Thursday, February 2, 2017


60 வயதுக்காரரின் 24 ஆண்டு உழைப்பு உங்கள் நாளையே மாற்றும்! 

#MorningMotivation





சேலத்தில் உள்ள பெரும்பாலான சுவர்களில் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனுள்ள வகையில் தன்னம்பிக்கையும் விழிப்புணர்வும் ஏற்படுத்தும் விதமாக வாரந்தோறும் பல்வேறு வகையான தகவல்களை எம்.எம்.எம் கார்னர் (MMM Corner) என்ற பெயரில் எழுதி வருகிறார் பசுபதிநாதன். இன்று நேற்றல்ல. இருபத்து நான்கு வருடங்களாக! தீபாவளி பொங்கல் சுதந்திர தினம் குடியரசு தினம் போன்ற விழா காலங்களில் அது தொடர்பான பல்வேறு வாசகங்களை எழுதி வருகிறார். சேலத்தில் இவரின் வாசகத்திற்காக பல மாணவர்கள் மற்றும் மக்கள் என ரசிகர் பட்டாளமே உள்ளன. அவரை சந்தித்த போது..

வாசகங்கள் எழுத வேண்டும் என்று எப்படி ஆர்வம் வந்தது?

ஆரம்பத்தில் சினிமா போன்ற சுவர் விளம்பரங்களை வரைந்தும் எழுதியும் வந்தேன். என்னுடைய தந்தை ஒரு சுதந்திர போராட்ட தியாகி. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தம்முடைய வாழ்நாளில் ஏதாவது ஒரு நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவரது வழி வந்த நான் மக்களுக்கு ஏதாவது நல்ல செயல்கள் செய்ய வேண்டும் என்று எண்னினேன். அதற்காக 1993 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இருபத்து நான்கு ஆண்டுகளாக சமூக அக்கறை, பொன்மொழி, தன்னம்பிக்கை வரிகள் போன்றவற்றை வாரம் ஒரு முறை எழுதி வருகிறேன்.

முதன் முதலாக எழுதியது பற்றி கூறுங்கள்?

முதன் முதலாக ஒரே ஒரு இடத்தில் 'வெற்றிகரமாக வாழ்ந்து காட்டு, வஞ்சகம் தீர்க்க இதை தவிர வேறு எதுவுமில்லை' என்று எழுதினேன். இந்த வரிகள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் அடுத்த வாரமே ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெவ்வேறு வாசகங்களை எழுதினேன். வெவ்வேறு வாசகங்கள் எழுதும் போது நிறைய பேர் எங்க எல்லாம் எழுதி இருக்கீங்க என்னென்ன வரிகள் எழுதி இருக்கீங்கனு கேட்டார்கள். அதனால் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான வாசகங்களை எழுத முடிவு செய்தேன். தற்போது 35 இடங்களில் எழுதி வருகிறேன்.

இதன் மூலம் ஏற்பட்ட அனுபவங்கள் சுவாரஸ்யமான நிகழ்வுகள் பற்றி கூறுங்கள்?



ஒரு சில காரணங்களால் இயக்குநர் சசி படம் ஒன்று பாதியில் நின்று விட்டது. அப்போது நான் எழுதி இருந்த ' ஒரு நொடி துணிந்திருந்தால் இறந்துவிடலாம், ஒவ்வொரு நொடியும் துணிச்சல் இருந்தால் வாழ்க்கையில் ஜெயித்துவிடலாம்' என்ற வரியை பார்த்து விட்டு மீண்டும் படத்தை இயக்கி வெற்றி படமாக வெளியிட்டார். இன்று வரை என்னிடம் நண்பராக தொடர்பில் உள்ளார்.ஒரு முறை நான் சுவரில் எழுதி இருந்த வாசகத்தை பார்த்த பள்ளி மாணவன் ஒருவன் மற்ற இடங்களில் எழுதி உள்ளதை போன்று எங்கள் வீட்டு சுவரிலும் எழுத வேண்டும் என்று கூறினான். அன்றிலிருந்து இன்று வரை அந்த மாணவன் வீட்டு சுவற்றிலும் எழுதி வருகிறேன்.என்னுடைய வாசகங்களை படித்து விட்டு நிறைய பேர் என்னிடம் வந்து அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட காரணமாக எனது வாசகங்கள் உள்ளதாக கூறுவார்கள். பல்வேறு தனியார் அமைப்புகள், ஊடகங்கள் என்னுடைய பணியை பாராட்டி பல்வேறு அங்கீகாரங்கள் அளித்துள்ளனர். அதை விட முக்கியமாக மக்கள் ஆதரவு என்ற அங்கீகாரம் உள்ளது.


பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் ஆதரவு எப்படி உள்ளது?

ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை மக்களிடமும் மாணவர்களிடமும் நல்ல ஆதரவு உள்ளது. சேலம் மக்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் என்னுடைய வாசகங்களை தெரிந்து கொள்ளும் வகையில் முகநூல் பக்கம் ஒன்றை உருவாக்கி அதில் அந்த வாரத்திற்கான வாசகங்களை பதிவேற்றம் செய்து விடுவேன். அதில் மக்கள் ஆதரவு பலமாக உள்ளன.




வாசகங்கள் எப்படி தயார் செய்கிறீர்கள்?

கல்வி மற்றும் வாழ்க்கையில் கற்று கொண்டவை, ஆங்காங்கே படித்தவற்றை எழுதி வருகிறேன். வாழ்க்கை அனுபவங்கள் மூலம் கற்றுக் கொண்ட பாடங்களையும் வாசகங்களாக எழுதி வருகிறேன். நான் கற்றுக் கொண்டதை பிறருக்கு கற்று தருகிறேன்.சமூக அக்கறையுடன் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்ட பின்பு சுவர் வாசகத்திற்காக செலவு செய்யும் தொகை ஒன்றும் பெரியதாக தெரியாது.

ஒவ்வொரு நாளையும் ஊக்கத்துடன் தொடங்க நினைக்கும் பலருக்கும், இவர் அமைதியாக தன் தொண்டை செய்து வருகிறார். இவர் எழுதிய வாசகங்களைக் கடந்து செல்லும் எவருக்கும், அது ஓர் எனர்ஜி பூஸ்டர்தான்! புதியன விரும்பும் இளைய சமுதாயத்தினருக்கும் இந்த 60 வயதுக்காரரின் வாழ்க்கை ஒரு ஊக்கம்தரும் பாடம்தான்!

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...