Tuesday, November 14, 2017


சென்னை பல்கலை தேர்வுகளில் முறைகேடு?

நவ 13, 2017 23:53

சென்னை: தொலைநிலை கல்வியில், முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்ததால், தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர, சென்னை பல்கலை முடிவு செய்துள்ளது.

சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், சில தேர்வு மையங்களில் ஆள் மாறாட்டம், காப்பியடித்தல் போன்ற முறைகேடுகள் நடந்ததாக, புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்த, துணைவேந்தர், துரைசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் அல்லாத பிற மாநிலங்களில், கடந்த ஆண்டுகளில் அமைக்கப்பட்ட மையங்களில், பெரும்பாலானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் விபரங்களை பார்த்தால், அவர்கள் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என, தெரியவந்துள்ளது.
தமிழக மாணவர்கள், வெளிமாநிலங்களுக்கு தேர்வு எழுத சென்றது குறித்து, பல்கலையின் தேர்வுத் துறை விசாரித்ததில், சிலர் ஏஜன்டுகளாகசெயல்பட்டு, ஆள் மாறாட்டம் மற்றும் காப்பியடித்தல் முறைகேட்டில் தேர்ச்சி பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து, விசாரணை முடிந்த பின், முழு விபரத்தை சிண்டிகேட் கூட்டத்தில் வைக்க, சென்னை பல்கலை முடிவு செய்துள்ளது. அதேபோல், பல்கலையின் தேர்வுகள் மற்றும் தொலை நிலை கல்வி தேர்வுகளில் மாற்றம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் குறித்து, துறை ரீதியாகவும் விசாரணை துவங்கியுள்ளது. இதில், தொலைநிலை கல்வி மையத்தில் உள்ள சிலர் மீதும், பல்கலை நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனால், விரைவில் போலீஸ் வழியாக நடவடிக்கை எடுக்கப்படலாம் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 துவங்கியது!  சசி கும்பல் விசாரணை...


வருமான வரி சோதனையில் சிக்கிய சசி கும்பலிடம், கிடுக்கிப்பிடி விசாரணை, நேற்று துவங்கியது. ஜெ., உதவியாளர், பூங்குன்றன், பெங்களூரு புகழேந்தி, 'மிடாஸ்' மதுபான ஆலை இயக்குனர், சிவக்குமார் மற்றும், 'ஜாஸ் சினிமாஸ்' தலைமை அதிகாரி, விவேக் ஆகியோர் அடுத்தடுத்து, நேற்று விசாரணைக்கு ஆஜராகினர்.

ஐந்து நாட்கள் விடாமல் நடந்த தேடுதலில், 100க்கும் மேற்பட்ட இடங்களில், மூட்டை மூட்டையாக சிக்கிய, சொத்து மற்றும் பணப் பரிவர்த்தனை ஆவணங்களை, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதில், கல்லுாரி மாணவர்கள், வேலையாட்கள் பெயர்களில், கோடிக்கணக்கில் பணம், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.சசிகலா மற்றும் அவர்களது குடும்பத்தினர், 25 ஆண்டுகளாக, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில், சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்.


போலி நிறுவனங்கள் துவங்கி, லஞ்சம் மற்றும் ஊழல் பணத்தை பதுக்கி, பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி உள்ளனர். அதற்கான ஆதாரங்களை சேகரித்த, வருமான வரித்துறையினர், நவ., 9 காலையில், சென்னை, மன்னார்குடி, திருச்சி, தஞ்சை, கோவை, நெல்லை, பெங்களூரு, புதுச்சேரி, ஐதராபாத் என, 187 இடங்களில், 'ஆபரேஷன் கிளீன் மணி' என்ற, அதிரடி சோதனையை துவக்கினர்.

ஆயிரம் ஊழியர்கள்:

அதில், வரலாறு காணாத வகையில், ஆயிரம் ஊழியர்கள், அதிகாரிகள், ஒரே நேரத்தில் களமிறக்கப்பட்டனர்.சென்னையில், ஜெயா, 'டிவி' மற்றும் வேளச்சேரி, 'பீனிக்ஸ் மாலில்' உள்ள ஜாஸ் திரையரங்கங்கள் மற்றும் அவற்றின் தலைமை அதிகாரி விவேக்கின் மகாலிங்கபுரம் வீடு, அவரது சகோதரியும், இளவரசியின் மகளுமான கிருஷ்ணபிரியாவின் தி.நகர் வீடு, நமது எம்.ஜி.ஆர்., அலுவலகம், தினகரன் வீடு என, 111 இடங்களில் சோதனை நடந்தது.


அதேபோல, மன்னார்குடியில் திவாகரன் வீடு, தஞ்சையில் நடராஜன் வீடு, நாமக்கலில் வக்கீல் செந்தில் வீடு மற்றும் நீலகிரி மாவட்டம், கர்சன் எஸ்டேட் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது.இதில், சில இடங்களில் நடந்த சோதனை, நான்கு நாள் நீடித்தது.

வைரம் சிக்கியது

ஆனால், விவேக் வீடு, கிருஷ்ணபிரியா வீடு, ஜெயா, 'டிவி', காஞ்சி மாவட்டம், படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை உள்ளிட்ட சில இடங்களில் மட்டும், ஐந்தாவது நாளாக நேற்றும் விசாரணை தொடர்ந்தது.
இந்த சோதனையில், சில இடங்களில், தங்கம், வைரம் நகைகள் சிக்கின. எனினும், வருமான வரித்துறையினர், 'நாங்கள், போலி நிறுவனங்கள் பெயரில் முதலீடு செய்த பணம், அதன் வாயிலாக, சசி கும்பல், பினாமிகள் பெயரில் வாங்கிக் குவித்த சொத்துகள் மற்றும்முறைகேடான பணப் பரிவர்த்தனையை தான் முக்கியமாக விசாரிக்கிறோம்' என்றனர்.
அவர்கள் குறிவைத்த படியே, ஐந்து நாள் சோதனையில், ஏராளமான, போலி நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனை ஆவணங்கள் மற்றும் வாங்கி குவித்த சொத்துக்களின் ஆவணங்களை கைப்பற்றினர். அவை அனைத்தும், சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, மூட்டை மூட்டையாக குவித்து வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை மதிப்பிடும் பணிகளில், 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

விவேக் உள்பட நால்வரிடம்...

இந்நிலையில், சோதனைக்கு உள்ளான, 20 முக்கிய நபர்களுக்கு, விசாரணைக்கு ஆஜராகும்படி, 'சம்மன்' அனுப்பப்பட்டது. அதில், முதல் கட்டமாக, நேற்று மிடாஸ் ஆலை சிவகுமார், பெங்களூரு புகழேந்தி, ஜெ., உதவியாளர், பூங்குன்றன் ஆகியோர், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, வருமான வரி விசாரணைக்கு, அடுத்தடுத்து ஆஜராகினர்.
அவர்களை தொடர்ந்து, மாலை, 6:00 மணி அளவில், இளவரசி மகன் விவேக், வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.அப்போது, மீண்டும் சிவகுமார், பூங்குன்றன் ஆகியோரை அழைத்து வந்தனர். அவர்களையும், விவேக்குடன் சேர்த்து வைத்து, ஒரே அறையில், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

Advertisement


அதில், எந்தெந்த போலி நிறுவனங்கள் பெயரில், எங்கெங்கு யார் பெயரில் முதலீடுகள்
செய்யப்பட்டுள்ளன; போயஸ் இல்லத்தில் மிரட்டி எழுதி வாங்கப்பட்ட சொத்துகள் போன்றவற்றை விசாரித்தனர். இந்த சோதனை, இரவு, 10:00 மணி வரைநீடித்தது.

மாணவர்கள் கணக்கில்...

தற்கிடையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, மன்னார்குடியில், செங்கமலத்தாயார் கல்லுாரியில் படித்த மாணவர்கள் கணக்கில், பல கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்டதாக கிடைத்த தகவல் குறித்தும், திவாகரனிடம் விசாரிக்க உள்ளனர். இதேபோல், உதவியாளர்கள், வேலையாட்கள், டிரைவர்கள் பெயரில், கோடிக்கணக்கில் பினாமி சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது குறித்தும், விசாரணை துவங்கியுள்ளது.
இது தொடர்பாக, கிருஷ்ணபிரியா, கலியபெருமாள், பாஸ்கரன், பிரபா, அனுராதா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரிடம், இன்று விசாரணை நடக்கவுள்ளது. அதன்பின், முழு விபரங்கள் வெளியாகும்.

மிடாஸில் தொடரும் சோதனை

தமிழகம் முழுவதும் நடந்த வரித்துறை சோதனை முடிந்தாலும், மிடாஸ் மதுபான ஆலையில், நேற்று இரவுக்குப் பிறகும் சோதனை தொடர்ந்தது. ஜெயா, 'டிவி' அலுவலகத்திலும், நேற்றிரவு வரை சோதனை நீடித்தது. அங்கு, முக்கிய ஆவணங்கள் இருக்கக்கூடும் என்பதால், தொடர் விசாரணை நடைபெறுகிறது.

வாக்குமூலம் சரிபார்ப்பு

சென்னை, அலுவலகத்தில் ஆஜரான விவேக் உள்ளிட்ட நான்கு பேர், அவரவர் வீடுகளில் வாக்குமூலம் அளித்திருந்தனர். அதை, உயர் அதிகாரிகள், நேற்று சரிபார்த்தனர். வரி ஏய்ப்பு மற்றும் மோசடியின் மதிப்பை உறுதிப்படுத்தவே, இந்த குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

வடிவேலு போல போஸ்


சென்னை, வரித்துறை அலுவலகத்தில், நேற்று ஆஜரான பூங்குன்றன், சிவகுமார் போன்றோர், முகம் காட்டாமல் வந்து சென்றனர். ஆனால், கர்நாடக சிறையில், ஜெ., மற்றும் சசிக்கு உதவி செய்த, பெங்களூரு புகழேந்தி, வடிவேலு பாணியில் போஸ் கொடுத்தார். சிரித்த முகத்துடன், 'என்னிடம் ஒன்றும் இல்லை' என, பேட்டி அளித்தார். மற்றவர்களிடம், அதிகமாக இருப்பதை சூசகமாக உணர்த்தி சென்றார்.

ஒரு நிறுவனம்: 10 வங்கி கணக்கு

வரித்துறையினர், சசி கும்பலின், 50 நிறுவனங்களில் நடந்த பரிவர்த்தனைகளை ஆராய்ந்து வருகின்றனர். அதில், சில நிறுவனங்களில் நடந்த பணப்புழக்கம், பெரும் புதிராக உள்ளது. ஒரு சில நிறுவனங்கள், 10க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வாயிலாக, பரிவர்த்தனை மேற்கொண்டி ருந்ததும் தெரிய வந்துள்ளது.- நமது சிறப்பு நிருபர் -

வெடிகுண்டு பற்றி பேசிய விமான பயணி கைது

 நவ 13, 2017 22:45

கொச்சி: கேரளாவில், தனியார் நிறுவன விமானம் புறப்படுவதற்கு முன், அதில் இருந்த பயணி ஒருவர், 'ஹேப்பி பாம்' என கூறியதால், சர்ச்சை ஏற்பட்டது. 

கொச்சி விமான நிலையத்திலிருந்து, 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு புறப்பட தயார் நிலையில் இருந்தது.
அப்போது, அதிலிருந்த பயணி ஒருவர், 'ஹேப்பி பாம்' என கூறியதை கேட்டு, விமான பணியாளர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, அந்த நபரிடம், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர். மும்பையில் உள்ள தன் நண்பரிடம், விளையாட்டாக பேசியதாக அவர் கூறினார். அந்த நபரை, போலீசார் கைது செய்தனர். விமானத்தில் இருந்த பயணியர் இறக்கி விடப்பட்டு, அவர்களின் உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. வெடிகுண்டு ஏதும் இல்லாதது உறுதி செய்யப்பட்ட பின், விமானம் புறப்பட்டு சென்றது.

பள்ளி தணிக்கை துறையில் 'வசூல் ராஜாக்கள்': அலறும் ஆசிரியர்கள்

 நவ 14, 2017 00:23

தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் கீழ் செயல்படும் தணிக்கை துறையில், பெரும்பாலான அலுவலர்கள் 'வசூல் ராஜாக்களாக' வலம் வருவதால் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் புலம்பி தவிக்கின்றனர். 'தொடக்க கல்வி துறையில் உள்ளது போல், உயர் மற்றும் மேல்நிலை பிரிவிலும் தணிக்கை துறையை மாற்றியமைக்க வேண்டும்,' என போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நிர்ணயம், சம்பளம் உயர்வு, அரசு நிதி செலவிடல், ஆசிரியர் ஓய்வூதியம் மற்றும் பணப்பலன் ஆவணங்கள் சரிபார்ப்பு உட்பட அனைத்து வகை வரவு செலவினங்களுக்கும் முறையான ஆவணங்கள் உள்ளனவா என்பது குறித்து பள்ளி தணிக்கை துறை சார்பில் தணிக்கை செய்யப்படுகின்றன.

இதற்காக சென்னை, மதுரை, கோவையில் மண்டல கணக்கு அலுவலகங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 32 மாவட்டங்களிலும் பள்ளிகளில் ஆடிட் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மண்டல கணக்கு அலுவலராக உள்ளாட்சி தணிக்கை துறை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கீழ் கல்வித்துறையின் கண்காணிப்பாளர்கள் மாவட்டம் தோறும் நியமிக்கப்பட்டுள்ளனர்.தணிக்கையின் போது பள்ளிகளில் வரவு செலவிற்கான உரிய ரசீது இல்லாதது, விதி மீறி ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கல், நிதி முறைகேடு இருந்தால் ஆட்சேபனை (அப்ஜெக்ஷன்) தெரிவிக்கப்படும். உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து அவை சரிசெய்யப்பட்டால் தான் எந்த பணப் பலனையும் ஆசிரியர், அலுவலர்கள் பெற முடியும்.

தற்போது வரை தமிழக பள்ளிகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்சேபனைகள் நிலுவையில் உள்ளன. இவற்றை குறைக்க அவ்வப்போது கூட்டு அமர்வு கூட்டங்கள், சிறப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கிடையே ஒவ்வொரு கண்காணிப்பாளர்களுக்கும் மாதத்தில் குறிப்பிட்ட பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்படும். இங்கு தான் பல அலுவலர்கள் 'வசூல் ராஜாக்களாக' கோலோச்சுகின்றனர் என புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தலைமையாசிரியர், ஆசிரியர்கள் கூறியதாவது: பள்ளிகளில் 'ஆடிட்' என்றால் முன்கூட்டியே சம்மந்தப்பட்ட பள்ளிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விடும். ஆடிட் வருவோருக்கு லாட்ஜில் தங்குவது, சாப்பாடு, தணிக்கை முடிந்து செல்லும்போது 'கவர்' என சகலமும் பள்ளி சார்பில் 'கவனித்து' அனுப்பினால் தான் ஆட்சேபனைகளுக்கு விமோசனம் கிடைக்கும்.

ஆனால் 'கவனிப்பு' இல்லாவிட்டால் 'அது சரியில்லை... இது சரியில்லை...,' என ஏராளமான ஆட்சேபனைகள் தெரிவித்து எழுதிவிடுவர். இதனால் முடிந்தவரை 'கவனித்து' அனுப்பி விடுவோம். இதில் உதவி பெறும் பள்ளிகளில் இஷ்டத்திற்கும் வசூலிப்பு நடக்கும். இதுதவிர ஓய்வு பெறும் தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு ஓய்வூதி பலன் கிடைக்க இத்துறையின் தடையில்லா சான்று (என்.ஓ.சி.,) அவசியம்.

அப்போதும் முடிந்த அளவு 'பணம் கறப்பு' நடக்கும்.பல்வேறு புகார்கள் தெரிவித்தும், இதுவரை பெரிய அளவில் நடவடிக்கை இல்லாததால் இத்துறைக்கு 'டிரான்ஸ்பர்' ஆவதில் கடும் போட்டி ஏற்படுகிறது. முறைகேடு புகாரில் சிக்கி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னரும் கூட, அரசியல் சிபாரிசால் இத்துறைக்கே பணிக்கு திரும்பும் சம்பவங்களும் நடக்கிறது. இத்துறையை சீரமைத்து மாற்றியமைக்க அரசு முன்வர வேண்டும், என்றனர்.

தொடக்க கல்விமுறை பின்பற்றப்படுமா

தொடக்கக் கல்வித்துறையில் பள்ளிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கையும் அதிகம். அங்கு அந்தந்த மாவட்டங்களில் தொடக்க கல்வி அலுவலர் கண்காணிப்பின் கீழ் உதவி தொடக்க கல்வி அலுவலர் பொறுப்பிலேயே தணிக்கை பணிகள் மேற்கொள்கின்றன. அதுபோல் உயர் மற்றும் மேல்நிலை பிரிவிலும் முதன்மை கல்வி அலுவலர்களின் கீழ் கண்காணிப்பாளர்களே தணிக்கை மேற்கொள்ளும் வகையில் மாற்றி அமைக்கலாம். உள்ளாட்சி தணிக்கை துறை அதிகாரிகளை அத்துறைக்கே திருப்பி அனுப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

- நமது நிருபர் -

சி.பி.எஸ்.இ., அவகாசம்

 நவ 14, 2017 01:39 | Added : நவ 13, 2017 23:58




மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயர் மாற்றத்துக்கான அவகாசம், ஒரு ஆண்டிலிருந்து, ஐந்து ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வு முடிவு வெளியான நாளில் இருந்து, ஐந்து ஆண்டுகள் வரை, பிறந்த தேதி மற்றும் பெற்றோர் பெயரை திருத்தம் செய்யலாம்.
இனி வரும் காலங்களில் தேர்வு எழுதுவோருக்கும், ஏற்கனவே, திருத்தம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும், இந்த விதி பொருந்தும்.
- நமது நிருபர் -

டாக்டர்களின் சம்பள முரண்பாடு : அரசுடன் நாளை பேச்சுவார்த்தை

நவ 13, 2017 22:02


சேலம்: மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன், தமிழக அரசு டாக்டர் சங்கங்களுடன் நாளை பேச்சு நடத்துகிறார்.

இது குறித்து, தமிழ்நாடு அரசு பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்க மாநில தலைவர், லட்சுமி நரசிம்மன் கூறியதாவது: மருத்துவ படிப்பை முடித்து, மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளில், டாக்டர்களாக பணியில் இணைபவர்கள், முதல் நான்கு ஆண்டுகள் வரை, 56 ஆயிரத்து, 100 ரூபாய் அடிப்படை சம்பளத்தில் பணி செய்கின்றனர்.

அதன் பின்னரே, மத்திய, மாநில அரசு டாக்டர்களின் சம்பளத்தில், முரண்பாடு துவங்குகிறது.
ஐந்து முதல், 10வது ஆண்டு வரை, மாநில அரசு டாக்டர்களை விட, மத்திய அரசு டாக்டர்களின் சம்பளத்தில், மாதத்துக்கு, 5,000 ரூபாய் கூடுதல் என்ற வகையில், ஆண்டுக்கு, 60 ஆயிரம் ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்டுகின்றனர். அதே பணியில், 13 முதல், 20 ஆண்டுகள் முடிக்கும் நிலையில், மாநில டாக்டர்களை விட மத்திய அரசு டாக்டர்கள், மாதத்துக்கு, 39 முதல், 49 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஆண்டுக்கு ஐந்து முதல், ஏழு லட்சம் ரூபாய் வரை, கூடுதல் சம்பளம் பெறுகின்றனர். எம்.பி.பி.எஸ்., முடித்து, பணியில் உள்ள டாக்டர்களின் சம்பள முரண்பாடு இதுவென்றால், எம்.எஸ்., எம்.டி., உள்ளிட்ட உயர் படிப்பு டாக்டர்களின் சம்பள விகித முரண்பாடுகள் இதைவிட அதிகமாக உள்ளன. தமிழக அரசு டாக்டர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக, பிறப்பித்த அரசாணை எண், 354ல் உள்ள சில கருத்துக்களை முன் வைத்து, நாளை சென்னையில், சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன், டாக்டர்கள் சங்கங்களை பேச்சுக்கு அழைத்துள்ளார். இதில், மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம், சலுகைகள் குறித்த கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

சிங்கப்பூருக்கு விமான சுற்றுலா

 நவ 13, 2017 21:45

சென்னை: இந்தியன் ரயில்வே உணவு கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., மலேஷியா, சிங்கப்பூர், துபாய், அபுதாபிக்கு, விமான சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது. மலேஷியா மற்றும் சிங்கப்பூருக்கு, டிச., 9ல், ஏழு நாட்கள் விமான சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கான கட்டணம், 62 ஆயிரம் ரூபாய். துபாய் மற்றும் அபுதாபிக்கு, ஐந்து நாட்கள் சுற்றுலா, 24ல் புறப்படுகிறது. இதில், ஒருவருக்கு கட்டணம், 53 ஆயிரத்து, 700 ரூபாய். மேலும், விபரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி., சென்னை அலுவலகத்தை, 98409 02918 - 19; மதுரை அலுவலகத்தை, 98409 02915 என்ற, எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்து உள்ளது.

NEWS TODAY 06.07.2026