Thursday, June 7, 2018


ரஷ்ய பல்கலைகளில் சேர்வது எப்படி? 3 நகரங்களில் கல்வி கண்காட்சி


Added : ஜூன் 07, 2018 01:06

சென்னை:தமிழக மாணவர்கள் ரஷ்ய கல்வி நிறுவனங்களில், மருத்துவம், இன்ஜினியரிங் படிப்புகளில் சேர உதவும் வகையில், ரஷ்ய துாதரகம் சார்பில், சென்னை, சேலம், திருச்சியில் கண்காட்சி நடத்தப்படுகிறது.
ரஷ்ய கூட்டமைப்பின், தென்னிந்திய துாதரக கலாசார பிரிவு துணை துாதர், மிகைல் கார்ப்டோவ், துணை துாதர், யூரி பிலோவ், நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:ரஷ்ய உயர்கல்வி கண்காட்சி, தமிழகத்தில், 20ம் ஆண்டாக நடத்தப்படுகிறது. சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, ரஷ்ய கலாசார மையத்தில், வரும், 9, 10ம் தேதிகளில் கண்காட்சி நடத்தப்படும்.
சேலம், ஜி.ஆர்.டி., கிராண்ட் ஸ்டான்சியா ஓட்டலில், ஜூன், 11; திருச்சி, ரம்யாஸ் ஓட்டலில், ஜூன், 12ல் கல்வி கண்காட்சி நடத்தப்படும்.ரஷ்யாவின் பிரபலமான, 10க்கும் மேற்பட்ட பல்கலைகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ரஷ்ய பல்கலைகளில் படிக்க விரும்புவோருக்கு, சி.இ.டி., மற்றும், ஐ.இ.எல்.டி.எஸ்., போன்ற முன்தகுதி தேர்வுகள் தேவையில்லை. மருத்துவ படிப்பு படிக்க, இந்தியாவில் நடத்தப்படும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.நான்கு ஆண்டு கால, இன்ஜினியரிங் படிப்பு மற்றும் ஆறு ஆண்டு கால மருத்துவ படிப்புக்கு முன், ரஷ்ய மொழி முன் தயாரிப்பு படிப்பை, ஓராண்டு படித்திருக்க வேண்டும்.

இந்திய மாணவர்களுக்கு, ரஷ்ய அரசு, கல்வி கட்டண சலுகை வழங்கு கிறது. இதற்கான விபரங்களை, கண்காட்சியில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னையில் திடீர் வெப்ப சலன மழை குளிர்ச்சியால் பொதுமக்கள் மகிழ்ச்சி

Updated : ஜூன் 07, 2018 00:45 | Added : ஜூன் 07, 2018 00:43



சென்னை:சென்னையில், வெப்ப சலனத்தால், நேற்று திடீர் மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அதனால், போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

வட கிழக்கு பருவ மழை, ஜனவரியில் முடிவுக்கு வந்த பின், ஐந்து மாதங்களாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், வெயில் கொளுத்துகிறது. கடந்த, 28ம் தேதி, கத்திரி வெயில் முடிந்தும், வெயில் அளவு அதிகரித்தது.\

40 டிகிரி செல்ஷியஸ்

சென்னை விமான நிலையம் மற்றும் நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் எடுக்கப்பட்ட பதிவுகளின் படி, வெயில் அளவு, 40 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரித்தது.இந்நிலையில், நேற்று வெயில் அளவு அதிகமாக இருந்தது. குறிப்பாக வெப்பத்தின் தாக்கமும், காலை முதல் கடுமையாக இருந்தது. அதனால், மாலையில் வெப்ப சலனத்தால் மழை பெய்யலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, பிற்பகல், 2:45 மணி அளவில், திடீரென மேகங்கள் கூடி, மழை கொட்டியது.

அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி, கிண்டி, அடையாறு, பாரிமுனை, திருவொற்றியூர், செங்குன்றம், ஆவடி, பல்லாவரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், 20 நிமிடங்கள் வரை, மழை கொட்டியது.

சாலைகளில் வெள்ளம்

திடீர் மழையால், சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலையோரங்களில் உள்ள மழை நீர் கால்வாய்களில், நீர் நுழைவதற்கான துளைகள் அடைபட்டிருந்ததால், சாலையிலேயே நீர் தேங்கி, வெள்ளமாக காட்சியளித்தது.மழை நீரில், வாகனங்கள் ஊர்ந்து சென்றதால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு பின், மழை நீர் கொஞ்சம் கொஞ்சமாக வடிய துவங்கியதும், நிலைமை சீரானது.

நேற்று மாலை, 5:30 மணி நிலவரப்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில், 2.௭ செ.மீ., மற்றும் சென்னை விமான நிலையத்தில், 2.1 செ.மீ., மழை பதிவானது. குறைந்த பட்சம், 1 செ.மீ., அளவுக்கு கூட மழை பெய்யாததால், சென்னைவாசிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இன்றும், மாலை அல்லது இரவு நேரங்களில், மழைக்கு வாய்ப்புஉள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எத்தனை எதிர்ப்பு வந்தாலும் 'நீட்' தேர்வு தொடரும்: பா.ஜ.,

Added : ஜூன் 07, 2018 00:23



 

சென்னை: ''எந்த மாநிலத்தில் எதிர்ப்பு இருந்தாலும், 'நீட்' தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும்,'' என, மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:- நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக, மாணவி பிரதிபா மரணம் அடைந்தது, மிகுந்த மன வேதனை அளிக்கிறது. தமிழகத்தில், சுயநல அரசியலுக்காக, நீட் தேர்வை காரணம் காட்டி, பொய் பிரசாரத்தை, சில கட்சிகள் செய்து வருகின்றன. இரண்டாண்டுக்கு முன்னரே, நீட் தேர்வுக்கான பயிற்சியை அளித்திருக்க வேண்டும். தமிழை, பிழைப்பாய் வைத்து, அரசியல் செய்வதை நிறுத்தி, தமிழை தாயாக நினைக்க வேண்டும். தமிழகம் மட்டுமல்ல, குஜராத்திலும், நீட் தேர்வை வேண்டாம் என்கின்றனர். தமிழகத்தில் மட்டும், நீட் தேர்வை திணிப்பது போல சொல்வது தவறு.மாணவர்களின் நலன் கருதியே, நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. எந்த துறையில் படித்தாலும், முன்னேற முடியும் என, மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.தமிழகத்தில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு இருக்கிறது. அதேபோல், குஜராத் உட்பட, பல மாநிலங்களில் எதிர்ப்பு இருக்கிறது. எந்த மாநிலத்தில் எதிர்ப்பு இருந்தாலும், நீட் தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
24 மணிநேரத்தில் 1003 விமானங்கள் ; உலகின் பிஸி ஏர்போர்ட் ஆனது மும்பை

Added : ஜூன் 06, 2018 22:03




மும்பை : 24 மணிநேரத்தில், ( ஜூன் 5ம் தேதி) 1003 விமானங்களின் போக்குவரத்துகளை கையாண்டு, உலகின் பிஸியான ஏர்போர்ட் என்ற பெருமையை மும்பை விமானநிலையம் பெற்றுள்ளது.

தொடர் சாதனை :

மும்பை விமானநிலையம், கடந்த பிப்ரவரி மாதத்தின் ஒருநாளில் 980 விமானங்களின் போக்குவரத்துகளை கையாண்டதே அதன் சாதனையாக இருந்தது. இந்நிலையில், மும்பை விமானநிலையம், தனது சாதனையையே தற்போது முறியடித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் லண்டன் :

நாளொன்றுக்கு 800 விமானங்களின் போக்குவரத்துகளை கையாண்டு, உலகின் பிஸியான விமானநிலையங்கள் பட்டியலில், லண்டனின் காட்விக் விமானநிலையம் இரண்டாம் இடம்பிடித்துள்ளது.

மும்பை விமானநிலையத்தில் இரண்டு ரன்வேக்கள் உள்ளன. முதல் ரன்வே( 09/27)யில் ஒரு மணிநேரத்திற்கு 48 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையும் இரண்டாவது ரன்வே(14/32)யில், 35 விமானங்களின் போக்குவரத்தும் நடைபெறுகின்றன.

2017-18 நிதியாண்டில், மும்பை விமானநிலையம் 48.49 மில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் தியேட்டரில் இருந்து காலா படத்தை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பியவர் கைது

சிங்கப்பூர் தியேட்டரில் இருந்து காலா படத்தை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பியவரை போலீசார் கைது செய்தனர்.

ஜூன் 07, 2018, 03:30 AM

சென்னை,

சிங்கப்பூர் தியேட்டரில் இருந்து காலா படத்தை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பியவரை போலீசார் கைது செய்தனர்.

பேஸ்புக்கில் ஒளிபரப்பு

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் இந்தியா முழுவதும் இன்று(வியாழக்கிழமை) திரைக்கு வருகிறது. வெளிநாடுகளிலும் அதிக தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. சில நாடுகளில் நேற்று இரவு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. ரசிகர்கள் ஏராளமானோர் வந்து படம் பார்த்தார்கள். படம் பற்றிய விமர்சனங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டபடி இருந்தனர்.

காலா படம் பற்றிய தகவல்கள் டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் டெரிண்டிங்கில் இருந்தது. இந்த நிலையில் சிங்கப்பூரில் உள்ள ஒரு தியேட்டரில் இருந்து காலா படம் பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

திரை உலகினர் அதிர்ச்சி

படம் பார்க்க சென்ற ஒருவர் தியேட்டரில் ஓரமாக உட்கார்ந்து படத்தை பேஸ்புக்கில் அப்படியே நேரடியாக ஒளிபரப்பு செய்து கொண்டு இருந்தார். 40 நிமிடங்கள் காலா படக்காட்சிகள் பேஸ்புக்கில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது. இது திரை உலகினரையும், ரஜினி ரசிகர்களையும் அதிர்ச்சி ஆக்கியது.

இது பற்றி சிங்கப்பூர் வினியோகஸ்தர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று பேஸ்புக்கில் காலா படத்தை ஒளிபரப்பிய வாலிபரை கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் பிரவீன் என்பது தெரிய வந்தது. பேஸ்புக்கில் காலா படத்தை ஒளிபரப்பி கைதானவர் பற்றிய தகவலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

Wednesday, June 6, 2018


வணிகவியல் பாடப்பிரிவுக்கு கடும் போட்டி : பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தீவிரம் 

kalviseithigal

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தீவிரமடைந்துள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் குவிந்து வருகின்றனர். பெரும்பாலான பள்ளிகளில் வணிகவியல் பாடப்பிரிவுக்கு தான் மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 23ம் தேதி வெளியானது. மாநிலம் முழுவதும் 94.5 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து பிளஸ் 1 வகுப்புகளுக்கான சேர்க்கை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் 47,228 பேர் 10ம் வகுப்பு தேர்வு எழுதினார்கள். அதில் 42,589 பேர் தேர்ச்சி பெற்றனர். 4,639 பேர் தோல்வியடைந்தனர். தேர்ச்சி சதவீதம் 90.18 ஆகும். தேர்ச்சி பெற்றவர்கள் பிளஸ் 1 சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர். பெற்றோருடன் செல்லும் மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து சேர்க்கை பெற்று வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நடப்பாண்டும் அது தொடர்ந்து வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளை பொறுத்தவரை, கணிதம் மற்றும் கணினி அறிவியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்கள் அடங்கிய அறிவியல் பிரிவும், வணிகவியல், பொருளியல் அடங்கிய கலைப்பிரிவும் மட்டுமே பெரும்பாலான அரசுபள்ளிகளில் உள்ளன. இவற்றில் கலைப்பிரிவை தேர்ந்தெடுக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று 300க்கும் மேற்பட்ட மாணவிகள் சேர்க்கைக்காக ஒரே நேரத்தில் குவிந்தனர். இதேபோல் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோலியனூர், வளவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பி.என் தோப்பு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு குவிந்து வருகின்றனர்.

கடந்த ஆண்டைவிட தற்போது மாணவர்கள் சேர்க்கை பிளஸ் 1 வகுப்பில் கூடுதலாக வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், இன்ஜினியரிங் படிப்பு மீதான மோகம் குறைந்ததால், பிளஸ் 1 அறிவியல் பிரிவில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாகவே, கலைப்பிரிவில் சேர மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். எளிதாக தேர்ச்சி பெறலாம், அதிக மதிப்பெண் பெற முடியும், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்தலாம், உயர்கல்வியில் பல பிரிவுகளில் சேரும் வாய்ப்பு போன்றவையே மாணவர்களில் பலர் கலைப்பிரிவை தேர்ந்தெடுக்க காரணம். மேலும், பிளஸ் 1 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுவதால், அறிவியல் பிரிவில் படிப்பது கடினமாக இருக்கும் என மாணவர்கள் எண்ணுகின்றனர். மேல்நிலைப்பள்ளிகளில் கலைப்பிரிவில் உள்ள இடத்திற்கும் கூடுதலாக மாணவர்கள் வருவதால், அனைவருக்கும் சேர்க்கை வழங்க முடிவதில்லை. எனவே மாணவர்கள் ஆர்வம் காட்டும் பள்ளிகளில் மட்டும் கூடுதல் வகுப்புகளை தொடங்கவும், ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்றனர்.

மனசு போல வாழ்க்கை- 11: தவறான முடிவும் சிந்தனைத் திரிபும்

Published : 02 Jun 2015 12:14 IST

டாக்டர். ஆர். கார்த்திகேயன்
 




நமது எண்ணங்கள் பிரச்சினைகளைத் திரித்துப் பார்ப்பதன் மூலம் நம்மைப் பற்றிய எண்ணத்தையும் பிறரைப் பற்றிய எண்ணத்தையும் அதற்கேற்ப மாற்றி யோசிக்கலாம்.

காரணங்கள்

மகனின் நடத்தை சரியில்லை என்று பள்ளியில் பெற்றோரை அழைக்கின்றனர். மகன் செய்த காரியங்களைக் கேட்டுப் பதைக்கிறாள் தாய். உடனே இப்படி நினைத்துக் கொள்கிறாள். “ஒரு அம்மா என்ற முறையில் நான் தோல்வி அடைந்துவிட்டேன். இதற்கெல்லாம் நான்தான் காரணம். என்னால் யாரையும் எதையும் செய்ய வைக்க முடியாது. எல்லாம் என் தலைவிதி!” இதை Personification என்பார்கள். “எது நடந்தாலும் அதற்கு நான் மட்டும் காரணம்” என்று அர்த்தப்படுத்திக் கொள்வது.

மகன் செய்த காரியங்களைக் கேட்ட தந்தை இப்படிப் பேசுகிறார்: “எல்லாரும் சேர்ந்து குட்டிச்சுவராக ஆக்கிட்டீங்க. ஒரு பக்கம் பாட்டி செல்லம், இன்னொரு பக்கம் அம்மா செல்லம். உருப்படுமா? நான் வேலையா இருந்துட்டேன். உங்க யாருக்காவது பொறுப்பு வேண்டாம்? எல்லாம் உங்களாலதான்!” எது நடந்தாலும் அது பிறராலே என்று எண்ணுதல். பிறரைக் குற்றம் சொல்லும் ஒரு சிந்தனைத் திரிபு.

இரண்டு திரிபுகள்

தன்னைக் குற்றவாளியாகப் பார்ப்பவர்கள் “நான் சரியில்லை. நீங்கள் சரி” என்ற மனநிலைக்கு எளிதில் சென்று தங்கிவிடுவர். இந்த நிலைப்பாட்டில்தான் எல்லாவற்றையும் நோக்குவார்கள். இவர்களை துக்க நோய் எளிதில் தாக்கும்.

பிறரை குற்றவாளியாகப் பார்ப்பவர்கள் “நான் சரி; நீங்கள் சரியில்லை”என்ற மன நிலையில் அழுத்தமாகத் தங்கி விடுவார்கள். அந்த நிலைப்பாடு அவர்களைக் குற்ற உணர்வின்றித் தவறிழைக்க வைக்கும். பிறர் மீது வன்முறை செலுத்த நியாயம் கற்பிக்கும்.

இரண்டும் சிந்தனை திரிபுகள்தான். குற்றப்படுத்துதல்தான் மையக்கரு. யாரையும் குற்றம் சொல்லப் பார்க்காமல் தர்க்கரீதியாகப் பிரச்சினையை அணுகுவதுதான் மனப்பக்குவம்.

மாறும் மதிப்பீடுகள்

நம்மை மிகவும் வருத்தும் இன்னொரு சிந்தனைச் சிக்கல் “இது இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று நினைப்பது. Shoulds and Musts என்பார்கள். இவைதான் உறவுகளை நசுக்கும் எதிர்பார்ப்பு ஆயுதங்கள். மேம்போக்காகப் பார்த்தால் மிக இயல்பாகவும் சரியாகவும் தோன்றும் இந்த எதிர்பார்ப்புகள்தான் உறவில் பெரிய விரிசல்களை ஏற்படுத்தும்.

நம் குடும்பம், சமூகம், கல்வி, கலாச்சாரம் போன்றவை ‘ஒழுங்கு’ என்ற பெயரில் சில எதிர்பார்ப்புகளை வளர்க்கின்றன. ஆனால், அவை அனைத்தும் காலப்போக்கில் மாறிக்கொண்டே வருபவை. கடந்த கால மதிப்பீடுகளை வைத்துக்கொண்டு இறுக்கமாக எதிர்நோக்கும் போது அங்கு உறவுகள் பாதிக்கப் படுகின்றன.

விளக்கு வைத்த பிறகு பெண்கள் வெளியே செல்லக் கூடாது என்றார்கள் ஒரு காலத்தில். இன்று அலுவலகத்தில் இரவு நேரத்தில் பணியாற்ற வீட்டிலேயே அனுப்பி வைக்கும் இயல்பு நிலை வந்துவிட்டது. இப்படி நிறையச் சொல்லலாம்.

மூலகாரணம்

டாக்டர்கள் விளம்பரம் செய்யக் கூடாது. பிராமணர்கள் அசைவம் சாப்பிடக் கூடாது. ஆண்மகன் அழக் கூடாது. இதில் சரி, சரியில்லை என்று விவாதிப்பதைவிட மாற்றங்களை எப்படிக் கையாள்கிறோம் என்பதுதான் விஷயம்.

“ஆயிரம் இருந்தாலும் அவன் ஆம்பளை. சம்பாதிக்கிறாள் என்பதற்காக ஒரு பெண் இப்படி எல்லாம் திருப்பிப் பேசக் கூடாது!”

இதில் யார் என்ன பேசினார்கள் என்ன பிரச்சினை என்பது போய்விட்டது. பாலின அரசியல் வந்துவிட்டது. அதற்குக் காரணம் பெண் பற்றிய “இப்படித்தான் இருக்க வேண்டும்!” என்ற எண்ணம்.

விவாதத்துக்கு உட்படுத்தக்கூட மனமில்லாத வகையிலான இறுக்கமான சிந்தனைகள்தான் எல்லா விரிசலான உறவுகளின் பிரச்சினையில் மூலகாரணங்கள்.

எழுதுங்கள்

சரி, உங்களுக்கு என்னவெல்லாம் சிந்தனைத் திரிபுகள் உள்ளன என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? யாரிடமும் பேசக்கூட வேண்டாம். உங்களின் பிரதானப் பிரச்சினைகள் மூன்றை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றைப் பற்றியும் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களை, ‘பிரச்சினைக்கு இரண்டு பக்கங்கள்’ என்ற விகிதத்தில் ஆறு பக்கங்கள் எழுதுங்கள். மொழி நடை முக்கியமில்லை. இலக்கணப் பிழைகள் பரவாயில்லை. கையெழுத்து சரியில்லை என்றால் பாவமில்லை. எது முக்கியம் என்றால் மனதுக்கு வருவதைத் தடையில்லாமல் எழுதுங்கள். ஒரே மூச்சில் எழுத முடியாவிட்டாலும் தவணை முறையில் எழுதுங்கள். எழுதி முடித்தவுடன் ஆராயாதீர்கள்.

மறுநாள் யாரோ எழுதிய கடிதம் போலப் படியுங்கள். பின் எந்தெந்த வாக்கியங்களில் இப்படிப்பட்ட சிந்தனைத் திரிபுகள் உள்ளன என்று பாருங்கள். அடுத்த கட்டமாக, உணர்வு மிகுதியான வார்த்தைகள் எவை என ஆராயுங்கள். அதன் உள்நோக்கம் என்ன என்று பார்த்துத் தர்க்கரீதியான அறிவுபூர்வமான வாக்கியங்களாக மாற்றுங்கள். நிச்சயம் தெளிவு பிறக்கும்.

திரிபுகளின் விதி

எல்லா மாற்றங்களுக்கும் பொதுவாக உள்ள விதியை நினைவுபடுத்துகிறேன். எதையும் தெரிந்து பயனில்லை. முயற்சிப்பது முக்கியம். நீச்சல் அடிப்பது எப்படி என்று படித்துத் தெரிந்துகொண்டு பயனில்லை, நீரில் இறங்க வேண்டும்.

நாம் செய்த பல தவறான முடிவுகளுக்கு விதை ஒரு சின்னச் சிந்தனைத் திரிபு தான். நம் அன்றாட வாழ்க்கையில் அடுத்தவர் பிரச்சினையை ஆராய்ந்தாலே ஆயிரம் கோணல் சிந்தனைகள் தெரியும்.

“படம் படு மோசம். இடைவேளை வரை கூட உட்கார முடியலை. ஒரே தலைவலி.”

“அப்போ இடைவேளையோட வந்திட்டீங்களா?”

“நீங்க வேற.... பணத்தைக் கொடுத்தாச்சுன்னு முழு படத்தைப் பாக்க வச்சுட்டார் எங்க வீட்டுக்காரர்.. இப்ப அவருக்கு தலைவலி, காய்ச்சல். டாக்டர்க்கு தண்டம் பண்ணது வேற எக்ஸ்ட்ரா !”

சுற்றி நடக்கும் உரையாடல்களில் இப்படி நிறைய சுவையான சிந்தனைத் திரிபுகள் கிடைக்கும்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இத்தகைய திரிபுகளுக்கான உளவியலின் ஆதார விதியை அழகாகச் சொல்லிவிட்டார்.

“சிந்தித்துப் பார்த்து

செய்கையை மாத்து.

சிறுசா இருக்கையில் திருத்திக்கோ- தவறு

சிறுசா இருக்கையில் திருத்திக்கோ!”

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.ccom

NEWS TODAY 14.02.2026