Saturday, January 5, 2019


டாக்டர்களுக்கு ரூ.10 கோடி அபராதம்

Added : ஜன 04, 2019 22:16 |

சேலம் தவறு செய்யும் மருத்துவருக்கு, 1 முதல், 10 கோடி ரூபாய் வரை, அபராதம் விதிக்கும் சட்ட மசோதாவுக்கு, நாடு முழுவதும், மருத்துவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இது தொடர்பாக, இந்திய மருத்துவ சங்க முன்னாள் துணைத் தலைவர் பிரகாசம், நிருபர்களிடம் கூறியதாவது:நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். சிகிச்சை அளிக்கும் போது, தவறு நேர்ந்தால், சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு, மாவட்ட நீதிபதி, 1 கோடி ரூபாய்; மாநில நீதிபதி, 10 கோடி ரூபாய் வரை, அபராதம் விதிப்பது, எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. நுகர்வோர் சட்ட திருத்தம் அமலுக்கு வந்தால், ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்க, மருத்துவர்கள் மறுத்து விடுவர்.குறிப்பாக, கிராமத்திலுள்ள ஒரு மருத்துவர் பாதிக்கப்பட்டால், வாழ்நாள் முழுவதும் உழைத்த பணத்தை, அபராதமாக செலுத்த வேண்டி வரும்.மத்திய அரசின் நடவடிக்கை, மறைமுகமாக, தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் உள்ளதால், சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, கறுப்பு பேட்ஜ் அணிந்து, எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
மாவட்ட செய்திகள்

ராஜபாளையத்தில் போக்குவரத்து நெரிசல்: நகருக்குள் லாரிகளை நிறுத்தி பொருட்களை இறக்க கட்டுப்பாடு



ராஜபாளையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நகருக்குள் லாரிகளை நிறுத்தி பொருட்களை இறக்குவதற்கு போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

பதிவு: ஜனவரி 04, 2019 03:45 AM
ராஜபாளையம்,

ராஜபாளையம் நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், கடந்த 5 வருடங்களாக பகல் நேரத்தில் நகருக்குள் ஒரு வழிப்பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மதுரையில் இருந்து வரும் கன ரக வாகனங்கள், நேரு சிலையில் இருந்து, டி.பி. மில்ஸ் சாலை, சத்திரப்பட்டி சாலை வழியாக தென்காசி சாலைக்கு செல்லும்.

தற்போது சத்திரப்பட்டி சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. எனவே தென்காசி சாலையில் ஒரு வழிப்பாதை திட்டம் தற்காலிகமாக திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால் தற்போது நகருக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி உள்ளது.

இந்த நிலையில் பகல் நேரத்தில் வியாபாரிகள் சாலை ஓரம் லாரிகளை நிறுத்தி பொருட்களை இறக்குவதால், அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்கும் நோக்கில் பகலில் கன ரக வாகனங்களில் இருந்து பொருட்களை இறக்க போக்குவரத்து துறை சார்பில் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ராஜபாளையம் வியாபார சங்க கட்டிடத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் லாரி உரிமையாளர்கள், வியாபாரிகள் மற்றும் சுமைப் பணியாளர்கள் என 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகருக்குள் லாரி களை நிறுத்தி பொருட்களை இறக்க போலீசார் கட்டுப்பாடு விதித்தனர்.

அதன்படி காலை 7 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நகருக்கு உட்பட்ட பகுதிகளில் கன ரக வாகனங்களை நிறுத்தி பொருட்களை இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்தனர். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக் கொண்டனர்.

இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் சாலை ஓரம் கன ரக வாகனங்களை நிறுத்த போலீசார் அனுமதி அளித்தனர். இதற்கு ஒப்புதல் அளித்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மாவட்ட செய்திகள்

ஆன்லைன் விற்பனையில் தொடரும் மோசடி: செல்போன் ஆர்டருக்கு பழுதான சார்ஜர், கைக்கெடிகாரம் சைக்கிள் கடைக்காரர் ஏமாற்றம்



ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த சைக்கிள் கடைக்காரருக்கு, செல்போனிற்கு பதிலாக பழுதான சார்ஜர், கைக்கெடிகாரத்தை வந்ததால் ஏமாற்றமடைந்தார்.

பதிவு: ஜனவரி 05, 2019 04:32 AM

தாயில்பட்டி,

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி அருகே உள்ள மடத்தப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சவுரிராஜன்(வயது 55). இவர் அப்பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு டி.வி.யில் ஒளிபரப்பான செல்போன் விற்பனை விளம்பரத்தை பார்த்துள்ளார். அப்போது சவுரிராஜன், ரூ.3,500 மதிப்புள்ள செல்போனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ஆன்லைன் வாயிலாக ஆர்டர் செய்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று அவர் ஆர்டர் செய்த செல்போன் வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டி தபால் மூலம் வீட்டிற்கு வந்தது. அப்போது தபால்காரரிடம் ஆர்டர் செய்த பணம் ரூ.3,500ஐ செலுத்தி அட்டை பெட்டி வாங்கினார்.

இதையடுத்து அந்த அட்டை பெட்டியை அவர் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். அதனுள் செல்போன் இல்லை. மாறாக அதில் பழுதான கைக்கெடிகாரம், சார்ஜர் இருந்துள்ளது. அத்துடன் சிறிய காலியான அட்டை பெட்டி ஒன்றும் இருந்தது. இதனால் அவர் செல்போன் ஆர்டர் செய்த நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தபால் அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது, அவர்கள் எங்களுக்கும், அந்நிறுவனத்துக்கும் தொடர்பு கிடையாது. இதுபோன்று இனிமேல் ஆன்லைன் விற்பனையை நம்பி ஏமாற வேண்டும் என்றனர்.

சமீப காலமாக ஆன்லைன் பொருட்கள் விற்பனை மோசடி நடந்து வருகிறது. இதற்கிடையே செல்போன் ஆர்டர் செய்த சைக்கிள் கடைக்காரருக்கு அதற்கு பதிலாக பழுதான சார்ஜர், கைக்கெடிகாரம் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாவட்ட செய்திகள்

கன்னங்குறிச்சியில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்



கன்னங்குறிச்சியில் ஜல்லிக்கட்டுக்கு காளைகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

பதிவு: ஜனவரி 05, 2019 03:30 AM மாற்றம்: ஜனவரி 05, 2019 04:34 AM
கன்னங்குறிச்சி,

தமிழர் பாரம்பரிய விளையாட்டு என்றால் அது ஜல்லிக்கட்டு தான். பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. எனினும் சேலம் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதற்காக சீறிப்பாயும் காளைகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் காளைகளை அடக்க காளையர்கள் மறுபுறம் தயாராகி வருகின்றனர். ஜல்லிக்கட்டு காளை என்றாலே, அதனை சிறப்பாக கவனிக்க வேண்டும். அதற்கு தினமும் தீவனம் அளித்து, பயிற்சி அளித்து போட்டிக்கு தயார்படுத்த பெருந்தொகையை செலவிட வேண்டும். மாதந்தோறும் ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை செலவு பிடிக்கும் என்கிறார்கள்.

சேலத்தை அடுத்த கன்னங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்படுகின்றன. தற்போது ஜல்லிக்கட்டுக்காக காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கன்னங்குறிச்சி 1-வது வார்டு பகுதியில் வசித்து வரும் கார்த்தி என்பவர் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். தைப்பொங்கலுக்கு நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டிற்காக தான் வளர்த்து வரும் மருது என்ற 4 வயதான காளையை தயார்படுத்தி வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு போட்டிக்காக நான் வளர்க்கும் காளையை தயார்படுத்தி வருகிறேன். தினமும் மண்ணை குத்தவிடுவது, ஓடவிடுவது, நீச்சல் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் இருப்பதற்கும் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை விலக்கப்பட்ட பின்பு வழக்கத்தை விட கூடுதலாக காளைகளை போட்டியில் பங்கேற்க வைக்க பலருக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் போட்டியை சமாளிக்க தீவிர பயிற்சி அளிக்க வேண்டிய நிலை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இதே போன்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுக்காக காளைகளை தயார்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. பொதுமக்கள், குழந்தைகள் என ஏராளமானோர் காளைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சியை கண்டு ரசிக்கிறார்கள். ஜல்லிக்கட்டு களம் காண இன்னும் சில நாட்கள் உள்ளதால், பயிற்சியை தீவிரப்படுத்துவதாக காளைகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
மாவட்ட செய்திகள்

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பேராசிரியர்கள்-மாணவர்களுக்கு துணி பைகள் வழங்கப்பட்டன.

பதிவு: ஜனவரி 04, 2019 04:00 AM

சென்னை,

தமிழக அரசு பிளாஸ்டிக் தடையை கடந்த 1-ந் தேதி முதல் அமல்படுத்தி இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பிளாஸ்டிக் தடை குறித்து விளக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு வலியுறுத்தும் விதமாகவும் சென்னை பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் நீர்வள மேலாண்மை மையம், சுற்றுச்சூழல் அறிவியல் மையம் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் துரைசாமி விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்து, சுற்றுச்சூழல் அறிவியல் என்ற புத்தகத்தையும் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பதிவாளர் சீனிவாசன், வளாக இயக்குனர் சுந்தரம், நீர்வள மேலாண்மை மையத்தின் துறை தலைவரும், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளருமான பாஸ்கரன், சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் துறை தலைவர் என்.கோதண்டராமன், சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், இயற்கை வளம் காப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியபடி பல்கலைக்கழக வளாகத்தினுள் சுற்றி வந்தனர். அப்போது பேராசிரியர்கள்-மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் விதமாக துணி பைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின்போது, ‘சென்னை பல்கலைக்கழக வளாகம் மட்டுமல்லாது, அடுத்தக்கட்டமாக பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி விரைவில் நடத்தப்படும்’ என்று பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்தார். மேலும், உறுப்பு கல்லூரிகளில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சுமார் 10 பேரை தேர்வு செய்து அவர்களிடம் பிளாஸ்டிக் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் மூலம் அந்தந்த கல்லூரிகளுக்கும், கல்லூரிகளை சுற்றி இருக்கும் கிராமங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இந்த ஆண்டு முழுவதும் நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பிளாஸ்டிக் தடை குறித்து விவரிக்க இருப்பதாகவும் நாட்டு நலப்பணி திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் கூறினார்.
மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் பைகளுக்கு பிரியாவிடை: மளிகை கடைகளில் பொட்டலங்கள் மடிக்கும் பழக்கம் திரும்புகிறது



பிளாஸ்டிக் பைகளுக்கு வியாபாரிகள் பிரியாவிடை அளித்து, மீண்டும் பொட்டலங்கள் கட்டி தரும் பழக்கத்தை புகுத்தி வருகின்றனர். இதுவும் ஒரு வகை லாபம் தான் என்று கருத்தும் தெரிவித்துள்ளனர்.

பதிவு: ஜனவரி 05, 2019 04:45 AM

சென்னை,

புத்தாண்டு தினமான கடந்த 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பைகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு அரசு தடை விதித்திருக்கிறது. இதையடுத்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து வாழை இலைகள், பாக்கு மர மட்டைகள், மந்தார இலைகளை பயன்படுத்த உணவகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. காய்கறி-மளிகை கடைகளுக்கும் பிளாஸ்டிக் பை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையை உள்ளாட்சித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அண்ணாநகரில் உள்ள இறைச்சி கூடங்கள் மற்றும் சாலையோர காய்கறி கடைகளில் மாநகராட்சி மண்டல அதிகாரி எம்.பரந்தாமன் தலைமையில் சுவாமிநாதன் உள்பட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வியாபாரிகளிடம் இருந்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து எச்சரிக்கை விடுத்தனர். இதுதவிர அனைத்து மண்டலங்களிலும் சோதனை முடுக்கி விடப்பட்டு உள்ளது.

அதிகாரிகள் நடவடிக்கை எதிரொலி ஒருபுறம் இருந்தாலும், அரசின் நல்ல நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான வியாபாரிகளின் மனநிலையாக ஆகிவிட்டது. அதனைதொடர்ந்து வியாபாரத்துடன் ஒன்றிப்போன பிளாஸ்டிக் பைகளுக்கு வியாபாரிகள் பிரியாவிடை கொடுத்து வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை மளிகை கடைகளில் பொருட்களை காகிதங்களில் பொட்டலமாக மடித்து, அதை சணல் கயிற்றால் கட்டி தருவதே நடைமுறையாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் பிளாஸ்டிக் பைகளின் அதீத வளர்ச்சியால் அந்த நடைமுறை மெல்ல மெல்ல அழிந்தது. இப்போது பிளாஸ்டிக் மீதான தடையால் மீண்டும் அந்த பொட்டலம் கட்டும் நடைமுறை துளிர்விட தொடங்கி இருக்கிறது

நகரில் பெரும்பாலான கடைகளில் காகிதங்களிலேயே மளிகை பொருட்களை பொட்டலம் கட்டி, சணல் கயிற்றால் கட்டி தந்து வருகின்றனர். இதை பார்க்கும் இன்றைய தலைமுறையினர், ‘என்ன இது, இப்படி பொட்டலம் கட்டி தருகிறார்கள், எப்படி கொண்டு போவது?’, என்று யோசிக்கின்றனர். அதேவேளையில் ‘எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு இப்படி பார்க்கிறோம்’, என்று பெரியவர்கள் கொஞ்சம் மகிழ்ச்சி அடைகின்றனர்.

சில கடைகளில் இருக்கும் விற்பனையாளர்களுக்கு பொட்டலம் கட்ட தெரியவில்லை. இதனால் அனுபவமிக்க வியாபாரிகள், அவர் களை அழைத்து ‘இப்படி மடிக்கணும், இப்படி கட்டணும்’, என்று சொல்லி தருவதையும் பார்க்க முடிகிறது. இந்த பொட்டல நடைமுறை ஒருவகையில் லாபமும் கூட என்று வியாபாரிகள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து தேனாம்பேட்டையை சேர்ந்த மளிகை கடை வியாபாரி ஜி.வேலவன் கூறுகையில், “பிளாஸ்டிக் பைகள் கிலோவுக்கு ரூ.200 வரை வாங்கி பயன்படுத்தினோம். ஆனால் காகிதம், சணல் கயிறு போன்றவற்றின் விலை அதில் நான்கில் ஒரு பங்கு தான் உள்ளது. எனவே இந்த நடைமுறை வியாபாரிகளுக்கு ஒரு வகை லாபம் தான். கைதேர்ந்தவர்கள் இந்த பொட்டலங்களை அருமையாக மடித்து கட்டுவார்கள். ஆனால் இப்போதுள்ளவர்களுக்கு கொஞ்சம் சொல்லி தான் கொடுக்க வேண்டியது இருக்கிறது”, என்றார்.

பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்கள் கொடுத்த ஒத்துழைப்பை விட வியாபாரிகள் கொஞ்சம் பின்தங்கி தான் இ ருந்தார்கள். தற்போது மளிகை கடைகள் முதல் உணவகங்கள் வரை அந்தநிலை மாற தொடங்கி இருக்கிறது. இதனால் பிளாஸ்டிக் பைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விடை கொடுக்கப்பட்டும் வருகிறது.
தலையங்கம்

உயர்ந்து வரும் வருவாய் பற்றாக்குறை




கடந்த 2–ந்தேதி தமிழக சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இந்த உரையில், தமிழ்நாட்டின் நிதிநிலைமை பட்ட வர்த்தனமாக வெளியிடப்பட்டுள்ளது.

ஜனவரி 05 2019, 03:30

இடைத் தேர்தல் நடைபெறும் திருவாரூர் தொகுதியைத்தவிர, மற்ற மாவட்டங்களிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட ரூ.1,000 அரசால் வழங்கப்படும் என்று அறிவித்து, எல்லோருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத் துள்ளார். ஆனால், ஏற்கனவே வருவாய் பற்றாக் குறையால் உழலும் தமிழக நிதிநிலைமையில், இது மேலும் ஒரு சுமையை ஏற்படுத்தும். கவர்னர் உரையிலேயே மாநிலங்களுக்கான மத்திய அரசின் வரிபகிர்வில் 14–வது நிதிக்குழுவின் பரிந்துரைகளால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பினால் மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்ற அபாய சங்கை ஊதிவிட்டார். இதுமட்டுமல்லாமல், மத்திய அரசாங்கத்தில் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய பல்வேறு நிதி, சரக்கு சேவைவரியில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய இழப்பீட்டுத்தொகை போன்ற நிலுவைத்தொகைகளையும் பட்டியலிட்டு காண்பித்தார். வருவாய் பற்றாக்குறை என்பது பட்ஜெட்டில் அந்த ஆண்டு மாநிலத்திற்கு எவ்வளவு வருவாய் வரும் என்பதை எதிர்பார்த்து திட்டமிட்ட தொகையைவிட, வந்த வருவாய் குறைவாக இருந்தால், அதுதான் வருவாய் பற்றாக்குறையாக கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டின் மொத்த வருவாய் வரவு ரூ.1 லட்சத்து 76 ஆயிரத்து 251 கோடியே

48 லட்சமாகவும், மொத்த வருவாய் செலவினங்கள்

ரூ.1 லட்சத்து 93 ஆயிரத்து 742 கோடியே 6 லட்சமாக இருக்கும் என்றும், இதனால் வருவாய் பற்றாக்குறை ரூ.17 ஆயிரத்து 490 கோடியே 58 லட்சமாக இருக்கும் என்றும் பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், வருவாய் பற்றாக்குறை இப்போதே அந்த அளவை தாண்டிவிட்டது. இதற்கு திடீரென ஏற்பட்ட திட்டமிடாத செலவுகளும் ஒரு முக்கிய காரணமாகும். எடுத்துக்காட்டாக, ‘கஜா’ புயல் வரும் என்று எதிர் பார்த்து நிவாரணத்தொகைக்காக நிதி ஒதுக்கப்பட்டு இருக்கமுடியாது. இப்போது பொங்கல் பரிசாக ஒரு குடும்பத்துக்கு ரூ.1,000 என்று அறிவித்ததும்,

ரூ.2 ஆயிரம் கோடிக்குமேல் கூடுதலாக செலவாக வழிவகுக்கும்.

2011–ம் ஆண்டு வருவாய் உபரியாக ரூ.1,364 கோடியாக இருந்தது. இப்போது தொடர்ச்சியாக கடந்த சில ஆண்டுகளாக ஏன் வேகமாக குறைந்தது? என்று ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசின் வரி வருவாயும், சரக்கு சேவைவரியால் பெருமளவு குறைந்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக் கையால் ரியல் எஸ்டேட் தொழில் அதல பாதாளத்துக்கு சரிந்து, முத்திரைத்தாள் கட்டண வருவாயும் கீழே போய்விட்டது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஏராளமாக மூடப்பட்டுவிட்டன. ஜவுளி தொழில், பின்னலாடை தொழில் பெரும் பாதிப்புக்குள்ளாகி விட்டது. வெளிநாட்டு முதலீடுகள், உள்நாட்டு முதலீடுகள் குறைந்துவிட்டன. ரூ.30 ஆயிரம் கோடி டாஸ்மாக் வருமானத்தை நம்பித்தான் அரசின் நிதிநிலை இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், வருவாய் பற்றாக்குறை உயர்ந்துகொண்டே போவது நிச்சயமாக நல்லதல்ல, அரசின் வருவாய் பெருகவேண்டும். அதுவும் பொதுமக்களுக்கு வலி இல்லாமல் பெருகவேண்டும். எனவே, இந்த ஆண்டு பட்ஜெட்டை தயாரிக்கும்போது, ‘மக்கள் நலன் என்பதை ஒரு கண்ணாகவும், அரசின் வருவாயை பெருக்குவதை மற்றொரு கண்ணாகவும்’ கொண்டுதான் பொருளாதார பார்வையை உருவாக்கவேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது.

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...