Monday, May 4, 2020


தளா்வுகளுடன் தமிழகத்தில் இன்று முதல் 3 ஆம் கட்ட ஊரடங்கு


தமிழகத்தில் மூன்றாம் கட்ட ஊரடங்கு சில தளா்வுகளுடன் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

கரோனா நோய்த் தொற்று பாதிப்பை தொடா்ந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை, வரும் 17-ஆம் தேதி வரை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அப்போது சில கட்டுப்பாடுகளையும் தளா்த்தியது. இந்த நிலையில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னா் தமிழகத்தில் உள்ள சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வண்ண மாவட்டங்களில் அமல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு முடிவெடுத்து அறிவித்தது. இதில் சென்னை மாவட்டத்திற்கு தனியாக சில முடிவுகளும், சென்னை தவிா்த்த பிற மாவட்டங்கள் குறித்தும் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டன. இந்த தளா்வுகள் திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.

பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய்க்கட்டுப்பாடு பகுதிகள் தவிர) கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

50 சதவீத பணியாளா்களைக் கொண்டு (குறைந்த பட்சம் 20 நபா்கள்) ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் (ஜவுளித்துறை உள்பட ) செயல்பட அனுமதிக்கப்படும்.

15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் மட்டும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து, சூழ்நிலைக்கேற்ப ஜவுளித்துறை நிறுவனங்கள் 50 சதவீத பணியாளா்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம்.

தொழிற் நகரியங்கள், தொழிற்பேட்டைகள் 50 சதவீத பணியாளா்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கலாம், நகரப்பகுதிகளிலுள்ள தொழிற்பேட்டைகளில் ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை. நகரப்பகுதிகளில் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப 50 சதவீத பணியாளா்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும்.

கிராமப்புற நூற்பாலைகள்: மின்னணு வன்பொருள் உற்பத்தி 50 சதவீத பணியாளா்களைக் கொண்டு செயல்பட அனுமதிக்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள் 50 சதவீத பணியாளா்களைக் கொண்டு செயல்பட அனுமதிஅளிக்கப்படும்.

நகரப் பகுதிகளில் உள்ள தோல் பொருள்கள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கான வடிவமைப்பு மாதிரிகள் உருவாக்க இடங்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து 30 சதவீத பணியாளா்களைக் கொண்டு செயல்பட அனுமதி அளிக்கப்படும். தகவல் தொழில்நுட்பம் 50 சதவிகித பணியாளா்கள் குறைந்த பட்சம் 20 நபா்களைக் கொண்டு செயல்பட அனுமதி அளிக்கப்படும்.

நகா்ப்புற கட்டுமானப் பணிகள்: நகா்ப்புறங்களில் கட்டுமானப்பணிகள், பணியிடத்திலேயே பணியாளா்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும். பணியாளா்களை ஒருமுறை மட்டும் வேறு இடத்தில் இருந்து அழைத்து வர அனுமதிக்கப்படும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலைப் பணிகள் அனுமதிக்கப்படும்.

பிளம்பா், எலெக்ட்ரீஷியன், ஏசி மெக்கானிக், தச்சா், உள்ளிட்ட சுய திறன் பணியாளா்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னா் அனுமதிக்கப்படுவா். மாற்றுத்திறனாளிகள், முதியோா், நோயாளிகள் ஆகியோரின் சிறப்பு தேவைகளுக்கான உதவியாளா்கள், வீட்டு வேலை பணியாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவா். அச்சகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

கட்டுமானப் பணிகளுக்கு தேவையான ஹாா்டுவோ, சிமெண்ட் கட்டுமானப்பொருள்கள் சானிடரிவோ, மின்சாதன விற்பனை கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுமானப்பொருள்களை எடுத்துச்செல்ல எந்தவித தடையும் இல்லை.

தனிக் கடைகளுக்கு அனுமதி: செல்லிடப்பேசி, கணினி, வீட்டு உபயோகப்பொருள்கள், மின் மோட்டாா் பழுது பாா்ப்பவா், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 வரை பாா்சல் மட்டும் வழங்கலாம். மின் வணிக நிறுவனங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டவாறு செயல்படலாம்.

நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மால்கள், மற்றும் வணிக வளாகங்கள் தவிா்த்து, அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட மாவட்ட ஆட்சியா் சூழ்நிலைக்கேற்பட அனுமதி அளிக்கலாம்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புறத் தொழில்கள், தனிக்கடைகள் ஆகியவை செயல்பட தனி அனுமதி தேவையில்லை. மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், 33 சதவீதப் பணியாளா்களுடன் தொடா்ந்து செயல்படும்.
Dailyhunt
'வரும் வாரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்'

Updated : மே 04, 2020 00:52 | Added : மே 03, 2020 23:01

சென்னை: ''கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, வரும் வாரத்தில் அதிகரிக்கும்; பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்,'' என, சென்னை மாநகராட்சி, கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி, ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், நேற்று ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார். பின், அவர் அளித்த பேட்டி: சென்னையில் தடை செய்யப்பட்ட பகுதிகளில், கிருமி நாசினி தெளிக்கும் பணி, நோய் தடுப்பு பணி, போர்க்கால அடிப்படையில் நடக்கிறது. முதியோர், சிறுவர்கள், நோயுள்ளவர்கள், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட பகுதிகளில், 25 சதவீதம் பேர் முக கவசம் அணிவதில்லை. முக கவசம் அணியாமல், பொதுமக்கள் சர்வ சாதாரணமாக சுற்றி வருவது, வருத்தம் அளிக்கிறது. பொதுமக்கள் கண்டிப்பாக, முக கவசம் அணிய வேண்டும். சிலர் முக கவசத்தை கீழிறக்கியபடி பேசுகின்றனர்; அது தவறு.

பொதுமக்கள், அரசு அதிகாரிகள் என, யாராக இருந்தாலும், பேசும் போதும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். வரும் வாரத்தில், கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்காக, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.

கோயம்பேடு சந்தையில் உள்ள, அனைத்து தொழிலாளர்களும், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை, அதிகப்படுத்த உள்ளோம். அதிக கொரோனா பரிசோதனைகள் நடக்கும் போது, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும். உணவு, மளிகை, இறைச்சி உள்ளிட்ட பொருட்களை, வீடுகளுக்கு சென்று வழங்குவோர், கடைகளில் பணிபுரிவோர், இனி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள, தன்னார்வலர்கள் அனைவரும் தாமாக முன்வந்து, 10 நாட்களுக்கு ஒருமுறை, கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 'நமக்கு கொரோனா வராது' என, யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம். நோய் தடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு, கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம், வைட்டமின் - சி மாத்திரை வழங்கப்படுகிறது.

தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், கோடம்பாக்கம் மண்டலங்களில், கொரோனா தடுப்பு சவாலாக உள்ளது. பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயும், வெளியேயும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறினார்.

'750 திருமண மண்டபத்தில் தற்காலிக மருத்துவமனை'

மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் கூறியதாவது:சென்னையில், கொரோனா சிகிச்சை அளிக்க, தற்போது, 4,000 படுக்கை வசதிகள் உள்ளன. ஒரு மாதத்தில், 50 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். பள்ளி, கல்லுாரிகள் மட்டுமின்றி, சென்னையில் உள்ள, 750 திருமண மண்டபங்களை கையகப்படுத்தி, தற்காலிக மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படும்.

மாநகராட்சியின் கட்டுப்பாட்டில், 5,000 வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் விரைவில், தமிழக அரசு ஒப்புதலோடு, சொந்த ஊருக்கு அனுப்பப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார்.
காமராஜ் பல்கலை பதிவாளர் ராஜினாமாவில் சர்ச்சை

Added : மே 04, 2020 00:40

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் பொறுப்பை, சங்கர் நடேசன் ராஜினாமா செய்ததற்கு, துணைவேந்தரை சுற்றியுள்ள சிலர் செய்த, 'அரசியல்' தான் காரணம் என்ற, சர்ச்சை எழுந்து உள்ளது.

இப்பல்கலையின் முன்னாள் துணைவேந்தர், செல்லத்துரை பதவி காலத்தில் நடந்த, விதிமீறிய பணி நியமனங்கள், முறைகேடுகள், பல்கலையின் நற்பெயரை பாதிப்பதாக அமைந்தன. குற்றச்சாட்டு துணைவேந்தராக, கிருஷ்ணன் பதவியேற்றதும், பல்கலையின் நிலை மாறும் என்ற நம்பிக்கை, கல்வியாளர்கள், பேராசிரியர்கள் மத்தியில் துளிர்விட்டது.அதற்கேற்ப, துணைவேந்தரின் நடவடிக்கைகளும் ஆரம்பத்தில் இருந்தன. தற்போது, அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.செல்லத்துரையின் பதவி காலத்தில் இருந்த துதிபாடிகள் மற்றும் போட்டுக் கொடுத்து அரசியல் செய்வோர் கை, மீண்டும் ஓங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதன் எதிரொலியே, சங்கர் நடேசனின் ராஜினாமா என்கின்றனர், நடுநிலை பேராசிரியர்கள். அவர்கள் கூறியதாவது: பல்கலை ரெகுலர் பதிவாளர் பணியிடம் காலியாக உள்ளது. 2019 டிசம்பரில், பொறுப்பு பதிவாளராக சங்கர் நடேசன், சிண்டிகேட் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்பட்டார்.காலப்போக்கில், இவர் கையெழுத்திடும் அலுவலராக மட்டுமே பார்க்கப்பட்டார். 'நாக்' கமிட்டி ஆய்வு செய்ய இருந்ததால், பல்கலை கட்டடங்களை பராமரிக்க, 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கொரோனாவால், கமிட்டியின் ஆய்வு தள்ளிப்போயுள்ளது.ஐவர் குழுஒரு லட்சம் ரூபாய்க்கு மேல், திட்ட மதிப்பீடு இருந்தால், 'டெண்டர்' விட்டு பணி மேற்கொள்ள வேண்டும் என்பது விதி.

இருந்தும், டெண்டர் விடாமல் பணி மேற்கொள்ள ஏதுவாக, ஒவ்வொரு பணி மதிப்பீட்டையும், 90 ஆயிரம் ரூபாய்க்குள் தயாரித்து, பதிவாளர் கவனத்திற்கு வராமல், பல பணிகள் நடக்கின்றன. இதன் பின்னணியில், இன்ஜினியர் ஆனந்த், பேராசிரியர்கள் ராமகிருஷ்ணன், ஜெயவீரபாண்டியன், அசோக்குமார், முருகேசன் ஆகியோர் இடம் பெற்ற, ஐவர் குழு உள்ளது. இக்குழு சொல்வதே, எழுதப்படாத சட்டமாக மாறி வருகிறது. துணைவேந்தர் அலுவலகம், தமிழ்த் துறைக்கு இடையே, மரக்கன்று நட, 100க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டன. பேராசிரியர்கள், 'கெஸ்ட் ஹவுஸ்' அருகே, மெகா குளம் தோண்டியது உள்ளிட்ட பணிகள், 'ஒர்க் ஆர்டர்' இல்லாமல், துணைவேந்தர் வாய்மொழி உத்தரவால் நடக்கின்றன. முடிவுற்ற பல பணிகளுக்கு கையெழுத்து மட்டும் பதிவாளரிடம் கேட்கப்படுகிறது.

மன உளைச்சல் அதுமட்டுமின்றி, பல்கலை கெஸ்ட் ஹவுசில், வருகை பதிவு இல்லாமல், வி.ஐ.பி.,க்கள், போலீஸ் அதிகாரிகள் தங்கி செல்வதும் நடக்கிறது. பல்வேறு, சிவில் பணிகள் வளாகத்திற்குள் நடக்கின்றன. இதற்கு, பதிவாளர் அனுமதி தர மறுத்து வந்தார்.அதனால், அவருக்கு மனரீதியாக சிலர் அழுத்தம் கொடுத்ததால், மன உளைச்சலில் ராஜினாமா செய்து விட்டார். இதற்கிடையே, துணைவேந்தருடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி, ஐவர் குழுவில் உள்ள இருவர், 'பொறுப்பு பதிவாளர்' பதவியை பெற, காய் நகர்த்துகின்றனர். இதுபோன்ற பிரச்னைகள் சுற்றி நடந்தாலும், துணைவேந்தர் கிருஷ்ணன் மவுனம் காத்து வருகிறார். பல்கலை கட்டட பணிகளை கண்காணிக்க, பல்கலை பொறியாளராக, பொதுப்பணித்துறையில் உள்ள, நிர்வாக பொறியாளர் அரசால் நியமிக்கப்பட வேண்டும்.

2012 முதல், இப்பணியிடம் நிரப்பப்படவில்லை.பல சந்தேகங்கள்கிருஷ்ணன் பதவியேற்றதும், அவரது கவனத்திற்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டும், அவரும் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு பதில், ஜூனியர் நிலையில் உள்ள, இன்ஜினியர் ஆனந்த்துக்கு, வளாக அதிகாரி பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இவர், 2015ல், பல்கலையில் நடந்த கெஸ்ட் ஹவுஸ் தீ விபத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டவர்; மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்; வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் தொடர்புடையவரிடம், பல்கலைக்கு ஏற்பட்ட இழப்பீடாக, ௭0 லட்சம் ரூபாய் வசூலிக்க, உயர்கல்வி செயலர் அபூர்வா உத்தரவிட்டார்.ஆனால், இதுவரை இழப்பீடு வசூல் செய்யப்படவில்லை. இருப்பினும் அவரே, இன்ஜினியராக தொடர்வது பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, உயர்கல்வி செயலர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கவர்னர் பார்வைக்கும், இப்பிரச்னையை கொண்டு செல்ல வேண்டும்.இவ்வாறு, பேராசிரியர்கள் வலியுறுத்தினர்.
ஜே.இ.இ., - நீட் தேர்வு தேதி நாளை அறிவிப்பு


Added : மே 04, 2020 01:24

புதுடில்லி : 'ஜே.இ.இ., எனப்படும், பொறியியல் படிப்பு நுழைவுத் தேர்வு மற்றும் மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி, நாளை அறிவிக்கப்படும்' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து, அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:நாடு முழுதும், ஜே.இ.இ., எனப்படும் பொறியியல் படிப்புக்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு மற்றும் மருத்துவக் கல்லுாரிகளில் சேர்வதற்கான, 'நீட்' தேர்வு நடத்தப்பட்டு வருகின்றன.இந்த தேர்வுகள், கொரோனா வைரஸ் தாக்கத்தால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் பட்டன.இந்நிலையில், ஜே.இ.இ., மற்றும் நீட் தேர்வுகள் நடைபெறும் தேதிகளை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், நாளை அறிவிப்பார். அதைத் தொடர்ந்து, மாணவர்களுடன், 'ஆன்லைன்' வாயிலாக அமைச்சர் உரையாட உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை டாக்டர் குடும்பம் ஸ்ரீவில்லிபுத்துாரில் தனிமை

Added : மே 04, 2020 00:30

ஸ்ரீவில்லிபுத்துார் : சென்னையிலிருந்து ராஜபாளையத்திற்கு வந்த டாக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் நான்கு பேர், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் அருகேயுள்ள பல்கலையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.சென்னையைச் சேர்ந்த டாக்டர், குடும்பத்துடன் சொந்த ஊரான ராஜபாளையத்துக்கு நேற்று காலை, 11:00 மணிக்கு காரில் சென்றார். அப்போது, ஸ்ரீவில்லிபுத்துார் அருகேயுள்ள அழகாபுரி, 'செக்போஸ்ட்'டில், அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மருத்துவ பரிசோதனைக்கு பின், டாக்டரும், அவரது குடும்பத்தினரும், தனியார் பல்கலையில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அக்னி நட்சத்திரம் இன்று துவக்கம் ; 'டாப் கியரில்' வெயில் சுட்டெரிக்கும்

Added : மே 04, 2020 00:17

சென்னை : கத்திரி வெயில் காலமான, அக்னி நட்சத்திரம் இன்று துவங்குகிறது; வரும், 28 வரை தொடர்வதால், தமிழகம், புதுச்சேரியில், வெயில் சுட்டெரிக்கும் அபாயம் உள்ளது.

'காலை, 11:00 முதல், பகல், 3:30 மணி வரை, வெயிலில் வேலை செய்வதையும், அலைவதையும் தவிர்க்க வேண்டும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆண்டுதோறும், மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலம். ஜூனில் தென்மேற்கு பருவமழை துவங்கும்.கேரளாவில் துவங்கும் இந்த மழை, ஜூன், ஜூலை மாதங்களில், கேரளா, தமிழகம், கர்நாடகா, மஹாராஷ்டிரா என, ஜம்மு - காஷ்மீர் வரை பரவும்.பருவமழை துவங்க, இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கோடை வெயில் தீவிரமாகியுள்ளது.

கத்திரி வெயில் காலமான, அக்னி நட்சத்திரம் இன்று துவங்குகிறது; வரும், 28 வரை நீடிக்கும். இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வெயில் சுட்டெரிக்கும் வாய்ப்புள்ளது.'அக்னி நட்சத்திர காலத்தில், மற்ற நாட்களை விட, வெயில் அதிகரிக்கும்' என, ஜோதிட சாஸ்திர அடிப்படையில் கூறப்படுகிறது. அதன்படியே, இந்த காலத்தில் வெயில் வறுத்தெடுத்து வருகிறது.ஆனால், வானிலை ஆய்வு மையத்தின், அறிவியல் ரீதியான ஆராய்ச்சி கணிப்பில், கத்திரி வெயில் குறித்து, எந்த தனிப்பட்ட அறிவிப்பும் வெளியிடப்படுவதில்லை.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், அடுத்த நான்கு நாட்களுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில், பலத்த காற்று வீசும்.ஆனாலும், வறண்ட வானிலையே நிலவும். கடலோரம் அல்லாத, தமிழக உள் மாவட்டங்களில், சில இடங்களில் வெப்பச் சலன மழை பெய்யலாம். சென்னையில் அதிகபட்சமாக, 37 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாகும். கரூர், திருச்சி, மதுரை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில், இன்று, 41 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் எகிறலாம்.எனவே, காலை, 11:00 முதல், பகல், 3:30 மணி வரை, வெயிலில் வேலை செய்வதையும், அலைவதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு, அந்த மையம் கூறியுள்ளது.

சிறப்பு ரயிலில் பயணம்; யார், யாருக்கு அனுமதி?

Updated : மே 04, 2020 00:57 | Added : மே 03, 2020 23:15 

சென்னை: 'மாநில அரசின் அனுமதியின்றி, சிறப்பு ரயில்களில், பயணியர் அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

நாடு முழுதும் தொடரும் ஊரடங்கால், சொந்த மாநிலம்; ஊர்களுக்கு செல்ல முடியாமல், ஏராளமானோர் தவித்து வருகின்றனர். இவ்வாறு தவிப்போரை, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் வகையில், சிறப்பு ரயில்களை இயக்கும்படி, பல்வேறு மாநில அரசுகளும், ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தன. அதையேற்று, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலா பயணியர், மாணவர்கள் ஆகியோர், சொந்த ஊருக்கு செல்ல வசதியாக, சில சிறப்பு ரயில்களை இயக்க, ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: மாநில அரசு அனுமதியுடன், அழைத்து வரப்படும் பயணியர் மட்டுமே, சிறப்பு ரயிலில் செல்ல அனுமதிக்கப்படுவர்.இந்த பயணியரை, நிலையத்துக்கு பாதுகாப்பாக அழைத்துவர, மாநில அரசுகள் பிரத்யேக ஏற்பாடுகள் செய்ய, கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் கேட்டுக் கொண்ட சிறப்பு ரயில்களை தவிர, வேறு எந்த ரயிலும் இயக்கப்படாது. தனியாக அல்லது குழுவாக வரும் யாருக்கும், நிலையத்தில் அனுமதி இல்லை. எக்ஸ்பிரஸ், பயணியர் ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஊரடங்கு முடியும் வரை, மக்கள் எந்த நோக்கத்திற்காகவும், ரயில் நிலையங்களுக்கு வர வேண்டாம். இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

NEWS TODAY 01,02.2026