Saturday, June 8, 2019

மருத்துவ மேற்படிப்புக்கு தேர்வானோர் பட்டியல் தாக்கலுக்கு ஐகோர்ட் உத்தரவு

Added : ஜூன் 08, 2019 00:37


சென்னை : முதுகலை மருத்துவ படிப்புக்கு தேர்வானவர்களின், முழு பட்டியலை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர், டி.கே.சரவணன் தாக்கல் செய்த மனு: முதுகலை மருத்துவ படிப்புக்கான, விளக்க குறிப்பேட்டை, மருத்துவ கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ளார். பயிற்சி முடித்த டாக்டர்கள், அரசு பணியில், ஐந்து ஆண்டுகள் இருக்க வேண்டும். அதற்காக, மருத்துவ படிப்பில் சேரும்போது, உத்தரவாதம் அளிக்க வேண்டும். முதுகலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு, ௪௦ லட்சம் ரூபாய்க்கான உத்தரவாத ஆவணம், முதுகலை பட்டய படிப்பில் சேர்வதற்கு, ௨௦ லட்சம் ரூபாய்க்கான உத்தரவாத ஆவணம் செலுத்த வேண்டும். அதோடு, நிரந்தர அரசு ஊழியர்களிடம் இருந்தும், உத்தரவாதம் பெற்று, தாக்கல் செய்ய வேண்டும்.

இரு அரசு ஊழியர்களிடம் இருந்து, உத்தரவாதம் பெற வேண்டும் என்பது நியாயமற்றது. பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களால், அரசு அதிகாரிகளை அணுகி, உத்தரவாதம் பெறுவது கடினம். அதனால், மாணவர்கள் சேர்க்கை ரத்தாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, நிரந்தர அரசு ஊழியர்களிடம் உத்தரவாதம் பெற வேண்டும் என்ற நிபந்தனைக்கு, தடை விதிக்க வேண்டும்; அதை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த இடைக்கால உத்தரவு: முதுகலை மருத்துவ படிப்புக்கு தேர்வானவர்களின் முழு பட்டியலையும், தாக்கல் செய்ய வேண்டும். தேர்வை சிறப்பாக எழுதியும், உத்தரவாதம் அளிக்க முடியாததால், தகுதியானவர்கள் படிப்பை தொடர முடியாமல் உள்ளனரா என்பதை கண்டுபிடிக்க வேண்டும். எத்தனை வகுப்பில் காலியிடங்கள் உள்ளன என்ற விபரங்களையும், தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை, வரும், 10ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...