Monday, July 6, 2015

உஷாரய்யா உஷாரு..

அது வசதிபடைத்த மாணவர்கள் படிக்கக்கூடிய கல்லூரி. புதிய மாணவர்கள் சேர்க்கை முடிந்து, கல்லூரி கலகலப்பாக தொடங்கியது. வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாணவர்களால் கல்லூரி களைகட்டியிருந்தாலும், கிட்டத்தட்ட எல்லா மாணவர்களிடேயும் ஒருவித தேடுதல் இருந்துகொண்டிருந்தது.

‘எங்கிருந்தோ இங்கு படிக்க வந்திருக்கிறோம். நண்பர்கள் கிடைத்தால்தானே கல்லூரி வாழ்க்கை நல்லபடியாக அமையும். எந்த நண்பர் நமக்கு கிடைப்பார்!’ என்ற ஏக்கம், எதிர்பார்ப்போடு அவர்கள் ஒவ்வொருவரும் நண்பர்களை தேடுவது அவர்களது கண்களில் தெரிந்தது.

இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சிலர் குழுகுழுவாக பிரிந்து அந்த மாணவர்களை தனித்தனியாக அணுகினார்கள்.

‘நாங்களும் புதிய மாணவராய் இந்த கல்லூரிக்குள் அடியெடுத்துவைத்தபோது, இப்படித்தான் நட்புக்காக ஏங்கினோம். எங்களுக்கு நண்பர்களை ஒருங்கிணைத்து தரவும், வழிகாட்டவும் யாரும் முன்வரவில்லை. அதனால் ரொம்ப கஷ்டப்பட்டோம். நாங்கள்பட்ட அதே கஷ்டத்தை நீங்களும் அனுபவிக்கக்கூடாது என்பதற்காக, ‘பர்ஸ்ட் டே பார்ட்டி’ ஒன்று ‘அரேன்ஞ்’ பண்ணியிருக்கோம். நீங்க பணம் எதுவும் தரவேண்டாம். நட்புக்காக எல்லா செலவுகளையும் நாங்களே செய்கிறோம். அந்த பார்ட்டியில் புதிதாக சேர்ந்திருக்கும் மாணவர்கள் நிறைய பேர் கலந்துகொள்வார்கள். ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசி உங்களுக்கு பிடித்த நண்பர்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்..’ என்றனர்.

பெரும்பாலான மாணவர்கள் அதற்கு இசைவு தெரிவித்தனர். ‘எந்த இடத்தில் எப்போது பார்ட்டி?’ என்று கேட்டனர்.

‘நாங்க சவுகரியமான இடத்தை தேடிக்கொண்டிருக்கிறோம். இரண்டொரு நாளில் முடிவு செய்ததும் தகவல் தருவோம். உங்கள் செல்போன் நம்பரை மட்டும் தாருங்கள்’ என்று கேட்டு வாங்கிக்கொண்டார்கள்.

அடுத்த நாளே புதிய மாணவர்களுக்கு தகவல் போனது. அடுத்து வந்த லீவு நாளில், குறிப்பிட்ட ஓட்டல் ஒன்றில் குறிப்பிட்ட நேரத்தில் கூடும்படி கூறினார்கள்.

நாற்பது மாணவர்கள் அந்த ஓட்டல் முன்னால் திரண்டனர். அங்கு தயாராக நின்றிருந்த பஸ் ஒன்றில் அவர்கள் ஏற்றப்பட்டு, நகரின் ஒதுக்குப்புற பகுதியில் உள்ள அரங்கம் ஒன்றில் இறக்கப்பட்டனர். சுவையான உணவுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

நேரம் சென்றுகொண்டிருந்தது. இரவு வந்தது. நடனமும், இசையும் அங்கு அரங்கேறியது. மாணவர்கள் அவைகளை ரசித்தபடியே ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்கொண்டார்கள். அவர்கள் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு விதவிதமான உணவுகள் வந்துகொண்டிருந்தது.

‘இவ்வளவு சிறப்பாக பார்ட்டியை நடத்துகிறார்கள். விலை உயர்ந்த உணவுகளை அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இதை எல்லாம் அவர்களால் சும்மா எப்படி தரமுடிகிறது?’ என்று யோசிக்கும் நிலையில் பெரும்பாலான மாணவர்கள் இல்லை.

ஆட்டமும், பாட்டமும் அமர்களப்பட்டுக்கொண்டிருந்தபோது, ஒருவர் அங்கிருந்த மேடையில் தோன்றினார். நட்பின் பெருமையை விளக்கிப்பேசினார். பின்பு, ‘நட்பை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் முதலில் நம்மை பக்குவப்படுத்திக்கொள்ளவேண்டும். அதற்காக நம்மையே நாம் அறிய வேண்டும். நம்மை அறிந்தால்தான் நம்மால் குழுவோடு இணைய முடியும்’ என்று பொடிவைத்து பேசினார்.

அதன்பின்பு நேரம் செல்லச் செல்ல உள்ளே மதுவும், சில வகை போதை பொருட்களும் கொண்டு வரப்பட்டன. பரிமாறப்பட்டன.

மறுநாள் காலையில் பஸ்சில் ஏற அவர்களால் முடியவில்லை. அரை மயக்கத்தில் இருந்தார்கள். அந்த மயக்கம் தங்களுக்கு தொடர்ந்து தேவை என்ற நிலைக்கும் அவர்களில் பலர் வந்துவிட்டார்கள். முதலில் ‘ஓசி’ என்றாலும் பின்பு இதற்கு மிகப்பெரிய விலையை கொடுக்கவேண்டியதிருக்கும் என்பது அந்த மாணவர்களுக்கு புரியவில்லை.

சீனியர் மாணவர்கள் சிலர், வெளியே உள்ள போதைப் பொருள் சப்ளை செய்யும் நெட்வொர்க்குடன் சேர்ந்து இப்படிப்பட்ட பார்ட்டிகளை நடத்தி, போதைப் பொருள் விற்பனைக்கு கால்கோள்விழா நடத்துகிறார்கள்.

மாணவர்களே காலேஜுக்கு தானே போறீங்க.. ரொம்ப கவனமாக போங்க..!

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...