Wednesday, April 4, 2018


நலம் தரும் நான்கெழுத்து 28: அது என்ன ‘நல்ல மன அழுத்தம்’?

Published : 31 Mar 2018 11:36 IST


டாக்டர் ஜி. ராமானுஜம்
HINDU  TAMIL



‘பிரச்சினைகள் பிரச்சினைகளில் இல்லை. பிரச்சினைகளை நாம் பார்க்கும் விதத்தில்தான் அவை பிரச்சினைகளாகின்றன ’

– ஸ்டீஃபன் கோவே

ராமசாமி, கிருஷ்ணசாமி இருவருக்குமே பதவி உயர்வு கிடைத்தது. ஒரே பதவிதான். ராமசாமிக்கோ ஒரே பதற்றம். புதுப் பதவி; பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டுமே; பொறுப்பு அதிகரிக்குமே; அடிக்கடி பயணம் செய்ய வேண்டுமே என்றெல்லாம் கவலைப்பட்டார். கிருஷ்ணசாமிக்கோ ரொம்ப மகிழ்ச்சி; பழைய போரடிக்கும் வேலைக்கு குட்பை; நமக்கு மரியாதை கூடும்; வருமானம் கூடும்; பல இடங்களை அலுவலகச் செலவில் சுற்றிப் பார்க்கலாம் என்றெல்லாம் ஒரே குஷி!

ஒரே விஷயத்தை இருவரும் பார்க்கும் விதம்தாம் அதைப் பிரச்சினையா இல்லையா என முடிவு செய்கிறது. ‘கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம்’ என்னும் பழமொழியையே ‘நாய்ச்சிலை ஒன்றை நாயெனப் பார்த்தால் அது நாய்; அதுவே வெறும் கல்லென்று பார்த்தால் கல்தான்’ என்பதைத்தான் சொல்கிறது என்பார்கள்.

முற்றுப்புள்ளி இல்லா பந்தயம்

ஆங்கிலத்தில் மட்டுமல்ல; உலக மொழிகள் எல்லாவற்றிலுமே இன்று யாருக்கும் பிடிக்காத வார்த்தை ‘ஸ்டிரெஸ்’ எனப்படும் மன அழுத்தம். அதிலும் பொருள்மயமாக ஆகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் கருவில் இருக்கும் குழந்தைகூட எனக்கு மிகவும் டென்ஷனாக இருக்கிறது எனக் கூறும் நிலையில்தான் இருக்கிறது.

‘ஃபாரெஸ்ட் கம்ப்’ என்ற படத்தில் கதாநாயகன் காரணமே இல்லாமல் சும்மா ஓடுவான். பலரும் அவன் ஏதோ நோக்கத்துக்காக ஓடுகிறான் எனத் தவறாக நினைத்துக்கொண்டு அவனுடனேயே ஓடுவார்கள். அதுபோல் பலரும் எதற்காக ஓடுகிறோம் என்பதே தெரியாமல் வாழ்க்கை என்னும் ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆகவே, எல்லாமே ஒரு பெரும் பந்தயமாகிவிட்டது. எனவே, வென்றாக வேண்டிய அழுத்தம் அதிகரிக்கிறது.

பார்வையை மாற்றுவோம்

மன அழுத்தம் ஏன் வருகிறது? இதுதான் இலக்கு என நினைத்திருப்பதை அடைய நம்மால் இயலாதபோது அல்லது இயலாது என நாம் நினைக்கும்போது வருகிறது. ஒரு ஓவரில் இருபது ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையோ மறுநாள் தேர்வுக்குள் ஐம்பது பக்கங்கள் படிக்க வேண்டும் என்ற நிலையோ நமக்கு அழுத்தத்தைத் தருகின்றன.

மனரீதியாக மட்டுமின்றி உடல்ரீதியான பல கோளாறுகளுக்கும் மன அழுத்தமே காரணமாக அமைகிறது. ஆகவேதான் மேலை நாடுகளில் மன அழுத்தத்தை நீக்கும் பயிற்சிகள், சிகிச்சைகள் போன்றவை கோடிக்கணக்கான டாலர்கள் சந்தை மதிப்புடையவையாக இருக்கின்றன.

மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான முதல் வழி நாம் பார்க்கும் முறையை மாற்றிக்கொள்வதே. அதீதமான எதிர்பார்ப்புகளையும் யதார்த்தத்துக்குக் கொஞ்சமும் பொருந்தாத குறிக்கோள்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஸ்டிரெஸ்ஸே வேண்டாமா?

மாறாக, எல்லோரும் நினைப்பதுபோல் மன அழுத்தம் என்பது ‘பீப்’ ஒலிகொண்டு மறைக்க வேண்டிய கெட்ட வார்த்தை அல்ல. மன அழுத்தம் என்பது தேவையான ஒன்றே. பிரச்சினைகள் வரும்போதுதான் புதுப்புது வாய்ப்புக்கள் வருகின்றன. தேர்வுகளே இல்லாவிட்டால் பலரும் பாடப் புத்தகங்களையே தொட மாட்டார்கள்.

நாம் பல துறைகளில் வெற்றி பெற்ற முதல் தலைமுறையினர் அளவுக்கு அடுத்த தலைமுறையினர் சிறந்து விளங்காமல் போவதைப் பல இடங்களில் பார்க்கிறோம். அதற்குக் காரணம் வென்றே ஆக வேண்டிய கட்டாயமும் அழுத்தமும் இல்லாமல் போவதே.

மன அழுத்தம் ஒரு அளவுவரை நமக்குத் தேவையான ஒன்றே. ஆங்கிலத்திலே இதை யூஸ்டிரெஸ் (நல்ல அழுத்தம்) என்கிறார்கள். அந்த அழுத்தம் கொடுக்கும் வேகம், நமது கவனத்தை மேம்படுத்தித் திறமையை வளர்க்க உதவுகிறது. ‘அமைதியான கடல், நல்ல மாலுமியை உருவாக்காது’ என்பார்கள்.

அதுவே ஒரு அளவுக்கு மேல் போனால் டிஸ்டிரெஸ் எனப்படும் கெட்ட மன அழுத்தமாகிறது. அது நமது உற்சாகத்தைக் குறைத்து, செயல்திறனை வெகுவாகப் பாதிக்கிறது.

அலுவலகங்களில் ‘டார்கெட்' எனப்படும் இலக்குகளை வைத்து ஆராய்ந்ததில், இலக்குகளே வைக்காமல் ஜாலியாக வேலை பார்ப்பதைவிட மிதமான இலக்குகளை வைத்துக்கொண்டு கொஞ்சம் அழுத்தத்துடன் வேலை பார்க்கும்போது உற்பத்தித் திறன் கூடுகிறது எனக் கண்டறிந்துள்ளனர். அதேநேரம் மிகையான அதீத இலக்கும் உற்பத்தித் திறனைப் பாதிக்கிறது எனவும் அதே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தினேஷ் கார்த்திக் எத்தனையோ ரன்கள் எடுத்திருந்தாலும், கடைசி பந்தில் அடித்த சிக்ஸர் அவருக்குப் பெரும் புகழைக் கொண்டுவந்தது அல்லவா? இதுவே ஐந்து ஓவர்களில் ஒரு ரன் அடிக்க வேண்டும் என்ற இலக்கு இருந்திருந்தால், அதை அடைவதில் என்ன பெருமை இருக்கிறது? கானமுயலைக் கொன்ற அம்பைவிட, யானை பிழைத்த வேல் ஏந்துவதுதானே இனிது எனக் குறள் கூறுகிறது. பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கையை வேண்டுவதைவிடப் பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறனை வேண்டுவதே புத்திசாலித்தனம். யதார்த்தமும்கூட.

பிரச்சினைகளும் மன அழுத்தமும் ஓர் அளவுக்கு நமக்குத் தேவையானவையே. அவை அதீதமாகப் போகாத சமநிலையே நலம் தரும் நான்கெழுத்து.

கட்டுரையாளர்,

மனநலத் துறைப் பேராசிரியர்

தொடர்புக்கு: ramsych2@gmail.com
கட்டணத்தை உயர்த்தாமலேயே வசூலை குவிக்கும் ரயில்வே - விமானங்களுடன் கடும் போட்டி

Published : 03 Apr 2018 17:43 IST

புதுடெல்லி



பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல், விமான நிறுவனங்களின் போட்டியையும் கடந்து, ரயில்வே கடந்த நிதியாண்டில் கூடுதலான வருவாய் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது:


‘‘கடந்த 2017- 2018 நிதியாண்டில் ரயில்வே துறை, பயணிகள் டிக்கெட் கட்டணத்தின் மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. 2016 -17 நிதியாண்டை ஒப்பிட்டால், 2,551 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் ஈட்டியுள்ளது. பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்படாத போதிலும், ரயில்வே கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளது.

இதுபோலவே ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 2016 - 2017 நிதியாண்டில் ரயில்களில் ஒட்டுமொத்தமாக 821.9 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2017 -2018 நிதியாண்டில் 826.7 கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக பெருநகரங்களில் இயக்கப்படும் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

அதேசமயம் சீசன் அல்லாத காலங்களில் விமான நிறுவனங்கள் கட்டணங்களை பெருமளவு குறைப்பதால், ராஜதானி, துராந்தோ, சதாப்தி உள்ளிட்ட ரயில்கள் பெரும் போட்டியை சந்தித்து வருகின்றன. இந்த ரயில்களின் பயணக் கட்டணத்தை விடவும், விமானங்களில் கட்டணம் குறைவாக இருப்பதால் பயணிகள் எண்ணிக்கை குறைந்து விடுகிறது. எனினும் மற்ற காலங்களில் ரயில்வே விமான நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளித்து வருகிறது.

இதுபோலவே ரயில்களில் சரக்கு கையளும் திறனும் அதிகரித்துள்ளது. 2017 - 2018 நிதியாண்டில் ரயில்வே, 2.16 கோடி டன்கள் அளவிற்கு நிலக்கரியும், 1 கோடி டன்கள் அளவிற்கு சிமெண்ட்டும், 47 லட்சம் டன்கள் அளவிற்கு இரும்பு உள்ள சரக்குகளை கையாண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 116.2 கோடி டன்கள் அளவிற்கு பல பொருட்களை ரயில்வே கையாண்டுள்ளது. இதன் மூலம் கணிசமான அளவு லாபம் ஈட்டியுள்ளது’’

இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொஞ்சம் மரியாதை கொடுங்க சார்; தவறாக பயன்படுத்தப்படும் போலீஸாரின் அதிகாரமும் அத்துமீறலும்: ஒரு பார்வை


Published : 03 Apr 2018 19:27 IST

மு.அப்துல் முத்தலீஃப்

  சென்னை   THE HINDU TAMIL

 


தி.நகர் சம்பவம்

காவல்துறையில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து போன்றவற்றில் அதிகாரத்தை பயன்படுத்தும்போது போலீஸாரால் தவறாகப் பிரயோகிக்கப்படும் அதிகாரம் சாதாரண மக்களை எப்படி பாதிக்கும் என்பதை அலசவே இந்தக் கட்டுரை.

காவல்துறை பல்வேறு இக்கட்டான பணிகளுக்கு நடுவே செயல்படும் அமைப்பு. அனைத்து பிரச்சினைகளுமே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாகத்தான் அன்றாடப் பணிகளை காவலர்கள் சந்திக்கிறார்கள். காவல்துறையில் கடைகோடி காவலர்களின் உரிமைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளாலேயே மறுக்கப்படுவதும் வெளிப்படையான ஒன்று.

மிகுந்த மன அழுத்தத்தில் நாங்கள் பணி ஆற்றுகிறோம் எங்களுக்கான விடுமுறைகள் கூட இல்லை, குடும்பத்தாருடன் நேரம் செலவிடக்கூட அனுமதிப்பதில்லை என்றெல்லாம் காவலர் தரப்பில் வைக்கப்படும் வாதம்.

மன அழுத்தத்துடன் பணியாற்றும் காவலர்கள் அதை சாதாரண மக்களிடம் காண்பிக்கும் சம்பவங்கள் அதிகமாக சமீபகாலமாக அதிகரித்து வருவது நிதர்சனமான உண்மை. இதற்கு உதாரணமாக தரமணியில் மணிகண்டன் என்ற கால் டாக்ஸி ஓட்டுநர் தாக்கப்பட்டதும், பின்னர் அவர் மன உளைச்சலால் தீக்குளித்து மரணமடைந்ததையும் கூறலாம்.

அடுத்து திருச்சியில் சாதாரண போக்குவரத்து விதிமீறலுக்காக பல கிலோ மீட்டர் துரத்திச்செல்லப்பட்ட உஷா, ராஜா தம்பதிகள் மோட்டார் சைக்கிளைப் போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததால் கீழே விழுந்த உஷா மரணமடைந்த சம்பவத்திலும், இன்று தி.நகரில் போக்குவரத்து போலீஸாரால் பிரகாஷ் என்ற இளைஞர் தாக்கப்பட்டதும், பின்னர் போலீஸாரை தாக்கியதாக அவர் கைது செய்யப்பட்ட சம்பவத்திலும் நடந்தது.

போக்குவரத்து காவல்துறையினர் மட்டுமல்ல சட்டம் ஒழுங்கு போலீஸாரும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதில் பொதுமக்கள் தாக்கப்பட்டு உயிரிழப்போ, காயமோ ஏற்பட்டால் அதற்கு போலீஸார் தரப்பில் வைக்கப்படும் வாதம் நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம் ஓய்வில்லை, மன உளைச்சல் என்கின்றனர்.

இங்கு கேள்வியே உங்களுக்கு மட்டுமல்ல 120 கோடி மக்களும் ஏதோ ஒரு வகையில் மன உளைச்சலால் தான் வாழ்கின்றனர். உங்கள் மன உளைச்சலுக்கு வடிகால் அப்பாவி பொதுமக்கள் அல்லவே என்பதே வாதம். இப்படிக் கேட்டால் அடுத்து போலீஸ் தரப்பிலிருந்து இனி குற்றவாளிகளை மடக்கிப் பிடிக்காதீர்கள், குடித்துவிட்டு வந்தால் மரியாதையாக பேசி அனுப்பி வையுங்கள், குற்றவாளிகளை பிடித்தால் அவர்களுக்கு சகல மரியாதை கொடுங்கள் என்று நக்கல் கலந்த பதிவுகள் போலீஸாரிடையே வைக்கப்படுகிறது.

ஆனால் பொதுமக்கள் கேட்பதும், போலீஸாரின் அத்துமீறலைக் கண்டிப்பதும் அவர்கள் குற்றவாளிகளிடம் கடுமை காட்டுகிறார்கள் என்பதற்காகவோ, செயின் பறிப்பு குற்றவாளிகளை ஏன் மடக்கிப் பிடிக்கிறீர்கள், கை உடைக்கிறீர்கள் என்பதற்கோ அல்ல. அப்பாவிகளை ஏன் தரக்குறைவாகப் பேசுகிறீர்கள், குடும்பத்தார் பற்றி இழிவாகப் பேசுகிறீர்கள், அப்பாவி பொதுமக்களை ஏன் தாக்கி அவர்கள் மரணம், காயம்பட காரணமாக இருக்கிறீர்கள் என்ற கேள்விதான் வைக்கப்படுகிறது.

இதன் இன்னொரு அர்த்தம், அனைத்து போலீஸாரும் அப்படி நடக்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல, ஆனால் இப்படியும் நடக்கும் போலீஸார் கண்டிக்கப்பட அல்லது தண்டிக்கப்பட வேண்டும், காவல்துறை பணி சமுதாயப் பணியாகவும் மாற வேண்டும் என்பதே இதன் அர்த்தம். சாதாரண பொதுமக்களும் குற்றவாளிகளும் ஒன்றல்ல. அவர்களுக்கு தன்மானம் உண்டு, குடும்பத்தார் முன்னிலையில் அவமானப்படுத்தப்படும்போது கோபப்பட யாருக்கும் நியாயம் உண்டு.

அந்தக் கோபம் தரமணி மணிகண்டன் தீக்குளிப்பில் போய் முடிந்தது, போரூரில் தாக்கப்பட்ட இளைஞர்கள் மவுனமாக வீட்டுக்குப் போவதில் போய் முடிந்தது. பிரகாஷ் என்ற இளைஞர் போலீஸாருடன் மோதுவதில் போய் முடிந்தது. போலீஸார் பணியில் அதிகம் விமர்சிக்கப்படுவது போக்குவரத்து போலீஸார் பணியே.

காரணம் போக்குவரத்து போலீஸார் சாதாரண பொதுமக்களிடம் அதிகம் மோதக்கூடிய சூழ்நிலை உள்ள பணி. போக்குவரத்து சட்டங்கள், விதிமீறல்களில் சாதாரண பொதுமக்கள் அதிகம் ஈடுபடுகின்றனர். அது குற்றச் சம்பவம் அல்ல. குற்றம் வேறு விதிமீறல் வேறு. அதற்காகத்தான் குற்றவியல் சட்டம், போக்குவரத்து சட்டம் என்று இரண்டாகப் பிரித்து வைத்துள்ளனர்.

விதிமீறல்கள் மட்டுமே போக்குவரத்து போலீஸாரிடம் வருகிறது. ஆனால் போக்குவரத்து போலீஸார் பொதுமக்களை குற்றவாளிகள் போல் நடத்துவதே இதற்கு காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். விதிமீறல்கள் குற்றங்கள் அல்ல, வாகன ஓட்டிகள் குற்றவாளிகளாக நடத்தப்பட வேண்டியவர்கள் அல்ல என்பதே உண்மை.

ஊடகங்களும், சமூக வலைதளங்களும் இதுபோன்ற போலீஸாரின் அத்துமீறலை மட்டுமே பெரிதுபடுத்துகிறது. அவர்களின் நல்ல செயல்களை படம் பிடித்துக் காட்டுவதில்லை என்று சிலர் பொத்தம் பொதுவாக குற்றம் சாட்டுகின்றனர். உண்மையில் கொஞ்சம் நெருக்கமாக அணுகிப் பார்த்தால் அது வழக்கமான, பொய்யான குற்றச்சாட்டு என்பது தெரிந்துவிடும். இதே ஊடகங்களும், சமூக வலைதளங்களும் தான் போலீஸாரின் மனிதநேய செயல்களைத் தயக்கமில்லாமல் பாராட்டுகிறது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் மனநிலை சரியில்லாதவருக்கு லுங்கி கொடுத்த காவலர், இளைஞர்களை அடித்ததற்காக அவர்கள் வீட்டுக்கே சென்று வருத்தம் தெரிவித்த அதிகாரிகள், பொதுத்தேர்வு எழுத வேண்டிய சூழலில் தேர்வறைக்கு வராத மாணவனை 10 நிமிடங்களுக்குள் தன் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து எதிர்காலத்தை மாற்றியமைத்த காவலர் பல நல்ல விஷயங்களை மனம் உவந்து பாராட்டி செய்தியாக, வீடியோவாக வெளியிடுவதே இதே ஊடகங்களும், சமூக வலைதளங்களும்தான்.

உயர் அதிகாரிகளுக்கு எடுபிடியாக இருக்கும் காவலர்களின் நிலையை தோலுரித்துக் காட்டுவதும், ஆர்டர்லி முறை குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதும் ஊடகங்கள்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

இதை எல்லாம் வசதியாக மறந்துவிட்டு குறை சொல்லும்போது மட்டும் இந்த மீடியாவே இப்படித்தான் என கரித்துகொட்டுவது ஆரோக்கியமானதாக இருக்காது.


சென்னையில் தி.நகர் சம்பவத்தில் இளைஞர் பிரகாஷ் சட்டையைப் பிடித்தார், வாக்கி டாக்கியை பிடுங்கினார் என்றெல்லாம் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. போலீஸார் அதற்கு முன்னர் தரக்குறைவாக பேசியதும், பிரகாஷின் தாயாரைத் தள்ளிவிட்டதும் மோதல் ஆரம்பிக்க காரணமாக அமைந்தது என்பது வசதியாக மறக்கடிக்கப்படுகிறது.

காவல்துறை- பொதுமக்கள் இணக்கம் எங்கிருக்க வேண்டும். குற்றவாளிகள், குற்றமிழைப்பவர்கள் தவிர மற்ற அனைத்து பகுதி மக்களிடமும், அனைத்து இடங்களிலும் போலீஸார் பொதுமக்கள் இணக்கம் கட்டாயம் இருக்க வேண்டும். இதைத்தான் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

போலீஸாருக்கு பல்வேறு பணிச்சுமை உள்ளது, ஆனால் அதை அப்பாவிகள் எங்கள் மீது காட்டாதீர்கள் கொஞ்சம் மரியாதை கொடுங்கள் சார் என்பதே பொதுமக்களின் வாகன ஓட்டிகளின் கோரிக்கை.

இதுகுறித்து போக்குவரத்து காவல் இணை ஆணையர் சுதாகரிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் அளித்த பதில்:

போக்குவரத்து காவலர்கள் இளைஞரை தாக்கியதாக விவகாரத்தில் உங்கள் கருத்து?

சட்டம் ஒழுங்கு சார்பில் விசாரணை நடத்தி வருகிறார்கள். நீங்கள் அவர்களிடமே கேளுங்களேன்.

ஒரு சின்ன கிளாரிபிகேஷன். பொதுவாகவே மோட்டார் வைக்கிள் சட்டம் அபராதம் எச்சரிக்கையோடு போக வேண்டிய ஒன்று, போக்குவரத்து போலீஸார் இந்த விவகாரத்தில் அந்த இளைஞர் அத்துமீறியிருந்தால் கூட சட்டம் ஒழுங்கு போலீஸாரை அழைத்து ஒப்படைத்திருக்கலாம் அல்லவா? அதையும் தாண்டி இது போன்ற சம்பவங்கள் நடக்கிறதே?

தெரியவில்லை, இது விசாரணையில் உள்ளது. அது தனிப் பிரிவு, அவர்கள் போக்குவரத்து அதிகாரிகள் அல்ல.ஆகையால் விசாரணை முடிந்ததும் வரும் அறிக்கையை வைத்து நடவடிக்கை வரும்.

முறையற்ற வாக்குவாதங்களால் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக தகவல் வருகிறது. அதற்கு ஏதாவது ஆலோசனை உண்டா?

இல்லை, விசாரணை அறிக்கை வரட்டும். அதன் பின்னர் முடிவு செய்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கருணாநிதியிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது.

தி.நகரில் போக்குவரத்து காவலர்கள் தாக்கிய சம்பவத்தில் போலீஸார் நடந்துகொண்ட விதம் குறித்து உங்கள் கருத்து என்ன?

நாம் பல முறை கூறியிருக்கிறோம். போக்குவரத்து விதிமீறல் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக யார் வேண்டுமானாலும் செய்யக்கூடியது. இதில் பழிவாங்கும் விதமாக போகக் கூடாது. நம்பரை வாங்கிக்கொண்டு அனுப்பி விட்டு கோர்ட்டில் கேஸ் போட்டு சம்மனை வாங்கி அபராதத்தை வாங்கிக் கட்டலாம், அல்லது சம்பந்தப்பட்ட நபரையே அபராதம் கட்டச் சொல்லலாம்.

இது குறித்து நாங்கள் பல வகுப்புகள் எடுத்திருக்கிறோம், பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு வகுப்புகள் எடுக்கிறோம். அதில் வராத அதிகாரிகள் யாராவது அப்படி நடந்திருக்கலாம். அல்லது வந்தும் புரியாத நபர்களின் நடத்தையாகவே இதைப் பார்க்கிறேன்.

இது போன்று போலீஸுக்கு ஒருவர் கீழ்படிந்து நடக்கவில்லை என்றால் போக்குவரத்து போலீஸார் அந்த இடத்தில் என்ன செய்திருக்க வேண்டும்?

அது போன்று ஒருவர் கீழ்ப்படியாமல் தகராறு செய்கிறார் என்றால் அதுபற்றி கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்து சட்டம் ஒழுங்கு போலீஸாரை வரவழைத்து இவர் தகராறு செய்கிறார், பணி செய்ய விடாமல் தடுக்கிறார் என்று புகாரளித்துப் பிடித்துக் கொடுக்கலாம்

இது போன்று சந்தர்ப்பங்களில் இளைஞரை, அவரது உறவினர்களைத் தாக்குவது சரியா?

தாக்குவதற்கு அவர்களுக்கு அதிகாரமே கிடையாது, அடிப்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாட்டு தொழுவமாக மாறிய பெரம்பலூர் தாலுகா ஆபீஸ்

Added : ஏப் 03, 2018 23:18

பெரம்பலுார்: பெரம்பலுார் தாலுகா அலுவலகம், மாட்டுத் தொழுவமாக மாறியுள்ளதால், பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.பெரம்பலுார் நகரில், பெரம்பலுார் தாலுகாவுக்கான ஒருங்கிணைந்த வளாகம் உள்ளது. இந்த வளாகத்துக்குள், ஆர்.டி.ஓ., அலுவலகம், தாசில்தார் அலுவலகம், ஆதார் கார்டு சேவை மையம் என பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன.சான்றிதழ் மற்றும் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்கவும், நிதியுதவி பெறவும் என, தினமும், 1,000த்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை மிகவும் பரபரப்பாகவும், ஆட்கள் நடமாட்டத்துடன் இந்த வளாகம் இருப்பது வழக்கம்.சில நாட்களாக, பெரம்பலுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி, மூன்று மாடுகள் மற்றும் கன்றுகளை, பெரம்பலுார் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள மரங்களில் கட்டிப் போட்டு, தாலுகா அலுவலகத்தை மாட்டு தொழுவமாக மாற்றி உள்ளார். மாலை, 5:00 மணிக்கு இங்கு கட்டப்படும் மாடுகள், மறுநாள் மதியம், 12:00 மணி வரை, மேய்ச்சலுக்கு செல்லும் வரை, இங்கேயே உள்ளன.சில நேரங்களில், மாடுகளை கட்டாமலே, விவசாயி விட்டு செல்கிறார். இதனால், இஷ்டத்துக்கு உலா வரும் மாடுகள், அங்கு வரும் பொதுமக்களை முட்டுவது போல பயமுறுத்துகின்றன. இது குறித்து, பெரம்பலுார், தாசில்தார் பாலகிருஷ்ணனிடம் கேட்ட போது, ''அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை; தவறான தகவல்,'' என்றார்.
இளையான்குடியில் மர்ம காய்ச்சல் : 16 கிராமத்தில் சுகாதாரக்குழு முகாம்

Added : ஏப் 03, 2018 23:15

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், 16 கிராமங்களில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.இளையான்குடி அருகே கல்லடிதிடலில், 100 பேருக்கு சிக்குன்குனியா, டைபாய்டு, வைரஸ் காய்ச்சல் பரவியது. தொடர்ந்து, இரண்டு வாரம் மருத்துவ குழுவினர் முகாமிட்டு சிகிச்சை அளித்தனர். தற்போது கல்லடிதிடல் அருகே விசவனுார் கிராமத்திலும் காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை, ஏழு பேர் பாதிக்கப்பட்டனர்.அவர்களுக்கு சுகாதாரத்துறையினர் சிகிச்சை அளிக்கின்றனர். அதே பகுதியில், 16 வயது இளைஞருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். காய்ச்சலால் பாதித்கப் பட்ட மக்களை கலெக்டர் லதா தலைமையில் நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.சுகாதார துணை இயக்குனர் கூறியதாவது:கல்லடி திடலில் காய்ச்சல் பாதிப்பு முற்றிலும் நின்றுவிட்டது. குடிநீரை சேமித்து வைத்து, சுகாதாரமற்ற முறையில் பயன்படுத்துவதால் காய்ச்சல் பரவியது. மேலும் கல்லடி திடலை சுற்றிலும், 16 கிராமங்களில் காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
பெட்ரோல், 'பங்க்' நாளை செயல்படும்

Added : ஏப் 03, 2018 22:32

சென்னை: எதிர்க்கட்சிகள், நாளை, 'பந்த்' அறிவித்துள்ள நிலையில், 'பெட்ரோல், 'பங்க்'குகள், வழக்கம் போல செயல்படும்' என, அதன் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில், பல தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நாளை பந்த் அறிவித்துள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு பெட்ரோலிய பொருட்கள் விற்பனையாளர் சங்க தலைவர், முரளி அறிக்கை: மத்திய அரசை வலியுறுத்தி, பல்வேறு அரசியல் இயக்கங்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள், பல தேதிகளில் உண்ணாவிரதம், மறியல், கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. விவசாயிகள் நலன் காத்திட, வேறுபாடுகளை மறந்து, அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து அறிவிக்கும் போராட்டங்களில் மட்டுமே, பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் பங்கேற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கு 10ம் இடம்  தேசிய தரவரிசை பட்டியலில் சாதனை

dinamalar 04.04.2018

பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கான, அகில இந்திய தரவரிசை பட்டியலில், அண்ணா பல்கலை, 10வது இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளது.




மத்திய அரசு சார்பில், 2016 முதல், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியல், டில்லியில் நேற்று வெளியிடப்பட்டது. அதில், தேசிய அளவில் முதலிடத்தை, பெங்களூரில் உள்ள, இந்திய தேசிய அறிவியல் கல்வி நிறுவனம் பிடித்துள்ளது. சென்னை, ஐ.ஐ.டி., இரண்டாம் இடத்தையும், மும்பை, ஐ.ஐ.டி., மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றான, அரசு பல்கலையான, அண்ணா பல்கலை, தேசிய அளவில், 10ம் இடம் பெற்று, சாதித்துள்ளது. கோவை அம்ரிதா பல்கலை, 15; பாரதியார் பல்கலை, 20; வி.ஐ.டி., - 24; சென்னை பல்கலை, 29 மற்றும் திருச்சி, என்.ஐ.டி., நிறுவனம், 31ம் இடத்தையும் பிடித்துள்ளன.

பாரத் கல்வி நிறுவனம், 35; தமிழ்நாடு வேளாண் பல்கலை, 40; காரைக்குடி அழகப்பா பல்கலை, 43; சாஸ்த்ரா கல்வி நிறுவனம், 54; ராமச்சந்திரா மருத்துவ கல்லுாரி, 62ம் இடங்களை பெற்றுள்ளன. எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனம், 63; கோவை, பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி, 64; சத்யபாமா கல்வி நிறுவனம், 68; சவிதா கல்வி நிறுவனம், 70ம் இடங்களை பெற்றுள்ளன.

சென்னை, எஸ்.எஸ்.என்., இன்ஜினியரிங் கல்லுாரி, 73; கோவை, பி.எஸ்.ஜி., மருத்துவ கல்வி நிறுவனம், 75; மதுரை காமராஜர் பல்கலை, 81; தமிழ்நாடு கால்நடை பல்கலை, 92ம் இடங்களை பெற்றுள்ளன. திருச்சி பாரதிதாசன் பல்கலை, 94; மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லுாரி, 95 மற்றும் புதுச்சேரி, மகாத்மா காந்தி மருத்துவ கல்லுாரி, 97ம் இடத்தை பெற்று, முதல், 100 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.


பல்கலை அளவிலும் மகுடம்:

பல்கலை அளவிலான தேசிய தரவரிசை பட்டியலிலும், பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனமே, முதலிடம் பெற்றுள்ளது. டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலை, 2; வாரணாசி பனாரஸ் பல்கலை, 3; சென்னை அண்ணா பல்கலை, 4ம் இடம் பிடித்துள்ளன. கோவை அம்ரிதா பல்கலை, 8; பாரதியார் பல்கலை, 13; வி.ஐ.டி., 16; சென்னை பல்கலை, 18; பாரத் கல்வி நிறுவனம், 21; சாஸ்த்ரா, 36, ராமச்சந்திரா மருத்துவ கல்லுாரி, 40ம் இடங்களை பெற்றுள்ளன.

சென்னை, ஐ.ஐ.டி., அசத்தல்:

* மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய தரவரிசை பட்டியல், நேற்று வெளியானது. இதில், இன்ஜி., கல்லுாரிகள் பிரிவில், சென்னை ஐ.ஐ.டி., மூன்றாவது ஆண்டாக, தொடர்ந்து முதல் இடம் பெற்று சாதித்துள்ளது. அண்ணா பல்கலை, 8; திருச்சி, என்.ஐ.டி., 11; வி.ஐ.டி., 16; பிட்ஸ் பிலானி பல்கலை, 17ம் இடங்களை பெற்றுள்ளன.


* கல்லுாரிகள் பிரிவில், திருச்சி பிஷப் ஹீபர், 3; சென்னை மாநில கல்லுாரி, 5; லயோலா கல்லுாரி, 6; சென்னை, எம்.சி.சி. கல்லுாரி, 10; கோவை, பி.எஸ்.ஜி., 11; சென்னை கிறிஸ்தவ மகளிர் கல்லுாரி, 22ம் இடங்களை பெற்றன

* மேலாண்மை, எம்.பி.ஏ., கல்லுாரிகள் பட்டியலில், திருச்சி, என்.ஐ.டி., 15; சென்னை கிரேட் லேக்ஸ் மேலாண் கல்வி நிறுவனம், 16; அண்ணா பல்கலை, 28; வி.ஐ.டி., 29; லயோலா கல்லுாரி, 32ம் இடங்களை பிடித்துள்ளன

* மருந்தியல் பிரிவில், நீலகிரி, ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரி, 15; அண்ணாமலை பல்கலை, 20, ராமச்சந்திரா கல்வி நிறுவனம், 21ம் இடங்களை பெற்றுள்ளன

* மருத்துவ கல்வி பிரிவில், வேலுார் கிறிஸ்தவ கல்லுாரி, தேசிய அளவில், 3ம் இடம் பெற்றுள்ளது. புதுச்சேரி, ஜிப்மர், 6ம் இடம்; சென்னை ராமச்சந்திரா கல்லுாரி, 10; கோவை, பி.எஸ்.ஜி., 21; எஸ்.ஆர்.எம்., 22ம் இடத்தை பெற்றுள்ளன.

* கட்டடவியல் கல்லுாரிகள் பிரிவில், அண்ணா பல்கலை, 6ம் இடம் பெற்றுள்ளது. வேளாண் பிரிவில், தமிழக கல்வி நிறுவனங்கள் எதுவும் இடம் பெறவில்லை.

- நமது நிருபர் -

NEWS TODAY 14.02.2026