Wednesday, September 6, 2017

பண்டிகை நேரத்தில் தேங்காய் விலை அதிகரிப்பு:நத்தம் மார்க்கெட்டில் ஒரு காய் ரூ.13
பதிவு செய்த நாள்06செப்
2017
01:32

நத்தம்;நத்தம் மார்க்கெட்டில் பண்டிகை நாட்கள் நெருங்குவதால் தேங்காய் விலை ஏற்றமடைந்துள்ளது. தமிழக அளவில் நத்தம் தேங்காய் மார்க்கெட் முக்கிய பங்கு வகிக்கிறது. நத்தம் பகுதியில் கோபால்பட்டி, கொரசினம்பட்டி, ஒத்தக்கடை, உலுப்பகுடி, புண்ணப்பட்டி, ஊராளிபட்டி, வத்திபட்டி, லிங்காவடி, மூங்கில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, சிறுகுடி ஆவிச்சிபட்டி பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த சில ஆண்டுகளில் இப்பகுதியில் போதிய மழையின்றி விளைச்சல் குறைந்ததால் தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதே நேரம் வட மாநிங்களில் நல்ல மழை பெய்ததால் அப்பகுதியில் விளைச்சல் அதிகரித்தது. 

பண்டிகை காலம்: வட மாநில வியாபாரிகள் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொள்முதல் செய்து வந்தனர். இதனால் நத்தம், அய்யம்பாளையம் பகுதிகளில் தேங்காய் விலை வீழ்ச்சியடைந்தது. இம்மாத இறுதியில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை அடுத்து தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர இருப்பதால் வட மாநிலங்களில் தேங்காய் தேவை அதிகரித்துள்ளது.

இதனால் நத்தம் தேங்காய் மார்க்கெட்டில் விலை ஏற்றமடைந்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு ரூ.7 க்கு விற்ற உரித்த தேங்காய் விலை தற்போது ரூ.13 வரை அதிகரித்துள்ளது. விலை ஏற்றம் அடைந்த போதும் நத்தம் பகுதியில் கடந்த காலத்தில் நிலவிய வறட்சியால் விளைச்சல் இன்றி விவசாயிகள் ஏமாற்றத்தில்தான் உள்ளனர்.








:
ஸ்டிரைக்கில் பங்கேற்க மாட்டோம்: அலுவலர் ஒன்றியம் அறிவிப்பு

பதிவு செய்த நாள்06செப்
2017
00:42

சிவகங்கை: ''ஜாக்டோ- ஜியோ சார்பில் நடக்கும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம்,'' என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் சண்முகராஜன் தெரிவித்தார்.

அவர் சிவகங்கையில் கூறியதாவது: புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து; ஊதிய முரண்பாடுகளை களைந்து, புதிய ஊதியக்குழு மாற்றத்தை செயல்படுத்துவது; தொகுப்பூதியம் ரத்து உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மே 14 ல் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்தோம். இதையடுத்து ஜூலை 28ல் முதல்வர் எங்களை அழைத்து பேசினார்.செப்.30க்குள் ஊதியக்குழு மாற்ற பரிந்துரை செயல்படுத்தப்படும்; வல்லுனர் குழு பரிந்துரை அடிப்படையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் முடிவெடுக்கப்படும் என, உறுதியளித்தார். செப்., 30 வரை எந்த போராட்டத்திலும் பங்கேற்பதில்லை என, முடிவு செய்துள்ளோம்.இதனால் ஜாக்டோ ஜியோ சார்பில் செப்., 7 முதல் நடக்கும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம். எங்களிடம் உறுதியளித்தபடி கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் அக்.2ல் கன்னியாகுமரியில் இருந்து எழுச்சிப் பயணம் மேற்கொள்வோம். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஊர்வலம் நடக்கும். தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், செயலாளர் ரமேஷ்கண்ணன் உடனிருந்தனர்.
ஓ.எம்.ஆர்., அப்பார்ட்மென்ட் வாசிகளுக்கு பாதுகாப்பு..இல்லை! சுத்தமான காற்று, சுகாதாரத்திற்கும் வாய்ப்பு குறைவு

பதிவு செய்த நாள்06செப்
2017
00:39

நாவலுார்:நாவலுார், படூர் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லையென, புகார் எழுந்துள்ளது.திருப்போரூர் ஒன்றியம், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள நாவலுார், படூர், கேளம்பாக்கம் ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இவைகளில், லட்சக்கணக்கான பணத்தை முதலீடு செய்து, பல ஆயிரக்கணக்கான குடும் பங்கள் வசிக்கின்றன.

இக்குடியிருப்புகள் உள்ள பழைய மாமல்லபுரம் சாலையில், அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் நாள்தோறும் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளமாக உள்ளன.இப்பகுதியில், சிறுசேரி, 'சிப்காட்' முதல் கேளம்பாக்கம் வரையில் போதிய சாலையோர விளக்குகள் இல்லை. இதனால், இரவு நேரங்களில் இப்பகுதிகளில் போதிய வெளிச்சமின்மை காரணமாக, அசம்பாவிதங்கள் நடந்திடுமோ என்ற அச்சத்தில், குடியிருப்பு வாசிகள் வெளியே வருவதே இல்லை.

இச்சாலைகளில், பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிவேகத்தில் செல்லும் தண்ணீர் லாரிகளால், இப்பகுதியினர், சுதந்திரமாக வெளியே நடமாட முடியாத நிலை உள்ளது.மேலும், மண் மற்றும் ஜல்லிக்கற்கள் மூடப்படாமல் கொண்டு செல்லும் லாரிகள், எவ்வித பாதுகாப்புமின்றி அசுரவேகத்தில் செல்வதாலும் குடியிருப்பு வாசிகள் தங்கள் வாகனங்களை சாலைகளில் ஓட்டிச் செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.

இப்பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், சில நேரங்களில் பிரதான சாலைகளிலேயே விடப்படுவதால், அதன் மீது தான் பகுதிவாசிகள் நடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.இதனால், சுத்தமான காற்று, சுகாதாரமான வசதிகளுக்காக, நகரை விட்டு வெகுதுாரம் வந்தவர்கள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இதுமட்டுமல்லாமல், இப்பகுதிகளில் இரவு நேரங்களில் போதிய வெளிச்சமின்மை இல்லாததைப் பயன்படுத்திக் கொண்டு லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுநீர் சாலைகளிலேயே விடுகின்றனர்.

நகர்ப்புறத்தில் சேரும் கழிவுகள், நகருக்கு வெளியே உள்ள இப்பகுதிகளில் விடப்படுவதால், நாற்றமெடுக்கிறது.மேலும், இப்பகுதிகளில் உள்ள தனியார் உணவு விடுதிகளில் உள்ள நாள்பட்ட உணவுப்பொருட்கள், தொழிற்சாலைகளிலிருந்து கொண்டு வரப்படும் மருத்துவக் கழிவுகள், ரசாயன கழிவுகளும் சாலையோரங்களில் கொட்டப்படுகின்றன.அவை, அடுக்கு மாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு, சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது. கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் இருப்பதால், இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் பகுதிவாசிகளுக்கு நோய்தொற்றும் அபாயமும் ஏற்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் இப்பகுதிகளில் ஆய்வு செய்து, அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பான முறையில் இப்பகுதிகளில் வாழ்க்கை நடத்துவதற்கான ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதுகாப்பு இல்லை!
ஓ.எம்.ஆர்., பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன. ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிவோர் இரவில் எந்தநேரத்தில் வேண்டுமானாலும் வீடு திரும்புகின்றனர். ஆனால், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு இப்பகுதிகளில் அறவே இல்லை. மேலும், தனியார் உணவு விடுதிகளும், மருத்துவமனைகளும் இப்பகுதிகளில் செய்கின்ற அக்கிரமத்திற்கு அளவே இல்லை. எப்பகுதிகளிலெல்லாம் இடம் கிடைக்கிறதோ அப்பகுதிகளிலெல்லாம் கழிவுகளை வெளியேற்றி சுற்றுச்சூழலை மாசடையச் செய்கின்றனர்.

- எம்.ஜெயக்குமார், நாவலுார்
தண்ணீர் பிரச்னை!நகரில், நெருக்கடியான இடங்களில், மூச்சடைக்கும் நிலையில் வசித்தவர்கள், சற்று விஸ்தாரமாக இருக்கட்டுமே என, புறநகர் பகுதிகளில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளை நாடி வந்துள்ளனர்.ஆனால், இவர்களுக்கு, தண்ணீர், மின்சாரம், மொபைல் போன் வசதி கிடைப்பதில் பாதிப்பு உள்ளது.

திட்டமிடப்படாத, அங்கொன்றும், இங்கொன்றுமான அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு தேவைப்படும், தண்ணீருக்கு முறையான வசதிகள் இல்லை. எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்னையிலிருந்து தப்பிக்கவும், திட்டங்கள் இல்லை.அதுபோல, போதிய மின்சாரம் இல்லாதது, மொபைல் போன் டவர் சிக்னல் சரிவர கிடைக்காதது போன்ற பிரச்னைகளால், பெரும்பாலான அடுக்கு மாடி குடியிருப்புவாசிகள் அல்லல் படுகின்றனர்.
முதல்வரின் அறிவிப்பு ஏமாற்றம் : அரசு ஊழியர் சங்கம் ஆதங்கம்
பதிவு செய்த நாள்06செப்
2017
00:39

மதுரை: ''புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து குறித்து முதல்வர் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. எனவே அரசு ஊழியர், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் நாளை (செப்., 7) துவங்குகிறது,'' என அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவரும், ஜாக்டோ -ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினருமான சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: ஜாக்டோ-ஜியோ குழுவினருடன் அமைச்சர்கள், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், 'புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து குறித்து முதல்வரிடம் பேசித்தான் உறுதியளிக்க இயலும்' என தெரிவிக்கப்பட்டது. முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது குறித்து சாதகமான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.'இத்திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை பெற்று, அதன்பிறகு ரத்து செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என முதல்வர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், சம்பளக்குழு அறிக்கை தாமதமாகும் பட்சத்தில், இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்தும் அறிவிப்பு இல்லை. எனவே, நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவங்குகிறது. அரசு ஊழியர், ஆசிரியர்கள் 10 லட்சம் பேர் இதில் பங்கேற்கின்றனர், என்றார்.
பல்கலையில் விதிமீறல்: டாக்டர் உட்பட 5 பேர் பணி நீக்கம்
பதிவு செய்த நாள்06செப்
2017
00:01

சென்னை: சென்னை பல்கலை துணைவேந்தராக, முன், தாண்டவன் பதவி வகித்த போது, 2014அக்டோபரில் மருத்துவ மையம் ஏற்படுத்தப்பட்டது. அதில், ஒரு டாக்டர், இரண்டு செவிலியர்கள், இரண்டு மனநல ஆலோசகர்கள், நிரந்தர பதவியில் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தில், விதிகள் பின்பற்றப்படவில்லை என்ற, புகார் எழுந்தது.

இதுபற்றி, ஒரு மாதத்திற்கு முன், பல்கலையில் நடந்த, சிண்டிகேட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, ஐந்து நியமனங்களையும், சிண்டிகேட் ஏற்று கொள்ளாத நிலையில், அவற்றை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, ஐந்து பேரையும் பணி நீக்கும் உத்தரவை, துணைவேந்தர் துரைசாமி பிறப்பித்துள்ளார்.



ஒரிஜினல் லைசென்ஸ் இன்று முதல் கட்டாயம்
பதிவு செய்த நாள்05செப்
2017
23:57


'சட்டைப்பையில், ஏ.டி.எம்., கார்டு வைத்திருப்பது போல, அசல் ஓட்டுனர் உரிமத்தையும் வைத்திருந்தால், மூன்று மாத சிறை தண்டனையில் இருந்து தப்பிக்கலாம்' என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 'வாகன ஓட்டுனர்கள், செப்., 1 முதல், அசல் ஓட்டுனர் உரிமத்துடன் செல்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது' என, மாநில போக்குவரத்து துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதை எதிர்த்து, சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி உள்ளிட்டோர், சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தள்ளி வைப்பு : வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, 'அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பதில், என்ன பிரச்னை உள்ளது; அதை வைத்திருக்க வேண்டும்' எனக்கூறி, 8ம் தேதிக்கு, விசாரணையை தள்ளி வைத்தது.

நீதிமன்றம் விதித்துள்ள காலக்கெடு முடிந்ததால், இன்று முதல், வாகன ஓட்டுனர்கள் அசல் ஓட்டுனர் உரிமத்துடன் செல்வது கட்டாயமாகி உள்ளது. அதனால், அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவோர், மூன்று மாத சிறை தண்டனை மற்றும், 500 ரூபாய் அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தப்பலாம்

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'சட்டைப்பையில், ஏ.டி.எம்., கார்டு வைத்திருப்பது போல, அசல் ஓட்டுனர் உரிமத்தையும் வைத்திருந்தால், மூன்று மாத சிறை தண்டனையில் இருந்து தப்பிக்கலாம்' என்றனர்.

- நமது நிருபர் -

பித்ருக்களின் ஆசி கிடைக்கும் : மகாளய பட்சம் இன்று துவக்கம்

பதிவு செய்த நாள்05செப்
2017
23:49




முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, அவர்களின் ஆசி கிடைக்க உகந்த காலமான, மகாளய பட்சம் இன்று துவங்குகிறது. மகாளய பட்சம் என்பது, முன்னோர்கள் வழிபாட்டிற்கு உகந்த காலமாக கருதப்படுகிறது. மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம், அமாவாசை திதி கொடுக்க மறந்தவர்கள், மகாளய பட்சத்தில் திதி கொடுப்பதால், 12 மாதங்களிலும் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதுகுறித்து, காஞ்சி சங்கரமட ஆஸ்தான வித்வான், சுந்தரராம வாஜ்பாய் கூறியதாவது:புரட்டாசி மாதத்தில் வரும், மகாளய அமாவாசை, முன்னோர்கள் பூலோகம் வரும் நாளாக கருதப்படுகிறது. புரட்டாசி அமாவாசைக்கு முந்தைய, 15 நாட்களும் மகாளய பட்ச காலம். இந்த புண்ணிய தினங்களில், பித்ருக்கள் வழிபாடு மிகச்சிறந்தது. 

மகாளய பட்ச காலத்தில், நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில், தர்ப்பணம் செய்வதும் அவசியம்.மற்ற அமாவாசையில், நம் உறவினர்கள், 12 பேருக்கு மட்டுமே தர்ப்பணம் செய்கிறோம். இந்த மகாளய பட்சத்தில்தான் அனைத்து உறவினருக்கும் தர்ப்பணம் செய்யப்படுகிறது. மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரம், மஹாபரணி என்றும், அஷ்டமி திதி, மத்பாஷ்டமி என்றும், திரயோதசி, கஜச்சாயை என்றும் அழைக்கப்படுகிறது.

கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் போன்ற, தெய்வீக நுால்களில், மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. மகாளய கால நாட்களில், நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே, பிதுர் லோகத்தில் இருந்து, அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகம் வருவதாக நம்பப்படுகிறது.மகாளய பட்சம் இன்று துவங்குகிறது. இதில், வரும், 10ம் தேதி மகா பரணி; ௧3ம் தேதி, மத்தியாஷ்டமி; 19ம் தேதி மகாளய அமாவாசையும் தர்ப்பணம் செய்ய விசேஷ நாட்கள். மகாளய பட்சம் துவங்கும் நாள், யசூர்வேதிகளுக்கு ஆவணி அவிட்டம் வருகிறது. எனவே, முதலில் ஆவணி அவிட்டத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக தர்ப்பணம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

NEWS TODAY 27.07.2026