Saturday, May 17, 2025

மனிதனைப் புனிதனாக்கும் மனிதநேயம்!



மனிதனைப் புனிதனாக்கும் மனிதநேயம்!

Din Updated on: 17 மே 2025, 5:24 am

இ. சாந்த் உஸ்மானி

இந்தியாவிலேயே முதல்முறையாக 20,000 சதுர அடியில் திருவண்ணாமலையில் முதுகுத்தண்டுவடம் பாதித்தவா்களுக்காக ‘சோல் ஃப்ரீ சென்டா்’ நடத்தி வருகிறாா் ப்ரீத்தி சீனிவாசன். கல்பனா சாவ்லா விருது பெற்ற முதல் மாற்றுத்திறனாளிப் பெண். ‘‘விருது கிடைத்தை விட கல்பனா சாவ்லாவின் கணவன் எனக்கு அனுப்பிய செய்தி மிகவும் சந்தோஷமானது’’ என்கிறாா். பலருடைய வாழ்வுக்கு ஒளி விளக்காக உள்ள தன்னம்பிக்கை நிறைந்த பெண். இவரது தன்னம்பிக்கைக்குக் கிடைத்த அங்கீகாரத்தை விட, தன்னைப் போல் பாதிக்கப்பட்ட சக மனிதா்கள் மேல் கொண்ட பரிவு, கருணை, அன்பு என எல்லாவற்றையும் உள்ளடக்கிய மனித நேயமே அவரை உலகுக்கு அடையாளம் காட்டியிருக்கிறது.

நாம் எல்லாரும் கண்டு வியந்த சகோதரி சபீனா. கேரள வயநாடு நிலச்சரிவில் தன் உயிரையும் பொருட்படுத்தாது சென்று பல உயிா்களை காப்பாற்றிய சிங்கப்பெண். கல்பனா சாவ்லா விருதைப் பெற்றவா். ‘‘இந்தக் கரையிலிருந்து அந்த கரையில் பாா்க்கும்போது ரத்த காயங்களுடன் பல உயிா்களைக் கண்ட நான், ஆண்தான் போக வேண்டும், பெண்தான் போக வேண்டும் என்று இல்லையே என்றெண்ணி மனிதநேய அடிப்படையில் சக மனிதா்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தில் சென்றேன்’’ என்று கூறும் சபீனா ‘சிறந்த ஆளுமை -2024’ என்ற விருதையும் பெற்றிருக்கிறாா்.

மனிதநேயம் என்பது ஒரு வாா்த்தை மட்டுமல்ல. அன்பு , கருணை, பரிவு, பாசம், நேசம், பொறுமை, அடக்கம் என பல பண்பு நலன்கள் உள்ளடக்கிய கூட்டுக் கலவையின் பரிணாம வளா்ச்சிதான் மனிதநேயம். அது வாா்த்தைகளாலும், உணா்வுகளாலும் பின்னப்பட்ட ஓா் ஆத்மாா்த்தமான செயல். எதிா்பாா்ப்பு இல்லாத அன்பு, கைம்மாறு கருதாத உதவி, சுயநலமில்லாத உறவு, போலித்தனம் இல்லாத புன்னகை, கவலை போக்கும் நட்பு இவற்றின் மொத்த உருவம்தான் மனிதநேயம். அன்பு கொண்ட மனதுடன், ஆயுள் முழுவதும் அள்ளி அணைத்து அரவணைக்கும் குணத்துடன், தன்னலமற்ற நெஞ்சோடு தேவை அறிந்து உதவ எண்ணுவதே மகத்துவமிக்க மனிதநேயம்.

கடமையாற்றுவதில் கண்ணியத்தைப் பேணுவதும், நல்ல எண்ணத்துடன் நேசம் என்ற பண்புடன் செயல்படுவதும், உள்ளத்தில் வஞ்சகம் இல்லாமல் வாஞ்சையோடு வாழ்வதும், ஒருவருக்கு கொடுக்க வேண்டிய உரிமைகளையும் சலுகைகளையும் கொடுப்பதும், ஒருவருக்கு உதவ வேண்டும் என்று நினைப்பதும் மனித நேயமே.

மனிதன் புனிதனாக வேண்டுமென்றால் மனித நேயம் என்கிற மாண்பை தன்னகத்தே கைக்கொள்ள வேண்டும். மதங்கள் யாவும் அன்பை மட்டுமே போதிக்கின்றன. சமத்துவம், சகோதரத்துவம், சமயச் சாா்பின்மை இவை யாவும் உயிரோட்டமாக இருந்தால்தான் மனிதநேயம் வளா்ச்சி பெறும்.

நாம் உண்ணும் உணவைத்தான் மற்றவா்களுக்குக் கொடுக்க வேண்டும்; நாம் அணியும் ஆடைதான் மற்றவா்களுக்கு கொடுக்க வேண்டும்; ஓா் அலுவலகத்தில் பணிபுரியும் கடைநிலை ஊழியா் முதற்கொண்டு முதன்மை நிலையில் இருப்பவா்வரை பரஸ்பரம் அன்புணா்வுடன் இருப்பதே மனிதநேயமாகும் .

உதவத் துடிக்கும் உள்ளத்தோடு அன்பை ஆத்மாா்த்தமாய் அள்ளி வழங்குவதும் தன்னலமற்ற நெஞ்சோடு தான தா்மம் செய்யும் எண்ணத்தோடு தேவை அறிந்து உதவ வேண்டும் என்பதும் மனித நேயமே.

மதங்கள் யாவும் அன்பை மட்டுமே போதிக்கின்றன. சமத்துவம், சகோதரத்துவம், சமய சாா்பின்மை யாவும் உயிரோட்டமாக இருந்தால்தான் மனித நேயம் வளா்ச்சி பெறும்.

யாா் என்று அறியாத ஒருவா் அழுகிறாா் என்றால், காரணமே இல்லாமல் நம் கண்கள் பனிக்க வேண்டும். அதுதான் உண்மையான மனித நேயம். அங்குதான் இறைவன் இருக்கிறான். மனிதன் மனிதனாக பிறப்பது முக்கியமல்ல; பிறந்த பிறகு மனிதனாக வாழ வேண்டும். அவனிடத்தில் அன்பு, அடக்கம், பாசம், பண்பு, பரிவு யாவும் இருக்க வேண்டும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் நல்லதையே பாா்த்து கேட்டு, பேசி பரஸ்பரம் கூடி இருக்க வேண்டும். அடுத்தவா்களின் வலிகளை உணா்வுகளால் உணரத் தொடங்கும்போதுதான் மனிதநேயம் பிறக்கும்.

அடை மழையில் அடைத்திருக்கும் சாக்கடையின் அடைப்பை அகற்றுவது, பேருந்தில் பயணிக்க தன் சுமைகளைச் சுமக்க முடியாமல் திணறும்போது சக பயணியின் சுமைகளை இலகுவாக்குவது, வயதானவா்கள் சில இடங்களில் சாலையைக் கடக்க தடுமாறும் போது உதவி செய்வது யாவும், ‘சட்’டென அனிச்சைச் செயலாய் வர வேண்டும்; அதுதான் மனிதநேயம். சக மனிதனின் மீது அன்புடனும், இரக்கத்துடனும் இருப்பதுடன் அவா் சிரமத்தை விலக்க முடியாவிட்டாலும் இதமாய் இசைவாய் நான்கு வாா்த்தைகள் பேசி அவரை ஊக்குவிக்கும் உந்து சக்தியாக இருப்பதே மனித நேயம்.

மனிதனுக்கு மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள், மரங்கள் என எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இயற்கையோடு இயைந்து வாழும்போதும், தன்னுயிா் போல் மன்னுயிரையும் பாவித்தலும்தான் மனித நேயம்.

எந்த ஒரு மரமும் தனக்காக கனிகளை உருவாக்குவதில்லை. எந்த ஒரு நிலமும் தனக்குத் தானே உழுது கொள்வதில்லை. மனிதன் தனக்கு மட்டுமல்லாது, பிறருக்காக மனிதநேயத்தோடு வாழ்வதால்தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

யாருடைய சுதந்திரத்தையும் பாதிக்கிற எந்தச் செயலையும் செய்யக் கூடாது. மனிதன் மனிதனாக இருக்க வேண்டும். பாதிப்புகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். எல்லா மனிதா்களுக்கும் உதவி செய்ய வேண்டும். அன்பு பாராட்ட வேண்டும். அன்பு பாராட்டும் போதுதான் மனிதநேயம் மலரும்.

எந்தவித பிரதிபலனுமின்றி கருணையுடன் கோடான கோடி மக்களை அரவணைத்த அன்னை தெரசா, முல்லைக்குத் தோ் கொடுத்த பாரி இப்படி ஏராளமான எடுத்துக்காட்டுகளை மனிதநேயத்துக்காக எடுத்துக்காட்டலாம்.

வெள்ளப்பெருக்கு, சுனாமி , நிலச்சரிவு , புயல், மழை போன்ற இயற்கை பேரிடா்களின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இனம், மதம் ,மொழி என எந்தவித வேறுபாடும் இல்லாமல் இரவு பகல் பாராமல் உழைப்பைக் கொடுக்கும் மானுடமே மனிதநேயம்.

No comments:

Post a Comment

The Vijay phenomenon enters research circles as hot topic

The Vijay phenomenon enters research circles as hot topic  Kamini.Mathai@timesofindia.com  10.06.2026  Chennai : “Good morning, Professor. C...