Saturday, September 8, 2018

காற்றில் கரையாத நினைவுகள் 24: எது பொற்காலம்!

Published : 14 Aug 2018 09:11 IST


வெ.இறையன்பு




மனம் பழையவற்றை வசந்தகாலமாக எண்ணிப் பார்க்கும் விசித்திரம் கொண்டது. சிலநேரங்களில் விடு பட்டவைகூட மகிழ்ச்சியானதாக தோன் றும். விடுதலையானவன் சிறைச்சாலையைக் கடக்கும்போது சோகப்படுவதுபோன்ற ஒருவித மயக்கம் அது. சமூக அளவில் இந்த 50 ஆண்டுகளில் எத்தனையோ விரும்பத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருக் கின்றன. கல்லூரியில் கிராம முகாம் சென்றபோது, அங்கிருந்த தேநீர் கடைகளில் இரட்டைக் குவளைகள் இருப்பதைப் பார்த்து வேதனைப் பட்டோம். ஒருவரை ‘ஒதுக்கிவைக்கப்பட்டவர்’ எனக் குத்திக் காட்டு வதற்கு அதனினும் வேறு முத்திரை இல்லை. இன்று எல்லா இடங் களிலும் காகிதக் குவளைகள் அந்த அவலத்தை அறவே நீக்கி விட்டன. மனிதர்கள் செய்ய முடியாததை தொழில்நுட்பம் சாதித்துவிட்டது.

இந்திய ஆட்சிப் பணி என்பது கனவாக இருந்த காலம் மாறி எண்ணற்ற சிற்றூர்களில் இருந்து தமிழில் படித்தவர்கள் எழுதித் தேர்ச்சி பெற்று இந்தியாவெங்கும் உயர்ந்த பணிகளில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறோம். மாதிரித் தாள்கள் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ள சென்னையில் ஒரு வாரம் தங்கியிருந்து நடையாக நடந்து அவற்றைப் பெற்ற அனுபவம் எனக்கு உண்டு.

இன்று விரலைச் சொடுக்கினால் விவரங்கள் குவியல் குவியலாக வந்துவிழும் இணைய வசதி. அரிய புத்தகங்களை எளிதில் பெறும் வசதி. உலகின் எந்த மூலையில் கிடைக்கும் புத்தகத்தையும் கணினியில் பதிவிறக்கம் செய்து விடலாம். அறிவு ஒரு சாராருக்கே சொந்தம் என்பதை அடித்து ஒடித்த விஞ்ஞான முன்னேற்றம். எந்த நாட்டுக்கும் ஒரு விநாடியில் மின்னஞ்சல் அனுப்ப முடியும் என்ற அதிவேக தகவல் பரிமாற்ற வசதி.

நிறைய குழந்தைகள் பெரிய வயிற்றுடன். வெளிறிய முகத்துடன். குழி விழுந்த கண்களுடன் போஷாக்குக் குறைவுடன் இருந்த நிலை மாறி இன்று ‘ஊளைச் சதையை குறைப்பது எப்படி?’ என்கிற கவலையில் பெற்றோர். அன்று கோழிமுட்டை என்பது ஒரு சில கடைகளில் இரும்புக் கூடையில் உறியில் தொங்கும் அபூர்வ வஸ்து. பால் காலையில் மட்டுமே கிடைக்கும் அரிய பண்டமாக இருந்த நிலை மாறி, 24 மணி நேரமும் பாக்கெட்டில் வாங்கி வரும் பொருள்.

வதவதவென பிள்ளைகளைப் பெறுவது வாடிக்கையாக இருந்தது. பெண்கள் உடல்நலம் குறைந்து, ஆண்கள் கவலைகள் நிறைந்து அப்போதெல்லாம் கதைகளில் ‘40 வயதுப் பெரியவர்’ என்று எழுதும் வழக்கம் இருந்தது. இன்று 60 வயது நிறைந்தவர்களும் 20 வயதுபோல இருக்க முனைகிறார்கள். வயது என்கிற வரையறை இன்று எடுபடுவதில்லை.

எங்கு பார்த்தாலும் ஓலைக் குடிசைகள் இருந்த சிற்றூர்கள் இன்று மெல்ல மெல்ல மாறி வருகின்றன. அப்போது ஓட்டு வீடு அரிது. மாடி வீட்டை கல்வீடு என்று அழைப்பார்கள். இன்று பல வீடுகள் மச்சு வீடுகளாக மாறி வருகின்றன. அரசு கட்டித் தரும் வீடுகளும், மானியத்தால் உருவாக்கப்படும் இல்லங்களும் நிமிர்ந்து நிற்கின்றன. அன்று வசதியுள்ளவர் உபயோகித்த ஆடைகளை வாங்கி அணிந்து கொள்ள சிலர் ஆயத்தமாக இருந்தார்கள். இன்று பழைய துணிகளை யாரும் பெற விருப்பமாக இல்லை.

இன்றைய தலைமுறை சென்ற தலைமுறையைவிட உயரமாகிக்கொண்டிருக்கிறது. ஊட்டச்சத்துக்கள், புரதம் போன்றவை தாராளமாகக் கிடைப்பதும் இதற்குக் காரணம். தெளிவான முகமும், தோற்றப் பொலிவும் அனைவருக்கும் சாத்தியமாகும் நிலை உருவாகிக்கொண்டு வருகிறது. பலரது முகத்தில் படித்த களையும், கற்றறிந்த தேஜசும் காணப்படுகின்றன. கல்லூரிக் கல்வி ஒரு சில ருக்கு மட்டுமே என்பது மாறி மேனிலைப் பள்ளி களாக மூலைமுடுக்குகளிலெல்லாம் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. பொறியியல் படிப்பு சிற்றூர்களிலும் கிடைக்கிறது. பள்ளிப் பக்கமே எட்டிப் பார்க்காத குடும்பங்களில் மருத்துவமும், பொறியியலும் சாத்தியமாகியிருக்கின்றன.

வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. வாங்கும் திறன் அதிகரித்திருக்கிறது. பஞ்சம், பட்டினி ஆகியவற்றின் தாக்கம் குறைந்திருக்கிறது. சோப்புகூட ஆடம்பரப் பொருள் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட காலம் ஒன்று உண்டு. இன்று சின்னச்சின்ன ஊர்களிலும் உடல் தூய்மையை உறுதிசெய்யும் பொருட்கள் சின்னப் பொட்டலங்களாக கண் சிமிட்டி மின்னுகின்றன. ஊருக்கு ஓர் ஆங்கிலப் பள்ளி என்றிருந்த நிலை மாறி திரும்பிய பக்கமெல்லாம் ‘ஆங்கிலவழி படிப்பு’ என்று அந்நிய மொழியில் படிப்பது இப்போது சர்வசகஜமாகிவிட்டது. ஆனால், தமிழும் சரியாகப் படிக்கத் தெரியாமல் ஆங்கிலமும் முறையாக பேசத் தெரியாமல் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு காலாய்த் தடுமாறும் தலைமுறை ஒன்று உருவாகியிருக்கிறது.

இன்று சமூக விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. திரைத் துறையினரும் நடிப்பு மட்டுமே வாழ்வு என நினைக்காமல் மக்களின் நாடித் துடிப்புகளையும் அறிந்து களத்தில் இறங்கிப் போராடுகிறார்கள்.

ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி எதையோ தொலைத்த உணர்வு எங்கள் தலைமுறையில் அனைவருக்கும் இருக்கிறது. அந்த இனம்புரியாத சோகத்தை எப்படி ஆற்றுவது என்று புரியாமல் அடிக்கடி பழைய நினைவுகளில் மூழ்கி மகிழ்ச்சியாக இருந்த காலங்களை மனத்தால் வருடிப் பார்க்கின் றோம்.

பிள்ளைகளுக்கு எல்லாம் வாங்கித் தந்தும் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது போன்று தோன்ற வில்லை. ஆனால் அன்று எதுவுமே யாரும் வாங்கித் தராமலேயே நாங்கள் மகிழ்ச்சியாக இருந்த உணர்வு. இன்று வீட்டில் பொருட்களெல்லாம் குவிந்தும் ஒருவித வெறுமை. உறுப்பினர்கள் நிறைந்தும் ஒருவிதத் தனிமை.

மிகுந்த பாதுகாப்பான வாழ்க்கைக்கு நடுவில் ஏதோ பயம் ஊஞ்சலாடுகிறது. தூங்கி எழும்போது பொழுதை ரசித்துக்கொண்டு எழுபவர்கள் குறைவு. எதுவும் இல்லாதபோது இருந்த சுதந்தரம் எல்லாம் இருக்கும்போது பறிபோனதைப் போன்ற பரிதாபம்.

நம் உறவுகளையும், உரிமைகளையும் யாரோ வழிப்பறி செய்ததைப்போன்ற எண் ணம். ஏதோ ஒன்று குறைகிற மாதிரியே எப்போதும் இருக்கிறது. சுவர்கள் பலமாக இருந்தாலும் இதயம் பலவீனமாக இருக்கிறது.

நாகையில் கல்லார் தர்காவில் கந்தூரி விழாவின்போது அங்கு இருக்கும் இஸ்லாமிய நண்பர்கள் அக்கரைப் பேட்டை நைனியப்ப நாட்டாரை `அப்பா’ என்று அழைப்பதைப் பார்த்து பூரித்துப் போயிருக்கிறேன். சின்ன வயதில் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் சுபான் பாயும், விக்டர் குடும்பமும் அண்ணன், தம்பிகளாக உறவு வைத்து அழைத்துப் பழகியது நினைவுக்கு வந்தது. இப்போது அக்கம்பக்கங்களில் ஏனோ கண்ணுக்குத் தெரியாத இமயத் தடுப்புகள் பிரி வினைகளின் பெயரால் எல்லா இடங் களிலும் விரவிக் கிடப்பதைப் போன்ற வேதனை.

புதிய புதிய சந்திப்புகளில் பழைய உறவுகளையும், நட்புகளையும் தொலைத்துக்கொண்டே இருக்கிறோம். எல்லாம் மேம்போக்காக இருக்கும் பழக்கத்தில் மையத்தைத் தவற விடுகி றோம்.

இழந்தவற்றை நினைவுபடுத்த எப்போதும் இல்லாத அளவு எல்லா இடங்களிலும் பழைய மாணவர்கள் சந்திப்பு. அங்கு வழியிலேயே இடறி விழுந்தவர்கள் நினைவில் இதயம் வலிக்கிறது.

ஓய்வுக்குப் பிறகு சகோதர சகோதரிகள் ஒரே இடத்தில் ஒன்றாய்த் தங்க முடியாதா! செலவைப் பிரித்து உணவைப் பகிர்ந்து உயிரை நீட்டிக்க முடியாதா! ஒரே சமையலறையில் உள்ளங்கள் ஒன்றாக மாலையில் பழங்கதைகள் பேசி களித்திருக்க இயலாதா! அதிக நாட்கள் முடியாவிட்டாலும் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு வாரமாவது ஒன்றாய்க் கூடி மகிழலாமே!

அப்போது அந்தப் பொற்காலம் திரும்பலாம்.

அன்பின் ஆதிக்கம் அனைத்து சுயநலங்களையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு எழும்பி நிற்கும் காலம்தானே பொற்காலமாக இருக்க முடியும்!

- நிறைந்தது -
கல்விக்கடன் வழங்க வேண்டும் : வங்கிகளுக்கு ஐகோர்ட் அறிவுரை

Added : செப் 08, 2018 00:06


மதுரை: 'தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளுக்கு சமூக பொறுப்பு உள்ளது. ஏழை மாணவர்கள் உயர்கல்வி கனவு நிறைவேற, வங்கிகள் கல்விக் கடன் வழங்க வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த, அழகர்சாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: கூலி வேலை செய்கிறேன். என் மகள், பவித்ரா பிளஸ் 2 வில், 1,081 மதிப் பெண் பெற்றார். வாசுதேவநல்லுார், தங்கப்பழம் வேளாண் கல்லுாரியில், விவசாய பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். பி.எஸ்சி., நான்காண்டு படிப்பிற்கு, கல்வி மற்றும் இதரக் கட்டணம், 4.60 லட்சம் ரூபாய். இதைகல்விக் கடனாக வழங்க கோரி, கருப்பட்டி ஆந்திரா வங்கி கிளையில் விண்ணப்பித்தோம். விவசாயக் கடனை செலுத்தவில்லை எனக்கூறி, வங்கி நிர்வாகம் கடன் வழங்கவில்லை. என் விவசாயக் கடனை அரசு தள்ளுபடி செய்தது. மகளுக்கு கல்விக் கடன் வழங்க, வங்கிக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அழகர்சாமி மனு தாக்கல் செய்தார்.நீதிபதி, வி.பார்த்தி பன் விசாரித்தார்.

வங்கி நிர்வாகம் தரப்பில், தெரிவிக்கப்பட்டதாவது: ஒட்டுமொத்த வாராக் கடன் நிலுவையில், 3.45 லட்சம் பேரிடமிருந்து கல்விக்கடன், 6,356 கோடி ரூபாய் வரவேண்டியுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும், வாராக்கடனில் கல்விக் கடன், 40 சதவீதம். இவ்வாறு வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: பெற்றோர் கடனை செலுத்தத் தவறியதற்காக, அவர்களின் வாரிசுகளுக்கு கல்விக் கடன் மறுக்கக்கூடாது. மறுப்பதற்கான காரணங்களை, வலைபோட்டு வங்கி கண்டுபிடிக்கிறது. இலவச உயர்கல்வி வழங்க வேண்டியது, அரசின் கடமை. அதில் இருந்து, அரசு பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. தற்போது உயர்கல்வி வழங்கும், தனியார் கல்வி நிறுவனங்கள் காளான்கள் போல் முளைத்து வருகின்றன. இதற்கேற்ப கல்விக் கட்டணம் உயர்ந்து வருகிறது. இச்சூழ்நிலையில் கல்விக் கடன் வழங்கி, ஏழை மற்றும் பொருளாதார ரீதியாக, பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்வி கனவு இலக்கை நிறைவேற்ற, வங்கி உதவ வேண்டும். கடன் மறுப்பதால் ஏழை மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பு பறிபோகும். தேசியமய வங்கிகளுக்கு சமூக பொறுப்பு உள்ளது. தொழில்நுட்பக் காரணங் கள் அடிப்படையில், தகுதி யான மாணவர்களுக்கு கல்விக்கடன் மறுக்கக்கூடாது. மனுதாரர் மகளுக்கு, கல்விக் கடன் வழங்க, வங்கி கிளை மேலாளர், தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறினார்.
குட்கா,முறைகேடு,Sasikala,சசிகலா,சூத்திரதாரி,
dinamalar 08.09.2018

தமிழகத்தை உலுக்கும், 'குட்கா' முறைகேட்டுக்கு சூத்திரதாரியாக, சசிகலா இருந்திருக்கலாம் என, சி.பி.ஐ., வட்டாரத்தில் சந்தேகிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில், 'அப்ரூவர்' ஆன, குட்கா ஆலை உரிமையாளர், யார் யாருக்கு எவ்வளவு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது என்பதை, விசாரணையில் அம்பலப்படுத்தி உள்ளார். இதன் காரணமாக, சி.பி.ஐ., அதிகாரிகள், புதிய கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

தமிழகத்தில், 2013ல், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட, போதை பொருட்களை விற்க, ஜெ., அரசு தடை விதித்தது. எனினும், கடைகளில் அவை விற்பனை செய்யப்பட்டு வந்தன. வருமான வரித்துறை அதிகாரிகள், 2016ல், சென்னையில் உள்ள, குட்கா, பான் மசாலா நிறுவனங்களில், அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, 250 கோடி ரூபாய் அளவிற்கு, தமிழகத்தில், சட்ட விரோதமாக, குட்கா வர்த்தகம் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குட்கா தயாரிப்பாளர் மாதவ ராவுக்கு சொந்தமான, சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள, குடோனில் நடத்திய சோதனையில், 'டைரி' ஒன்று சிக்கியது. அதில், குட்கா விற்பனை செய்ய, அமைச்சர்கள், மூத்த போலீஸ் அதிகாரிகள் போன்றோருக்கு, எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற விபரத்தையும், மாதவ ராவ் எழுதி வைத்திருந்தார்.

இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள், அப்போது,




தமிழக, டி.ஜி.பி.,யாக இருந்த அசோக்குமாருக்கு, கடிதம் அனுப்பினர். அவர் அந்தக் கடிதத்தை, முதல்வருக்கு அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தின் மீது, தமிழக அரசு, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதன்பின், பல்வேறு நெருக்கடிகள் காரணமாக, 2017ல், குட்கா ஊழல் குறித்து, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, வழக்கு விசாரணை, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.

சி.பி.ஐ., அதிகாரிகள், சில தினங்களுக்கு முன், மாதவ ராவிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவல் அடிப்படையில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர், ஜார்ஜ், வணிக வரித்துறை முன்னாள் அமைச்சர், ரமணா மற்றும் பல்வேறு அதிகாரிகள் வீடுகளில், செப்., 5ல், அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், குட்கா நிறுவன உரிமையாளர்களான மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், மத்திய கலால் வரி அதிகாரி பாண்டியன், மாநில உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரி செந்தில் முருகன் ஆகியோரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்கள், சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மத்தியில், இடைத்தரகர்களான ராஜேந்திரன், நந்தகுமார் ஆகியோரையும் கைது செய்துள்ளனர். கைதான குடோன் உரிமையாளர், அப்ரூவராக மாறி உள்ளார். அவர், பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், முன்னாள் முதல்வர், ஜெ.,வின் தோழியும், தற்போது பெங்களூரு சிறையில் இருப்பவ ருமான, சசிகலாவும் சிக்குவார் என்ற, தகவல் வெளியாகி உள்ளது.

குட்கா ஊழல் குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள்,

2016ல், டி.ஜி.பி.,க்கு எழுதிய கடிதம்; அது தொடர்பாக, முதல்வருக்கு, டி.ஜி.பி., அனுப்பிய கோப்பு ஆகியவை, 2017 நவ., 17ல், போயஸ் கார்டனில் உள்ள சசிகலா அறையில் கண்டுபிடிக்கப்பட்டன.

முதல்வர் பார்வைக்கு, டி.ஜி.பி., அனுப்பிய கடிதமும், கோப்பும், சசிகலா அறையில் கண்டுபிடிக்கப்பட்டது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு, குட்கா ஊழலில் பங்கு உள்ளதா; வருமான வரித்துறை அனுப்பிய கடிதம் அடிப்படையில், விசாரணை நடத்த விடாமல், அவர் தடுத்தாரா; ஜெ., பார்வைக்கு கடிதம் செல்லாமல் மறைத்தாரா என்ற, கேள்விகள் எழுந்தன.

இதுகுறித்து, தற்போது, சி.பி.ஐ., விசாரணையை துவக்கி உள்ளது. இதன் காரணமாக, குட்கா ஊழல் வழக்கில், மேலும் பல தலைகள் சிக்கலாம் என்ற, தகவல் வெளியாகி உள்ளது.

காவலில் விசாரிக்க திட்டம்!

'குட்கா' முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட 'குடோன்' உரிமையாளர்கள் உள்பட ஐந்து பேரை, காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். குடோன் உரிமையாளர்கள் மாதவ ராவ், உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்முருகன் மற்றும் கலால் வரி அதிகாரி எம்.கே.பாண்டியன் ஆகியோரை சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்கள், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப் பட்டனர். அவர்களை, ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ., அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இன்று மற்றும் நாளை விடுமுறை தினம் என்பதால் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான மனுவை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் திங்கள் கிழமை தாக்கல் செய்ய உள்ளனர்.
வரவிருக்கும் விசேஷங்கள்
  • செப்டம்பர் 11 (செ) பாரதியார் நினைவு தினம்
  • செப்டம்பர் 13 (வி) விநாயகர் சதுர்த்தி
  • செப்டம்பர் 21 (வெ) மொகரம்
  • செப்டம்பர் 22 (ச) மகா பிரதோஷம்
  • செப்டம்பர் 25 (செ) மகாளயபட்சம் ஆரம்பம்
  • அக்டோபர் 2 (செ) காந்தி ஜெயந்தி
விரைவில் பெயர் மாறுகிறது ஐ.ஆர்.சி.டி.சி.,

Added : செப் 07, 2018 18:49 |

 

புதுடில்லி : உச்சரிக்க எளிமையாகவும், எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ளும் வகையிலும், ஐ.ஆர்.சி.டி.சி.,யின்(இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம்) பெயர் மாற உள்ளது. இதற்கான அறிவிப்பு 2 மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.ஆர்.சி.டி.சி.,யின் பெயரை மாற்ற கடந்த ஆண்டு இந்தியன் ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு 1,852 பேர் தங்கள் தேர்வு செய்த பெயரை பதிவு செய்திருந்தனர். இதிலிருந்து 700 பேரின் பரிந்துரைகள் தேர்வு செய்யப்பட்டு, தற்போது அதிலிருந்து ஒரு பெயரினை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு பதிலாக தேர்வு செய்ய சிறந்த பெயர் பட்டியலை கொண்டு வரும் படி இந்தியன் ரயில்வே அதிகாரிகளுக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார். உச்சரிக்க எளிதாக இருக்கும் படியும், மனதில் பதியும்படியும் அப்பெயர் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 2 மாதத்திற்குள் பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில செய்திகள்

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை தமிழக அமைச்சரவை நாளை அவசர கூட்டம்



தமிழக அமைச்சரவை நாளை அவசரமாக கூடுகிறது. இந்த கூட்டத்தில், ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக கவர்னருக்கு பரிந்துரைப்பது பற்றி முடிவு எடுக்கப்படுகிறது.

பதிவு: செப்டம்பர் 08, 2018 05:45 AM
சென்னை,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

27 ஆண்டுகளாக சிறையில் வாடும் அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்த தமிழக அரசு அதற்காக மத்திய அரசின் அனுமதியை கோரியது. ஆனால் அதற்கு அனுமதி வழங்க மறுத்த மத்திய அரசு, 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசியல் சாசன பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஒரு முடிவை எடுத்து கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம் என்று அறிவுறுத்தினார்கள்.

அத்துடன், சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக் கொள்வதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறி அந்த மனு மீதான விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை வரவேற்று உள்ள தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர்.

சிறையில் இருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், தனது மகன் விடுதலை தொடர்பாக முதல்-அமைச்சரை சந்திக்க இருப்பதாக கூறி உள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலை தொடர்ந்து, இந்த பிரச்சினையில் அடுத்த கட்டமாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து தமிழக அரசு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்தநிலையில், தமிழக அமைச்சரவையின் அவசர கூட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும விடுதலை செய்வது குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்றும், பின்னர் அந்த தீர்மானம் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே வேலூர் மத்திய சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன் ஆகிய 3 பேரும், சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலை தொடர்ந்து, தங்களை விடுதலை செய்யக் கோரி கவர்னர், முதல்-அமைச்சர், உள்துறை செயலாளர் ஆகியோருக்கு நேற்று தனித்தனியே சிறைத்துறை மூலம் நினைவூட்டல் கடிதம் அனுப்பி உள்ளனர்.

இந்த தகவலை நேற்று சிறையில் நளினியை சந்தித்து பேசிய அவரது வக்கீல் புகழேந்தி, பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

நளினி 6 மாதம் பரோல் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்ததாகவும், அந்த மனுவை நேற்று அவர் வாபஸ் பெற்றுக் கொண்டதாகவும் புகழேந்தி கூறினார்.
தலையங்கம்

தமிழக அரசும், கவர்னரும்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்





1991–ம் ஆண்டு மே 21–ந்தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே மனித வெடிகுண்டு தாக்குதலால் ராஜீவ்காந்தி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கடுகளவும் யாரும் நியாயப்படுத்த முடியாது.

செப்டம்பர் 08 2018, 04:00

1991–ம் ஆண்டு மே 21–ந்தேதி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே மனித வெடிகுண்டு தாக்குதலால் ராஜீவ்காந்தி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கடுகளவும் யாரும் நியாயப்படுத்த முடியாது. ராஜீவ்காந்தி விரும்பிய தமிழக மண்ணில் நடந்த இந்த சம்பவம் தமிழக மக்களின் மனதில் ஆறாத சோகவடுக்களை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு பிரிவு தீவிர விசாரணை செய்து 26 பேரை கைது செய்தது. பூந்தமல்லியில் தடா நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து, 26 பேருக்கும் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இந்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது.

இந்த அப்பீலை உச்சநீதிமன்றம் விசாரித்து, முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மட்டும் தூக்குத் தண்டனை என்பதை உறுதிசெய்து, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 3 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து, மற்ற 19 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது. கருணாநிதி முதல்–அமைச்சராக இருந்தநேரத்தில், நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட வேண்டும் என்று அமைச்சரவை முடிவெடுத்து, கவர்னர் பாத்திமாபீவிக்கு அனுப்பிய நேரத்தில் முதலில் ஏற்றுக்கொள்ளாத கவர்னர், உயர்நீதிமன்றத்தில் அமைச்சரவையின் தீர்மானத்துக்கு எதிராக கவர்னர் செயல்பட முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்ட காரணத்தால், நளினியின் தூக்குத்தண்டனையை 2000–ம் ஆண்டில் ஆயுள் தண்டனையாக குறைத்தார். தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளனும் 11 ஆண்டுகளுக்கு மேல் நடத்திய சட்ட போராட்டத்தின் விளைவாக, அவர்களது தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அவர்கள் எல்லோரையும் விடுதலை செய்ய ஜெயலலிதா அரசு அறிவிப்பு வெளியிட்டதோடு மட்டுமல்லாமல், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற, அதைத்தொடர்ந்து மன்மோகன்சிங் அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்து அந்த வழக்கும் நிலுவையில் இருந்தது.

இதற்கிடையில், படுகொலை செய்யப்பட்ட ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வேலூர் சிறைக்கு சென்று நளினியை சந்தித்து பேசினார். ராகுல்காந்தி தன் தந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாங்கள் காயப்பட்டுள்ளோம், மனக்கவலைக்கு ஆளாகி யுள்ளோம். ஆனால் அவர்களை முழுமையாக மன்னித்துவிட்டோம் என்று கூறியது மிகவும் உணர்ச்சி கரமாக இருந்தது. இந்தநிலையில், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் நேற்றுமுன்தினம் உத்தரவு வழங்கப்பட்டது. பேரறிவாளனின் கருணை மனுமீது கவர்னர் முடிவெடுக்கலாம். அரசியல் சட்டத்தின் 161–வது பிரிவின்கீழ் தமிழக அரசு

7 பேரையும் விடுதலை செய்வதாக ஒரு முடிவெடுத்து கவர்னரின் பரிசீலனைக்கு அனுப்பலாம். அந்த பரிந்துரையின்மீது கவர்னர் முடிவெடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, இப்போது இந்த பிரச்சினை இறுதிக்கட்டத்துக்கு வந்துவிட்டது. தமிழக அரசு நாளை கூட்டியிருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் அவர்களை விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி தமிழக கவர்னருக்கு அனுப்ப வேண்டும்.

27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரும் விடுதலை செய்யப்படவேண்டும் என்பது ஜெயலலிதாவின் நிலைப்பாடு. எனவே, தாமதமில்லாமல் தமிழக அமைச்சரவை இதுகுறித்து உரிய முடிவெடுத்து கவர்னருக்கு அனுப்பும் என்பதால், அந்த 7 பேரின் விடுதலைக்காக சிறைச்சாலை கதவுகள் திறக்கப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

NEWS TODAY 01.07.2026