Sunday, November 26, 2017

பொங்கல் பண்டிகை: அரசுப் பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்

By DIN  |   Published on : 26th November 2017 03:39 AM  | 

பொங்கல் பண்டிகைக்கு சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக அரசு விரைவுப் பேருந்துகளில் பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கியுள்ளது. 

வரும் ஜனவரி 13 முதல் 17 }ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை விடுமுறை நாள்களாகும். இதையொட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக இந்த ஆண்டும் சிறப்புப் பேருந்துகளை அரசு இயக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகவுள்ள நிலையில், பொங்கல் பண்டிகை சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
300 கி.மீ. தொலைவுக்கு மேல்...அதாவது, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 300 கி.மீ. தொலைவுக்கு மேல் செல்லும் அரசு விரைவுப் பேருந்துகளில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய தமிழகம் முழுவதும் 125 இடங்களில் முன்பதிவு மையங்கள் உள்ளன. இதில், சென்னையில் மட்டும் கோயம்பேடு, தியாகராய நகர், திருவான்மியூர், தாம்பரம் உட்பட 19 இடங்களில் இந்த முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. அரசு விரைவுப் பேருந்துகளில் 60 நாள்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் பயணிகள் தற்போதே முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது:

பொங்கல் பண்டிகைக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. வழக்கமாக முன்பதிவு செய்யும் மையங்களிலோ அல்லது ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்திலோ பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 12,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு அதைவிடக் கூடுதலாக பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம். முன்னதாக, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டியும் மக்களின் தேவைக்கேற்ப தென்மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

 

No comments:

Post a Comment

NEWS TODAY 14.01.2026