத்தாசலம் அருகே, அதிசய மயில், தினசரி ஒரு மணி நேரம் ஆடுவதை, அப்பகுதி மக்கள் பார்த்து மகிழ்கின்றனர். மக்கள் கும்பலாக திரண்டு நின்று பார்த்தாலும், அந்த மயில் பறந்து செல்லாமல், வழக்கமான ஆட்டத்தை முடித்து விட்டே செல்கிறது.
மருத்துவ படிப்பில் 5 சதவீதம் மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கீடு

பதிவு செய்த நாள் 05 ஜூலை
2017
02:47



சென்னை: மருத்துவ படிப்பில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை, 5 சதவீதமாக உயர்த்தி, அரசு புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருத்தப்பட்ட புதிய அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், 'மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். 50 முதல், 70 சதவீத மாற்றுத்திறனாளிகள் கிடைக்காத பட்சத்தில், 40 முதல், 50 சதவீத மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளிகளுக்கு, இதற்கு முன், 3 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. மேலும், விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மாணவர் விடுதி சமையல் பணிக்கு இன்ஜினியரிங் பட்டதாரிகள் போட்டி

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
22:10

மைசூரு: கர்நாடகாவில், அரசு மாணவர் விடுதிகளில், சமையல் உதவியாளர்கள் பணிகளுக்கு, இன்ஜினியர்கள், முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மைசூரு மாவட்டத்தின் சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள விடுதிகளில், 58 சமையல்காரர்கள், 92 உதவியாளர்கள் பணியிடங்களும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் விடுதிகளில், 32 உணவு தயாரிப்பவர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணிகளுக்கு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கும்படி கோரப்பட்டிருந்தது. உணவு தயாரிப்பவர்கள், உதவியாளர்களுக்கான தேர்வில், 134 பேர் பங்கேற்றனர்; இதில், 70 பேர், பட்டதாரிகள்; 50 பேர், முதுகலை பட்டதாரிகள், நான்கு இன்ஜினியரிங் பட்ட தாரிகளும் விண்ணப்பித்து இருந்தனர். இன்ஜினியரிங் கல்லுாரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவி ஒருவரும் விண்ணப்பித்து இருந்தார். சமையல் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, மைசூரில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் செய்முறை தேர்வு நடந்து வருகிறது.
இதில் புளியோதரை, சேமியா பாயசம், உப்புமா, கேழ்வரகு களி, சப்பாத்தி என ஏதாவது ஒன்றை, அரை மணி நேரத்தில் செய்து முடிக்க வேண்டும்; சுவையானதாக இருக்க வேண்டும். பல்வேறு ஓட்டல்களிலிருந்து வந்துள்ள, சமையல் வல்லுனர்கள், சுவையாக சமைத்தவர்களை, பணிக்கு தேர்வு செய்வர்.
அலட்சியம்:இளையான்குடியில் தார் ரோடு எல்லாம் மண் ரோடானது: பல ஆண்டுகளாக பராமரிக்காததால் மக்கள் பரிதவிப்பு

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
23:37

இளையான்குடி:இளையான்குடி தாலுகாவில் பெரும்பாலான கிராமங்களில், தார் ரோடு மறைந்து குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால், மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் அதிக ஊராட்சிகளை கொண்ட ஒன்றியம் இளையான்குடி ஒன்றியம். மாவட்டத்தின் கடைகோடியில் அமைந்திருப்பதால், இந்த ஒன்றியத்தை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்ற புகார் உள்ளது.பல கிராமப்புறங்களில் ரோடு இருந்த அடையாளமே தெரியாமல், குண்டும் குழியுமாக ஒற்றையடி பாதை போல மாறி வருகிறது. ஓட்டு கேட்டு கூட பல அரசியல்வாதிகள் கிராமப்புற பகுதிகளுக்கு வருவதில்லை. சுதந்திரத்திற்கு முன் போட்ட சாலைகள் போல பல சாலைகள் பழுதடைந்துள்ளன. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அனுப்பியும் கண்டு கொள்ளவில்லை என்ற ஆதங்கம் மக்களிடம் உள்ளது.
இளையான்குடி தாலுகாவில்ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் 566 கி.மீ., சாலையும், மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 276 கி.மீ., துாரமுள்ள சாலைகளும் உள்ளன. இளையான்குடி கண்ணமங்கலம் ரோட்டில்இருந்து விளங்குளம் செல்லும் ரோட்டில் கற்கள் பெயர்ந்து பல வருடங்களாகியும், இன்று வரை சாலைப்பணி மேற்கொள்ளப்படவில்லை.திருவேங்கடத்தில் இருந்து தாயமங்கலம் செல்லும் பாதை யில் தரைப்பாலம் சிதைவடைந்து போக்குவரத்திற்கே, பயனற்றதாக உள்ளது.

வடக்கு கீரனுாரில் இருந்து இளையான்குடி செல்லும் சாலையில் உள்ள மெகா சைஸ் பள்ளத்தால், இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். கரும்புக்கூட்டம் பகுதியில் ஆக்கிரமிப்பு காரணமாக கனரக வாகனங்கள் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. கிராமப்புற சாலைகள் சேதமடைந்து காணப்படுவதால், அவசரத்திற்கு ஆம்புலன்ஸ், ஆட்டோக்கள் கூட வர மறுக்கின்றன.

இதனால், விபத்து மற்றும் பிரசவ காலங்களில் நோயாளிகளை சரக்கு வாகனங்களில் அழைத்து வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான கிராமங்களில் அரசு பஸ்கள் சரிவர செல்வதில்லை. சரக்கு வாகனங்களை நம்பியே உள்ளனர். இதனால் கிராமப்புற மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

இதுகுறித்து கரும்புக்கூட்டம் சண்முகம் கூறுகையில் : இளையான்குடி தாலுகா தனி சட்டமன்ற தொகுதியாக இருந்த வரை சாலை வசதி, குடிநீர் வசதி குறித்து எம்.எல்.ஏ.,விடம் மனு மட்டுமாவது கொடுத்து வந்தோம். தற்போது, மனு கொடுக்க கூட 30 கி.மீ., தள்ளி உள்ள மானாமதுரை செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு அங்கு செல்ல நினைத்தாலும், எம்.எல்.ஏ., எப்போது இருப்பார் என்றே தெரியவில்லை, என்றார்.எனவே, இளையான்குடி தாலுகாவில் கிராமப்புற சாலைகளை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
30 நாட்களுக்குள் கட்டாயம் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும்

பதிவு செய்த நாள் 05 ஜூலை
2017
02:42



புதுடில்லி: திருமணம் நடைபெற்ற 30 நாட்களுக்குள் திருமணத்தைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என சட்டம் இயற்றுமாறு சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

அவ்வாறு திருமணம் நடந்த 30 நாட்களுக்குள் பதிவு செய்யாததற்கு, உரிய காரணம் இல்லாத நிலையில், தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. திருமணத்தை பதிவு செய்யாத தம்பதிகளுக்கு, திருமணச் சான்றிதழ் மூலம் கிடைக்கும் சலுகைகள் ஏதும் வழங்கப்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் திருமணத்தைப் பதிவு செய்வதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

பிறப்பு இறப்பைப் பதிவு செய்வது போன்றே திருமணமும் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் இதன் மூலம் அமலில் உள்ள வெவ்வேறு திருமணச் சட்டங்கள் தொந்தரவு செய்யப்படாதது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஆதார் தகவல் பதிய வருவோரை
திருப்பி அனுப்புவது ஊழல் குற்றம்'

புதுடில்லி: 'ஆதார் அடையாள அட்டைக்காக பதிவு செய்ய வருவோரிடம், தொழிற்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களை கூறி, அவர்களை திருப்பி அனுப்புவது, ஊழலாக கருதப்படும்' என, 'ஆதார்' அடையாள அட்டை ஆணையம் எச்சரித்துள்ளது.






யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணைய தலைமை நிர்வாகி, அஜய் பூஷண் பாண்டே, டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: ஆதார் அடையாள அட்டை பெறுவதற்காக, நாடு முழுவதும், 25 ஆயிரம் பதிவு மையங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்த மையங்கள் அனைத்தும், விரைவில், அரசு அல்லது உள்ளாட்சி அமைப்பு களின் அலுவலக கட்டடங்களுக்கு மாற்றப்பட உள்ளன.

அடையாள அட்டை பெற வருவோர் பற்றிய தகவல்களை, ஆதார் ஆணைய இணையதளத்தில், கணினியைகையாளும் ஊழியர் பதிவேற்றம் செய்வார். ஆதார் அட்டைக்கான தகவல்களை பதிவு செய்ய வருவோரை, தொழிற்நுட்பக் கோளாறு உள்ளிட்ட, எந்த காரணத்தை கூறியும் திருப்பி அனுப்ப கூடாது; அவ்வாறு அனுப்புவது, ஊழல் நடவடிக்கையாக கருதப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

'நாடு முழுவதும், ஆதார் தகவல் பதிவு மையங் களில் உள்ள ஊழியர்கள், யாரையும் திருப்பி அனுப் பக் கூடாது' என, எங்கள் கள அலுவலகங்கள் மூலம் எச்சரிக்கப்பட்டுஉள்ளனர். யாராவது திருப்பி அனுப் பப்பட்டால், அது குறித்து புகார் அளிக்கும்படி, மக்களை கேட்டுக் கொள்கிறோம்.விதிகளை மீறும் ஆதார் தகவல் பதிவு மையங்களுக்கு, முதன்முறை, 10 ஆயிரம் ரூபாயும், அதன்பின் நடக்கும்

தவறுகளுக்கு, 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து தவறு செய்யும் மையங்கள், கறுப்புப் பட்டியலில் சேர்க்கப் படும்.

தொலைபேசி மூலம், ஆதார் எண், ஓ.டி.பி., எனப்படும், ஒருமுறை அனுப்பப்படும், 'பாஸ் வேர்டு' கேட்டு, தொலைபேசி மூலம் அழைப்பு வருவதாக புகார்கள் வருகின்றன. இத்தகைய மோசடி நபர்களிடம், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட செய்திகள்

ரத்த உறவு முறையில் திருமணம் செய்ததால் மனநலம் பாதித்த 3 குழந்தைகளுடன் பரிதவிக்கும் தம்பதி




ரத்த உறவு முறையில் திருமணம் செய்ததால் மனநலம் பாதித்த 3 பிள்ளைகளுடன் பரிதவிக்கும் தம்பதியினர் தங்களின் பிள்ளைகளை பராமரிக்க அரசு உதவி கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ஜூலை 04, 2017, 04:00 AM


தேனி,

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சுருளிச்சாமி (வயது 54). இவர் கட்டிட கட்டுமான கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மகேஸ்வரி (50). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் மற்றும் மகள்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், அவர்களுக்கு உதவி கேட்டு தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்து இருந்தனர். கலெக்டர் வெங்கடாசலத்திடம் அந்த தம்பதியினர் கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து மகேஸ்வரியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–

நானும், எனது கணவரும் ரத்த உறவு முறையில் திருமணம் செய்தவர்கள். எனது அத்தை மகனை தான் திருமணம் செய்துள்ளேன். எங்களுக்கு ராஜ்குமார் (20), சூர்யா (18) என்ற மகன்களும், ராதிகா (16) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் 3 பேரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்.

முதல் மகனுக்கு 2 வயதிலும், 2–வது மகனுக்கு 6 வயதிலும், மகளுக்கு 1½ வயதிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டது. இவர்களை பராமரிக்க மிகுந்த சிரமம் அடைகிறோம். எங்கள் வீட்டில் தண்ணீர் குழாய் கிடையாது. நீண்ட தூரம் சென்று தான் தண்ணீர் பிடிக்க வேண்டும். தண்ணீர் பிடிக்க செல்லும் போது எனது பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே ஓடி விடுகின்றனர். வீட்டுக்குள் வைத்து பூட்டினால், வீட்டுக்குள் எது கிடைத்தாலும் எடுத்து வாயில் போட்டுக் கொள்கின்றனர். இதனால், இவர்களை பக்கத்தில் இருந்தே பார்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் வாழும் வீடும் பழைய வீடு. மண் தரையில் தான் உள்ளது. எங்களுக்கு அரசு இலவச வீடு கட்டிக் கொடுத்து, வீட்டுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்தால் உதவியாக இருக்கும். சுய தொழில் செய்து பிழைத்துக் கொள்ள கடன் உதவி வழங்கினால் வீட்டில் இருந்து குழந்தைகளை பராமரித்துக் கொண்டே வாழ்வாதாரமும் தேடிக்கொள்ள முடியும். இதற்காக கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

NEWS TODAY 25.07.2026