Friday, April 3, 2015

கணினி வேலைக்கு பதில் பந்து பொறுக்கி போடும் பணி! மலேசியாவில் தவிக்கும் சிவகாசி இளைஞர்: பாஸ்போர்ட் பறிப்பால் சிக்கல்..DINAMALAR 23.4.2015

மலேசியாவில் கணினி ஆபரேட்டர் வேலை வாங்கி தருவதாக, அழைத்துச் சென்ற ஏஜன்ட், பந்து பொறுக்கி போடும் வேலையை தான் வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், பாஸ்போர்ட்டையும் பறித்துக் கொண்டதால், சொந்த ஊர் திரும்ப முடியாமல், சிவகாசி இளைஞர் தவித்து வருகிறார்.

பி.பி.ஏ., பட்டதாரி:

சிவகாசி, சசி நகரைச் சேர்ந்தவர் ராஜா கனி; பெயின்டர். இவரது மனைவி அஞ்சாதேவி. இவர்களின் மகன் அருண்பிரசாத், 24; பி.பி.ஏ., பட்டதாரி. இவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கீதா மற்றும் ரத்தினசாமி ஆகியோர், அருண்பிரசாத்திடம், மலேசியாவில், கணினி ஆபரேட்டர் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர். இதற்காக, 25 ஆயிரம் ரூபாயை வாங்கி கொண்டனர். கடந்த மாதம் மலேசியாவுக்கு, அருண் பிரசாத்தை, ரத்தினசாமி அழைத்துச் சென்றார். அங்கு சென்றபின், சொன்ன வேலையை வாங்கித் தரவில்லை; பாஸ்போர்ட்டை யும் பறித்துக் கொண்டார்.

இதுகுறித்து, மலேசியாவில் இருந்து, 'தினமலர்' அலுவலகத்தை தொடர்பு கொண்டு, அருண்பிரசாத் கூறியதாவது: என்னை மலேசியாவிற்கு அழைத்து சென்ற ரத்தினசாமி, பிரிக்பீல்ட்ஸ் நகர் கிளப் ஒன்றில், கோல்ப் பந்துகளை பொறுக்கிப் போடும் வேலைக்குச் சேர்த்து விட்டார். நான் உடனடியாக ஊருக்குத் திரும்ப வேண்டும். அதற்கு, பணம் இல்லை. அதனால், இந்த வேலையைச் செய்தால், சம்பளம் வரும், ஊருக்குப் போய் விடலாம் என நினைத்தேன். ஆனால், ஒரு மாதம் வேலை பார்த்த பின், ரத்தினசாமி சம்பளம் வாங்கித் தரவில்லை. வேலை செய்த இடத்தில் கேட்டால், 'ஏஜன்ட் வாங்கிச் சென்று விட்டார்' என்றனர். ரத்தினசாமியிடம் பணம் கேட்டபோது, 'நீயே, இன்னும் பணம் தரணும்; வேலையை செய்' எனக்கூறி பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டார். 'ஊருக்கு போக வேண்டும்; விட்டுவிடு' என, கெஞ்சியும், பாஸ்போர்ட்டை தராமல், என்னை அடித்துத் துன்புறுத்தினார். ஏதாவது செய்து விடுவரோ என பயந்து, தங்கியிருந்த இடத்தில் இருந்து வெளியேறி விட்டேன். ரத்தினசாமியின் மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது. அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. சுற்றுலா விசாவில் தான் என்னை மலேசியா அழைத்து வந்தார். ஒரு மாத சுற்றுலா விசா முடிந்து விட்டது.

முறையீடு:

விசா இல்லாவிடில், போலீசார் பிடித்துக் கொள்வரோ என பயந்து, அங்கும், இங்கும் அலைந்து கொண்டுஇருக்கிறேன். இங்குள்ள, இந்திய தூதரகத்துக்குச் சென்று முறையிட்டேன். அரசு விடுமுறை, 5ம் தேதி வரை இருப்பதால், 6ம் தேதி வருமாறு கூறி அனுப்பி விட்டனர். இப்போது, என்ன செய்வது எனத் தெரியவில்லை. இவ்வாறு, அருண்பிரசாத் கூறினார்.

அரசு சொல்வது என்ன?


இப்பிரச்னை குறித்து, தமிழ்நாடு அயல்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகம் கூறியதாவது:

* பதிவு செய்யப்பட்ட ஏஜன்ட்கள் மூலம், வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும்.
* வெளிநாடு செல்வது குறித்து, கிராம நிர்வாக அலுவலரான வி.ஏ.ஓ.,விடம் பதிவு செய்ய வேண்டும்.

இந்த விஷயங்களை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். இவை எதையும் பின்பற்றாமல், பணத்தைக் கொடுத்து ஏமாறுவோர் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. இவ்வாறு, அந்த அலுவலகம் சார்பில் கூறப்பட்டது.

தந்தை கதறல்:

இப்பிரச்னை குறித்து, சிவகாசியில் உள்ள அருண் பிரசாத்தின் தந்தை, ராஜா கனி கூறியதாவது: கீதா, எங்கள் பக்கத்து வீட்டில் தான் இருக்கிறார். அவரை கேட்டபோது, 'ரத்தினசாமியை என்னாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரிடம் பேசினால், விவரம் சொல்கிறேன்' என்கிறார். மகனை மீட்டுத் தருமாறு, போலீசில் புகார் செய்ய உள்ளேன். இவ்வாறு, ராஜா கனி கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

தலையங்கம் :தேர்வில் 'பிட்' கலாசாரம் தமிழகத்தில் வந்தது எப்படி?

பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து விட்டன. தமிழகத்தில், 8.6 லட்சம் பேர் இத்தேர்வை எழுதியுள்ளனர். இந்த தடவை பீகாரைப் போல பெருமளவில் காப்பி அடிக்கவில்லை என்ற ஆறுதல் இருந்தாலும், சில சம்பவங்கள்
தமிழகத்தை அதிரச் செய்தன. இந்த ஆபத்தான கலாசாரம் எப்படி வந்தது? இதை முற்றிலும் நீக்க முடியுமா என்பதற்கும் விடை
காண்பது சிரமம்.
சமீப காலங்களில், தேர்வு முடிவுகளில், அதிக உச்சத்தை தொடவைக்கும் முயற்சிகளில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் அதிகரித்து வருகின்றன. இவர்கள் மாணவ, மாணவியரை தேர்வுக்கு, இயந்திர கதியில் அதிக அளவில் இயங்க வைக்கின்றனர்.சமீபத்தில், 'வாட்ஸ் அப்' மூலம் வினா-விடை விவரங்களை தந்த அதிர்ச்சி தகவல் வந்த பின், பல விஷயங்களை, முன்னாள் ஆசிரியர்கள் தமிழகத்தில் வெளிப்படையாக பேசுகின்றனர். பிளஸ் 2 தேர்வில், 'கொள்குறிவகை'யில் 30 மதிப்பெண்களுக்கான வினாக்களுக்கு, ஏற்கனவே மாணவர்கள் சில தவறான உத்திகளை பின்பற்றும் வழக்கம், சில பள்ளிகளில் இருப்பதாக கூறப்படுகிறது.
தேர்வு எழுதும் அறையில், நன்கு படிக்கும் தலையாய மாணவர் ஒருவர் அல்லது மாணவி, இக்கேள்விகளுக்கு ரகசிய சமிக்ஞை மூலம் மற்றவர்களுக்கு தகவல் சொல்லும் வழக்கம் இருக்கிறதாம்.தலையை தொட்டால், 'ஏ' என்ற விடை, மூக்கைத் தொட்டால், 'பி' சரியானது என்று சமிக்ஞை மூலம், 'பிட்' பாணிக்கு முன்னோட்டமாக இந்த முறை இருக்கிறதாம். இதை தேர்வு கண்காணிப்பாளர் எப்படி தடுக்க முடியும்?கல்வி ஒரு வியாபாரமாக ஆன அடையாளத்தின் ஒரு கூறு இது என்று பலரும் கூறலாம்.'வாட்ஸ் அப்' மூலம் பரவிய கலாசாரத்தை, இனி அரசு அனுமதிக்காது என்று சட்டசபையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, இம்மாதம், 20 தேதிக்குள் முடிந்து விடும் என்றும், அதற்குப்பின் வெளிவரும் முடிவுகளில், அதிகம் பேர்
ரேங்க் பட்டியலில் முன்னணியில் நிற்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் மற்றொரு நல்ல அம்சமாக, புதிய சூழ்நிலை வரும் அறிகுறிகள் காணப்
படுகின்றன.தமிழகத்தில் அதிகமாக உள்ள பொறியியல் கல்லூரிகளில் நன்கொடை மற்றும் அதிக
கட்டண வசூல் இத்தடவை குறையும் என கூறப்படுகிறது. காரணம், முன்னணி
கல்லூரிகள் கூட, சில துறைகளில், முழு அளவில் இடங்களை நிரப்ப முடியவில்லை.
மேலும் பல கல்லூரிகளில் குறிப்பிட்ட துறைகளுக்கான ஆசிரியர்கள் முனைவர் பட்டம் மற்றும் அதிக அனுபவத் தகுதி பெற வேண்டிய நிலை முற்றிலும் உருவாகவில்லை. அதிலும் சீர்திருத்தம் வரவேண்டும்.அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரா மற்றும் மத்திய கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் போட்டி போடும் சூழ்நிலை, உயர்நிலைக் கல்வி நிறுவனங்களுக்கு இருக்கிறதா என்று எடைபோடும் காலம் வருகிறது. வேலைவாய்ப்பு தரும் கல்வி எது என்று ஆராயும் வகையில் சமுதாயம் சிந்திப்பது நல்ல அறிகுறி. அதை நோக்கி உயர் கல்வி சீராகப் போகிறது என்பதும் நல்ல அடையாளமாகும்.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி: வீடு தேடி வரும் அலுவலர்கள்

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்காக விவரங்களைப் பெற வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு தேடி வருவார்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் நோக்குடன் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த மார்ச் 3-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்தத் திட்டத்தின் படி வாக்காளர்களிடம் இருந்து வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் எண், செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்கள் பெறப்படும். தகவல்களைப் பொதுமக்கள் தாமாக முன்வந்து மக்கள் சேவை மையம், இணையதளம், சிறப்பு முகாம்கள் போன்றவற்றில் அளிக்கலாம்.
அதேவேளையில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் வாக்காளர்களின் வீடு தேடி வந்து விவரங்களைப் பெறுவார்கள். அப்போது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை ஒரே பக்கத்தில் நகல் எடுத்துத் தர வேண்டும். அலுவலர்கள் வீடு தேடி வரும் போது கால தாமதத்தைத் தவிர்க்க முன்கூட்டியே பொதுமக்கள் நகல் எடுத்து தயாராக வைத்திருக்க வேண்டும்.
ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான மனுக்கள் குறித்து சந்தேகங்களுக்கு பிரதி திங்கள், புதன்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரிகளைச் சந்தித்து விளக்கம் பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஏற்கெனவே வீடு வீடாகச் சென்று விவரம் பெறும் பணியைத் தொடங்கிவிட்டனர். ஆதார் எண் இல்லாதவர்கள், ஆதார் அட்டை எடுக்கும்போது வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆவின் கால் லிட்டர் பாக்கெட் பால்: இன்று முதல் விற்பனை

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கால் லிட்டர் (250 மி.லி.) அளவு கொண்ட பாக்கெட் பால் சென்னை மாநகர் முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் விற்பனைக்கு கிடைக்கும் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 26.50 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. சென்னையிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 11.67 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.
இவற்றில் ஆவின் பால் மாதாந்திர அட்டைகள் மூலம் சுமார் 7.5 லட்சம் லிட்டரும், மொத்த விநியோகஸ்தர்கள் மூலம் 4.17 லட்சம் லிட்டரும் விநியோகம் செய்யப்படுகின்றன.
தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலை விட குறைந்த விலையில், தரமான முறையில் கிடைக்கும் என்பதால் ஆவின் பாலை பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.
சந்தையில் தற்போது 4 வகையான பாலில், 500, 1,000 மி.லி. கொள்ளளவு கொண்ட பாலை ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
பிப்ரவரியில் அறிமுகம்:
இந்த வரிசையில், நிகழாண்டில் பிப்ரவரியில் பொதுமக்கள் வசதிக்காக 250 மி.லி. அளவு கொண்ட பாக்கெட் பால் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டது. ஆவின் நிறுவனம், சென்னை மாநகரில் ஒவ்வொரு பகுதியாக கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனையை விரிவுப்படுத்தி வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்.3) முதல் சென்னை மாநகர் முழுவதும் கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனை செய்யப்படும் என ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆவின் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நிலைப்படுத்தப்பட்ட பால் வகையில் (பச்சை நிறம்) 250 மி.லி. அளவு கொண்ட பாக்கெட் பால் விற்பனை பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. சென்னையில் முதல் கட்டமாக ராயபுரம், எண்ணூர், திருவொற்றியூர், வண்ணாரப் பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப் பேட்டை போன்ற வடசென்னைக்கு உட்பட்ட பகுதிகளிலும், வேப்பேரி, பெரம்பூர், கொளத்தூர், விருகம்பாக்கம், அசோக் நகர் போன்ற பகுதிகளில் 2-ஆவது கட்டமாகவும் கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனை விரிவுபடுத்தப்பட்டது.
மாநகர் முழுவதும் விற்பனை:
பரிசோதனை முயற்சியாக, நாளொன்றுக்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பாக்கெட்டுகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. ஒரு பாக்கெட்டின் விற்பனை விலை ரூ.11 ஆகும். இதற்கு நுகர்வோர் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆகையால், வெள்ளிக்கிழமை முதல் சென்னை மாநகர் முழுவதும் 250 மி.லி. கொள்ளளவு கொண்ட பாக்கெட் பால் விற்பனை செய்யப்படும்.
ஆவின் விற்பனையகம், ஆவின் பாலகங்களில் கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனைக்கு கிடைக்கும். அதைத் தொடர்ந்து, ஓரிரு வாரங்களில் சில்லறை விற்பனை கடைகளிலும், முகவர்கள் வாயிலாகவும் கால் லிட்டர் பாக்கெட் பால் விற்பனைக்கு கிடைக்கும் என்றார் அவர்.

தாமதங்களைத் தவிர்க்க முடியும் ....By க.ப. அறவாணன்

 Dinamani

கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.
  
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வருகை புரிந்த சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ நாடு திரும்பியவுடன், செய்தியாளர்களின் வினாக்களுக்கு விடையளித்தபோது, இந்திய நிர்வாக முறை நம்மால் புரிந்துகொள்ள முடியாத ஒன்று என்று சொல்லிச் சிரித்தார்.
சிங்கப்பூர் சென்றவர்களுக்குத் தெரியும் 1965 வாக்கில் சுதந்திரம் பெற்று மலேசியாவில் இருந்து தனி நாடாகப் பிரிந்த சிங்கப்பூர் தொடக்கக் காலத்தில் தொழிலாளர்களின் கலவர பூமியாக இருந்தது. தொழிலாளர் அமைதியின்மை, வேலையின்மை ஆகியன அந்த நாட்டை வாட்டி வதைத்தன. முதல் பிரதமராகப் பொறுப்பேற்ற லீ பத்தே ஆண்டுகளில் இரண்டு முக்கியமான சிக்கல்களைத் தீர்த்தார்.
குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத அந்த நாட்டில் குடிநீர் வேண்டுகிற அளவு கிடைக்க வழி செய்தார். மலேசியாவில் இருந்து இடையில் உள்ள கடல் மேல், குழாய் அமைத்து சிங்கப்பூரில் வந்து தண்ணீர் கொட்டும்படி செய்தார். இப்போது நம் நாட்டில் நீக்கமற நிறைந்திருக்கும் கொசுக்களின் படையெடுப்பு அங்கும் இருந்தது. அவற்றை ஒழிக்க நவீன நடவடிக்கை எடுத்தார். நீங்கள் அங்கு சென்றால், கொசுக் கடி என்றால் என்ன என்று கேட்கும்படியாக இருக்கும்.
வீடு கட்ட நிலம் இல்லாத நாட்டில், 15 அடுக்கு, 20 அடுக்கு என்று அடுக்கு வீடுகளைக் கட்டினார். இந்த வீடுகளில் 24 மணி நேரமும் இயங்கும் மின்தூக்கி (லிஃப்ட்) வசதிகள். கொசு மருந்து அடிக்கிற நகராட்சி ஊழியர் வீடுவீடாக வந்து வீட்டில் ஈரம் ஒதுங்கும் இடங்களிலும் கழிவறைகளிலும் மருந்து அடித்துச் செல்வதைக் காணலாம்.
நிர்வாகத்தில் சொல்லவே வேண்டாம், அவ்வளவு வேகம். சிங்கப்பூர் தொலைக்காட்சியோ, வானொலியோ உங்களை அழைக்குமானால், உங்கள் நிகழ்ச்சி பதிவாகி நீங்கள் வெளியே வரும்போது கையில் காசோலையை நீட்டுவார்கள். இப்படியெல்லாம் எப்படி முடிகிறது?
நான் ஐந்தாண்டுகள் பிரெஞ்சு காலனி நாடான செனகலில் பணியாற்றினேன். அந்த நாட்டின் அதிபர் செங்கோர் அழைப்புக்கு இணங்க, அங்கு உள்ள டக்கார் பல்கலைக்கழகத்தில் மானிட இயல் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினேன்.
இந்தியாவுக்கும் சென்னைக்கும் வந்து சென்றவர். இந்தியப் பழக்கவழக்கங்களுக்கும் ஆப்பிரிக்கப் பழக்கவழக்கங்களுக்கும் ஆதி காலம் முதல் தொடர்பு இருந்தது என்பதை ஆராய்ச்சிப்பூர்வமாக அறிந்தவர், நம்புகிறவர். அவருடன் எனக்குக் கடிதத் தொடர்பு அடிக்கடி நிகழும். நான் கடிதம் எழுதிய அதே நாள் மாலையிலோ அல்லது அடுத்த நாளிலோ விடை மடலை எடுத்துக்கொண்டு அதிபர் அலுவலக மோட்டார் சைக்கிள் நம் வீட்டுக்கு வந்துவிடும்.
அவ்வளவு விரைவாக இயங்க முடிந்தது, இயங்க முடிகிறது. இதே வேகம் நம் நாட்டில் நிகழ்வதில்லையே, ஏன்?
உடனடியான விடை, ஆங்கிலேயர் காலத்தில் நம் மேல் அவநம்பிக்கையால் அவர்கள் அறிமுகப்படுத்திய நிர்வாக முறை, அப்படியே அட்சரம் பிசகாமல் நீடிப்பதுதான். அதுவே நாம் தற்போது கடைப்பிடித்து வரும் சிவப்பு நாடா முறை.
நம் அரசாங்க அலுவலகங்களுக்குச் சென்றால், அங்கே உள்ள அலுவலக மேஜை ஒவ்வொன்றிலும் பத்துக்குக் குறைவில்லாத கோப்புகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கோப்பையும் அட்டையால் சாத்தி, சிவப்பு நாடா கொண்டு முடிந்து வைத்திருப்பார்கள்.
அலுவலர் ஒவ்வொன்றாகப் பிரித்து, கோப்பைப் பார்த்து அவரது கையொப்பத்தைத் தன்னுடைய கருத்தோடு பதிவு செய்வார். அந்தக் கோப்பை நாம் உற்றுப் பார்த்தால், ஒரு 10, 15 கையெழுத்துகள் சில குறிப்புகளுடன் அமைந்திருக்கும்.
கோப்பை முதலில் வாங்கிய எழுத்தர், தலைமை எழுத்தர், அதற்கு மேல் உள்ள கண்காணிப்பாளர், அவருக்கு மேல் உள்ள உதவிப் பதிவாளர், அவருக்கு மேல் உள்ள துணைப் பதிவாளர் ஆகியோர் கையெழுத்தோடும், குறிப்புகளோடும் பதிவாளர் மேஜைக்கு அடுக்கடுக்காக வந்து சேரும்.
அடுத்து அந்தக் கோப்பைப் பார்க்கிறவர், அதில் எழுதப்பட்ட அனைவருடைய வாசகங்களையும் படித்து முடிவெடுக்க வேண்டும். ஒரு கோப்பு கீழேயிருந்து மேல் அதிகாரிக்கு வந்து சேர நாள் கணக்கும் ஆகும். மாதக் கணக்கும் ஆகும். சில சமயம் ஆண்டுக் கணக்கும் கூட ஆகும்.
பல்கலைக்கழகத்தை ஆளும் பல்கலைக்கழக நல்கைக் குழு (யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் - யு.ஜி.சி.) தில்லியில் உள்ளது. நான் துணைவேந்தர் பொறுப்பில் இருந்தபோது, அங்கிருந்து பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்து முடியாமலும், அங்கிருந்த வரவேண்டிய காசோலையை எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாமலும் நேரே செல்வோம். முதலில் நமது கோப்பு எங்கே இருக்கிறது, எந்தப் பிரிவில் இருக்கிறது, எந்த மேஜையில் இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும்.
யு.ஜி.சி. ஒரு சிறிய கட்டடமன்று. பல அடுக்குமாடிகளைக் கொண்ட கட்டடம். கோப்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்த பிறகு தேடி எடுத்துப் பார்ப்பார், உரிய கையெழுத்து ஆகிவிட்டதா என்று. சில சமயம் ஆகியிருக்கும், பல சமயம் ஆகியிருக்காது. அப்பொழுது நாமே கெஞ்சிக் கூத்தாடி உரியவரிடம் கையெழுத்துப் பெற்று நமக்குக் காரியம் ஆக வேண்டும் என்றால், அடுத்து செல்ல வேண்டிய ஒவ்வொரு பிரிவுக்கும் கோப்பை நாமே எடுத்துச் சென்று கையெழுத்துப் பெற்று வருவதற்கு நாள் முழுக்க ஆகிவிடும்.
கடைசியில் வெற்றியோடும் திரும்புவோம். பின்னர் வாருங்கள் என்ற அன்பு வார்த்தையோடும் திரும்புவோம். காசோலைகள் கூட தேங்கி விடுவதுண்டு.
நம் நாட்டில் பல்கலைக்கழக பி.எச்டி. ஆராய்ச்சிகள் நிகழுகின்றன. பதிவு செய்திருப்பவர் தம் ஆய்வேட்டைச் சமர்ப்பித்து, தேர்வாளரிடமிருந்து சாதகமான அறிக்கைக்காகக் காத்திருக்க வேண்டும். இந்தக் காத்திருப்பு ஓராண்டு முதல் மூன்றாண்டு வரை நீடிக்கும்.
டாக்டர் மால்கம் ஆதிசேஷையா காலத்தில் பி.எச்டி. பட்டம் பெறுவதற்கு முன்பு வாய்மொழித் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது. இது பிரான்ஸ் பல்கலைக்கழகங்களில் உள்ள நடைமுறை. இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
மூன்று தேர்வாளரிடமிருந்து அறிக்கைகள் வந்தபின் 15 நாள் இடைவெளி வைத்து வாய்மொழித் தேர்வு நடத்தப்பெறும். புறத்தேர்வாளர் ஒருவர் அழைக்கப்பெற்றுத் தேர்வை நடத்துவார். கேள்விகள் கேட்பவர்களுக்கு ஏற்ற விடையை ஆய்வாளர் அளித்தால், புறத்தேர்வாளர் இவருக்குப் பல்கலைக்கழகம் பி.எச்டி. பட்டம் வழங்கலாம் என்று பல்கலைக்கழகத்துக்குப் பரிந்துரை செய்வார்.
இந்தப் பரிந்துரை பெறப்பெற்று மூன்று தேர்வாளருடைய பரிந்துரைகளும், அவற்றுக்கு உரிய கோப்புகளும் ஆராய்ச்சி நிர்வாகப் பிரிவைத் தாண்டி, உதவிப் பதிவாளர், துணைப் பதிவாளர், பதிவாளர் ஆகியோரையும் கடந்து துணைவேந்தருக்கு வந்து சேரும். துணைவேந்தர் கோப்பைப் பார்த்துக் கையெழுத்து இட்ட பின்னர், இக்கோப்பு வந்த வழியே திரும்பி வரும்.
இதனை அடியொற்றி உரிய பிரிவு ஆய்வாளருக்கு பி.எச்டி. பட்டம் வழங்கலாம் என்பதைப் பல்கலைக்கழகம் ஏற்றுக்கொண்டது என்று தெரிவிப்பார். இது நடந்து முடிவதற்கு மாதக் கணக்காகும்.
எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் இந்த முறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனைத் தவிர்க்க மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தினோம். புறத்தேர்வாளர் முன்னிலையில் வாய்மொழித் தேர்வு நடத்தப்பெறும். தேர்வு முடிந்து புறத்தேர்வாளர் உரிய ஆய்வாளர் பட்டத்துக்குத் தகுதி உடையவர் என்று அறிவிக்கும்போதே அந்த மேடையிலேயே பி.எச்டி. சான்றிதழைத் தாற்காலிகமாக (புரொவிஷன்) வழங்க ஏற்பாடு செய்தோம். அத்தனை பேரும் வரவேற்றனர்.
ஆனால், இதனை அறிமுகப்படுத்திய துணைவேந்தர் பணிக் காலம் முடிந்த பிறகு இந்த முறை கைவிடப்பட்டது. காரணம் என்ன? நிர்வாக எதிர்ப்பு. மீண்டும் பழைய முறையிலேயே ஒவ்வொரு மேஜை, மேஜையாக கோப்பு பயணம் செய்தது.
நமது காலதாமதத்துக்குத் தனிப்பெரும் காரணம் முடிவெடுக்க அதிகாரம் இல்லாத அமைப்புகள்தான். நம்முடைய அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படாமல் தலைமையை நோக்கிக் குவிக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக, ஒவ்வொரு கோப்பும் நெடும்பயணம் மேற்கொள்ளும்போது தாமதம் தவிர்க்க முடியாததாகிறது.
அதிகாரத்தைப் பரவலாக்கி, முடிவெடுப்பதை கீழே உள்ளவர்களுக்கும் பிரித்துக் கொடுத்து, அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பேற்கும்படி செய்தால் நம் நிர்வாகம் சீர்பெற வாய்ப்புண்டு. தற்போது செல்லிடப்பேசி அறிமுகம் ஆகிவிட்ட நிலையில், செல்லிடப்பேசியிலேயே பல தகவல்கள் பரிமாறிக்கொள்ளப் பெறுகின்றன.
மின்னஞ்சல், நெடுந்தொலைவை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டது. இதைப் பயன்படுத்திக் கொள்கின்ற நிர்வாக முறையை நம்மவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
குறித்த நாளில் குறித்த நேரத்தில் செய்து முடிக்கும் பழக்கம் நம்மிடம் பொதுவாக இருப்பதில்லை. ஆனால், இந்தக் கால தாமதம் எல்லாவற்றிலும் நிகழ்வதில்லை.
சான்றாக, குறித்த நாளில், குறித்த நேரத்தில் ஒரு நொடி கூடப் பிசகாமல் திருமணத்தில் தாலி கட்டப்படுகிறது. திருமண நிகழ்ச்சிகள் நிகழுகின்றன. கோயில் அபிஷேகங்கள் நிகழுகின்றன. இவற்றையெல்லாம் குறித்த நேரத்தில் ஒரு கணம் கூடப் பிசகாமல் கடைப்பிடிக்கும் நமக்குக் கடமைகளைக் கடைப்பிடிக்க முடியாதா என்ன? முயற்சியிருந்தால் முடியும்.

சட்டம் போட்டால் ஆயிற்றா?

இரண்டு பேரின் மரணத்துக்கு காரணமான ஒரு சாலை விபத்தில் வாகனத்தை ஓட்டிய நபருக்கு கீழமை நீதிமன்றம் அளித்த ஓராண்டு சிறைத் தண்டனையை, பஞ்சாப் நீதிமன்றம் 24 நாள்களாக குறைத்ததை உச்சநீதிமன்றம் இரு நாள்களுக்கு முன்பு ரத்து செய்தது. 

இந்திய குற்றவியல் சட்டம் 304ஏ-இன் கீழ் தண்டனை வழங்கும் நடைமுறைகள் மீள்பார்வை செய்யப்பட வேண்டும், இந்த சட்டப் பிரிவு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவிக்கின்றோம் என நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 304ஏ-இன் படி, ஒரு நபர் தனது கவனக்குறைவினால் ஏற்படுத்தும் மரணத்துக்காக அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் என்பது மட்டுமே தண்டனையாக இருக்கின்றது. இந்த சட்டப் பிரிவை அனைத்து வகையான சாலை விபத்துகளுக்கும் பொருத்துவது முறையல்ல என்பதைத்தான் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

வாகன விபத்துகளில் உயிரிழப்பை ஏற்படுத்தும் பணக்காரர்களும் வலியோரும் குறைந்த தண்டனையுடன் தப்பித்துவிடுகிறார்கள்; கடுமையான தண்டனை கிடைக்கச் செய்வதற்கான சட்ட நடைமுறைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
2007-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், நடிகர் சல்மான் கான் அதிவேகமாக காரை ஓட்டி, சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது காரை ஏற்றியதில் இரண்டு பேர் இறந்த விவகாரம், இன்னும்கூட முடிவுக்கு வராமல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவரும் சூழலில், பணக்காரர்களும் வலுத்தவர்களும் குறைந்த தண்டனை பெற்று தப்பிவிடுகிறார்கள் என்று நீதிமன்றம் கூறியிருப்பதை எண்ணிப்பார்க்க வேண்டியிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் கருத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த களம் இறங்கியிருக்கிறது மத்திய அரசு. சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பான பயண மசோதாவை, மக்கள் கருத்துக்கேட்பு முடிந்த நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் கருத்துக் கேட்புக்காக அனுப்பியிருக்கிறது மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம்.
இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம் மது அருந்தி வாகனம் ஓட்டுதல்தான். ஆகவே, இந்த மசோதாவில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவருக்கு அபராதம், தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டம் 1988-இல் விதிக்கப்பட்டுள்ள அபராதம், தண்டனையைக் கடுமையாக மாற்றியுள்ளனர். 

தற்போதைய நடைமுறைப்படி, ஒருவர் மது அருந்தியிருந்தார் என்பதற்கு, அவரது 100 மில்லி கிராம் ரத்தத்தில் 30 மில்லி கிராம் மது இருக்க வேண்டும். புதிய மசோதா இந்த அளவை, 100 மில்லி கிராம் ரத்தத்தில் 20 மில்லி கிராமுக்கு அதிகமாக இருந்தாலும் அவர் மீது மது அருந்தி வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்ய வகை செய்கிறது. தண்டனையும் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகன ஓட்டுநர் என்றால், முதல்முறை குற்றத்துக்கு ரூ.5,000 அபராதம், 50 மணி நேர சமூக சேவை (கம்யூனிட்டி சர்வீஸ்) அல்லது 6 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து என்றும், தொடர்ந்து அதே குற்றத்தைச் செய்தால் ரூ.10,000 அபராதம், ஓட்டுநர் உரிமம் ஓராண்டுக்கு ரத்து என்றும் மாற்றப்பட்டிருக்கிறது. 

இதுவே கார், பேருந்து போன்ற நான்கு சக்கர வாகன ஓட்டுநர்கள் முதல் முறையாகப் பிடிபட்டால், ரூ.10,000 அபராதம், 6 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து என்றும், தொடர்ந்து அதே தவறைச் செய்து பிடிபட்டால் ரூ.20,000 அபராதம், 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை, ஓராண்டுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து என்றும் மாற்றப்பட்டிருக்கிறது.
எந்த மாநிலமும் இதற்கு ஆட்சேபணை தெரிவிக்காது என நம்பலாம். இதனை இன்னும் கடுமையாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

ஆனால், காவல் துறையினர் இந்தக் கடும் சட்டத்தை வெறும் லஞ்சம் பெறுவதற்கான மற்றொரு "சலுகைச் சட்டமாக' மாற்றிக்கொண்டால் குடிமகன் தப்பிப்பதும், இந்தியக் குடிமகன் இறப்பதும் தொடர் கதையாகவே இருக்கும். ஓட்டுநர்கள் மது அருந்தி வாகனம் ஓட்டும் வழக்கத்தை கடுமையான நடவடிக்கையால் தடுத்து நிறுத்த முடிந்தால் மட்டுமே, அதன் தொடர் நிகழ்வாகிய விபத்து மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். ஆகவே, இந்தச் சட்டம் உயிர்ப்புடன் இருப்பதும் இல்லாததும் காவல் துறையின் அணுகுமுறையில்தான் உள்ளது. 

இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான விபத்துகளில் வாகன ஓட்டுநர் மது போதையில் இருந்தார் என்பது மறைக்கப்படுகிறது. இதற்காகப் பெருந்தொகை லஞ்சமாகத் தரப்படுகிறது. இதில் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு கிடையாது. ஏழை என்றால் லஞ்சத்தின் அளவு குறையும். பணக்காரர் என்றால் லஞ்சத்தின் அளவு கூடும் என்பதாகத்தான் நிலைமை இருக்குமென்றால், இந்தச் சட்டத்தைக் கடுமையாக்கினாலும் பயன் விளையாது. 

குறைந்தபட்சமாக, மரணம் ஏற்படுத்திய விபத்துகளிலாகிலும் ஓட்டுநரின் ரத்த மாதிரிகளை எடுப்பதை காவல் துறை மட்டுமன்றி, வேறு அதிகாரிகளின் மேற்பார்வையிலும் நடத்தலாம். வேறு தடயங்கள், விடியோ பதிவுகள் மூலம் அந்த ஓட்டுநர் மது அருந்தியிருந்ததை காவல் துறையும் அதிகாரிகளும் மறைத்தார்கள் என்பது உறுதிப்படும்போது அவர்களைத் தண்டிக்கும் வெளிப்படைத்தன்மையும் உருவாக வேண்டும்.

நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் மது விற்பனை, மதுக்கூடம் இருக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தும்கூட இதுநாள்வரை அது நடைமுறைக்கு வரவில்லை. நிலைமை இதுவென்றால், பணக்காரர்களும் வலுத்தவர்களும் சட்டத்தின் பிடியிருந்து தப்பிக்கத்தான் செய்வார்கள்!

என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு மாணவ–மாணவிகள் கண்ணியமாக உடை அணிந்து செல்ல வேண்டும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி பேட்டி

என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு மாணவ–மாணவிகள் கண்ணியமாக உடை அணிந்து செல்லவேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரி கூறினார்.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 580–க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., பி.ஆர்க்., எம்.ஆர்க். உள்ளிட்ட படிப்பை ஏராளமான மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். மொத்தத்தில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள். அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்து அண்ணா பல்கலைக்கழகம் நிர்வாகம் செய்து வருகிறது.
இவர்களுக்கு உடை கட்டுப்பாடு குறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
கண்ணியமாக உடை அணிய வேண்டும் உடை கட்டுப்பாடு மாணவ– மாணவிகளுக்கு மிக தேவையான ஒன்று. இதை அந்தந்த கல்லூரி டீன்கள் கண்காணித்து வருகிறார்கள். இதுவரை மாணவர்களின் ஆடை கட்டுப்பாடு குறை குறித்து புகார் எதுவும் வரவில்லை. மாணவ– மாணவிகள் கல்லூரிகளுக்கு கண்ணியமாக உடை அணிந்து செல்ல வேண்டும்.
மாணவராக இருந்தால் டி–சர்ட், பனியன் ஆடை அணியக்கூடாது. முழுக்கால் சட்டை, சட்டை அணிந்து வரலாம். மாணவிகள் ஜீன்ஸ் பேண்ட், டி.சர்ட், பனியன் ஆடை, கை இல்லாத ரவிக்கை ஆகியவை அணியக்கூடாது. மாறாக சேலை அணியலாம். சுரிதார் அணிந்து வரலாம். மொத்தத்தில் கண்ணியமாக உடை அணிந்து செல்ல வேண்டும். இப்படித்தான் பெரும்பாலான கல்லூரிகளில் நடைமுறையில் உள்ளது.
செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செல்போன்கள் இன்றைய காலக்கட்டத்தில் அவசியம்தான். கல்லூரிகளுக்கு செல்போன் கொண்டு வரலாம். ஆனால் வகுப்புக்கு செல்லும் முன் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். வகுப்பு முடிந்த பின்னர் செல்போனை ஆன் செய்து கொள்ளலாம். உடைகளையும், செல்போன்களையும் டீன் மற்றும் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

Medical PG student dies by suicide

Medical PG student dies by suicide  26.07.2026 Hyderabad: A 29-year-old postgraduate medical student died after allegedly jumping from the t...