Wednesday, November 5, 2014

வங்கிக் கொள்ளை!



வங்கிச் சேவை என்பது மக்களின் சேமிப்பைப் பாதுகாக்கவும், விவசாயிகள், சிறு வியாபாரிகள், புதிய தொழில் முனைவோர் ஆகியோரின் நலன்களைப் பேணவும், சாமானிய நடுத்தர மக்களின் அன்றாட வரவு - செலவுகளைப் பாதுகாப்பாக நடத்தவும் பயன்பட வேண்டும் என்பதுதான் வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்கான காரணம். தனியார்மயம் என்பது போட்டிக்கு வழிகோலி வாடிக்கையாளர்களுக்கான சேவையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்பட்டதன் பொருள் இப்போதுதான் விளங்கத் தொடங்கி இருக்கிறது.

ஒரு வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் ஒரு நபர், அதே வங்கியின் "தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திர' (ஏடிஎம்) மையங்களில் மாதத்துக்கு ஐந்து முறைக்கு மேலாக அட்டையைப் பயன்படுத்தினால், ஒவ்வொரு கூடுதல் பயன்பாட்டுக்கும் ரூ.20 சேவைக் கட்டணமாக பிடித்தம் செய்யப்படும் என்ற புதிய விதிமுறையை இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. இது மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, தில்லி ஆகிய ஆறு பெருநகரங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இது வெள்ளோட்டம்தான். இந்த நடைமுறை மெல்ல மெல்ல இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் விரிவு செய்யப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

புதிய விதிமுறைப்படி "தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திர' சேவை என்பது, வெறுமனே பணம் எடுப்பது மட்டுமே அல்ல. இதுநாள்வரை, சேவையாக கருதப்படாதவையான வங்கிப் பரிவர்த்தனை விவரம் (மினி ஸ்டேட்மென்ட்), இருப்பு விவரம் (பாலன்ஸ் என்கொயரி), ரகசிய எண்ணை மாற்றுதல் ஆகியவையும் சேவை எண்ணிக்கையில் சேர்ந்துவிடும். தவிர, சாதாரணமாகப் பணம் எடுப்பதை சேவை எண்ணிக்கையில் கூட்டி, ஒவ்வொரு முறையும் ரூ.20 பிடித்தம் செய்வது வாடிக்கையாளர்களை நூதன முறையில் கொள்ளை அடிக்கும் திட்டம் அல்லாமல் வேறு என்ன?

"தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திர' மையங்கள் தாக்கப்படுகின்றன, உடைக்கப்படுகின்றன, மிரட்டிப் பணம் பறித்தல், சில நேரங்களில் கொலைகூட நடந்திருக்கிறது என்பதெல்லாம் உண்மையே. "தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திர' மையங்களின் குளிர்சாதன வசதி, வெளிச்சம் ஆகியவற்றுக்கும் பாதுகாவலருக்கான ஊதியம் ஆகியவற்றையும், கணக்கிடும்போது, இத்தகைய கட்டணங்கள் சரிதான் என்று ரிசர்வ் வங்கி சொல்கிறது. இப்படி ஒரு வாடிக்கையாளருக்கு இணைய வங்கிச் சேவை (நெட் பேங்கிங்), செல்பேசி வங்கிச் சேவை (மொபைல் பேங்கிங்) ஆகியவற்றைப் பயன்படுத்தும் கட்டாயத்தை ஏற்படுத்துவதன் மூலம், இத்தகைய "தானியங்கி பணப் பட்டுவாடா இயந்திர' மையங்களின் எண்ணிக்கையை பாதுகாப்பான இடங்களில் மட்டும் இருக்கும் வகையில் குறைத்துவிட முடியும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது.

ஆனால், தற்போதைய சூழ்நிலையில் எல்லா வாடிக்கையாளருமே மடிக்கணினி, ஆன்ராய்டு தொழில்நுட்பம் சார்ந்த செல்பேசிகளுடன் இல்லை. இணைய வங்கிச் சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இணைய வங்கிச் சேவை, செல்பேசி வங்கிச் சேவை போன்றவற்றை பயன்படுத்தியாக வேண்டும் என்ற நெருக்கடியை ஏற்படுத்துவது சரியல்ல.

ஐந்து சேவைகளுக்குப் பிறகு கட்டணம் உண்டு என்பதால் வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைக்கு நேரடியாக வரத்தொடங்கினால், கூட்டம் அதிகரிக்கும். ஓர் ஊழியர் ஒரு நாளைக்கு அதிகபட்சம் நூறு பேருக்கு மேல் சேவை அளிக்கமாட்டார். கூடுதலாக ஓர் ஊழியரை நியமித்தால் வங்கிக்கு கூடுதல் செலவுதான். பணம் எடுப்பதற்காக உடனடி பண மையத்தை பயன்படுத்துவது, வாடிக்கையாளர் வங்கிக்கு செய்யும் சேவையே தவிர, வங்கி வாடிக்கையாளருக்கு செய்யும் சேவை அல்ல!

வங்கிகள் தங்கள் கருத்துக்கு ஏற்றபடி சேவைக் கட்டணம் வசூலிப்பதை ரிசர்வ் வங்கியும், அரசும் ஆமோதித்து ஆதரிப்பதாக இருந்தால், அதே அடிப்படையில் வங்கிகளின் வைப்புத் தொகையாக (டெபாசிட்) வாடிக்கையாளர்கள் பணம் போடுவதற்கான வட்டியை அவர்கள் வங்கிகளுடன் பேரம் பேசித் தீர்மானிக்கும் உரிமையை, பணம் முதலீடு செய்பவர்களுக்குக் கொடுப்பதுதானே நியாயம்!

என்ன செய்ய? நமது நாட்டின் வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வோ, நுகர்வோர் உரிமைகளைத் தட்டிக் கேட்கும் அமைப்புகளோ இல்லையே. அத்தனை வங்கி வாடிக்கையாளர்களும் இந்தக் கட்டணத்தை எதிர்த்து வங்கிகளில் சேமித்திருக்கும் பணத்தை திரும்பப் பெறுவது என்கிற இயக்கம் மேலெழுமானால் அப்போதுதான், வாடிக்கையாளர்களின் வலிமை வங்கிகளுக்குத் தெரியும்.

பன்னாட்டுத் தனியார் வங்கிகள், நமது நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளுக்குக் கற்றுக் கொடுத்திருப்பது மேம்பட்ட சேவையை அல்ல. வாடிக்கையாளர்களை எப்படியெல்லாம் நூதன முறையில் கொள்ளையடித்து லாபம் சம்பாதிப்பது என்கிற வித்தைகளையே. அவற்றில் இதுவும் ஒன்று!

Tuesday, November 4, 2014

மணிக்கு ரூ.10 வாடகையில் சைக்கிள்: இந்தூர் நகரில் ம.பி அரசு அறிமுகம்



மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில், மணிக்கு பத்து ரூபாய் கட்டணத்தில் வாடகை சைக்கிள் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தூரில் நேற்று முன்தினம், மபி மாநிலம் உருவான தினம் கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி அம்மாநிலத்தின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் விஜய் வர்கியா, வாடகைக்கு சைக்கிள் விடும் திட்டத்தை துவக்கி வைத்தார். அம்மாநில அரசின் அட்டல் இந்தூர் சிட்டி டிரான்ஸ்போர்ட் சர்விஸ் (ஏ.இ.சி.டி.எஸ்) சார்பில் முதல்கட்டமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏ.இ.சி.டி.எஸ் நிர்வாக இயக்குநர் சந்தீப் சோனி ‘தி இந்து’விடம் கூறும்போது, “முதல்கட்டமா நகரின் 15 இடங்களில் வாடகை சைக்கிள் மையங்களை அமைக்க இருக்கிறோம். இதை வாடகைக்கு எடுப்பவர்களுக்கு ஹெல்மட் இலவசமாக அளிக்கப்படும். அதை சைக்கிளுடன் திருப்பி ஒப்படைத்து விட வேண்டும். ரூ.500 கொடுத்து இந்த திட்டத்தில் உறுப்பினராக சேர்பவர்களுக்கு ஒரு ‘ஸ்மார்ட் கார்டு’ தரப்படும். இதில், ரூ.200 பாதுகாப்புத் தொகையாகக் கருதப்படும். மீதித் தொகையில் சைக்கிளுக்கான வாடகை கழித்துக் கொள்ளப்படும்.” என்றார்.

மோட்டார் பைக் மற்றும் கார் போன்ற அதிவேக வாகனங்கள் அதிகரித்து வரும் இந்தக் காலத்தில் மாநில அரசே வாடகை சைக்கிள் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருப்பதற்கு அதிக வரவேற்பு காணப்படுகிறது. சுற்றுச் சூழல் மாசுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, நாட்டிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தி உள்ள இந்த திட்டம், படிப்படியாக மாநிலத்தின் மற்ற நகரங்களிலும் அறிமுகப்படுத்த திட்டமிடபட்டுள்ளது.

ஜி.எஸ்.சுப்ரமணியன்.... பாரதியார் கடந்த காலமா, நிகழ் காலமா?



ஒரு வாசகருக்கு சந்தேகம். “பாரதியார் கடந்த காலமா? நிகழ் காலமா? ’’. நல்லதொரு பட்டிமன்றத் தலைப்புதான். ஆனால் வாசகரின் சந்தேகம் வேறு வகை. அது மேற்கோள் தொடர்பானது. அதாவது பாரதியாரின் மேற்கோளை எடுத்தாளும்போது “bharathiyar says’’ என்று கூற வேண்டுமா? அல்லது “bharathiyar said’’ என்று கூற வேண்டுமா?

விடை சிலருக்கு வியப்பளிக்கலாம். என்னதான் பாரதியார் அதைக் கடந்த காலத்தில்தான் கூறினார் என்றாலும், உடலைப் பொருத்தவரை அவரே கடந்த காலமாகிவிட்டார் என்றாலும் கூட, “bharathiyar says’’ என்று குறிப்பிட்டுத்தான் அந்த மேற்கோளை அளிக்க வேண்டும்.

தர்க்கம்

present tense – past tense என்பதைப் பற்றி குறிப்பிடும்போது ஆங்கில மொழிப் பயிற்சி வகுப்பில் நான் சந்தித்த ‘தர்க்கம்’ ஒன்று நினைவுக்கு வருகிறது.

பயிற்சிக்கு வந்திருந்தவர்கள் மேலதிகாரிகள். குறைந்தது பட்டதாரிகள். “எது சரி? we eat என்பதா? அல்லது we eats என்பதா?’’ என்ற கேள்வியை நான் கேட்டதும், அவர்களில் நான்கு பேர் “we eats’’ என்பதுதான் சரி என்றனர்.

கொஞ்சம் திகைப்புடன் அதற்கான காரணத்தை விசாரித்தபோது “we’’ என்பது பன்மை. எனவே eat என்ற வார்த்தையுடன் ‘s’ சேர்க்க வேண்டும் என்றார் ஒருவர்.

பிறகு அவர்களுக்கு விளக்க நேர்ந்தது. nounsகளுக்கு மட்டும்தான் ஒருமை, பன்மை. verbsகளுக்கு அல்ல.

என்றாலும் present tenseல் verbsகளை குறிப்பிடும்போது சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக eat என்ற அதே verbஐ எடுத்துக் கொள்ளலாம்.

i, you, we, they ஆகியவற்றுக்குப் பிறகு நிகழ்காலத்தில் பயன்படுத்துகையில் verb அப்படியே (அதாவது வேறெதுவும் சேர்க்கப்படாமல்) இருக்கும். i eat. you eat. we eat. they eat.

he, she, it போன்றவற்றுக்குப் பிறகு நிகழ்கால verbஐப் பயன்படுத்தும்போது ‘s’ அல்லது ‘es’ சேர்க்க வேண்டும். he eats. radha eats. it eats. gopi does.

அப்படியானால் ram and shyam என்பதற்குப் பிறகு எது வரவேண்டும்? eat? அல்லது eats? ram and shyam eat என்பதுதான் சரியானது. ஏனென்றால் இரண்டு நபர்கள் he ஆக முடியாது. theyதான். present tense வேறு எங்கு பயன்படுத்தப்படும் என்பதையும் பார்ப்போம்.

ஒரு பழக்கத்தைக் குறிப்பிடும்போது present tenseஐப் பயன்படுத்துவோம். அருண் தினமும் காலையில் 5.00 மணிக்கு எழுந்து விடும் பழக்கம் கொண்டவன் என்றால், arun is daily getting up at 5.00 a.m. என்று சொல்லக் கூடாது. (அது present continuous tense).

arun daily gets up at 5.00 a.m. என்றுதான் சொல்ல வேண்டும். இதுபோலத்தான் arun drinks tea every morning என்பதும்.

உலகில் சில பொதுவான உண்மைகள் உண்டு. எடுத்துக்காட்டு - காலையில் சூரியன் கிழக்கில் உதிப்பது. (அறிவியலின்படி பூமிதான் சுற்றுகிறது என்பதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிடலாம்).

the sun rises in the east என்று present tenseல்தான் இது போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும்.

personal – personnel - personable

“இது என் பர்சனல் விஷயம். இதிலே தலையிட வேண்டாம்’’ என்று சொன்னால் அதன் பொருள் உங்களுக்குத் தெரியும். இங்கே பெர்சனல் என்பது “தனிப்பட்ட’’ அல்லது “அந்தரங்கமான’’ என்பதைக் குறிக்கிறது.

சில நிறுவனங்களில் “பர்சனல் டிபார்ட்மெண்ட்’’ என்று இருக்கும். (இதைப் பர்ஸோனல் என்று அழைப்பதுதான் சரி). இதற்கான ஸ்பெல்லிங் “personnel department’’ என்பதாகும். அதாவது ஊழியர்கள் தொடர்பான அடிப்படை விவரங்கள் மற்றும் அவர்களின் நலத் திட்டங்கள் போன்றவற்றை இந்தப் பிரிவில் கவனித்துக் கொள்வார்கள்.

personable என்றால் இனிமையான என்று பொருள். அதாவது pleasant.

hair? hairs?

தலைமுடி என்பதை hair என்று சொல்வதா, hairs என்று சொல்வதா? அது பயன்பாட்டைப் பொருத்தது. “என் தலையிலே சுமார் 30 வெள்ளை முடிகள் உள்ளன’’ எனும்போது 30 white (அல்லது grey) hairs என்று பன்மையைப் பயன்படுத்த வேண்டும். மாறாக மொத்தமாக தலைமுடியைக் குறிப்பிடும்போது hair என்ற ஒருமையைத்தான் பயன்படுத்த வேண்டும். my hair has gone grey என்பது போல.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

டாக்டர் ஆர்.கார்த்திகேயன்....வயதாக வயதாக ரத்தினமாய் ஜொலிக்கும் நபர்களை நாம் பார்த்ததில்லையா என்ன?



மனிதனின் ஆயுள் எத்தனை வருடங்கள்? என்று என் கருத்தரங்குகளில் அடிக்கடி கேட்பேன். 60கள் என்பதுதான் அதிகமாகச் சொல்லப்படும் விடை. சிலர் இப்போது மருத்துவம் வளர்ந்ததால் 70கள் என்பார்கள். சரியான பதில் 120 என்றால் பலர் நம்பமாட்டார்கள். ஜப்பானில் ஒரு தீவில் 100 வயதைத் தாண்டியவர்கள் ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள் என்று தகவல் கூறி மருத்துவ, மானிடவியல் ஆராய்ச்சிகள் எல்லாம் சொல்லி விளக்கிய பின் சரி என்பார்கள்.

ஏன் 60 ?

அது சரி, ஏன் எல்லோரும் 60கள் தான் ஆயுள் என்கிறார்கள். பணி ஓய்வு காலம் 58 அல்லது 60 வயதில். அதற்கு மேல் எதற்கு வாழ்வது என்கிற எண்ணம்தான். சம்பாதிக்காத மனிதன் வாழ்வதில் என்ன அர்த்தம் என்று நம் சமூகம் மறைமுகமாகச் சேதி சொல்கிறதோ? இன்றைய நுகர்வு கலாச்சாரத்தில் பொருள் ஈட்டும் திறனும் வாய்ப்பும் இல்லாதவர்களைப் பின்னுக்குத் தள்ளும் அவல நிலை நிஜம்.

இதனால்தான் ஓய்வு பெற்ற பின் பலர் உடலாலும் மனதாலும் உருக்குலைந்து போகிறார்கள். நல்ல பென்ஷன் தொகை வருபவர்கள் நிலை சற்றுப் பரவாயில்லை. பொருளாதார விடுதலையாவது கிட்டும். மற்றவர்களுக்கு எல்லா வகையிலும் பின்னடைவுதான்.

அறுபதுகளின் நிலை பற்றிக் கவிஞர் கண்ணதாசனின் திரைப்படப் பாடல் வரிகள் எல்லாக் காலத்திற்கும் பொருந்துகிறது:

“கடந்தகாலமோ திரும்புவதில்லை

நிகழ்காலமோ விரும்புதில்லை

எதிர்காலமோ அரும்புவதில்லை

இதுதானே அறுபதின் நிலை!”

குறைபாடா முதுமை?

வயதானவர்களைக் குறைத்து மதிப்பிடும் எண்ணம் வயதாவது பற்றிய நமது தாழ்வு மனப்பான்மையில் பிறக்கிறது. முடி உதிர்தலையும், வெளுப்பதையும், தோல் சுருங்குவதையும் இயற்கை என்று எண்ணுவது போய் அதைக் குறைபாடுகளாக முன்னிறுத்தியதில் நம் சந்தைக்குப் பெரும் பங்கு உண்டு.

முன்பெல்லாம் தாமதமாக வயோதிகம் அடைந்தார்கள். அதை அவர்கள் மறைக்கவோ மறுக்கவோ முயல மாட்டார்கள். இன்று இளம் வயதிலேயே விரைவில் வயோதிகம் அடைகிறார்கள். அதனால் வாழ்க்கை முழுவதும் வயதை மறைக்கும் முயற்சிகள் தேவைப்படுகின்றன. வேலைச்சந்தையும் வயதானவர்களுக்கு எதிராகவே உள்ளது. வாழ்க்கை அனுபவத்தை விட வேலையின் உடனடி தகுதிகளே அதிகம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இதனால் முழுமையாகப் பணி முடித்து ஓய்வு பெற்றவர்களும் சரி, விருப்ப ஓய்வு வாங்கியவர்களும் சரி, ஓய்விற்குப் பின் தங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் பெறும் பணிகளில் மீண்டும் அமர்வதில்லை.

ஒரு புறம் தகுதியான ஆட்கள் இல்லை என்று சொல்லிக்கொண்டு, இன்னொரு புறம் தகுதியான வயதானவர்களை ஒதுக்கிக்கொண்டே இருக்கிறோம். இது இரு தரப்பினருக்கும் நஷ்டத்தையே தரும். இன்னொரு புறம் இன்றைய இளைஞர்கள் பத்தாண்டுகளுக்குள் உச்சத்திற்குச் செல்ல வேண்டும். 40 வயதில் ஓய்வு பெற்று, அதற்குப் பிறகு வாழ்க்கையை இன்பமாக அனுபவிக்க வேண்டும் என்கிறார்கள்.

குறைந்த காலம் இருக்க நினைக்கும் இளைஞர்களைக் கொண்டாடும் நிறுவனங்கள், நிறைந்த சேவையில் நிலைத்து நிற்கும் முதியவர்களை மதிப்பதில்லை.

45க்குப் பின்னால்

என்னைப் பொறுத்தவரை 45 வயதைக் கடந்தவர்கள் தங்கள் பணி ஓய்வு காலம் பற்றிச் சிந்தித்தல் நலம். இதைப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் மட்டும் மேற்கொள்ளாமல் உளவியல் ரீதியாக மேற்கொள்ளுதல் முக்கியம்.

இதற்குப் பயனுள்ளதாகச் சில கேள்விகள்:

என் வாழ்க்கையின் முக்கியக் குறிக்கோள்கள் என்ன? பொருளாதாரக் கடமைகள் என்ன? தன்னிறைவான வாழ்க்கைக்கு என்ன செய்ய வேண்டும்? இதே வேலை கடைசிவரை, நிலைக்குமா? வேறு வேலை என்றால் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? அதற்குத் தேவையான திறன்களும் வாய்ப்புகளும் என்னென்ன? வேலை சாராத என் பிற தேவைகள் வாழ்க்கையில் என்னென்ன?

Mid Career Counseling என்று வேலையின் மத்திமக் காலத்தில் உள்ளோர்க்கு ஆலோசனை வழங்குதல் மேலை நாடுகளில் பிரபலம். இங்கும் இவை இனி தேவைப்படும் என்று நம்புகிறேன்.

பணி ஓய்வுக்கு 3 மாதங்கள் முன் பயிற்சி கொடுக்கும் வழக்கம் சில நிறுவனங்களில் உண்டு. என்னைக் கேட்டால் 50 வயதிலாவது இந்தச் சிந்தனையை விதைக்க வேண்டும்.

50 வருடங்கள் வாழ்ந்த மனிதரின் வாழ்க்கையில் உள்ள அனுபவத்தைக் கொண்டு, அடுத்த 10 வருடங்களில் பணி ஓய்வு காலத்திற்கான திட்டமிடலைத் தொடங்கலாம்.

கரப்பான் தப்பித்த ரகசியம்

விருப்ப (அல்லது கட்டாய) ஓய்வு பெற்றவர்கள் பலருக்கு ஆலோசனை மற்றும் பயிற்சி அளித்த அனுபவத்தில் கூறுகிறேன். வேலையில் நெருக்கடி வரும்வரை நம்மில் பலர் வெளியுலகம் பற்றி எதையும் அறிந்து கொள்ள முயல்வதில்லை. நம் தொழிலின் ஆயுட்காலம் என்ன என்று அறிய வேண்டும். புதிய போக்குகளை அடையாளம் காண வேண்டும். நம் அனுபவத்துடன் புதிய திறன்கள் கற்றுப் புதிய வாய்ப்புகள் எங்குள்ளன என்று தேடுவது முக்கியம் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

டைனோசர் வழக்கொழிந்து, கரப்பான் பூச்சி தப்பித்த ரகசியம் என்ன? மாற்றத்தைத் தனதாக்கிய வாழ்வியல் தந்திரம் அது. சமூகம் நம்மை மதிக்க வேண்டும் என்கிற சிந்தனையைவிடச் சமூகம் மதிக்கும் வண்ணம் செயல்பட வேண்டும் என்கிற சிந்தனை மூத்த குடிமக்களுக்கு நன்மை பயக்கும். இளைஞர்களிடம் இல்லாத பக்குவமும் நிதானமும் முதியவர்களுக்கு உண்டு. புதிய பொறுப்புகளுக்குத் தேவையான மாற்றத்தைக் கையாண்டு போதிய திறனை நிரூபித்தால் என்றும் கோதாவில் நிற்கலாம்.

ஓய்வு எனும் மாயை

ஓய்வு என்பதுகூட மாயைதான். சிலருக்கு ஓய்வே கிடையாது. சில தொழில்களுக்கு ஓய்வே கிடையாது. ஆசிரியருக்கும் எழுத்தாளருக்கும் எதற்கு ஓய்வு? வயதாக வயதாக ரத்தினமாய் ஜொலிக்கும் நபர்களை நாம் பார்த்ததில்லையா என்ன?

சிவாஜி காலம் முதல் சிம்பு காலம் வரை இன்றும் நிலைத்திருக்கும் கமல்ஹாசனின் இளமை ரகசியம் புதிதாக வரும் எதையும் தேடி எதிர்கொண்டு ஏற்றுக்கொள்ளும் தன்மையே. உங்கள் தொழில் உலகில் நடப்பதையெல்லாம் கவனித்து மாற்றங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டால் நீங்களும் உலக நாயகன் தான்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

Medico Spots Suspicious Corrections in Marksheet

header_img2

KOTTAYAM: As the victimisation row among the medicos of the Kerala University of Health Science (KUHS) gets hotter by the day, a former resident doctor at the Department of Forensic Sciences, Government Medical College, here, is trying hard to swallow a bitter ‘marksheet pill’ handed over by the authorities.Dr Ajith Kumar S, who is now working as the medical officer in charge at the Primary Health Centre (PHC), Vellarikkund in Kasargod, appeared for the PG final year examination held in May-June, 2014, and serious discrepancies were spotted in his paper valuation.

Though, he failed in theory and practical examinations, he was declared passed in practical exam after he pointed out a serious mistake that his marks were totalled out 100 instead of 400. Following this, his marks for the practical exam had been changed from 57 to 223.

He sought re-totalling of his theory paper, for which he was still short of two marks to pass the exam. He had 198 marks against the pass mark of 200.

After re-totalling, his mark changed from 198 to 199. Ajith, who was confident enough of his performance in the exam, sought the mark sheet through RTI Act. In his complaint filed to grievance redressal committee, he alleged that “without indicating any reason, the score sheet of the theory examinations was denied.”

While the appellate authority, who is the Registrar of the university, had also same stand in the matter, Ajith secured his mark sheet through a favourable High Court order.

He decided to approach the redressal committee following which he found suspicious corrections in his mark sheet. “Six marks awarded for question No.4 has been corrected as five marks and five marks awarded for question No.7 has been corrected as four marks,” he said.

According to him, there were enough reasons to believe that corrections were intentional. “Why did they cut down the awarded marks and who did it?” Ajith asks.

As the decision on his complaint is pending before the redressal committee, Ajith is unable to appear for the supplementary examination that commences on November 5. This has put him in severe mental trouble. Meanwhile, more students are planning to approach grievance redressal committee following reports of deliberate victimisation of medicos. Kerala Medical Post Graduate Association (KMPGA) is also planning to launch protests.

Monday, November 3, 2014

5 முறைக்கு மேல் பணம் எடுக்க கட்டணம்: தனியார் வங்கிகள் ஏற்க மறுப்பு!



புதுடெல்லி: 5 முறைக்கு மேல் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுத்தால் தனிக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை சில தனியார் வங்கிகள் செயல்படுத்த மறுத்துள்ளன.

சமீபத்தில் ரிசர்வ் வங்கி, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதை கட்டுப்படுத்துவதற்காக ஒரு புதிய நிபந்தனையை பிறப்பித்து இருந்தது.

அதில், தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் ஒரு மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் அதற்கு தலா ரூ.20 பிடித்தம் செய்யவேண்டும் என்றும், பிறவங்கிகளின் ஏ.டி.எம். மையங்களை பயன்படுத்துவோர் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் தலா ரூ.20 பிடித்தம் செய்யவேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.

மேலும், அதிக முறை பணம் எடுப்பதை அனுமதிப்பது தொடர்பாக வங்கிகள் தங்கள் விருப்பம்போல் செயல்படலாம் என்றும் அந்த நிபந்தனையில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புதிய நடைமுறை முதற்கட்டமாக டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஐதராபாத், பெங்களூர் ஆகிய 6 பெருநகரங்களில் கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் புதிய உத்தரவை, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல வங்கிகள் பின்பற்றவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதில், ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி., ஆக்சிஸ், கோட்டக் மகிந்திரா, யெஸ் ஆகிய வங்கிகள் ஏ.டி.எம். மையங்களில் வாடிக்கையாளர் பணம் எடுப்பது தொடர்பான முடிவில் தங்களது வழக்கமான நிலையையே தொடருகின்றன.

மேலும் கோட்டக் மகிந்திரா மற்றும் யெஸ் ஆகிய வங்கிகள், தங்களது வங்கிகளில் அதிக இருப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், பிற ஏ.டி.எம். மையங்களில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ள அனுமதித்து உள்ளன.

வாட்ஸ் அப்பில் இலவச அழைப்புகள்: 2015 ஆம் ஆண்டில் அறிமுகம்!



நியூயார்க்: வாட்ஸ் அப்பில், இலவசமாகப் பேசும் வசதியை வரும் 2015 ஆம் ஆண்டில் அந் நிறுவனம் அறிமுகப் படு த்த உள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக், டுவிட்டருக்கு அடுத்து உலக அளவில் பிரபலமாக உள்ள 'வாட்ஸ்–அப்' புதிய அம்சங்களுடன் வரும் 2015 ஆம், ஆண்டு வெளியாக இருக்கின்றது.

இதற்கானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், 2015ஆம் ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வாட்ஸ் அப்பில் இலவச கால் சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் சில முக்கிய அம்சங்களுடன் வாட்ஸ்-அப் 4.5.5 என்ற பதிப்பில் அடுத்த ஆண்டு வாட்ஸ் அப் வெளியாக இருக்கிறது. ஆனால் வாட்ஸ் அப்பின் புதிய இலவச வாய்ஸ் கால் சேவைக்கு செல்போன் நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இத்தகைய சேவை அளிக்கப்பட்டால் செல்போன் நிறுவனங்களின் வருமானம் வெகுவாகப் பாதிக்கும் என்பதால் இந்த சேவையை ஆரம்பிக்க கூடாது என செல்போன் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதற்கு முன்னர் சீனாவின் விசாட், கொரியாவின் காகோடாக், இஸ்ரேலின் வைபர் ஆகிய நிறுவனங்கள் வாய்ஸ் கால் சேவையை அளித்து வருவதால் அந்தந்த நாடுகளில் உள்ள செல்போன் சேவை நிறுவனங்கள் கடும் பாதிப்பு அடைந்து வருவதும் குறிப்பிடத் தக்கது

NEWS TODAY 31.01.2026