Tuesday, May 15, 2018


விதிகளை மதிப்போம்; விபத்தைத் தவிர்ப்போம்!


By டி. எஸ். தியாகராசன் | Published on : 15th May 2018 12:54 AM

இப்போதெல்லாம் மனிதர்கள் முதுமையோ, பிணியோ இல்லாமலே அற்ப ஆயுளில் மரணத்தைத் தழுவக் காரணம் என்ன? முளைவிட்டு, முகிழ்த்து, கிளை பரப்பி, மலராகி, பிஞ்சாகி, காயாகி, கனிந்து பின் இயற்கையாக விழுவது போல் அல்லாது, சிலர் தம் வாழ்நாளில் பலவற்றை ஆண்டு அனுபவிக்கத் தவறி, அகாலத்திலேயே போய்ச் சேருவது எதனால்? நாள்தோறும் கதிரவன் உதயத்திற்கு முன்பாகவே இல்லத்துக்குள் வரும் நாளேடுகள் மரண ஓலத்தின் வரிவடிவமாகவே இருப்பது ஏன்? காலையிலேயே நம் கண்களைக் குளமாக்கும் செய்திகளே அவற்றில் நிறைந்திருப்பது ஏன்?

"மகிழுந்துடன் சரக்கு வாகனம் மோதி நால்வர் மரணம்', "இருசக்கர வாகனம் மோதி பாதசாரி பலி', "விமானத்திலிருந்து பத்திரமாகத் தரையிறங்கிய பயணி சாலையைக் கடக்கும்போது வாகனத்தில் அடிபட்டு இறந்தார்', "அரசுப் பேருந்தும் எதிரே வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தை உட்பட எட்டு பேர் பலி, மூவர் நிலை கவலைக்கிடம்', "ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மரத்தில் மோதியது, சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழப்பு' இப்படிப்பட்ட அவலச் செய்திகள் பற்பல.
நெடுஞ்சாலை விபத்துகளில் பெரும்பாலானவை இரவு நேரத்திலேயே நடக்கின்றன.

அதுவும் குறிப்பாக, நள்ளிரவுக்கு மேல் அதிகாலை நான்கு மணிக்குள்தான் நடக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்னர், தென்னிந்திய மோட்டார் வாகனக் கழகத்தின் சார்பில் சாலை விபத்து குறித்த ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் விபத்துக்கான காரணங்கள் என்று ஐந்து விஷயங்கள் குறிப்பிட்ப்பட்டிருந்தன. முதலாவது, வாகன ஓட்டுநர்களின் தவறான கணிப்பு, இரண்டாவது, தனது வாகனம்தான் முன்னதாகச் செல்ல வேண்டும் என்று எண்ணும் ஓட்டுநர்களின் தன்முனைப்பு, மூன்றாவது, நீண்ட நேரப் பயணத்தால் ஓட்டுநர்களுக்கு இயல்பாக ஏற்படும் உடல் களைப்பு, நான்காவது, சாலைகளில் வளைவுகள், குறுகிய பாலம், மாற்றுப்பாதை, வேகத்தடை போன்றவற்றிற்கான எச்சரிக்கைப் பலகைகள் இல்லாதிருத்தல் அல்லது மிகச்சிறியதாக இருத்தல், ஐந்தாவது, வாகனங்களில் ஏற்படும் எதிர்பாராத இயந்திரக் கோளாறுகள் போன்றவை.
அந்த அறிக்கையில் விபத்துளைத் தவிர்க்கும் வகையில் சில யோசனைகளும் சொல்லப்பட்டிருந்தன. அவை, இரவு பதினோரு மணிக்குப் பின்னர் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், பகல் நேரத்தில் பயணிக்கும் தூரத்திற்கு ஆகும் நேரத்தைக் கணக்கிட்டு, அதற்கு அரை மணி நேரம் முன்னதாகவே பயணத்தைத் தொடங்க வேண்டும், ஒவ்வொரு இருநூறு கிலோ மீட்டர் தூரத்திற்கும் கட்டாயம் முப்பது நிமிடம் ஓய்வு எடுக்க வேண்டும்

இப்படி. வெளிநாடுகளில், வாடகை வாகனங்களை ஓட்டுபவர்கள் ஒரு நாளைக்கு இத்தனை மணி நேரம்தான் ஓட்டவேண்டும் என்ற விதி உள்ளது. அந்த விதி கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. சாலை விதிகளை மீறுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை. அவ்வளவு கடுமையாக சாலை விதிகள் மதிக்கப்டுகின்றன; பின்பற்றப்படுகின்றன. சமரசத்திற்கே இடமில்லை. சாலையில் செல்லும் வாகனம் மோதி ஒருவர் இறந்தால் அது விபத்து என்று கருதப்படுவதில்லை, கொலையாகவே கருதப்படுகிறது. அதற்கான தண்டனை மிகவும் கடுமையாகவே இருக்கிறது. ஆனால், நமது நாட்டிலோ இதற்கு நேர் எதிரான நிலைதான். வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகூட பெரும்பாலான வாகனங்களில் பொருத்தப்படுவதில்லை.

வளர்ந்த நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளின் தரத்தைக் கருத்தில் கொண்டு அதிவேகமாகச் செல்லும் வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சாலைகள் அவ்வளவு தரமானதாக இல்லை. இதனை மனத்தில் கொண்டே நாம் அதிவேகமாகச் செல்லக்கூடிய இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானோர் - குறிப்பாக இளைஞர்கள் - அப்படி கவனமாக இயக்குவதே இல்லை. அதனால்தான், தமிழ்நாட்டில் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறிய வகையில் 2017 - ஆம் ஆண்டில் காவல் துறையினர் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் அபராதமாக வசூல் செய்துள்ளனர்.

1988 - ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டம், பிரிவு 129 - இன் கீழ் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய வேண்டியது கட்டாயம். ஆனால், பெரும்பாலானவர்கள் தலைக்கவசம் அணிவதில்லை. சட்டத்தை மதிப்பதுமில்லை. கடந்த இரு மாதங்களில் மட்டும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக ஐம்பத்தையாயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மேலும், அந்த அறிக்கை, 80 விழுக்காடு விபத்துகளுக்குக் காரணம் தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை இயக்குவதே என்றும் கூறுகிறது.
இதுபோன்ற காவல்துறை அறிக்கைகள் பலசமயம் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் விபத்தின் காரணமாக உணர்வு இழந்துவிட்டவர்கள் 1,36,544 பேர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 84393 பேர். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் தலைக்கவசம் இல்லாததால் தலையில் அடிபட்டவர்கள் 25,000 பேர். இதுபோன்ற விபத்துகளில் சிக்குவோர் பெரும்பாலும் இளைஞர்களே. சிவப்பு விளக்கை மதிக்காமல் சிட்டாகப் பறப்பதும், தடுப்புக் கோட்டைத் தாண்டிப்போவதும் வீரமல்ல என்பதை இளைஞர்கள் உணர வேண்டும். இவையெல்லாம் நாமே வலிந்துபோய் விபத்தில் சிக்கிக் கொள்ளும் செயல்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்றைய இளைஞர்கள் காதில் அலைபேசியை அணைத்தபடி சாகசங்கள் செய்வது வாடிக்கையாகி விட்டது. விளம்பரத்தில் வரும் இரு சக்கர வாகனம் தனக்கு அவசியமா என்று இளைஞர்கள் யோசிப்பதே இல்லை. உடனே வாங்கிவிடத் துடிக்கிறார்கள். வாங்கியும் விடுகிறார்கள். வாகன எரிபொருள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது, பல இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமே இல்லை, போக்குவரத்து நெரிசல் சொல்லி முடியாது - ஆனாலும் வாகனப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவாகும் புதிய வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டேதான் போகிறது. நடைப்பயிற்சி உடல் நலத்திற்கு ஏற்றது என்பதை மறந்தோம், பொதுப் போக்குவரத்து சிக்கனமானது என்பதையும் புறந்தள்ளினோம், ஆளுக்கு ஒரு வாகனம் தேவை என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.

சென்னயின் மக்கள்தொகை (புறநகர் நீங்கலாக) சுமார் 83 லட்சம். ஆனால் வாகனங்களின் எண்ணிக்கையோ சுமார் நாற்பத்து மூன்று லட்சம். இருவருக்கு ஒரு வாகனம் என்கிற பொருளாதார வளர்ச்சி மயக்கத்தில் ஆழ்ந்து இருக்கிறோம். வாகனத்தை இயக்க, தவணைத்தொகை கட்ட பணம் வேண்டுமே. அதற்காக அறம் பிறழ்ந்த வழிகளில் பொருள் ஈட்டவும் பலர் தயங்குவதில்லை. இதனால்தான் எல்லா காவல்நிலைய வாயில்களிலும் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் பழசாகி, பயனற்று வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. முறையான ஆவணங்கள் இல்லாததாலும், திருடப்பட்ட வாகனங்கள் நீதிமன்ற ஆணைக்காகக் காத்துக்கொண்டும் இருக்கின்றன.

குடும்பத்தலைவனோ, தலைவியோ விபத்தில் இறந்துவிட்டால் அவரது குடும்பமே நிலைகுலைந்து போவது தவிர்க்க முடியாதது. இரு மாதங்களுக்கு முன்னர் சென்னை பெரம்பூரிலிருந்து ஒரு பெண்மணி, தனது இரு குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் கோயம்பேடு சென்றார். வழியில் ஒரு ஆட்டோவுடன் மோதியதில் தூக்கி எறியப்பட்டார். படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். அவர் மரணத்திற்கு முக்கிய காரணம், தலைக்கவசம் அணியாததே. குழந்தைகள் சிறுசிறு காயங்களுடன உயிர் பிழைத்தனர். அவரது கணவர் நிலைகுலைந்து போனார். இப்போது அவர் தலைக்கவசத்தின் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளிடம் பரப்புரை செய்து வருகிறார்.

ஆண்டுதோறும் போக்குவரத்து காவல் துறையினர் "சாலைப் பாதுகாப்பு வார விழா' கொண்டாடி சாலைப் பாதுகாப்பு குறித்து அறிவுறுத்துகின்றனர். ஆயினும் நம் மக்களிடம் அதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதே உண்மை. மேல்நாடுகளில் தொடக்கக்கல்வி முதலே சாலைப்பாதுகாப்பு குறித்து பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு சாலையிலேயே நேர்முகப் பயிற்சி, செயல்முறை விளக்கம் தருகின்றனர். தினமும் பள்ளிகளுக்கு முன்பு பெற்றோரும், ஓய்வு பெற்ற அதிகாரிகளும் போக்குவரத்தை ஒழுங்கு செய்வதில் உதவி புரிகின்றனர். சில தன்னார்வத் தொண்டர்களும் இதில் பங்கெடுக்கின்றனர். "சாலைகள் வாகனப் போக்குவரத்திற்கு, நடைபாதை நடப்பதற்கு' என்கிற விதி கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. குடியிருப்புப் பகுதிகளில் வணிக நிறுவனங்கள், கடைகள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனாலதான் அங்கு விபத்துகள் குறைவு.

நம் நாட்டில் எப்போதும் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி மகிழ்கிறோம். நடபாதைகளை சிறுவணிகத் தெருக்களாக மாற்றிவிட்டோம். வீட்டுக்குள் நுழைய முடியாதபடி வெளியே இருபுறமும் கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கிறோம். முழுக்க முழுக்க சுயநலம், பிறர்நலம் பேணாமை, சட்டத்தை மதிக்காத போக்கு, நாட்டின் வளர்ச்சிக்கு துணைநிற்காமை, அறம்சார் கொள்கைகளில் ஈடுபாடின்மை - இவையே இன்றைய மனித குலத்தின் முக்கிய எதிரிகள்.

அல்லன களைந்து, நல்லன வளர்த்து நல்ல வழியில் நாளும் உழைத்தால் மனித வளம் பெருகும். விபத்துகளில் சிக்கிச் சீரழியாமல் இருக்க, இனி ஒரு விதி செய்வோம். சாலை விதிகளை மதித்து நடப்போம்; விலை மதிப்பு மிக்க மனித உயிர்களைக் காப்போம்!

நாய் வளர்ப்பவர்களுக்கு கோடையில் ஒரு எச்சரிக்கை!


By RKV | Published on : 14th May 2018 03:53 PM


கோடைகால வெக்கையும் வியர்வையும் மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளையும் பாடாய்ப்படுத்துகிறது. சும்மாவே நம்மால் கோடையில் அனலையும், வியர்த்து வழிவதால் ஏற்படும் உடல் கசகசப்பையும், மனித உடல் நாற்றங்களையும் தாங்க முடியாது. இதில் வளர்ப்பு மிருகங்களையும், பறவைகளையும் வேறு வீட்டில் வைத்து வளர்த்து வருகிறோம் என்பவர்களுக்கு இந்த கோடை என்பது சற்று சிரம தசையான காலமே தான். கடுங்கோடையில் நம்மை நாம் கவனித்துக் கொள்வதே பெரும் பிரயத்தனம் இதில் நாம் வளர்க்கும் ப்ரியமான வளர்ப்பு மிருகங்களையும் கட்டாயம் மிகுந்த கவனத்துடன் பார்த்துப் பராமரிக்க வேண்டும் என்றால் அது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனாலும் நாம் அதைச் செய்து தான் தீர வேண்டியதாக இருக்கிறது.

காரணம். கோடை என்பது அனலுக்கும், வியர்வைக்கும், கோடை நோய்களுக்குமாக மட்டுமே பிரசித்தமானது அல்ல. விலங்குகளின் உடலில் சர்வ சுதந்திரமாக வளர்ந்து பல்கிப் பெருகக் கூடியவையான உண்ணிப்பூச்சிகளுக்கும் பிரசித்தமானவையே. கோடையில் காற்றிலும், சுற்றுப்புறத்திலும் நிலவும் வெக்கையான ஈரப்பதத்தின் காரணமாக அசுத்தமான இடங்களில் இத்தகைய உண்ணிப்பூச்சிகள் சர்வ சுதந்திரமாக வளரத் துவங்கி விடுகின்றன. பிராணி வளர்ப்பாளர்கள் தங்களது பராமரிப்பில் சற்று மந்தமானாலும் போதும் இந்த உண்ணிப்பூச்சிகள் நாய்கள், பூனைகள், பசுக்கள், எருமைகள், என அத்தனை விலங்குகளின் உடலிலும் வளரத் தொடங்கி விடுகின்றன. இதை முதல் முறையாக கண்காணிக்க நேரும் போதே உடனடியாக கால்நடை மருத்துவரின் உதவியை நாடி விடுவது உத்தமம். தாங்களே வீட்டில் மருத்துவம் செய்வதாக எண்ணிக்கொண்டோ அல்லது கை வைத்தியம் செய்வதாக எண்ணிக்கொண்டோ உண்ணிகளை அப்புறப்படுத்த ஏதேனும் கண்ட கண்ட மருந்துகளை உபயோகப்படுத்தினீர்கள் எனில் அது தேவையற்ற விளைவையே உண்டாக்கக் கூடும் என்பது கால்நடை மருத்துவர்களின் எச்சரிக்கை.

காரணம் வளர்ப்பு விலங்குகளின் தோலில் நாம் ஆராயாமல் தடவும் மருந்துகள் உண்ணிப்பூச்சிகளை ஒழிப்பதை விட சரும வியாதிகளையும், அலர்ஜிகளையும் தூண்டி விடுவதாக அமைந்து விடக்கூடாது. அப்படி அமைந்தால் பூச்சிகளின் தொல்லை ஒருபுறம், மருந்துகளின் அவஸ்தை ஒருபுறம் என நமது வளர்ப்பு நாய்களுக்கு வெறி பிடிக்கும் அபாயம் ஏற்பட்டு விடக்கூடாது. எனவே உங்கள் வீட்டு வளர்ப்பு நாய்களின் உடலில் உண்ணிகளின் தாக்கம் இருப்பது தெரிந்த முதல்கணமே கால்நடை மருத்துவரை அணுகி ஆவண செய்யுங்கள். ஒவ்வொரு நாய்க்குமே மருத்துவ ஆலோசனை மாறுபடும். எல்லா வளர்ப்பு நாய்களுமே ஒன்றல்ல. எந்த வகை நாய்களுக்கு எந்த விதமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை ஒரு கால்நடை மருத்துவரால் மட்டுமே சரியாகத் தீர்மானிக்க முடியும். எனவே கை மருத்துவத்தையும், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மருத்துவ குறிப்புகளைக் கைவிட்டு விட்டு தேர்ந்த கால்நடை மருத்துவர்களை அணுகி உங்களது வளர்ப்பு நாயின் உடல்நலத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யுங்கள்.

அதுமட்டுமல்ல, வளர்ப்பு நாய்கள் பராமரிப்பில் சிகிச்சை மட்டுமே போதுமானது அல்ல, நாய்களுக்கான வாழிடங்களையும் சுத்தமாகவும், ஆரோக்யமானதாகவும் பராமரியுங்கள். இல்லாவிட்டால் சிகிச்சையினாலும் முழுப்பலன் கிடைக்காமல் போய்விடக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

இந்தக் கோடையில் மட்டுமல்ல, எந்த விதமான பருவ நிலை மாற்றத்தின் போதும் இவற்றை நிச்சயமாக நீங்கள் கவனத்தில் கொள்வது அவசியமென்கிறார்கள் கால்நடை மருத்துவர்கள்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்கு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

Published on : 14th May 2018 12:09 PM  |
tirupathi

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு 25 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

திருப்பதி கோயிலில் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் அதிக நேரம் காத்திருப்பதை தவிர்க்க ஆதார் மற்றும் வாக்காளர் அடையான அட்டை கொண்டு வரும் பக்தர்களுக்கு தரிசன நேரம் குறிப்பிட்ட டிக்கெட் வழங்கப்படுகிறது. அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் கோயிலுக்கு வந்தால் 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம். இந்த நேர ஒதுக்கீடு திட்டம் கடந்த 2-ம் தேதி முதல் முழு அளவில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

பள்ளி, கல்லூரிகளுக்கு தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி வைகுண்டத்தில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியுள்ளதால், தரிசனத்திற்கு 25 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.300 மற்றும் மலைப்பாதையில் பாத யாத்திரையாக வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். 

பக்தர்கள் வருகை அதிகளவில் உள்ளதால் நேற்றிரவு தங்கும் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் கோயில் எதிரிலும் வெட்டவெளியிலும் படுத்து உறங்கும் நிலை ஏற்பட்டது. எனவே பக்தர்கள் தரிசனத்திற்கு ஒரே இடத்தில் காத்திருக்காமல் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மூலம் இலவச தரிசனத்திற்கான நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். இதில் உள்ள நேரத்திற்கு தரிசனத்திற்கு வைகுண்டம் காத்திருப்பு அறைக்கு வந்தால் 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம் எனத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
புழுதி புயல்: விமானங்கள் தாமதம்

Added : மே 14, 2018 22:16

சென்னை: டில்லியில் புழுதிப்புயல் வீசியதால், சென்னையில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, வட மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய, ஐந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 10 விமானங்கள், ஐந்து மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.தலைநகர் டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை முதல், கடும் புழுதிப் புயல் வீசியது. இதனால், டில்லிக்கு வந்து செல்லும் விமானங்கள் அங்கு தரையிறங்கவும், புறப்படவும் முடியாத நிலை ஏற்பட்டது.சென்னையில் இருந்து டில்லி செல்லும், ஐந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கோழிக்கோடு, ஐதராபாத், சிங்கப்பூர், மும்பை மற்றும் அந்தமான் செல்ல வேண்டிய, 10க்கும் மேற்பட்ட விமானங்கள் நேற்று, ஐந்து மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.இந்த நகரங்களுக்கு இயக்கப்பட வேண்டிய விமானங்கள், டில்லியில் இருந்து வரும் விமானங்களின், இணைப்பு விமானங்களாக இயக்கப்படுவதால், தாமதம் ஏற்பட்டதாக, விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.
ஊரை காலியாக்கும் 'ஈ'; வெளியூர் பயணிக்கும் மக்கள்

Updated : மே 15, 2018 02:18 | Added : மே 15, 2018 02:10 | 



சிவகங்கை : சிவகங்கை அருகே 'ஈ'க்கு பயந்து ஊரை காலி செய்ய 8 கிராம மக்கள் திட்டமிட்டுள்ளனர்.

சிவகங்கை நகராட்சியில் தினமும் 21 டன் குப்பை சேகரமாகிறது. சுந்தரநடப்பு அருகே நவீன குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இக்கிடங்கை சுற்றி சுந்தரநடப்பு, துவங்கால், மணக்கரை, காட்டுநெடுங்குளம், குட்டிதின்னி, உசிலங்குளம், உடையநாதபுரம், கடுக்கா பள்ளம் ஆகிய 8 கிராமங்கள் உள்ளன.

ஐந்தாயிரம் பேர் வசிக்கின்றனர். கிடங்கில் குப்பையை தரம் பிரிக்காமல் அப்படியே எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு சுவாச பிரச்னை, கண் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் கழிவுகளால் ஈக்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது.

அவை கிராமங்கள் முழுவதும் பரவி, வீடுகளில் மொய்க்கின்றன. தண்ணீர் பானை, உணவுப் பொருட்களில் அமர்வதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. பலமுறை போராடியும் நடவடிக்கை இல்லாததால் ஊரைக் காலி செய்ய கிராம மக்கள் தயாராகின்றனர்.

சுந்தரநடப்பு பாண்டி கூறியதாவது: கண்மாய் வரத்துக் கால்வாயில் கிடங்கு உள்ளது. மழைக்காலங்களில் குப்பையில் உருவாகும் கழிவுநீர் கண்மாயில் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடத்துவோம். கழிவுநீர் கலப்பால் மீன்கள் அழிந்து விட்டன. குப்பை கிடங்கை அகற்ற மே 1ல் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளுக்கு அனுப்பினோம். நடவடிக்கை இல்லாவிட்டால் கிராமத்தை விட்டு அனைவரும் வெளியேற உள்ளோம், என்றார்.
பிளஸ் 1 புதிய பாட புத்தகத்தில் 'நீட்' தேர்வுக்கான விடைகள்

Added : மே 15, 2018 00:59

'நீட்' தேர்வின் பல்வேறு சிக்கலான கேள்வி தொடர்பான பாடங்கள், பிளஸ் 1 புதிய பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. எனவே, புதிய பாடத் திட்ட புத்தகம், நீட் தேர்வை எதிர்கொள்ள உதவியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, மே, 6ல் முடிந்தது. தமிழகத்தில், 1.07 லட்சம் பேர் உட்பட, நாடு முழுவதும், 13 லட்சம் பேர் பங்கேற்றனர். நீட் தேர்வு கேள்விகள், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் இருந்து எடுக்கப்படுவதாக, தொடர்ந்து குற்றச்சாட்டு நிலவுகிறது.இதனால், தமிழக பாடத் திட்ட மாணவர்களால், நீட் தேர்வில் சாதிக்க முடியவில்லை என, பெற்றோர் தரப்பில் கூறுகின்றனர்.

இந்நிலையை மாற்ற, சி.பி.எஸ்.இ.,யை மிஞ்சும் வகையில், தமிழக பாடத் திட்டம் தயாரிக்கப்படுவதாக, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறி வந்தார்.இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன், புதிய பாடத் திட்டம் வெளியிடப்பட்டது. இந்த பாடத் திட்டத்தில், சமீபத்தில் நடந்த, நீட் தேர்வின் கேள்விகளுக்கான அம்சம் இடம் பெற்றுள்ளதா என, தமிழக பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.பாடத் திட்ட தயாரிப்பு குழுவில் உள்ள பேராசிரியர்கள், சுல்தான் இஸ்மாயில் - விலங்கியல்; ரீட்டா ஜான் - இயற்பியல்; நரசிம்மன் - தாவரவியல், பூபதி - வேதியியல் ஆகியோர், இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். நீட் தேர்வில் மாணவர்களை சிக்கலில் தவிக்க விட்ட பல கேள்விகளுக்கான விடைகள், புதிய பாடத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.இதன்படி, வேதியியலில், 11; தாவரவியலில், 29 மற்றும் விலங்கியலில், 21 சிக்கலான கேள்விகளுக்கான விடைகள், பிளஸ் 1 பாட புத்தகத்தில் உள்ளன. மொத்தத்தில், தமிழக பாடத் திட்டத்தில், பிளஸ் 1ல் இருந்து, 96 கேள்விகளும்; பிளஸ் 2வில் இருந்து, 84 கேள்விகளும், நீட் தேர்வில் இடம் பெற்றுள்ளன.

இதன்மூலம், தமிழக பாட திட்ட மாணவர்கள், நீட் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- நமது நிருபர் -

கடலூர், வேலூரில் வரும் 19ம் தேதி பாஸ்போர்ட் மேளா

Added : மே 14, 2018 22:17

சென்னை: கடலுார் மற்றும் வேலுார் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையத்தில், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், வரும், 19ம் தேதி, சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடத்தப்பட உள்ளது. பணிக்குச் செல்வோரின் வேண்டுகோளை ஏற்று, விடுமுறை நாளான சனிக்கிழமை அன்று நடத்தப்படுகிறது.பாஸ்போர்ட் மேளாவில் பங்கேற்க விரும்புவோர், நாளை மதியம், 2:30 மணி முதல், பாஸ்போர்ட் அலுவலகத்தின், www.passportindia.gov.in என, அதிகாரபூர்வ இணையதளம் வழியாக, ஆன்லைனில் பதிவு செய்யலாம். ஏ.ஆர்., எனப்படும், விண்ணப்பப் பதிவு எண் பெற்று, ஆன்லைனிலேயே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, சந்திப்புக்கான முன்பதிவு நேரத்தையும் பெற வேண்டும்.

NEWS TODAY 28.04.2026