Wednesday, November 8, 2017


'ஆதார்' இல்லாமல் வருமான கணக்குஅனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி



சென்னை, 'ஆதார்' எண் இல்லாமல், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, அனுமதி கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உயர் நீதிமன்றத்தில், தியாகராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'வருமான வரி கணக்கை, நேரிலோ அல்லது மின்னணு முறையிலோ தாக்கல் செய்ய உள்ளேன். 
வருமான வரி கணக்கு தாக்கலின் போது, என் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என, வருமான வரித் துறை கட்டாயப் படுத்தக் கூடாது. 
ஆதார் எண் இல்லாமல், கணக்கு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.மனுவை, நீதிபதி சிவஞானம் விசாரித்தார். மத்திய நிதி அமைச்சகம் சார்பில், மத்திய அரசு மூத்த வழக்கறிஞர், 
ரபுமனோகர், வருமான வரித்துறை சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ஜி.ராஜகோபாலன், வழக்கறிஞர், ஹேமா முரளிகிருஷ்ணன் ஆஜராகினர்.
நீதிபதி சிவஞானம் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் தாக்கல் செய்த மனுவோடு, இந்த நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவையும் இணைத்துள்ளார். 
அந்த உத்தரவில், ஆதார் எண்ணை வற்புறுத்தாமல், வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய, வருமான வரித்துறை அனுமதிக்கும்படி கூறப்பட்டுள்ளது. 
மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவையும் மேற்கோள் காட்டி உள்ளார். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலின் வாதத்தில், 'உச்ச நீதிமன்ற உத்தரவை, தவறாக காட்டுகின்றனர். 
வேறு பரிவர்த்தனைகளுக்கு தான், உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதனால், ஆதார் எண் இல்லாமல், வருமான வரி கணக்கை ஏற்கும்படி, உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்படவில்லை' என, தெரிவித்துள்ளார்.
எனவே, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு, இதற்கு பொருந்தாது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க, எந்த முகாந்திரமும் இல்லை. மனுதாரர் கோரிய நிவாரணத்தையும் வழங்க முடியாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Madras HC relief for SC medico denied government quota

Madras HC relief for SC medico denied government quota Affirmative action is not exception or bounty, but is constitutional right of student...