Tuesday, November 7, 2017



தமிழகத்தில் 8ம் தேதி முதல் மழை குறையத் துவங்கும்'
'தமிழகம் முழுவதும், வரும், ௮ம் தேதி முதல், மழை குறையத் துவங்கும்' என, வானிலை ஆர்வலர், பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.



குறையத் துவங்கும்

'தமிழ்நாடு வெதர்மேன்' என்ற, 'பேஸ்புக்' பக்கத்தில், அவர் நேற்று கூறியுள்ளதாவது:வங்க கடலில் நிலவும், காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்துள்ளதால், தமிழகத்தின் மேற்கு மற்றும் உட்புற மாவட்டங்களை நோக்கி மழை திரும்பும். நீலகிரி, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில், மழை

பெய்ய வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களில், தற்போது, ஓரளவு மழை பெய்துள்ளது. தமிழகம் முழுவதும், வரும், 8ம் தேதி முதல், மழை குறையத்துவங்கும்.

அதேநேரத்தில், தாய்லாந்து வளைகுடாவில் மையம் கொண்டிருந்த புயல் சின்னம், தற்போது வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி உள்ளது. அது, வங்கக்கடலை நோக்கி நகரலாம். இல்லையெனில், மேலை காற்று என்ற வில்லன், திசை மாற்றி, தமிழக கடல் பகுதிக்கு வரவிடாமலும் தடுக்கலாம்.
எதையும், இப்போதைக்கு உறுதியாக கூற முடியாது. எது, எப்படி உருமாறுகிறது என்பதை வரும் நாட்களில் கூர்ந்து கவனிக்க வேண்டும். யாரும் வதந்திகளை நம்பவேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஐந்து நாட்கள் ஓய்வு

இதற்கிடையில், நேற்று காலை, வானிலை தகவலை பதிவிட்ட, பிரதீப் ஜான் கூறியுள்ளதாவது:

வங்கக்கடலில் நிலவும், காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து, இதுவே என் கடைசி பதிவு. ஒரு வாரமாக, ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து, பல்வேறு வானிலை மாடல்களையும், ரேடாரையும் தொடர்ந்து கண்காணித்துள்ளேன். அதனால், எனக்கு நான்கு அல்லது ஐந்து நாட்கள் ஓய்வு தேவை. எனினும், தாய்லாந்தில் இருந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை குறித்த தகவலை, உரிய நேரத்தில் நிச்சயம் தருவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -

சித்தா படிப்பு இடங்கள் 'ஹவுஸ்புல்'


சென்னை: சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளில், காலியிடம் ஏதுமின்றி, 1,216 இடங்களும் நிரம்பின. தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கு, 1,216 இடங்கள் உள்ளன. இரண்டு கட்ட கவுன்சிலிங்கில், 1,083 இடங்கள் நிரம்பின; 133 இடங்கள் மீதமிருந்தன. நேற்று முன்தினம், மூன்றாம் கட்ட கவுன்சிலிங் நடந்தது. இதில், மீதமிருந்த இடங்கள் அனைத்தும் நிரம்பின. 'இடம் ஒதுக்கீடு பெற்றவர்கள், நாளைக்குள் கல்லுாரியில் சேர வேண்டும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
படிப்புக்கு பணமின்றி தவிக்கும் மாணவி : நிதியுதவியை எதிர்பார்க்கும் எதிர்கால பல் டாக்டர்

மதுராந்தகம்: படிப்பை தொடர பணமின்றி தவிக்கும், பல் மருத்துவ மாணவி, கட்டணம் செலுத்தாததால், கல்லுாரியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
மதுராந்தகம், ஒன்பதாவது மண்டபத் தெருவில் வசிப்பவர், சரவணன். கூலித் தொழிலாளியான இவருக்கு இரு மகள்கள்.
இளைய மகள், மதுராந்தகம் பகுதியில், கல்லுாரி ஒன்றில் பட்டப்படிப்பு படிக்கிறார்.
மூத்த மகள் நந்தினி, பிளஸ் 2வில், 1,055 மதிப்பெண்கள் பெற்றவர். மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட அவருக்கு, பண வசதி இல்லை.
இதனால், படாளம் அருகே உள்ள ஒரு கல்லுாரியில் பல் மருத்துவம் படிக்க சேர்ந்தார். அதற்கான கட்டணத்தை செலுத்த, அவரின் குடும்பம் யோசித்த போது, ஒரு நபர் அறிமுகமானார்.
மாணவியின் படிப்புக்கு அறக்கட்டளை ஒன்றின் மூலம், நிதியுதவி ஏற்பாடு செய்வதாக அவர் கூறியுள்ளார். அதை நம்பி, அந்த பெண், கல்லுாரியில் சேர்ந்து விட்டார்.
ஆனால், நாட்கள் பல ஆகியும் நிதியுதவி கிடைக்கவில்லை. மகளின் படிப்பு பாழாகி விடக்கூடாது என்பதற்காக, அந்த மாணவியின் பெற்றோர், தங்கள் வீட்டை அடமானம் வைத்து, முதல் ஆண்டு கல்விக் கட்டணத்தை செலுத்தினர்.
கல்விக் கடன் கேட்டு, பல வங்கிகளுக்கு விண்ணப்பித்தும், எந்த வங்கியும் உதவவில்லை. வட்டிக்குக் கடன் பெற்று, இரண்டாம் ஆண்டு படிப்பை, அவர் முடித்தார்.
தற்போது மூன்றாமாண்டு கல்விக் கட்டணம் செலுத்த, அந்த ஏழை குடும்பம் படாதபாடு படுகிறது; யாரும் உதவவில்லை.
இதற்கிடையே, மூன்றாம் ஆண்டு தொடர, கட்டணம் செலுத்துவதற்கான கெடு முடிந்ததால், அந்த மாணவியை, கல்லுாரி நிர்வாகம் வெளியேற்றி விட்டது.
கட்டணம் செலுத்தினால் மட்டுமே படிப்பைத் தொடர முடியும் என்ற நிலையில், கண்ணீரோடு நிற்கிறார் அந்த ஏழை மாணவி. அவரின் கல்விக்கு உதவ நினைப்போர், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண், 9994581552 - சரவணன்.

அஞ்சல் தலையில் திருப்பதி லட்டு


அஞ்சல் தலையில் திருப்பதி லட்டு
திருப்பதி: ஏழுமலையான் பிரசாதங்களான, லட்டு மற்றும் பொங்கல் படங்கள் அடங்கிய புதிய தபால் தலைகளை, தபால் துறை வெளியிட்டுள்ளது. 

இந்திய தபால் துறை, தற்போது திருமலை ஏழுமலையான் லட்டு மற்றும் பொங்கல் பிரசாதங்களின் படங்கள் அடங்கிய புதிய தபால் தலைகளை வெளியிட்டுள்ளது. இதுவரை புகழ்பெற்ற அரசர்கள், ராணிகள், முக்கிய இடங்கள், வரலாற்று சின்னங்கள், மறைந்த முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட உருவங்களை அடங்கிய தபால் தலைகளை, தபால் துறை வெளியிட்டு வந்தது.

தற்போது புதிய வரவாக, நாட்டில் பிரசித்தி பெற்று விளங்கும் உணவு பண்டகங்களின் படங்கள் அடங்கிய தபால் தலைகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, திருமலை ஏழுமலையான் பிரசாதமான லட்டு, பொங்கல் படங்களை தாங்கிய, ஐந்து ரூபாய் மதிப்புள்ள தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை, திருவாரூர், நாகையில் மழை




 சென்னை, திருவாரூர், நாகையில், மழை

சென்னை: னெ்னையில் அண்ணாநகர், அம்பத்துார் , கொளத்துார், கொரட்டூர், மாதவரம், செங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை பெய்கிறது. இரவு மழை பெய்வதை பொறுத்து, பள்ளிகள் விடுமுறை குறித்து நாளை (நவ.7)காலை 5மணிக்கு அறிவிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சேலம்
சேலம் மாவட்டத்தில், செலம்-ஏற்காடு அடிவாரம், செட்டிச்சாவடி,கோரிமேடு கன்னங்குறிச்சி, அஸ்தம்பட்டி,  அயோத்திபட்டினம்  உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்கிறது.
நாகை
நாகை மாவட்டத்தில் நாகூர், வேளாங்கண்ணி, கீளவேளூர், திருக்குவளை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்கிறது.
திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் சுற்றுனட்டார பகுதிகளில் மழை பெய்தது.
2ஜி,வழக்கு,இன்று,தீர்ப்பு,தேதி
புதுடில்லி: காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு தேதி, இன்று அறிவிக்கப்பட உள்ளது.

'இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, கடந்த விசாரணையின்போது ஆஜராகாத, கரீம் மொரானி, சஞ்சய் சந்திரா மற்றும், தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா, கனிமொழி ஆகியோர் உட்பட, அனைவரும் இன்று ஆஜராக வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனால், 10 ஆண்டுகளுக்கு முன், ஊழல் செய்தவர்கள், அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ரூ1.76 லட்சம் கோடி இழப்பு

மத்தியில், காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது, 2007 - 2009 வரை, மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக, தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா இருந்தார்.அப்போது, மொபைல் போன் சேவைகளுக்கான, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக, சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் குறிப்பிடப் பட்டது.
இதனால், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏறபட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது.இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்து வந்தது. இந்த ஊழலில் நடந்துள்ள பண மோசடி குறித்து, மத்திய அமலாக்கத் துறை தனியாக விசாரித்தது. இந்தவழக்குகளை, டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி விசாரித்து வந்தார்.இந்தாண்டு ஏப்ரலில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்தன. வழக்கு தொடர்பாக அதிக ஆவணங்களை பரிசீலிக்க வேண்டி இருப்பதால், தீர்ப்பு தேதி ஒத்திவைக் கப்படுவதாக, நீதிபதி சைனி கூறியிருந்தார்.

இதையடுத்து, கடந்த மாத இறுதியில் நடந்த விசாரணையின்போது, தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா, கனிமொழி ஆகியோர் ஆஜராயினர். ஆனால், தீர்ப்பில் பல ஆவணங்கள் சேர்க்கப்பட வேண்டி இருந்ததால், தீர்ப்பு வழங்குவது தாமதம் ஆனது.

அதனால், நவ., 7ல், தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என்றும், ராஜா, கனிமொழி, சிறையில் உள்ள சஞ்சய் சந்திரா, கரீம் மொரானி உள்ளிட்ட, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட உள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளும், எம்.பி.,யுமான, கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப் பட்டு உள்ளதால், இந்த வழக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு, தங்கள் அரசியல் எதிர்காலத்தை கடுமையாகபாதிக்கும் என்ற அச்சத்தில் , சம்பந்தப்பட்ட

பிரபலங்கள் உறைந்து போய் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சிக்கியவர்கள் யார்?

'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்தது. தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான, கனிமொழி ஆகியோரை குற்றவாளிகளாக, சி.பி.ஐ., கூறியுள்ளது.

மேலும், தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலர், சித்தார்த் பகுரா, ராஜாவின் முன்னாள் உதவியாளர், ஆர்.கே.சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் நிறுவன உரிமையாளர்கள், ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, யூனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் - அனில் திருபாய் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த அதிகாரிகளான, கவுதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோர் மீதும், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ரூ.200 கோடி லஞ்சம்

'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கியதற்கு லஞ்சமாக, ஸ்வான் டெலிகாம் நிறுவனம் மூலம், டி.பி., குழுமம், 200 கோடி ரூபாயை, கலைஞர், 'டிவி'க்கு அளித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து உள்ளது. அதில், ராஜா, கனிமொழியுடன், தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மனைவி, தயாளு உள்ளிட்டோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

சேலம் - சென்னை விமானம்: 'உதான்' திட்டத்தில் ஒப்புதல்


சேலம் - சென்னை விமானம்: 'உதான்' திட்டத்தில் ஒப்புதல்
சேலம்: சேலம் - சென்னை, விமான சேவைக்கு, உதான் திட்டத்தில், 'டர்போ மெகா ஏர்வேஸ்' நிறுவனம் ஒப்புதல் பெற்றுள்ளது. 

மத்திய அரசின், 'உதான்' திட்டத்தில், சென்னையில் இருந்து, புதுச்சேரி, பெங்களூரு வழியாக, சேலத்துக்கு விமான சேவை வழங்க, ஏர் ஒடிசா நிறுவனத்துக்கு, ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. இந்த சேவையை துவங்குவதில், தற்போது தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக, சேலத்தில் இருந்து சென்னைக்கு, 72 இருக்கைகள் கொண்ட, ஏ.டி.ஆர்., வகை விமான சேவையை இயக்க, 'டர்போ மெகா ஏர்வேஸ்' நிறுவனம் ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த விமான சேவை டிசம்பரில் துவங்குகிறது.

NEWS TODAY 03.07.2026