Wednesday, August 23, 2017

வாகனம் ஓட்டும் போது அசல் லைசென்ஸ் கட்டாயம்: செப்டம்பர் முதல் அமலாகிறது

பதிவு செய்த நாள்22ஆக
2017
23:57

சென்னை: ''செப்டம்பர் முதல், வாகனம் ஓட்டும் போது, அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.

சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் பேட்டரி பஸ் சோதனை ஓட்டம் போன்ற நிகழ்ச்சிகள், சென்னை, பல்லவன் இல்லத்தில், நேற்று நடந்தன. இதில் பங்கேற்ற, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியதாவது:

தமிழகத்தில், சாலை விபத்துக்களை குறைக்க, அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தப்படுகிறது. அதனால், ஜூன் வரையிலான கால கட்டத்தில், சென்ற ஆண்டை விட, இந்தாண்டு, 3,244 விபத்துக்களும், 309 உயிரிழப்புகளும் குறைக்கப்பட்டுள்ளன. அவற்றை, மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். சிவப்பு விளக்கை தாண்டி செல்லுதல், போதையில் வாகனம் ஓட்டுதல், அதிக பாரம் ஏற்றுதல் உள்ளிட்ட, விதிமீறல்களில் ஈடுபட்ட, 9,500 பேரின் ஓட்டுனர் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளோம். செப்., முதல், வாகனம் ஓட்டும் போது, அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம். அரசு போக்குவரத்து
கழகத்திற்கு, விரைவில், 2,000 பஸ்கள் வாங்கப்படும்; அதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மழைக்காலம் துவங்கும் முன், அனைத்து பஸ்களின் கூரைகளும் சரி செய்யப்படும். தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை நன்றாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

தற்போது, மூன்று மணி நேரம் சார்ஜ் செய்து, 300 கி.மீ., வரை ஓடக்கூடிய, 12 மீட்டர் நீளமுள்ள, பேட்டரி பஸ்சை, சோதனை ரீதியில் இயக்கி பார்த்தோம். தெலுங்கானாவை சேர்ந்த, கோல்டு ஸ்டோன், பி.ஒய்.டி., நிறுவனத்துக்கு சொந்தமான அந்த பஸ்சில், குளிர்சாதன வசதி, வைபை வசதி, ஊனமுற்றோருக்காக படிக்கட்டு இறங்கும் வசதி என, பல வசதிகள் உள்ளன.இந்த பஸ், சென்னையில் சோதனை ஓட்டமாக, ஒரு மாதம் இயக்கப்படும். பயணிகள், டிரைவர்களின் கருத்து அறிந்து, பஸ்சில் மாறுதல்கள் செய்த பின், படிப்படியாக, இந்த ஆண்டுக்குள், 200 பஸ்கள் வாங்கப்படும். தொடர்ந்து, தமிழகம் முழுக்க, பேட்டரி பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், சுற்றுச்சூழல் மாசு குறைவதோடு, எரிபொருள் செலவும் குறையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கோவை - நாகைக்கு சிறப்பு ரயில்

பதிவு செய்த நாள்22ஆக
2017
22:45


சென்னை: வேளாக்கண்ணி சர்ச்சிற்கு வரும் பக்தர்களின் வசதி கருதி, கோவை - நாகப்பட்டினம், வேளாங்கண்ணி - மகாராஷ்டிரா மாநிலம், பான்வெல் இடையே, சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுகின்றன. * கோவையில் இருந்து, செப்., 7, இரவு, 7:30 மணிக்கு இயக்கப்படும் ரயில், மறு நாள் அதிகாலை, 4:00 மணிக்கு, நாகப்பட்டினம் சென்றடையும்

* வேளாங்கண்ணியில் இருந்து, செப்., 8, இரவு, 9:45 மணிக்கு இயக்கப்படும் ரயில், 10ம் தேதி, காலை, 8:45 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலம், பான்வெல் சென்றடையும். இவற்றில், 12, இரண்டாம் வகுப்பு துாங்கும் வகுப்பு பெட்டிகள் உட்பட, 17 பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு, இன்று துவங்குகிறது.
பி.எஸ்சி., - பி.பார்ம்., படிக்க விண்ணப்பிக்க நாளை கடைசி
பதிவு செய்த நாள்22ஆக
2017
20:27

சென்னை: பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, மருத்துவம் சார் படிப்புகளுக்கு விண்ணப்பம் பெற, இன்று கடைசி நாள். தமிழகத்தில், பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., போன்ற, ஒன்பது துணை நிலை மருத்துவ படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 538 இடங்களும், தனியார் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 7,458 இடங்களும் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்தாண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், 22 அரசு மருத்துவ கல்லுாரிகளிலும், ஜூலை, 7ல் துவங்கியது. விண்ணப்பம் பெற, இன்று கடைசி நாள். www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களிலும், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், நாளை 5:00 மணிக்குள், சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு வந்து சேர வேண்டும். இது குறித்து, மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறுகையில், ''துணை நிலை மருத்துவ படிப்புகளுக்கு, 26 ஆயிரத்து, 978 பேர் விண்ணப்பங்கள் பெற்றுஉள்ளனர்; இணையதளத்திலும் விண்ணப்பங்கள் பெற்றுள்ளதால், எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புஉள்ளது,'' என்றார்.
அந்தமான், கவுஹாத்தி விமானத்தில் சுற்றுலா

பதிவு செய்த நாள்22ஆக
2017
20:22

சென்னை: அந்தமான், கவுஹாத்தி மற்றும் கோவாவுக்கு, விமான சுற்றுலாவுக்கு, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு செய்துள்ளது.

செப்., 29ல், அந்தமானுக்கு, ஐந்து நாள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நபருக்கு, 28 ஆயிரத்து, 500 ரூபாய் கட்டணம். அசாம் மாநிலம், கவுஹாத்தி, காசிரங்கா மற்றும் மேகாலயா மாநிலம், ஷில்லாங்கிற்கும், ஆறு நாட்கள் சுற்றுலா, நவ., 17ல் துவங்குகிறது. நபருக்கு, 29 ஆயிரத்து, 550 ரூபாய் கட்டணம்.

நவ., 23ல், கோவாவுக்கு, நான்கு நாள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நபருக்கு, 17 ஆயிரத்து, 400 ரூபாய் கட்டணம். இதில், விமான கட்டணம், ஓட்டலில் தங்கும் வசதி, உள்ளூர் வாகன போக்குவரத்து செலவு மற்றும் உணவு வசதிகள் அடங்கும்.

கூடுதல் விபரங்களுக்கு, 90031 40673, 90030 24169 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்து உள்ளது. இந்த நிறுவனம், ரயில்வே துறையின் ஒரு அங்கம். டிக்கெட் முன்பதிவு மற்றும் பிற சேவைகளை வழங்குகிறது.
தமிழ் வழியில் 64 சதவீத இடங்கள் காலி : அண்ணா பல்கலை இன்ஜினியரிங் படிப்பு

பதிவு செய்த நாள்22ஆக
2017
19:11

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், தமிழ் வழியில், 64 சதவீத இடங்கள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 518 இன்ஜி., கல்லுாரிகளில், 1.75 லட்சம் இடங்களுக்கு, ஜூலை, 23 முதல், ஆகஸ்ட், 11 வரை, கவுன்சிலிங் நடந்தது. ஒரு லட்சத்து, 35 ஆயிரத்து, 352 மாணவர்கள் அழைக்கப்பட்டனர்; 48 ஆயிரத்து, 583 பேர் பங்கேற்கவில்லை; 86 ஆயிரத்து, 355 மாணவர்கள், பல பாடப்பிரிவுகளில் ஒதுக்கீடு பெற்றனர்.

மீதமுள்ள, 89 ஆயிரத்து, 101 இடங்கள், மாணவர்கள் இன்றி காலியாக உள்ளன.
இதில், தனியார் கல்லுாரிகளில், 88 ஆயிரத்து, 161; அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லுாரிகளில், மூன்று; அண்ணா பல்கலை மற்றும் உறுப்பு கல்லுாரிகளில், 937 இடங்கள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலையின், 12 உறுப்பு கல்லுாரி களில், தமிழ் வழியில், மெக்கானிக்கல், 718; சிவில் பிரிவில், 660 இடங்கள் கவுன்சிலிங்கிற்கு அனுமதிக்கப்பட்டன.

அவற்றில், 36 சதவீதமான, 493 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன; மீதம், 64 சதவீதமான, 885 இடங்கள் காலியாக உள்ளன. குறைந்த கல்வி கட்டணம், இலவச விடுதி வசதி, வேலைவாய்ப்பு வளாக நேர்காணல் போன்ற சலுகைகள் இருந்தும், ஆங்கில வழி பாடம் இல்லை என்பதால், தமிழ் வழி இடங்களில் மாணவர்கள் ஆர்வமுடன் சேரவில்லை. அதே நேரத்தில், ஆங்கில வழியில் தனியார் கல்லுாரிகளில் அதிக கட்டணம் செலுத்தி, பல மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.

இதுகுறித்து இது அண்ணா பல்கலை இன்ஜி., கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது: இன்ஜி., படிப்பில், ஆங்கில வழியில் படித்தால் தான் வேலை கிடைக்கும் என்ற தவறான எண்ணம், மாணவர்களிடம் உள்ளது. தமிழ் வழியில் படித்தாலும், அதே வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தமிழ் வழி மாணவர்கள், ஆங்கிலத்திலும் தேர்வு எழுதலாம். அவர்களின் சான்றிதழில், தமிழ் வழி என, குறிப்பிடப்படுவதும் இல்லை. அதனால், ஆங்கில வழியில் அரசு கல்லுாரிகளில் இடம் கிடைக்காவிட்டால், தமிழ் வழியில் சேரலாம். அது போல, தமிழ் வழியில் படித்தால், தமிழக அரசுத் துறை பணிகளிலும்முன்னுரிமை கிடைக்கும். இவ்வாறு அவர்கள்கூறினர்.

- நமது நிருபர் -
பாஸ்போர்ட் விசாரணை விரைவில், 'டிஜிட்டல்' மயம்

பதிவு செய்த நாள்22ஆக
2017
20:35

புதுடில்லி: பாஸ்போர்ட் வழங்கும் விஷயத்தில் பின்பற்றப்படும், போலீஸ் விசாரணை நடைமுறையை, நாடுமுழுவதும் டிஜிட்டல் மயமாக்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 'இன்னும் ஓராண்டுக்குள், இந்த நடைமுறை அமலுக்கு வரும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து, மத்திய உள்துறை செயலர், ராஜிவ் மெஹ்ரிசி கூறியதாவது: குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகள் குறித்த தகவல்களை எளிதில் கையாளும் வகையிலும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள், டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், பொதுமக்கள், தங்கள் புகார்களை, ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். குற்றவாளிகள் குறித்த தகவல்களை, ஒரு ஸ்டேஷனிலிருந்து, மற்றொரு ஸ்டேஷனில் உள்ள போலீசாருக்கு பகிரும் வகையில் இருப்பதால், போலீசாரின் வேலைப் பளு குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்போர் குறித்த விசாரணைக்கு செல்லும் போலீசாரிடம், சிறப்பு டிஜிட்டல் கருவிகள் வழங்க திட்டமிடப்பட்டுஉள்ளது.பாஸ்போர்ட் விண்ணப்பதாரர் பெயரில் குற்ற வழக்குகள் ஏதேனும் உள்ளதா என, ஆன்லைன் முறையில் சோதிக்கும் போலீசார், அவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரிக்கும் போது, டிஜிட்டல் கருவிகளில், அந்த விபரங்களை பதிவிடலாம்.

அந்த தகவல்கள், நேரடியாக, பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு பகிரப்படும். இதன் மூலம், அடுத்த ஓராண்டில், பாஸ்போர்ட் விசாரணை நடைமுறை, டிஜிட்டல் மயமாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
'நீட்' விவகாரத்தில் மத்திய அரசு பல்டி  அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு

புதுடில்லி, 'நீட்' எனப்படும், தேசிய அளவிலான, மருத்துவ பொது நுழைவுத்தேர்வு விவகாரத்தில், திடீர் திருப்பமாக, மத்திய அரசு 'பல்டி' அடித்துள்ளது.





'தமிழக அரசு இயற்றிய அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை' என, மத்திய அரசு கைவிரித்துள்ளது.இதையடுத்து, மருத்துவ கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை உடனே நடத்தும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'தமிழகத்தில், மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, மாநில கல்வி வாரியத்தின், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்' என, தமிழக மாணவர்கள் கோரி வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த, முக்கிய அரசியல் கட்சிகள், இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.ஆனால், 'நீட்' எனப்படும், தேசிய அளவிலான,மருத்துவ பொது நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், 'நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், தமிழக மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும்' என வலியுறுத்தி வருகின்றனர்.

சட்டசபையில் நிறைவேற்றம்

இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், ஆறு மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கிடையே, மாநில கல்வி வாரியத் தேர்வு அடிப்படையில், மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர்களை சேர்க்க அனுமதிக்கும் வகையில்,அவசர சட்டம், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் இதை ஏற்கவில்லை.இதையடுத்து, நீட் தேர்விலிருந்து, தமிழகத்துக்கு ஒரு ஆண்டுக்கு மட்டும் விலக்கும் அளிக்கும் வகையிலான புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.

இதற்கு, மத்திய அமைச்சரவையில், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் ஒப்புதல் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தன.இதனால், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ கல்லுாரிகளில் சேர்க்கை நடக்குமென, தமிழக மாணவர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். நீட் தேர்வில், தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டுமா என்பது குறித்த வழக்கை, 17ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, தீர்ப்பை, நேற்றைய தேதி வரை தள்ளி வைத்திருந்தது
.
ஒப்புதல் அளிக்க மறுப்பு

இந்நிலையில், நேற்று,இந்த வழக்கு, நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'நீட் தேர்வை, அனைத்து மாநிலங்களும் ஏற்ற நிலையில், தமிழக அரசுக்கு மட்டும், அதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது; எனவே, தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது' என, மத்திய அரசு சார்பில், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

செப்., 4ம் தேதிக்குள் முடிவு

இதையடுத்து, நீட் தேர்வு அடிப்படையில், மருத்துவக் கல்லுாரிகளுக்கான, கலந்தாய்வை துவக்கும்படி, நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்:மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, நீட் தேர்வு தகுதிப் பட்டியல் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும். மாணவர் சேர்க்கை நடைமுறையை, செப்., 4ம் தேதிக்குள், தமிழக அரசு முடிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். -
பிரச்னை கோர்ட்டுக்கு வந்தபின் தான் மாறிவிட்டது. எதிர்காலத்தில் மாணவர்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா என பரிசீலிக்கப்படும். கடைசி நேரத்தில் நிலையை மாற்றியது குறித்து, மத்திய அரசிடம் தான் கேட்க வேண்டும்.

-தம்பிதுரை, லோக்சபா துணை சபாநாயகர்

NEWS TODAY 09.07.2026