Tuesday, August 7, 2018

இளமை .நெட்: சமூக ஊடகத்துக்கு ஒரு மாதம் லீவு!

Published : 03 Aug 2018 10:51 IST


சைபர் சிம்மன்

 



சமூக ஊடகச் சவாலுக்கு நீங்கள் தயாரா? உடனே நிமிடத்துக்கு எத்தனை நிலைத்தகவல் வெளியிட வேண்டும் அல்லது எத்தனை குறும்பதிவுகள் தட்டிவிட வேண்டும் எனக் கேட்க வேண்டாம். இப்படி நிலைத்தகவல் வெளியிடுவதையும் ஒளிப்படங்களைப் பகிர்வதையும் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதுதான் சவாலே!

ஆம், இப்படி ஓர் அழைப்பை விடுத்திருக்கிறது இங்கிலாந்தின் சுகாதார அமைப்பு ஒன்று. அந்நாட்டின் ‘ராயல் பப்ளிக் ஹெல்த் சொசைட்டி’, ஒரு மாத காலம் சமூக ஊடகச் செயல்பாடுகளுக்கு குட்பை சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக செப்டம்பர் மாதத்தை ‘ஸ்கிரால் ஃப்ரீ’ மாதமாக அந்த அமைப்பு அறிவித்திருக்கிறது.

இன்று இணையத்தில் புழங்குபவர்களில் பெரும்பாலோர் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் என ஏதாவது ஒரு சமூக ஊடக சேவையையே தீவிரமாகப் பயன்படுத்துகின்றனர். நாட்டு நடப்பு நிகழ்வுகள், தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகள் என எல்லாவற்றையும், நிலைத்தகவலாகவோ ஒளிப்பட மாகவோ மீம் வடிவிலோ பகிர்ந்து கொள்வது இயல்பாகி இருக்கிறது.

இப்படிப் பலரும் சமூக ஊடகத்துக்கு அடிமையாகிவிடும் நிலை ஏற்பட்டிருப்பது கவலை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. குறிப்பாக, இளைஞர்கள் சமூக ஊடகமே கதி என இருப்பது அவர்களது மனநலம், உடல்நலம் என இரண்டையும் பாதிக்கும் விஷயமாக இருக்கிறது. கடந்த ஆண்டு, பிரிட்டனில் ‘யங் ஹெல்த் மூவ்மெண்ட்’ எனும் இளைஞர் நல அமைப்புடன் இணைந்து பொது சுகாதாரக் கழகம் நடத்திய ஆய்வு முடிவும் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

‘ஸ்டேட்டஸ் ஆஃப் மைண்ட்’ (#StatusOfMind) எனும் பெயரிலான இந்த அறிக்கை, சமூக ஊடகப் பயன்பாட்டால் கவலை, மனச்சோர்வு, உடல் தொடர்பான எதிர்மறைப் பிம்பங்களை வளர்ப்பது, இணையச் சீண்டல், தூக்கமின்மை ஆகிய பாதிப்புகளை உண்டாக்குவதாகத் தெரிவிக்கிறது. இவை தவிர, ‘ஃபோமோ’ (FOMO) எனப் பிரபலமாகக் குறிப்பிடப்படும் எதையும் தவற விட்டுவிடுவோமோ எனும் பதற்றத்தையும் உண்டாக்குகிறது.

சமூக ஊடகத் தளத்தைப் பார்த்துக்கொண்டே இருக்காவிட்டால், ஏதேனும் முக்கிய நிகழ்வு, நிலைத்தகவலைத் தவற விட்டு விடுவோம் எனும் எண்ணமே இப்படிக் குறிப்பிடப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை ‘ஃபியர் ஆப் மிஸ்ஸிங் அவுட்’ என்கின்றனர். ‘நோட்டிஃபிகேஷன்’ ஒலிக்குப் பழகிவிட்ட பலருக்கு இந்தப் பாதிப்பு இருக்கலாம்.

இந்த நிலையில் இருந்து மீண்டு, சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக, சமூக ஊடகத்துக்கு ஒரு மாதம் விடை கொடுக்கலாம் எனும் யோசனையை முன்வைத்துள்ளனர். செப்டம்பர் மாதத்தில் இதைச் சாத்தியமாக்குவதற்காக, ‘ஸ்கிரால் ஃப்ரீ’ செப்டம்பர் எனும் கோஷத்தோடு, இங்கிலாந்து அமைப்பு தனது இணையதளம் மூலம் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டுள்ளது.

சமூக ஊடகப் பயன்பாடு, உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய நிலையை ஏற்படுத்தவும் இது வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. ஒரு மாத காலம் சமூக ஊடகத்துக்கு விடை கொடுக்க நீங்கள் தயாரா? இங்கிலாந்தில் உள்ளவர்கள்தாம் இதைச் செய்ய வேண்டும் என்றில்லை.

சமூக ஊடகப் பயன்பாட்டின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது என நினைக்கும் யார் வேண்டுமானாலும் இதில் ஈடுபடலாம். சமூக ஊடகம் இல்லாமல் ஒரு மாதம் இருக்க முடியாது என நினைப்பவர்கள், பகுதி அளவேனும் இதற்கான முயற்சியில் ஈடுபடலாம். மாலை ஆறு மணிக்கு மேல் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தவிர்ப்பது, இரவுப் படுக்கையறையில் பயன்படுத்தாமல் இருப்பது போன்ற கட்டுப்பாடுகளைப் பின்பற்றலாம்.

‘ஸ்கிரால் ஃப்ரீ செப்டம்பர்’ பற்றி மேலும் தகவல்களுக்கு: https://bit.ly/2vaJdA5
எல்லா நலமும் பெற: தோட்டத்தால் குறையும் மன அழுத்தம்!

Published : 04 Aug 2018 10:58 IST

தொகுப்பு: ஷங்கர்




மூட்டுவலிக்கு இயற்கையான தீர்வு இருக்கிறதா?

மூட்டுவலியைத் தணிக்கும் களிம்பு களைவிடக் கூடுதலான நிவாரணத்தை மஞ்சள் தருவதாகத் தெரிவிக்கும் ஆய்வுகள் உள்ளன. தினசரி மஞ்சளை உட்கொண்டால் அதன் பலன் எட்டு வாரங்களில் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது. உட்கொள்ளும் மஞ்சளுடன் சிறிதளவு மிளகும் கலந்திருக்க வேண்டும்.

ஒரே இடத்தில் உட்காராமல் உடலைச் சுறுசுறுப்பாக வைத்திருப்பது எப்படி?

கணவருடனோ மனைவியுடனோ நடைப்பயிற்சி செல்லுங்கள். குழந்தைகள், செல்லப் பிராணியுடனும் காலையிலோ மாலையிலோ ‘வாக்’ போகலாம். படி ஏறும் இறங்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் லிஃப்டைப் பயன்படுத்தாமல் நடந்து செல்லுங்கள். நண்பர்களைச் சந்திக்கத் திட்டமிட்டால் நடந்துகொண்டே பேசும் இடங்களைத் தேர்ந்தெடுங்கள்.

கார்கள், இரு சக்கர வாகனங்களுக்குப் பதிலாகப் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள். தினசரி அலுவலகத்துக்குப் போகும்போதோ வீடு திரும்பும்போதோ இரண்டு நிறுத்தங்களுக்கு முன்னால் இறங்கி நடந்து பாருங்கள். தொலைக்காட்சியில் சேனல் மாற்றும்போது, ரிமோட்டைப் பயன்படுத்தாமல் எழுந்து சென்று டி.வி.யில் சேனலை மாற்றுங்கள்.

மன அழுத்தத்தைச் சரிசெய்யும் இயற்கை வழிமுறைகள் உண்டா?

தோட்ட வேலை செய்வதால் மன அழுத்தம் குறைந்து, நிறைவும் களிப்பும் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாரத்துக்கு ஆறு மணி நேரமாவது தோட்டத்தில் செலவழிக்கிறவர்களுக்கு மன அழுத்தத்தின் தாக்கம் குறைவாக உள்ளது.

கோக் பானம் ஒரு கிளாஸ், ஆரஞ்சு பழச்சாறு ஒரு கிளாஸ். எது ரத்தத்தில் சர்க்கரையைக் கூடுதலாக அதிகரிக்கும்?

இரண்டுமே ஒரே அளவில்தான் சர்க்கரையை அதிகரிக்கும். ‘ஃப்ருக்டோஸ்’ அளவு இரண்டிலும் சமமாகவே உள்ளது. ஒருவகையில் ஆரஞ்சு பழச்சாற்றில் உள்ள கலோரிகள் கோக்கைவிட அதிகம்.

பிரெஞ்ச் ஃப்ரைஸ் போன்ற பொரித்த உணவுகள் நல்லவையா?

கார்போஹைட்ரேட் உணவை எண்ணெய்யில் பொரிக்கும்போது, நரம்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வேதிப்பொருளான அக்ரிலமைட் உற்பத்தியாகிறது. சிகரெட் புகையிலும் இந்த அக்ரிலமைட் உள்ளது. சிறுநீரகம், மார்பு, கருப்பைப் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியதாக அக்ரிலமைட் உள்ளது.

இனிப்பு தேசம் 17: விளையாடுவது தவமே!

Published : 04 Aug 2018 10:59 IST


மருத்துவர் கு. சிவராமன்

 




‘கொஞ்ச நாளாவே எதுக்கெடுத்தாலும் ‘வள்வள்’ளுன்னு விழுறாரு சார்’ என வருத்தமாக வரும் தம்பதியிடம் ‘சுகர் சரியா இருக்கான்னு பார்த்தீங்களா?’ எனக் கேட்க வேண்டியதாக உள்ளது. ஆமாம்! இனிப்பு நோய், நிறைய நேரம் ‘கார’ நோயாகவும் உருவெடுக்கும்.

தேவையற்ற கோபம், எல்லோரிடமும் எரிந்துவிழுவது, கணக்கில்லாமல் கடுஞ்சொல் பேசுவது இது எல்லாம் நீரழிவு நோயாளிகளிடம் ரத்தச் சர்க்கரை கூடும்போதும் குறையும்போதும் ஏற்படும் மிக முக்கியமான மாற்றங்கள். உலகம் முழுக்கவே இதை அலசி ஆராய்ந்து தள்ளி, ‘கட்டுப்பாடில்லாத இனிப்பு, வாழ்வில் இனிப்பைக் கொஞ்சம் குறைத்து, கசப்பைக் கூட்டுகிறது’ எனச் சத்தமாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ‘Hangry’ (hungry+angry) என்ற புது ஆங்கிலச் சொல்லையும்கூட மருத்துவ உலகம் இதற்குப் படைத்துவிட்டது.

அதீத சர்க்கரையிலும் (hyperglycemia), தாழ்சர்க்கரையிலும் (hypoglycemia) இரண்டிலுமே, இனிப்பு நோயர்களுக்கு இந்த கோபமும் எரிச்சலும் குடியேறும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சாலையில் வன்முறையில் ஈடுபடுவோரிடமிருந்து, ஆஸ்பத்திரியில் நர்ஸிடம் சண்டை கட்டுவோர்வரை உள்ள நபர்களில், ‘இனிப்பர்கள்’ கொஞ்சம் அதிகமாம். ரத்த இனிப்பு அளவுக்கும், ரத்த இன்சுலின் அளவுக்கும் மூளையின் பணிகளுக்கும் எக்கச்சக்க தொடர்பு உள்ளது.

சுயக்கட்டுப்பாட்டுக்கு… தலாமஸ்!

மூளையின் தலாமஸ் எனும் பகுதிதான், பசியை நமக்கு உணர்த்தும் விஷயம். பசி அகோரப் பசியாக மாறுவது, பசி நேரத்தில் ‘இது நமக்கு நல்லதல்ல. சுகரைக் கூட்டிடும், வேண்டாம்!’ எனும் சுயக்கட்டுப்பாட்டைத் தருவது எல்லாம் தலாமஸ்தான். ரத்த சர்க்கரைக் கட்டுப்பாடில்லாதவர்கள், பசியோடு வீட்டுக்குள் நுழையும்போது டைனிங் டேபிளில் கையில் கிடைக்கும் வஸ்துவையெல்லாம் வாரிச்சுருட்டி வாயில் அடக்கிக்கொண்டு, அதனால் வீட்டம்மாவிடம் வாங்கிக் கட்டிக்கொள்வதற்குக் காரணம் தலாமஸைச் சர்க்கரைக் கொஞ்சம் பாடாய்ப்படுத்துவதால்தான் என்கிறது நவீனஅறிவியல்.

மூளையின் தலாமஸ்தான் சுயக் கட்டுப்பாட்டை (self-control) ஒருவருக்குத் தரும். தான் பார்த்த, கேட்ட, தொட்ட, முகர்ந்த என அத்தனை உணர்வுத் தகவல்களையும் நரம்பு மூலமாகப் பெற்று சீராகக் கையாள்வதும், அதனால் மனத்திலும் உணர்விலும் எழுச்சியை ஏற்படுத்துவதும் தலாமஸ்தான். அந்த தலாமஸைத் தடுமாறச்செய்வது சர்க்கரையின் ஏற்றத்தாழ்வு.

ஒருவர் உணவு இடைவேளையில் சாப்பாட்டுக்குச் செல்ல ஏதாவது காரணத்தால் நேரமாகும்போது, கன்னாபின்னாவெனக் கோபப்படுகிறார் என்றாலோ, அப்போது அவசர அவசரமாய் எழுதும்போது ‘ஸ்பெல்லிங் மிஸ்டேக்’ ஏகத்துக்கும் வருகிறது என்றாலோ, அந்த நேரத்தில் எதிர்ப்படும் ஊழியரைக் கடித்துத் துப்புகிறார் என்றாலோ, தயவுசெய்து அடுத்த நாள் ரத்த சர்க்கரை அளவை வெறும் வயிற்றில் பார்க்கச் சொல்வதும், மூன்று மாத சராசரி சர்க்கரை அளவைத் தெரிந்துகொள்வதும் மிக மிக முக்கியம்.

கோபம் குறைக்கும் நடை

பேசும்போது சரியான சொற்களுக்குத் தடுமாறுவது, மன அழுத்தம், வேலை ஏதும் செய்யாமலே, உடற்சோர்வாயிருப்பது, மனத்தை ஒருநிலைப்படுத்த இயலாது தயங்குவது, எரிச்சல், பரபரப்பு இவை எல்லாமே சர்க்கரை, ரத்தத்தில் அதிகரித்ததன் காரணமாக இருக்கும். தடாலடியாக இதை உளவியல் சிக்கலாய்க் கருதி உளவியல் மருந்துப் பக்கம் ஓட வேண்டியதில்லை. மாறாக, தினசரி 10 ரவுண்டு ஓடினாலோ நடந்தாலோ போதும். அனைத்தும் மாறிவிடும்.

தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இனிப்பர்கள் கோபம் கொள்வதில்லை. மாறாக, காதலும் கரிசனமும் கொள்கிறார்கள். அவர்களின் ஞாபகசக்தி, முடிவெடுக்கும் திறன், கற்பனை வளம் அத்தனையும் கூடுகிறது. நடை, சர்க்கரையைப் பதமாய்க் கையாண்டு, மூளையின் தலாமஸைத் தடவிக் கொடுத்துத் தட்டிக் கொடுப்பதாலேயே இத்தனை மாற்றமும்.

நீரழிவு நோயாளிகள் தன் உடலுழைப்பால், உடற்பயிற்சியால் ரத்தத்தில் உள்ள இன்சுலினை, செல்லுக்குள் தள்ளிவிடாமல் இருந்தால், அது மூளைக்குள்ளேயே சுற்றித் திரியும். அது சிலருக்கு நுண் நாளப் பாதிப்பை (micro vascular damage) ஏற்படுத்துவதுபோல, வேறு சிலருக்கோ அதுவே ஒருவகைத் திட்டுக்களாகின்றன (amyloid protein buildups / brain plaques). இந்தத் திட்டுக்கள் மூளையில் சேரச்சேர, பின்னாளில் ஞாபகத் திறன் குறையும். பல நோய்கள் வரிசையாய் வந்து சேரும்.

மைதானமே கோயில்

சர்க்கரையைச் சரியாக வைக்காவிடில், ஒரு சமூகத்தில் விவாகரத்து முதல் வன்முறைவரை பல பிரச்சினைகள் அதிகரிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதில் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது. மனத்தை எளிதாக்க முதலில் நடைப்பயிற்சி, அப்புறம் கொஞ்சம் தியானப் பயிற்சி ஆகியவை கண்டிப்பாக ஒவ்வோர் இனிப்பரும் செய்ய வேண்டிய விஷயம்.

விளையாட்டு மிக அழகான, எளிதான தியானப் பயிற்சி என்பது பலருக்கும் தெரியாது. அதில் பந்துதான் கடவுள். மைதானம்தான் கோயில். கூட விளையாடும் அத்தனை பேரும் குருமார்கள். தனி அறையில் கடவுளை நோக்கி மனதை ஒருமுகப்படுத்த தியானிக்கும் போதுதான் ஈ.எம்.ஐ.பிரச்சினை, கொடுங்கோல் பாஸின் குரூர முகம் போன்றவை எல்லாம் அநியாயத்துக்கு வந்து நிற்கும். ஆனால், அதுவே விளையாட்டில், பந்தைத் தவிர வேறெதிலும் நாம் கவனம் செலுத்த மாட்டோம். ஆதலால் விளையாட்டும் உடற்பயிற்சியோடு கூடிய ஒரு தவமே!

(தொடரும்)
கட்டுரையாளர், சித்த மருத்துவர்
தொடர்புக்கு: herbsiddha@gmail.com
2022-ல் இந்திய மக்கள் தொகை சீனாவை மிஞ்சிவிடும்; கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: எம்.பி.க்கள் வலியுறுத்தல்

Published : 06 Aug 2018 14:07 IST


பிடிஐ புதுடெல்லி,

 


கோப்புப்படம்

2022-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை மிஞ்சிவிடும் என்பதால், மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாநிலங்களவையில் இன்று எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள்.

மாநிலங்களவையில் இன்று கேள்விநேரத்துக்கு பிந்தைய நேரத்தில் பாஜக எம்.பி. அசோக் பாஜ்வாய் எழுந்து பேசுகையில், ‘‘இந்தியாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 2022-ம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகையை இந்தியா மிஞ்சி உலக அளவில் அதிக மக்கள் தொகை உள்ள நாடாகமாறிவிடும். 2050-ம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகை 166 கோடியாக அதிகரிக்கும்.

நாட்டின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த சிறப்புத் திட்டம், நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுக்கு 2 கோடி மக்கள் தொகை உயர்ந்து வருகிறது. உலக அளவில் இந்தியாவின் நிலப்பரப்பு 2.4 சதவீதம்தான், ஆனால், உலகமக்கள் தொகையில் இந்தியா 17.5 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

கடவுள் பெயரைக் கூறி குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை தேவை’’ என்று வலியுறுத்திப் பேசினார். இவருக்கு ஆதரவாக பாஜக எம்.பி. விஜய்பால் சிங் தோமரும் பேசினார்.

அதைத் தொடர்ந்து பேசிய சமாஜ்வாதி எம்.பி. ஜாவித் அலி கான், ‘‘உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு நகரங்களில் செயல்படும் சிறுபான்மையினருக்கான கல்வி அமைப்புகளில் நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை.சிறுபான்மையினர் கல்விக்காக போதுமான நிதியும் ஒதுக்கப்படவில்லை

தேசிய சிறுபான்மை ஆணையத்துக்கான ஆணையர், உறுப்பினர்கள் கடந்த 4 ஆண்டுகளாக நியமிக்கப்படாமல், இருக்கிறது. இதுவரை 7 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையிலும் யாரும் நியமிக்கப்படாமல், பாரபட்சம் காட்டப்படுகிறது‘‘ என்று தெரிவித்தார்.

இதேப்போன்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மணிஷ் குப்தா, சமாஜ்வாதி எம்.பி. ரவி பிரகாஷ் வெர்மா, அனில் பலுனி, காங்கிரஸ் உறுப்பினர் ஹனுமந்தய்யா, மோதிலால் வோரா, ஹூசைன் தல்வாய் ஆகியோரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கும் ஒரே தேர்வு நடைமுறை: முறைகேடுகளைத் தடுக்க அதிரடி மாற்றம்

By DIN | Published on : 07th August 2018 02:09 AM


பல்கலைக்கழகத் தேர்வு முறைகேடுகளைத் தடுப்பதற்காக, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே நடைமுறையை அறிமுகப்படுத்த தமிழக உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இப்புதிய நடைமுறை மூலம் ஒரு மாணவருடைய விடைத்தாள் எந்த மையத்துக்குச் சென்றுள்ளது என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்பதோடு, பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட ஒருசில அதிகாரிகளுக்கு மட்டுமே இதைக் கையாளும் அதிகாரம் கொடுக்கப்படும் என்பதால் முறைகேடு நடைபெற வாய்ப்பிருக்காது என்கின்றனர் உயர் கல்வித் துறை அதிகாரிகள்.

விடைத்தாள் முறைகேடு காரணமாக... அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறு மதிப்பீடு முறைகேடு மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதோடு, அண்ணா பல்கலைக்கழகத்தின் மீதான நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. உண்மையில் தேர்ச்சியடையக் கூடிய மாணவர்களை தோல்வியடையச் செய்திருப்பதும், தகுதியில்லாத மாணவர்களை தேர்ச்சியடையச் செய்திருப்பதும் கல்வியாளர்கள், பெற்றோர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்வு நடைமுறையில் அதிரடி மாற்றம் கொண்டுவர உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகள்: இப்போது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறு தேர்வு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் தேர்வுத் தாளில் மறைமுக எண் (டம்மி' எண்) போடப்படும். அதாவது, தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறும் இணைப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுத் தாள்கள், நேரடியாக சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு ஒவ்வொரு மாணவரின் தேர்வுத் தாளுக்கும் டம்மி' எண் போடப்பட்டு, தேர்வுத் தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த நடைமுறையில், ஒரு மாணவர் எளிதில் தனது விடைத்தாளைக் கண்டுபிடித்து முறைகேட்டில் ஈடுபட்டுவிட முடியும் என்பது, அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நடைமுறையை மாற்ற தமிழக உயர் கல்வித் துறை இப்போது முடிவு செய்துள்ளது.

பார் கோட்' நடைமுறை: அதாவது, விடைத்தாள்களில் பார் கோட்' நடைமுறையை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, ஒவ்வொரு மாணவருடைய விடைத்தாளின் முதல் பக்கம் பல்கலைக்கழகத்திலேயே வைத்துக்கொள்ளப்பட்டு, விடைகள் இடம்பெற்றிருக்கும் மற்ற பக்கங்கள் மட்டும் சிறப்புக் குறியீடு இடப்பட்டு பல்வேறு பகுதிகளில் உள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன.

முறைகேட்டுக்கு வாய்ப்பிருக்காது: இச்சிறப்புக் குறியீடு இடும் அதிகாரம் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உள்பட ஒரு சில அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பதால், முறைகேடு நடைபெற்றால் அவர்கள் மட்டுமே பொறுப்பேற்கவேண்டிய கட்டாயச் சூழல் ஏற்படும். மேலும், பருவத் தேர்வில் மட்டுமின்றி, விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் விண்ணப்பித்தலின்போதும் இதேபோன்ற நடைமுறை பின்பற்றப்படும். எனவே, புதிய நடைமுறை மூலம் முறைகேட்டுக்கு வாய்ப்பிருக்காது என்கின்றனர் கல்வியாளர்கள்.

இது குறித்து உயர் கல்வித் துறைச் செயலர் சுனில் பாலிவால் கூறியது: அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறு மதிப்பீடு முறைகேடு போன்று வரும் காலங்களில் முறைகேடுகள் நடைபெறாத வகையில், புதிய தேர்வு நடைமுறையை அறிமுகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது விடைத்தாளில் பார் கோடு' போன்ற ரகசியக் குறியீடு இடம்பெறச் செய்யப்பட உள்ளது. அதுமட்டுமின்றி விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் நடைமுறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
குழு அமைக்கப்படும்: இதற்காக உயர் கல்வித் துறை இணைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக பரீட்சார்த்த முறையில் சிறிய அளவில் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு, பின்னர் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் அறிமுகம் செய்யப்படும்.

இப்போது, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறு விதமான தேர்வு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலை மாற்றப்பட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான தேர்வு நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து கழுதைப் புலி தப்பியது: தேடும் பணி தீவிரம்
By DIN | Published on : 06th August 2018 11:42 PM

தாம்பரத்தை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து கழுதைப் புலி தப்பியதையடுத்து அதை தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மைசூருலிருந்து 4 கழுதைப் புலிகள் கொண்டுவரப்பட்டு அவை ஒரு கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஒரு கழுதைப் புலி கூண்டிலிருந்து தப்பி ஓடியுள்ளது. இன்று மாலை கூண்டிலிருந்த 4 கழுதைப் புலிகளில் ஒரு கழுதைப் புலி காணாதது கண்டு உயிரியல் பூங்கா ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
உடனடியாக வனத்துறை அதிகாரிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவை நேரில் பார்வையிட்டனர்.

பின் தப்பி ஓடிய கழுதைப் புலி வண்டலூர் உயிரியல் பூங்கா அல்லது அதனை சுற்றுயுள்ள பகுதியில் இருக்க வாய்ப்புள்ளது எனவே அதை கண்டறிவதற்காக நாளை செவ்வாய்கிழமை உயிரியல் பூங்கா ஊழியர்களுக்கு விடுமுறை என்றாலும் பணிக்கு வர உத்தரவிட்டுள்ளனர். எனவே நாளை காலை முதல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கழுதைப் புலியை தேடும் பணி தீவிரப்படுத்தப்படும் என தெரிகிறது.
ரயில்வே ஊழியர்கள் 'பாஸ்' பெற புது வசதி

Added : ஆக 07, 2018 05:01


சென்னை: ரயில்வே ஊழியர்கள், ரயில் பயணத்திற்கான, 'பாஸ்' பெற, இணைய தளத்தில் விண்ணப்பிக்கும் வசதியை, தெற்கு ரயில்வே நேற்று அறிமுகம் செய்தது.ரயில்வே ஊழியர்கள், ஓய்வூதியர்கள், ரயில் பயண, 'பாஸ்' வாங்கவும், அதை பயன்படுத்தி, டிக்கெட் வாங்கவும், ரயில்வே அலுவலகத்திற்கு, இரண்டு முறை வந்து செல்ல வேண்டியிருந்தது. அலைச்சலை தவிர்க்க, இணைய தளம் வாயிலாக, விண்ணப்பிக்கும் வசதி, நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.இந்த வசதியை, தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஷ் ரேஸ்தா, சென்னையில் உள்ள, தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.இதன்படி, ரயில்வே ஊழியர்கள், ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே, ரயில் பயண, 'பாஸ்' பெற, ரயில்வே இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 'பாஸ்' தயாரானதும், நிலையத்திற்கு வந்து, 'பாஸ்' பெற்று, டிக்கெட் கவுன்டரில், உரிய டிக்கெட்டை பெறலாம்.நேரில் வந்து, 'பாஸ்' பெற முடியாதவர்கள், அவர்களின் அனுமதி பெற்றவர்களை ரயில்வே அலுவலகத்திற்கு அனுப்பி, 'பாஸ்' பெற்றுக்கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

NEWS TODAY 27.06.2026