Thursday, January 22, 2015

உங்கள் கணினியில் 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துவது எப்படி?



வாட்ஸ் ஆப் செயலியை மொபைல்களில் மட்டுமல்லாது இனி கணினியிலும் பயன்படுத்தலாம்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப் செயலி அனைத்து விதமான மொபைல் ஃபோன்களிலும் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறுந்தகவல்களோடு, புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், குரல் பதிவுகள் என பலவற்றை வாட்ஸ் ஆப் மூலம் பகிரமுடியும்.

இந்தச் செயலியை மொபைல்களில் பயன்படுத்தும் அதே வேளையில் கணினியிலும் பயன்படுத்த பல பயனர்கள் ஏற்கனவே ஆர்வம் தெரிவித்திருந்தனர்.

தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் இதற்கேற்றார் போல, கணினியில் க்ரோம் ப்ரவுசரில் (Chrome) வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கணினியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துவது எப்படி?

1. முதலில் மொபைலில் இருக்கும் வாட்ஸ் ஆப் செயலியை மேம்படுத்த (UPDATE) வேண்டும்

2. அடுத்து, கணினியில், க்ரோம் ப்ரவுசரில் https://web.whatsapp.com என்ற பக்கத்திற்கு செல்லவும். அந்த பக்கத்தில், ஒரு கியூ ஆர் கோட் (QR CODE) காண்பிக்கப்படும்.

3. உங்கள் மொபைலில், வாட்ஸ் ஆப் செயலியை இயக்கி, அதில் மெனுவிற்கு செல்லவும்.

4. மெனுவில் WHATSAPP WEB என்ற தேர்வுக்குச் செல்லவும்.

5. கணினி திரையில் இருக்கும் கியூ ஆர் கோடினை (QR CODE) மொபைலால் ஸ்கேன் செய்யவும் (உங்கள் மொபைலில் இன்டர்நெட் இணைப்பு செயல்படவேண்டும்)

6. ஸ்கேன் செய்து முடித்தவுடன் தானாக கணினி திரையில் உங்கள் வாட்ஸ் ஆப் பக்கம் தோன்றும்

ANNAMALAI UNIVERSITY NAAC ACCREDITATION "A" GRADE AWARDED


ஆபரேஷன் ஸ்ரீரங்கம்! இடைத்தேர்தல் வந்தாச்சு


ஜெயலலிதா நின்றாலும் நிற்க முடியாமல்போனாலும் ஸ்ரீரங்கம், இப்போது தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தி. ஆன்மிக நகரமான அதை அரசியல் நகரமாக மாற்றிவிட்டது பெங்களூரு வழக்கின் தீர்ப்பு!

வருமானத்துக்கு அதிகமான சொத்துச் சேர்த்த வழக்கில் குற்றச்சாட்டை உறுதிப்படுத்திய பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வருக்கும் தலா நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார். இதன் மூலமாக எம்.எல்.ஏ பதவியையும் அதனால் அடைந்த முதலமைச்சர் பதவியையும் ஜெயலலிதா பறிகொடுத்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமாரசாமி முன்பு விசாரணை நடந்துவருகிறது. ஜெயலலிதா இப்படி பதவி இழந்தது தெரியாமல் மறைக்க பகீரப் பிரயத்தனங்களை ஆளும் கட்சியும் ஆட்சியாளர்களும் செய்தாலும், தேர்தல் ஆணையம் அமைதியாக இருக்க முடியாது அல்லவா? இதோ ஜெயலலிதா பதவி இழந்ததால் காலியான ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கு, பிப்ரவரி 13-ம் தேதியைக் குறித்திருக்கிறது. ஜெயலலிதாவின் தொகுதிக்கு ஜெயலலிதாவின் வேட்பாளராக எஸ்.வளர்மதி நிறுத்தப்பட்டுள்ளார்!

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா, அக்டோபர் 18-ம் தேதி ஜாமீனில் வெளியில் வந்தார். அன்று போயஸ் கார்டன் வீட்டுக்குள் சென்றவர்தான், இதுவரை அவர் வெளியில் வரவில்லை. அவரது புகைப்படம்கூட ஒரே ஒரு முறை மட்டுமே வெளிவந்தது. ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் எஸ்.வளர்மதிக்கு வாழ்த்து சொல்லும் படம் இரண்டாவது. 'நீங்க நிச்சயமாக ஜெயிப்பீங்க’ என வாழ்த்தி வளர்மதியை வழியனுப்பினார் ஜெயலலிதா. என்னதான் உற்சாகம் சொல்லி அனுப்பினாலும், ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை, அவரது மனத் துன்பத்தை வெளிப்படுத்திவிட்டது.

ஜனவரி 17-ம் தேதி, எம்.ஜி.ஆர் பிறந்த நாள். அன்றைய தினம் தலைமைக் கழகத்துக்கு வந்து எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்குவார் ஜெயலலிதா. இந்த முறை, அவர் வரவில்லை. அது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், 'சோதனைகளும் துன்பங்களும் இல்லாத வாழ்க்கை இருக்கவே முடியாது. ஆனால், இந்தச் சோதனைகளைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு வெற்றிகரமாக வாழ்ந்து காட்டுவதே சிறப்புக்குரியது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வாழ்வு சொல்கிற பாடமும் இதுதான்’ என, தனது வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார். அதாவது அவர் பிரசாரம் செய்யவராமல், ஒரு தேர்தல் நடக்கப்போகிறது. இவர் தேர்தல் பிரசாரம் செய்யக் கூடாது என்றோ, வீட்டைவிட்டு வெளியில் வரக் கூடாது என்றோ, எந்தக் கட்டுப்பாட்டையும் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. ஆனால், தனக்குத்தானே அந்தக் கட்டுப்பாட்டை ஜெயலலிதா விதித்துக்கொண்டார். இதேபோல் வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் வெளியில் வந்திருந்த ஓம்பிரகாஷ் சௌதாலா, தேர்தல் பிரசாரம் செய்ததால் அவரது ஜாமீன் மனுவை ரத்துசெய்தது உச்ச நீதிமன்றம். அதுபோன்ற சூழ்நிலை தனக்கும் வந்துவிடக் கூடாது என்பதே ஜெயலலிதாவின் பயம். டெல்லியில் உட்கார்ந்து சுப்ரமணியன் சுவாமி போன்றோர் கண்காணிப்பதும் தனிக் கவலை!

ஆனால், ஜெயலலிதா பிரசாரத்துக்கு வர முடியாமல் போவதால் அ.தி.மு.க-வுக்கு எந்தப் பின்னடைவும் இப்போதைக்கு ஸ்ரீரங்கத்தில் தெரியவில்லை. மற்ற தொகுதிகளை எப்படிக் கவனித்தார்களோ தெரியாது. ஸ்ரீரங்கத்தில் ஏராளமான திட்டங்களைக் குவித்தார்கள். அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் பாதிக்கு மேல் நிறைவேற்றப்பட்டுவிட்டன. எப்போதும் எங்கேயோ ஏதோ ஓர் அரசாங்கப் பணி நடந்துகொண்டே இருந்தது. எப்போதும் அமைச்சர்களில் யாராவது ஒருவர் அங்கு மையம்கொண்டிருந்தார். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சென்று, நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளை ஜெயலலிதாவும் திறந்துவைத்து வந்தார். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வருபவர்களுக்கான ஏற்பாடுகள் 'திவ்யமாக’ச் செய்யப்பட்டு பக்தர்களின் மனம்குளிர வைக்கப்பட்டன. போதாதற்கு 50 பேர் கொண்ட அதிகாரப் படையை ஸ்ரீரங்கத்துக்குள் இறக்கியிருக்கிறார் ஜெயலலிதா. தொகுதி முழுக்க இனி இவர்கள் மட்டுமே வலம்வரப்போகிறார்கள். இவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதே காவல் துறையின் வேலையாக இருக்கும். 'எதிரில் நிற்கும் எவருக்கும் டெபாசிட் போக வேண்டும்’ எனக் கட்டளையிட்டுள்ளார் ஜெயலலிதா. 'அதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை’ என இப்போதே சொல்கின்றனர் அமைச்சர்கள்.

அவர்களது துணிச்சலுக்குக் காரணம், ஆளும் கட்சியின் சாதனைகள் மட்டும் அல்ல; எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மையும்தான். முன்பெல்லாம் கருணாநிதி, தன் எதிரியை வீழ்த்த எதிர்க்கட்சிகளைக் கூட்டி கூட்டணியை உருவாக்குவார். அதிலேயே அவரது கவனம் இருக்கும். ஆனால், இன்று சொந்தக் கட்சியில் தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்வதிலேயே அவரது நேரம் கழிந்துவிட்டதால், மற்ற விஷயங்களில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் பிரச்னை, அன்பழகன் மீது ஸ்டாலின் கோபம், அழகிரி இதோ வருகிறார்... அதோ வருகிறார், கனிமொழிக்கு என்ன பதவி... என்பதே கட்சியைப் பற்றி வெளியில் வரும் செய்திகளாக மாறிப்போனதால், ஜெயலலிதாவுக்கு எதிராக அ.தி.மு.க-வுக்கு மாற்றாக ஓர் அணியை அவரால் கட்டியெழுப்ப முடியவில்லை.

'ஆளும் கட்சியான அ.தி.மு.க தொடர்ந்து தமிழகத்தில் நடத்திவரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை செய்கிற வகையில், இந்த இடைத்தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நல்கிடும் உறுதியான ஆதரவோடு போட்டியிடுவது ஆக்கபூர்வமானது என நினைத்து இந்த முடிவை எடுத்துள்ளோம். தமிழகத்தில் ஜனநாயகத்தைக் காத்திடவும் சர்வாதிகார எண்ணத்தை வீழ்த்திடவும் மேற்கொள்ளப்பட்டுள்ள கழகத்தின் இந்த முடிவுக்கு உதவும் வகையில் திருவரங்கம் தொகுதி சட்டப்பேரவைத் தேர்தலில் கழக

வேட்பாளருக்கு, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’ என்ற கருணாநிதியின் அறிக்கை, அப்படியே கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. ஆளும் கட்சிக்கு எதிராக பொதுவேட்பாளர் அறிவிக்கவேண்டுமானால் முதலில் அனைத்துக் கட்சிகளையும் ஒரே இடத்தில் அமர்த்தி, அவர்களது ஒன்றுபட்ட கருத்தின் மூலமாக ஒரு வேட்பாளரை அறிவிக்க வேண்டும். ஆனால், கருணாநிதியால் அது முடியாததால் அவரே தனது கட்சி வேட்பாளரை அறிவித்துவிட்டு, அவரையே அனைவரும் ஏற்க வேண்டும் எனச் சொல்வது கூட்டணி தர்மங்களுக்குள் அடங்காத தர்மமாக இருக்கிறது.

தனது கூட்டணிக்குள் வருவார் என எதிர்பார்த்து, டாக்டர் ராமதாஸின் பேத்தி திருமணத்துக்கு கண் வலியோடு போனார் கருணாநிதி. அடுத்த இரண்டாவது நாளே 'கூட்டணி முடிச்சை’ மறுத்து சேலத்தில் பேட்டி கொடுத்தார் ராமதாஸ். ஸ்டாலின்-வைகோ சந்திப்புக்கும் இப்படி ஒரு முக்கியத்துவம்தான் தரப்பட்டது. ஈரோடு திருமண வீட்டில் அதை வைகோ மறுத்துவிட்டார். விஜயகாந்துக்கும் இவர்களுக்கும் தொடர்பே இல்லை. எஸ்றா சற்குணம்கூட அடுத்த கிறிஸ்துமஸுக்குத்தான் விஜயகாந்தைச் சந்திப்பார். அதற்குள் தேர்தலே முடிந்துபோகும். கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவரை தி.மு.க பிரமுகர் ஒருவர் சந்தித்தபோது, 'நாங்கள் உங்கள் கூட்டணிக்கு வருவோம் என்றெல்லாம் எதிர்பார்க்காதீர்கள்’ என அவர் கைகழுவிவிட்டார். பா.ஜ.க தனித்துப் போட்டி எனச் சொல்லிவிட்டது. ஆசையாக இருப்பது காங்கிரஸ் இளங்கோவன் மட்டும்தான். ஆனால், அவரை அரவணைக்க இதுவரை கருணாநிதி தயாராக இல்லை. ஜி.கே.வாசன், அவர் அப்பா மூப்பனாரைப்போல பிடியே கொடுக்கவில்லை. இப்படி ஒரு சூழ்நிலையில் ஸ்ரீரங்கத்தில் பொதுவேட்பாளர் என்பதோ, தி.மு.க வேட்பாளரை மற்ற கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ஆதரிப்பது என்பதோ சாத்தியமே இல்லை. மேலும், அனைத்துக் கட்சிகளும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை சாதாரண இடைத்தேர்தலாகப் பார்க்கவில்லை. அடுத்து வரப்போகும் சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகத்தான் பார்க்கிறார்கள். இந்த இடைத்தேர்தலில் எடுக்கும் முடிவுதான் அடுத்த சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை முடிவு செய்யும் எனவும் நினைக்கிறார்கள்!

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. அதன்படி பார்த்தால், மார்ச் மாத இறுதிக்குள் வழக்கின் தீர்ப்பு வந்துவிடும். வழக்கின் தீர்ப்பு ஒருவேளை ஜெயலலிதாவுக்குச் சாதகமாக வந்தால், அவர் மீண்டும் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுவார். அப்போது அது தனக்கு மட்டுமான தேர்தலாக இல்லாமல், ஒட்டுமொத்த தமிழகச் சட்டசபைக்கான பொதுத்தேர்தலாகக்கூட ஜெயலலிதா அமைத்துக்கொள்ளலாம். 'நிரபராதி’ என அவர் தீர்ப்பு பெற்றால், வாக்குகளைக் குவிக்கும் மந்திரக்கோல் அதைவிட வேறு என்ன இருக்க முடியும்? அதனால் பெங்களூரு வழக்கின் தீர்ப்பைப் பொறுத்து தமிழகச் சட்டசபைக்கான பொதுத்தேர்தல் தேதியும் முடிவாகிவிடும். எனவேதான், எதிலுமே மாட்டிக்கொள்ளக் கூடாது என எதிர்க்கட்சிகள் அனைத்தும் பதுங்குகின்றன. இது ஆளும் கட்சிக்கு சாதகமோ சாதகம். ஆனால், ஒரே ஒரு பாதகத்தை நினைத்துத்தான் அமைச்சர்கள் அனைவரும் பயப்படுகிறார்கள்.

அம்மாவைவிட வளர்மதி அதிகப்படியான வாக்குகள் வாங்கிவிட்டால்..? அம்மா முகத்தில் எப்படிப் போய் முழிப்பது?!

வெற்றிபெற வேண்டும், அம்மாவைத் தாண்டிவிடாத வெற்றியாக அது அமைய வேண்டும். இதற்கு யாரிடமாவது ஆலோசனை இருக்கிறதா?

வாருங்கள் ஸ்ரீரங்கத்துக்கு!

குழந்தைகளைத் தாராளமாகப் பாராட்டுங்கள்

Return to frontpage

“அப்பா, நான் முதல் ரேங்க் வாங்கிவிட்டேன்!” என்று ஒரு பிள்ளை பெருமையுடன் தன் மதிப்பெண் சான்றிதழைத் தந்தையிடம் காட்டுகிறான். “அதிலென்ன ஆச்சரியம், நீ என் பிள்ளை ஆச்சே!” என்று தகப்பனார் நெஞ்சை நிமிர்த்திக்கொள்கிறார்.

அடுத்து அம்மா, தான் தினமும் பிள்ளைக்குக் கரைத்துக் கொடுக்கும் ஓர் ஆரோக்கிய பானத்தின் ஜாடியை விஷமச் சிரிப்புடன் உயர்த்திக் காட்டுகிறார். இந்த விளம்பரத்தை அடிக்கடி எல்லாத் தொலைக்காட்சிகளிலும் பார்த்திருக்கிறோம்.

தனது பரம்பரையின் புத்திசாலித்தனமும் கல்வித் திறமையும் தனது பிள்ளைக்கும் வந்திருக்கிறது என்கிறார் அப்பா. தான் அவனுக்கு ஊட்டச்சத்துகளை ஊட்டி வளர்த்ததால்தான் அவன் படிப்பில் சிறந்து விளங்குகிறான் என்று அறிவிக்கிறார் அம்மா. யார் சொல்வது சரி?

சில நூறு மாணவர்களின் ‘ஐ.க்யூ’ எனப்படும் புத்திக் கூர்மையை அளவிட்டதுடன், அவர்களுடைய குடும்பச் சூழ்நிலை மற்றும் முன்னோர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களையும் திரட்டி ஆராய்ந்து, ஒரு மாணவரின் கல்வித் திறன் எந்த விதமான காரணிகளைப் பொறுத்திருக்கிறது என ஓர் அமெரிக்கப் பல்கலைக்கழக ஆய்வர்கள் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் அண்மையில் ஒரு முதல்கட்ட ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஐ.க்யூ வளர்ச்சியின் காரணங்கள்

மரபியல் காரணிகளுடன் சுற்றுச்சூழல், உடல் ஆரோக்கியத் தரம், போஷாக்கு, வளர்ப்பு ஆகியவையும் பிள்ளையின் ஐ.க்யூவை வளர்ப்பதில் பங்குவகிக்கின்றன. மரபியல் கூறுகளுடன் பெற்றோரின் நடவடிக்கைகளும் ஐ.க்யூ அபிவிருத்தியில் பங்களிக்கின்றன. குறிப்பாக, சிசுக்களின் மூளை உருவாகும் காலகட்டத்தில் அவை ஐ.க்யூவை வளர்க்கும் மூளையின் சுற்றுகள் உருவாக உதவுகின்றன. அதன் நற்பயன்களைச் சிசுப் பிராயத்திலேயே காண முடியும்.

ஆய்வுக்குட்பட்ட சிறார்களில் வறிய குடும்பத்தினரும் இருந்தனர். அவ்வாறான சில குடும்பங்களில் மூத்தவர்கள் அன்புடன் பழகிக் கதை சொல்லவும் அரட்டையடிக்கவும் செய்தனர். விடுகதைகளும் விளையாட்டுகளும் என்று பொழுது கழிந்தது. வேறு சில வறிய குடும்பங்களில் சோற்றுக்குப் பஞ்சம் இல்லாதிருந்தபோதிலும் பெரியவர்களின் அன்பும் அரவணைப்பும் இல்லை.

இவர்களில் முதல் வகையினரின் ஐ.க்யூ. கூடுதலாக இருந்தது. பள்ளிப் படிப்பை முடித்தபோது மொழிப் பயன்பாட்டிலும் கணிதத்திலும் அவர்கள் மேம்பட்டிருந்தனர். சிசுப் பருவத்தின் ஆரம்பகால அனுபவங்கள் ஐ.க்யூவை மேம்படுத்துவது மெய்ப்பட்டது.

பிறந்த சிசுவின் மூளையில் பல நூறு கோடி செல்களும் நியூரான் இணைப்புகளும் உள்ளன. கருப்பை வாசத்தின்போதே சுவாசம், இதயத் துடிப்பு போன்ற ஜீவாதாரச் செயல்களுக்கான நியூரான் இணைப்புகள் தோன்றிவிடும். பிரசவிக்கப்பட்ட பின், அது அனுபவிக்கும் ஒலி, ஒளி, தொடுதல்கள் போன்ற புலனுணர்வுகள் கூடுதலான நியூரான் இணைப்புகளை உண்டாக்கும்.

சிசு வளர வளர மூளை செல்கள் உடலின் பிற செல்களுடன் இணைப்புகளை வளர்த்துக்கொள்கின்றன. அவையே அதன் நடவடிக்கைகளை நிர்ணயிக்கின்றன. உதாரணமாக, கண்ணின் பார்வை நரம்பு மூலம் வரும் மின் சமிக்ஞைகளைப் பார்வைப் புறணி புரிந்துகொண்டு மற்ற இணைப்புகள் மூலம் பிற உறுப்புகளுக்குத் தேவைக்கேற்றபடி இயங்க ஆணை அனுப்புகிறது. ஒரு குறிப்பிட்ட அனுபவம் திரும்பத் திரும்ப ஏற்படும்போது அத்தகைய இணைப்புப் பாலங்கள் வலுப்பெறு கின்றன.

இரண்டு வயது முடிவதற்குள் மூளையில் மூன்று லட்சம் கோடி நியூரான் இணைப்புகள் உருவாகிவிடுகின்றன. இணைப்பு ஏற்படாத அல்லது பயன்படாத செல்களும் நரம்பு இணைப்புகளும் அழிந்துபோகும்.

வாய்ப்பு வாசல்

வாழ்க்கை அனுபவங்களுக்கு மூளை பழகுவது ஒரு கால அட்டவணையின் பிரகாரம் நடைபெறுகிறது. ஒரு குறிப்பிட்ட இணைப்பு ஒரு காலகட்டத்தில்தான் ஏற்படும். அதை வாய்ப்பு வாசல் என்பார்கள். பார்வைக்குப் பழகும் செல்கள் முதல் ஆறு மாதங்களில் வேகமாகப் பெருகி, எட்டு மாதத்தில் பிற செல்களுடன் 15,000 கோடி இணைப்புகளைப் பெற்றுவிடும். அது முடிந்ததும் வாசல் மூடிக்கொள்கிறது.

ஒரு வாய்ப்பு வாசல் காலகட்டத்தைத் தவறவிட்டு விட்டால்கூடக் கவலையில்லை. குழந்தைப் பருவம் முழுவதுமே ஏராளமான வாய்ப்புகள் கிட்டும். மூன்று முதல் பத்து வயது வரை குழந்தைகளின் மூளை பெரியவர்களுடையதைப் போல இரு மடங்கு ஆற்றலைச் செலவழிக்கிறது. அதில் பெரியவர்களுக்கு இருப்பதைவிடப் பன்மடங்கு அதிக இணைப்புகள் இருப்பதே அதற்குக் காரணம். இதன் காரணமாகச் சிறுவர்கள் புதிய திறமைகளை எளிதாகக் கையகப்படுத்துவார்கள். புதிய மொழிகளைக் கற்பதிலும் சிறுவர்கள் பெரியவர்களைவிட மேம்படுகிறார்கள்.

ஐந்து வயதுக்கு மேல்தான் குழந்தைகளின் விரல்களுக்குப் பென்சில் அல்லது பேனா இயக்கும் லாவகம் வரும். அதுவரை வீட்டிலோ, மழலையர் பள்ளியிலோ விளையாட்டு மற்றும் கதை, பாட்டு போன்றவற்றின் மூலம் ஐ.க்யூவை வளர்க்க முயல வேண்டுமே தவிர, கணக்குப் போடவும், பாடம் எழுதவும் பலவந்தப்படுத்தக் கூடாது. படங்களைக் காட்டி விவரிப்பது நல்லது.

குழந்தை முதன்முதலாகத் தலையைத் தூக்குவது, தவழ்வது, நடப்பது போன்றவையெல்லாம் வாய்ப்பு வாசல்கள் ஆகும். ஒன்றரை மாதக் குழந்தையால் 20 சென்டிமீ்ட்டர் தொலைவில் உள்ள பொருட்களைத்தான் தெளிவாகப் பார்க்க முடியும். பெற்றோர் அந்தத் தொலைவில் தமது முகங்களை வைத்துக் கொஞ்சினால், அவை மூளை இணைப்புகளில் ஒரு பழகிப்போகும் பதிவை உண்டாக்கும். பரிச்சயமானது, புதியது, ஒரே மாதிரியானது, வேறுபட்டது எனப் பிம்பங்களை வகைப்படுத்தும் திறன் பெருகும். வடிவங்களையும் நிறங்களையும் பிரித்தறியும் திறன் வரும். பிறந்த நாளில் இருந்தே சிசுவுடன் ஏதாவது பேசிக்கொண்டேயிருந்தால், அதன் மொழித்திறன் வளரும். அவ்வாறான வீடுகளில் மூன்று வயதுக்குள்ளாகவே குழந்தைகள் தொடர் வாக்கியங்களாகப் பேச ஆரம்பித்துவிடுவார்கள். மனக்கணக்குகளில் அதிகத் திறமை ஏற்படும்.

தாலாட்டுகள் அவசியம்

மூளை வளர்ச்சியில் தாலாட்டுகள் பெரிதும் உதவும். இடம் மற்றும் தர்க்க அறிவை இசை வளர்க்கிறது. சிறு வயதிலிருந்து முறையாக இசை பயில்பவர்கள் புதிர்களை விடுவிப்பதிலும் ஜிக்சா படங்களை இணைப்பதிலும் பிறரை விட அதிக வேகமும் திறமையும் பெற்றிருக்கின்றனர். கணிதம் பயிலும்போதும் இசை பயிலும்போதும் மூளை செல்கள் ஒரே மாதிரியாக இயங்குகின்றன. எனவே, இசை பயிலும் குழந்தைகள் கணிதத்திலும் மேம்பட்டிருப்பார்கள்.

பாராட்டு, குழந்தையின் மனதுக்கு உரம். பாராட்டினால் அது மகிழும்போது அறிவு மையமான மூளைப் புறணிக்கும் உணர்வு மையமான நடு மூளைக்கும் இடையிலான இணைப்புகள் வலுப்பெறுகின்றன. இவை எட்டாவது முதல் பதினெட்டாவது மாதம் வரையிலான காலகட்ட வாசலில் உருவாகும். பாராட்டுகளால் குழந்தை குதூகலிக்கிறபோது, மூளையில் வேதிகள் பெருகி அவ்விணைப்புகளை வலுப்படுத்தும். குழந்தைகளைப் பாராட்டாமல் போனால், அந்த இணைப்புகள் வலுக்குன்றிப் புதிய சாதனைகளைப் படைக்கும் ஆர்வம் மங்கிவிடும். குழந்தை முதன்முதலாக எழுந்து நிற்கும்போது ‘பலே பலே’ என்று கைதட்டிச் சிரிப்பதும், கொஞ்சுவதும் கூடப் பாராட்டுதான்.

பதின்வயதுகளில் உணர்ச்சி தொடர்பான நரம்பிணைப்புகள் அதிகரிக்கும். அப்போது பெற்றோர் கூடுதலான கவனத்துடன் இருக்க வேண்டும். பாலுணர்வுகள் தலைதூக்கும் அந்த காலகட்டங்களில் கண்காணிப்பும் கலந்துரையாடலும் வழிகாட்டலும் விபத்துகளைத் தவிர்க்கும்.

பள்ளிப் பாடத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெறுவது வேறு. ஐ.க்யூ. எனப்படும் கூர் அறிவு வேறு. பள்ளிப் படிப்பு ஏறாத பலர், கூர் அறிவினால் சாதனை படைத்திருக்கின்றனர். சம வயதினரின் சகவாசம், குடும்பச் சூழல், மூத்தோர் ஆதரவு போன்றவை கூர் அறிவையும் மனப் போக்குகளையும் பண்படுத்த உதவும்.

பெற்றோரால் குழந்தையை மாமேதையாக்க முடியாமல் போகலாம். ஆனால், அந்த இலக்கை நோக்கிக் குழந்தையைச் செலுத்துவதில் அவர்களுடைய பங்கு முதன்மையானது.

கே.என். ராமசந்திரன்,

அறிவியல் கட்டுரையாளர்.

1000 படங்கள்: இசைஞானியை புகழ்ந்த ரஜினி, கமல், அமிதாப்!


1000 படங்கள்: இசைஞானியை புகழ்ந்த ரஜினி, கமல், அமிதாப்!


அன்னக்கிளி’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 40 ஆண்டுகளாக தொடர்ந்து இசைத் துறையில் யாரும் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு சாதனைகள் படைத்து வருகிறார்.

5 தேசிய விருதுகள், ஏராளமான மாநில அரசு விருதுகள், பத்ம பூஷன் விருது என பல பெருமைகளைப் பெற்றுள்ளவர் ’மேஸ்ட்ரோ’ இளையராஜா.

பாலா இயக்கும் ’தாரை தப்பட்டை’ படம் இளையராஜாவின் 1000வது படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

உலக அளவில் இசைத் துறையில் இப்படி ஒரு சாதனையை எவரும் நிகழ்த்தியதில்லை. அதுவும் இளையராஜா இசையமைத்த 1000 க்கும் மேற்பட்ட படங்களில் 80 சதவீதம் பெரும் வெற்றி பெற்றவை. 4000 பாடல்களுக்கு மேல் சூப்பர் ஹிட் ரகத்தைச் சேர்ந்தவை. இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரரான இளையராஜாவுக்கு, பாலிவுட் திரையுலகம் நேற்று பாராட்டு விழா எடுத்தது.

இயக்குநர் பால்கி இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள, நடிகர் அமிதாப் பச்சனே முன் நின்று அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பினார். அவரது அழைப்பை ஏற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன், நடிகை ஸ்ரீதேவி என இந்தியாவின் மிக உன்னத கலைஞர்கள்.. சாதனையாளர்கள் இந்த விழாவில் பங்கேற்று, இசைஞானியின் பெரும் சாதனையைக் கவுரவித்து மகிழ்ந்தனர். இவ்விழாவில்

அமிதாப் பேசியபோது: "அவர் ஒரு ஜீனியஸ். என்னை பல வழிகளில் திருத்தியுள்ளார். எனக்கு அந்த வாய்பளித்ததற்கு நன்றி. அவருடைய பெயர் பல படங்களின் வியாபாரத்துக்கு உதவியிருக்கிறது. இசையுலகில் அவரது பெயர் கடவுளோடு ஒப்பிடப்படுகிறது" என்றார்.

கமல் பேசியபோது: "இளையராஜா எனது வாழ்வில் ஒரு பங்காக மாறிவிட்டார். இன்று எனக்கு அவரை கட்டியணைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கொஞ்சம் கூச்சப்படுகிறார். 1000 படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவின் 786 வது படம் என்னுடையது" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ரஜினி பேசியபோது : "எனக்கு ராஜாவை 70களிலிருந்து தெரியும். அப்போதெல்லாம் அவர் மிகவும் குறும்பாக, நடந்துகொள்வார். நிறைய கிசுகிசுக்கள், பேசிகொண்டே விடிய விடிய மது அருந்துவோம். திடீரென அவரிடம் மாற்றங்கள், அவருடைய நடை , உடை என மாற்றங்கள் உண்டாகின. கலைவாணியே அவரிடம் குடிவந்துவிட்டாள் போல, அன்று முதல் நான் ராஜாவை ராஜா சாமி என்றுதான் அழைக்கிறேன்" என கூறினார்.

விழாவில் கலந்துகொண்டு கவுரவித்த ரஜினி, அமிதாப், கமல், ஸ்ரீதேவி உள்ளிட்டோருக்கு இளையராஜா தனது நன்றிகளை தெரிவித்துகொண்டார்.
)

பத்திரப்பதிவு கட்டணம் செலுத்த புதிய வசதி: 'டிடி' எடுக்க வேண்டாம்

சொத்து பரிமாற்றம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்யும் போது, அதற்கான கட்டணங்களை வங்கி வரைவோலைக்கு 'டிடி' பதிலாக, ஆன் - லைன் முறையில், வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த, புதிய வசதி துவங்கப்பட்டு உள்ளது.

பல்வேறு பிரச்னைகள்:

தமிழகத்தில், சொத்து பரிமாற்றத்துக்கான ஆவண பதிவின் போது, அதன் சந்தை மதிப்பில், 7 சதவீதம் முத்திரைத்தீர்வை; 1 சதவீதம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும். இதேபோன்று, பாகப்பிரிவினை, உயில், பொது அதிகார ஆவணம், கொடை ஆவணம், தான பத்திரம், ஒப்பந்தம் போன்ற ஆவணங்களை பதிவு செய்யவும் கட்டணம் செலுத்த வேண்டும். தமிழகம் முழுவதும், 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில், ரொக்க பயன்பாடு அதிகமாக இருப்பதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு, முத்திரைத்தீர்வை தொகையை வங்கிகள் வாயிலாக செலுத்த, 'இ - ஸ்டாம்பிங்' வசதி ஏற்படுத்தப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக, பதிவு கட்டணத்தை வங்கி வரைவோலையாக 'டிடி' பெறும் வசதி, சில ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. சொத்துகளின் மதிப்பு வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், பதிவு கட்டணமாக செலுத்த வேண்டிய தொகையும் அதிகமாகிறது. இதனால், பெரிய தொகைக்கு வங்கி வரைவோலை எடுக்கும் போது, அதற்கான கமிஷன் தொகையும் அதிகரிக்கிறது. இதையடுத்து, பதிவு கட்டணங்களை, பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் இருந்து, 'நெட் பேங்கிங்' சேவையை பயன்படுத்தி, ஆன் - லைன் முறையில் பதிவுத் துறை கணக்கில் செலுத்த, புதிய வசதி துவங்கப்பட்டு உள்ளது.

கூடுதல் செலவின்றி...:

முதற்கட்டமாக, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பரோடா வங்கி, இந்தியன் வங்கி ஆகியவற்றில், இதற்கான வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள், இச்சேவையை பயன்படுத்தி, பதிவு கட்டணத்தை எளிதாக, எவ்வித கூடுதல் செலவும் இன்றி செலுத்தலாம் என்கின்றனர், பதிவுத் துறை அதிகாரிகள்.

- நமது நிருபர் -

NEWS TODAY 26.01.2026