Friday, June 8, 2018

தமிழகத்தில் அடுத்த 10 நாட்களில் மழை புரட்டிப்போடப்போகும் பகுதிகள் எவை?
 By DIN | Published on : 07th June 2018 05:52 PM |

சென்னை: தென்மேற்கு பருவ மழை தொடங்கி ஒரு வாரத்துக்கும் மேல் ஆன நிலையில், தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

வட தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் மழை நிலவரம் குறித்து விரிவான தகவல்களை பதிவிட்டுள்ளார்.

அதில், கோவையின் வால்பாறை, நீலகிரி, தேனியின் பெரியார் பகுதி, கன்னியாகுமரியில் பேச்சிப்பாறை பகுதிகள், நெல்லையில் மாஞ்சோலை - பாபநாசம் பகுதிகளில் இன்று முதல் கன மழை பெய்யும். மழை நீர் அப்பகுதிகளில் உள்ள அணைகளுக்கு வந்து சேரும் என்று நம்புகிறோம். இப்பகுதிகளில்தான் தமிழகத்தின் பெரும்பாலான அணைகள் அமைந்துள்ளன.

இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு வால்பாறை மற்றும் நீலகிரி பகுதிகளில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மிக மிக கன மழை பெய்யும்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியிருக்கும் ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலம், திண்டுக்கல்லின் கோடை பகுதி, பொள்ளாச்சி பகுதிகளுக்கும் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

காவிரிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள கேஆர்எஸ் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளான குடகு, கபினியின் நீர்பிடிப்பு பகுதியான வயநாடு, மூணாறு, வால்பாறை, கோவா, மகாமலேஷ்வர், கர்நாடகாவின் கடற்கரைப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல யாரேனும் திட்டமிட்டிருந்தால், உங்கள் பயணத்தைத் தள்ளிப் போடலாம். மேற்கண்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் அடுத்த 10 நாட்களில் 1,500 மி.மீ. மழை கொட்டித் தீர்க்க வாய்ப்பு உள்ளது.

சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர, வெப்பச் சலனத்தால் பெய்யும் மழையின் அளவு குறையக் கூடும்.

அதே போல, மும்பையில் இன்று தொடங்கியிருக்கும் பருவ மழை, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும். இந்த மாநகரில் தொடர் மழை பெய்ய வாய்ப்பும் உண்டு. தெற்கு மும்பையின் ரத்னகிரி - கோவா - மங்களூர் - கோழிக்கோடு பகுதிகளைத் தாக்கக் கூடும். மங்களூர் நகருக்கு கன மழை வாய்ப்பு உள்ளது. கோவாவுக்கு சுற்றுலாப் பயணம் செல்ல நினைத்திருந்தீர்கள் என்றால் அது மிகவும் ஆபத்தானது. கன மழை பெய்யும் நாட்கள் காத்திருக்கின்றன.

அதே போல, மகாராஷ்டிராவின் கடற்கரைப் பகுதிகள், கேரளா மற்றும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

சென்னை தாம்பரத்தில் புதிய முனையம் நாளை தொடக்கம்

By DIN | Published on : 07th June 2018 06:13 PM |


சென்னை தாம்பரத்தில் புதிய முனையம் நாளை தொடங்கப்படவுள்ளது. ரயில்வே இணை அமைச்சர் ராஜன் கோகெயின் நாளை முனையத்தை தொடங்கி வைக்கிறார்.

தாம்பரத்தில் 3-வது ரயில் முனையம் ரூ.33 கோடியே 28 லட்சத்து 8 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்களின் இயக்கம் அதிகரித் துள்ளது. இதனால், எழும்பூரில் இருந்து கணிசமான ரயில்களின் சேவை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். குறிப்பாக, வடமாநி லங்களுக்கு மொத்தம் 12 ரயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப் படுகின்றன. இவற்றில் கச்சிக்குடா, காக்கிநாடா, கயா போன்ற விரைவு ரயில்களின் சேவை தாம் பரத்தில் இருந்து இயக்க வாய்ப் புள்ளது. பிறகு, தேவையை கருத்தில் கொண்டு ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை தாம்பரம்- நெல்லை அந்தியோதயா விரைவு ரயிலையும் ராஜன் தொடங்கி வைக்கிறார். சென்னை சென்ட்ரல், எழும்பூரை அடுத்து சென்னையில் அமையும் 3-வது முனையம் தாம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது.


அமைதியின்றி ஆனந்தமில்லை

By டி.எஸ்.தியாகராசன் | Published on : 08th June 2018 01:34 AM |

இன்று தமிழ்நாடு எல்லா நிலைகளிலும், எல்லா இடங்களிலும் அமைதியை, ஆனந்தத்தை இழந்து வருகிறதோ என்ற ஐயம் எழுந்துள்ளது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பிரச்னைகள் தோன்றிய வண்ணம் உள்ளன. தொடரவும் செய்கின்றன. போராட்டங்கள், ஊர்வலங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்புகள், மறியல்கள் என்று வீறு கொள்கின்றன. தடையுத்தரவு மீறப்படுகிறது. கூட்டம் கலைய கண்ணீர்ப்புகை, எதிர்க்க கல்வீச்சு, காவலர் தடியடி பிரயோகம் என்று வளர்ந்து துப்பாக்கிச் சூட்டில் முடிகிறது. அப்பாவி மக்கள் பலர் பலி, வாகனங்கள் எரிந்து நாசம், பொருள்கள் சேதம் என்ற துயரச்செய்தி வெளியிடும் நாளேடுகள், காட்சி ஊடகங்கள். தொடர்ந்து கண்டன கணைகள் வீசப்படுகின்றன. மீண்டுமொரு கதவடைப்பு, அஞ்சலி ஊர்வலம், உண்மை கண்டறிய விசாரணை ஆணையம் அமைக்கப்படுகிறது. அறிக்கை வர எவ்வளவு காலம் ஆகுமோ?
கத்தியின்றி ரத்தம் இன்றி சுதந்திரம் பெற்ற நாடு என்று மகிழ்ந்த நாம், நம்மை நாமே ஆளுகின்ற மக்களாட்சி நாட்டிலே நம்மை நாமே வதைத்துக் கொள்கிறோம். தூத்துக்குடி ஆலையால் இதுநாள் வரை பாதிக்கப்பட்டு உயிர் துறந்தார்கள் என்று சொல்லப்படுகின்ற எண்ணிக்கையை விட, இப்போது ஏற்பட்ட கலவரத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகம். பொருள் சேதமும் மிக அதிகம்.

கொடிய பாம்பின் நஞ்சையே மருந்தாக்கி மருத்துவ உலகிற்கு வழங்குகிறோமே! மிருகங்களின் சாணங்களையும் சமையல் எரிவாயுவாக்கி, அறுசுவை உணவைப் படைக்கிறோமே! அப்படி இருக்க, ஒரு ஆலையால் ஏற்படும் தீமைகளைக் கண்டறிந்து தக்கவாறு நீக்கிச் செயல் வினையாற்ற நம் நாட்டில் எது பஞ்சம்? விஞ்ஞானிகளா? நிபுணர்களா? தொழில்துறை வல்லுநர்களா? பிற துறை அறிஞர்களா? எதுவும் இல்லை. தீமையைக் களையவும், நன்மையை வளர்க்குமான தூய மனவளம் நம்மிடம் இல்லை என்பதே உண்மை.

பல நூறு கோடி செலவில் தொழிற்சாலை உருவாகவும், பயன்பாட்டிற்கு வரவும் ஆண்டுகள் பல சென்றன. ஆனால் ஒரே ஒரு ஆணை, ஒரே ஒரு பூட்டு ஓரிரு நிமிடங்களில் ஆலையை மூடிவிட்டோம். ஆனால் பல ஆண்டுகளாக காவிரிப் படுகையில் ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களில் உள்ள சாயப்பட்டறைகளால் மண்ணும், நீரும் நஞ்சாகி மனிதர்களும், மாடுகளும் முடங்கிப் போகின்றனரே; பாலாற்று கரையோரங்ளில் இருக்கின்ற தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் எங்கள் வாழ்வே பாழ் என்று பல்லாயிரவர் நொந்து போகின்றனரே; நாட்டில் நாளுக்கு நாள் சாராய ஆலைகள் பல்கிப் பெருகுகின்றனவே; இங்கே எல்லாம் நாம் ஏன் போராட்டம் நடத்தவில்லை?
இந்த ஆலையின் தயாரிப்பு என்ன பீரா? விஸ்கியா? இல்லையே.

வாழ்க்கைக்கு மிகவும் அவசிய உலோகமான செம்புதான் அதன் தயாரிப்பு. நம் நாட்டில் மொத்த பயன்பாட்டு செம்பில் 35 விழுக்காடு முதல் 43 விழுக்காடு வரை உற்பத்தி செய்தது இந்த தூத்துக்குடி ஆலை. உலக செம்பு உற்பத்தியில் இந்தியாவில் 5 சதவீதம்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலும் மூன்று நிறுவனங்கள்தான் உற்பத்தி செய்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இது. ஆண்டுக்கு 4 லட்சம் டன் செம்பினை உற்பத்தி செய்து வந்தது. தங்கம், வெள்ளிக்கு அடுத்து மதிப்பு மிக்க அவசியமான உலோகம் செம்பு. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களில் இரண்டற கலந்து நிற்கிறது. மின்கம்பி வடங்களில் 90 சதவீதம் செம்புதான். மோட்டார் இயந்திரங்களில் 20 சதவீதமும், குளிர்சாதன இயந்திரத்தில் ஒரு டன் ஏ.சி.க்கு 1.4 கிலோவும் செம்பு பயன்படுத்தப்படுகிறது. தங்க ஆபரணங்கள் தொடங்கி வீட்டு உபயோக பொருட்கள்வரை செம்பின் பயன்பாடு மிக அதிகம். உள்ளூரில் உற்பத்தி நின்று போனதால் விலை அதிகமாகும் என்கிறார்கள் வணிகர்கள். ஆலை மூடப்பட்டதால், நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரம் பேர் வேலை இழக்கிறார்கள். அரசிற்கு வரியாகக் கிடைக்கும் பல நூறு கோடி வருமானம் நின்று போனது. புதிதாக தொழில் தொடங்க விரும்பும் தொழிலதிபர்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.

பல்குழுவும், பாழ் செய்யும் உட்பகையும் நாட்டின் வளர்ச்சிக்கு தடைக்கற்கள் என்கிறார் வள்ளுவர். வேலையின்மை கூடும். வறுமை வாட்டும். அமைதி குறையும். நம்மால் புதிதாக ஒரு தொழிற்சாலையைத் தொடங்க முடியுமா? நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலை தர இயலுமா? தஞ்சை டெல்டா பகுதியில் காவிரி நதிப் படுகையில் எரிபொருள் கிடைக்கும் என்று நிலவியலாளர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்னரே கணித்து கூறினர். கடந்த 40 ஆண்டு காலமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிபொருள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. இதற்கும் இப்போது எதிர்ப்பு, போராட்டம். பல்லாயிரம் மனித நாட்கள் பாழாகிப் போகின்றன. தமிழகத்தின் நெற்களஞ்சியம் சூறையாடப்படுகிறது.

நிலம், நீர் மாசடைகிறது', மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது' என்கிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் நல்ல நீர்வரத்து இருந்த காலத்தில் விவசாயிகள் செலவுக்கு ஏற்ற வருமானம் பயிர்த்தொழிலில் பார்த்தது இல்லை என்பதே உண்மை. மேலும், வேளாண் பணிகளுக்கு தகுந்த பணியாட்கள் கிடைப்பதில்லை என்பதும் உண்மை. நீர்வரத்து குறைந்த இன்றைய நாளில் சாகுபடியே முழுமையாக நடைபெறுவது இல்லை. குறுவை, தாளடி, சம்பா என்ற முப்போக சாகுபடி குறைந்து இன்று ஒரு போகத்திற்கே திண்டாட்டம் என்ற நிலை. பூமியின் மேற்பரப்பை நம்பி வாழ்ந்த நம் விவசாயிக்கு இறைவன் பூமித்தாயின் கர்ப்பப்பையில் இருந்து கருப்புத் தங்கத்தை தோண்டி எடுக்க துணை நிற்கிறான் இன்று. அன்று வறண்ட பாலைவனக் காட்டில் ஒட்டகம் மேய்த்துக் கொண்டும், பேரீச்சம் பழத்தைச் சுவைத்துக்கொண்டும் இருந்த அரேபியன் இன்று உலகின் பெரும் பணக்கார வரிசையில் அமர்ந்து இருக்கிறானே, எதனால்? பூமிக்கு கீழ் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட கருப்பு தங்கம்தானே காரணம். அங்கே நெல்வயல் இல்லை, எண்ணெய் வயல்தான் உண்டு. பாசுமதி அரிசி விளைவதில்லை. ஆனால் உண்ணுவது என்னவோ பாசுமதிதான்.

உலக வரைப்படத்தில் குண்டூசி முனை உள்ள சின்னஞ்சிறு நாடான சிங்கப்பூரில் சீரக சம்பாவா விளைகிறது? இல்லை, பஞ்சாப் கோதுமையை அறுவடை செய்கிறார்களா? எதுவும் இல்லை. குடிநீர் கூட பக்கத்து நாட்டில் இருந்துதான் வருகிறது. ஆனால், உலகின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக சிங்கப்பூர் விளங்குகிறது. விமானப் பயணத்துறையில் சாதனை புரிகிறது. சிங்கப்பூர் நாணய மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பல குறுந்தொழில்கள் செழித்து வளருகின்றன. இதைப் போன்றே சின்னஞ்சிறு தீவான ஜப்பானில் என்ன செந்நெல்லும், கரும்பும், கமுகுமாகப் பயிரிடப்படுகிறதா? இரும்பு உற்பத்தி இல்லை. ஆனாலும் வாகன உற்பத்தியிலும், மின்னணு பொருட்கள் தயாரிப்பிலும் கோலோச்சுகிறதே எங்ஙனம்? உலக யுத்தத்தில் நிர்மூலமாகி சிதைந்து போன அந்த நாட்டின் மக்கள், உழைப்பில் உறுதியும், வணிகத்தில் நேர்மையும் கொண்டு உலகை வலம் வருகிறார்கள். உணர்ச்சிக்கு உரம் ஏற்றி பேதங்களை நீரூற்றி வளர்த்திட்டால் வருங்கால சந்ததியினர் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் இப்போதெல்லாம் எடுத்ததற்கெல்லாம் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. மெட்ரோ ரயில் பாதை அமைத்தால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்' என வணிகர்கள் கடை அடைத்து கண்டனம். புதிய பசுமை வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை. இப்படிப் பல. அண்மையில் ஓர் ஊரில் விநோதமான ஒரு போராட்டம். எங்கள் ஊரில் உடனடியாக மது பானக் கடைகளைத் திற' என்று பெண்களே போராட்டம் நடத்தினர். நீர்நிலைகளில் கட்டப்பட்ட கட்டடங்கள், குடிசைகளை அகற்ற நடவடிக்கை எடுத்ததால், ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமல் மறியல், ஏழைகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்காதே என்று எதிர்க்கட்சிகளின் ஓங்கிய குரல்.

சிங்கப்பூர் விமான நிலையம் உலகின் சிறந்த விமான நிலையங்களில் ஒன்று. ஆனால் நிலப்பரப்பு நமது விரிவடைந்த சென்னை மாநகரின் அளவை விட குறைவு. சென்னையில் ஆண்டிற்கு ஓரிரு கோடி மக்கள் விமானப் பயணிகளாக வந்து போகிறார்கள். இடம் போதவில்லை. விமான நிலைய விரிவாக்கத்திற்காக அரசு கடந்த 25 ஆண்டுகளாக எவ்வளவு முயன்றும் நிலம் பெற முடியவில்லை.

பக்கத்து நாடான சீனாவில் சீனாவின் துயரம்' என்று 4,000 ஆண்டு காலமாக அழைத்து வந்த மஞ்சள் ஆற்றை, இப்போது சீனாவின் மகிழ்ச்சி' என்று அரசு மாற்றி விட்டது. 1887 மற்றும் 1931 -ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளில் 60 லட்சம் மக்கள் மடிந்தனர் என்பது வரலாறு. 1960-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டுவரை உள்ள காலத்தில் 12 பெரிய அணைகளைக் கட்டியது சீன அரசு. இதனால் 74 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலத்திற்கு பாசன வசதி கிடைத்தது. ஏழு புனல் மின் நிலையங்கள் மூலம் 5,618 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. இந்த அணைகளைக் கட்டும்போது விவசாயிகள் இழந்த நிலத்தின் பரப்பளவு பல்லாயிரம் ஏக்கர். இடம்பெயர்ந்த மக்கள் பல ஆயிரம் பேர். ஆனால், அரசின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பை நல்கினார்கள். இதனால்தான் இன்று உலகின் சக்தி மிகுந்த நாடாக சீனா திகழ்ந்து வருகிறது.
உலக மாந்தர் அனைவர்க்கும் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம் வேண்டும் என்றும், உலகில் வன்முறை, வறுமை, அறியாமை வேண்டாம் என்றும் வேண்டுவோம். அமைதி தழைக்கட்டும். ஆனந்தம் பெருகட்டும்.
இலவசங்களுக்கும் விலையுண்டு

By இரா.கதிரவன் | Published on : 08th June 2018 01:33 AM |

எங்கள் துணிக்கடையில் ஒரு புடவை வாங்கினால் ஒரு புடவை இலவசம்!', எங்கள் நிறுவனத்தில் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினால் ஒரு இஸ்திரி பெட்டி இலவசம்!', எங்கள் மூலமாக, சென்னைக்கு மிக அருகில் மனை வாங்கினால் பத்திரப் பதிவு இலவசம்!' - இத்தகைய விளம்பரங்களை தினசரிகளிலும் தொலைக் காட்சிகளிலும் அடிக்கடி பார்க்கின்றோம். திரைப்படத் துறையினர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இவற்றால் மக்களின் கவனத்தை ஈர்க்கின்றனர் .

இது தவிர, பத்திரிகைகளில் அதிகம் வெளிவராத விஷயமாக, இரண்டு மாணவர்களை எங்கள் பள்ளிக்கூடத்தில் சேர்த்தால் , மூன்றாம் மாணவருக்கு கல்விக்கட்டணம் இல்லை' , என்று வாய்மொழிச் செய்திகளைச் சில கல்வி நிறுவனங்கள் பரப்புகின்றன. பள்ளியின் வசதிகள், கற்பித்தலின் தரம், ஆகியனவற்றைக் கருத்தில் கொள்ளாமல், தங்களுக்கு கல்விக்கட்டண தள்ளுபடி அல்லது சலுகை கிடைக்கிறது என்பதற்காக, சில பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் முகவர்களாக மாறி, பிள்ளை பிடிக்கும்' அவலத்தையும் நாம் பார்க்கிறோம்.

பொதுவாக இலவசங்கள் சார்ந்த திட்டங்கள் இரு சாராரால் நடத்தப்படுகின்றன. ஒன்று தனியார் வியாபார நிறுவனம். இன்னொன்று அரசாங்கத்தின் திட்டங்கள்.

முதலில், தனியார் நிறுவனங்களை எடுத்துக் கொள்ளலாம். தங்களது வியாபாரத்தைப் பெருக்குவதற்கும் போட்டியாளர்களை சமாளிப்பதற்கும் பல நிறுவனங்கள் இத்தகைய இலவசங்களை தாராளமாக அள்ளி வழங்குகின்றன. ஆனால், உறுதியாக சொல்லக் கூடிய ஒன்று, இந்த இலவசங்கள் நிச்சயமாக இலவசமானவை அல்ல. இலவசம் எனக் கூறப்படும் பொருள்களின் விலை மற்ற பொருள்களின் விலையில் கூட்டப்படுவது நிச்சயம். இன்னும் சொல்லப் போனால், இந்த இலவசம் குறித்த விளம்பரங்களுக்கு ஆகும் செலவையும்கூட வாடிக்கையாளர்கள்தான் செலுத்த நேரிடும்.
ஆனாலும் இந்த இலவசங்கள்', வாடிக்கையாளர்கள் எனும் விட்டில் பூச்சிகளை தங்களது நிறுவனம் என்னும் விளக்குகளுக்கு இழுத்து செல்லுகிறன என்பதை மறுப்பதற்கில்லை .

அடுத்ததாக, அரசின் இலவசத் திட்டங்கள். அரசின் எல்லா இலவசத் திட்டங்களையும் ஒரேயடியாகக் குறைகூறிவிட முடியாது; கூறவும் கூடாது. சில விஷயங்கள் மிகவும் பயனுள்ளவை. குறிப்பாக, பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு, புத்தகங்கள் , சைக்கிள், மடிக்கணினி போன்றவை நேரடியாக அவர்களைச் சென்று சேர்பவை. இவற்றின் மூலம், பத்து வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு முன்பு இருந்துவந்த சத்துக் குறைபாடு சார்ந்த பல நோய்கள் தற்போது அறவே நீங்கியிருக்கின்றன. மேலும் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளின் , குறிப்பாக மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், பள்ளியிலிருந்து மாணவர்கள் இடைநிற்றல் கணிசமாகக் குறைந்திருப்பதும் மிக முக்கியமான பலன்களாகும்.

ஆக, இந்த திட்டம் பெரும் பலனை தருவதனாலும், சுகாதாரம் - கல்வி ஆகியனவற்றில் பெரும் முன்னேற்றத்தை தருவதாலும், இலவசம் என்று கூறப்பட்டாலும் இவற்றை நாம் வரவேற்கலாம்.

அடுத்ததாக, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி திட்டம். உரலுக்கு ஒரு புறம் இடி, மத்தளத்துக்கு இரண்டு புறமும் இடி' என்பார்களே அது போல, இத்திட்டத்துக்கான மிகப்பெரும் விலையை தருபவர்கள் விவசாயிகள்தான். இலவசமாக அரிசி வழங்கப்படுவதால், பொதுச்சந்தையில், விவசாயியின் விளைபொருளுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான விலை கிடைப்பதில்லை என்பது உண்மை. இன்னொருபுறம், இத்திட்டத்துக்கு 2011-இல் ஆண்டொன்றுக்கு 3,400 கோடி ரூபாய் செலவு செய்த தமிழக அரசு, தற்போது சுமார் 5,400 கோடி செலவு செய்கிறது. இந்த இழப்பினை ஈடுகட்ட, அரசு மக்களிடமிருந்து வெவ்வேறு வகைகளில் வரி வசூல் செய்கின்றது. அதனைச் செலுத்துபவர்களில் பெரும்பாலோர் விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் ஆவர். அதாவது, இந்தத் திட்டத்துக்காக, ஏற்கெனவே தன்னுடைய விளைபொருளுக்கு போதுமான விலை பெறாமல் கடும் இன்னலுக்கு ஆளாகியிருக்கும் விவசாயிகள், மறுபுறம் மறைமுகமாக, இலவச திட்டத்துக்கான விலையையும் செலுத்துகின்றனர்.வேறு சில இலவசங்கள் வழங்கப்பட்டும் பயன்படைத்தவை. அவற்றின் தரம் அப்படி. உதாரணமாக, இலவசம் என்ற பெயரில் வழங்கப்படும் மின் உபகரணங்கள் (எலெக்ட்ரானிக் பொருட்கள்). அவை சில வாரங்கள் கூட இயங்காதவை. இவை வெறும் முழுக்க முழுக்க விரயம் ஆகும் .

இத்தகைய அரசு இலவசங்களுக்கு நம்மால் தரப்படும் விலை எது? அடிப்படையில் ஒருவரது இலவசத்துக்கான விலையை இன்னொருவரும் பகிர்ந்து கொள்ளுகிறார். இப்படி மறைமுகமாக பணமாக இலவசத்துக்கு' தரப்படும் விலை மட்டுமல்ல, மக்கள் மனதில் ஏற்படும் இலவசம் குறித்த ஆவல், பிறரை அண்டி வாழும் மனோபாவத்தை ஏற்படுத்துகிறது. இலவசமாக எது கிடைத்தாலும் கூச்சமின்றி அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கினை அதிகரிக்கின்றது.

அது, மனோதத்துவ ரீதியாக, தம்மை தாமே தாழ்த்திக் கொள்ளும் மனப் போக்கினை நாளடைவில் ஏற்படுத்துகிறது. இலவசத்திற்கு அடிமையான மக்கள் மனதளவில் முடங்கிப் போவார்கள். இவை எல்லாம் ஒரு சமுதாயமே இலவசத்துக்காக' தரும் ஒரு பெரும் விலையாகும். எனவே அரசு, தனது ஒவ்வொரு இலவச திட்டத்தினையும் சீர்தூக்கி, சாதக பாதகங்களை தீவிரமாக அலசி, அவை குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி, தேவையற்ற இலவசத் திட்டங்களை ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் நிறுத்திவிட வேண்டும் .

ஆக மொத்தம், தனியார் நிறுவனங்கள் என்றாலும் சரி, அரசு ஆனாலும் சரி இலவசம் என்று எதுவுமே இல்லை என்பதும், மாறாக ,அதற்கென ஒரு பெரும் விலையை நாம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
பி.இ. சேர்க்கை: இன்று சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்: உதவி மையத்துக்கு 1 மணி நேரத்துக்கு முன்பாகச் செல்ல வேண்டும்

By DIN | Published on : 08th June 2018 01:19 AM

 பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக கலந்தாய்வு உதவி மையத்தில் மாணவர்கள் ஆஜராக வேண்டியது அவசியமாகும்.

தமிழகத்தில் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1,78,131 அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதன்முறையாக ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் நிரப்ப உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது: பி.இ. கலந்தாய்வை வரும் ஜூலை 6-ஆம் தேதி தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதில் பங்கேற்க 1,59,631 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான சமவாய்ப்பு எண் கடந்த ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து விண்ணப்பித்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது.

42 உதவி மையங்களில்: அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 42 கலந்தாய்வு உதவி மையங்களிலும் வெள்ளிக்கிழமை தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

அசல் சான்றிதழ் சரிபார்ப்பானது அனைத்து உதவி மையங்களிலும் காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெறும். காலை 9 - 10 மணி வரை ஒரு பிரிவு, 10-11 மணி வரை இரண்டாம் பிரிவு என ஒரு மணி நேரத்துக்கு ஒரு பிரிவு மாணவர்கள் எனப் பிரிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். பிற்பகல் 1 மணி முதல் 1.30 வரை உணவு இடைவேளை. அதன் பிறகு பிற்பகல் 1.30 மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு பிரிவாக மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
மாணவர்கள், தங்களுக்கு குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் உதவி மையத்துக்கு வந்து விடவேண்டும்.

மாணவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியது என்னென்ன?: சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்ல வேண்டிய மையம், தேதி, நேரம், வரிசை (டோக்கன்) எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் மாணவர் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் தங்களுடைய பயன்பாட்டாளர் குறியீட்டைப் பயன்படுத்தியும் இந்த விவரங்களை மாணவர்கள் பார்த்துக் கொள்ளமுடியும்.

அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள்: மாணவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்லும்போது, ஆன்-லைன் பதிவு செய்த விண்ணப்ப நகலை பிரதி எடுத்து அதில் மார்பளவு புகைப்படம் ஒட்டி, கையொப்பமிட்டு எடுத்துச் செல்லவேண்டும். மேலும், பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள் (இணை மதிப்பெண் சான்றிதழ்), பிளஸ்-2 பொதுத் தேர்வு நுழைவுச் சீட்டு, மாற்றுச் சான்றிதழ், நிரந்தர சாதிச் சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச் செல்லவேண்டும்.

தேவைப்படுவோர் இருப்பிடச் சான்றிதழ், முதல் தலைமுறை மாணவருக்கான சான்றிதழ் மற்றும் அதற்கான உறுதிமொழி, இலங்கை அகதிகள் என்றால் அதற்கான சான்றிதழ், முன்னாள் ராணுவ வீரர் வாரிசு சான்றிதழ், விளையாட்டு வீரருக்கான சான்றிதழ் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.

நகல் மட்டும் வைத்துக் கொள்ளப்படும்: இந்தச் சான்றிதழ்களைப் பொருத்தவரை அசல் மற்றும் நகல் இரண்டையும் மாணவர்கள் எடுத்துச் செல்லவேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் நகல் சான்றிதழ்கள் மட்டும் உதவி மையத்தில் வைத்துக் கொள்ளப்படும். அசல் சான்றிதழ்கள் அனைத்தும் மாணவர்களிடமே திருப்பி அளிக்கப்பட்டு விடும்.
ஏற்கெனவே வேறு படிப்புகளில் சேர்ந்தவர்கள் என்ன செய்வது?: சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன்பாகவே, வேறு படிப்புகளில் சேர்ந்து அந்தக் கல்வி நிறுவனத்தில் அசல் சான்றிதழ்களை ஒப்படைத்திருக்கும் மாணவர்கள், கல்வி நிறுவனத்தின் முதல்வரிடமிருந்து அத்தாட்சி (போனஃபைடு') கடிதத்தையும், அந்தக் கல்வி நிறுவனத்தின் சான்றொப்பமிட்ட நகல் சான்றிதழ்களையும் சமர்ப்பித்தால் போதுமானது. அசல் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை.

ஆன்-லைன் கலந்தாய்வு குறும் படம்: சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும், ஆன்-லைன் பி.இ. கலந்தாய்வில் எப்படி பங்கேற்பது, இடங்களை எவ்வாறு தேர்வு செய்வது என்பன குறித்த குறும் படம் ஒன்று அனைத்து உதவி மையங்களிலும் போட்டுக் காண்பிக்கப்படும்.
அத்துடன், ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான முழு விவரங்கள் அடங்கிய சிறிய புத்தகம் ஒன்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்தச் சிறிய புத்தகத்தை மாணவர்கள் தவறாமல் கேட்டுப் பெற்றுச் செல்ல வேண்டும் எனவும் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.

உதவி மையங்களுக்கு செல்ல முடியாவிட்டால்...
பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வு உதவி மையங்களில் வெள்ளிக்கிழமை முதல் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் தவிர்க்க முடியாத காரணங்களால் செல்ல முடியாத மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை. மாணவருக்குப் பதிலாக அவருடைய பெற்றோர் பங்கேற்கலாம். அவ்வாறு வரும் பெற்றோர், மாணவரின் புகைப்படத்துடன் கூடிய அத்தாட்சிக் கடிதத்தையும், மாணவரின் அசல், நகல் சான்றிதழ்களையும் உதவி மையத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அத்தகைய பெற்றோர் தங்களுடைய அசல் புகைப்பட அடையாள (ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு அட்டை, கடவுச் சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை) இதில் ஏதாவது ஒன்றைச் சமர்ப்பிப்பது அவசியம்.
மாணவரோ அல்லது பெற்றோரோ குறிப்பிட்ட தேதியில் உதவி மையத்துக்குச் செல்ல முடியாதபோது, கடைசி நாளான ஜூன் 14-ஆம் தேதியன்று தொடர்புடைய கலந்தாய்வு உதவி மையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம்.

இந்த இரண்டாவது வாய்ப்பிலும் உதவி மையத்துக்குச் செல்ல முடியாத மாணவர்கள், சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் உதவி மையத்தில் ஜூன் 15-ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம் என்றார் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ்.
'என்றும், 16 ஆக துரைமுருகன்' பன்னீர் கிண்டலால் சிரிப்பலை

Added : ஜூன் 08, 2018 04:49





சென்னை:எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகனை, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கிண்டலடிக்க, சபையில் சிரிப்பலை எழுந்தது.
சட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க., ஆறுக்குட்டி: கோவை வடக்கு தாலுகாவை இரண்டாக பிரித்து, துடியலுாரை புதிய தாலுகாவாக்க, அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் உதயகுமார்: நிபந்தனைகள் பூர்த்தியாகாததால், புதிய தாலுகா அமைப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை.

ஆறுக்குட்டி: கோவை வடக்கு தாலுகா, அதிக மக்கள் தொகை உடைய பகுதி. எனவே, தாலுகாவை பிரிக்க வேண்டும்.

அமைச்சர் உதயகுமார்: கோவை புறநகர் பகுதி, வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. கோவை வடக்கு தாலுகா அலுவலகம், நகருக்குள் உள்ளது; மக்கள் வந்து செல்ல சிரமப்படுகின்றனர்.எனினும், நிபந்தனைகள் பூர்த்தியாகாததால், தாலுகாவை பிரிப்பது சிரமமாக உள்ளது. இதை, முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் சென்று பரிசீலிக்கப்படும்.

அ.தி.மு.க., - லோகநாதன்: கே.வி.குப்பத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய தாலுகா உருவாக்க வேண்டும்.

அமைச்சர் உதயகுமார்: நிபந்தனைகள் பூர்த்தியாகவில்லை; அம்மாவின் அரசு, இதுவரை, 72 வட்டங்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: அம்மாவின் அரசு சார்பில், கே.வி.குப்பம் தாலுகாவை, 73வது தாலுகாவாக அறிவியுங்கள்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம்: நடந்து கொண்டிருப்பது ஜெ., அரசு என, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஒப்புக் கொண்டதற்கு நன்றி.

துரைமுருகன்: அமைச்சர் கூறியதையே கூறினேன்; புதிய வட்டத்தை உருவாக்கினால், பாராட்ட தயாராக உள்ளேன்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம்: உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி. இன்று புதுப்பொலிவுடன் வந்துள்ளீர்கள்; என்றும் 16 ஆக உள்ளீர்கள்; அதன் ரகசியம் என்ன?இவ்வாறு துணை முதல்வர் கூறியதும், சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது. துரைமுருகன், 'பிங்க்' நிற சட்டை அணிந்து சபைக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின், 'காலா' படம்ஸ்டாலின் தரப்பினர், 'ஷாக்'

dinamalar 08.06.2018

காலா படம் பற்றி, தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ நாளிதழில், நையாண்டியும், கிண்டலும் செய்து விமர்சித்துள்ள நிலையில், அப்படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில், அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தரப்பினர், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள, காலா திரைப்படம், நேற்று வெளியானது. தமிழகத்தில் மட்டும், 600க்கும் மேற்பட்ட தியேட்டர்களில், இப்படம் திரையிடப்பட்டுள்ளது. ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பின், வெளிவரும் திரைப்படம் என்பதால், அரசியல் வட்டாரத்திலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

காலா படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து, திரையுலக பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத்துகளை, சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். பெரும்பாலானோர், படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதில், 'சிங்கத்தின் பாதையை உருவாக்குவோம்' என, நடிகர் ஆர்யா கருத்து தெரிவித்துள்ளார். ஸ்டாலினும், 'காலா' படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து, தனக்கு நெருக்கமானவர்களிடம், நேற்று காலையில் விசாரித்துள்ளார். அரசியல் கருத்துகள், 'பஞ்ச்' வசனங்கள், படத்தில் இடம் பெற்றிருப்பதை கேட்டு தெரிந்துள்ளார். ஆனால், படம் குறித்து, ஸ்டாலின், எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், அரசுக்கு ஆதரவாக, ரஜினி கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு, காலா பட வியாபாரம் தான் காரணம் என, முரசொலி பத்திரிகையில், நையாண்டியும், கிண்டலும் செய்து, விமர்சனம் வெளியாகியிருந்தது. இந்த கோபம் காரணமாக, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, ரஜினி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருந்ததை, முரசொலியில் பிரசுரிக்கவில்லை. தி.மு.க., மேடைகளில், ரஜினியை கடுமையாக விமர்சித்து பேசும்படி, பேச்சாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலா படத்தை, தி.மு.க.,வில் உள்ள ரஜினி ரசிகர்களும் பார்த்து ரசித்துள்ளனர். எனவே, காலா வெற்றி, ஸ்டாலின் தரப்பினருக்கு, அதிர்ச்சி அளித்துள்ளதாக, ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சூழ்ச்சி முறியடிப்பு!

தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர், கராத்தே தியாகராஜன் வெளியிட்ட அறிக்கையில், 'ரஜினி, அரசியலுக்கு தகுதியற்றவர் என்பது போலவும், செல்வாக்கு இழந்தவர் என்றும், கொச்சையாக விமர்சித்து வந்த உளறுவாய்காரர்களின் வாய்களில், 'ஆசிட்' ஊற்றியிருக்கிறது, காலா திரைப்படம். ரஜினியை, மக்களிடமிருந்து தனிமைப்படுத்த நினைத்த, குள்ள நரிகளின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டுள்ளது' என, கூறியுள்ளார்.

அமெரிக்கா பயணம் :

அமெரிக்காவில் உள்ள தமிழ் பல்கலைக்கழகம் சார்பில், ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடக்கிறது. அதில் பங்கேற்க, வரும், 24ம் தேதி, அவர் அமெரிக்கா செல்கிறார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

NEWS TODAY 14.02.2026