Thursday, February 9, 2017

வா வா முருகா! வடிவேல் அழகா!

தைப்பூச நன்னாளான இன்று முருகனை தியானித்து இந்த வழிபாட்டை படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும்.

* குன்று தோறும் குடிகொண்ட முருகப் பெருமானே! சிவனின் நெற்றிக் கண்ணில் அவதரித்த சிவபாலனே! வடிவேலனே! கார்த்திகைப் பெண்களின் அரவணைப்பில் வளர்ந்த கார்த்திகேயனே! அகத்தியருக்கு உபதேசித்த குருநாதனே! உன் திருவடியைத் தஞ்சம் என வந்து விட்டோம்.
* ஆறுபடை வீட்டில் அமர்ந்திருக்கும் அண்ணலே!பழநி தண்டாயுதபாணியே! திருத்தணியில் வாழும் தணிகாசலனே! தமிழில் வைதாரையும் வாழ வைக்கும் கருணைக் கடலே! சிக்கல் சிங்கார வேலவனே! மயில் வாகனனே! சேவல் கொடி ஏந்தியவனே! உன் சந்நிதியில் அடைக்கலம் புகுந்து விட்டோம். நீயே அருள்புரிய வேண்டும்.

* சூரனை அழித்து தேவர்களைக் காத்தவனே! தேவசேனாபதியே! தெய்வானை மணவாளனே! அருணகிரிநாதருக்கு அருள்புரிந்தவனே! ஆறுமுகனே! பன்னிரு கைகளால் வாரி வழங்கும் வள்ளல் பெருமானே! திருமாலின் மருமகனே! ஆனை முகனின் தம்பியே! குழந்தை தெய்வமே! எங்களுக்கு வாழ்வில் ஆரோக்கியம், செல்வ வளத்தையும் தந்தருள்வாயாக.
* பார்வதி பெற்ற பாலகனே! கந்தனே! கடம்பனே! கதிர் வேலவனே! சிவ சுப்பிரமணியனே! செந்துார் முருகனே! குறிஞ்சி ஆண்டவனே! அவ்வைக்கு கனி கொடுத்தவனே! மயிலேறிய மாணிக்கமே! முத்துக் குமரனே! சுவாமி நாதனே! சரவண பவனே! சண்முகனே! தாயினும் சிறந்த தயாபரனே! வாழ்வில் குறுக்கிடும் துன்பங்களைப் போக்கி வெற்றியைத் தருவாயாக.

* வேதம் போற்றும் வித்தகனே! குகப் பெருமானே! வள்ளி மணவாளனே! தவ முனிவர்கள்
உள்ளத்தில் வாழும் தவசீலனே! சிரகிரியில் வாழ்பவனே! காங்கேயனே! கண் கண்ட தெய்வமே! கலியுக வரதனே! திருப்புகழின் நாயகனே! தமிழ்க் கடவுளே! வாழ்வில் எல்லா வளமும் பெற்று நாங்கள் இன்பமுடன் வாழ வரம் தருவாயாக.

ஆறுமுகனின் அடியவர்கள்

ஆறுமுகப்பெருமானாகிய முருகனருள் பெற்றவர்கள் அகத்தியர், அருணகிரிநாதர் என்று எண்ணிக்கையில் அடங்காது. அவர்களே நமக்கு குருவாக இருந்து குருவருளையும், முருகப்பெருமானின் திருவருளையும் தந்தருள்கின்றனர்.

அகத்தியர்: முருகன் அருள்பெற்ற அடியார்களின் முதன்மையானவராகப் போற்றப்படுபவர் அகத்தியர். செந்தமிழ்நாடான இப்பகுதியை அகத்தியமுனிவரே முருகப்பெருமானிடம் பெற்று பாண்டிய மன்னனுக்கு கொடுத்ததாக திருநெல்வேலி தலபுராணம் கூறுகிறது. பொதிகை மலையில் முருகனிடம் உபதேசம் பெற்று அகத்தியம் என்னும் இலக்கணத்தை எழுதியதாகக் கூறுவர்.

நக்கீரர்: கடைச்சங்கப்புலவராய் மதுரைநகரில் இருந்து தமிழை வளர்த்த புலவர் நக்கீரர்.
முருகப்பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். திருப்பரங்குன்றத்தில் பூதங்களிடம் சிக்கிக் குகையில் கிடந்தபோது, முருகனே காப்பாற்றி அருள்செய்தார். முருகனின் ஆறுபடைவீடு
களையும் சிறப்பித்துப் போற்றும் திருமுருகாற்றுப்படையை எழுதினார்.

அவ்வையார்: முருகனை வழிபட்ட பெண் அடியவர்களில் அவ்வையார் குறிப்பிடத்தக்கவர். பசு மேய்க்கும் பாலகனாக வந்த முருகப்பெருமான் இவரிடம், “பாட்டி, சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு ஞானத்தை அருளினார் என்பர். இவர் பாடிய இனியது, புதியது, அரியது, பெரியது ஆகிய பாடல்கள் தம் சிந்தைக்கு விருந்தளிப்பவையாகும்.

குமரகுருபரர்: திருச்செந்துார் அருகில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த இவர், ஐந்து வயதுவரை பேசும் திறனற்றவராய் இருந்தார். முருகனருளால் பேசும் ஆற்றல் பெற்றார். கந்தர் கலிவெண்பா என்னும் பாடலைப் பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். முருகனின் மீது இவர் பாடிய முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் புகழ்பெற்றதாகும். காசியில் மடம் ஒன்றை நிறுவி தெய்வத் தொண்டில் ஈடுபட்டார்.

தேவராய சுவாமிகள்: பட்டி தொட்டிகளில் எல்லாம் முருகனுக்குரிய பாராயண நுாலாகத் திகழும் கந்தசஷ்டிக் கவசத்தைப் பாடிய அருளாளர் தேவராயசுவாமிகள் ஆவார். முருகனுக்குரிய பீஜ மந்திரங்களை சூட்சுமமாகத் தெரிவிக்கும் நுால் இதுவாகும். சென்னிமலை முருகனின் மீது பாடப்பட்ட இந்நுால், கவசம் போல பாதுகாக்கும் சக்தி கொண்டது.

ராமலிங்க வள்ளலார்: 'அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை' என்று கடவுளை கருணை வடிவில் கண்டு போற்றிய அருளாளர் வள்ளலார். சிறுவனாக இருக்கும்போது கண்ணாடியின் முன் தியானம் செய்யும்போது மயில்வாகனத்தில் முருகப்பெருமான் இவருக்கு காட்சியளித்தார் என்பர். கந்த கோட்டத்தில் வளர்ந்தோங்கும் கந்தவேளிடம் இவர் கேட்கும் வரங்கள் நம் ஒவ்வொருவருக்கும் தேவையானவை என்றால் மிகையில்லை.

பாம்பன் சுவாமிகள்: யாழ்பாணத்தில் சைவமரபில் தோன்றியவர் பாம்பன் சுவாமிகள். குமர
குருதாச சுவாமிகள் என்னும் பெயர் கொண்டிருந்த இவர், ராமேஸ்வரம் அருகில் உள்ள
பாம்பனில் வாழ்ந்ததால், 'பாம்பன் சுவாமிகள்' என்று அழைக்கப்பட்டார். முருகனின் மீது 6666 பாடல்கள் பாடியுள்ளார். பல அற்புதங்களை முருகனருளால் செய்த இவர், அண்மைக்காலத்தில் வாழ்ந்தவராவார். இவர் பாடிய சண்முக கவசம் பாராயண நுாலாகத்திகழ்கிறது. தமிழ் உயிர், மெய் எழுத்துக்கள் முப்பதையும் முதல் எழுத்தாககக் கொண்டு அமைந்த நுால் இது. பஞ்சா
மிர்தவண்ணம் என்னும் பாடலால் முருகனுக்கு அபிஷேகம் செய்தவர் இவர்.

சிவசக்தி பாலன்

முருகன் தாயின் மூலமாக பிறக்காமல், தந்தை ஒருவரால் மட்டுமே பிறந்தவர் என்று எண்ணுகிறோம். இது சரியானதல்ல. அசுரன் ஒருவன் சிவனிடம், தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் அழிந்துவிட வேண்டும் என வித்தியாசமான வரத்தை பெற்றிருந்தான். அவன், சிவனது தலை மேலேயே கை வைக்க வந்தான். அவர் மறைந்து கொண்டார்.

பின்னர் அவன் பார்வதிதேவியின் தலை மீது கை வைக்க ஓடினான். அவள் சரவணப் பொய்கை தீர்த்தமாக மாறிவிட்டாள். சிவன் தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கி சரவணப் பொய்கையில் இட்டார். அதிலிருந்து முருகன் அவதரித்தார். இதன் மூலம் முருகன் தன் தந்தை, தாயிடமிருந்து தோன்றினார் என்பது புலனாகிறது. இதனால் முருகனை 'சிவசக்திபாலன்' என்றும் அழைப்பார்.

கதிர்காமம் கதிரேசன்

முருகனின் திருத்தலங்களில் கதிர்காமத்திற்கு சிறப்பிடம் உண்டு. இப்பெருமான் 'கதிரேசன்' என்று அன்புடன் அனைவராலும் போற்றப்படுகிறான். இத்தலம் இலங்கையில், கொழும்பிலிருந்து 230 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இங்கு கருவறையில் எவ்வடிவில் இறைவன் இருக்கிறான் என்பது சிதம்பர ரகசியமாகவே உள்ளது. சந்நிதியின் திருக்கதவில் தொங்கவிடப்பட்டிருக்கும் தரையில் மயில் மீது இருதேவியருடன் அமர்ந்திருக்கும் முருகனின் உருவம் உள்ளது. இதைப்போன்று மேலும் பல திரைச்சீலைகள் உள்ளன.

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இப்பெருமானின் சந்நிதி திறந்து வைக்கப்படுகிறது. மற்ற காலங்களில் திரையிட்டே பூஜை நடத்தப்படுகிறது. இங்கு ஆடிமாத உற்சவம் மிகவும் பிரபல
மானது. ஆடி அமாவாசையன்று ஆரம்பித்து ஆடி பவுர்ணமியில் தீர்த்தவாரி நடைபெறும்.
நாள்தோறும் யானைமீது ஊர்வலமாக ஒருபெட்டி எடுத்துச் செல்லப்படும். அந்த பெட்டிக்குள் முருகனுக்குரிய யந்திரம் இருக்கிறது. இக்கோயிலின் பின்னால் உள்ள அரசமரத்தை சிங்களர் கள் வழிபடுகிறார்கள். தமிழ் மக்களும், சிங்களர்களும் இணைந்து வழிபடுவது மத ஒற்றுமைக்கு வழி வகுப்பதாக அமைந்துள்ளது.

முருகனுக்கு முக்கியத்துவம்

தாய், தந்தையரை உலகமாக கருதி அவர்களை சுற்றி வந்ததால் தன் தந்தை சிவனிடம்,
மாங்கனியை (புராணங்களில் மாதுளை என்றும் சொல்லப்பட்டுள்ளது) பெற்றார் விநாயகர்.
தனக்கு கனி கிடைக்காததால் கோபம் கொண்டு பெற்றோரை பிரிந்தார் முருகன். முருகனுக்கென தனி வழிபாடும், முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தங்களிடம் இருந்து அவரைப் பிரித்து இந்த விளையாடல்களை நிகழ்த்தினார். சிவன். சிவனின் நெற்றிகண்ணில் இருந்து தோன்றிய முருகனுக்கு, பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியும் போது, அவரைப் படைத்த சிவனுக்கு மந்திரம் தெரியாமல் இருக்க முடியுமா?. மக்கள் அவரை வணங்கி, அவரோடு ஐக்கியமாவதற்காக தானே முன்னோடியாக இருந்து அவரிடம் பிரணவ மந்திரத்தை
கற்றவர் போல் நடித்தார் சிவன்.


ஓம் முருகா

ஒரு முறை பிரம்மன், முருகனை பாலகன் என்று நினைத்து செருக்குடன் வணங்க மறுத்தார்.
ஆணவத்துடன் சென்ற பிரம்மனை அழைத்து 'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்துக்கு விளக்கம் கேட்டார் முருகப்பெருமான். பிரம்மன் விளக்கம் தெரியாது விழித்தார். அவரை தலையில் குட்டி சிறையிலடைத்தார் முருகன். படைக்கும் தொழிலையும் தானே ஏற்று நடத்த ஆரம்பித்தார். பிரம்மனை விடுவித்து அருளும்படி திருமால் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். “என்னையும் முருகனையும் பிரித்து உணர்கின்றவர்கள் இன்பமடைய மாட்டார்கள் என்பதை உணர்த்தவே முருகன் பிரம்மனைச் சிறையிலடைத்தான்.

தன்னை வணங்கவில்லை என்பதற்காக அல்ல' என்றார் சிவபெருமான். முருகனிடம் பிரம்மனை விடுவித்த சிவபெருமான், 'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தின் உட்பொருள் அறிந்தவராக இருந்தாலும் தன் மழலை முருகனிடமே உபதேசம் பெற்றார்.

குழந்தைகள் சொல்வது நமக்கு தெரிந்த விஷயம் தான் என்றாலும் எனக்கத் தெரியாத விஷயமாடா? என்று அவர்களைத் தடுத்து நிறுத்தாமல், பொறுமையுடன் கேட்டால், அவர்களின் கல்வி ஞானம் பெருகும் என்பதை எடுத்துக்காட்டவும் இவ்வாறு சிவன் விளையாடல் செய்ததாகவும் சொல்வதுண்டு. சுவாமியாகிய சிவனுக்கே மந்திர உபதேசம் செய்தால் 'சுவாமிநாதன்' என்று பெயர் பெற்றார் முருகன்.

No comments:

Post a Comment

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...