Thursday, August 8, 2019


மனசு போல வாழ்க்கை 03: சூழ்நிலைக் கைதியா நீங்கள்? 




ஒரு பெரும் தொழிலதிபருக்குப் பங்குசந்தைச் சரிவால் ஒரே நாளில் 50 கோடி ரூபாய் நஷ்டம். ஒரு தினசரிக் கூலி தொழிலாளி தன் ஒரு நாள் சம்பளத்தை ரயிலில் தவறவிட்டதால் அவருக்கு அன்று 500 ரூபாய் நஷ்டம்.

யாருடைய நஷ்டம் பெரிது? அவரவர்க்கு அவரவர் நஷ்டம் பெரிது என்பதுதான் உண்மை. தர்க்க அடிப்படையில் ஓர் அளவீட்டை உருவாக்கிப் பிறர் உணர்வுகளைத் தர வரிசைப்படுத்துவது முட்டாள்தனம். ஆனால், இதைத் தவறாமல் செய்கிறோம்.

ஒரு துயரை இன்னொரு துயருடன் ஒப்பிட முடியாது. ஒரு சாதனையை இன்னொரு சாதனையுடன் ஒப்பிட முடியாது. தனிநபர் மனநிலைக்கு ஏற்ப ஒவ்வொன்றும் வேறுபடுகின்றன.

ஆதார குணம்தான் நீங்கள்

என் பயிலரங்குகளில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று: “மனிதன் சூழ்நிலைக் கைதிதானே, அதனால் மனித மனம் பற்றிய எந்தக் கணிப்பும் மாறக்கூடியதுதானே, அப்படியென்றால் அவரவர் வாழ்க்கையை அவர்களுக்கு நிகழும் சம்பவங்கள்தான் தீர்மானிக்கின்றனவா?” மனிதனின் பல நடத்தைகளைச் சூழல் மாற்றலாம். ஆனால், ஆதார குணங்கள்தாம் மனித வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்பேன்.

உதாரணத்துக்கு, கொதி நீரில் ஒரு கேரட் துண்டையும் முட்டையையும், காபிக்கொட்டையையும் ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே போடுங்கள். சிறிது நேரத்தில் மாற்றங்களைக் கவனியுங்கள். கடினமாக இருந்த கேரட் வெந்துபோய் மென்மையாக மாறிவிடுகிறது.

பெரும்பகுதியும் திரவமாய் இருந்த முட்டை திடமாக மாறிவிடுகிறது. காபி கொட்டை தான் கரைவது மட்டுமல்லாமல் கொதி நீரையே மணமாகவும் சுவையாகவும் மாற்றிவிடுகிறது. தான் உள்வாங்கும் பொருட்களின் தன்மையை மாற்ற வல்லது கொதி நீர். ஆனால், எது எப்படி மாறும் என்பது அதனதன் ஆதாரக் குணம் சார்ந்தது.

எதிர் தரப்பு நியாயம் தெரிகிறதா?


என் உறவினர் ஒருவர் அனுப்பும் வாட்ஸ்அப் செய்தியில் தவறாமல் 999 வியாதிகளைத் தடுக்கும் வழி முறைகள் இருக்கும். இன்னோர் அன்பர் ஒரு பிரபல சுவாமிஜியின் சுருக்கமான உரைகளுக்கு மிக நெடிய பொழிப்புரைகளை அனுப்புவார்.

இன்னொருவர் உடனடி புரட்சிக்குத் தயார் ஆகுங்கள் என்ற ரேஞ்சுக்குத் தெறிக்க விடுவார். இத்தனை செய்திகள் என்னை அடைந்தாலும் எதைத் தேர்வு செய்வது என்பதை என் உள அமைப்பு முடிவெடுக்கிறது. எத்தனை தாக்கங்கள் வெளியிலிருந்து வந்தாலும் அதைச் சமைத்துக் கொடுப்பது நம் உள் மனம் மட்டுமே.

நம் உணர்வையும் எண்ணத்தையும் குழைத்து அந்த நிகழ்வைப் பார்க்கையில், அது நம் அனுபவமாக மாறுகிறது. தொடர் அனுபவங்கள்தாம் வாழ்க்கையின் சகலப் படிப்பினைகளுக்குப் பெரும் காரணம். இந்தப் படிப்பினைகளுக்குத் தோதான சம்பவங்களைச் சூசகமாகத் தேர்ந்தெடுக்கும் உள் மனம். பிறகென்ன? ‘எல்லாம் சூழ் நிலைதான் காரணம்!’ என்று பேச வைக்கும்.

நம் மனத்தையே சரியாகப் புரிந்து கொள்ளாதபோது அடுத்தவர் மனம் எப்படிப் புரியும்? தன்னைப் போலத்தான் பிறரும் என்று அது தட்டையாகப் புரிந்துகொள்ளும். தன் அனுபவம் சார்ந்த நியாயங்களைப் பொதுவாக்கும்.

“ஒரு நாள் கூலி 500 ரூபாயைத் தொலைத்ததா பெரிது? ஒரு நாள் சம்பளம் இல்லாமல் இருப்பது என்ன அவர்களுக்கெல்லாம் புதிதா? இந்த 50 கோடி ஷேர் மார்க்கெட் லாஸ் எத்தனை பேரைப் பாதிக்கும்? கம்பெனி பிளான்ஸ் எவ்வளவு தடைபடும்?”

“அவர் பணக்காரர். எத்தனை கோடி தொலைச் சாலும் திரும்ப எடுத்துருவாரு. இன்னிக்கு நான் பணம் இல்லாம போனா ராத்திரி யாருக்கும் சோறு கிடையாது. குழந்தைக்கு மருந்து வாங்கணும். இன்னிக்கு பணத்தைத் தொலைச்சதால எங்க குடும்பத்துக்கே கஷ்டம்..!”

எதிர் தரப்பு நியாயங்கள் தெரிய, எதிர் தரப்பு எண்ணங்களையும் உணர்வுகளையும் அறிய வேண்டும். எதிராளியின் மனத்தை அறிந்தால், நம் வாழ்க்கையில் பாதிப் பிரச்சினைகள் காணாமல் போய்விடுமே?

அதற்கு எம்பதி (Empathy) வேண்டும். அதை அடுத்த வாரம், பொறுமையாகப் பார்க்கலாம்!

(தொடரும்)

கட்டுரையாளர் மனிதவளப் பயிற்றுநர்

கேள்வி : எவ்வளவு படித்தாலும் பேசினாலும் திடீர் என்று நம்பிக்கை விட்டுப் போய்விடுகிறது. நிறைய வகுப்புகள் போயிருக்கிறேன். நிறைய படித்திருக்கிறேன். ஆனாலும் எந்த ஊக்கமும் நீண்ட நாட்கள் நிலைப்பதில்லை. என்ன செய்யலாம்?

பதில் : ஒரு உடற்பயிற்சியாளர் எத்தனை வகுப்புகளுக்குப் போனாலும் எத்தனை புத்தகங்களைப் படித்தாலும் தினசரி ‘ஒர்க் அவுட்’ செய்யாமல் இருந்தால் அவரால் அந்த வடிவத்தை நிலை நிறுத்திக்கொள்ள முடியாது. அது போலதான் மன நம்பிக்கையும்.

ஜிக் ஜிக்லர் என்ற பயிற்சியாளர் சொல்வார்: “ஊக்கம் என்பது தினசரி வேலை- குளிப்பதைப் போல!”

தினமும் நம்பிக்கை வளர்க்கும் செய்கைகளும் செய்திகளும் முக்கியம். குறிப்பாகத் தூங்குவதற்கு முன்னும், விழித்தவுடனும்.

நல்ல இசை, நல்ல புத்தகங்கள், உடற்பயிற்சி, வழிபாடு, ஊக்கம் தரும் கதைகள், நேர்மறை உணர்வு தரும் நண்பர்கள் என உங்கள் தேர்வுகளைத் தினசரிச் செய்வது அவசியம்!

‘மனசு போல வாழ்க்கை-2.0’ பகுதியில் நீங்கள் எதிர்கொண்டுவரும் மனச் சிக்கலுக்கு பதில் அளிக்கத் தயாராக இருக்கிறார் டாக்டர் ஆர். கார்த்திகேயன். உங்களுடைய கேள்விகளை அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ், கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

கட்டுரையாளர் தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

மனசு போல வாழ்க்கை 04: கதவுகள் பல, சாவி ஒன்று! 



பிறர் மனத்தை அறியும் வித்தை தெரிந்தால் பல உறவுகள் பலப்படும். அதற்கு எம்பதி (empathy) எனும் மிகச் சக்திவாய்ந்த கருவி பயன்படும். எதிராளியின் மனநிலையில் தன்னை நிறுத்தி அவரின் கண்ணோட்டத்தை அறிவது என்பது அவ்வளவு சுலபமாக வருவதல்ல.

ஆளுக்குத் தகுந்தாற்போலதான் நம்முடைய நுணுக்கமான உணர்வுகள்கூட வேலை செய்யும். அதிவேகமாக வந்த கார் மோதியதால் சிறுவன் ஒருவனுக்குத் தலையில் பலத்த காயம் என்று ஒரு செய்தி வருகிறது. இதை வெறுமனே படித்துவிட்டு ‘பாவம்’ என்று கடந்து செல்லும் உங்கள் மனம்.

செய்தியைப் படிக்கும்போது அது உங்களுடைய நண்பருடைய மகன் என்று தெரியவந்தால் சற்றுப் பதற்றமடைந்து ஃபோனில் அழைத்து விசாரிக்கலாம் என்று தோன்றும். அதுவே உங்கள் சொந்த மகன் என்றால்…? நிலைகுலைந்துபோய் மகனின் மொத்த வலியையும் அடுத்த கணமே உணர்வீர்கள்.

யாரோ ஒருவரின் மகனுக்கு, நண்பரின் மகனுக்கு, தன் மகனுக்கு வேறு வேறு விதமாகத் துடிக்கும் சராசரி மனம். எல்லோர் வலியையும் ஒன்றுபோல் உணர்ந்தால் நீங்கள் முற்றும் துறந்த ஞானி.

எவ்வளவு பெரிய சம்பவமாக இருந்தாலும் அது யாருக்கு என்று பார்த்துத்தான் மனம் எதிர்வினை ஆற்றும். இப்படித் தேர்ந்தெடுத்து வேலை செய்யும் மனம் மெல்ல இறுகிவிடுகிறது.

ஆனால், எதிராளியின் மனநிலையை அறிவுபூர்வமாக மட்டும் பார்க்காமல் உணர்வுபூர்வமாகவும் கூர்மையாகப் புரிந்துகொள்ள உதவுவதே ‘எம்பதி’. ‘பிறர் மனதை உணரும் இந்தத் திறன்’ பற்றிய ஆராய்ச்சிகள் இன்று உளவியலில் கொட்டிக்கிடக்கின்றன. எல்லா வெற்றியாளர்களும் இந்தத் திறன் கொண்டவர்களே என்று அடித்துக் கூறுகின்றன பல சுய உதவி நூல்கள்.

‘நான் இருக்கிறேன்!’

அமெரிக்காவில் நடந்த ஒரு சுவாரசியமான மருத்துவத் துறை ஆய்வு இதை உறுதிசெய்கிறது. மருத்துவர்கள் நோயாளிகளிடம் பேசும் உரையாடல்களை வைத்து எம்பதியைக் கணக்கிடுகிறார்கள். குறைந்த எம்பதி கொண்ட மருத்துவர்கள்மீது நோயாளிகளின் புகார்கள், சட்ட வழக்குகள் அதிகம் இருப்பது அதில் தெரியவருகிறது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் நோயைக் குணப்படுத்தும் திறனில் இரண்டு விதமான மருத்துவர்களுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இல்லை. ஆனால், நோயாளி மனம் அறிந்து உணர்வால் ஒன்றுபடாத மருத்துவர்கள் மீதுதான் அதிக வழக்குகள் உள்ளன.

எம்பதி அதிகமுள்ள டாக்டர்கள் என்ன செய்கிறார்கள்? கண்ணைப் பார்த்துப் பேசுகிறார்கள். நோயாளி பேசும்போது கூர்ந்து கவனிக்கிறார்கள். அவர்களைத் தவிர வேறெங்கும் கவனத்தைச் சிதறடிப்பதில்லை. சொல்வதைப் புரிந்துகொண்டு, அதற்குப் பதில் அளிக்கிறார்கள், எவ்வளவு அற்பமானது என்றாலும்.

நான் இருக்கிறேன் என்று ஆறுதல் வார்த்தை கூறுகிறார்கள். சொன்ன பிரச்சினை, சொல்லாத பிரச்சினை இரண்டையும் புரிந்துகொள்கிறார்கள். முக்கியமாகப் புன்னகைக்கிறார்கள்! எளிய விஷயங்கள் தாம். ஆனால், இதை இயல்பாகச் செய்வது அவசியம்.

ஆழ்மனத்தின் ஆசை

இன்று தொழில் உலகில் ‘Design Thinking’ மிகவும் பிரபலம். புதிய பொருட்கள், சேவைகள், தொழில்கள் தொடங்குவோர் இதை அவசியம்

கற்க வேண்டும். வாடிக்கையாளரின் தேவையை உணர்ந்து புதிய சந்தைகளை உருவாக்குவது எப்படி என்பதைப் பற்றி விரிவாகச் சொல்கிறது. ‘கஸ்டமர் எம்பதி’ என்பது வாடிக்கையாளர் கோரும் விஷயங்களை மட்டுமல்ல, அவர்கள் ஆழ்மனத்தில் ஆசைப்படும் பொருட்கள், சேவைகளை உருவாக்க உதவுகிறது.

வாடிக்கையாளர் நேரடியாகக் கேட்காத பல அற்புதங்களை ‘ஆப்பிள்’ மூலம் ஸ்டீவ் ஜாப்ஸ் தந்தார். அவர் பயன்படுத்திய வடிவமைப்புச் சிந்தனைக்கு ஆதாரம் வாடிக்கையாளர் மனதை அறிவது. தோனி கடைசி ஓவரில் பதற்றம் அடையாமல் பந்துவீச்சாளரின் உடல்மொழியைக் கவனித்து சிக்ஸரைத் தூக்குகிறார். இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.

எம்பதி கற்க உங்களுக்கு ஒரு சிறு வீட்டுப்பாடம் தருகிறேன். இன்று உங்களிடம் சண்டை பிடிக்கும் ஆள் யாராக இருந்தாலும், உடனடியாகப் பதில் கொடுக்காமல், அவர்கள் சொல்வதை முழுமையாகக் கேளுங்கள்.

அவர்களின் பிரச்சினை என்ன என்பதை யோசியுங்கள். அடிநாதமாக உள்ள விஷயம் பிடிபட்டால் அதை அவர்களிடமே கேளுங்களேன். குறிப்பாக, நீங்கள் அவர்கள் பக்க நியாயத்தை அறிய முயல்கிறீர்கள் என்பதைத் தெரிவியுங்கள். “இவ்வளவு சிம்பிளா?” என்று எண்ணாதீர்கள். நாம் முட்டி முட்டி திறக்கப் போராடும் பல கதவுகளுக்குச் சின்னதாய் ஒரு சாவி இருக்கும். தேடிப் பாருங்கள்!

கேள்வி : ஒரு டாக்டராக இருந்தும் புகைப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. எல்லா முறைகளும் தோல்வி அடைந்துவிட்டன. குறைப்பதுகூடப் பல நேரத்தில் முடிவதில்லை. உடனடியாகப் பதற்றத்தைக் குறைக்க சிகரெட் ஒன்றுதான் வழி என்று தோன்றுகிறது. இதை விடவே முடியாதா?

பதில்: எந்த ஒரு பழக்கமும் ஏதோ ஒரு மனத் தேவையைத் தொடர்ந்து பூர்த்தி செய்யும். உங்களுக்கு வேலைப் பளு காரணமான சோர்வும் மன அழுத்தமும் என்று தெரிகிறது. அதைப் போக்க வழி செய்யுங்கள். வேலையின்போதே சற்றுப் புத்துணர்வுடன் இளைப்பாற யோகா போன்ற வேறு வழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள்.

புகை மட்டுமல்ல; எந்தப் பழக்கத்தின் அடிமையாக இருந்தாலும் “இந்தப் பழக்கம் எந்த மனத் தேவையைப் பூர்த்தி செய்கிறது?” என்ற கேள்விதான் மாற்றத்தின் முதல் படி.

‘மனசு போல வாழ்க்கை-2.0’ பகுதியில் நீங்கள் எதிர்கொண்டுவரும்

மனச் சிக்கலுக்கு பதில் அளிக்கத் தயாராக இருக்கிறார்

டாக்டர் ஆர். கார்த்திகேயன். உங்களுடைய கேள்விகளை அனுப்பலாம்.


முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ், கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

கட்டுரையாளர் தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

(தொடரும்)

கட்டுரையாளர்

மனிதவளப் பயிற்றுநர்
மனசு போல வாழ்க்கை 05: பொறுப்புத் துறப்பு உதவாது! 




“எந்த இடத்தில வேலை செஞ்சாலும் மேலதிகாரியோட மோதல் வந்துடுது. எனக்கு மட்டும் நல்ல பாஸ் வாய்ப்பதே இல்லை” என்று சொன்னவரிடம் “உங்களுடைய அப்பாவோட உங்கள் உறவு எப்படி?” என்று கேட்டேன். “சின்ன வயசுல இருந்தே பிரச்சினைதான். அதுவும் இப்போ

ஒரு கேஸ் நடப்பதால பேச்சுவார்த்தைகூட இல்லை.”

“உங்கள் அப்பாவுடன் உறவு சரியாகும்வரை உங்கள் மேலதிகாரி யாராக இருந்தாலும் அவருடன் பிணக்கு இருக்கும்” என்றேன். மேலதிகாரி என்பது நம் பண்பாட்டில் தந்தை ஸ்தானம். ஃப்ராய்ட் கூற்றின்படி அப்பாதான் அதிகார மையம்.

நம் ஆதார பயங்களைக் கையாளக் கற்றுக்கொள்வது இங்கிருந்துதான். “அது எப்படி, சொல்லிவெச்ச மாதிரி எல்லா பாஸும் பிரச்சினை கொடுக்கிறாங்க?” என்றார் மீண்டும். “எல்லோரிடமும் எனக்குப் பிரச்சினை என்றால், பிரச்சினை ‘நான்’ என்பது புரியவில்லையா?”

‘சைக்கோ அனாலிஸிஸ்’ அளவுகூடப் போக வேண்டாம். கொஞ்சம் யோசித்தாலே புரியும். எல்லா வெளியுலகப் பிரச்சினைகளுக்கும் காரணம் உள்ளுலகம்தான். அதனால்தான் சிலர் எந்த வியாபாரத்தில் கை வைத்தாலும் விளங்குவதில்லை. சிலர் எத்தனை கல்யாணம் செய்தாலும் செட்டில் ஆவதில்லை. சிலர் யாரிடமும் வேலையில் நிலைக்க முடிவதில்லை. எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணத்தை வெளியில் தேடுவது வீண்!

மனத்தின் விளையாட்டு!

வெளியில் தெரிகிற நிகழ்வுகள் அனைத்தும் நம் உள் மன அமைப்பால் தேடிப் பெற்றுக்கொள்பவையே. நம் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களைக் கூர்ந்து நோக்கினால் அடிப்படையாக ஒரு ‘pattern’ தெரியும். அதன் ஆரம்பமும் முடிவும் நம்மால் முடிவு செய்யப்படுபவை. ஆனால், யாரோ வெளியிலிருந்து செய்யவைப்பது போல் நம் மனம் வித்தை காட்டும்.

இதன் ஆரம்பம் ஒரு உணர்வு நிலை. அது தரும் எண்ணம். பின் எண்ணம் தூண்டும் செய்கைகள். பின் சங்கிலியாய்த் தொடரும் வெளியுலகச் சம்பவங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு கருத்தை உட்கொள்ளும் நம் உள்மனம். இதை ஒரு உதாரணமாகப் பார்க்கலாம். ஏதோ ஒரு துக்கமான மனநிலை. உடனே அது ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையைக் கொடுக்கிறது.

அது சங்கிலியாய் எண்ணங்களைத் தொடுக்கிறது: “நம்மை யார் மதிக்கிறார்கள், என்ன வாழ்க்கை இது, நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?” இதன் தொடர்ச்சியாக வீட்டுக்குச் சென்றால் எல்லோரும் குதூகலமாக ஒரு விசேஷ வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உடனே மனம் அன்னியப்பட்டு, “நான் அவசியம் வரணுமா?” என்று மனைவியிடம் கேட்க, “இந்த மூஞ்சிய வச்சிட்டு வர்றதுன்னா வரவே வேண்டாம் ப்ளீஸ்” என்று கோபமாகப் பதில் வருகிறது. உடனே மனம், “பாரு… என்னை விட்டுட்டு தனியா போறதுன்னா எத்தனை சந்தோஷம்?” என்று ரோஷப்பட்டு சொல்லாமல் வெளியே போய்த் தனியாகக் குடிக்க வைக்கும்.

“ஏன் குடிக்கிறீர்கள்?” என்று கேட்டால், “என் பொண்டாட்டி அவங்க சொந்தகார வீட்டு விசேஷத்துக்கு வர வேண்டாம்னு சொல்லிட்டா பா… அந்தத் துக்கம்தான் தாங்க முடியலை!” எனக் குறை கூறும். இதுதான் மனத்தின் விளையாட்டு.

பலவீனமான தற்காப்பு எதற்கு?

எந்த மனநிலையில் இருக்கிறீர்களோ, அதற்கேற்ற சம்பவங்கள் உங்களைக் கவரும். இதுதான் உண்மை. “உலகம் என்னை இப்படி மாற்றிவிட்டது” என்று யார் சொன்னாலும் அது மோசடி. உலகம் என்பது ஒரு பெரு நகரக் கடைத் தெரு போல.

அங்கு எது கண்ணில்படுகிறது என்பது அவரவர் தேவையைப் பொறுத்தது. பயணிகளுக்குப் பேருந்து எண்கள் கண்ணில்படும். வாலிபர்களுக்குப் பெண்கள் கண்ணில்படுவர், குழந்தைகளுக்கு பலூன்கள். சிகரெட் தேடுபவருக்கு அருகிலிருக்கும் பெட்டிக் கடை. பக்தனுக்குத் தூரத்துக் கோயில் மணி.

நாம் தேர்ந்தெடுப்பவை அனைத்தும் இப்படித்தான். புற உலகைச் சாடுவது சுலபமான செயல். ஆனால், அது ஒரு பலவீனமான தற்காப்பு. தன் வாழ்க்கையில் நிகழ்பவற்றுக்குத் தன்னை முழு காரணமாகச் சொல்ல மனம் அஞ்சுகிறது. “வாழ்க்கை அப்படியே ஓடுச்சு!” என்று சொல்வது எளிதாக இருக்கிறது.

“வாழ்க்கையை அப்படியே ஓட்டிட்டேன்!” எனும்போது ஒரு பாரத்தை ஏற்றி வைத்துக்கொள்வதைப் போல உணர்கிறோம். அதனால்தான் சட்டென எல்லாவற்றுக்கும் காரணங்கள் தயாராக வைத்திருக்கிறோம். “சேல்ஸ் ஜாப்... குடிப் பழக்கம் இயல்பு.” “கல்யாணத்துக்கு அப்புறம் வாசிப்பு நிண்ணு போச்சு.”

ஆனால், ஒன்றை மாற்ற வேண்டும் அல்லது சீர்படுத்த வேண்டும் என்றால் இந்தப் பொறுப்புத் துறப்பு உதவாது. என் வாழ்க்கையில் நடப்பவற்றுக்குப் பெரிதும் காரணம் நான்தான் என்று நம்புவதை ‘Internal locus of control’ என்கிறது உளவியல். வெற்றியாளர்கள் பற்றி எல்லா நூல்களிலும் தவறாமல் சொல்லப்படுவது இதுதான். “என் வாழ்க்கையைச் செதுக்கும் சிற்பி நான்” என்ற நம்பிக்கைதான் முதல் சிந்தனை முதலீடு.

கேள்வி: எவ்வளவுதான் நேர்மறையாக யோசிக்க நினைத்தாலும் ரொம்ப எதிர்மறையாகத்தான் மனம் யோசிக்கிறது. அதேபோல், எது நடக்கக் கூடாது என்று நினைக்கிறேனோ அதுவே நடக்கிறதே ஏன்?

பதில்: மனித மனத்துக்கு உயிர் பயம் என்பது எப்போதுமே இருந்துகொண்டிருக்கிறது. பயமும் கோபமும் நம் default mode-ல் இயங்கும். நம்பிக்கை கொள்ளத்தான் முயற்சி தேவை. நம்பிக்கை இழக்க எதுவுமே செய்ய வேண்டாம். அதனால் உங்களுக்கு மட்டும் நேர்வதாகக் கவலைகொள்ள வேண்டாம்!

எது நடக்கக்கூடாது என்பதை நினைக்கும்போது அதுதான் நடக்கும். அந்த பய எண்ணம்தான் வேலை செய்யும்.

‘மனசு போல வாழ்க்கை-2.0’ பகுதியில் நீங்கள் எதிர்கொண்டுவரும்

மனச் சிக்கலுக்கு பதில் அளிக்கத் தயாராக இருக்கிறார்

டாக்டர் ஆர். கார்த்திகேயன். உங்களுடைய கேள்விகளை அனுப்பலாம்.


முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ், கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

கட்டுரையாளர் தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com


(தொடரும்)

கட்டுரையாளர், மனிதவளப் பயிற்றுநர்
நெல்லிக்காயுடன் பாகற்காய் சேர்த்து ஜூஸாக்கிக் குடித்தால் இன்சுலின் சுரக்கும்: சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி! 

Hindu tamil esai



சர்க்கரை நோயாளிகளை மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் சேர்க்கலாமா? என்று நீதிமன்றம் கேள்வி கேட்குமளவுக்கு நிலைமை கவலைக்கிடமாகிவிட்டது. `அதெல்லாம் பணக்கார நோயாச்சே...' என்று சொன்ன காலமெல்லாம் இன்று மலையேறி விட்டது. ஏழை-பணக்காரன், குழந்தை-பெரியவர் என்ற வித்தியாசமில்லாமல் எல்லோருக்கும் வருகிறது. அதேபோல, `அது ஒரு பரம்பரை வியாதி; பெற்றோருக்கு இருந்தால் பிள்ளைகளைப் பாதிக்கும்' என்று சொல்லப்படும் இலக்கணங்களையெல்லாம் மீறி யாருக்கு வேண்டுமானாலும் அழையா விருந்தாளியைப்போல வந்து போகிறது.

குழந்தைப்பேறு காலத்தில் சில பெண்களைப் பாதிக்கும் சர்க்கரை நோய் சிலரிடம் நிரந்தரமாகக் குடியேறிவிடுகிறது. அதேபோல், தாயைப் பாதித்த அந்நோய் வயிற்றில் இருக்கும்போது இல்லாவிட்டாலும் பிற்காலத்தில் குழந்தைகளைப் பாதிக்கின்றது. இப்படி எந்த நிலையிலும் யாருக்கு வேண்டுமானாலும் சர்க்கரை நோய் வரலாம், ஒரு திருடனைப்போல..!

சர்க்கரை நோயின் பாதிப்பு ஏன் இந்த அளவுக்கு இருக்கிறது என்பதுபற்றி நாம் சிந்திக்கவேண்டும். என் தாத்தா காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சர்க்கரை நோய் கொள்ளை நோயைப்போல பல்கிப் பெருகக் காரணம் என்ன? அதற்கான விடை நம்மிடமே இருக்கிறது. இன்றைக்கு சுமார் 50, 60 வயதில் இருப்பவர்கள் அவர்களது சிறு வயது நினைவுகளை கொஞ்சம் அசைபோட்டுப் பார்த்தால் தெரியும். அன்றைய காலத்தில் உண்ட உணவுகளுக்கும் இப்போது நாம் உண்ணும் உணவுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்தாலே அதிலுள்ள உண்மை விளங்கும்.

கிராமம், நகரம் என்ற வித்தியாசமில்லாமல் ஆங்காங்கே காணப்படும் வேப்ப மரங்களில் காய்த்துக் கிடக்கும் சிறு பழங்களை வாயில் குதப்பிக்கொண்டு அதிலுள்ள இனிப்புச்சுவையை ருசிப்பார்கள். ஆனால், கூடவே அதிலுள்ள மருத்துவக் குணங்கள் உள்ளே சென்று நோய்கள் வராமல் தடுக்கிறது. நாவல் மரங்களின் கீழே விழுந்து கிடக்கும் பழங்களை தூசி தட்டி, மண்ணை அகற்றிவிட்டு அப்படியே வாயில் போட்டுச் சுவைப்பதுண்டு. கெட்ட வாடை வீசும் மஞ்சணத்தி எனப்படும் நுணா மரங்களின் பழங்களையும் விட்டு வைப்பதில்லை. காட்டுப்பகுதியில் கிடக்கும் இலந்தைப் பழத்தை அப்படியே எடுத்து வாயில்போட்டுச் சாப்பிடுவது இன்றும் தொடர்கிறது. பனம்பழத்தைச் சுட்டும் செங்காயை கருப்பட்டி சேர்த்து வேகவைத்தும் சாப்பிடுவோம். இவையெல்லாம் விலை கொடுத்து வாங்காமல் இலவசமாக எளிதாகக் கிடைப்பவை. அவை ஆரோக்கியம் தரும் பழங்கள் என்பது எத்தனைபேருக்குத் தெரியும்?



சர்க்கரை நோயாளிகளை பழம் சாப்பிடக்கூடாது என்று சொல்லி அவர்களின் வாயைக் கட்டுவதுடன் சுவைகளை அறியவிடாமல் செய்துவிடுகிறார்கள் சில மருத்துவர்கள். மா, பலா, வாழை என முக்கனிகளையும் ஒருசேரச் சுவைத்துச் சாப்பிடும் சர்க்கரை நோயாளிகளும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக. கடலூரைச் சேர்ந்த ஒரு ஹோமியோபதி மருத்துவர் இந்தமுறையைத்தான் பின்பற்றுகிறார். ஆனால், அவர் வெறும் வயிற்றில் பழங்களை மட்டுமே சாப்பிடுகிறார். பசி எடுத்தால், வயிற்றுக்கு தேவைப்பட்டால் இரண்டு மணி நேரம் கழித்து வழக்கமான உணவைச் சாப்பிட்டும் சர்க்கரையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சர்க்கரைச் சத்து அதிகம் இல்லாத நார்ச்சத்து நிறைந்த பழங்களை தாராளமாகச் சாப்பிடலாம் என்றும், சர்க்கரை நோயாளிகள் தினமும் நான்கைந்து பழங்களைச் சாப்பிடலாம் என்றும் ஆய்வுகளும் கூறுகின்றன.

குறைந்த விலையில் எல்லா இடங்களிலும் எளிதாகக் கிடைக்கும் கொய்யாப்பழத்தைச் சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ உள்ளிட்ட சத்துகள் அதிகமாகவும் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் இருக்கின்றன. இதில் சர்க்கரைச் சத்து குறைவு; நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை சரிசெய்யும். அதேபோல் நாவல் பழம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை விரைவில் கட்டுப்படுத்தும். இதன் கொட்டையைச் சாப்பிடுவதால், அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிக விரைவாகக் கட்டுப்படுத்தும். நாவல் வேர் ஊறிய நீரை அருந்துவதன் மூலமும் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். இவை தவிர அன்னாசி, ஆப்பிள், பேரிக்காய், மாதுளை, பப்பாளி மற்றும் சிட்ரஸ் உள்ள ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்களைச் சாப்பிடலாம். கிவி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி உள்ளிட்ட பெர்ரி வகைப் பழங்களையும்கூட சாப்பிடலாம்.




காலையில் வெறும் வயிற்றில் ஒரு முழு நெல்லிக்காயுடன் அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக பாகற்காய் சேர்த்து அரைத்து சாறு எடுத்து அருந்தி வருவதன்மூலம் இன்சுலின் தாராளமாகச் சுரக்கும். வாழைப்பூ, வெள்ளரிக்காய், வெண்டைக்காய், கேரட், முட்டைக்கோஸ் மற்றும் பச்சை நிறக் காய்கறிகள், நார்ச்சத்து அதிகமுள்ள கீரைகள், வெள்ளைப்பூண்டு, மஞ்சள், பீன்ஸ், வெந்தயம் உள்ளிட்ட உணவுகளை அடிக்கடி சேர்த்து வந்தாலே சர்க்கரை நோயாளிகள் நலமுடன் வாழலாம்.

அரிசி உணவு சர்க்கரை நோயை அதிகரித்துவிடும் என்று சொல்லப்படுகிறது. உண்மையில், இன்றைக்கு உள்ள பாலிஷ்டு அரிசிகளால்தான் நோய்கள் வரும். முன்பெல்லாம் பட்டை தீட்டப்படாத கைக்குத்தல் அரிசியைத்தான் உண்பார்கள். தவிடு நீக்கப்படாத அந்த அரிசிகளை உண்பதால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்கும். கூடவே அரிசியில் உள்ள மாவுப்பொருள்களை செரிமானமடையச் செய்யக்கூடியது தவிடு என்பது எத்தனைபேருக்குத் தெரியும்? அதுமட்டுமல்ல அன்றைக்கு பயிரிடப்பட்ட நெல் ரகங்கள் பெரும்பாலும் நீண்டகாலம் விளையக்கூடியவை. இன்றைக்குப்போல் அவசரத்தில் விளைவிக்கப்பட்டவை அல்ல.

பாரம்பரிய அரிசிகள் மகிமை நிறைந்தவை என்று மார் தட்டுவது வெற்று வார்த்தைகள் அல்ல. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு மருத்துவக் குணம் இருக்கும். சம்பா அரிசியின் தவிட்டுடன் கருப்பட்டி கலந்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். அதை ஒரு தின்பண்டமாகவே கொடுத்தார்கள். மாவுச்சத்து மட்டுமல்லாமல் நார்ச்சத்து நிறைந்த சம்பா ரக அரிசிகளில் உள்ள சத்துகள் அதிகம். மாப்பிள்ளைச் சம்பா, கார்த்திகைச் சம்பா, கிச்சடிச் சம்பா, மணிச் சம்பா, மல்லிகைப்பூ சம்பா என அரிசி ரகங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படி அன்றைக்கு சாப்பிட்டவை எல்லாமே நோய் நீக்கியாகவே இருந்தன. இவற்றால் சர்க்கரை நோய் என்ற பேச்சுக்கே இடமில்லை.

அதுமட்டுமல்ல, அன்றைக்கு ஒட்டுமொத்த குடும்பமும் உழைக்கும். அப்பா ஆடு, மாடுகளை பராமரிப்பார். அம்மா வீட்டைச் சுத்தம்செய்வது, பாத்திரம் கழுவுவது, உரலில் நெல் குத்தி எடுப்பது, ஆட்டுக்கல்லில் மாவு அரைப்பது, அம்மியில் மசாலா அரைப்பது என பம்பரமாய் சுழல்வார். அக்கா வீட்டுக்கு வெளியே இருக்கும் அடுப்பில் நெருப்பு மூட்டி சமைத்துக் கொண்டிருப்பார். அண்ணன் விறகு வெட்டுவதுடன் தோட்ட வேலைகளைச் செய்வார். தங்கையும் தம்பியும் வீட்டைச் சுற்றியிருக்கும் செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவார்கள். இப்படி ஒட்டுமொத்தக் குடும்பமும் உடல் உழைப்பில் ஈடுபடும். இவற்றால் யாருக்கும் எந்த நோயும் வந்ததில்லை. அப்படியே வந்தாலும் தாத்தா கொடுக்கும் பச்சிலை மருந்துகளால் அவை வெகுதூரம் போய்விடும்.



சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடக்கூடாது, கருப்பட்டி சாப்பிடக்கூடாது என்றும் இயற்கை விளைபொருள்கள் பலவற்றைப் பட்டியலிட்டு அவற்றையெல்லாம் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் சிலர் கூறுகிறார்கள். இயற்கையின் மகத்தான கொடையான தேன் சர்க்கரை நோயாளிகளுக்குப் பாதுகாப்பானதே. அதைச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் அதிகரிக்காது. ஆனாலும், இன்றைக்குக் கிடைக்கும் தேன் இயற்கைமுறையில் பெறப்படுகின்றனவா? `ஆர்கானிக்', `மலைத்தேன்' என்றெல்லாம் சொல்லி விற்கப்படும் தேனெல்லாம் உண்மையானதா? அதிலும் சிலர் ஒருபடி மேலேபோய் தும்பைத் தேன், துளசித் தேன், நாவல் தேன் என்று சொல்லிக்கொண்டு மக்கள் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள். தேன் விற்பவர் மீதுள்ள நம்பிக்கையில் வாங்கினாலும் அவருக்கு கொடுத்தவர் எப்படிப்பட்டவர், அவர் எங்கிருந்து அந்தத் தேனை பெற்றார்? உண்மையிலேயே அது தேன் தானா? என்று பல கேள்விகள் எழுகின்றன. மருத்துவக் குணம் நிறைந்த தேன் தன் மகத்துவத்தை இழக்கும்போது அது சர்க்கரை நோயை மட்டுமல்ல வேறு பல நோய்களையும் உண்டாக்கத்தானே செய்யும்?

முன்பெல்லாம் டீ, காபியில் சேர்க்கப்படும் சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டி சேர்த்தே சாப்பிட்டார்கள். பெரும்பாலும் பால் சேர்ப்பதில்லை. கடுங்காபி அல்லது கட்டஞ்சாயாவையே குடிப்பார்கள். இதனால் எந்த நோயும் வந்ததாகத் தெரியவில்லை. கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டாலும் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். இப்படி இயற்கை விளைபொருட்கள் அனைத்தும் நோய்கள் வராமல் தடுப்பதுடன் நோய்களைக் குணப்படுத்தும் மாமருந்தாக இருந்தன. ஆனால், இன்றைக்கு நாம் உண்ணும் உணவுகளில் பெரும்பாலானவை நோய்களை உருவாக்குபவையாகவே இருக்கின்றன. ஆகவே, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வரவேண்டும். சர்க்கரை நோய் என்று இல்லை; எந்த நோயும் நம்மை நெருங்காமலிருக்க உண்ணும் உணவில் தொடங்கி எல்லா நிலைகளிலும் மாற்றம் வர வேண்டும்.

- தமிழ்க்குமரன்
‘கனவு நிறைவேறலையே!’ - வாழ்வை முடித்துக்கொண்ட மாணவிகள்

பி.ஆண்டனிராஜ்

எம்.திலீபன்

எல்.ராஜேந்திரன்

தே.தீட்ஷித்

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து நடத்துநர் செல்வராஜின் மகள் கீர்த்தனா, நெல்லை ஊருடையான் குடியிருப்பைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வராஜின் மகள் தனலட்சுமி ஆகியோரின் தற்கொலை தமிழகத்தை உலுக்கியிருக்கிறது.



கீர்த்தனா

‘‘நீட் தேர்வுதான் இவர்களின் தற்கொலைக்குக் காரணம்’’ என்று சமூக ஆர்வலர்கள் சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.

துறைமங்கலத்தில் உள்ள செல்வராஜ் வீட்டைத் தேடிச் சென்றோம். கீர்த்தனாவின் மரண சோகத்திலிருந்து குடும்பத்தினர் மீளாத நிலையில், செல்வராஜின் நண்பர் தியாகராஜன் நம்மிடம் பேசினார்.

கீர்த்தனா, தனலட்சுமி

  ‘‘புள்ளைங்கதான் உலகம்னு வாழ்ந்த குடும்பம். கீர்த்தனாவின் அப்பா செல்வராஜுக்கு, தொண்டையில கேன்சர். சிகிச்சையப்போ அவர் பட்ட கஷ்டங்களைப் பார்த்த கீர்த்தனா, ‘நான் டாக்டர் ஆகி, அப்பாவை நல்லா கவனிச்சுக்குவேன்’னு சொன்னா. அதுபோலவே நல்லா படிக்கவும் ஆரம்பிச்சா. பத்தாம் வகுப்புல 495 மார்க் எடுத்து மாநிலத்திலேயே மூணாவது இடம் பிடிச்ச கீர்த்தனா, போன வருஷம் ப்ளஸ் டூ தேர்வுல 1,053 மார்க் எடுத்தா. நீட் தேர்வுல 202 மார்க் மட்டுமே எடுத்ததால, மருத்துவ சீட் கிடைக்கலை. அதனால, சென்னையில நீட் கோச்சிங் கிளாஸுல சேர்ந்தா. அவருக்காக ஒட்டுமொத்த குடும்பமும் சென்னையில குடியேறிச்சு. இந்த வருஷம் நீட் தேர்வுல 384 மார்க் எடுத்தும் சீட் கிடைக்காததால, இந்த முடிவை எடுத்துட்டா ’’ என்று கலங்கினார்.

கீர்த்தனாவின் தோழிகளிடம் பேசினோம். ‘‘அவளோட கனவு, லட்சியம் எல்லாமே டாக்டர் ஆகணும்கிறதுதான். சின்ன வயசுல இருந்தே `எங்க அப்பாவுக்கு மருத்துவம் பார்க்க டாக்டர் ஆகணும்’னு சொல்லிக்கிட்டே இருப்பா. ஆனா, நீட் தேர்வால் அவளோட கனவெல்லாம் சிதைஞ்சுப்போச்சு. `இந்த முறை சீட் கிடைச்சிடும்’னு ரொம்ப நம்பிக்கையா இருந்தா. அவளைவிட குறைவான மார்க் வாங்கி சுமாரா படிக்கிற புள்ளைங்க பலர், நீட் தேர்வுல அதிக மார்க் வாங்கி டாக்டருக்குப் படிக்கப் போயிட்டாங்க. அது அவளை ரொம்பவே அவமானப்பட வெச்சிருச்சு. அதனாலத்தான் இப்படியொரு முடிவைத் தேடிக்கிட்டா’’ என்று கண்ணீர் வடித்தார்கள்.

தனலட்சுமியின் கடிதம்

பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, ‘‘நீட் தேர்வால் ஏற்படும் உயிரிழப்புகள் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், நீட் தேர்வைத் தொடர்வதில் மத்திய அரசு பிடிவாதம் காட்டுவது சரியல்ல. தமிழக அரசு இந்த விவகாரத்தில் போதிய அழுத்தம் கொடுக்காதது வேதனைக்குரியது. ஜெயலலிதா எதிர்த்த நீட் தேர்வை, எடப்பாடி பழனிசாமி அரசு ஆதரிப்பது வெட்கக்கேடானது. மத்திய அரசின் அனைத்து அழிவுத் திட்டங்களுக்கும், தமிழக அரசு சிவப்புக் கம்பளம் விரிப்பது கேவலமானது. தமிழக அரசின் அரசியல் லாபத்துக்காக, நீட் தேர்வு என்ற பெயரில் இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப்போகிறீர்கள்?” என்றார் ஆவேசமாக.

நெல்லை மாவட்டம் ஊருடையான் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான செல்வராஜின் மகள் தனலட்சுமியின் தற்கொலை அந்தப் பகுதி மக்களை உலுக்கியுள்ளது.



தனலட்சுமி எழுதி வைத்த கடிதத்தில், ‘என் சாவுக்கு யாரும் காரணமில்லை. என்னால், நான் ஆசைப்பட்டதைப் படிக்க முடியவில்லை. பணம்தான் என் கனவுகளை நிறைவேற்ற முடியாத நிலைக்குத் தள்ளிவிட்டது. நான் மட்டும் நீட் கோச்சிங் கிளாஸுக்குப் போயிருந்தால், இப்போது டாக்டருக்குப் படித்துக்கொண்டிருப்பேன். நான் ஆசைப்பட்டது கிடைக்கவில்லை. அதனால் போய்வருகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


தனலட்சுமியின் தந்தை செல்வராஜிடம் பேசியபோது, ‘‘நான் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்திக்கிட்டு வர்றேன். எனக்கு இதயப் பிரச்னை ஏற்பட்டு சர்ஜரி செய்ததுல, மூணு லட்சம் ரூபாய் செலவாயிடுச்சு. அதை கடனுக்கு வாங்கியதால, வட்டி கட்டிட்டிருக்கேன். அதனாலதான் கடந்த வருஷம் தனலட்சுமியை கோச்சிங் சென்டர்ல சேர்க்க முடியலை. இவ இந்த மாதிரி ஒரு முடிவை எடுப்பானு நினைச்சுக்கூடப் பார்க்கலை’’ எனக் கதறினார்.

‘‘நீட் தேர்வு காரணமாக மருத்துவர் ஆக முடியாத ஆதங்கத்தில் அரியலூர் அனிதா, செஞ்சி பிரதீபா, திருப்பூர் ரிது, பட்டுக்கோட்டை வைஸ்யா, விழுப்புரம் மோனிஷா, திருச்சி சுப தற்கொலை செய்து கொண்டனர். அந்த வரிசையில், பெரம்பலூர் கீர்த்தனா, நெல்லை தனலட்சுமி என எண்ணிக்கை கூடுகிறது. அரசு அக்கறையுடன் கவனம் செலுத்த வேண்டிய விவகாரம் இது’’ என்று சமூக ஆர்வலர்கள் தரப்பில் இருந்து குரல்கள் கேட்கின்றன.

மனசு போல வழ்க்கை 07: மனத்தைக் காட்டிக்கொடுத்துவிடும் உடல்! 
 




டாக்டர். ஆர். கார்த்திகேயன்

ஒருவரைப் புரிந்துகொள்ளச் சிறந்த வழி அவர் உணர்ச்சி வசப்படும்போது அவரைக் கவனிப்பதுதான். இதுவும் ஓர் இயற்பியல் ஆய்வு போலத்தான். ஓர் உலோகத்தின் தன்மையை அறிய என்ன செய்ய வேண்டும்? அதை உடைத்துப் பார்க்க வேண்டும். அமிலத்தில் கரைத்துப் பார்க்க வேண்டும்.

தீயில் சுட்டுப் பார்க்க வேண்டும். மொத்தத்தில் அதன் இயல்பு நிலையை மாற்றியமைக்கும் போதுதான் அதன் தன்மை தெரியும். எவ்வளவு வளையும், எந்த வெப்பத்தில் உருகும், எப்படி உருமாறும் என்றெல்லாம் கணிக்க முடியும். இதே விதி மனிதர்களுக்கும் பொருந்தும். அமைதியான சூழலில், நிதானமான உணர்வில், யாவும் நன்கு நடைபெற்றுக்கொண்டி ருக்கும்போது அனைவரும் கிட்டத்தட்ட நன்றாகத்தான் தென்படுவார்கள்.

ஆனால், ஒரு சிக்கல் வந்து உணர்ச்சி வசப்படும் போதுதான் மூடிக்கிடந்த அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்துவார்கள். விமான நிலையத்தில் இதை நான் அடிக்கடி பார்ப்பதுண்டு. உள்ளே நுழையும்போது கனவான்கள் அனைவரும் ஒன்று போலத்தான் தெரிவார்கள். விமானம் தாமதம் என்றதும் அவர்கள் ஒவ்வொருவரின் சுயரூபம் வெளிப்படும்.

சிக்கல் ஒன்றுதானே!

“நான் யார் தெரியுமா, கூப்பிடு உன் மேலதிகாரியை!” என்று அதிகாரம் காட்டுவார் ஒருவர். “நம்ம நாடு உருப்படவே உருப்படாது” என்று நமட்டுச் சிரிப்பு சிரிப்பார் இன்னொருவர். “யூ நோ ஏர்லைன்ஸ் இஸ் எ ப்ளீடிங் இண்டஸ்ட்ரி…” என்று விரிவுரை ஆற்றத் தொடங்கும் ஒரு புறம். “நம்ம ராசி அப்படி சார். கனெக்டிங் ஃபிளைட் பிடிச்ச மாதிரித்தான்” என்று நொந்துகொண்டு சிரிக்கும் ஒன்று. தகவல் தெரிந்தவுடனே எதுவும் பேசாமல் ஓரமாய்ப் போய்ப் படுத்து உறங்குவார் ஒருவர். அடுத்த செய்தி வரும்வரை இருப்புக் கொள்ளாமல் பிரசவ அறைக்கு வெளியே உள்ளது போலக் குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டே இருப்பார் ஒருவர்.

இங்கே சிக்கல் ஒன்றுதான். அதற்குக் கோபம், பயம், கழிவிரக்கம், நக்கல், சோர்வு என அவரவர் மனநிலைக்கு ஏற்ப நடந்துகொள்கிறார்கள். மனோத்திடம் அதிகம் தேவை யான பணிக்குரிய நேர்முகத் தேர்வில் கண்டிப்பாக மன உளைச்சலைத் தூண்டும் கேள்விகளைக் கேட்பார்கள். Stress interview என்றே இதைச் சொல்வதுண்டு. எவ்வளவு மறைத்தாலும் உடல் மொழியும் பதில்களும் ஒருவரின் மனஉறுதியை அல்லது உறுதியின்மையைக் காட்டிக் கொடுத்துவிடும். என்னைப் பொறுத்தவரை வாழ்வின் ஒவ்வொரு சிக்கலையும் ஒரு stress interview என்று நினைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஒரு சிக்கலின்போது நம் உடலும் மனமும் எப்படி நடந்துகொள்கின்றன என்று கவனிக்க முடியும்.

நேர்முகத் தேர்வு முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் நமக்கு எல்லா ஞானோதயமும் வரும். “அந்த டென் ஷன்ல வார்த்தை வரல. கொஞ்சம் சொதப்பிட்டேன். அப்புறம் சமாளிச்சு பதில் சொன்னேன். ஏன் அவ்வளவு டென்ஷன்னு இப்ப புரியலை!”

உடலை உற்றுநோக்குங்கள் மனக்கிளர்ச்சியை உருவாக்கும் எல்லாச் சம்பவங்களிலும் உடல் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மாற்றங் களைத்தான் செய்கிறது. நபருக்கு நபர் இது மாறும். ஒருவருக்கு அதிகமாகத் தலைவலி, சிலருக்கு வயிறு குழையும். சிலருக்கு மார்பு படபடக்கும்- இப்படி உடலில் எந்த இயக்கம் பாதிக்கப்படும் என்பதில் மாறுபாடுகள் இருக்கலாம்.

ஆனால், ஒவ்வொரு மனிதருக்கும் மனக்கிளர்ச்சியின்போது உடல் மாற்றங்களில் ஒரு பொதுத் தன்மை உண்டு. இதை அறிந்தாலே நாளைக்கு உங்களுக்கு வரவிருக்கும் நோய்களைக் கண்டறியலாம். ஆனால், நம் பிரச்சினை என்னவென்றால் ஆரம்ப அறிகுறிகளை அலட்சியப்படுத்து கிறோம். அல்லது அமுக்கி வைக்க நினைக்கிறோம். இந்த வலி சொல்லும் செய்தி என்ன என்று யோசிக்காமல், எதைத் தின்று ‘நிவாரணம்’ கிடைக்கும் என்று ஓடுகிறோம். உடல் கிளர்ச்சி, மனக் கிளர்ச்சியின் தொடர்ச்சி என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறோம். உடலை ஒரு உயிரில்லா ஜடப்பொருள் போலப் பகுதி பகுதியாய்ப் பிரித்து வைத்தியம் பார்க்க ஆரம்பித்துவிட்டோம். மனப் பிரச்சினைக்கும் உடலில் காரணிகள் தேடுவதைப் போல, உடல் பிரச்சினைகளுக்கு மனதில் காரணிகள் தேடுவதில்லை நம் மருத்துவர்கள்.

உங்களுக்கு வர வாய்ப்பிருக்கும் வியாதிகள் பற்றித் தெரிய வேண்டுமா? ஒரு வேலை செய்யுங்கள். பதற்றம் அடையும்போதெல்லாம் உடலில் எந்தெந்த மாறுதல்கள் ஏற்படுகின்றன என்று கூர்ந்து கவனித்துக் குறித்து வையுங்கள். எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் சரி, பரவாயில்லை. உங்கள் உடலை உற்று நோக்குங்கள். உங்கள் உணர்வுகளை உங்களுக்குப் புரிய வைக்கும் ஆசான் உங்கள் உடல்.

கேள்வி: எவ்வளவு பொருள் வாங்கினாலும் திருப்தியாக இல்லை. சதா ஷாப்பிங் செல்வதும் செலவு செய்வதும் போதைபோலத் தோன்றுகிறது. எனக்குப் பெரிய சம்பளமும் இல்லை. எதை வாங்க வேண்டும், எதை வாங்க வேண்டாம் என்றும் புரிவதில்லை. எந்தப் பொருள் வசதியும் இல்லாத என் பெற்றோர் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள். மால்களுக்குச் செல்வது ஒரு விதமான நோயா?

பதில்: உங்கள் கேள்வியிலேயே எல்லாப் பதில்களும் உள்ளன. உங்களுக்கு உள்ளே காலியாக இருப்பதை உணர்ந்துதான் பொருட்களாய் வாங்கி நிரப்புகிறீர்கள். அந்த வெற்றிடத்தைக் கவனியுங்கள். இதுவும் போதைபோலத் தான். வாங்கியதைப் பயன்படுத்துவதைவிட அடுத்ததை வாங்கத்தான் மனம் விரும்பும். தேவையில்லாத பொருட்களை வாங்க வைக்கத்தான் ஒரு பெரும் வணிகக் கலாச்சாரம் இங்கு உருவாகியுள்ளது. திருப்தியை விலை கொடுத்து வாங்க முடியாது. திருப்தி அடைந்தால் எதையும் விலை கொடுத்து வாங்கவும் அவசியம் இருக்காது. திருப்தி அடையப் பல உன்னத வழிகள் உள்ளன. அவற்றைக் கண்டுபிடியுங்கள்!

- கட்டுரையாளர்,
மனிதவளப் பயிற்றுநர்

‘மனசு போல வாழ்க்கை-2.0’
பகுதியில் நீங்கள் எதிர்கொண்டு வரும் மனச் சிக்கலுக்கு பதில் அளிக்கத் தயாராக இருக்கிறார்
டாக்டர் ஆர். கார்த்திகேயன். உங்களுடைய கேள்விகளை அனுப்பலாம்.
முகவரி: வெற்றிக்கொடி,
தி இந்து-தமிழ், கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை,
சென்னை-600 002.
மின்னஞ்சல்:
vetrikodi@thehindutamil.co.in
கட்டுரையாளர் தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

மனசு போல வாழ்க்கை 08: மனம் வாயிலாக பதிவுசெய்யும் உடல்! 
 




எல்லா உடல் நோய்களுக்கும் மனம் ஒரு பெரும் காரணம் என இன்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்து வருகிறார்கள். மனத்தின் பங்கு இல்லாமல் உடலில் எதுவும் நிகழாது என்று கூறலாம். அது நேரடியாகவோ மறைமுகமாகவோ இருக்கலாம். முழுமையாகவோ குறைவாகவோ இருக்கலாம். நிச்சயம் மனத்தின் பங்களிப்பு உண்டு. “எப்படி அப்படிச் சொல்ல முடியும்? மழையில் நனைந்து காய்ச்சல் வருகிறது. ஊரெல்லாம் தொற்று நோய் பரவி வந்து உங்களையும் தாக்குகிறது.

அல்லது சாலை விபத்து நடக்கிறது. இதெல்லாம் வெளிப்புறக் காரணங்கள் இல்லையா?” என்று கேட்கலாம். ஒரு லட்சம் பேர் மீது பொழியும் மழையில் சில நூறு பேருக்கு மட்டும் ஏன் காய்ச்சல் வருகிறது? அது அவரவர் நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பொறுத்தது என்று சொல்லலாம். நோய் எதிர்ப்பு ஆற்றலில் மனத்தின் பங்கு அதிகம் என்று இன்று Psycho - Immunology தெளிவுபடுத்துகிறது.

இதை கவனித்தீர்களா?

விபத்துக்கு ஆளாவோர் பற்றிய உளவியல் ஆராய்ச்சிகள் Accident Prone Behaviour என்ற ஒன்றைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. மருத்துவ ஆராய்ச்சிகள்கூடச் சராசரிகளை வைத்துத்தான் முடிவுகளைப் பொதுமைப்படுத்துகின்றன. ஆனால், விதிவிலக்குகளைத் தீவிரமாக ஆராயும்போதுதான் உளவியல் காரணங்கள் தெரியவரும்.

உதாரணத்துக்கு, ஒரு மருந்தைப் பரிசோதிக்கும் மருத்துவர்கள் பொதுவாக நோயாளிகளை இரண்டு குழுக்களாகப் பிரிப்பார்கள். ஒரு குழுவுக்கு மருந்தைக் கொடுப்பார்கள். இன்னொரு குழுவுக்குச் சிகிச்சை அளிக்காமல் சற்றுத் தாமதிப்பார்கள். அல்லது மாற்று சிகிச்சை தருவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னே நோயின் வீரியத்தை இரண்டு குழுவிலும் கணக்கிடுவார்கள்.

மருந்து அளிக்கப்பட்ட குழுவில் 100-க்கு 75 பேருக்கு நோய் தன்மை குறைந்திருந்தால் அதை வீரிய மருந்து என்று ஒப்புக்கொள்வார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால், அவர்கள் கவனிக்கத் தவறும் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று, மருந்து கொடுக்கபப்டட குழுவில் நோய்த்தன்மை குறையாத 25 பேருக்கு இடையிலான பொதுத்தன்மை என்ன? இரண்டாவது, மருந்து கொடுக்கப்படாத குழுவிலும் நோய்த்தன்மை குறையும் 10 பேருக்கு எது பொதுவானது? இங்குதான் நம்பிக்கைகளின் நோய் எதிர்ப்புதன்மை புலப்படுகின்றது.

இதை Placebo Effect என்று சொல்வார்கள். வெறும் தண்ணீரை மிக வீரியம் மிக்க மருந்து என்று கூறிக் கொடுக்கும்போது நோய் சரியாவதைப் பல முறை நிரூபித்துள்ளார்கள். அதேபோல நோய் பயத்தினாலும் எதிர்மறையான அணுகுமுறையாலும் நல்ல சிகிச்சை கூடப் பலன் அளிக்கத் தாமதமாகிறது. இதை Nocebo Effect என்பார்கள்.

உணர்வும் உடலும்

நம்பிக்கை சார்ந்த மாற்று சிகிச்சை முறைகள் எல்லாமும் முதலில் நோயாளியை மனதளவில் நன்கு போஷிக்கின்றன. பெரும் ஆறுதல் வார்த்தைகள் அங்கு அளிக்கப்படுகின்றன. ஆழ்மன அளவில் நோய் சரியாகும் என்ற நம்பிக்கையை விதைக்கின்றன. பலன் அடைந்தவர்களின் சாகசக் கதைகளைக் காண வைக்கின்றன. இவை அனைத்தையும் மனம் வாயிலாக உடல் பதிவு செய்துகொள்கிறது. அதனால்தான் நம் மேல் மனத்தில் தர்க்கரீதியாக ஒப்புக்கொள்ள முடியாத வழிமுறைகளைக்கூட, ஆழ்மன நம்பிக்கைகள் மூலம் ஒப்புக்கொள்கிறோம். அதன் பலன்களை உணரும்போது தர்க்கத்தைக் கழற்றி வைத்துவிட்டு நிவாரணத்தை மட்டும் ஏற்றுக்கொள்கிறோம்!

இதற்கு நேரெதிரான ஒன்றையும் அடிக்கடி பார்க்கிறோம். பெரும்பான்மையோருக்கு வெற்றிகரமாக நிவாரணம் தரும் ஒரு மருத்துவச் சிகிச்சைகூடச் சிலருக்குப் பலன் அளிப்பதில்லை. அதனால்தான் எந்த வைத்தியரும் எந்த நோய்க்கும் உறுதியான வாக்குறுதி தருவதில்லை. காரணம் உடல் என்பது எலும்பும் சதையும் ரத்தமும் நரம்பும் மட்டுமல்ல. மனத்தின் தன்மை ஒவ்வொரு உடல் அணுவிலும் உறைந்து இருப்பவை.

உணர்வின் தன்மையால் உடல் எப்படியெல்லாம் மாறும் என்பதற்கு வைத்தியச் சான்றுகள் எல்லாம் தேவையில்லை. தினசரி வாழ்க்கையில் ஆயிரம் அனுபவங்களை நாமே காண்கிறோம். நல்ல பசியுடன் சாப்பிடும்போது சாம்பாரில் செத்த பல்லி கிடப்பதாகச் சொல்கிறார் நண்பர். குடலைப் புரட்டிக் கொண்டு வாந்தி வருகிறது. பின்னர் நண்பர் ‘எல்லாம் கிண்டலுக்கு’ என்று ஆயிரம் சொல்லியும் உணவு உண்ண முடியவில்லை.

நெருங்கிய உறவினர் இறந்தவுடன் இரவு முழுக்கத் தூக்கமில்லை. இப்படி ஒவ்வொரு உணர்வும் உடலை மாற்றி அமைத்துக்கொண்டே இருக்கின்றன. மகிழ்ச்சி உடலை இலகுவாக்குகிறது. அழுத்தமும் நெருக்கடியும் உடலை நோய்களுக்குத் தயார்படுத்துகின்றன.

உணர்வுகள் நோய்களைக் உருவாக்குகின்றன என்பது உண்மை என்றால், அந்த நோய்களை குணப்படுத்தும் ஆற்றலும் உணர்வுகளுக்கு உண்டு என்பது உண்மைதானே! அப்படி என்றால் உடல் தன்மையைச் சீராக்க அதற்கேற்ற உணர்வு நிலைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

உணர்வுகளைத் தோற்றுவிக்கும் எண்ணங்களை தேர்ந்தெடுத்து கையாள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், மனம் ஏற்படுத்தும் சேதாரத்தை மனத்தைக்கொண்டே நிவர்த்தி செய்துகொள்ள முடியும். இந்தச் சுயச் சிகிச்சைக்கு மனப் பயிற்சி அவசியமாகிறது.

(தொடரும்)
- டாக்டர். ஆர். கார்த்திகேயன்
மனிதவளப் பயிற்றுநர்
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

‘மனசு போல வாழ்க்கை-2.0’ பகுதியில் நீங்கள் எதிர்கொண்டுவரும் மனச் சிக்கலுக்கு பதில் அளிக்கத் தயாராக இருக்கிறார் டாக்டர் ஆர். கார்த்திகேயன். உங்களுடைய கேள்விகளை அனுப்பலாம்.

முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in

NEWS TODAY 24.4 2026