Thursday, May 10, 2018

அடிச்சது 2 மணி நேரம்; ரெஸ்ட் ஒரு மணி நேரமா?’ - வடிவேலு காமெடி நிஜமான கதை
 
விகடன் 16 hrs ago

 


கலவரத்தை அடக்க ஒரு திரைப்படத்தில் ஏட்டு வடிவேலு வித்தியாசமான கெட்டப்பில் போவார். சீருடை அணியாத அவரை மற்ற போலீஸார் அடித்து துவைத்து தொங்கப் போட்டுவிடுவார்கள். அதேபோல நிஜத்திலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னையில் நேற்று கோட்டையை முற்றுகையிட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீஸார் கைது செய்தனர். சம்பவ இடத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸ் சுப்புராஜ் என்பவர் வெள்ளை உடையுடன் கண்ணாடி அணிந்து துப்பறியும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

இந்தச் சமயத்தில் பல இடங்களில் ஓடி ஒளிந்த ஆசிரியர்களையும் அரசு அலுவலர்களையும் போலீஸார் விரட்டி விரட்டி கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிக்கொண்டிருந்தனர். சுப்புராஜும் பார்ப்பதற்கு ஆசிரியர்போல காணப்பட்டதால், போலீஸார் அவரையும் வேனில் ஏறுமாறு கூறினர். அவரோ... 'சார் நான் போலீஸ் நான் போலீஸ்' என்று கத்தினார். அதை, காதில் வாங்கிக்கொள்ளாத இன்ஸ்பெக்டர் ஒருவர் சுப்புராஜுவின் கன்னத்தில் ஓங்கி அடித்து போலீஸ் வேனில் ஏற்ற முயன்றார். அடிவாங்கிய பின்னரே, தன் அடையாள அட்டையை எடுத்து சுப்புராஜ் காட்டினார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார், 'முதலிலேயே உங்க அடையாள அட்டையைக் காண்பிச்சுருக்கலாமே' என்றவர்கள் தலையைச் சொறிந்தனர். பின்னர், அடித்தற்காக சி.பி.சி.ஐ.டி உதவி ஆய்வாளரான சுப்புராஜிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு நழுவினார். 'தனக்கு நேர்ந்த கொடுமையை எங்கே போய் சொல்வது' என்று நொந்தவாறு சுப்புராஜும் இடத்தைக் காலி செய்தார்.

திருமணமான பத்தே நாளில் கணவனுக்கு நடந்த கொடூரம்- ஃபேஸ்புக் காதலனுக்காக மனைவியின் விபரீதச் செயல் 
 
விகடன் 

 

திருமணமான 10 நாளில் கணவனை ஃபேஸ்புக் காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் செட்டபடி வலச கிராமத்தைச் சேர்ந்தவர் கௌரி சங்கர். இவருக்கும் அவரின் அக்கா மகளான விஜயநகரத்தைச் சேர்ந்த சரஸ்வதிக்கும் கடந்த மாதம் 28-ம் தேதி திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் மே 7-ம் தேதி பைக்கில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தனர். அப்போது பைக்கை வழிமறித்த கும்பல், கௌரி சங்கரைக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. சரஸ்வதிக்கும் காயங்கள் ஏற்பட்டன. இதுகுறித்து தகவலறிந்ததும் போலீஸார் அங்கு வந்து சரஸ்வதியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக விஜயநகரம் எஸ்.பி பால்ராஜ் நேரில் சென்று சரஸ்வதியிடம் விசாரணை நடத்தினார். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரஸ்வதியிடம் விசாரித்தபோது கொள்ளையர்கள் தாக்கியதில் தன்னுடைய கணவர் இறந்துவிட்டதாக முதலில் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகத் தகவல்களைக் கூறினார். இதனால் சரஸ்வதி மீது எங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோதுதான் கணவரை கொலை செய்ய அவர் சதித் திட்டம் போட்டது தெரிந்தது.

பட்டப்படிப்பு முடித்த சரஸ்வதி, விசாகப்பட்டினத்தில் கடந்த 3 ஆண்டுகளாகத் தங்கியிருந்தார். அப்போது, சிவா என்பவர் ஃபேஸ்புக் மூலம் சரஸ்வதிக்கு அறிமுகமாகியுள்ளார். இவர்கள் இருவரும் காதலித்துள்ளனர். இந்தக் காதல் விவகாரம் சரஸ்வதியின் பெற்றோருக்குத் தெரியாது. இதனால், சரஸ்வதியின் படிப்புக்கு பண உதவி செய்த அவருடைய மாமா கௌரி சங்கருக்குப் பெற்றோர் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். விருப்பம் இல்லாமல் நடந்த இந்தத் திருமணத்தால் மன வேதனையடைந்துள்ளார் சரஸ்வதி. காதலன் சிவாவுடன் ஆலோசித்து கௌரி சங்கரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

நண்பர்கள் மூலம் இந்தக் கொலை நடந்துள்ளது. செலவுக்குப் பணம் கொடுக்க திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை அடகு வைத்து பணம் கொடுத்துள்ளார் சரஸ்வதி. திட்டமிட்டபடி இரவில் பைக்கில் வரும்போது கௌரி சங்கரை கூலிப்படையினர் கொலை செய்துள்ளனர். அதன் பிறகு, எதுவுமே நடக்காததுபோல நாடகமாடியுள்ளார். ஆனால், சரஸ்வதியின் நடவடிக்கைகள், அவருக்கு வந்த போன் அழைப்புகள் மூலம் அவர் எங்களிடம் சிக்கிக் கொண்டார். அவர் கொடுத்த தகவலின்படி காதலன் சிவா, அவரின் நண்பர் கோபி உட்பட 4 பேரை கைது செய்துள்ளோம். இந்த வழக்கில் சரஸ்வதியும் கைது செய்யப்பட்டுள்ளார்" என்றனர்.

சரஸ்வதி போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், "சம்பவத்தன்று நானும் என்னுடைய மாமாவும் பைக்கில் வீட்டுக்குச் சென்றோம். கருகுபள்ளி என்ற இடத்துக்கு வந்தபோது பைக்கை நிறுத்தும்படி மாமாவிடம் கூறினேன். அப்போது அங்கு மறைந்திருந்த கோபி, சிவா மற்றும் சிலர் இரும்பு ராடால் கௌரி சங்கரைத் தாக்கினர். பிறகு, என்னையும் தாக்கினர். அதன் பிறகு, அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தொடர்ந்து என்னுடைய நகைகளைக் கழற்றி, உள்ளாடைக்குள் மறைத்து வைத்தேன். பிறகு, போலீஸாரிடம் நகைக்காக கொலை நடந்ததுபோல நடித்தேன். ஆனால், போலீஸாரிடம் வசமாக மாட்டிக்கொண்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்


  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு 116 பேர் விண்ணப்பம்
 
தினகரன் 

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு 116 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள துணை வேந்தர் மணியனின் பதவிக் காலம் வரும் 27ம் தேதியுடன் முடிவடையுள்ள நிலையில் துணை வேந்தர் பதவிக்கு 116 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
  `என் மகளை இழந்திருக்கிறேன்; கடைசிவரை போராடுவேன்!’ - விஷ்ணுபிரியாவின் தந்தை உருக்கம்
 
விகடன்

 

"திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான வழக்கை கைவிட்டுவிட்டதாக சி.பி.ஐ அறிவித்துள்ள நிலையில் 'என் மகளுக்கு நீதி கிடைக்கும்வரை போராடுவேன்' என்று விஷ்ணுபிரியாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான விஷ்ணுபிரியாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை விளக்கும் இறுதி நம்பிக்கையாக இருந்த சி.பி.ஐ, அந்த வழக்கைக் கைவிடுவதாக அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி, சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவரான கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள கிழக்குத் தொட்டிப்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த இளைஞரான கோகுல்ராஜ் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்தார் என்றும், அதனால்தான் அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் கூறப்பட்டது. மேலும், அதன் பின்னணியில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து, தமிழகமே கொந்தளித்தது. இந்தத் தகவல் வெளியான உடனே தலைமறைவான யுவராஜ் வாட்ஸ் அப் வழியாக ஆடியோ அனுப்பி, போலீஸை அதிரவைத்தார். சாதிய மோதலாகவும் போலீஸுக்கான சவாலாகவும் கோகுல்ராஜ் வழக்கு உருவெடுத்த சமயம், 2015 செப்டம்பர் 18-ம் தேதி கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை அதிகாரி விஷ்ணுபிரியா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். நாடே அதிர்ந்தது. அது தற்கொலையா, கொலையா என எழுந்த சந்தேகம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது.

விஷ்ணுபிரியாவின் மரணத்துக்கு அப்போது நாமக்கல் மாவட்ட எஸ்.பி-யாக இருந்த செந்தில்குமார்தான் காரணம் என்று அவரின் குடும்பத்தினர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினர். விஷ்ணுபிரியாவின் நெருங்கிய தோழியான டி.எஸ்.பி மகேஸ்வரியும் எஸ்.பி செந்தில்குமார் மீதுதான் குற்றம்சாட்டினார். 'கோகுல்ராஜ் கொலை வழக்கில் சம்பந்தமே இல்லாதவர்கள்மீது குண்டாஸ் போடச்சொல்லி எஸ்.பி செந்தில்குமார் கொடுத்த டார்ச்சர்தான், விஷ்ணுபிரியாவைக் கொன்றது. இதை எங்கு வேண்டுமானாலும் சொல்வேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன என்று போலீஸ் அதிகாரியான மகேஸ்வரி கண்ணீரோடு சொல்ல ஒட்டுமொத்த காவல்துறையும் ஆடிப்போனது.

அந்தப் பரபரப்பை அடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-யிடம் ஒப்படைக்கப்பட்டது. "குற்றம் சாட்டப்படும் எஸ்.பி-யை எதுவும் விசாரிக்காமல் விஷ்ணுபிரியாவுக்கு காதல் பிரச்னை. அதனால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்லி யார் யாரையோ அழைத்து விசாரணை நடத்தியது சி.பி.சி.ஐ.டி போலீஸ். இதனால் விஷ்ணுபிரியாவின் குடும்பம் அதிருப்தியடைந்தது. அவரின் தந்தை ரவி, சி.பி.ஐ விசாரணை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்றார். நீதிமன்ற உத்தரவையடுத்து வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ விசாரிப்பதால் உண்மை வெளிவரும் என்று எல்லோரும் நம்பி இருந்த சூழலில்தான், " டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை. எனவே வழக்கைக் முடித்துக்கொள்வதாகக் கோவை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளது சி.பி.ஐ.

இதுதொடர்பாகத் தங்கள் கருத்தை தெரிவிப்பதற்காகக் கோவை நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி. அதன்படி இன்று அவர் கோவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கின் விசாரணையை வருகிற 24-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மலர் மன்னன் உத்தரவிட்டார். அதையடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, "சி.பி.ஐ தாக்கல் செய்துள்ள அறிக்கை, இன்னும் எங்கள் கைக்கு வரவில்லை. அதைப் படித்த பிறகுதான். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிக்க முடியும். அந்த அறிக்கையைக் கேட்டு மனு செய்துள்ளோம். நான் என் மகளை இழந்திருக்கிறேன். ஒரு தந்தையாக அவளுக்காக நான் கடைசிவரை போராடுவேன்’’ என்றார் உணர்ச்சிப் பெருக்கோடு.
திருச்சியில் வெளுத்து வாங்கிய மழை -வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது!
 
விகடன்
 



இந்நிலையில் சென்னை வானிலை மையம் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்திருந்தது.

அதன்படி நேற்று இரவு திருச்சி பகுதிகளில் வீசிய வெப்பச்சலன காற்றுக் காரணமாக திருச்சி மாவட்டத்தில் துவாக்குடி, பெல், மணப்பாறை, துவரங்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேலும், திருச்சி மாநகரில் கண்டோன்மென்ட், விமான நிலையம், ஸ்ரீரங்கம், பாலக்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

இந்நிலையில் இன்று மதியம் 4 மணியில் இருந்து திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் திடீரென மேகமூட்டமாகக் காணப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் இருள் சூழ்ந்த நிலையில் மழை கொட்டத் துவங்கியது சுமார் 1.30 மணி நேரம் வானம் கொட்டித் தீர்த்தது. வறட்சி நிலவிய பகுதிகளில் மழையைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழையில் திருச்சி மாநகரம் மட்டுமல்லாமல், லால்குடி, சமயபுரம், டால்மியாபுரம், லால்குடி, மணச்சநல்லூர், ரஞ்சிதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 50 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இன்று திருச்சியில் சுமார் 7.5 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது.
நலம்தரும் நான்கெழுத்து 17: உடலே மந்திரம்... இணையம் தந்திரம்!

Published : 13 Jan 2018 09:40 IST

டாக்டர் ஜி. ராமானுஜம்



‘பெரும்பாலான நேரம் நாம் பயப்படுவதைவிட மிகக் குறைவாகவே பாதிப்படைந்திருப்போம். நிஜத்தைவிடக் கற்பனையே மனிதனை அதிகம் வதைக்கிறது’

- லூயி செனெகா, ரோமானியத் தத்துவ ஞானி

உடல்நலனைப் பற்றி அக்கறையே இல்லாமல் இருப்பது ஒரு துருவம் என்றால் அளவுக்கு அதிகமாக உடலைப் பற்றிக் கவலைப்படுவதும் ஒரு நோய்தான். இல்லாத நோய்களெல்லாம் நமக்கு இருக்கின்றனவோ எனக் கவலைப்படுவதும் ஒரு நோயே. இதை ‘ஹைப்போகோண்டிரியாசிஸ்’ என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.

சிலர், நாளிதழ்களில் தலைப்புச் செய்திகளைக்கூடப் பார்க்காமல் மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை முதலில் வரிவிடாமல் படிப்பார்கள். நல்ல விஷயம்தான். ஆனால், அந்தக் கட்டுரைகளில் இருக்கும் நோய்கள் எல்லாம் தனக்கும் இருப்பதாகப் பயப்படுவார்கள். ‘இடது கையில் வலியா? இதய நோயாக இருக்கலாம்!’ எனப் படித்தவுடன் எங்கேயாவது இடித்துக்கொண்டு இடதுகை வலித்தாலும்கூட மாரடைப்புதான் வந்திருக்கிறது எனப் பதைபதைப்பார்கள். அடிக்கடி நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் எனச் சொல்லி தெரு முனையிலேயே ஆட்டோக்களோடு ஒரு ஆம்புலன்ஸையும் நிரந்தரமாக நிற்க வைத்துவிடுவார்கள்.

இணையம், டாக்டர் அல்ல..!

பதற்றப்படும்போது நமது உடலில் இதயத் துடிப்பு அதிகரிக்கும். கை நடுங்கும். மூச்சு முட்டும். இவற்றையெல்லாம் கவனிக்க ஆரம்பித்துவிட்டால், அவை இன்னும் பல மடங்கு அதிகமாகும்.

அதிலும் இணைய வசதிகள் அதிகரித்துள்ள இந்தக் காலத்தில் இணையத்தில் மருத்துவம் தொடர்பான தகவல்களை மிக எளிதில் பெற முடிகிறது. மருத்துவத் தகவல்கள் பரவலாக அனைவரையும் சென்று சேர்ந்தால்தான் நோய்களைப் பற்றிய விழிப்புணர்வும் சிகிச்சை முறைகளையும் பக்க விளைவுகளையும் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். ஒரு காலத்தில் மருத்துவர்கள் மட்டுமே அறியக்கூடிய தகவல்கள் பலவற்றை, இப்போது ஸ்மார்ட்ஃபோன் உள்ள யார் வேண்டுமானாலும் அறிய முடியும். இது விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்ற வகையில் வரவேற்கத்தக்கதே.

மருத்துவர்கள்கூட நகைச்சுவையாகச் சொல்வதுண்டு ‘எல்லா நோயாளிகளும் முதலில் டாக்டர் கூகுளிடம் காட்டிவிட்டுப் பின் இரண்டாவது ஆலோசனை கேட்கத்தான் மருத்துவர்களிடம் வருகிறார்கள்’ என. ஏனென்றால், ‘டாக்டர் கூகுள்’ நம்மைக் காக்க வைப்பதில்லை. அதைவிட மிக முக்கியம் நம்மிடம் ஃபீஸ் வாங்குவதில்லை.

இருப்பதைக் கொண்டு திருப்தி

சிலருக்கு இதுவே தொந்தரவு கொடுப்பதாக அமைந்துவிடுகிறது. இணையதளங்களில் தரமான மருத்துவப் பக்கங்கள் உள்ளன. ஆனால், பல தளங்கள் ‘அவசியம் பகிர்ந்துகொள்ளுங்கள்’, ‘மானமுள்ள தமிழனாக இருந்தால் ஷேர் பண்ணுங்கள்’ என நமக்கு வாட்ஸ் அப்பில் வருவது போன்ற தகவல்களைத் தரும் தளங்களாகவே இருக்கின்றன. விளைவு? மருத்துவப் புத்தகங்களில் மட்டுமே இருக்கக்கூடிய அபூர்வமான நோய்களெல்லாம் தமக்கு இருப்பதாகப் பலரும் கற்பனை செய்துகொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த வகை இணைய நோயர்களுக்கு ‘சைபர்கோண்டிரியாக்’ என்று பெயர்.

இன்னும் சிலருக்கு வேறு வகையான தொந்தரவு இருக்கும். தங்கள் உடலில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உணர்வார்கள். மூக்கு வளைந்திருக்கிறது, முகம் கோணலாக இருக்கிறது என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டு பிளாஸ்டிக் சர்ஜன்களிடம் சென்று தங்கள் உடல் உறுப்பைத் திருத்தி அமைக்குமாறு சொல்வார்கள். அதற்கு உலகப் புகழ்பெற்ற உதாரணம்... மைக்கேல் ஜாக்சன்! ‘அனாரக்ஸியா’ என்ற பாதிப்புக்கு உள்ளாகும் சிலர் ஒல்லியாக இருந்தும் உடல் எடை அதிகமாக இருக்கிறது என சைஸ் ஜீரோவை நோக்கிக் கடும் தவமிருந்து விரதமிருப்பார்கள். இப்படிப் பல உதாரணங்களை அடுக்கலாம்.

குட்டையான கால்கள் உள்ள ஒருவரிடம் நண்பர் ஒருவர் கிண்டலாகக் கேட்டாராம் “ஒரு மனிதனின் கால்கள் சராசரியாக எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்?” என. அதற்கு அவர் நிதானமாகப் பதிலளித்தாராம் “தரையைத் தொடுமளவுக்கு நீளமாக இருந்தால்போதும்” என. இதுபோல் நமக்குக் கிடைத்துள்ள உடலமைப்பைத் திருப்தியுடன் ஏற்காததன் விளைவே, இதுபோன்ற மனச்சிக்கல்கள்.

உடலைக் கவனிக்காமல் அலட்சியப்படுத்துவதற்கும் அளவுக்கு மீறிக் கவனித்துப் பதற்றப்படுவதற்கும் இடையேயான சமநிலையே நலம்தரும் நான்கெழுத்து.

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com

பதின் பருவம் புதிர் பருவமா? 8 - இதுதான் காதல் என்பதா?

Published : 07 Nov 2015 14:15 IST

டாக்டர் ஆ. காட்சன்
 




‘நான் எனது குழந்தைகளை வெளியில் படிக்க அனுப்பும்போது பாதுகாப்பாக உறவு வைத்துக்கொள் என்றே சொல்லி அனுப்புவேன்’ என்று சில வருடங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் கூறினார். அந்த நேரத்தில் அவர் கூறியது எனக்குச் சற்று நெருடலாகவே இருந்தது. ஆனால், இப்போது செக்ஸ் சார்ந்து ஏற்பட்டுவரும் மாற்றங்கள், அவர் கூறியதைவிட நெருடலாக இருக்கும் அளவுக்குப் போய்விட்டன.

மேற்கத்தியக் கலாச்சாரத்தால் உலகெங்கும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்த மாற்றங்களில் நம்மில் பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தக்கூடிய ஒன்று: வளர் இளம்பருவத்தில் கர்ப்பமாதல்!

மேற்கத்திய நாடுகளில் இரு பாலினத்தவரும் 16 அல்லது 17 வயதில் முதன்முறையாகப் பாலியல் அனுபவத்தைப் பெறுகிறார்கள். அங்கு எளிதில் உணர்ச்சிவசப்படும் குணம் கொண்டவர்கள், இளம் வயதிலேயே தங்களுடைய முதல் உடலுறவு அனுபவத்தைப் பெறுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் அது போன்ற விரிவான புள்ளிவிவரங்கள் இல்லாவிட்டாலும், பல விஷயங்களில் மேற்கத்தியக் கலாச்சாரத்தைப் பின்பற்றும் நமது இளைஞர்களுக்கு இந்த அனுபவம் முற்றிலும் புதிது அல்ல.

டீன்ஏஜ் கர்ப்பப் பாதிப்புகள்

இந்தப் பின்னணியில் கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்தாமல் உடலுறவு கொள்ளும்போது, வளர் இளம்பருவத்திலேயே கர்ப்பமடையும் நிலைக்குச் சில பெண்கள் தள்ளப்படுகின்றனர். ஆணுறை உள்ளிட்ட பாதுகாப்பான நடைமுறைகளைப் பின்பற்றாமல் உடலுறவு கொள்வதால், பாலியல் நோய்களுக்கும் ஆளாகின்றனர்.

இதன் காரணமாக சட்டத்துக்குப் புறம்பான கருக்கலைப்புகளும், ஆதரவற்று விடப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் பெருகிவருவது வருந்தத்தக்க உண்மை. தொடர்ச்சியாக உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் வளர்இளம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். சிலர் அவமானத்தால் தற்கொலைகூடச் செய்துகொள்கின்றனர்.

இங்கிலாந்தில் நடந்த ஒரு கருத்துக் கணிப்பின்படி, தங்களுடைய ஆண் நண்பர் விரும்பியதால்தான் காதல் விளையாட்டுகளுக்கும் உடலுறவுக்கும் ஒப்புக்கொண்டதாக நான்கில் மூன்று பங்கு வளர்இளம் பெண்கள் தெரிவித்துள்ளனர். இதில் யாருக்கு முன்புத்தி, பின்புத்தி என்ற வீண் வாதம் தேவையில்லை. முடிவில் அதிகப் பாதிப்புக்குள்ளாவது என்னவோ பெண்கள்தான். எனவே, இதனால் ஏற்படும் உடல், மனம் மற்றும் சமூகரீதியான பின்விளைவுகளைப் பற்றி பெற்றோர்களும், கல்வி மூலமாக ஆசிரியர்களும் எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது.

நிழல் உண்மைகள்

காதல், பாலியல் குறித்த சினிமா காட்சிகள் சமீபகாலமாகக் கூசவைக்கும் அளவுக்கு மாறிவிட்டன. இளம்வயதினர் பாலியல்ரீதியாகக் கெட்டுப்போவதைக் குறித்துக் கருத்து சொல்கிறோம் என்று சொல்லியே, பல படங்களில் பாலியல் உணர்வைத் தூண்டும் காட்சிகளை அதிகமாக்குகின்றனர்.

குடிக்கும் காட்சிகளில் ‘குடி உடல் நலத்துக்குக் கேடு’ என்ற வார்த்தைகளை ஓட விடுவதால் எப்படி மாற்றங்கள் நிகழ்வதில்லையோ, அதுபோலத்தான் இந்த வகை சினிமாக்களும். ஏற்கெனவே, Identity crisis என்றழைக்கப்படும் சுயஅடையாளம் பற்றிய குழப்பத்தில் இருக்கும் வளர்இளம் பருவத்தினர், இளம் வயது காதல் காட்சிகளால் கவர்ந்து இழுக்கப்பட்டு, தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.

வெட்கமும் நெளிவும்

‘என் மகன் டி.வி.யில் காதல் காட்சிகள் வரும்போது மிகவும் வெட்கப்படுகிறான், ஒருமாதிரியாக நெளிகிறான், சிரிக்கிறான்' என்று ஒருமுறை கூறினார் மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவனின் அம்மா. அம்மா உன் மீதும், நீ அம்மா மீதும் வைத்திருப்பது, தாத்தா - பாட்டி உன்னை நேசிப்பதும்கூடக் காதல் - பாசம்தான் என விளக்கம் சொல்லிப் புரிய வைக்கப் பெரிதும் கஷ்டப்பட்டேன்.

இந்த சினிமா காட்சிகள் சிறுவர்களையே இந்த அளவுக்குப் பாதிக்கின்றன என்றால், வளர்இளம் பருவத்தினரைப் பாதிக்க வாய்ப்பில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? சினிமாவில் வருவதுதான் உண்மையான காதல் என்று நிழலுக்கும் நிஜத்துக்கும் வித்தியாசத்தை முழுமையாக உணர முடியாத நிலையில் இருக்கும் விடலைப் பருவத்தினருக்குப் பெற்றோர்தான் தெளிவான ஆலோசனைகளை வழங்க வேண்டும். ஏனென்றால், வளர்இளம் பருவத்தினரின் காதலும் பாலுணர்வும் சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும்.

பிரச்சினையாகும் காதல்

வளர்இளம் பெண்களின் மனநலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த ஒரு பெண் மனநல மருத்துவர் சொன்ன சேதி பெரும் அதிர்ச்சி அளித்தது. பெரும்பாலான பெண்கள் சினிமாக்களின் மூலமாகவே காதலைப் பற்றி தெரிந்துகொள்வதாகவும், நிஜ வாழ்க்கையிலிருந்து அதைப் பிரித்தறியத் தெரியாத பக்குவத்தில் அவர்கள் இருப்பதாகவும் கூறினார்.

பெரும்பாலான விடலைக் காதல்கள் காதல் விளையாட்டுகளிலும், சாத்தியமிருந்தால் உடலுறவில் முடிவதாகவும் தெரிவித்தார். ஆண் நண்பர்களிடமிருந்து உடல்ரீதியான தொடுதல்களைத் தவிர்க்கும் பெண்கள் மட்டுமே, இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்கின்றனர்.

காதலுக்குக் கடிவாளம்

விடலைக் காதல்கள் தொலைநோக்குப் பார்வையுடன் அமைவதில்லை. மாறாக அந்தக் கணத்தில் தோன்றும் உணர்ச்சிகள், இனக்கவர்ச்சியின் அடிப்படையிலேயே அமைகின்றன. வளர்இளம் பருவத்தில் காதல் உணர்வு வருவதைத் தடுக்க முடியாதுதான். ஆனால், அதை முறைப்படுத்த வேண்டியது அவசியம்.

பெற்றோருடன் அதிக நேரம் செலவழித்தல், ஆண் - பெண் நட்பை ஆரோக்கியமான முறையில் அணுகுதல், எல்லைகளை வரைமுறைப்படுத்துதல், எல்லைகள் மீறப்படும்போது கவனமாக விலகிக்கொள்ளுதல், படிப்பை முதன்மையாகக் கருதுதல் என்பது போன்ற அறிவுறுத்தல்கள் இந்த வயதினருக்கு அவ்வப்போதுத் தேவை.

வாழ்க்கையையும் வாழ்க்கைத் துணையையும் தனியாகத் தீர்மானித்துக் கொள்ளக்கூடிய வயதும் காலமும் இது கிடையாது. இந்த விடலை காதல்கள் பெற்றோருக்குத் தெரியவரும்போது உடனே வானத்துக்கும் பூமிக்கும் குதித்து, வீண் ஆர்ப்பாட்டம் செய்வதைவிட அந்தப் பருவத்தில் உள்ளவர்களின் உணர்வைப் புரிந்துகொண்டு தெளிவான ஆலோசனைகள் வழங்கும் பக்குவத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால், இந்த வயதில் எங்கு அதிகக் கரிசனை கிடைக்கிறதோ, அந்தப் பக்கம்தான் மனசு சாயும்.

(அடுத்த முறை: அவசியம் கற்க வேண்டிய பாடம்)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

NEWS TODAY 24.4 2026