Friday, June 8, 2018

உதய் எக்ஸ்பிரஸ்' சேவை இன்று உதயம்

Added : ஜூன் 08, 2018 07:01


கோவை:கோவை மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறும் வகையில், கோவையில் இருந்து பெங்களூருவுக்கு, 'உதய் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில், 'டபுள் டெக்கர்' ரயில், இன்றிலிருந்து தனது பயணத்தைத் துவக்குகிறது.கொங்கு மண்டல மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான கோவை - பெங்களூரு இடையேயான உதய் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராஜென் கோஹெய்ன், இன்று காலை, 10:00 மணிக்கு துவக்கி வைக்கிறார்.ஏ.சி., 'சேர் கார்' வசதி, நவீன கழிவறைகள், அசத்தலான கட்டமைப்பு என பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய 'டபுள் டெக்கர்' பெட்டிகளை கொண்ட உதய் எக்ஸ்பிரஸ் ரயில், கோவையில் இருந்து தினமும் காலை, 5:45க்கு புறப்பட்டு மதியம், 12:40க்கு பெங்களூரு சென்றடைகிறது. அங்கிருந்து மதியம், 2:15க்கு புறப்பட்டு இரவு, 9:00க்கு கோவை வந்தடைகிறது.திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம் மற்றும் கிருஷ்ணராஜபுரம் ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும் இந்த ரயிலில், தலா, 120 இருக்கைகள் கொண்ட ஐந்து பெட்டிகள், தலா, 104 இருக்கைகள் கொண்ட மூன்று பெட்டிகள் என, எட்டு பெட்டிகளில், 912 பேர் பயணிக்க முடியும்.

இந்த ரயிலில் கோவையில் இருந்து பெங்களூரு செல்ல, 610 ரூபாய் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்தை காட்டிலும், இந்த ரயிலில் கட்டணம் குறைவு என்பதோடு, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளலாம் என்பதால் பயணிகள் கூட்டத்துக்கு பஞ்சம் இருக்காது என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.
மதுரைக்கு மேலும் ஒரு விமான சேவை

Added : ஜூன் 08, 2018 06:54

அவனியாபுரம்:ஐதராபாத்திலிருந்து மதுரைக்கு இன்டிகோ நிறுவனம் மேலும் ஒரு புதிய விமான சேவையை நேற்றுமுதல் துவக்கியது.அந்த விமானம் 74 பயணிகளுடன் நேற்று காலை 5:40 மணிக்கு ஐதராபாத்திலிருந்து புறப்பட்டு காலை 7:50 மணிக்கு மதுரை வந்தது. தினசரி சேவையாக அந்நிறுவன விமானம் காலையில் மதுரை வந்து, இரவு 9:40 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு இரவு 11:30 மணிக்கு ஐதராபாத் சென்றடையும்.மதுரை விமான நிலையத்திற்கு உள்நாட்டு விமான சேவை இத்துடன் 19ஆக உயர்ந்துள்ளது. தவிர 5 வெளிநாட்டு விமான சேவையும் உள்ளது.
தாம்பரம் - திருநெல்வேலி புதிய ரயில் துவக்கம்

Added : ஜூன் 08, 2018 05:04




சென்னை:சென்னை, தாம்பரம் - திருநெல்வேலி இடையே, முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்ட, அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து இன்று துவங்குகிறது. இதை, ரயில்வே இணை அமைச்சர், ராஜென்கோஹைய்ன் துவங்கி வைக்கிறார்.

கடந்த, 2017 நவ., 1ல், புதிய ரயில் கால அட்டவணை வெளியிடப்பட்டது. அப்போது, 'தாம்பரம் - திருநெல்வேலி இடையே, முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்ட, அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு, இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

தாம்பரம் ரயில் நிலையத்தில், இன்று மாலை, 4:00 மணிக்கு நடக்கும் விழாவில், ரயில்வே இணை அமைச்சர், ராஜென் கோஹைய்ன், அந்யோதயா ரயில் போக்குவரத்தை கொடியசைத்து துவங்கி வைக்கிறார். இந்த ரயில், 16191 என்ற எண்ணில் இயங்க உள்ளது; இன்று மட்டும், மாலை, 4:30 மணிக்கு புறப்படும். நாளை முதல், தாம்பரத்தில் இருந்து, அதிகாலை, 12:30க்கு புறப்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக, பிற்பகல், 3:30 மணிக்கு, திருநெல்வேலி சென்றடையும்.
திருநெல்வேலியில் இருந்து, 16192 என்ற எண்ணில், மாலை, 5:30க்கு புறப்பட்டு, மறு நாள் காலை, 9:45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயிலில், 16 முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கபட்டிருக்கும்.
இன்ஜி., கவுன்சிலிங் சான்றிதழ் சரிபார்ப்பு இன்று துவக்கம் டி.சி., வாங்குவது குறித்து அண்ணா பல்கலை விளக்கம்

Added : ஜூன் 08, 2018 04:33

'கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்காக, டி.சி., வாங்க வேண்டாம்' என, தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கைசெயலர் விளக்கம் அளித்து உள்ளார்.

பி.இ., - பி.டெக்., இன்ஜினியரிங் கல்லுாரிகளில் சேருவதற்கான, அண்ணா பல்கலை கவுன்சிலிங், ஜூலையில் நடக்கிறது.இதில் பங்கேற்க, 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, இன்று துவங்க உள்ளது.

மாநிலம் முழுவதும், 42 உதவி மையங்களில், வரும், 14ம் தேதி வரையும், சென்னை, அண்ணா பல்கலை வளாக உதவி மையத்தில், 17ம் தேதி வரையிலும், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.மற்ற மாவட்டங்களில், 14ம் தேதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க முடியாதவர்கள், 17ம் தேதிக்குள் சென்னை அண்ணா பல்கலை உதவி மையத்திற்கு வரலாம் என, சலுகை வழங்கப்பட்டுஉள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு செல்லும் மாணவர்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, ஆன்லைனில் இருந்து பிரதி எடுத்து, அதில் கையெழுத்திட்டு, உதவி மையத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.
10ம் வகுப்பு சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 ஹால் டிக்கெட், டி.சி., என்ற, மாற்று சான்றிதழ், நிரந்தர ஜாதி சான்றிதழ் போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.தேவைப்படுவோர், இருப்பிட சான்றிதழ், இலங்கை அகதிகளுக்கான சான்றிதழ், முன்னாள் ராணுவ வீரர் வாரிசு சான்றிதழ், மாற்று திறனாளர் மற்றும் விளையாட்டு வீரர் சான்றிதழ் ஆகியவற்றை, அசல் சான்றிதழுடன், நகலையும் எடுத்துச் செல்ல வேண்டும்.
இதற்கிடையில், கல்லுாரிகளில் தற்காலிகமாக சேர்ந்தவர்கள், டி.சி., எடுத்துச் செல்வது எப்படி என, குழப்பம் அடைந்து உள்ளனர்.இது குறித்து, தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் கூறியதாவது:கல்லுாரிகளில் ஏற்கனவே சேர்ந்தவர்கள், தற்போது, டி.சி., வாங்க வேண்டாம். சான்றிதழ் நகலுடன், சான்றிதழ் கல்லுாரியில் உள்ளதை உறுதி செய்யும் கடிதத்தை, கல்லுாரி முதல்வரிடம் வாங்கி வந்தால் போதும்.
கவுன்சிலிங்குக்கு பின், இடம் ஒதுக்கப்பட்டு நிரந்தர ஆணை கிடைத்ததும், டி.சி.,யை வாங்கி கொள்ளலாம்; அதுவரை காத்திருப்பது நல்லது.தவிர்க்க முடியாத காரணங்களால், சான்றிதழ் சரிபார்ப்புக்கு நேரில் பங்கேற்க முடியாதவர்கள், அனுமதி கடிதம் கொடுத்து, தங்கள் பெற்றோரில் ஒருவரையோ, உறவினரையோ அனுப்பலாம்.

அவர்கள், மாணவரின் கடிதத்துடன், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வாகன ஓட்டுனர் உரிமம், வருமான வரி கணக்கு எண் அட்டை போன்றவற்றில், ஒன்றை எடுத்து வர வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.
தலை சிறந்த பல்கலைக்கழகங்களின் 3 இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடம்

Added : ஜூன் 08, 2018 06:03

தலை சிறந்த பல்கலைக்கழகங்களின்   3 இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடம்

புதுடில்லி: உலக தரமிக்க பல்கலை.கழகங்கள் பட்டியலில் இ்ந்தியாவின் 3 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த குவாக்கோரெல்லி சைமண்ட்ஸ் (கியூஎஸ்) நிறுவனம் உலக அளவில் 200 சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் மும்பை இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (ஐஐடி), பெங்களூரூ இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்சி), டெல்லி இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனம் ஆகும்.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் முதல் இடத்தை தொடர்ந்து 7-வது ஆண்டாக பிடித்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
4,000 நர்ஸ்கள் விரைவில் நியமனம்'

Added : ஜூன் 08, 2018 04:50


ன்னை:''தமிழகம் முழுவதும், 4,000 நர்ஸ்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,'' என, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சட்டசபையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., நரசிம்மனின் கேள்விகளுக்கு பதில் அளித்த, அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

திருத்தணி ஒன்றியம், தெக்களூர் கிராமத்தில் உள்ள, துணை சுகாதார நிலையத்தை மேம்படுத்துவதற்கான, சாத்தியக்கூறு இல்லை. தற்போது, துணை சுகாதார நிலையங்களில், இரு நர்ஸ்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம். இந்த திட்டத்தில், தெக்களூர் துணை சுகாதார நிலையத்திற்கு, இரண்டு நர்ஸ்கள் நியமிக்கப்படுவர்.

தமிழகம் முழுவதும், விரைவில், 4,000 நர்ஸ்கள் நியமிக்கப்பட உள்ளனர். அப்போது, பொதட்டூர்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, கூடுதல் நர்ஸ்கள் மற்றும் டாக்டர்கள் நியமிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Updated : ஜூன் 07, 2018 13:12 | Added : ஜூன் 07, 2018 13:08 |


 
சென்னை: சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியதாவது: தெற்கு அரபிக் கடல் மற்றும் வங்கக்கடல் பகுதியில் தென் மேற்கு பருவ காற்று வலுவாக வீசுகிறது. மத்திய வங்க கடல் பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மேலும் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி, தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர பகுதிகளில் அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.

24 மணி நேரத்தில்...

கடந்த 24 மணி நேரத்தில் வேலூரில் 9 செ.மீ., கேளம்பாக்கம், ஜெயங்கொண்டம் பகுதியில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மிதமான மழை

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தின் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில்...

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு முறை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

NEWS TODAY 14.02.2026