Monday, December 10, 2018

பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்ட வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

By மதுராந்தகம், | Published on : 10th December 2018 12:26 AM 




வேடந்தாங்கல் ஏரியில் போதிய தண்ணீர் இல்லாதபோதிலும், அதிக அளவில் பறவைகள் இம்முறை வராத நிலையிலும், சரணாலயத்தை வனத்துறையினர் திறந்துள்ளனர். எனினும், வழக்கத்தை விட பறவைகள் குறைவாக உள்ளதால் சரணாலயம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாப் பகுதியாகவும், பறவைகள் சரணாலயமாகவும் வேடந்தாங்கல் திகழ்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கண்டுக்களிக்கும் இடமாக இச்சரணாலயம் உள்ளது. ஏரிகள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய ஏரி வேடந்தாங்கலாகும். இங்கு பறவைகள் சரணாலயம் கடந்த 1858-இல் தொடங்கப்பட்டது. சுமார் 75 ஏக்கர் பரப்பளவு கொண்ட வேடந்தாங்கல் ஏரியின் நடுவே 50-க்கும் மேற்பட்ட கருவேல மரங்கள், கடம்ப மரங்கள், செடி, கொடிகள் ஆகியவை உள்ளன. அந்த மரங்களின் மேல் கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்வதற்காக உலகத்தின் பல்வேறு பகுதிகளிருந்தும் பறவைகள் வருகின்றன.

இனப்பெருக்கத்துக்கு சாதகமான பருவநிலை, நீர், உணவு, பாதுகாப்பான சூழ்நிலை போன்ற கரரணங்களால் பறவைகள் இப்பகுதியைத் தேடி வருகின்றன. வேடந்தாங்கல் ஏரியைச் சுற்றி மதுராந்தகம் ஏரி, வேடவாக்கம் ஏரி, கருங்குழி ஏரி உள்ளிட்டவை அரணாக அமைந்துள்ளன.
ரஷியாவின் சைபீரியா, இலங்கை, மத்திய ஆசியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், மங்கோலியா, வங்கதேசம் போன்ற வெளிநாட்டுப் பகுதிகளில் இருந்தும், நம் நாட்டின் வட மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மைல்களை தாண்டி ஏராளமான பறவைகள் இங்கு வந்து தங்கிச் செல்கின்றன. சிறிய நீர்க்காகம், கரண்டி வாயன், நத்தைக்குத்தி நாரை, வெள்ளை அரிவாள்மூக்கன், வெள்ளைக் கொக்கு, உண்ணி கொக்கு உள்ளிட்ட இனங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் சரணாலயத்துக்கு வருவது வழக்கம்.

வேடந்தாங்கல் ஏரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக இருப்பதால், விளைநிலங்களில் பயிரிடப்படும் நெல், பருப்பு வகைகளையும் நீர்நிலைகளில் வாழும் மீன், புழு பூச்சிகள் போன்றவற்றையும் சரணாலயத்தில் முகாமிடும் பறவைகள் உட்கொள்ளும். இதனால் பறவைகளுக்கு உணவுப் பஞ்சம் இருப்பதில்லை. ஏரி நீரில் விழும் இப்பறவைகளின் எச்சம் மிகச்சிறந்த உரமாக விளங்குவதால் வேடந்தாங்கல் பாசன விவசாயிகள் நல்ல விளைச்சலைப் பெறுகின்றனர். இங்கு அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை பறவைகளின் சீசன் காலமாகும்.
இந்நிலையில், வேடந்தாங்கல் ஏரியில் போதிய தண்ணீர் இல்லாதபோதிலும், அதிக அளவில் பறவைகள் இம்முறை வராத நிலையிலும், சரணாலயத்தை வனத்துறையினர் கடந்த 6ஆம் தேதி திறந்தனர்.

இது தொடர்பாக பறவைகள் சரணாலய வனச்சரகர் சுப்பையா தினமணி செய்தியாளரிடம் கூறியது:

தற்சமயம் இந்தப் பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் வேடந்தாங்கல் ஏரிக்கு நீர்வரத்து இல்லை. அதேசமயம் பல்லாயிரக்கணக்கான பறவைகளும் வந்திருக்க வேண்டிய இந்த நேரத்தில் குறைந்த அளவிலேயே பறவைகள் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டது.
அதேபோல் தற்போதும் பறவைகள் வந்திருக்கும் என்று கருதி, தற்போது இங்கு வரக் கூடிய பார்வையாளர்கள் ஏமாந்து போகக் கூடாது என்பதால் சரணாலயம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் ஆயிரத்துக்கும் குறைவான பறவைகள்தான் வந்துள்ளன என்றார் அவர்.
அவர்களும் மனிதர்களே
By வாதூலன் | Published on : 10th December 2018 03:00 AM

கட்டுரையின் தலைப்புக்குச் சற்று யோசித்த பின்தான் கேள்விக்குறி போட வேண்டியிருந்தது. காரணம், சில வாரங்களுக்கு முன் பிரபல ஆங்கில ஏட்டில் இசைக் கலைஞர் ஒருவர் எழுதிய கட்டுரைதான். சில நாள்களுக்கு முன்வரை பரபரப்பாகப் பேசப்பட்ட "மீ டூ' குறித்து அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்ட கருத்துகள், "மீ டூ'வில் தொடர்புள்ள இசைக் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுப்பது போல அமைந்திருந்தது. "குரு என்றால் ஏன் ஒழுக்கத்தின் மறுஉருவம் என்று நினைக்கிறீர்கள்? அவர்களைக் குட்டி தெய்வமாகக் கருதுவது தவறு' என்றெல்லாம் நீளமாக வாதாடியிருந்தார். கட்டுரையின் இறுதியில், தனது வாதத்திலிருந்து சற்று பின்வாங்கி "முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர்கள் செயலை நான் நியாயப்படுத்தவில்லை' என்று முடித்திருந்தார்.

பொதுவாக நாடக, திரை உலகப் பிரபலங்களைப் பற்றித்தான் அந்த நாளில் "ரகசியமான' வதந்திகள் வரும். ஏனெனில் நெருக்கமாக நடிப்பது, ஆசையுடன் பழகுவது போன்ற காட்சிகள் அவற்றில் வர சாத்தியக்கூறு அதிகம். நாட்டியத்திலும், சில சிருங்கார அங்க அசைவுகள் வரும். (ஓர் ஏட்டில், நடனம் ஆடுபவர்கள் படுகிற இன்னல்களைப் பற்றி பெரிய கட்டுரையே வெளியாகியது.) இத்தகைய கலைஞர்களைப் பற்றி பாலியல் சம்பந்தமான செய்திகள் வந்தால் அக்கருத்துகளுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லை.

கவிஞர்களுள் தடுமாறும் போதையில் கவிபாடும் மேதையைப் பற்றிப் பலரும் அறிவார்கள். வேறு ஒரு எழுத்தாளர் எழுதிய, போதைப் பொருளைப் பரிந்துரைப்பது போன்ற கட்டுரை ஒன்று வாரப் பத்திரிகையில் வெளிவந்ததும் சிறு சலசலப்பு ஏற்பட்டது. இசை உலகில் மேதை என்று மிக புகழ் பெற்ற வித்துவானின் குறைகள் ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.
நம் முன் நிற்கும் கேள்வி இதுதான்: கலைஞர்களின் தனிப்பட்ட ஒழுக்கத்துக்கும் திறமைக்கும் முடிச்சு போடலாமா? காலஞ்சென்ற பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் ஓர் இரங்கற் கூட்டத்தில் இவ்விதம் பேசியுள்ளார்: "சிறிய கள் பெரினே எமக்கு ஈயும் மன்னே' என்று பாடியவர் சங்க கால மூதாட்டி என்பதை மறந்து விட்டீர்களா? கவி பாடும் ஆற்றலுள்ளவர்களுக்கு சிறு சிறு குறைகளிருக்கலாம். அவ்வாறு இருந்தால், அவையெல்லாம் கவிஞனின் உடம்பு மாயும் போது, உடன் மறைந்துவிடும். ஆனால் அவன் படைப்பு தமிழ் உள்ளவரை நின்று நிலவும்' என்றார். மேலும் அவர் "அந்தக்குறை பற்றிக் கவலைப்பட வேண்டியவர்கள் அவர்கள் குடும்பத்தினர்தானே' என்றும் பேசியிருக்கிறார். மேலே சொன்ன நிகழ்வு அறுபதுகளில் நடந்ததென்று ஊகிக்க முடிகிறது.

ஐம்பது வருடங்களுக்கு முன் அவர் சொன்ன கருத்துக்கள், இன்றுள்ள சூழலுக்கும் பொருந்துமா என்பது ஐயம்தான். இப்போது முகநூல், கட்செவி அஞ்சல் ("வாட்ஸ்அப்') போன்றவற்றில் வருகிற குறுஞ்செய்திகள் விரைவாகப் பரவி விடுகின்றன. அதுவும் பிரபலமானவரைப் பற்றிய செய்திகள் என்றால் கேட்கவே வேண்டாம். ஊடகங்கள் தகவலை மிகைப் படுத்துக்கின்றன. ஓரிரு நாள் கழித்து பாதிக்கப்பட்டவர் மறுப்பு தெரிவித்தாலும் மக்கள் மனதில் அது பதிவதில்லை. முதலில் வந்த செய்திதான் நிற்கிறது.

வேறொரு அம்சத்தையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லலாம். மது அருந்துவது, போதைப் பொருளுக்கு அடிமையாவது போன்றதல்ல பாலியல் குற்றங்கள். பாலியல் தவறுகளால், ஓர் அப்பாவிப் பெண்ணின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடுகிறது. "இதுவரை மௌனம் சாதித்துவிட்டு இப்போது ஏன் முறையிடுகிறார்கள்?' என்ற கேள்வி எழாமலில்லை. பல வருடங்களாக அடைக்கப்பட்டிருக்கும் மன உளைச்சல்களுக்கு வடிகால் கிடைத்தது போலவே இதனைப் பெண்கள் உணர்கிறார்கள்.

வங்கிக் கிளையொன்றில் என்னுடன் வேலை செய்த ஒரு பெண் ஊழியரிடம், வங்கி மேலாளர் கொஞ்சம் நெருக்கமாகப் பழகினார். அரசல் புரசலாக வதந்திகள் பிறந்தன. எல்லாரும் ஊகித்தபடியே மேலாளர் அவரை இரண்டாம் மனைவியாக ஏற்றுக் கொண்டார். (அவர் அப்போது இரண்டு குழந்தைகளுக்கு தந்தை.) தலைமை அலுவலகத்துக்கு புகார் போனதும், பெண்ணை ராஜிநாமா செய்யச் சொல்லிவிட்டார்கள்.

இது நடந்தது 1965. ஆனால் 1990-க்குப் பின்னர், தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கும் நான் ஆய்வாளாராகப் போன சமயம் பல முறைகேடான உறவுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். சிலர் எல்லைமீறி, வங்கியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பது போலிருந்தால், அவரை வடக்கே இருக்கும் இடங்களுக்கு மாற்றி விடுவார்கள்.

இப்போது, கணினி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் நிலைமை அலசப்பட்டு வருகிறது. இரவு நேரப் பணி அவர்களுக்கு ஒரு பாதகமான அம்சம். ஒரு சில வருடம் முன், பெங்களூரில் சில குற்றங்கள் நடந்திருக்கின்றன. நிறுவனத்தின் பெயர் கெடாதிருக்க நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றன.

ஆரம்பத்தில் சொல்லப்பட்ட பகுதிக்கே வருவோம். குரு என்ற ஸ்தானம் மிக உயர்ந்தது. சங்கீதம், நாட்டியம் இரண்டில் மட்டுமே இந்த உயர்நிலை உள்ளது. பெற்றோருக்கு அடுத்தபடியாக குருதான் என்று பல நீதி நூல்கள், சமயங்கள் போதிக்கின்றன. அத்தகைய நிலையிலிருந்து கொண்டு, தனக்கு இழுக்கு நேரும்படி, மாணவிகளிடம் தீய நோக்கத்துடன் பழுகுவது கீழ்த்தரமான செயல். குற்றங்களை முறையாக விசாரணை செய்ய, ஒரு குழு நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

பொதுவாகப் பெண்களிடம் "இன்ஸ்டிங்ட்' என்ற உள்ளுணர்வு அதிகம் என்று கூறுகிறார்கள். சொல்லித்தரும்போது பாடகரின் பார்வையிலோ, செயலிலோ சற்று வேறு விதமான போக்கு தென்பட்டிருந்தால் உடனே விலகியிருக்கலாமே? இப்போதுதான் இல்லத்திலிருந்தபடியே கற்க "ஸ்கைப்' வசதி உள்ளதே? எனினும் இந்த "மீ டூ' பூதம் கிளம்பியது ஒரு வகையில் நல்லதுதான். சபலபுத்தி உள்ள ஆண்களுக்கு ஓர் எச்சரிக்கை மணியாக இந்த "மீ டூ' அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.
இல்லாத பதிவாளர் பெயரில் அறிவிக்கை

Added : டிச 09, 2018 23:06

சென்னை: அண்ணா பல்கலை பதிவாளர் பதவி காலியாக உள்ள நிலையில் பதிவாளர் பெயரில் வெளியிட்டுள்ள அறிவிக்கை, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பு இன்ஜி., கல்லுாரிகளுக்கு டிச., 3ல் நடந்த கணித தேர்வில் வினாத்தாள் 'லீக்' ஆனதால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்டுள்ளது. அதேபோல 'எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன்ஸ்' துறையில் 'ஆப்டோ எலக்ட்ரானிக் டிவைசஸ்' என்ற பாடத்துக்கு தேர்வு நடந்தது. அதில் 2017 நவம்பரில் வந்த பழைய வினாத்தாள் வழங்கப்பட்டதால் மறுதேர்வு நடத்தப்பட்டுள்ளது.

பல்கலையின் நேரடி கல்லுாரிகளுக்கான தேர்வு துறையில் என்.ஆர்.ஐ., விடைத்தாள் திருத்தத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. கூடுதல் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சீனிவாசலு நீக்கப்பட்டு சஞ்சீவி நியமிக்கப்பட்டுள்ளார்.அண்ணா பல்கலையின் பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவி காலியாக உள்ளது. திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு துறை இயக்குனர் குமார், பதிவாளராக கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். பேராசிரியர், வெங்கடேசன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவியை கூடுதலாக கவனிக்கிறார்.இந்நிலையில் தொலைநிலை கல்விக்கு நேற்று மாணவர் சேர்க்கை அறிவிப்பு, பதிவாளர் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.ஆனால், பதிவாளரே இல்லாமல் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டது போல், அறிவித்தது எப்படி என உயர்கல்வி அதிகாரிகளும், பேராசிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 பதிவாளர் இல்லாத நிலையில், பதிவாளர் பொறுப்பு என குறிப்பிட்டிருக்க வேண்டும் அல்லது தொலைநிலை கல்வி இயக்குனர் வழியாக மாணவர் சேர்க்கையை அறிவிக்கலாம்.மாறாக, சட்ட சிக்கலை ஏற்படுத்தும் வகையில் பதிவாளர் இருப்பது போல அறிவிக்கை செய்தது, பல்கலையின் நிர்வாகத்துக்கு சட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும் என சில பேராசிரியர்கள் கூறினர். ஏற்கனவே பல்கலை தேர்வுத்துறையில் பல்வேறு குளறுபடி நிலவும் நிலையில் பதிவாளர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்னை, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


புயல்,பாதிப்பு,அடுத்த மிரட்டல்,பெய்ட்டி

DINAMALAR 10.12.2018

வங்க கடலில், புதிய புயல் சின்னம் உருவாகியுள்ளது. 'பெய்ட்டி' என, பெயரிடப்பட உள்ள இந்த புயல், வரும், 13ம் தேதி, தமிழக கடற்பகுதியை நெருங்கி, சென்னை - கல்பாக்கம் இடையே, கரையை கடக்க வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 'கஜா' புயலின் பாதிப்பும், சோகமும் தீராத நிலையில், அடுத்த புயல் தமிழகத்தை மிரட்டத் துவங்கியுள்ளது.

தமிழகத்தில், வட கிழக்கு பருவ மழை துவங்கியது முதல், திடீர் கன மழையும், புயலும் அடுத்தடுத்து மிரட்டி வருகின்றன. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, 'கஜா' புயலாக மாறி, நவம்பர், 16ல், நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கரையை கடந்தது. இதனால், டெல்டா மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

மின் வினியோகம்:

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், நிவாரண பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஆனாலும், பல கிராமங்களுக்கு, இன்னும் மின் வினியோகம் துவங்கவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட சோகத்தில் இருந்து மீள முடியாமல், மக்கள் தவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், தமிழகத்தை மீண்டும் ஒரு புயல் மிரட்டி வருகிறது.
கஜா புயலுக்கு பின், நவம்பர் இறுதியில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமும், டிச., 4ல், காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகி, மழையை கொட்டின. டிச., 6 முதல், மழை குறைந்து, வறண்ட வானிலை நிலவுகிறது. பகலில் வெயிலும், மாலை முதல் முற்பகல் வரை பனியும் நிலவுகிறது.
இந்நிலையில், கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு தென் கிழக்கே, நில நடுக்கோட்டு பகுதிக்கு வடக்கில், வங்க கடலின் தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது, நாளை முதல், காற்றழுத்த

தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இந்த மண்டலம், அந்தமானுக்கு அருகில் வரும் போது, புயல் சின்னமாக மாறும். பின், புயலாக உருவெடுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலுக்கு, தாய்லாந்து நாடு வழங்கியுள்ள, 'பெய்ட்டி' என்ற, பெயர் சூட்டப்பட உள்ளது.
இப்புயல், வட மேற்கு திசையில் நகர்ந்து, வரும், 13ம் தேதி நள்ளிரவு முதல், தமிழக கடற்பகுதியை நெருங்கும். டிச., 15 முதல், 16ம் தேதிக்குள், நெல்லுார் - நாகை இடையில் கரையை கடக்கலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றைய நிலவரப்படி, இந்த புயல், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு

இடையே, கல்பாக்கம் அருகே, கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

மாறலாம்:

புயல் உருவான பின், காற்றின் வேகம், திசை மாறுபாடு, நிலப்பகுதியில் உள்ள வெப்பநிலை ஆகியவற்றை பொறுத்து, கரையை கடக்கும் இடமும், நாளும் மாறலாம் என்றும், வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். அதேநேரத்தில், புதிய புயலால், கடலுார், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிக தாக்கம் ஏற்படலாம். ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மீனவர்களுக்கு தடை:

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஏற்பட்டுள்ளதால், சூறாவளி காற்றுடன் அலைகள் கொந்தளிப்பாக இருக்கும். எனவே, தென் கிழக்கு, தென் மேற்கு மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளுக்கு, 12ம் தேதி வரை, மீனவர்கள் செல்ல வேண்டாம் என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

- நமது நிருபர் -
'நகரும் பதிவேடு' அமல்படுத்த உத்தரவு

Added : டிச 09, 2018 22:31

போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்களை கண்காணிக்கும் விதமாக, 'நகரும் பதிவேடு' அமல்படுத்த, சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள அரசு டாக்டர்கள், கடந்த, 4ம் தேதி, புறநோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் அறிவுரையை தொடர்ந்து, போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், டாக்டர்கள் சங்கம், நிர்வாகத்துக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால், மருந்து குறித்த விபரம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், போராட்டத்தை காரணம் காட்டி, டாக்டர்கள் பலர், முறையாக பணியில் ஈடுபடுவ தில்லை என, புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, அரசு அலுவலகங்களில் நடைமுறையில் உள்ள, நகரும் பதிவேடு முறையை, தீவிர மாக அமல்படுத்த, சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:அனைத்து தரப்பு அரசு அலுவலர்களுக்கும், இந்த நகரும் பதிவேடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அரசு அலுவலர்கள் பணி நேரத்தில் வெளியில் செல்லும்போது, இப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அனைத்து டாக்டர்களும் இந்நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
'இ - மார்க்கெட் முறையில் பொருட்கள் வாங்க வேண்டும்' : அரசு அலுவலங்களுக்கு புதிய உத்தரவு

Added : டிச 09, 2018 21:36

அரசு அலுவலகங்களுக்கு தேவையான, மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களை, 'இ - மார்க்கெட்' எனப்படும், 'ஆன்லைன்' வர்த்தக முறையில் வாங்க, செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு அலுவலகங்களுக்கு தேவையான பர்னிச்சர், எழுது பொருட்கள், கணினி சார்ந்த பொருட்கள் அதிகம் வாங்கப்படுகின்றன. இப்பொருட்களை, எங்கு, எப்படி வாங்குவது என்பதற்கான நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது.இதில், கணினி உள்ளிட்ட மின்னணு பொருட்களை, தமிழ்நாடு மின்னணு கழகமான, 'எல்காட்' வாயிலாக வாங்க வேண்டும். இதற்கும், துறை ரீதியாக கருத்துரு அனுப்புவதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன

.இருப்பினும், கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள், அதற்கான சார்பு பொருட்களை வாங்குவதில், குளறுபடிகள் நடப்பதாக புகார் எழுகிறது. இதில், வெளிப்படை தன்மையை உறுதி செய்ய, இந்த நடைமுறையை, ஆன்லைன் முறைக்கு மாற்ற, அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, எல்காட் நிறுவனம், இ - மார்க்கெட் என்ற ஆன்லைன் சேவையை துவக்கியுள்ளது. இருப்பினும், பெரும்பாலான நிறுவனங்கள், வழக்கமான முறையில் பொருட்களை வாங்குவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், தலைமை செயலகத்தில், சமீபத்தில் நடந்த அனைத்து துறை செயலர்கள் கூட்டத்தில், இ - மார்க்கெட் தளத்தில், அரசு துறைகள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. பொருட்கள் வாங்கும் அதிகாரி, அத்துறை சார்பில், இத்தளத்தில் பதிவு செய்து, பொருட்களை வாங்க, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.துறை வாரியாக, இ - மார்க்கெட் திட்டத்தில் பதிவு செய்த விபரத்தை தெரிவிக்கவும், செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், எந்தெந்த அரசு துறைகள், என்னென்ன பொருட்களை வாங்கியுள்ளன என்ற விபரம், அரசுக்கு நேரடியாக சென்றுவிடும்.

- நமது நிருபர் -
வி.ஏ.ஓ.,க்கள் இன்று போராட்டம் : அதிகாரிகளுக்கு அரசு, 'அலர்ட்'

Added : டிச 09, 2018 21:34

சென்னை: கிராம நிர்வாக அலுவலர்களான, வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், இன்று போராட்டங்களை அறிவித்துள்ளதால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க, நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.சிறப்பு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல், வி.ஏ.ஓ.,க்கள், காலவரையற்ற போராட்டத்தை துவக்குகின்றனர். ரயில் நிலையங்களில், தனி கவுன்டர்களை திறக்க வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர், ரயில் நிலையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என, அறிவித்துள்ளனர்.இவ்விரு போராட்டங்களால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, மாவட்ட கலெக்டர்கள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட போலீஸ், எஸ்.பி.,க்களுக்கும், பொதுத் துறை செயலர் சுற்றறிக்கை அனுப்பிஉள்ளார்.

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...