Thursday, August 31, 2017

இணையதளத்தில்ஆவணங்கள் தொலைந்ததற்கான சான்று

பதிவு செய்த நாள்31ஆக
2017
00:18

ராமநாதபுரம்: தமிழகத்தில் ஆவணங்கள், வாகனங்கள் தொலைந்து போனால், போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்கப்படும். அதற்கான சான்றுகளை இணையதளத்தில் புகார்தாரர் பதிவிறக்கம் செய்து கொள்ளும் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் காவல்துறை சார்பில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. புகார் கொடுத்தால், எப்.ஐ.ஆர்., நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆன் லைனில் புகார் தெரிவிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் விபத்து வழக்குகளில், காப்பீடு நிறுவனங்களுக்கு போலீஸ் ஸ்டேஷனில்இருந்து வழங்கப்படும் சான்றை பெற்றுத் தர வேண்டும். ஆவணங்கள் தொலைந்து போனால், ஆவணங்கள் தொலைந்தது குறித்து போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்படும். தற்போது வழக்குப்பதிவு செய்யாமல் புகார் மனு குறித்த ரசீது வழங்கப்பட்டு வருகிறது.

இன்று முதல் புகார்தாரர்கள் தங்களுக்கு தேவையான சான்றுகளை ஆன் லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் இன்று முதல் தமிழகம் முழுவதும் காவல் துறையினரால் அமல்படுத்தப்படுகிறது.இதனால் புகார்தாரர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைய வேண்டியதில்லை.
57 வயசை தாண்டியும் அரசு வேலைக்காக காத்திருப்பு
பதிவு செய்த நாள்30ஆக
2017
22:44

தமிழகத்தில், அரசு வேலை கோரி, 85 லட்சம் பேர், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். அவர்களில், 5,736 பேர், 57 வயதை தாண்டியவர்கள் என, தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்: தமிழகத்தில், 18 வயதுக்கு உட்பட்ட, 20 லட்சத்து, 78 ஆயிரத்து, 728 பேர், அரசு வேலைவாய்ப்பு கேட்டு, பதிவு செய்துள்ளனர். 18 - 23 வயது வரையிலான பிரிவில், 21 லட்சத்து, 6 ஆயிரத்து, 681 பேர் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், 24 - 35 வயதுக்கு உட்பட்ட, 31 லட்சத்து, 6 ஆயிரத்து, 154 பேர்; 35 - 56 வயதுக்கு உட்பட்ட, 11 லட்சத்து, 66 ஆயிரத்து, 837 பேர், அரசு வேலை வாய்ப்பகங்களில், பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில், அரசு வேலைக்காக காத்திருக்கும், 84 லட்சத்து, 64 ஆயிரத்து, 136 பேரில், 5,736 பேர், 57 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -


எச்சரிக்கை!தமிழகம் உட்பட 12 மாநிலங்களுக்கு பலத்த மழை...
3 நாள் கொட்டி தீர்க்கும் என ஆய்வு மையம் கணிப்பு

புதுடில்லி: தமிழகம், கர்நாடகா ஆகிய தென் மாநிலங்கள் உட்பட, நாட்டின், 12 மாநிலங் களில், இன்று முதல், மூன்று நாட்களுக்கு, கன மற்றும் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீர் நிலைகள் நிரம்பி, வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.



தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்கள் மற்றும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்கள் என, நாடு முழுவதும், 12 மாநிலங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்க வாய்ப்பிருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளப் பெருக்கு

பல மாநிலங்களில், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, கரையோர மாவட்டங்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு கள், முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ளும்படி, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.இது குறித்து, இந்திய வானிமை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள

அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தாவது: மஹாராஷ்டிரா மாநிலத்தில் பல இடங்களில் பரவலாக மழை தொடரும். சில இடங்க ளில், கன மற்றும் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நீர் நிலைகள்

ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசத்தில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. பெரும்பாலான நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.மஹாராஷ்டிரா வின் பல பகுதிகள், கர்நாடகா, மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில், நேற்று, 19 செ.மீ., வரை மழை பெய்துள்ளது. அந்த மாநிலங்களில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.

மேலும் மழை தொடரும் பட்சத்தில், இந்த மாநிலங் களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். தமிழகம், கர்நாடகா உட்பட, 12 மாநிலங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, கன, மிக கன மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அபாய எச்சரிக்கை!

ஆறுகள், நீர் நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எந்தெந்த ஆறுகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பது என்பது குறித்தும், ஆய்வு மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:

இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு பெய்யும் கன மழையால், ம.பி., ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பாயும், மாஹி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அந்த மாநிலங்களின் பல.

மாவட் டங்களில், கடும் பாதிப்பு ஏற்படவாய்ப்பு உள்ளது.சபர்மதி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, குஜராத், ராஜஸ்தானில் பேரழிவை ஏற்படுத்தலாம்நர்மதை, தாபி நதியில் ஏற்படும் வெள்ளத்தால், மஹாராஷ்டிராவின், ஏழு மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளா கலாம்.

குஜராத்தின் வல்சாட், டாமன் பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
கோதாவரி, இந்திராவதி ஆறுகளில் மிதமான வெள்ளம் ஏற்படும்; இதன் மூலம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள, 10 மாவட் டங்கள் பாதிக்கப்படலாம்.

கிருஷ்ணா, துங்க பத்ரா ஆறுகளில் ஏற்படும் வெள்ளத்தால், மஹாராஷ்டிராவின், கோலாப்பூர், புனே, சோலாப்பூர் மாவட்டங் களுக்கும், கர்நாடகா வின், 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக் கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

கன மழையால், காவிரியாற்றில், வெள்ளப் பெருக்க ஏற்பட்டு, கர்நாடகாவின் காவிரி கரை யோர மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தலாம்.
தமிழகத்தின், பவானி ஆற்றில் மிதமான வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. இங்கு, கன மழை பெய்தாலும், பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப் பில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பெய்வது எங்கே?

ம.பி., ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங் களிலும்,டையூ,டாமன் யூனியன் பிரதேசங் களிலும்,இன்று முதல் கன, மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழைப் பொழிவு, 3 நாட் களுக்கு தொடரும் என எதிர்பார்க்கபடுகிறது.
மும்பையில் கனமழை எதிரொலி: விமானிகள் வராததால் விமான போக்குவரத்து பாதிப்பு
பதிவு செய்த நாள்30ஆக
2017
19:29




மும்பையில் பெய்து வரும் கனமழையால் விமானிகள் வர முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. நேற்று காலை 8.30 மணி முதல் மதியம் 12 மணி வரை மும்பையின் அனைத்து பகுதியிலும் இடைவிடாமல் கனமழை கொட்டியது. இதனால் நகரில் அனைத்து இடங்களிலும் வெள்ளநீர் சூழ்ந்தது. தாழ்வான பகுதிகளில் இடுப்பளவிற்கு மேல் மழைநீர் தேங்கியதால் சாலை போக்குவரத்து அடியோடு முடங்கியது. இதனால் விமானிகள் குறித்த நேரத்தில் விமான நிலையத்திற்கு வந்து சேர முடியாத காரணத்தால், பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் காலதாமதமாக சென்றன. தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் 19 விமானங்களை இன்று (ஆக.,30) ரத்து செய்தது. சில சர்வதேச விமானங்களும் இதில் அடங்கும்.
எம்.பி.பி.எஸ் :பொது பிரிவு கலந்தாய்வு முடிவு

பதிவு செய்த நாள்30ஆக
2017
20:18


சென்னை: மருத்துபடிப்பிற்கான பொது பிரிவினருக்கு நடைபெற்ற கலந்தாய்வில் 3,686 இடங்கள் நிரம்பியது. இது குறித்து கூறப்படுவதாவது: மொத்தம் உள்ள 3,686 இடங்களில் அரசு கல்லூரியில் 2, 650 இடங்களும் தனியார் கல்லூரியில் 808 இடங்களும் ஈஎஸ்ஐ கல்லூரியில் 72 இடங்களும் நிரம்பியது. பல் மருத்து பிரிவில் அரசு கல்லூரியில் 156 இடங்கள் நிரம்பின. தனியார் கல்லூரியில் உள்ள 860 இடங்களில் 185 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளுவேல் விளையாட்டுக்கு இன்னொரு பலி: மதுரையில் மாணவர் தற்கொலை
பதிவு செய்த நாள்
ஆக 30,2017 21:48

திருப்பரங்குன்றம், மதுரை விளாச்சேரி மொட்டமலை பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி பேக்கரியில் மாஸ்டராக உள்ளார், இவரது மனைவி டெய்சி ராணி.
இவர்களது மகன் விக்கி,19, தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்தார்.
நேற்று ஜெயமணி வழக்கம் போல் வேலைக்கு சென்று, மாலை 6:30 மணிக்கு வீடு திரும்பினார். 

வீட்டின் உள்ளே வந்த அவர் அறை ஒன்றில் தன் மகன் விக்கி துாக்கில் பிணமாக தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ஆஸ்டின்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தார்.அங்கு வந்த போலீசார் விக்கியின் இடது கையில் 'புளூவேல்' என்று
எழுதியிருப்பதை கண்டறிந்தனர்.




இன்றைய இளைஞர்களின் உயிரை வாங்கும் 'புளூவேல்' 'கேம்'மை விக்கி தொடர்ந்து விளையாடியதால், இந்த விபரீதம் ஏற்பட்டது தெரிய வந்தது. தாய் டெய்சியும் வேலைக்கு செல்வதால், வீட்டில் தனியாக இருந்த விக்கி, தாயின் சேலையில் துாக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

ஏற்கனவே சில மாநிலங்களில் இந்த விளையாட்டால் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், மதுரையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது வேதனையான விஷயம். இந்த 'கேம்' குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டால் மட்டும் தான் உயிர் பலியை தடுக்க முடியும்

புளூவேல் - ரெட் அலர்ட்

'ஸ்மார்ட் போன்' குறித்து அதிகம் தெரியாத பெற்றோர்கள் 'புளூவேல்' கேம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இந்த 50 நாள் 'சேலேன்ஜ் கேம்' ஆன்ட்ராய்டு ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படுகிறது. போனில் 'இன்ஸ்டால்' செய்ததும் விளையாடலாம்.

விளையாடும் நபருக்கு ஒவ்வொரு நாளும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். உதாரணமாக 'உன் கையில் பிளேடு வைத்து 3 முறை கிழி, அதை போட்டோ எடுத்து அனுப்பு. அதிகாலை எழுந்து பேய் படம் பார், அதை செல்பி எடுத்து எனக்கு அனுப்பு. 

ரயில்வே டிராக்கில் நில், உயரமான பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய். அதை வீடியோ எடுத்து பேஸ்புக், டுவிட்டரில் பதிவேற்று. அப்போது தான் நீ விளையாட்டில் வெற்றி பெறுவாய்,' என்றெல்லாம் கட்டளைகள் வந்து கொண்டே இருக்கும்.

இதை எல்லாம் நான் செய்ய மாட்டேன் என்று சொல்லவும் முடியாது, ஏன் என்றால் இந்த 'கேம்'மை இன்ஸ்டால் செய்ததும், உங்கள் போனில் இருக்கும் எண்கள் உட்பட அனைத்து தகவல்களும் இந்த கேமின் சர்வருக்கு சென்றுவிடும். நீங்கள் கேம் சொல்லும் டாஸ்க்கை செய்யவில்லை என்றால் போனில் உள்ள தகவல்களை உங்கள் நண்பர்கள், உறவினர்கள் போனுக்கு அனுப்பப்படும் என்று மிரட்டல் தகவல் வரும். 'கேம்'மில் டாஸ்க் செல்லும் 'மேப்' நீல திமிங்கலம் வடிவத்தில் இருப்பதால், இதற்கு 'புளூவேல்' என்று பெயர் வைத்துள்ளனர்.

ஸ்மார்ட் போன்களை 'ஹேக்' செய்யக் கூடிய நபர்களால் இந்த கேம் இயக்கப்படுவதால் தான், நம் தகவல்கள் திருடப்படுகிறது என்பதை புரிந்து கொண்டு இந்த 'கேம்'மை விளையாடாமல் தவிர்க்க வேண்டும்.
“மாணவிகள் சுகாதார தூதர்களாக செயல்பட வேண்டும்” கலெக்டர் ரோகிணி அறிவுரை


“டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவிகள் சுகாதார தூதர்களாக செயல்பட வேண்டும்“ என்று கலெக்டர் ரோகிணி அறிவுரை வழங்கினார்.

ஆகஸ்ட் 30, 2017, 04:30 AM
சேலம்,

சேலம் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டு வந்தாலும், 15-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். தற்போது சேலம் அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள நர்சிங் விடுதி மாணவிகளுக்கும் சமீபத்தில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு குணப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் கலெக்டர் ரோகிணி ரா.பாஜிபாகரே சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு ஆகிய பகுதிகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் அவர்கள் உடன் வந்திருந்தவர்களிடம் மருத்துவமனையில் சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார். மேலும், அந்த குழந்தைகளின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

அங்கு ஒரே படுக்கையில் 2 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்தனர். அதைத்தொடர்ந்து பணியில் இருந்த டாக்டர் மற்றும் நர்சுகளிடம் காய்ச்சலுக்கான சிகிச்சை பெற்றுவரும் 2 குழந்தைகளை எக்காரணம் கொண்டும் ஒரே படுக்கையில் வைத்து சிகிச்சை அளிக்க கூடாது என அறிவுறுத்தினார்.

இதையடுத்து கலெக்டர் ரோகிணி மருத்துவமனை வளாகத்தில் உள்ள செவிலியர் விடுதி பகுதிக்கு சென்று சுகாதாரம் முறையாக பராமரிக்கப்படுகின்றதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார். அதிக அளவில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்க்கவரும் நபர்கள் டீ கப்புகள், சிரட்டைகளை ஆங்காங்கே வீசி எறிந்து சென்றுள்ளதை கண்டார்.

உடனே கலெக்டர் ரோகிணி அவற்றை கையில் எடுத்து அப்புறப்படுத்தினார். அப்போது அங்கிருந்தவர்களிடம் இதுபோன்ற பொருட்களை ஆங்காங்கே வீசக்கூடாது என அறிவுறுத்தினார். மேலும் வளாகத்தை சுகாதாரமாக வைத்திருக்க கலெக்டர் ரோகிணி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அத்துடன், குப்பைகளால் நோய்தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதையும் சுட்டிக்காட்டி தொடர்ச்சியாக கூடுதல் பணியாளர்களை கொண்டு மருத்துவமனை வளாகத்தை தூய்மை படுத்தும் பணியினை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து சேலம் அரசு கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் மாணவிகள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி தூய்மையான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பள்ளியில் பயின்று வரும் மாணவிகளிடம் டெங்கு குறித்து ஒவ்வொருவரும் தங்கள் பெற்றோரிடம் எடுத்து கூறி சேலம் மாவட்டத்தை காய்ச்சல் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு ஒவ்வொரு மாணவியும் சுகாதார தூதர்களாக செயல்பட வேண்டும் என்றார்.

இந்த ஆய்வின்போது அரசு ஆஸ்பத்திரி டீன் கனகராஜ், துணை இயக்குனர் (சுகாதாரம்) பூங்கொடி மற்றும் டாக்டர்கள் உடன் சென்றனர்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 7.5% மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு இனி பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 7.5% மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு இனி பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை Published On: 10 Jul 202...