Thursday, May 10, 2018

இனிப்பு தேசம் 4: ஆவாரை அதிகமாய் ஒரு தேநீர்!

Published : 05 May 2018 10:54 IST
 
மருத்துவர் கு.சிவராமன்



ஜன்னலோரப் பேருந்துப் பயணங்களில், வழியெல்லாம் வறண்ட மானாவரி நிலங்களில் பூத்து நிற்கும் பொன் மஞ்சள் நிற ஆவாரம் பூக்களை அநேகம் பேர் கவனித்திருக்க மாட்டார்கள்.

ஆனால், அந்தப் பூக்கள் எல்லாம் இன்று, ஆங்காங்கே இருந்து புறப்பட்டு பஸ் ஏறி, ரயில் ஏறி, சென்னைப் பூங்காக்களின் வாசல்களில் காலை நடைப்பயிற்சி செய்து வெளிவரும் ‘இனிப்பு’ மிகுந்தவர்களை, வரவேற்கும் ‘பொக்கே’க்களாய் அல்லது ரெடிமேட் ஆவாரை மூலிகைத் தேனீராய் அலங்கரிக்க ஆரம்பித்துவிட்டன. ஆம்! ஆவாரம்பூ இன்று நீரிழிவு வியாதிக்காரர்கள் அதிகம் தேடும் மூலிகை. ஆவாரையில் அப்படி என்ன இருக்கிறது?

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் நீர்

அன்று ஆவாரம்பூ அநேகமாகக் கடும் வெயிலில், உழவுப் பணிசெய்யும் விவசாயி, உச்சி வெயில் தன் மண்டையைப் பிளக்காமல் இருக்க, சூட்டைத் தணிக்கும் மூலிகையாக தன் தலைப்பாகையில் இதை வைத்துக் கட்டியிருந்தார். சித்த மருத்துவமோ பித்தச் சூட்டை மட்டுமல்லாது மேகச் சூட்டையும், அதையொட்டி உடலினுள் ஓடி வரும் பிரமேகமாகிய நீரிழிவையும் கட்டுப்படுத்தும் என ஆவாரையை அடையாளம் காட்டியது. சூட்டால் கண்கள் மீது ஏற்படும் பாதிப்பையும் தடுக்கும் என ஆவணப்படுத்தியிருக்கிறது.

ஆவாரைச் செடியில் பூ மட்டுமல்லாது இலை, தண்டு, வேர் அத்தனையையும் சேர்த்துக் கஷாயமிட்டுச் சாப்பிடச் சொன்னது ‘ஆத்மரட்சாமிர்தம்’ எனும் ஆயுர்வேத நூல். சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கான மிகப் பிரபலமான கஷாயம் ஆவாரைக் குடிநீர். ‘தேரன் குடிநீர்’ எனும் தொகுப்பில் இந்த ஆவாரைக் குடிநீரும் ஓர் அங்கம்.

ஏழு மூலிகைகள்

எப்படி நிலவேம்புக் குடிநீர் என்பது நிலவேம்பு மட்டுமல்லாது, கூடுதலாக 7 மூலிகைகளைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் பானமோ, அதேபோல, சித்த மருத்துவம் அடையாளம் காட்டிய ‘ஆவாரைக் குடிநீரும்’ ஆவாரையுடன் கூடுதலாக ஏழு மூலிகைகளைக் கொண்டது. இது குறித்துப் பரிபாஷையாய்ப் பாடப்பட்ட பாடலை விரித்துப் பெற்ற விளக்கத்தில் கிடைத்த நவீன விஞ்ஞானப் புரிதல், இன்னமும் வியக்க வைக்கிறது. அந்த அருமையான பாடல் இதுதான்:

‘ஆவாரை கொன்றை நாவல் அலைகடல் முத்தங் கோஷ்டம் மேவிய மருதத்தோலும் மிளிர்ந்திட ரொக்கக் கொண்டு, பூவிரி குழலினாளே! காவிரி நீரும் வற்றும்; கடல் நீரும் வற்றும் தானே’

- எனும் அந்தப் பாடலின் கடைசி வரியை மேலோட்டமாகப் படித்தால் தலைசுற்றும். ‘அதான் ஏற்கெனவே காவிரி வற்றித்தானே இருக்கு? கன்னடத்துச் சித்தராமய்யா சொல்றது பத்தாதா? புதுசா இந்த தேரன் சித்தர் என்ன சொல்ல வர்றார்?’ எனக் குழப்பும்.

சித்தர் பரிபாஷையாய்ச் சொன்ன சூட்சுமம் இதுதான். காவிரி நீர் இனிப்பாய் இருக்கும். கடல் நீர் உவர்ப்பாய் இருக்கும். இனிப்புச் சிறுநீரைத் தரும் (Glycosuria) நீரிழிவு நோய்க்கும், அதனால் நாளடைவில் ஏற்படும் சிறுநீரகச் செயல்பாட்டுக் குறைவால், புரதம் கலந்த உப்புச் சிறுநீர் (proteinuria) வரும் சிறுநீரக நோய்க்கும் என இரண்டுக்குமே ஏற்றது இந்த ஆவாரைக் குடிநீர் என்பதுதான் அதன் பொருள்.

ஆவாரை ‘ஆஹா’ ஆய்வு

ஆவாரைக் குடிநீரில் இன்று பல மருத்துவ ஆய்வுகள் நடைபெற்று, சித்தர் சொன்னதை உறுதிப்படுத்தியுள்ளன. புத்தாயிரம் ஆண்டிலேயே, சென்னைப் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று ஆவாரைக் குடிநீர் எப்படிப் பயன்படுகிறது என ஆராய்ந்து அறிவித்தது.

தொடர்ச்சியான ஆய்வுகள் எல்லாம் அதன் ‘ஆல்ஃபா அம்லேஸ் இன்ஹிபிஷன்’ (alpha amylase inhibition), ‘ஆல்ஃபா கிளைக்கோசிடேஸ் இன்ஹிபிஷன்’ (alpha Glycosidase inhibition) எனும் இரு செயல்திறன்கள் மூலம் ரத்தத்தில் சர்க்கரை ஏறாமல், தங்காமல் இருக்க உதவுவதை உறுதிப்படுத்தின.

கூடவே கணினி மூலமாக ஆவாரையின் அத்தனை தாவரக்கூறுகளை ஆராய்ந்து அறிந்ததில், ஆவாரையின் மருத்துவக் கூறுகள் போய், ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் நொதிக்கற்றையில் கூடுவதை ‘டாக்கிங்’ (Docking) மூலம் உறுதிப்படுத்தியுள்ளன.

நீரிழிவு நோயில் வரும் அதிக நாவறட்சி, மெலிவு, உடற்சோர்வு - இத்தனைக்கும், ஆவாரைக் குடிநீர் பயன்படுவதை ஆரம்பகட்ட ‘ரிவர்ஸ் பார்மகாலஜி’ (reverse pharmacology) மற்றும் ‘கிளினிக்கல் ரிசர்ச்’ (clinical research) மூலம் உறுதிசெய்துள்ளனர் இன்றைய ஆய்வாளர்கள்.

கடலழிஞ்சிக்குக் காப்புரிமை

இந்த ஆய்வுப் பயணம் இன்னமும் பல மைல் தூரம் பயணிக்க வேண்டியிருந்தாலும், பல நூறு ஆண்டுகள் பழக்கத்தில், மரபு மருத்துவத்தில் பெரும் பயன் தரக் கூடியதான ஆவாரைக் குடிநீரை, இனி நீரிழிவு நோய் கண்டவர்கள் தினமும் மூலிகைத் தேநீராய்ச் அருந்துவது சிறப்பு.

இந்தக் குடிநீரைத் தயாரிக்கும்போது கடலழிஞ்சில் (salacia reticulata) எனும் மூலிகையும் சேர்க்கப்படுகிறது. நீரிழிவு நோய்க்கு அது பயன்படும் விதத்தில் ஒரு காப்புரிமையை அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக்கழகம் பெற்றுள்ளது என்பது கூடுதல் செய்தி.

நீங்கள் எந்த மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொண்டாலும் சரி, கூடவே ஆவாரைக் குடிநீரைச் சிறப்பு பானமாக அருந்தினால், உடலில் இனிப்பு குறையும். உள்ளத்தில் இனிப்பு குதூகலிக்கும்.

இன்சுலின் ஒரு ஹார்மோன்

சென்ற வாரம் இந்தப் பகுதியில் வெளியான ‘இனிது இனிது இன்சுலின் இனிது’ கட்டுரையில், ‘இன்சுலின் சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் மருந்தல்ல. கொஞ்சம் கட்டுப்பாட்டில் வைக்கும் ஒரு என்சைம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதைப் படித்த பலருக்கும் ‘இன்சுலின் என்பது என்சைமா அல்லது ஹார்மோனா?’ என்று சந்தேகம் எழுந்திருக்கிறது.

இன்சுலின் என்பது ஹார்மோன்தான். இது கணையத்தில் உள்ள பீட்டா செல்களில் சுரக்கிறது. இது குடல் செரிமானத்தில் கிடைக்கும் குளுக்கோஸ் எனும் உணவுப்பொருள், செல்களுக்குள் சென்று பயன்படுவதைக் கட்டுப்படுத்துகிறது. ஹார்மோன் அல்லது இயக்குநீர் என்பது நாளமில்லா சுரப்பிகள் என அழைக்கப்படும் சிறப்புச் சுரப்பிகளால் சுரக்கப்படும் ஓர் உட்சுரப்பி நீர். இது உடலில் ஓர் இடத்தில் சுரந்து, ரத்தத்தில் கலந்து, குறிப்பிட்ட உறுப்புக்குச் சென்று அந்த உறுப்பின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் ஒரு சிறப்பு நீர். புரதம், ஸ்டீராய்டு என ஒவ்வொரு ஹார்மோனும் வெவ்வேறு வேதிப்பொருட்களால் உருவாகின்றன.

என்சைம் அல்லது நொதியம் என்பது புரதப்பொருளால் ஆனது. உயிரினங்களின் உடலில் நிகழும் வேதிவினைகளை விரைவாகச் செய்யத் தூண்டும் ஒரு வினையூக்கி இது. தான் எவ்வித மாற்றமும் அடையாமல், வேதிவினைகளை மட்டும் ஊக்கப்படுத்தும் ஒரு கிரியா ஊக்கி. உற்பத்தியாகும் இடத்திலேயே செயல்படக்கூடியது இது.

(தொடரும்)
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com


13ம் தேதி வரை இடியுடன் கன மழை தொடரும்;
பருவமழைக்கு நிகராக கொட்டுது கோடை மழை 


dinamalar 10.05.2018

'தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், வரும், 13ம் தேதி வரை, கனமழை கொட்டும்; வட மாவட்டங்களில், நாளை முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.



தமிழகத்தில், கோடையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 10 நாட்களாக பல்வேறு இடங்களில், கோடை மழை பெய்து வருகிறது. மதுரை, திருச்சி, கரூர், பெரம்பலுார், அரியலுார், சேலம், நாமக்கல், ஈரோடு, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், கடும் வெயில் நிலவுகிறது.

திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், 10 நாட்களுக்கு மேலாக, ஏதாவது ஒரு இடத்தில், கன மழை பெய்து வருகிறது.

இரு தினங்களுக்கு முன், ஒரே நாளில், சிவகங்கையில், அதிகபட்சமாக, 13 செ.மீ., மழை பெய்தது. திருச்சி, வால்பாறை, தென்காசி, அம்பை, தேனி, விருதுநகர், மதுரை உள்பட பல இடங்களில், கோடை மழை கொட்டியது. இதில், திருச்சியின் சில பகுதிகளில், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகளுக்கும் வெள்ளம் புகுந்தது. மேலும், கேரளா, கர்நாடகாவிலும் பல இடங்களில் மழை பெய்கிறது.

இடியுடன் கன மழை :

'கர்நாடகாவின் வட மாவட்டங்கள் முதல், கேரளா மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் வரை, மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் பல மாவட்டங்களில், கனமழை தொடரும். இன்று முதல், 13ம் தேதி வரை, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், மிதமானது முதல், இடியுடன் கனமழை பெய்யும்' என, வானிலை மையம் அறிவித்துள்ளது.

'நாளை முதல், வட கடலோர மாவட்டங்களான, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில், அதிகபட்சம், 38 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாகும்.


'திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, கரூர், திருச்சி மற்றும் பெரம்பலுார் ஆகிய மாவட்டங்களில், 42 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும்' என, வானிலை மையம் கணித்துள்ளது.

திருத்தணியில் உக்கிரம்:

நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக, திருத்தணியில், 40 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. சென்னை விமானநிலையம், 38; கரூர் பரமத்தி, திருச்சி, 37; சென்னை, கடலுார், பாளையங்கோட்டை, சேலம், 36; காரைக்கால், மதுரை, நாகை, புதுச்சேரி, 35; பாம்பன், பரங்கிப்பேட்டை, 34; கோவை, தர்மபுரி, கன்னியாகுமரி, 33; துாத்துக்குடி, 32; குன்னுார், 24; கொடைக்கானல், 20 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது.

- நமது நிருபர் -
மகனுக்கு திருமணம் : லாலுவுக்கு 5 நாள் பரோல்

Added : மே 09, 2018 23:50

பாட்னா: மகன் திருமணத்தில் பங்கேற்க, பீஹார் மாநில முன்னாள் முதல்வர், லாலு பிரசாத் யாதவுக்கு, ஐந்து நாட்கள், 'பரோல்' வழங்கப்பட்டுள்ளது.பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான, லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன ஊழல் வழக்கில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த வாரம், எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட லாலுவுக்கு, தற்போது, ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.லாலுவின் மூத்த மகனும், முன்னாள் அமைச்சருமான, தேஜ் பிரதாப் யாதவ், எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவருக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், எம்.எல்.ஏ., சந்திரிகா ராயின் மகள், ஐஸ்வர்யாவுக்கும், வரும், 12ல், பாட்னாவில் திருமணம் நடைபெறவுள்ளது.மகன் திருமணத்தில், லாலு பிரசாத் யாதவ் பங்கேற்க பரோல் கேட்டு, சிறைத் துறை, ஐ.ஜி.,யிடம், விண்ணப்பிக்கப்பட்டது.

அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த, சிறைத் துறை அதிகாரிகள், லாலுவுக்கு ஐந்து நாட்கள் பரோல் வழங்கியுள்ளனர்.
கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று...ஓய்கிறது! : நாளை மறுநாள் 223 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு : மோடி, ராகுல், சோனியாவால் சூடுபறந்தது களம் : போலி வாக்காளர் அட்டைகளால் கட்சிகள் பீதி

Added : மே 09, 2018 22:57

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில், ஒரு மாதத்துக்கும் மேலாக அனல் பறந்த தேர்தல் பிரசாரம், இன்று மாலை நிறைவடைகிறது. இறுதிக்கட்ட பிரசாரத்தில், பிரதமர் மோடி, காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல், பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள், அனைத்துக் கட்சி தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். கர்நாடகவில் உள்ள, 224 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அட்டவணை, மார்ச், 27ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், தேதி அறிவிக்கும் முன்பே, அனைத்து கட்சித் தலைவர்களும், சுற்றுப் பயணத்தை துவங்கிவிட்டனர். பெங்களூரு, ஜெயநகர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் விஜயகுமார், 59, பிரசாரத்தின்போது, மயங்கி விழுந்து, மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால், இந்த தொகுதியில் மட்டும், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மற்ற, 223 தொகுதிகளிலும், மொத்தம், 2,654 வேட்பாளர்கள், தேர்தல் களத்தில் உள்ளனர். தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை நெருங்கிய வேளையில், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல், சோனியா, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உட்பட, பல தேசிய தலைவர்களும், மத்திய அமைச்சர்களும், கர்நாடகாவில் முகாமிட்டனர். பிரதமர் நரேந்திர மோடி, பங்கார்பேட்டை, சிக்கமகளூரு, பெலகாவி, பீதர் ஆகிய இடங்களில், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல், நேற்று காலை, பெங்களூரு, பசவனகுடியிலுள்ள தொட்டகணபதி கோவிலில் வழிபட்டார். காந்தி நகர், சி.வி., ராமன்நகரில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். முன்னதாக, ஒசூர் ரோட்டில், கார்மென்ட்ஸ் ஊழியர்களுடன் ராகுல் கலந்துரையாடினார். பிற்பகலில், எச்.ஏ.எல்., சதுக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், அவர் பங்கேற்றார். முதல்வர் சித்தராமையா, நேற்று முழுவதும், தான் போட்டியிடும் சாமுண்டீஸ்வரி தொகுதியில் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார். முன்னாள் பிரதமர் தேவகவுடா, கனகபுரா, ராம்நகர், சென்னபட்டணா; முன்னாள் முதல்வர் குமாரசாமி, குலேகுட்டா, பாதாமி உட்பட, பல இடங்களில், பிரசாரம் செய்தனர். பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, துமகூரு, பெங்களூரின் சிவாஜிநகர், சர்வக்ஞ நகர், மகாதேவபுரா ஆகிய தொகுதிகளில், பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தன் தொகுதியான ஷிகாரிபுராவில், நேற்று, நாள் முழுவதும் பிரசாரம் செய்தார். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தெர்தல், குப்பி சட்டசபை தொகுதியிலும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹிரேகெரூர், ராணிபென்னுார், ஒசபேட்டை, அத்திபள்ளி உள்ளிட்ட இடங்களிலும் பிரசாரம் செய்தனர். இதுதவிர, சிறிய கட்சிகள் உட்பட அந்தந்த தொகுதி வேட்பாளர்களும், வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர். ஓட்டுப்பதிவு நடப்பதற்கு, 48 மணி நேரத்துக்கு முன்னதாக பகிரங்க பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது. எனவே, கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம், இன்று மாலை, 6:00 மணியுடன் முடிவடைகிறது. மேலும், வெளியூர்வாசிகள் தொகுதியை விட்டு வெளியேறும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல், கர்நாடகத்தில் முகாமிட்டுள்ள மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள், இன்றுடன் பிரசாரத்தை முடிக்கின்றனர். நாளை முதல், அந்தந்த தொகுதி வேட்பாளர்கள், வீடு வீடாக சென்று, ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். தேர்தல் கமிஷனும் ஓட்டுப்பதிவுக்கு தேவையான இறுதிக்கட்ட பணிகளை மேற்கொண்டுள்ளது. கடைசி இரண்டு நாட்களில் வாக்காளர்களுக்கு, முறைகேடான பணம் வழங்கப்படும் என, தேர்தல் அதிகாரிகள் கருதுகின்றனர். இதனால், மாநில எல்லைகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் என முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்காலிக சோதனைச் சாவடிகளில் இரவு பகலாக வாகன சோதனை நடைபெறுகிறது. இதற்கிடையே, பெங்களூரு, ஜாலஹள்ளி திராட்சை தோட்டம் அருகே, ஒரு லட்சத்துக்கும் அதிகமான நபர்களை, ராஜராஜேஸ்வரி தொகுதி வாக்காளர் பட்டியலில், சட்டவிரோதமாக சேர்க்க நடந்த முயற்சி, நேற்று முன்தினம் அம்பலத்துக்கு வந்தது. பல ஆயிரக்கணக்கான வாக்காளர் போலி அடையாள அட்டைகளும், ஒன்பதாயிரத்துக்கும் அதிகமான அசல் அட்டைகளும் கட்டுக்கட்டாக பணமும் பறிமுதல் செய்யப்பட்டது, அரசியல் கட்சிகள் மற்றும் மாநில மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலையங்கம்
‘நீட்’ தேர்வில் இவ்வளவு கெடுபிடிகள் தேவையா?


கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மருத்துவப்படிப்பு மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வை எழுதப்போன மாணவர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும் அளவில் பெரிய கெடுபிடிகள் நடந்தது நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மே 10 2018, 03:00

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மருத்துவப்படிப்பு மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வை எழுதப்போன மாணவர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தும் அளவில் பெரிய கெடுபிடிகள் நடந்தது நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டீன்ஏஜ் என்று கூறப்படும் பதின்பருவ இளம்வயது பிஞ்சு மலர்களான மாணவர்கள் தேர்வு எழுதப்போகும் முன்பு மிகுந்த அவமானத்துக்கு ஆளாகும் வகையில் பல கெடுபிடிகள் நடந்தன. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்த தேர்வுக்கு, காலை 9.30 மணிக்கு முன்பே தேர்வு அறைக்குள் வந்துவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஓரிரு நிமிடங்கள் தாமதமான மாணவர்களை கூட தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. பெல்ட் அணியக்கூடாது, கையில் மோதிரம் போடக்கூடாது, காதில் கம்மல், மூக்குத்தி, செயின், நெக்லஸ், ஜடைமாட்டி, சிலேடு, கைக்கெடிகாரம், பிரேஸ்லட், எந்தவிதமான உலோக ஆபரணங்கள் அணியக்கூடாது. தண்ணீர் பாட்டில் கொண்டுபோகக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்திருந்தார்கள். இதற்கும் மேலாக, ஷு அணியக்கூடாது. லோஹீல்ஸ் செருப்புகள்தான் அணியவேண்டும். அரை கை சட்டைகள்தான் அதுவும் வெளிர் நிறத்திலான ஆடைகள்தான் அணியவேண்டும். பெரிய பட்டன்கள் கூடாது. தலையில் பூ வைக்கக்கூடாது. சல்வார் அல்லது சுடிதார் அணிந்துதான் வரவேண்டும். மாணவர்கள் பேண்ட் அணிந்துதான் வரவேண்டும் என்று ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

எத்தனையோ தேர்வுகளில் மணமகனும், மணமகளும் திருமண கோலத்திலேயே வந்து தேர்வு எழுதிய படங்கள் எல்லாம் பத்திரிகைகளில் வந்தது. டெலிவி‌ஷன்களில் காட்டப்பட்டது. ஆனால் இந்த தேர்வுகளில் இத்தகைய விதிகள் என்ற பெயரில் கண்காணிப்பில் இருந்தவர்கள் அதிகமாக கெடுபிடியை விதித்தது மாணவர்களை சஞ்சலப்படுத்தவைத்துவிட்டது. செயின், கம்மல், கொலுசு, மோதிரம் அணிந்து வந்தவர்கள் அதை கழற்றவேண்டிய நிலை ஏற்பட்டபோது, அவர்கள் தேர்வு எழுதி முடியும்வரை அதை பாதுகாப்பாக வைக்க வசதிகூட ஒரு இடத்திலும் இல்லை. தலையில் ரப்பர் பேண்ட், கிளிப் அணியக்கூடாது என்ற நிலையில், பல மாணவிகள் தலைவிரி கோலமாக தேர்வு அறைக்குள் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. இறை நம்பிக்கை உள்ளவர்கள் கோவில்களில் பெற்றுக்கொள்ளும் சாமி கயிறுகளை கழுத்திலும், கையிலும் அணிந்து வந்தனர். அதையெல்லாம் வெட்டி அகற்ற வேண்டிய நிலையில் மிகவும் துயரம் அடைந்தனர்.

முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்கள் கத்திரிகோலால் சட்டையை வெட்டி, அரை கை சட்டையாக்கினர். காதில் டார்ச் அடித்தும் சோதனை நடந்தது. தேர்வு எழுதும் முன்பே இவ்வளவு சோதனைக்கு ஆட்பட்ட மாணவர்கள் ஒரு கலக்கத்துடன் தேர்வு எழுத சென்றனர். மகிழ்ச்சியோடு தேர்வு எழுத வேண்டியவர்கள், மனஉளைச்சலோடு சென்றனர். காப்பி அடிப்பதைத் தடுக்க, எவ்வளவோ சாதனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தேர்வு அறை வாசலிலும் மெட்டல் டிடெக்டர், கேமராக்கள் வைத்திருக்கலாம். இதுதவிர, தேர்வை கண்காணிக்க கூடுதல் ஆசிரியர்களை நியமித்திருக்கலாம். இப்படி அதிநவீன வசதிகள் இருக்க, சி.பி.எஸ்.இ. இவ்வாறு நாகரீகமற்ற கெடுபிடிகளை வைத்து மாணவர்களை அவமானப்படுத்தியது நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமுடியாது. இதுபோன்ற தேவையற்ற கெடுபிடிகள் விதிக்கப்படுவதை தமிழக அரசு எதிர்க்கவேண்டும். அடுத்த ஆண்டு கண்டிப்பாக இத்தகைய கெடுபிடிகள் இருக்கக்கூடாது.

Wednesday, May 9, 2018

நிர்மலாதேவிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு..!

செ.சல்மான்

ஆர்.எம்.முத்துராஜ்

நிர்மலா தேவிக்கு, வருகிற 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து, விருதுநகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரிப் பேராசிரியர் நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான வழியில் இழுக்க முயன்றார் என்ற வழக்கில் அவரும், அவருக்கு உதவியதாக உதவிப் பேராசிரியர் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், நிர்மலாதேவிக்கு நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிந்த நிலையில், மதுரை சிறையிலிருந்து விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார். அவருக்காக யாரும் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை. வழக்கை விசாரித்துவரும் சி.பி சி.ஐ.டி-யும் கஸ்டடி கேட்கவில்லை. அவருக்கு, வரும் 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டது. அவர், மீண்டும் மதுரை சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். இந்த முறையும் அவரை யாரிடமும் பேசிவிடாத வகையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

இதற்கிடையே, அருப்புக்கோட்டையிலுள்ள நிர்மலா தேவியின் வீட்டை உடைத்துத் திருட்டு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதைப் பற்றி அப்பகுதியில் வசிப்பவர்கள் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, காவல்துறை விசாரித்துவருகிறது. நிர்மலா தேவியின் வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்களை யாரும் திருட முயன்றுள்ளார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளதால், நிர்மலா தேவி விவகாரம் மீண்டும் பரபரப்படைந்துள்ளது.

Retd Postmaster generaal gets Rs. 1 lakh refund

NEWS TODAY 24.4 2026