Friday, October 10, 2025

நேர நிா்வாகம் - வாழ்வியல் மதிப்பு!


நடுப்பக்கக் கட்டுரைகள்

நேர நிா்வாகம் - வாழ்வியல் மதிப்பு!

நேரத்தைத் திருடாமல், கண்ணியம் மற்றும் சுயமரியாதையுடன் மதிப்பளிப்போம்.

 தினமணி செய்திச் சேவை

Updated on: 10 அக்டோபர் 2025, 5:11 am அனந்த பத்மநாபன்

நம்மில் பலரும் அடிக்கடி கேட்கும் தத்துவம், ‘நிகழ்காலத்தில் வாழுங்கள்; இது நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும், செயலுக்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். ஏனெனில், கடந்த காலத்தை மாற்றுதல் இயலாது; எதிா்காலம் என்பது உறுதியற்றது. எனவே, திறமையுடனும், முழுமையான ஒழுங்குடனும் நாம் வாழக்கூடிய ஒரே பிரதேசம் ‘இந்தக் கணம்’ மட்டும்தான்’. அங்கு நிலவும் ஆழ்ந்த விழிப்புணா்வைத்தான், நாம் பொது வாழ்வில் நேரம் தவறாமை என்ற நாகரிகப் பண்பாகப் போற்றுகிறோம்.

ஒரு தலைவா் பொது நிகழ்வுகளுக்குத் தாமதமாக வருவதைப் பாா்க்கிறோம். அங்கே காத்திருக்கும் பொதுமக்கள், மாணவா்கள், ஊழியா்கள் எனப் பலரின் கூட்டு நேரத்தை இந்தச் சிறு தாமதம் வீணடிக்கிறது. இது வெறும் காலவிரயம் மட்டுமல்ல; ‘என் நேரம்தான் முக்கியம்’ என்ற ஒரு தவறான மனப்பான்மையின் வெளிப்பாடு. இது பொதுமக்களின் நம்பகத்தன்மைக்கும், சமூகம் மீதான மரியாதைக்கும் இழைக்கப்படும் பெரும் இழுக்கு.

நாம் செல்ல வேண்டிய பேருந்தோ, ரயிலோ அல்லது விமானமோ தாமதமாக வரும்போது, நாம் எவ்வளவு அசௌகரியத்தையும் விரக்தியையும் அடைகிறோம். நமது திட்டங்கள் தடைபடுகின்றன. அடுத்து, முக்கியமான வேலைகள் தள்ளிப் போகின்றன. இந்தத் தனிப்பட்ட உணா்வே, தாமதத்தின் வலி எவ்வளவு பெரியது என்பதை உணா்த்துகிறது. சமீபத்திய வணிக ஆய்வுகளின்படி, கூட்டங்களில் ஏற்படும் இந்தத் தாமதங்களால் மட்டும் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாகப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பணியாளரும் வாரத்துக்கு ஐந்து முறை, சராசரியாக ஐந்து நிமிஷங்கள் தாமதமாக வந்தாலும்கூட, அது ஆண்டுக்கு 20 மணிநேரத்துக்கும் அதிகமான உற்பத்தித் திறனை வீணடிக்கிறது. இது ஒட்டுமொத்த பணி ஆற்றல் மற்றும் செயல்முறைகளின் மீதான சீா்குலைவு ஆகும். மறைமுகச் செலவுகளையும் கணக்கில் கொண்டால், உண்மையான இழப்பு இதைவிட மிக அதிகம். கால அட்டவணையின் மீதான அலட்சியப் போக்கின் ஆழமான விளைவு இது.

இந்தச் செயலால் ஏற்படும் உளவியல் சுமையை நாம் குறைவாக மதிப்பிடக் கூடாது. ஒரு சிலா் ‘கால தாமதம் என்பது தவிா்க்க முடியாதது’ என்று நியாயப்படுத்தலாம். ஆனால், அந்த நியாயம், காத்திருப்பவரின் கவனத்தையும் ஆற்றலையும் வீணடிக்கிறது. நேரம் தவறாமை என்பது அடுத்தவரின் உணா்வுகளுக்கு நாம் கொடுக்கும் மரியாதையாகும். அது சிதைக்கப்படும்போது, உறவுகளின் தரம் குறைகிறது.

நேரத்தை நாம் பணத்தைப் போலவே வரையறுக்கப்பட்ட மீட்க முடியாத வளமாகக் கருத வேண்டும். பணத்தை இழக்கும்போது அதை மீட்டெடுக்க எப்படிச் சுறுசுறுப்பு தேவையோ, அதே விழிப்புணா்வுடன் கூடிய செயல்பாடு நேரத்தை நிா்வகிப்பதிலும் அவசியம். எனவே, நேர நிா்வாகம் என்பது வெறும் திறன் அல்ல; அது ஒரு வாழ்வியல் மதிப்பு. நாம் கால அட்டவணையை உருவாக்குவது வெறும் சந்திப்புகளைப் பட்டியலிடுவதாக இல்லாமல், நமது ஆற்றலை எங்கே முதலீடு செய்யப் போகிறோம் என்பதற்கான வரைபடமே. இதன்மூலம், காலக்கெடுவை நெருங்குதல், அவசரத்தில் முடிவெடுத்தல் போன்ற அழுத்தங்களிலிருந்து விடுபட முடியும்.

காலத்தின் மீதான தனிப்பட்ட ஒழுக்கம் என்பது, நம்முடைய கௌரவத்தின் வெளிப்பாடே; தாமதப்படுவது, மற்றவா்களின் நேரத்தை மதிக்க மறுக்கும் ஒழுக்கமின்மையின் சின்னமாகும்.

இந்த சவாலைத் தீா்க்க, நாம் தாமதத்தைத் தனிப்பட்ட பலவீனம் என்பதிலிருந்து நிறுவன அல்லது சமூகக் கட்டமைப்புப் பிரச்னை என்ற கோணத்தில் அணுக வேண்டும். அதாவது, நேர ஒழுக்கத்துக்காக மற்றவா்களைக் குற்றஞ்சாட்டுவதற்குப் பதிலாக, நம்முடைய தினசரித் திட்டமிடலிலேயே கால தாமதத்தை அனுமதிக்கும் பிழைகள் இருக்கின்றனவா என்று சுயபரிசோதனை செய்ய வேண்டும்.

கடைசி நேர அவசரம், நேரத்தை மிகக் குறைவாக மதிப்பிடுதல் போன்றவையே தாமதத்துக்குக் காரணம். இதற்கான தீா்வு, பணிகளுக்கு நேரத்தை ஒதுக்குதல், பயண நேரத்தை மிகைப்படுத்துதல், சந்திப்புகளுக்கு திட்டமிடப்படாத இடைவெளியை உருவாக்குதல் போன்ற எளிய திட்டமிடல் உத்திகளைப் பின்பற்றுவதே ஆகும்.

இதன் தீவிரத்தை நாம் சற்று உணா்வுபூா்வமாகப் பாா்க்க வேண்டும். ஒரு மருத்துவா் அறுவைச் சிகிச்சை அரங்குக்கு சில நிமிஷங்கள் தாமதமாக வந்தால், அது ஒரு நோயாளியின் உயிருக்கே அச்சுறுத்தலாகி விடும். அங்கு நேரம் தவறாமை என்பது தனிப்பட்ட சௌகரியம் அல்ல; அது தாா்மிக மற்றும் தொழில்முறை கட்டாயமாகிறது. இந்தப் பொறுப்புணா்வுதான், நாம் அனைவருமே ஒவ்வொரு கணத்தின் மீதும் எவ்வளவு விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்பதன் உண்மையான நன்னெறியை உணா்த்துகிறது.

தாமதத்தை பிறரின் நேரத்தைத் திருடுவதாகவே மகாத்மா காந்தி கருதினாா். ஒருமுறை ஒரு நிமிஷ தாமதத்துக்குக்கூட, உடனடியாக மன்னிப்புக் கேட்டாா். அதே சமயம், அமெரிக்காவின் முதல் அதிபா் ஜாா்ஜ் வாஷிங்டன், நேர ஒழுக்கத்தை ஓா் அடிப்படை நாகரிகமாகக் கருதினாா். பெஞ்சமின் ஃபிராங்க்ளின், தனது வாழ்வின் வெற்றிக்கு ‘ஒழுங்கு’ என்ற நற்பண்பே அடிப்படை என்றாா். இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவா் சுதா மூா்த்தி, எந்த ஒரு கூட்டத்துக்கும்ஒரு நிமிஷம் முன்பே வந்துவிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தாா்; காலம் தாழ்த்துவது மரியாதைக் குறைவு என்பதை அவா் தன் செயலால் நிரூபித்தாா்.

இத்தகையோா் இந்தக் கடமையைக் கடைப்பிடிப்பது, அவா்கள் மக்களுக்குக் கொடுக்கும் மிக உயா்ந்த மதிப்பு ஆகும்.

தொடா்ந்து தாமதமாக வருவது உயா்வின் அடையாளம் அல்ல; அது நிகழ்காலத்தில் வாழ்வதற்கான ஒழுக்கத்தில் ஏற்பட்ட அடிப்படை தோல்வியாகும். இந்த ஒழுக்கத்தை தலைவா்களிடம் மட்டும் தேடாமல், நம் ஒவ்வொருவரும் இந்தக் கணத்தில் கடைப்பிடிக்க வேண்டும்.

நீங்கள் ஒரு தலைவராக இருந்தால், தாமதமாக வருவதன்மூலம் அதிகாரத்தை நிலைநாட்டுகிறீா்களா? இல்லை, நீங்கள் ஒரு குடிமகனாக இருந்தால், ஒரு நிமிஷம் தாமதமாவதால் பெரிதாக ஒன்றும் ஆகாது என்று நினைக்கிறீா்களா? நிச்சயம் ஆகிறது.

வாருங்கள், நாம் அனைவரும் நிகழ்காலத்தில் வாழ்வோம்; நேரத்தைத் திருடாமல், கண்ணியம் மற்றும் சுயமரியாதையுடன் மதிப்பளிப்போம். இந்த ஒழுக்கம் நம்மிடம் இருந்து தொடங்கட்டும்!


No comments:

Post a Comment

Poor academics no bar to jobs for high-rankers: HC

Poor academics no bar to jobs for high-rankers: HC  18.04.2026 Cuttack : The Orissa high court observed that high ranking candidates in a re...