Tuesday, October 29, 2019

டில்லி பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்

Updated : அக் 29, 2019 05:24 | Added : அக் 28, 2019 22:26




புதுடில்லி டில்லி மாநகர பஸ்களில், பெண்கள், இன்று(அக்.,29) முதல் இலவசமாக பயணிக்கலாம். பெண்களின் பாதுகாப்புக்காக, பஸ்களில் சிறப்பு பாதுகாவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

டில்லியில், அடுத்த சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், 'டில்லியில், மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பஸ்களில், பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்' என, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமீபத்தில் அறிவித்திருந்தார். முதல் கட்டமாக, மாநகர பஸ்களில் இந்த இலவச பயண திட்டம், இன்று முதல் அமலுக்கு வருகிறது.

வட மாநிலங்களில், 'பைதுாஜ்' என்ற பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. தங்கள் சகோதரர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்காக, பெண்கள் வழிபாடு நடத்தும் பண்டிகை இது. இதையொட்டி, இந்த இலவச பயண திட்டத்தை, இன்று முதல் துவக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: பெண்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்காக, பஸ்களில், 13 ஆயிரம் சிறப்பு பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பஸ்களில் பயணிக்கும் பெண்கள், தங்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டாலோ, உதவி தேவைப்பட்டாலோ, பஸ்களில் உள்ள பாதுகாவலர்களின் உதவியை நாடலாம். ஊர்க்காவல் படையில் ஏற்கனவே பணியாற்றியவர்களில் பலர், இந்த பாதுகாவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...