Saturday, June 6, 2015

நேர்மையின் இன்றைய நிலை


மது நாட்டில் அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகளைப் பற்றி வெளிவரும் உண்மைகள் கடலில் உள்ள சிறு நீர்த்துளி போலத்தான். கடலளவு உண்மைகள் மறைந்து கிடக்கின்றன. இப்படிப்பட்ட அரசுத்துறைகளில் பணியில் சேர்ந்து நேர்மையாக இருப்பது என்பது சுனாமியில் எதிர்நீச்சல் அடிப்பதைவிட சிரமமான ஆபத்தான காரியம் என்பது மறுக்க முடியாத உண்மை.

சிறுவயது முதல்,  தான் கற்ற கல்வி, புத்தகங்கள் மற்றும் பெரும் தலைவர்களின் வாழ்க்கையில் இருந்து கற்றுக்கொண்ட ஒழுக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நேர்மையாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசுப் பணிக்கு வருபவர்கள் சந்திக்கும் சோதனைகள் ஏராளம். இது போன்ற ஊழல்கள், முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் அவர்களுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். பிறர் முன்னிலையில் அவர்களை மிகவும் ஏளனமாக நடத்துவார்கள். இவை எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டுதான் நேர்மையாக செயல்பட வேண்டும்.

அப்படிப்பட்ட சோதனைகளையும் மீறி நேர்மையாக இருக்கும் அதிகாரிகளை, உடன் வேலை பார்ப்பவர்களும் அரசியல் செல்வாக்கு பெற்ற வெளி நபர்களும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. சமீபத்தில் அரசுத் துறையில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி,  தனது துறையில் பணியாற்றும் சக ஊழியர்களின் பிரிவுபசார விழாவில் பங்கேற்றுபேசும்போது, தனது பணிக்காலத்தில் மேலதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் முறைகேடான செயல்களுக்கு ஒப்புதல் கொடுக்கச சொல்லி நெருக்கடிகளைச் சந்தித்ததாக கூறுகிறார்.

இதுபோன்ற உள்ளக் குமுறல்கள் அவ்வப்போது வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. அதிகாரிகள் இது போன்ற விஷயங்களை பணி ஓய்வு பெற்ற பிறகு ஏன் சொல்ல வேண்டும்? ஏன் இது குறித்து அப்போதே தங்களின் துறையில் உள்ள மேலதிகாரிகளுக்கு புகார் அளித்திருக்கக் கூடாது என்று பலரும் நினைக்கலாம். ஊழல் என்பது எல்லா இடங்களிலும் எல்லா மட்டங்களிலும் கிருமி போல பரவி இருப்பதால் எந்தப் பக்கம் திரும்பினாலும் பாதிக்கப்படுவது நேர்மையாளர்கள்தான். இதனால் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

இது போன்ற நேர்மையாளர்களை ஓரம்கட்ட ஊழல்வாதிகள் பல குறுக்கு வழிகளை கையாள்வதுண்டு. நேர்மையாளர்களின் நேர்மைக்கு களங்கம் கற்பிக்கும் பொய்ப் புகார்களை உருவாக்கி பிற ஊழல் அதிகாரிகளின் கூட்டு முயற்சிகளால் அவர்களின் வாழ்க்கை முழுவதும் வருந்தும்படியான தண்டனையைக்கூட பெற்றுத் தந்துவிடுவார்கள். இன்று பல இடங்களில் நிர்வாகம் அப்படித்தான் நடந்துகொண்டு இருக்கிறது.
அதிகாரிகளுக்கு முதலில் முறைகேடுகளுக்கு உடன்படும்படி நெருக்கடி வரும். தங்களின் உயிருக்கு பயந்து பல அதிகாரிகள் மனசாட்சிக்கு விரோதமாக முறைகேடுகளுக்கு துணை போகிறார்கள். அதற்கு சம்மதிக்காத அதிகாரிகளுக்கு முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் இருக்கும்படி நெருக்கடி வரும்.

அப்படி இல்லையென்றால் அந்த அதிகாரிகளின்மீதே வீண்பழி சுமத்தி நெருக்கடி கொடுப்பார்கள். அதைப் பொய் என நிரூபிக்க அதிகாரிகள் ஆயுள் முழுவதும் போராட வேண்டி இருக்கும். அப்படியும் தங்கள் மீதான புகாரை அவர்கள் பொய் என்று நிரூபிக்க முடியாமல் போனால் தங்களின் இறப்பிற்கு பின்பும் தீராப்பழியாக அது இருக்கும் என்ற அச்சம் பல அதிகாரிகளுக்கு உண்டு.

இவை எல்லாவற்றையும் தாண்டி தன் அதிகாரத்திற்கு கவனத்திற்கு உட்பட்டு எந்த முறைகேடுகளும் நடக்காத வண்ணம் தடுத்து, தன்மேலும் வீண்பழி விழாமல் பார்த்துக்கொண்டு சமாளிக்கும் திறமையுள்ள சில அதிகாரிகள்,  பணி ஓய்வு பெற்ற பின் தங்களின் உயிரைவிட நேர்மையே பெரிது என்று தங்களின் உள்ளக்குமுறலை மனசாட்சியை உறுத்திக்கொண்டு இருக்கும் விஷயங்களை பொது வெளியில் சொல்கிறார்கள்.

மத்திய அரசில் பணிபுரியும் சிபிஐ அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என்று அரசின் எல்லா மட்டத்திலும் உள்ள அதிகாரிகள் தங்களின் பணிக்காலம் முடிந்த பின்னர்,  தங்களின் அனுபவங்களை பேட்டிகள் மூலமாகவும் தாங்கள் எழுதும் புத்தங்கள் மூலமாகவும் பொது வெளியில் பகிர்ந்துகொள்கிறார்கள். இவற்றில் சில நமது அரசு நிர்வாகத்தில் புரையோடிப் போயிருக்கும் ஊழலை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

இன்று அரசுத்துறையில் வேலை பார்க்கும் பல அதிகாரிகள் லஞ்சம் வாங்கி வசதியான வாழ்க்கை வாழ்வதைப் பார்த்து,  மற்றவர்களும் அப்படி வாழ ஆசைப்பட்டு அரசு வேலைக்கு விரும்பி வருகிறார்கள். நேர்மையாக இருக்கும் சில அதிகாரிகளை அவர்களின் குடும்ப உறுப்பினர்களே மதிப்பதில்லை என்பது கசப்பான உண்மை.

மனித உடலில் உயிரை அழிக்கும் கிருமி புகுந்ததைப்பொல லஞ்சமும், ஊழலும் நமது அரசு நிர்வாகத்தில் புகுந்து ஆட்டிப்படைக்கிறது. திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது முன்னோர்களின் சொலவடை. இங்கு திருடன் திருடுவதை அங்கீகரிக்கும் பெருமையாக நினைக்கும் மனப்பாங்கு அதிகரித்துக்கொண்டு வருகிறது. இது நம் சமுதாயத்திற்கு எந்த வகையிலும் நன்மையைத் தராது.

இது பற்றிய விழிப்புணர்வு நம்மில் இருந்து நம் வீடுகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். நம் பிள்ளைகளுக்கு நேர்மையை கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் அடுத்து வரும் தலைமுறைகளேனும் நேர்மையுடன் நடக்க ஆரம்பிக்கும்.

- ருத்ரன்

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...