Monday, May 14, 2018

நிகழ்காலத்தை நிந்திப்பது நியாயமல்ல



Thu 12/25/2014


இப்போதெல்லாம் 40 வயதுக்காரர்களே சலித்துப் போய்ப் பழைய கதையை ஆரம்பித்துவிடுகிறார்கள். 60 வயதைத் தாண்டியவர்கள்தான் முன்பு ‘‘அந்தக் காலத்துல ...’’என்று ஆரம்பிப்பார்கள்.

கடந்த சொர்க்கம்

“முன்னெல்லாம் வேலைன்னா ஒரு மரியாதை. கம்பெனின்னா ஒரு விசுவாசம் இருக்கும். இப்பெல்லாம் எங்கே சார்?”

“எல்லாம் மொபைல பிடிச்சிட்டு உக்காந்திடுறாங்க. இந்த டெக்னாலஜி வந்து எல்லாத்தையும் கெடுத்துடுச்சு!”

இதுபோலப் பணியிடத்தில் நிறைய குரல்கள் கேட்கும். கடந்த காலம் சொர்க்கம். நிகழ்காலம் நரகம். நல்லவை எல்லாம் போய்விட்டன. இவைதான் சாராம்சம்.

லெட்டரில் காதல்

ஒரு தொழிற்சாலையின் முதுநிலை மேலாளருடன் பேசிக்கொண்டிருந்தேன். புதிதாய்ச் சேர்ந்தவர்கள் நிலைப்பதில்லை என்று புலம்பிக்கொண்டிருந்தார். “எவ்வளவு கொடுத்தாலும் திருப்தி அடைய மாட்டார்கள்!” என்று முடித்தார்.

பிறகு, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் சில இளைஞர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். “எது செஞ்சாலும் பழைய கதையையே பேசிக்கொண்டிருந்தால் சீக்கிரம் வெறுப்பு வருது!” என்றார்கள்.

ஒரு காதல் கடிதத்தை இன்லேண்டு லெட்டரில் எழுதி அனுப்பி அடுத்த வாரம் வரை பதிலுக்குக் காத்திருப்பது அந்தக் கால மனிதர்களுக்குச் சுகம்தான். ஆனால் இன்று, அந்த அந்த வினாடியிலேயே உடனடியாக இமெயில், செல்போனில் இளைஞர்கள் காதல் அரட்டை அடித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு இன்லாண்ட் லெட்டர் காதல் புரிவது சிரமம்.

அதே போல சைக்கிளில் குரங்குப் பெடல் அடித்து, ஓட்டியவர்களின் அனுபவத்தை இந்தக் காலத்தினருக்குப் புரிய வைப்பது சிரமம். பலவகையான வேகங்களில் பறக்கும் வாகனங்களையும் ஓட்டிப் பார்த்த சலிப்பு இன்றைய தலைமுறையினரிடம் தெரிகிறது. சட்டை கிழியும் நெரிசலில் சினிமா டிக்கெட் வாங்கிய தலைமுறை அது. சீட் நம்பர் பார்த்து ஆன்லைனில் டிக்கெட்டும், பாப்கார்னும் ஆர்டர் செய்யும் தலைமுறை இது.

காலச் சுழற்சி

பழைய வாழ்க்கையை இன்று திரும்பிப் பார்த்து ரசித்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், மீண்டும் அதை வாழச் சொன்னால் முடியுமா? கண்டிப்பாக இயலாது. தொழில்நுட்பமும் காலச் சுழற்சியும் பல வசதிகளை வயது வித்தியாசம் பார்க்காமல் மனிதர்களுக்குச் செய்து கொடுத்துவிட்டன.

ரயில் கட்டணத்துக்காக மணிக்கணக்கில் காத்து நின்ற பெரியவர்கள் இன்று ஆன்லைனில் ரயில் டிக்கெட் பதிவு செய்கிறார்கள். சாலையில் ஓடிஓடி ஆட்டோ தேடியவர்கள் இன்று போனில் டிரைவரிடம் வழி சொல்லிவிட்டு நிம்மதியாகக் காத்திருக்கிறார்கள்.

ரோபோக்களை வைத்து வைத்தியம் செய்யும் அளவு வந்துவிட்டது. மின் விசிறியைப் பார்த்துப் பார்த்து அணைத்தவர்கள் இன்று குற்ற உணர்ச்சியில்லாமல் ஏ.சி. போட்டுவிட்டு அந்தப் பக்கம் நகர்கிறார்கள். பொருளாதார சுபிட்சம் புதிய வாழ்க்கை முறைகளுக்கு இவர்களைக் கடத்திச் சென்றிருக்கிறது.

அதையெல்லாம் அனுபவித்துக்கொண்டே பழையதைப் போற்றுகிறேன் என்று நிகழ் காலத்தை நிந்திப்பது நியாயமல்ல. இன்றைய வாழ்க்கை முறை வேண்டும். ஆனால் அதற்குத் தரும் விலைகள் மனதுக்கு உகந்ததாக இல்லை. இதுதான் பிரச்சினை.

விமர்சிக்கலாமா?

ஆனால், கடந்த காலத்தைப் பார்க்காத இக்காலத்தினரிடம் அவர்கள் வாழ்க்கை முறையை விமர்சிப்பது அவர்களிடமிருந்து உங்களை அன்னியப்படுத்தும். நாம் மாறிய வேகம் நமக்கே பிடிபடாதபோது, அவர்கள் எப்படி இதை உணர முடியும்?

பெண்ணிடம் காதலைச் சொல்ல முடியாமல் படம் முழுதும் ஏழு பாட்டுப் பாடி, தாடி வளர்த்து, ஒரு தலை ராகம் திரைப்படத்தின் கதாநாயகன் செத்துப் போவான். அந்தக் கதை நிச்சயம் இந்தக் கால மனிதர்களுக்குப் புரியாது. அதே போலச் செல்வராகவன் திரைப்படங்களை வயதானவர்கள் உத்தரவாதமாக வெறுப்பதற்கு அந்த உலகம் புரியாததுதான் காரணம்.

நமது பங்கு

பணியிடத்தில் வயதானவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய இளைஞர்களின் பிழைகளை அவர்கள் வயதை வைத்துத் திட்டாதீர்கள். காரணம், அவர்களின் உலகைக் கட்டமைத்ததில் நமக்குப் பெரும் பங்கு உண்டு.

சிறை வாழ்க்கைகூட 20 வருடங்கள் கழித்துத் திரும்ப யோசித்தால் சிலிர்ப்புடன்தான் யோசிக்க வைக்கும். அது மனதின் தன்மை.

“அன்னிக்கு கையில ஒரு பைசா இல்லை. ஆனால் அவ்வளவு சந்தோஷம் இருந்தது!” என்று சொல்ல முடிவது இன்று நீங்கள் சம்பாதித்து முன்னேறியதால். 30 வருடங்களாகக் கையில் காசில்லாமல் வாழ்ந்திருந்தால் இப்படி நினைத்துச் சிலிர்க்க முடியுமா?

இன்றுள்ள தலைமுறை பெற்ற வசதிகள் நாம் அவர்களுக்குப் பெற்றுத் தந்தவை. அதன் அருமையை அவர்கள் உணரத் தேவையில்லை. காரணம், நமக்கு முன்னே சென்ற தலைமுறைகளின் உழைப்பை நாம் பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கிறோமா? இல்லையே!

ஏமாற்றங்களா?

உங்களுக்குக் கீழே உள்ள பணியாளர்கள் செய்யும் பிழைகளை வெறும் பிழைகளாக மட்டும் சுட்டிக் காட்டுங்கள். தலைமுறையை இணைத்து அவர்களைச் சாட வேண்டாம். அவர்கள் உலகைப் புரிந்துகொள்ளுங்கள். காரணம், அந்த உலகம் அமைய வாழ்க்கை முழுதும் பணியாற்றியவர்கள் நாம்.

வேகமாகச் சுழலும் வாழ்வில் பெரும் மாற்றங்களைச் சந்தித்தது உங்களது பாக்கியம். அந்த மாற்றங்களை ஏமாற்றங்களாகப் பார்க்காமல் அனுபவங்களாகப் பார்த்தால் எந்த வேலையும் இனிக்கும். எந்த வயதுப் பணியாளருடனும் மகிழ்ச்சியுடன் பணி புரிய முடியும்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
அடங்கி விடும் ஊரும், அடக்கம் ஆகும் உறவுகளும்

Thu 1/1/2015, 

சமீபகாலமாக நம்மைச் சுற்றி கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் பல சமூக விரோத செயல்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதற்கு, வேலைவாய்ப்பின்மை, வறுமை, வறட்சி என்பன போன்ற பல்வேறு விதமான காரணங்கள் கூறப்பட்டாலும், அடிப்படை காரணம் என எடுத்துக் கொண்டால், அது மனித மனம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து தன் இயல்பை இழந்து வருவது தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

முதலில் கூட்டுக்குடும்பம் என்ற நம் கலாசாரத்தை கலைத்து, தனிக்குடும்பம் என்ற போர்வையில் நடமாட துவங்கினர். ஆனால், தற்போது அதையும் தக்க வைத்துக் கொள்ளாமல், பணி நிமித்தமாக கணவன் ஓரிடத்திலும், மனைவி ஓரிடத்திலும், பிள்ளைகள் விடுதியிலும் என, தனித்தனி தீவுகளாக உருமாறி வருகின்றனர். இதனால், குடும்ப உறுப்பினர்களுக்குள்ளேயே கூட சரியான புரிதல்கள் இல்லாமல், ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசாமல், வாழ்க்கையை தொலைத்துக் கொண்டு இருக்கின்றனர். மிஞ்சியிருக்கும் குடும்ப அமைப்புகளிலும், 'டிவி' எனும் அரக்கன் புகுந்து, நம் நேரத்தை விழுங்குவது மட்டுமின்றி, மன அழுத்தத்தையும், மனச்சிதைவையும் பரிசாக அளித்துக் கொண்டிருக்கிறான். 'டிவி'யில் மெகா தொடர்கள் எனும் நாடகங்கள், நம் வீட்டு நடுக்கூடத்தில் பயங்கரவாதத்தையும், பழி வாங்கும் மனப்போக்கையும் சத்தமில்லாமல் நம் மக்களின் மனதில் அரங்கேற்றம் செய்து கொண்டிருக்கிறது.

பொதுவாக, அடுத்தவன் பிள்ளை நன்கு படித்து வேலைக்கு செல்லும் போது, நம் பிள்ளையும் அதைப்போல் படிக்க வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும் என, எண்ணுகிறோம். அடுத்தவன் வீடு வாங்கி விட்டாலோ, சொத்து சேர்த்தாலோ, அவனையே முன்னுதாரணமாகக் கொண்டு நாமும் வாழ்க்கையில் முன்னேற துடிப்போம்; இது மனித இயல்பு! ஆனால், இப்போது நாகரிகம் என்ற பெயரில் அடுத்தவனை பார்ப்பதையோ, அடுத்த வீட்டுக்காரருடன் பேசுவதையோ கூட தவிர்த்து விடுகிறோம். 'என் வீடு... என் உலகம்' என்ற ரீதியில் இயங்கிக் கொண்டிருக்கிறோம். நாம் பார்ப்பதெல்லாம் முழுக்க முழுக்க, 'டிவி' நிகழ்ச்சிகளை மட்டும் தான். அதைப் பார்த்து பார்த்து, அதில் வரும் கதாபாத்திரங்களின் தாக்கம் நம்முள்ளும் ஆக்கிரமிக்க துவங்கிவிடுகிறது. சாதாரண குடும்ப தொடர் என்ற பெயரில் வரும் நாடகங்களில் கூட அடிதடி, கொலை எனும் அரிவாள் கலாசாரம் காண்பிக்கப்படுகிறது. மாமியார் கொடுமை, மருமகளின் ஆணவம், நாத்தனாரின் சூழ்ச்சி, கணவனின் இருதார மணம், விடலைக் காதல் என, பல கற்பனைக் காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இதைப் பார்க்கும் வயதானவர்கள் சிலர், நாடகங்களில் வருவதைப் போல் தன் மருமகளும் தன்னை ஒதுக்கி விடுவாளோ, நம் பிள்ளையை நம்மிடமிருந்து பிரித்து விடுவாளோ என, வீண் கற்பனை செய்கின்றனர். குடும்ப பெண்களோ, நாத்தனாரை எப்படி பழிவாங்குவது என்று யோசிக்கும் வீபரீதமும் நடக்கிறது.

பள்ளி செல்லும் பிள்ளைகளோ, தன் வயதையும், படிப்பையும் மறந்து, காதல் என்ற மாய வலையில் சிக்கிக் கொள்ள தயாராகின்றனர். இரண்டு மனைவி கலாசாரம் பற்றி சொல்லவே வேண்டாம். இப்படி குடும்பத்து நபர்களை குறி வைத்து தொடர்கள் நகர்த்தப்படுகின்றன. இதை, டி.ஆர்.பி., ரேட்டிங்கில் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள என்று, 'டிவி' சேனல்கள் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், இதைப் பார்க்கும் நம் மக்களின் மனதில் ஏற்படும் பாதிப்புகள், நம் சமுதாயத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது என்பதை அறிவரா? அவர்கள் அறியவில்லை என்றாலும், நாம் உணர வேண்டியது அவசியம்.

தொடர்கள் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் நேரத்தில் உறவினர் கள் யாராவது வந்தால் கூட, அவர்களை கவனிக்க மனமின்றி செயல்படுகிறோம். ஏதோ ஒப்புக்கு சில வார்த்தைகள் பேசி, கடமைக்கு காபி, தண்ணீர் கொடுத்து அவர்களை வெளியேற்றுவதிலேயே குறியாய் இருக்கிறோம். தொலைபேசி அழைப்பு வந்தால், 'இந்த தொடரை மட்டும் தான் பார்ப்பேன்; இன்ட்ரஸ்டா பார்த்துக் கொண்டிருக்கிறேன். நாளைக்கு பேசுவோமா?' என கூறி, பேச்சை தவிர்க்கிறோம். வீட்டில் இருப்பவர்களுடன் கூட, யாரும், யாருடனும் முகம் கொடுத்து பேசாமல், தொடரில் மூழ்கி விடுகிறோம். இதுதான் இன்றைய நடைமுறை!

கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், மாலை வேளைகளில் குடும்ப பெண்கள் பலரும் ஒன்று கூடி, வீட்டு வாசலில் அமர்ந்து கதை பேசி பொழுது போக்குவர். அப்போது, அவர்கள் வீட்டுக் குழந்தைகள் ஒன்று சேர்ந்து தெருவில் விளையாடுவர். இதனால், குழந்தைகளுக்கும், பிற குழந்தைகளுடன் கூடி விளையாடும் பண்பு, வெற்றி, தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம், விட்டுக் கொடுக்கும் தன்மை ஆகிய பல நல்ல பண்புகள் வளர்ந்தன. பெண்களுக்கும் தம் குடும்பத்தில் உள்ள கஷ்ட, நஷ்டங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதால் மன அழுத்தம் குறையவும், பிறரது அறிவுரைகளை, ஆலோசனைகளை கேட்டு, தம் மீதுள்ள தவறுகளை திருத்திக் கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது. பெரியவர்களும் மாலை வேளைகளில் காலாற நடந்து, கோவிலுக்கு சென்று வருவர். இதன் காரணமாக தெருக்களில் மனித நடமாட்டமும், கலகலப்பும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும். ஆனால், இப்போது குழந்தை முதல், பெரியவர்கள் வரை அனைவருமே, 'டிவி'யே கதி என்று அமர்ந்து விடுவதால், தெருக்கள் வெறிச்சோடி விடுகின்றன. வாகனங்கள் விரைவது மட்டும் தெரிகிறது. ஊரும் சீக்கிரம் அடங்கி விடுகிறது; நம் உறவுகளும் கொஞ்சம் கொஞ்சமாய் விலகி, முற்றிலும் அடக்கமாகி விடுகிறது. அதனால் தான், சமுதாயத்தில் வன்முறைகள் அதிகரிக்கின்றன.

இ-மெயில்: sr.shanthi39@gmail.com

- எஸ்.ஆர். சாந்தி, சமூக ஆர்வலர்
என் பாதையில்: ரயில் மீதேறி வந்த தேவதை

Tue 1/6/2015,

சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. உச்சி வெயிலில் ஒரு பெண் கூடை நிறைய பூக்களும் கை நிறைய பைகளுமாக ரயிலில் ஏறினாள். மேடிட்ட வயிறு அவள் சூலுற்றிருந்ததைச் சொன்னது. அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தேன். ரயிலில் 15 வருடங்களாக வியாபாரம் செய்துவருவதாகச் சொன்னாள். திருமணமாகி எட்டு மாதங்கள்தான் ஆகிறது என்று அவள் வெட்கத்துடன் சொன்ன பாங்கிலேயே அது காதல் மணம் என்று புரிந்தது. தன் சிறு வயதிலிருந்தே ரயிலில் பூ, பழங்கள், காய்கறிகள் விற்றுவரும் அந்தப் பெண், ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு பொருளை விற்பதாகவும் சொன்னாள். விலை குறைவான பொருட்களை வாங்கி, குறைவான விலையில் விற்றால்தான் லாபம் கிடைக்கும் என்று சொன்ன அவளின் பேச்சில் தேர்ந்த பொருளாதார நிபுணத்துவம் வெளிப்பட்டது.

“மாதக் கடைசியில் லாபத்தை எதிர்பார்க்க முடியாது, மக்களுக்கு சம்பளம் இல்லாததால் மிச்சம் பிடிக்கத்தான் பார்ப்பார்கள். அந்த சமயத்தில் குறைவான பொருட்களையே வாங்கி விற்பேன்” என்று சொல்லி என் ஆச்சரியத்தை அதிகப்படுத்தினாள். இப்படி ரயில், ரயிலாக ஓடி ஏறி, போலீஸ்காரர்களுக்குப் பயந்து விற்பனை செய்வது கஷ்டமாக இல்லையா என்ற என் கேள்வியை அவள் புன்னகையுடன் எதிர்கொண்டாள்.

“எல்லாமே கஷ்டம்தான். என்ன செய்யறது, குடும்ப நிலமை அப்படி. என் வீட்டுக்காரரும் வேலைக்குப் போறார். ஆனா விக்கற விலைவாசிக்கு ஒருத்தர் சம்பளம் எம்மாத்திரம்? இன்னும் கொஞ்ச நாள்ல குழந்தை பிறக்கப்போவுது. அதுக்கும் சேர்த்து வைக்கணுமே. அப்போதானே எங்க குழந்தையும் உங்களை மாதிரி பெரிய ஆளா வரமுடியும்?” என்று தன் வயிற்றின் மீது விரலால் வருடியபடியே சொன்னாள். அந்த வார்த்தைகளில் இருந்த தன்னம்பிக்கையும் மலர்ச்சியும் என்னைத் திக்குமுக்காட வைத்தன. சின்னச் சின்ன சங்கடங்களுக்கே சோர்ந்துபோகிற எனக்கு, அந்தப் பெண் ரயில் மீதேறி வந்த தன்னம்பிக்கை தேவதையாகவே தெரிந்தாள்.

- சிவரஞ்சனி, சென்னை.
பிரிவோம், சந்திப்போம்!.......டாக்டர்.ஆர்.கார்த்திகேயன்

Tue 1/6/2015,

என் மகள் பள்ளிக்குக் கிளம்புகையில் நான் 
.....


தூங்கிக்கொண்டிருப்பேன். நான் வேலையை விட்டுத் திரும்புகையில் அவள் தூங்கிக்கொண்டிருப்பாள். வாரக் கடைசியில்தான் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்!” என்று கனமான வார்த்தைகள் சொல்லி விட்டு என்னை ஆழமாகப் பார்த்தார் அவர்.

“இந்த வேலையை விட முடியாது டாக்டர். அவ்வளவு கமிட்மெண்ட்ஸ் இருக்கு. எல்லாக் கடன்களையும் அடைத்து விட்டு இந்த வேலையை விடணும்னா குறைந்த பட்சம் இன்னும் 10 வருடங்கள் ஆகும். அப்போ என் மகள் படிக்கவோ வேலைக்கோ வெளியே போயிருக்கலாம். என்ன வாழ்க்கைன்னு தெரியலை சார் இது?” என்றார்.

பிரிவுகள்

இவர் பரவாயில்லை. குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடுகளில் பணி புரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை எண்ணிப் பாருங்கள். போனில் முத்தம் கொடுத்துக் கொண்டு மெயிலிலும் வாட்ஸ் அப் வீடியோவிலும் பிள்ளைகள் வளர்வதைக் கண்டு, “வரும் போது வாங்கிட்டு வர்றேன் இல்லன்னா யார் கிட்டயாவது கொடுத்து அனுப்பறேன்” என்று பொருட்களில் அன்பையும் பகிரத் துடிக்கும் துடிப்புகளை என்னவென்று சொல்ல?

வெளி நாட்டில் மட்டுமா? நம் நாட்டிலேயே பிழைக்க மாநிலம் விட்டு மாநிலம் வருபவர் கண்களில் உள்ள ஏக்கத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அடுத்த முறை பாருங்கள்.

கட்டிட வேலை செய்யும் பெண்கள், மேஜை துடைக்கும் பையன்கள், காவல் காக்கும் வயதான ஆட்கள் என எல்லாரும் தங்கள் சம்பளத்தில் கணிசமான தொகையைக் குடும்பத்துடன் பேசவே செலவழிக்கிறார்கள்.

வேலை நிர்ப்பந்தங்கள்

மாதத்திற்கு 20 நாட்கள் குடும்பத்தைப் பிரியும் மனிதர்களுக்கும் குடும்பத்துக்கும் உள்ள இடைவெளி எப்படி இருக்கும் தெரியுமா? பிள்ளை அடிபட்டதைக் கூடத் தாமதித்துத்தான் தெரிந்து கொள்ள முடியும். பள்ளியின் கூட்டங்களுக்கு போக முடியாது. என்றாவது வரும் பள்ளி விழாக்களில் பிள்ளை கலந்து கொள்வதைக் கூடப் பார்க்க முடியாது. முன்பு தந்தைகள் பட்ட அவஸ்தைகளை இப்பொழுது தாய்களும் படுகிறார்கள். அலுவலக வேலையில் இருந்துகொண்டு மகன் டியூஷனுக்குப் போனானா என்று விசாரிக்கும் அம்மாக்கள் எத்தனை பேர்?

“என் அப்பாவை எல்லாம் அவர் ரிடையர்ட் ஆனதுக்கு அப்புறம் தான் நிறைய தெரிஞ்சுக்கவே ஆரம்பிச்சேன்” என்று சொல்லும் பிள்ளைகள் நிறைய உண்டு.

முதலில் பிள்ளைகள் பெற்றோர்களைப் பிரிந்த வேதனையில் வாடுகின்றனர். பிறகு பெற்றோர்கள் பிள்ளைகளைப் பிரிந்து வாடுகின்றனர்.

வேலை நிர்ப்பந்தங்கள் பிரிவுகளை நிகழ்த்துகின்றன. இவை தவிர்க்க இயலாத நிதர்சனங்கள்.

தீபாவளிக்கும் கிறிஸ்மஸுக்கும் பொங்கலுக்கும் கூட வேலைக்குப் போகும் மக்கள் நிறைய இருக்கிறார்கள். பெற்றோர்களும் குழந்தைகளும் இல்லாத பண்டிகைகளில் என்ன விசேஷம்?

உறவின் அருமை

உள்ளூரில் தொழில் செய்து பதினெட்டு பட்டிக்குள் பெண்ணெடுத்து வாழ்ந்த கூட்டுக் குடும்பத்தில் பிரிவுகள் இந்த அளவுக்குப் பாதித்ததில்லை. படிப்புக்காகவும் வேலைக்காகவும் பயணம் செய்வது இன்றைய காலக் கட்டத்தின் இயல்பு. அதனால் இந்தப் பிரிவுகளை ஏற்றுக் கொள்ளுதல்தான் பக்குவம்.

“ஒ.கே. என்ன கருத்து சொல்றீங்க பாஸ்?” என்றால் என் விண்ணப்பம் ஒரு வரிதான். சேர்ந்து இருக்கும் அருமையை உணருங்கள்.

ஆரோக்கியத்தின் மதிப்பு நோயில் தெரியும். உறவின் அருமை பிரிவில் தான் தெரியும்.

மலிவாகக் கிடைக்கும் எதன் மதிப்பும் நமக்கு விளங்காது. நுரையீரல் செயல்படாமல் செயற்கை உறுப்பிற்கு அலையும்போதுதான் வாழ் நாள் முழுதும் சரியாய் பணி செய்த நுரையீரலின் அருமையை உணர்கிறோம்.

வந்து போகும் நண்பர்களின் அருமை யாருமில்லாமல் தனிமையில் இருப்போருக்குத் தான் தெரியும். வீட்டில் இருக்கும் போது தெரியாத மதிப்பு அதை விற்ற பிறகுதான் உணர்கிறோம்.

அது போலத்தான் சேர்ந்து வாழும் குடும்பங்களின் நிலையும். பெற்றோர்களும் குழந்தைகளும் சேர்ந்து வாழும்போது ஒருவர் மதிப்பு மற்றொருவருக்குப் புரிவதில்லை.

சதா அலுவல் எரிச்சலில் உள்ள அம்மாவாலோ அப்பாவாலோ தங்கள் குழந்தைகள் மேல் நியாயமான அன்பை வெளிக்காட்ட முடிவதில்லை. அதே போலப் பெற்றோர்களின் மதிப்பையும் பிள்ளைகள் அவர்கள் மறைந்த பிறகுதான் உணர்கிறார்கள்.

ரசனையே ஆரோக்கியம்

அதனால் கிடைத்த பொழுதைக் குடும்பத்துடன் குதூகலமாகக் கொண்டாடக் கற்றுக்கொள்ளுங்கள். அலுவல் வேலை, வீட்டுப் பிரச்சினைகள், இயந்திர வாழ்வின் அவசரங்கள் என்றும் இருக்கும். ஒரு பரிபூரண நாள் வந்த பின்தான் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று காத்திருக்காதீர்கள். நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்கும் நாள் தான் பரிபூரணமான நாள்.

வாழ்க்கைத் துணை உயிருடன் இருப்பது, உடன் இருப்பது எல்லாம் கடவுள் கொடுப்பினை. இல்லாதவரைக் கேளுங்கள். புரியும்.

நீங்கள் விரும்பும் துணை உங்களுக்குக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். நீங்கள் நினைத்ததை உங்கள் பிள்ளைகள் செய்யாமல் இருக்கலாம். நீங்கள் விரும்பிய வேலையை நீங்கள் செய்யாமல் போகலாம். ஆனால் கிடைத்ததை ஏற்று ரசிக்கத் தெரிந்தவர்தான் ஆரோக்கியமாக வாழ்கிறார்.

வாழ்க்கையின் சின்னச் சின்னத் தருணங்கள்தான் பெரிய சந்தோஷங்களைக் கொடுக்கின்றன. அதைச் சேர்ந்து கொண்டாடுங்கள்.

பிரிவுகள் உறவுகளின் உறுதியைச் சோதித்துப் பார்க்க வைப்பவை. மனிதர்களின் மதிப்பைப் புரிய வைப்பவை.

சேர்ந்து வாழும் காலத்தில் சேமித்த அன்புதான் பிரிவு காலத்தில் நிலை குலையாமல் இருக்கச் செய்யும்.

வேலை மனிதர்களைப் பயணிக்க வைக்கிறது. வாழ்க்கையைப் படிக்க வைக்கிறது. நம் வாழ்வுக்குப் பொருள் உணர்த்தும் வேலையைக் காதலிப்போம். அதன் மூலம் வாழ்வையே காதலிப்போம்.

பிரிவோம்

வேலையையும் வாழ்க்கையும் ஆற அமர விவாதித்த நாம் பிரியும் காலம் வந்துவிட்டது. நேரிலும், தொலைபேசியிலும் தொடர்புகொண்டு கருத்து சொல்லி, கேள்வி கேட்டு, அன்பு காட்டி, ஆதரவு சொன்ன அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.

பிரிவோம். சந்திப்போம்!

முதுநிலை மருத்துவம்: 117 இடங்கள் தமிழகத்துக்கு ஒப்படைப்பு

By DIN  |   Published on : 12th May 2018 02:14 AM  | 
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வில் நிரம்பாத 117 இடங்கள் தமிழக ஒதுக்கீட்டுக்காக மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ் ஆகிய முதுநிலைப் படிப்புகளுக்கும், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்குமான அகில இந்தியக் கலந்தாய்வு மார்ச் 27-இம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 
இறுதிக்கட்டக் கலந்தாய்வு மே 17-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்கள் மீண்டும் தமிழக ஒதுக்கீட்டுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 1,646 முதுநிலை இடங்கள் உள்ளன. அவற்றில் 50 சதவீத இடங்கள், அதாவது 823 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டது. கலந்தாய்வு முடிவில் 117 இடங்கள் மீண்டும் தமிழகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவாகும். கடந்த ஆண்டு 335 இடங்கள் தமிழகத்துக்கு மீண்டும் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கலந்தாய்வு தாமதம்: முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் அரசு மருத்துவர்களுக்குச் சலுகை மதிப்பெண் வழங்கும் வகையில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. இந்த வழக்குகள் காரணமாக மார்ச் மாதம் தொடங்க வேண்டிய தமிழக இடங்களுக்கான முதுநிலை கலந்தாய்வு இதுவரை தொடங்கவில்லை. 
ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய மற்றும் மாநிலங்களின் கலந்தாய்வு மே 30-ஆம் தேதிக்குள் நிறைவடைய வேண்டும்.
இந்நிலையில், அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் இடங்களை வழங்கும் நோக்கில் சலுகை மதிப்பெண் வழங்கும் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுக தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வதந்திகளை நம்பாதீர்கள்!


By ஆசிரியர்  |   Published on : 14th May 2018 02:03 AM  |
தமிழினம் எப்போது மனிதாபிமானமற்ற இனமாக மாறியது என்கிற கேள்வியை எழுப்புகிறது, கடந்த இரண்டு மாதங்களாக வட தமிழகத்தில் நடந்ததாகக் கேள்விப்படும் நிகழ்வுகள். திருடனையோ, கொலைகாரனையோ, ஏன், சமூக விரோதிகளையோகூட யாராவது அடித்தாலோ துன்புறுத்தினாலோ அதைத் தாங்கிக் கொள்ளாமல் அனுதாபம் காட்டும் சமூகமாக இருந்த நாம், இப்போது கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) பெறப்படும் தகவல்களை நம்பி, அப்பாவிகளை அடித்துக் கொல்லும் வக்கிரத்தனத்தில், வெறியின் உச்சத்துக்குச் சென்றிருக்கிறோம் என்பது வருங்காலம் குறித்த அச்சத்தையல்லவா மேலெழச் செய்கிறது.
கடந்த மாதம் வேலூரில் பிழைப்புத்தேடித் தமிழகம் வந்திருந்த 30 வயது அப்பாவி வடநாட்டு இளைஞர் ஒருவரை திருடன் என்று யாரோ சொல்ல, பொங்கியெழுந்த அந்தப் பகுதி மக்கள் கும்பலாகப்போய் அவரை அடித்து துவம்சம் செய்துவிட்டிருக்கிறார்கள். 
குற்றுயிரும் குலையுயிருமாக அந்த இளைஞர் காப்பாற்றப்பட்டது கடவுளின் கருணையால்தானே தவிர, நமது மக்களின் ஈர நெஞ்சத்தால் அல்ல.
காஞ்சிபுரம் மாவட்டம் சின்னையன் சத்திரத்தில் கடந்த ஏப்ரல் 21}ஆம் தேதி நடந்த சம்பவம் ஒன்று. இந்த நிகழ்விலும் பாதிக்கப்பட்டது பஞ்சம் பிழைக்க வடநாட்டிலிருந்து வந்த ஒருவர்தான். அவரைக் குழந்தைத் திருடன் என்று சந்தேகப்பட்ட ஒரு கும்பல், அவரை அடித்தே கொன்றிருக்கிறது. ஒருவர் மீது சந்தேகம் வந்தால் விசாரிக்கலாம்; காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று புகார் கொடுக்கலாம். கும்பலாகக் கூடி ஒருவரை அடித்துக் கொல்வதென்றால், எந்த அளவுக்குக் கண்மூடித்தனமான வெறியும், வக்கிரத்தனமும் இருந்திருக்க வேண்டும்.
அண்மையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குத் தனது உறவினர்களுடன் காரில் சென்றிருக்கிறார் 
65 வயது ருக்மிணி என்கிற பெண்மணி. அவர் தரிசிக்க விரும்பிய கோயிலுக்கு ஒருவரிடம் வழி கேட்டிருக்கிறார். அப்போது அங்கே சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. காரில் வைத்திருந்த சாக்லெட்டுகளை எடுத்து அந்தக் குழந்தைகளுக்குக் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார் அவர். இவ்வளவுதான் நடந்தது.
அடுத்த சில நிமிடங்களில் அவர் சென்று கொண்டிருந்த காரைத் துரத்திப் பிடித்து, அவரை வண்டியிலிருந்து இறக்கி அந்தக் கும்பல் தாக்கியிருக்கிறது. ருக்மிணி அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். அவருடன் வந்த உறவினர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த 9}ஆம் தேதி பழவேற்காட்டில் நடந்த சம்பவம் இவற்றையெல்லாம்விடக் கொடுமையானது. பழவேற்காடு பாலத்தில் கந்தலாடையுடனும் அழுக்கு மூட்டையுடனும் ஒரு பிச்சைக்காரர் (மனநோயாளி?) ஓரமாகப் படுத்துக் கொண்டிருந்தார். அங்கு குடிபோதையில் வந்த இருவர் அவரிடம் ஏதோ விசாரித்திருக்கிறார்கள். தமிழ் தெரியாததால் அவர் ஹிந்தியில் பதிலளித்திருக்கிறார்.
குடிபோதையில் இருந்தவர்கள் அவரைத் தமிழில் பேசு என்று வற்புறுத்தி இருக்கிறார்கள். அவர் மீண்டும் ஹிந்தியில் பதிலளிக்க, குடிபோதையில் இருந்தவர்களுக்குக் கோபம் அதிகரித்திருக்கிறது. அவரை அடித்துத் தள்ள, அவரது மூட்டையிலிருந்த சிறிய பேனாக்கத்தி கீழே விழுந்திருக்கிறது. உடனேயே அவரை வடநாட்டிலிருந்து வந்திருக்கும் குழந்தைத் திருடன் என்று முடிவு கட்டி அடிக்கத் தொடங்கினார்கள். அந்த வழியாக வருவோர் போவோரும் சேர்ந்து கொண்டு கும்பலாக அவருக்கு தர்ம அடி கொடுக்க முற்பட்டனர். இறந்துவிட்ட அவரை அந்தப் பாலத்திலேயே தூக்கில் தொங்கவிட்டிருக்கிறார்கள். அவர், கடந்த பத்து மாதமாக பழவேற்காடு கடைத்தெருவில் பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொண்டிருந்தவர் என்பது பிறகுதான் தெரிய வந்திருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம், கட்செவி அஞ்சல் மூலம் பரப்பப்படும் ஆதாரமற்ற வதந்திகள்தான் என்று தெரியவந்திருக்கிறது. வடநாட்டிலிருந்து குழந்தைகளைக் கடத்துவதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்துக்கு வந்திருப்பதாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டுமே ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயிருப்பதாகவும் பரப்பப்பட்ட ஆதாரமற்ற வதந்திகளை நம்பி, பெற்றோர் பீதியடைந்திருக்கிறார்கள்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே பனிரெண்டுக்கும் அதிகமான தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. கட்செவி அஞ்சலில் பரப்பப்படும் வதந்தி ஒருபுறம், குடிபோதையில் என்ன செய்கிறோம் என்கிற சிந்தனையே இல்லாமல் வெறிபிடித்து அலையும் கூட்டம் இன்னொருபுறம். இவற்றுக்குப் பலியாவது தமிழகத்துக்குப் பஞ்சம் பிழைக்க வந்திருக்கும் வடநாட்டு அப்பாவிகள் அல்லது நாதியற்ற பிச்சைக்காரர்கள்.
காவல்துறை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்திருக்கிறது. வதந்திகளைப் பரப்பியவர்கள் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை செய்திருக்கிறது. துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. ஆனாலும்கூட, வக்கிரத்தனமான இந்தக் கும்பல் மனோநிலை குறைவதாகத் தெரியவில்லை.
சமூக வலைதளங்கள் எந்தவிதத் தணிக்கையோ, கட்டுப்பாடோ இல்லாமல் செய்திகளைப் பரப்புவதை எப்படித் தடுப்பது என்று தெரியாமல் உலகமே திகைத்துப்போய் நிற்கிறது. இது ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்துக்குக் கும்பல் மனோபாவம் வந்திருப்பதுதான் அதைவிடக் கவலை அளிப்பதாக இருக்கிறது. வள்ளுவரையும், வள்ளலாரையும் வழிகாட்டிகளாகக் கொண்ட தமிழ்ச் சமுதாயம் வன்முறைக்கும், வக்கிரத்தனத்துக்கும், வதந்திக் கலாசாரத்துக்கும் பலியாகி விடலாகாது!
கருந்துளை எல்லாவற்றையும் இழுக்கும்... வெளியே தள்ளும் வெண்துளை தெரியுமா?
மு.பிரசன்ன வெங்கடேஷ்   vikatan 09.05.2018

அண்டத்தைப் பற்றி ஆராயத் தொடங்கினால் நம் ஆயுள் போதாது. இவ்வண்டத்தைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருப்பது ஒரு சதவிகிதத்திற்கும் கீழ்தான். அந்த அளவிற்குக் கோடிக்கணக்கான விஷயங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது பேரண்டம். கருந்துளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்றால், நல்லா தெரியுமே என்று பதில் வரும். அந்தளவுக்குச் சாமானியன் வரை கருந்துளையைக் கொண்டு சேர்த்திருக்கிறார் ஸ்டீஃபன் ஹாக்கிங். சரி, வெண்துளையை (White hole) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? "என்ன ப்ரோ புது ஐட்டமா கேக்குறீங்க" என்கிறீர்களா? கருந்துளை, வெண்துளை எல்லாம் அண்ணன் தம்பிகளைப் போலத்தான்.

தன் அருகில் இருக்கும் எந்தவொரு பொருளையும் தன்னுள்ளே ஈர்த்துக் கொள்வதைத்தான் கருந்துளை என்கிறோம். கருந்துளையினுள் ஈர்க்கப்பட்ட பொருளால் மறுபடியும் வெளியேற முடியாது, அது ஒளியாக இருந்தாலும் சரி. அந்த அளவிற்கு வலிமையானது கருந்துளையின் ஈர்ப்புவிசை. இப்போது வெண்துளை என்பது கருந்துளையின் அப்படியே நேரெதிர். வெண்துளை தன்னுள் இருக்கும் பொருளை வெளியே கக்கிக் கொண்டே இருக்கும். வெளியில் இருக்கும் எந்தவொரு பொருளாலும் வெண்துளையினுள் செல்ல முடியாது. ஏனெனில் வெண்துளையின் வெளியேற்று திசைவேகம் அதிகமாக இருக்கும். ஆனால், வெண்துளை என்பது இன்றும் ஒரு கோட்பாடாக மட்டுமே உள்ளது. அது இவ்வண்டத்தில் உள்ளது என்பதற்கான எந்தச் சாத்தியக்கூறும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.



எனினும் வெண்துளைக்கான தேடுதல் வேட்டையும் ஆய்வுகளும் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வெண்துளை இருப்பதற்கான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும். கண்டறிந்த கோட்பாட்டின் படியே வெண்துளையின் இயக்கம் வெப்ப இயக்கவியலின் (Thermodynamics) இரண்டாம் விதியினை சுக்கு நூறாக உடைக்கிறது. அதாவது வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதியின்படி எந்த ஒரு பொருளின் இயல்பாற்றலும் (Entropy) அதிகரித்த வண்ணமே இருக்கும். ஆனால், வெண்துளையின் இயக்கப்படி அதன் அருகில் இருக்கும் பொருட்களுக்கு இயல்பாற்றல் குறைய வாய்ப்பிருக்கிறது. இதை ஓர் எடுத்துக்காட்டின்படி பார்த்தால் தெளிவாகப் புரியும். ஒரு பழத்தை இரண்டு வாரங்கள் அறை வெப்பநிலையில் வைத்திருந்தால் அது கெட்டுவிடும். இதுதான் பொதுவாக இயல்பாற்றல் அதிகரிப்பால் நடக்கும். அதே பழம் மீண்டும் கெட்டுப் போனதில் இருந்து நல்ல பழமாக மாறும் சாத்தியக்கூறுகள் உண்டா? உண்டு, அது இயல்பாற்றல் குறைந்தால் நடக்கும். ஆனால், அது பூமியில் நடக்காது. எனவே வெண்துளை, இயல்பாற்றல் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கானது மட்டுமே, மொத்த அண்டத்திற்குமானது அல்ல என உரைக்கிறது.

வெண்துளை எப்படி உருவாகின்றது?

வெண்துளை என்பது கருந்துளையின் அடுத்த கட்டமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஒரு நட்சத்திரம் தன் அந்திம காலத்தில் சூப்பர் நோவா என்னும் பெருவெடிப்பிற்கு உள்ளாகும் போது கருந்துளைகள் தோன்றுகின்றன. கருந்துளைக்கென்று தனியாக நிகழ்வு பரப்பெல்லை உண்டு. அவை தன் அருகில் இருக்கும் பொருட்ளை ஈர்ப்பதோடு நில்லாமல் அதீத ஈர்ப்புவிசை காரணமாக தன் பரப்பையும் சேர்த்து ஈர்க்கும். இதன் காரணமாக தன் வாழ்நாளில் கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கிக்கொண்டே வரும். ஒரு கட்டத்தில் இதற்கு மேல் சுருங்கமுடியாது என்ற நிலை வரும்போது அது ஒரு வெண்துளையின் பிறப்பிற்கு வழிவகுக்கிறது. அதுவரை தான் ஈர்த்த அத்தனை பொருட்களையும் வெண்துளையான பின் வெளியேற்றுகிறது. அப்படியே அது மாறினாலும் பல அடிப்படை இயற்பியல் கோட்பாடுகளின் மடியில் கைவைக்கியது இதன் இயக்கம். எப்படி இருந்தாலும் வெண்துளையை பற்றி கூறப்படும் அனைத்தும் அனுமானக் கோட்பாடுகளே.

கருந்துளை மற்றும் வெண்துளை இடையேயான பந்தம்

கருந்துளையையும் வெண்துளையையும் தனித்தனியாகப் பார்க்காமல் சேர்த்துப் பார்த்தால் சுவாரஸ்யமான கோட்பாடுகள் கிடைக்கும். கருந்துளை அனைத்தையும் ஈர்த்துக்கொள்கிறது எனவே அதை நுழைவு வாயில் என்று வைத்துக் கொள்வோம், வெண்துளை அதனுள் இருக்கின்ற அனைத்தையும் வெளியேற்றுகிறது எனவே இதை வெளியேற்று வாயில் என வைத்துக் கொள்வோம். இதனை வைத்து கருந்துளையில் நுழைந்து வெண்துளையின் வழி வெளிவருவதன் மூலம் காலத்தையோ, தூரத்தையோ கடக்க முடிந்தால்? பால்வீதியில் உள்ள கருந்துளையில் நுழைந்து பல பில்லியன் ஒளியாண்டுகள் தொலையில் அமைந்திருக்கும் வெண்துளையின் மூலம் வெளிவருவதால் தூரத்தையோ அல்லது இதே பால்வீதியில் பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியிருக்கும் வெண்துளையில் இருந்து வெளிவருவதன் மூலம் நேரத்தையோ கடக்க முடிந்தால்? இந்த இடத்தில் நாம் கடப்பதற்கான ஆற்றலையும், பாதையையும் வார்ம் ஃஹோல் நமக்குத் தந்தால்? இவை அனைத்தும் அனுமானங்களே. வார்ம் ஃகோல் என்பது வெளியும்-நேரமும் கலந்த அமைப்பாக இருந்து வெவ்வேறு இரண்டு அண்டத்திலோ அல்லது நேரத்திலோ இருக்கும் கருந்துளை மற்றும் வெண்துளைக்கு பாலமாகச் செயல்படும். எனவே தான் அது பரவெளி 'அனுமான' இணைப்பு (Warm hole) என்று அழைக்கப்படுகிறது. இது மட்டும் சாத்தியமானால் நாம் மெட்ரோ ரயிலில் செல்வது போல் காலப்பயணம் செய்ய முடியும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக வெண்துளையும், வார்ம் ஃகோலும் அனுமானமாக, கோட்பாடாக மட்டுமே உள்ளன. இன்னும் அவை இருப்பதற்கான எந்தச் சாத்தியக்கூறும் தென்படவில்லை.

வெண்துளையும் பிங்பேங் தியரியும்:

எல்லா இடத்திலும் வெண்துளை என்பது வெறும் கோட்பாடு மட்டுமே. நிஜத்தில் இருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என்றே சொல்லப்பட்டு வந்தது. அவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க இதோ பிக்பேங் தியரி (இதுவும் அனுமானம் தான்). வெண்துளை என்பது கருந்துளை மேலும் சுருங்கமுடியாத நிலைக்குச் சென்றதும் வெடித்து உருவாவது என்று கூறப்பட்டது அல்லவா? பிக்பேங் தியரி என்பது என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு புள்ளியில் இருந்து வெடித்துச் சிதறி இன்னும் விரிவடைந்து கொண்டிருக்கிறது இப்பேரண்டம். ஒருவேளை இப்பேரண்டமே ஒரு கருந்துளையால் ஈர்க்கப்பட்டு அது ஒரு கட்டத்திற்கு மேல் சுருங்க முடியாமல் வெண்துளையாக மாறி தன்னுள் ஈர்க்கப்பட்ட அனைத்தையும் வெளியேற்றியதையே நாம் பிக்பேங் என்று கூறுகிறோமோ? இது அனுமானமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இருக்கிறதல்லவா?



இன்றுவரை வெண்துளை எங்காவது கண்டறியப்பட்டுள்ளதா?

2006 ஜூன் 14, நாசாவின் 'ஸ்விப்ட்' (Swift) செயற்கைக்கோள் ஒரு மிக வலிமையான சக்திவாய்ந்த காமா கதிர் வெடிப்பைப் பதிவு செய்கிறது. ஆனால் அது வந்த திசை அதிகமாக நட்சத்திரங்கள் இல்லாத ஒன்று. இது இதற்குமுன் கண்டறியப்பட்ட அல்லது நிகழ்ந்த எந்தவொரு நிகழ்வுடனும் ஒத்துப்போகவில்லை. இந்த நிகழ்வை 'ஜி.ஆர்.பி 060614' (GRB 060614) என்றழைக்கிறது நாசா. இதற்கு முன் பல காமா கதிர் வெடிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. அவை எல்லாம் ஓரிண்டு நொடிகள் நிலைப்பதே அதிகம். ஆனால் இந்தக் காமா கதிர் வெடிப்பு 102 நொடிகள் வரை நிலைத்திருந்தது. அதோடு அதன் சக்தி நம் சூரியனை விட 'ட்ரில்லியன்' (Trillion) மடங்கு அதிகமாக இருந்தது. இது ஒரு சாதாரண நட்சத்திரப் பெருவெடிப்பால் இருந்து நிகழவில்லை. இது நாம் வெண்துளையினைப் பற்றிச் செய்து வைத்திருக்கும் அனுமானங்களோடு ஒத்துப் போகிறது. இது வெண்துளை இருக்கிறது என்று உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இருக்கலாம் என்ற அனுமானத்திற்கு வலுசேர்க்கிறது.

வெண்துளையும், ஹாலிவுட்டும்

இருக்கா இல்லையானு நீங்க சண்ட போடுங்க, என வெண்துளையை தங்கள் படங்களில் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர் ஹாலிவுட்டார். இப்போது அல்ல 1980'களிலே. The Hitch Hiker's Guide to the Galaxy என்ற படத்தில் வேறு ஒரு உலகத்தில் வாழும் ஏலியன்கள். தங்கள் கிரகத்துக்கு அருகில் இருக்கும் வெண்துளையில் இருந்து வரும் பொருட்களை பயன்படுத்தியே தங்கள் உலகைக் கட்டமைக்கிறார்கள். Transformersல் கூட ஒரு எபிஸோடில் சில ட்ரான்ஸ்பார்மர் கேரக்டர்கள் கருந்துளையில் உள்ளே உள்ள ஒரு நெகடிவ் யுனிவர்சில் மாட்டிக் கொள்வார்கள். பின்னர், ஒரு வெண்துளையை கண்டறிந்து அதன் வழி மீண்டும் தங்கள் பழைய யுனிவர்சுக்கே வந்து சேர்வார்கள். 1979ல் வெளிவந்த The Black Hole என்ற படத்திலும் ஒரு 'ஸ்பேஸ் கிராஃப்ட்' கருந்துளையினால் உள்ளிழுக்கப்பட்டு வெண்துளையில் வழி வெளிவரும் ஆனால் அவர்கள் வேறொரு அண்டத்தில் இருப்பார்கள். இப்படி தங்கள் கற்பனைக் குதிரைகளை இஷ்டத்துக்குத் தட்டிவிட்டு படம் இயக்கியிருக்கின்றனர்.



வெறும் கோட்பாடுகளை வைத்து வெண்துளை இருக்கிறது என்று அடித்துக் கூற முடியாது, அதே நேரம் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. கருந்துளையும் ஒருநாள் கோட்பாடாகத்தான் இருந்தது. இன்று நாம் சாதாரணமாக பயன்படுத்தும் பல அறிவியல், மற்றும் புவியியல் நிகழ்வுகள் அனைத்தும் ஒரு காலத்தில் கோட்பாடாக இருந்தவைதான். அதை மறந்துவிட வேண்டாம்.

UGC allows autonomous colleges to seek deemed university status

UGC allows autonomous colleges to seek deemed university status  TIMES NEWS NETWORK  27.04.2028 The UGC has permitted autonomous and constit...