Monday, September 7, 2015

பெண் எனும் பகடைக்காய்: பெருகும் பொம்மைக் கல்யாணங்கள்

Return to frontpage


கட்டுரையாளர்:  பா.ஜீவசுந்தரி

ஒரு சமுதாயத்தைப் பிடித்து இழுத்து வைத்திருக்கும் பத்தாம் பசலித்தனமான பழக்க வழக்கங்களை ஒழிக்க நாற்பது ஐம்பது ஆண்டுகள்கூட ஆகின்றன. அப்படியும் தீண்டாமை போன்ற பழக்கங்களை இன்னமும் நம்மால் ஒழிக்க முடியவில்லை. ஆனால், பெரும் பாடுபட்டு உருவாக்கிய சில முன்னேற்றங்கள் அற்பமான செயல்களால் சிதைக்கப்படும்போது ஒரு தலைமுறை வாழ்க்கையே பின்னுக்கு இழுக்கப்படுகிறது.

தீண்டாமை ஒழிப்பு, விதவை விவாகம், பெண் கல்வி, பால்ய விவாகங்களைத் தடுத்து நிறுத்துதல் என நூறாண்டுகளாகப் போராடி உருவாக்கப்பட்ட சீர்திருத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைக்கப்படுகின்றனவோ என்ற அச்சம் அடி வயிற்றைக் கலக்குகிறது.

உதாரணமாக, சமீப காலங்களில் சிறு நகரங்களிலும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் நடக்கும் ஒரு கூத்து இது. 14 வயது தொடங்கி 16 வயதுக்குள்ளேயே சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுவதைக் கேள்விப்படுகிறோம். சட்டப்படி இது குற்றம் என்பது அனைவருக்கும் தெரியும். என்றாலும், சட்ட மீறல்கள் சர்வ சாதாரணமாக நிறைவேறுகின்றன. பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருக்கும் சிறுமிகளை அவர்களின் படிப்பை பாதியில் நிறுத்தி ஏன் இப்படி குடும்பச் சங்கிலிக்குள் பிணைத்துக் கட்டுகிறார்கள்?

குடும்பத்தின் கவுரவ சின்னம்?

ஒட்டுமொத்தக் குடும்பத்தின் கவுரவமும் பெண் குழந்தையின் மீதுதான் எழுதப்பட்டுள்ளதாக ஒரு பிம்பம் கட்டப்படுகிறது. ஆண் குடிக்கலாம்; கூத்தடிக்கலாம்; அதனால் குடும்ப கவுரவம் காற்றில் பறந்து விடாது. ஆனால் பெண் கல்வி கற்றால், நாலு எழுத்து படித்தால், சமூகத்தில் பொறுப்புகளைச் சுமந்தால் கவுரவம் காற்றில் பறந்துவிடுமாம். “நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள். கழுதையைக் காலாகாலத்தில் கட்டி வைத்துவிட்டால் நம்ம பொறுப்பு கழிந்தது” என்ற எண்ணம் இன்றைக்கும் பெற்றோரிடம் நிலவுவது வியப்பளிக்கிறது.

பள்ளியில் படிக்கும்போதே திருமணம் செய்து வைக்க முயலுகிறார்கள். இத்தகைய திருமணம் காதும் காதும் வைத்தவாறு நடப்பதாகக் கூறப்படுகிறது. பெற்றோரே நடத்தி வைக்கும் ரகசியத் திருமணங்களாகத்தான் இவை நடைபெறுகின்றன. இதை மீறிச் சட்டத்தின் பிடிக்குள் அகப்பட்டுத் தடுக்கப்படும் குழந்தைத் திருமணங்களே செய்தியாகி நமக்குத் தெரியவருகின்றன. இதைவிட அதிகமான திருமணங்கள் வெளியுலகம் அறியாமலேயே நடந்து முடிகின்றன.

இவ்வளவுக்கும் திருமணம் நடைபெறும் கோயில்கள், திருமண மண்டபங்கள் இங்கெல்லாம் திருமணம் நடத்துவதற்காக இடத்தை உறுதி செய்ய வரும்போதே மணப்பெண்ணின் வயதுச் சான்றிதழை அளிக்க வேண்டும் என்பது தெளிவாக அறிவுறுத்தப்படுகிறது. இவை அல்லாமல் கிராமங்களில், சின்னச் சின்னக் கோயில்களில் வைத்துத் தாலி கட்டப்படும் திருமணங்கள்தான் சட்ட மீறலாக நடைபெறுகின்றன. உள்ளூர் அளவில் உறவினர்கள் மத்தியில் நடைபெறும்போது யாரும் இதைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.

தங்கள் வசதிக்கேற்ப மணமகனைத் தேர்ந்தெடுத்துத் திருமணத்தையும் முடிக்கிறார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் என்றால் அவர்கள் அனைவரின் பாடும் பெரும்பாடுதான். அதிலும் மூத்த பெண் மிகவும் பாவப்பட்டவள். அந்தப் பெண் பிரசவத்திலோ வேறு காரணங்களாலோ மரணமடைந்தால், இரண்டாவது பெண்ணையும் அந்த நபருக்கே மனைவியாக்குவதும் அடுத்த கட்ட நடைமுறை. குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள என்ற சென்டிமென்ட் முலாம் அதற்குப் பூசப்பட்டுவிடும்.

இளவயது காதல்

இன்றைய நவீன தகவல் தொழில்நுட்பங்கள் பள்ளிப் பருவத்திலேயே காதலையும் நர்சரிப் பள்ளிகள் போல வளர்த்துக்கொண்டிருக்கின்றன. பற்றாக்குறைக்கு நம் திரைப்படங்களும் அதற்குத் தீனி போடுகின்றன. இதனால் பதின் பருவக் காதல் இங்கு தவிர்க்க முடியாத அம்சமாகிறது. இந்த வயதுக்கே உரிய இனக்கவர்ச்சிதான் இது என்பதைப் புரிந்துகொண்டு, அவர்களை நெறிப்படுத்துபவர்களாகப் பெற்றோர் இருந்துவிட்டால் இந்த நிலையிலிருந்து அவர்களை மீட்டுவிட முடியும். அல்லது ‘நல்ல’ ஆசிரியர்களால் இந்தக் காரியத்தைச் செயல்படுத்த முடியும். இல்லையெனில் அந்தக் குழந்தைகள் எந்த விபரீத முடிவையும் நோக்கி நகர்த்தப்படுவார்கள். நாலு பேர் கொண்ட சமூகமே அதை வெற்றிகரமாக நகர்த்தி செயல்படுத்திக் காட்டும்.

இப்போது இன்னொரு ஆபத்து பெரும் பூதமெனக் கிளம்பியிருக்கிறது. சாதி விட்டு சாதி காதலித்துவிட்டால், ‘கவுரவமாக’இருவரில் ஒருவர் காணாமல் போய்விடும் துரதிர்ஷ்டமும் இதில் அடங்கியிருக்கிறது. இதனாலேயே ‘கவுரவம்’ பாதுகாக்கப்பட வேண்டும் என்று தங்கள் மகள்களின் இளம் பருவக் கனவுகளைச் சிதைக்கும் ஆயுதமாகத் திருமணத்தைக் கையிலெடுக்கிறார்கள். பெண் பிள்ளைகளைப் பொறுத்தவரை பள்ளிப் பருவம் என்பது எத்தனை சிக்கல் நிறைந்ததாக இப்போது மாறிப் போயிருக்கிறது?

இந்தச் சூழலில் சில ஆசிரியர்கள் ஆபத்பாந்தவர்களாக இருந்து அவர்களைக் காத்திருக்கிறார்கள். தங்கள் மாணவிகள் யாருக்காவது திருமணம் என்று கேள்விப்பட்டால் உடனடியாகத் தலையிட்டு அதை நிறுத்திவிடுகிறார்கள். சில நேரங்களில் சட்டத்தின் உதவியை நாடவும் அவர்கள் தயங்குவதில்லை.

உரிய வயதை எட்டாத மைனர் பெண் குழந்தைகளுக்குத் திருமணங்களை நடத்துவதில் வழக்கமாக தர்மபுரி மாவட்டம் பேர் பெற்றது. இப்போது அது தென் மாவட்டங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவிக்கொண்டிருப்பது மாபெரும் அச்சுறுத்தல். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் கடந்த மாதம் ஐந்து சிறுமிகளின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

இந்த மாவட்டத்தில் மைனர் பெண்களின் திருமணம் குறித்த புள்ளி விவரக் கணக்கு பகீரென்கிறது. கடந்த 2013-ம் ஆண்டில் 80 திருமணங்களும் 2014-ல் 93 திருமணங்களும் முழுமை பெறாத இந்த 2015-ம் ஆண்டின் எட்டு மாதங்களில் இது வரை 70 திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அப்படியானால் சட்டத்தின் பார்வைக்கு வராத, வந்தும் கண்டுகொள்ளப்படாத திருமணங்கள் இதில் எத்தனை?

சென்னை அரசு மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றும் தோழி ஒருவருடன் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்ததில் மருத்துவ ரீதியாக அவர் அளித்த தகவல்களும் அதிர்ச்சிகரமானவை. உடலளவில் முழு வளர்ச்சி பெறாத இந்தச் சிறுமிகள் கர்ப்பம் தாங்கவோ, பிள்ளை பெறவோ இயலாதவர்கள். அதை மீறி அவர்கள் குழந்தைகளைப் பிரசவிக்கும்போது அதன் பின் விளைவுகளையும் சேர்த்தே அவர்கள் பெற்றெடுக்கிறார்கள் என்றார்.

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

வாசகர் வாசல்: பெண் என்னும் பெரும் சக்தி!..கட்டுரையாளர் தனசீலி திவ்யநாதன்

Return to frontpage

அரை நூற்றாண்டுக்கு முன்னால் பெண்ணுக்குக் கல்வி வாய்ப்பு அத்தனை எளிதல்ல. ‘பேதைமை’ (அறிவின்மை) பெண்ணுக்கு அழகு என கருதப்பட்டது. மெல்ல மெல்ல பால் கணக்கு, கடிதம் எழுதத் தெரிந்தால் நல்லது என்று ஆரம்பக் கல்வி பெண்ணுக்கு அனுமதிக்கப்பட்டது. பெண் பருவம் அடையும்வரை படிக்க அனுப்புவது, உள்ளூரில் உள்ள பள்ளியில் எந்த வகுப்புவரை உள்ளதோ அதுவரை படிக்க அனுப்புவது என்ற நிலை மாறி சில சேவைத் துறைசார் படிப்புகளுக்குப் பெண்கள் கல்லூரிகளுக்கு அனுப்பபட்டனர். பெரும்பாலும் ஆசிரியர் பயிற்சி, செவிலியர் பயிற்சி போன்றவையே பெண்களுக்கான படிப்புகளாக இருந்தன. தொழில்நுட்பம், பொருளாதாரம், அரசியல், பாதுகாப்புத் துறைகள் அவர்களுக்கு மிக அன்னியமான துறைகள். பெண்களின் அதிகபட்ச லட்சியம் ஆசிரியர் அல்லது செவிலியர் ஆவது.

ஏற்றம் தந்ததா கல்வி?

கடந்த இருபது ஆண்டுகளில் ஏராளமான மாற்றங்கள் பெண்களின் வாழ்வில் நிகழ்ந்துள்ளன. இதில் கல்வி பெரும்பங்கை வகிக்கிறது. குழந்தைத் திருமணம் தீவிரமாகத் தடைசெய்யப்பட்டதால், குறைந்தபட்சம் பள்ளி இறுதி வகுப்புவரை வந்த பெண்கள், பின்னர் கல்லூரிகளில் நுழைந்தனர். இதன் விளைவாகப் பெண்கள் ஒருங்கிணைக்கப்பட்ட பொதுத் துறைகளில் நுழைந்தனர். கலைக் கல்லூரிகளைக் காட்டிலும் அதிகமாகத் திறக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள், பெண்கள் தொழில்நுட்ப அறிவு பெற வழிசெய்தன. கனவுகளோடு, லட்சியத்தோடு கல்வி கற்று அதிக மதிப்பெண் பெற்ற பெண்களில் பலர் திருமணம், குடும்பம் என செட்டிலாகிவிட்டனர். பலர் இதனால் கனவு காண்பதே இல்லை.

பெண் வாழ்வின் இலக்கு என்ன?

என்ன கல்வி பயின்றாலும், அது திருமண நோக்குடனேயே பயிலப்படுகிறது. ஒரு காலத்தில் பெண்ணைப் படிக்கவைத்துவிட்டால், படித்த மாப்பிள்ளை பார்க்க வேண்டும். ஒன்று படித்த மாப்பிள்ளை அல்லது அதிக சீர்செய்ய வேண்டும் என்ற கவலை பெண் கல்விக்குத் தடையாக இருந்தது. காலப்போக்கில், படித்த மாப்பிள்ளைகள், படித்த பெண்களைத் தேடுகின்றனர் என்பதால் பெண்ணுக்குக் கல்வி தரப்பட்டது. பிறகு வேலைக்குப் போகும் பெண்களுக்கே திருமணச் சந்தைகளில் மதிப்பிருக்கிறது என்பதால் பெண் வேலைக்குப் போகும் சுதந்திரம் பெற்றாள். கனவுகளோடு கல்லூரி முடித்து தேர்வுகள், நேர்காணல்கள் என எல்லாவற்றையும் கடந்து வேலையில் சேர்ந்து தன் சொந்தக் காலில் பெண் நின்றாள். வேலை தந்த மதிப்பு, சுயசார்பு, சுதந்திரம் என்பவற்றை அவள் அனுபவிக்கும் முன்பே, ஐயோ வயதாகிவிட்டதே, திருமணம் செய்துவைக்க வேண்டுமே என்ற கடமை பெற்றோர் கண்முன்னே வந்துவிடுகிறது. திருமணத்தின் முதல் நிபந்தனையே பெண் வேலையை விட்டுவிட்டுக் கணவன் வீட்டுக்கு வருவது அல்லது கணவன் இருக்கும் ஊருக்கு மாற்றலாகி வருவது. பெண்களில் பெரும்பாலானவர்களின் பதவி உயர்வு, தலைமைக் கனவுகள், லட்சியங்கள் போன்றவை திருமணம், குடும்பம், தாய்மை ஆகியவற்றில் கரைந்து காணமல் போகின்றன.

லட்சியத்தை அடைய வழி என்ன?

திருமணம் ஆண்-பெண் என இரு பாலருக்கிடையே நிகழும் செயல் என்றாலும், ஏன் பெண்களின் கனவுகளும் லட்சியங்களுமே கலைக்கப்படுகின்றன? காரணம், நம் குடும்ப அமைப்பு பெண்ணையே ‘இல்லத்து அரசி’யாகப் பார்க்கிறது. குடும்ப வாழ்வு பெண்ணுக்கு உரியதாகவும், பொதுவாழ்வு ஆணுக்கு உரியதாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிலை மாற வேண்டும். சோறு பொங்கி, பரிமாறி, கணவன், குழந்தைகளைப் பேணுவதோடு பெண்கள் வாழ்வு முடிந்து போவது நியாயமில்லை. பல்வேறு காரியங்களில் மேலைநாடுகளைப் பின்பற்றும் நாம், பெண்களின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டுவரச் சில மாற்றங்களையாவது செய்ய வேண்டும்.

ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்ற நம்பிக்கையை உருவாக்குவது, அனைத்துப் பணிகளிலும் இருவருக்கும் சம வாய்ப்புகளைச் சாத்தியப்படுத்துவது, பெண்களின் திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பது, வீட்டு வேலைகளிலிருந்து அவர்களை விடுதலை செய்வது, அல்லது பகிர்ந்துகொள்வது, குழந்தை வளர்ப்பைக் கணவன்-மனைவி இருவருக்கும் பொதுவாக்குவது, நமது குடும்ப அமைப்புகளை ஆண் அதிகாரம் மையம் கொண்ட நிலையிலிருந்து இருவரும் சுதந்திரமும் பொறுப்பும் கொண்ட அமைப்புகளாக மாற்றுவது, பள்ளிக் கல்வி மட்டுமே சாத்தியப்படும் பெண்களுக்கு பள்ளிகளிலேயே திறன் மேம்பாட்டை, தொழில் கல்வியைத் தருவது, பெண்கள் அதிகம் ஈடுபடும் விவசாயம், சிறுதொழில்கள், நெசவு போன்றவற்றில் அரசு அதிக கவனம் செலுத்துவது, பெண்களுக்கு ஏற்ற, வசதிப்பட்ட நேரங்களில் பெண்களுக்கான பயிற்சிகளை ஏற்பாடு செய்வது, பெண்கள் தொழில் செய்யும் இடங்களிலேயே குழந்தைகள் காப்பகங்களை அமைப்பது, பள்ளிகளில் பள்ளி நேரத்துக்குப் பிறகு பெற்றோர் வேலை முடிந்து வரும்வரை குழந்தைகளைப் பாதுகாக்க ஏற்பாடுகளைச் செய்வது என்று பெண்களின் வாழ்வில் மாற்றத்தை விதைக்க எவ்வளவோ வழிகள் இருக்கின்றன.

கனவுகள் மெய்ப்படும் காலம்

திருமணம் என்ற இலக்கைக் கடந்து பெண்கள் தங்களுக்கான கனவுகளைக் காண வேண்டும். அதை நோக்கிய திட்டமிடலும் தொடர் பயணமும் வேண்டும். சாதனைப் பெண்களை முன்மாதிரிகளாகக் கொள்ள வேண்டும். தன்னை அலங்கரித்து, தொலைக்காட்சியில் தொலைத்து, லட்சியமின்றி வாழும் வாழ்வுக்கு முடிவு காண வேண்டும். இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் சரிப்பாதி இனமான பெண்ணினம் முடங்கிக் கிடந்தால், நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படவே செய்யும். பெண்களின் முன்னேற்றம், பெண்ணை உயர்த்துவதோடு, ஒரு சமூகத்தை, ஒரு நாட்டை நிச்சயம் உயர்த்தும். பெண்களே, உங்களுக்கான கனவுகளை நீங்களே காணுங்கள், அது மெய்ப்படப் பயணம் செய்யுங்கள்!

கூலிப்படையை விரட்டிப் பிடித்த ஈரோடு போலீஸ்...பரபரப்பு தகவல்கள்!

vikatan.comகூலிப்படையை விரட்டிப் பிடித்த ஈரோடு போலீஸ்...பரபரப்பு தகவல்கள்!
நான்கு மணி நேர ஆப்ரேஷனில் இதை நிரூபித்துக்காட்டியிருக்கிறது ஈரோடு காவல்துறை. அதுவும் சினிமா பாணியில் கார், பைக், ரன்னிங் சேஸிங் செய்து ஒரு உயிரை மீட்டிருக்கிறார்கள்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈரோடு நகர காவல்நிலையத்திற்கு அழுதபடி வருகிறார் பாக்கியம் என்கிற பெண்மணி. டூட்டியில் இருந்த இன்ஸ்பெக்டர் என்ன ஏதென விசாரிக்க அவர் சொன்ன தகவல் பகீர் ரகம்.

கருங்கல் பாளையம் பகுதியைச்  சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் அதே பகுதியைச்  சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இதில் செந்தில்குமாரின் ஆட்கள் ஆறுமுகத்தை அடித்துவிட அதற்குப்  பதிலாக செந்தில்குமாரை போட்டுத்தள்ள முடிவெடுத்திருக்கிறார் ஆறுமுகம். 

உடனே இதுகுறித்து ஈரோட்டைச்  சேர்ந்த தனது நண்பர் சின்னத்தம்பியை நாடியிருக்கிறார். சின்னத்தம்பி பெருந்துறையைச்  சேர்ந்த முத்து என்பவரை நாட முடிவில் திருநெல்வேலியிலிருந்து கூலிப்படை வரவழைக்கப்பட்டிருக்கிறது. பத்து லட்சம் ரூபாய் ரேட்டும் பேசப்பட்டிருக்கிறது. கடந்த 28 ஆம் தேதி முதல் இரண்டு நாட்கள் ஈரோட்டில் முகாமிட்டிருந்த கூலிப்படை செந்தில்குமார் வாக்கிங் போகும் போது போட்டுத்தள்ள முயற்சித்திருக்கிறது. அதில் செந்தில்குமார் தப்பித்துவிடுகிறார். 

கூலிப்படையிடம் பணம் இல்லாததால் சின்னத்தம்பியிடம் அட்வான்ஸாக இரண்டு லட்சம் கேட்டிருக்கிறது. அதற்கு ஆறுமுகத்திடம் வாங்கித்தருகிறேன் என போக்குக் காட்டியிருக்கிறார் சின்னத்தம்பி. இதில் கோபமான கூலிப்படை சின்னத்தம்பியைக்  கடத்திக்கொண்டுபோய் வைத்துக் கொண்டு அவரின்  மனைவியிடம் 2 லட்சம் தந்தால் தான் உன் கணவரை உயிரோடு விடுவோம் என மிரட்டியிருக்கிறது. உடனே ஆறுமுகத்தை தொடர்புகொண்டு பேசிய சின்னத்தம்பியின் மனைவிக்கு இருபதாயிரம் மட்டுமே கொடுத்திருக்கிறார் ஆறுமுகம். 

கூலிப்படை கேட்டபடி பணம் தராவிட்டால் தனது கணவரை கொன்றுவிடுவார்களோ என பயந்த பாக்கியம் கடைசியில் நாடியது காவல்துறையை. அதன்பிறகு தான் நாம் மேலே சொன்ன சேஸிங் நடந்திருக்கிறது.

என்ன நடந்தது என ஏ.டி.எஸ்.பி பாலாஜி சரவணனிடம் கேட்டோம். அவர் கூறியது சினிமா காட்சிகளை மிஞ்சும் ரகம்.

நேரம் காலை 9.30
 மணிக்கு எஸ்.பி சிபிசக்கரவர்த்தி சார் எங்களை அழைத்தார். வந்தோம்திருநெல்வேலியை சேர்ந்த ஒரு கூலிப்படை ஒருவரை கடத்தி வைத்துக் கொண்டு பணம் கொண்டுவந்தால் தான் உயிரோடு விடுவோம் என மிரட்டியிருக்கிறது. அந்த நபரை காப்பாற்றுவதோடு கூலிப்படையையும் பிடித்தாக வேண்டும் என்றதோடு அதற்கான டீமையும் ரெடி செய்தார். 

நேரம் காலை 10 மணி. 
அரை மணி நேரத்தில் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.  எஸ்பி  சிபிசக்கரவர்த்தி தலைமையில் இரண்டு ஏ.டி.எஸ்.பிக்கள். ஆறு இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட காவல்துறையைச்  சேர்ந்த 20 பேர் தான் அந்த தனிப்படை.

சின்னத்தம்பியின் மனைவி பாக்கியத்திற்கு காவல்துறையே ஒரு லட்சம் ரூபாயை ரெடி செய்து கொடுத்து அவரயும் அவரது சகோதரரையும் ஒரு டூவீலரில் அனுப்பிவிட்டு, பின்னாலேயே 20 பேர் கொண்ட 6 தனிப்படையும் கார் பைக் என்று வாகனங்களில் விரைந்தோம். அனைவருமே சாதாரண உடை போட்டிருந்தோம். குறிப்பாக எங்கள் எஸ்பி தனி ஆளாக பைக்கில் ஹெல்மெட் போட்டபடி பின்தொடர்ந்தார்.

நேரம் காலை 11.30.
 முதலில் கூலிப்படை சொன்ன பெருந்துறைக்குச்  சென்றோம். உடனே அவன் தொடர்பு கொண்டு நந்தா கல்லூரி அருகில் வர சொன்னான். அங்கும் சென்றோம். மறுபடியும் தொடர்புகொண்டவன் வாய்க்கால்மேடு பகுதிக்குப்  பணத்துடன் வர சொன்னான். அங்கு சென்றோம். 

நேரம் 12 மணி. 
அப்போது டூவீலரில் வந்த ஒருவன் பணப்பையை வாங்கியதும் மடக்கினோம். ஆனாலும் அவன் தப்பித்து தனது டூவீலரை விரட்ட தொடங்கினான். அப்போது எதிரே வந்த எஸ்.பி. ஓங்கி உதைத்தார். அதிலும் லாவகமாகத்  தப்பித்து மீண்டும் பைக்கில் விரைந்தான். நாங்களும் பின்தொடர்ந்து சுமார் 200  மீட்டர் தூரம் கார் மற்றும் பைக்குகளில் விரட்டிச் சென்றோம். எங்களது வேகத்திற்கு ஈடுகொடுக்க  முடியாத கொலையாளி டூவீலரை போட்டுவிட்டு வாய்க்கால் பகுதிக்குள் ஓட தொடங்கினான். நாங்கள் அவனை விடாமல் துரத்திப்பிடித்தோம். இந்த சம்பவம் அனைத்துமே மெயின் ரோட்டிலேயே நடந்ததாலும், நாங்கள் யாரென்று தெரியாததாலும் அங்கிருந்த பொதுமக்கள் பயந்து அலறத்தொடங்கிவிட்டார்கள். கொலையாளியை மடக்கிப்பிடிக்கும் வரை நாங்கள் யாரென்றே சொல்லவில்லை.

நேரம் 12.15 
.மற்றவர்கள் எங்கே என அவனிடம் கேட்டதற்கு எங்களைத்  திசைதிருப்பி வேறு இடத்தைச்  சொன்னான். ஆனாலும் அவனை மடக்கிய இடத்திலிருந்த குளத்தில் இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் குளித்துக்கொண்டிருந்தனர். அதில் ஒருவன் நடவடிக்கைகள் மட்டும் வித்தியாசமாகப்பட அவனை மடக்கினோம். அவன்தான் உண்மையான இடத்தை சொன்னான். 

அவன் சொன்ன இடத்தை அடைய வயல்வெளிக்குள் செல்ல வேண்டியிருந்தது. எங்கள் அனைவருக்குமே பயம் விலகவில்லை. காரணம் கொலையாளி டைம் குறித்து வைத்து, அதற்குள் வராவிட்டால் கடத்தி வைத்திருப்பவரைக்  கொலை செய்ய சொல்லியிருந்தால் என்ன செய்வது என்கிற யோசனை.
வயல்வெளியில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் சென்று பார்த்தால் ஒரு பாறையின் அடியில் இருந்த புதருக்குள் மறைந்திருந்தது கொலைகார கும்பல்.

நேரம் 12.30. நாங்கள் அந்த இடத்திற்கு விரைந்து ஓடினோம். எங்களைப்  பார்த்ததும் ஒருவர் மட்டும் எங்களை நோக்கி வந்தார். அவரை விசாரித்தால் நான்தான் சின்னத்தம்பி என்னைக்  காப்பாற்றுங்கள் என்று கதறினார். அவரை அந்த இடத்திலேயே அமர வைத்துவிட்டு அவருக்குப்  பாதுகாப்பாக 2 பேரை நிற்க வைத்தோம். 

இதற்குள் அங்கிருந்த மற்ற மூவரும் வயல்வெளியில் ஓட தொடங்கினார்கள். நாங்களும் விடாமல் ஒரு கிலோமீட்டர் தூரம் துரத்தி அவர்களைக்  களைப்படைய வைத்தோம். கடைசியில் ஓடமுடியாமல் 2 பேர் மயங்கி கீழே விழுந்துவிட்டார்கள்.


நேரம் மதியம் 1 மணி. 
அனைவரையும் பிடித்துவிட்டோம் என்பதைக் காட்டிலும் கடத்தப்பட்டவரை உயிரோடு மீட்டுவிட்டோம் என்கிற திருப்தியோடு ஈரோட்டிற்கு விரைந்தோம் என்றவர் குற்றவாளிகளின் விபரத்தை சொன்னார்.

விபரத்தை கேட்ட நாம் எஸ்பி சிபி சக்கரவர்த்தியைச்  சந்தித்தோம். 

" இதில் கலந்துகொண்ட அனைவருமே ஹெட்போனை பயன்படுத்தினோம். இதனால் ஒவ்வொருவரும் தகவல்களைப்  பரிமாற வசதியாக இருந்தது. அடுத்து எங்களது ஒரே குறி கடத்தப்பட்டவரை உயிரோடு மீட்பதோடு குற்றவாளிகளையும் பிடிக்க வேண்டும் என்பது தான். இதில் ஏதேனும் சிறிய தொய்வு ஏற்பட்டாலும் கஷ்டப்பட்டது வீணாகி விடும். எனவே நேரத்தை மிகவும் கவனமாக கையாண்டோம். பிடிபட்ட திருநெல்வேலி கூலிப்படையை சேர்ந்தவர்கள் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது. இப்போது குற்றவாளிகள் அனைவருமே ரிமாண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் என்னுடைய பங்கு மட்டுமல்ல என்னுடன் பணியாற்றிய அனைவருமே மிகச் சரியாகச்  செயல்பட்டதால் தான் எங்களால் இந்த ஆபரேஷனை சக்ஸசாக முடிக்க முடிந்தது. கடத்தப்பட்டவர் மீதும் புகார் இருந்ததால் அவரும் ரிமான்ட் செய்யப்பட்டிருக்கிறார்"  என்றார். 

சபாஷ் போடவைத்தது இவர்களின் நடவடிக்கை. காவல்துறையை நம்பினோர் கைவிடப்படார்.
                                      

 வீ.மாணிக்கவாசகம்.
 படங்கள் ரமேஷ் கந்தசாமி.

Sunday, September 6, 2015

காற்றில் கலந்த இசை 20 - கடந்த காலத்திலிருந்து ஒலிக்கும் குரல்

உள்படம்: பாடகி ஜென்ஸி

சில படங்களின் தலைப்பே அற்புதமான மனச்சித்திரத்தை உருவாக்கக்கூடியதாக அமைந்துவிடும். ‘நிறம் மாறாத பூக்கள்’ (1979) ஓர் உதாரணம். சுதாகர், ராதிகா, விஜயன், ரதி நடித்த இப்படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். இரண்டு காதல் ஜோடிகள்; காதலில் பிரிவு; புதிய உறவு என்று செல்லும் இப்படத்தில் நுட்பமான உணர்விழைப் பின்னல்களைக் கொண்ட பாடல்களை உருவாக்கியிருந்தார் இளையராஜா.

இழந்த காதலின் வசந்தகால நிலப்பரப்புக்குச் சென்று, வருடிச் செல்லும் காற்றில் மனத்தின் ரணங்களைக் காயவைத்துக் கொள்ளும் உணர்வை ஏற்படுத்தும் பாடல்களில் ஒன்று ‘ஆயிரம் மலர்களே மலருங்கள்’. ஜென்ஸி, எஸ்.பி. ஷைலஜா, மலேசியா வாசுதேவன் என்று மூன்று அற்புதக் குரல்களின் சங்கமம் இப்பாடல்.

வெறும் இசைக் கருவிகளின் தொகுப்பாக மட்டும் இல்லாமல், மனித உணர்வுகளின் மெல்லிழைகளால் இழைக்கப்பட்ட பாடல் இது. கடந்த காலத்திலிருந்து ஒலிக்கும் குரலாக ஜென்ஸியின் ஹம்மிங், சருகுகளை அள்ளிக்கொண்டு வரும் காற்றைப் போல மனதின் பல்வேறு உணர்வுகளைத் திரட்டிக்கொண்டே பரவிச் செல்லும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள் ஏதுமற்ற, சிறிய பூச்செடிகள் நிறைந்த பரந்த நிலத்தில் நம்மை அள்ளிச் சென்று நிறுத்திவிடும் அந்த ஹம்மிங். முற்றிலும் சோகமயமாக்கிவிடாமல், கைவிட்டுப்போன காதலின் இனிமையான தருணங்களும், துயரம் தோய்ந்த நிகழ்காலமும் இனம் பிரிக்க முடியாதபடி கலக்கும் சுகானுபவத்தை இசைக் குறிப்புகளால் எழுதியிருப்பார் இளையராஜா.

நிரவல் இசைக் கோவைகளும், கேட்பவரின் கற்பனை மொழியும் தெளிவற்ற உருவகங்களைத் தங்களுக்குள் பரிமாறிக்கொள்வதை இப்பாடல் முழுதும் உணர முடியும். முதல் நிரவல் இசையில் ஒலிக்கும் புல்லாங்குழல், சிறிய மேடுகளில் மலர்ந்திருக்கும் சிறு பூக்களை வருடியபடி திசைகளற்று படர்ந்து செல்லும் தென்றலை உணர வைக்கும். குரல் சென்றடைய முடியாத தொலைவின் சாலையில் செல்லும் தன் அன்புக்குரியவரை அழைக்க முடியாமல் பரிதவிக்கும் மனதின் விசும்பலாகவும் அது ஒலிக்கும்.

’மனதில் உள்ள கவிதைக் கோடு மாறுமோ’ எனும் கண்ணதாசனின் வரிகள், சோக நாடகத்தின் ஆன்மாவை வலியுடன் பதிவுசெய்திருக்கும். பிரிவின் வலிகளால் முதிர்ச்சியடைந்திருக்கும் இளம் மனதின் வெளிப்பாடாக உணர்வுபூர்வமாகப் பாடியிருப்பார் ஜென்ஸி. ‘என் பாட்டும் உன் பாட்டும்’ எனும் வார்த்தைகளைத் தொடர்ந்து, மிகக் குறுகிய இடைவெளிக்குப் பின் ‘ஒன்றல்லவோ’ என்று ஜென்ஸி பாடும்போது அவரது குரலில் சிறிய தேம்பல் தொனிக்கும். பாடலின் இரண்டாவது சரணத்தைத் தொடரும் எஸ்.பி. ஷைலஜா தனது வழக்கமான துல்லியத்துடன் பாடியிருப்பார். மேகத்தை நோக்கி எறியப்பட்ட குரலோ என்று தோன்றும்.

‘எழுதிச் செல்லும் விதியின் கைகள்’ எனும் கவிதை வரியில், வார்த்தைகளுக்கு வெளியே ஒரு புனைவுச் சித்திரத்தை வரைந்திருப்பார் கண்ணதாசன்.

தொடர் ஓட்டத்தைப் போல், ஷைலஜாவிடமிருந்து சோகத்தை வாங்கிக்கொண்டு பாடலைத் தொடர்வார் மலேசியா வாசுதேவன். மூன்றாவது நிரவல் இசையின் முடிவில் ஒலிக்கும் கிட்டார், ஆணின் மனதுக்குள் அடக்கி வைக்கப்பட்டிருக்கும் துயரம் வெளியேறத் தவிப்பதைப் பிரதியெடுத்திருக்கும். ‘மலையின் மீது ரதி உலாவும் நேரமே’ எனும் வார்த்தைகள் உருவாக்கும் கற்பனை வார்த்தையில் அடங்காதது. பூமிக்கும் மேகத்துக்கும் இடையில், அந்தரத்தில், வானுலகத்தின் தேவதை நடந்து செல்வதாக மங்கலான சித்திரம் தோன்றி மறையும். காதல் அனுபவமே இல்லாதவர்கள் கேட்டால்கூடக் கண்களின் ஓரம் நீர் துளிர்க்க வைக்கும் பாடல் இது.

‘இரு பறவைகள் மலை முழுவதும்’ பாடல் ஜென்ஸியின் மென் குரலும் இளையராஜாவின் இன்னிசையும் சரிவிகிதத்தில் வெளிப்பட்ட படைப்பு. கரு நீல வானின் பின்னணியில் கரும்பச்சை நிறத் தாவரங்கள் போர்த்திய மலைகளைக் கடந்து பறந்துசெல்லும் பறவைகளைக் காட்சிப்படுத்தும் இசையமைப்பை உருவாக்கியிருப்பார் இளையராஜா. ‘இது கண்கள் சொல்லும் ரகசியம்’ எனும் வரியில் ‘ரகசியம்’ எனும் வார்த்தையை ஜென்ஸி உச்சரிக்கும் விதம், ஒரு பாடகியின் குரலாக அல்லாமல், மனதுக்குப் பிடித்த தோழியின் பேச்சுக் குரலின் இயல்பான கீற்றலாகவே வெளிப்பட்டிருக்கும்.

முதல் நிரவல் இசையில், இயற்கையின் அனைத்து வனப்புகளும் நிறைந்த பிரதேசத்தின் இரண்டு மலைகளுக்கு இடையில் வயலின் தந்திக் கம்பிகளைப் பொருத்தி இசைப்பது போன்ற இனிமையுடன் ஒற்றை வயலின் ஒலிக்கும். இரண்டாவது நிரவல் இசையில், பொன்னிறக் கம்பிகள் பொருத்தப்பட்ட கிட்டாரிலிருந்து வெளிப்படும் ஒலிக்கீற்றுகளைப் போன்ற இசையை உருவாக்கியிருப்பார் இளையராஜா.

‘எங்கெங்கு அவர் போல நான் காண்கி(ர்)றேன்’ என்று பாடும்போது ஜென்ஸியின் குரலில் ஒரு அன்யோன்யம் கரைந்திருப்பதை உணர முடியும். பலரது மனதில் வெவ்வேறு முக வடிவங்களாக ஜென்ஸியின் குரல் நிலைத்திருப்பதின் ரகசியம் இதுதான்.

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

அந்தநாள் ஞாபகம்: மீண்டும் மீண்டும் துரத்திய கதைகள்!

Return to frontpage

பிரதீப் மாதவன்


‘நீ’ ஜெயலலிதா - ‘கலங்கரை விளக்கம்’ சரோஜாதேவி

வாழ்க்கையின் அடுத்தடுத்த கணங்களில் என்ன ஒளிந்திருக்கிறது என்பதை அறிய முடியாது. திரைப்படத்தில் நாம் காணும் கதாபாத்திரங்களுக்கு அடுத்து என்ன நடக்குமோ என்ற பதைபதைப்பான சஸ்பென்ஸ் உணர்வைத் தந்தால் அதுவே ‘சக்ஸஸ் திரைக்கதை’யாகிவிடுகிறது. இந்த வெற்றிச் சூத்திரம் திகில் மற்றும் சஸ்பென்ஸ் வகைப் படங்களுக்கு மட்டுமல்ல; எல்லா வகைப் படங்களுக்குமே பொருந்தக் கூடியதுதான்.

அதனால்தான் தமிழ் சினிமாவின் முதல் சமூகப் படம் வெளியாகும் (மேனகா 1935) முன்பே முதல் திகில் படம் வெளியாகிவிட்டது. பி.எஸ்.வி ஐயர் இயக்கத்தில் 1934-ல் வெளியான ‘கவுசல்யா’ அந்த அந்தஸ்தை எடுத்துக்கொள்கிறது என்றாலும் ‘நல்லதங்காள்’ படத்தில் தன் குழந்தைகளைக் கிணற்றில் தூக்கிப் போட்டுக் கொல்லும் காட்சியைப் பார்த்து பயந்து தியேட்டரை விட்டு வெளியே ஓடியவர்கள்தான் முப்பதுகளின் தமிழ் சினிமா ரசிகர்கள். பின்னாளில் தமிழின் திகில் மற்றும் சஸ்பென்ஸ் வகை சினிமாவைத் தட்டி எழுப்புவதற்கு வடுவூர் துரைசாமி ஐயங்காரின் கதைகள் உதவின.

சிவாஜி வாங்கிய அடியும் காரும்

ஆனால் கதைப்போக்கில் திடீர் அதிர்ச்சியை அளித்த முதன்மைக் கதாபாத்திரங்களைக் கொண்ட படங்கள் கே.பாலச்சந்தர், சி.வி. ஸ்ரீதர் ஆகியோரின் வருகைக்குப் பிறகு 50-களில் அறிமுகமாகத் தொடங்கின. சி.வி. ஸ்ரீதரை மிகச் சிறந்த திரைக்கதாசிரியராக அறிமுகப்படுத்திய படம் 1954-ல் வெளியான ‘எதிர்பாராதது’ திரைப்படம். சி.எச்.நாராயணமூர்த்தி இயக்கிய இந்தப் படத்தில் சிவாஜியும் பத்மினியும் காதலர்கள். நாகையா சிவாஜியின் தந்தை. மனைவியை இழந்தவர்.

இரண்டாம் தாரமாக பத்மினியை மணந்துகொள்கிறார். இப்போது சிவாஜிக்கு பத்மினி சிற்றன்னை யாகிவிடுகிறார். நாகையா திடீரென இறந்துபோக, ஒருநாள் சிவாஜி, பத்மினியைத் தொடுகிறார். அப்போது அதிர்ச்சியடையும் பத்மினி சிவாஜியை வெறிகொண்டு அடிப்பார். இந்தக் காட்சி ரசிகர்களை உலுக்கியது என்றுதான் சொல்ல வேண்டும். ரசிகர்களை “கலிகாலம்...!” என்று சொல்லவைத்தது.

இந்தக் காட்சி படமானபோது பத்மினி உணர்ச்சிவசப்பட்டு சிவாஜியை நிஜமாகவே அடித்த அடியில் அவருடைய கன்னம் வீங்கி விட்டது. அந்தக் காட்சி முடிந்ததும் கிளம்பிப்போன சிவாஜி இரண்டு நாட்கள் படப்பிடிப்புக்கே வரவில்லை. மூன்றாவது நாள் சிவாஜியைப் பார்க்க பத்மினி அவரது வீட்டுக்குப் போனார். சிவாஜியை சமாதானம் செய்து அவருக்கு புத்தம் புது ஃபியட் கார் ஒன்றை வாங்கிப் பரிசாக அளித்தார். அதுதான் சிவாஜியின் முதல் கார். படத்தின் கதை மட்டுமல்ல படப்பிடிப்பில் நடந்த சம்பவமும், சிவாஜிக்கு முதல் கார் கிடைத்ததும் கூட எதிர்பாராமல் நடந்ததுதான்.

ஆனால் ரசிகர்கள் கொஞ்சமும் எதிர்பாராத முழுநீள சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் திரைப்படங்கள் பயமுறுத்த ஆரம்பித்தது அறுபதுகளுக்குப் பிறகுதான்.

ஒரே கதை மூன்று படங்கள்

ஆச்சரியகரமாக 1965-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மூன்று சஸ்பென்ஸ் த்ரில்லர்கள் ஒரே கதையமைப்புடன் வெளியாகி, அந்த மூன்று படங்களுமே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன. ‘வெண்ணிற ஆடை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஜெயலலிதா அறிமுகமாகி சில மாதங்களே ஆகியிருந்த நிலையில் அவரைக் கனவுக் கன்னியாக மாற்றியது ‘ஆயிரத்தில் ஒருவன்’.

அந்தப் படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றிருந்த நிலையில் வெளியான படம்தான் ‘நீ’. இதில் இரட்டை வேடங்களை முதல்முறையாக ஏற்றிருந்தார் ஜெயலலிதா. ஜெய்சங்கர்தான் கதாநாயகன். கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் கதை என்பதால் ஜெயலலிதா ஜெய்சங்கர் என்று ஒரு கார்டில் சரிசமமாக டைட்டில் போடப்பட்டது. சக்தி கிருஷ்ணசாமி கதை, வசனத்தில், கனக சண்முகம் இயக்க, டைரக்‌ஷன் மேற்பார்வை செய்தவர் ராமண்ணா.

இந்தப் படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து வெளியானது கே.ஆர். விஜயா இரட்டை வேடத்தில் நடித்திருந்த ‘இதயக் கமலம்’. தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரான இந்தப் படத்தை இயக்கியவர்  காந்த். 1964-ல் வெளியாகி வெற்றி பெற்ற ‘பாத்லாக்’(Paatlag) என்ற மராத்தி மொழிப் படத்தை தழுவியது இந்தப் படத்தின் கதை. ‘மேரா சாயா’ என்ற தலைப்பில் பாத்லாக் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் சுனில் தத்தும் சாதனாவும் நடித்துக்கொண்டிருக்கும்போதே, பாத்லாக் தமிழில் மூன்று வெவ்வேறு படங்களாக ஒரே மாதத்தில் வெளிவந்துவிட்டது. இவற்றில் ‘நீ’ முந்திக்கொண்டது.

நீ படத்தில் ஜெயலலிதாவின் வசீகரம் பெரிதும் ரசிக்கப்பட்டது. ஆனால் ‘இதயக் கமலம்’படத்தில் கமலா, விமலா ஆகிய இரண்டு வேடங்களில் வந்த கே. ஆர். விஜயாவின் மாறுபட்ட நடிப்புக்காக அவருக்குப் பாராட்டுகளும் விருதுகளும் குவிந்தன.

இதே கதையைக் கொஞ்சம் வரலாற்றுப் பூச்சுடன் தீற்றிக்கொண்டு வெளியான அந்த மூன்றாவது படம் ‘கலங்கரை விளக்கம்’. புகழின் உச்சாணிக் கொம்பில் இருந்த எம்.ஜி.ஆர். சரோஜாதேவி நடித்த அந்தப் படத்தை இயக்கியவர் கே. சங்கர். கதாநாயகிக்கே அதிக முக்கியத்துவம் இருக்கிறது என்று தெரிந்தும் இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தது ஆச்சரியமான விதிவிலக்கு.

இந்த மூன்று வெற்றிப் படங்களிலும் ‘இதயக் கமலம்’ படத்தின் திரைக்கதையும் வசனமும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தமைக்கு ஆரூர்தாஸின் திறமை முக்கிய காரணமாக அமைந்தது.

நோய்வாய்ப்பட்டு இறந்துவிடும் காதல் மனைவி கே.ஆர். விஜயாவைத் தகனம் செய்து, ஈமக்கடன்களை முடித்துவிட்டு ஒடிந்த மனதுடன் வீட்டுக்குள் நுழைந்து அமரும் கதாநாயகன் ரவிச்சந்திரன் முன்னால் வந்து நின்று “நான்தான் உங்கள் மனைவி” என கே.ஆர். விஜயா சொல்ல, படத்தின் சஸ்பென்ஸ் நொடிகள் ஆரம்பமாகிவிடும். கே.ஆர். விஜயாவுடன் கடுமையான வாக்குவாதங்கள் செய்யும் ரவிச்சந்திரன், உண்மையை அறியத் துடிக்க, முடிச்சுகள் வரிசையாக அவிழத் தொடங்கும். இப்படியாக, ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்த்திய படம் இது. எது உண்மை எது பொய் என ரசிகர்களைத் தெளிவாகக் குழப்பித் தெளிய வைத்த படம்.

இந்த மூன்று படங்களுமே சஸ்பென்ஸ் த்ரில்லர்களாக இருந்தாலும் இந்தப் படங்களில் இடம்பெற்ற பாடல்கள், கதையையும் கதாநாயகனின் இக்கட்டான சூழ்நிலையும் தூக்கிப்பிடித்து ரசிகர்களின் வயிற்றைப் பிசையும் த்ரில்லர் அவஸ்தையையும் சேர்த்துப் பரிமாறியவை. ‘இதயக் கமலம்’ படத்தில் ‘நீ போகுமிடமெலாம் நானும் வருவேன் போ போ போ...’, ‘மலர்கள் நனைந்தன பனியாலே...’, ‘என்னதான் ரகசியமோ இதயத்திலே...’, ‘ தோள் கண்டேன் தோளே கண்டேன்...’. ‘ உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...’ ஆகிய பாடல்கள் கே.வி. மகாதேவன் இசையில் ரசிகர்களைக் கட்டிப் போட்டன.

இந்த மூன்று படங்களும் வெளியான 1965-ன் இறுதியில் வெளியாகி வெற்றிபெற்ற சஸ்பென்ஸ் த்ரில்லர், பி.எஸ். மூர்த்தி இயக்கத்தில் வெளியான ‘ஒரு விரல்’. பண்டரிநாத், தங்கம் என்று முன்னணியில் இல்லாத நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் வெற்றியைக் ருசித்த இந்தப் படத்துக்கு நடுங்க வைக்கும் பின்னணி இசையைத் தந்தவர் வேதா. சஸ்பென்ஸ் படம் என்றாலே வேதாவின் இசைதான் என்ற முத்திரை விழக் காரணமாக அமைந்த படம் அது.

ஜெய்சங்கர் ஜெயலலிதா இணைந்து நடித்த ‘நீ’ பட வெற்றியின் பாதிப்பில் அடுத்த ஆண்டே ‘யார் நீ?’ என்ற படத்தைத் தயாரித்தார் நடிகர் பி.எஸ். வீரப்பா. இந்தப் படத்திலும் ஜெயலலிதாவும் ஜெய்சங்கரும் மீண்டும் ஜோடி சேர, இதுவும் வெற்றிப் படங்களின் வரிசையில் சேர்ந்த சஸ்பென்ஸ் த்ரில்லர்.

துரத்திய பறவை

ஆனால் இந்த மூன்று படங்களுக்கும் முன்னோடியான த்ரில்லர் படமென்றால் அது சிவாஜி முதன்முதலாகத் தயாரித்த ‘புதிய பறவை, 1964-ல் வெளியான இந்தப் படம் சிவாஜி, சரோஜா தேவி மற்றும் பலரின் நடிப்பில் வெளிவந்தது. பணமிருந்தும் நிம்மதி இன்றி ஒருவித ஏக்கத்தில் சுற்றி வருவார் நாயகன் சிவாஜி. தான் விரும்பும் சரோஜாதேவியிடம் தனக்கு ஏற்கெனவே மணமானதைச் சொல்லி முதல் மனைவி இறந்துவிட்டதாகக் கூறுவார்.

மகிழ்ச்சியாகப் போகும் அந்தப் புதிய காதலின் நாட்களில், இறந்ததாகச் சொன்ன அவரின் முதல் மனைவி மீண்டும் வந்து கண் முன்னே நிற்க, அவருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் அடிவயிற்றைப் பதம்பார்க்கும் அதிர்ச்சியைப் பாய்ச்சிய படம். இன்று இந்தப் படத்தைப் புதிதாகப் பார்க்கும் இளைய தலைமுறை ரசிகர்களைக் கூட நிமிர்ந்து உட்கார வைக்கக்கூடிய படம். ‘பார்த்த ஞாபகம் இல்லையோ…’, ‘எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி’ உள்ளிட்ட பாடல்களாலும் கதை சொன்ன படம் ‘புதிய பறவை’.

நீங்கள் வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லையா?

மாத சம்பளதாரர்கள், வரிவிதிப்பு ஆண்டு 2015-16-க்கான வருமானவரி ரிட்டர்னை தாக்கல் செய்ய கடைசிநாள் ஆகஸ்டு 31-ந் தேதி என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை. என்ன செய்யலாம்?

வருமானவரித்துறையினர் பிடித்து விடுவார்களோ? அபராதம் விதிப்பார்களோ? வழக்கு போடுவார்களோ? என்ற அச்சம் பிறக்கிறதா?. நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் தாக்கல் செய்யத்தவறிய உங்கள் வருமான வரி ரிட்டர்னை தாமதமாகவும் செலுத்தலாம். அது எப்படி என்று பார்ப்போம்.

தாமதமான ரிட்டர்ன்:

நீங்கள் வாங்கும் சம்பளத்திலேயே உங்களுக்கு வரிபிடித்தம் செய்யப்பட்டிருந்தால் (Tax Deducted at SourceTDS) அல்லது உங்கள் வருமானத்திற்கேற்ற வரியை நீங்கள் முன்னதாகவே செலுத்தியிருந்தால் (Advance Tax) இன்னும் கூட நீங்கள் உங்கள் வருமானவரி ரிட்டர்னை தாக்கல் செய்யலாம். இதுபோன்று ஆகஸ்டு 31-க்குப் பிறகு தாக்கல் செய்யும் ரிட்டர்னுக்கு தாமதமான ரிட்டர்ன் (belated return) என்று பெயர். இவ்வகையில், அடுத்த வரி விதிப்பு ஆண்டு முடியும் வரையில் அதாவது 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரையிலும் நீங்கள் உங்களுடைய வரிவிதிப்பு ஆண்டு 2015-16-க் கான வருமானவரி ரிட்டர்னை தாக்கல் செய்யலாம்.

பாதிப்புகள் என்னென்ன?

இவ்வாறு வருமானவரி ரிட்டர்னை தாமதமாக தாக்கல் செய்வதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.

1. வருமானவரி ரிட்டர்னில் ஏதேனும் நஷ்டம் (loss) இருக்குமானால் அந்த நஷ்டத்தை அடுத்த ஆண்டுகளில் ஈடு செய்ய இயலாது.

2. முதலில் தாக்கல் செய்த வருமானவரி ரிட்டர்னில் ஏதேனும் தவறு இருப்பின் அதை சரி செய்ய இயலாது. பொதுவாக, கெடு தேதிக்கு முன்னால் தாக்கல் செய்திருந்த ரிட்டர்னில் ஏதேனும் பிழை இருந்தால், பிழையை சரிசெய்து மீண்டும் ஒரு ரிட்டர்ன் தாக்கல் (revised return) செய்ய இயலும். ஆனால், இம்மாதிரி தாமதமாக தாக்கல் செய்வதில் சரிசெய்யும் வாய்ப்பு பறிபோய்விடுகிறது.

வட்டி:

3. இவை தவிர, நீங்கள் வரிபிடித்தம், முன்னதாக வரி செலுத்தியது ஆகியவற்றைக் கழித்தது போக, மேலும் வரி செலுத்தவேண்டியிருக்கும் பட்சத்தில், அந்த வரியை வட்டியுடன் செலுத்தவேண்டும்.

இவ்வகையில் இருவிதமான வட்டியினை நீங்கள் செலுத்தவேண்டும். ஒன்று தாமதமாக வரி செலுத்துவதற்கான வட்டி. அதாவது, நீங்கள் முன்னதாக செலுத்தவேண்டிய வரி பத்தாயிரம் ரூபாயை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில், அதிலும் நீங்கள் 90 சதவீதத்தை விட குறைவாகவே செலுத்தியிருக்கிறீர்கள் எனில் இந்த வட்டியினை நீங்கள் செலுத்த வேண்டும். நீங்கள் செலுத்தவேண்டிய தொகையில் மாதம் ஒரு சதவீதம் என்று ஏப்ரல் மாதம் முதல் நீங்கள் செலுத்தும் தேதி வரையில் கணக்கிட்டு இதை செலுத்தவேண்டும்.

இரண்டும் தாமதமாக வருமானவரி ரிட்டர்னில் தாக்கல் செய்வதற்கான வட்டி. நீங்கள் செலுத்தவேண்டிய தொகையில் மாதம் ஒரு சதவீதம் என்று செப்டம்பர் மாதம் முதல் (அதாவது கெடு தேதிக்கு அடுத்த நாளிலிருந்து) நீங்கள் வருமானவரி ரிட்டர்னைத் தாக்கல் செய்யும் தேதி வரையில் கணக்கிட்டு இதை செலுத்தவேண்டும்.

குறிப்பு: இவ்விரண்டு வட்டிகளுமே, மார்ச் மாதம் 31-க்குப் பிறகும் நீங்கள் வரி செலுத்தவேண்டியிருந்தால் மட்டுமே செலுத்தவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நோட்டீஸ்:

ஒருவேளை வருமானவரித்துறையிடமிருந்து நீங்கள் வருமானவரி ரிட்டர்னைத் தாக்கல் செய்யவில்லை என்று நோட்டீஸ் வரும் பட்சத்தில், அதைப் பெற்ற உடனேயே நீங்கள் உங்களின் ரிட்டர்னைத் தாக்கல் செய்து விடுவது நல்லது.

logo


ஆசிரியர் கல்வியின் தரம்!

ஆசிரியர்கள்தான் சமுதாயத்தில் மிக அதிகமான பொறுப்புவாய்ந்த முக்கியமான அங்கம் வகிப்பவர்கள். ஏனெனில், அவர்களின் தொழில் ரீதியான முயற்சிகள் பூமியின் தலைவிதியிலேயே மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார், ஆஸ்திரேலிய நாட்டு பெண் எழுத்தாளரான மருத்துவர் ஹெலன் கால்டிகாட். அந்த வகையில், நாளைய சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம்தான் இருக்கிறது. சமீபத்தில், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், ஜனாதிபதி பதவியைவிட ஆசிரியராக பணியாற்றத்தான் விரும்பினார். அவர் எழுதிய ‘தூண்டப்பட்ட மனங்கள்’ என்ற ஆங்கில நூலில்கூட, ‘ஒரு குழந்தையின் கற்றலுக்கும், அறிவாற்றலுக்கும் ஆசிரியர்தான் ஜன்னல் போன்றவர். அந்த குழந்தையின் படைப்புத்திறனை உருவாக்குவதில் அவர்தான் முன்மாதிரியாக திகழவேண்டும்’ என்ற அற்புதமான தத்துவத்தை உலகிற்கு படைத்துவிட்டு சென்றார்.

இன்றைய காலக்கட்டத்தில், மாணவர்களின் கல்வித்தரம் மிக உயர்வாக இருந்தால்தான், போட்டி மிகுந்த உலகில் அவர்களால் வெற்றிகாணமுடியும். அதற்கு ஆசிரியர்களின் கல்வித்தரமும் மிகவும் உச்சத்தில் இருக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. அத்தகைய அறிவாற்றல் மிகுந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தேவை என்பதால்தான், கட்டாய கல்வி சட்டத்தில் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தத் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றவர்கள்தான், வரும் காலங்களில் பள்ளிக் கூடங்களில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும். ஆனால், ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதை பார்க்கும்போதுதான், ஆசிரியர் கல்வியில் கவனம் செலுத்தவேண்டிய நிலைமை தெளிவாகிறது. மத்திய அரசாங்கத்தின் கல்வித்திட்டத்தின்கீழ் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களில் பணியாற்றுவதற்கு மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தத்தேர்வில் வெற்றிபெறுபவர்கள்தான் இத்தகைய பள்ளிக்கூடங்களில் முதல் வகுப்பு முதல் 8–வது வகுப்புவரை நாடு முழுவதிலும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றமுடியும். 722 ஆசிரியர் பட்டப்படிப்புக்கான கல்லூரிகளையும், 1,018 ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கூடங்களையும் கொண்டுள்ள தமிழ்நாட்டில் இருந்து இந்த தேர்வை எழுதிய ஆசிரியர்களில் 40 பேர் மட்டுமே தேர்வாகியிருக்கிறார்கள் என்றால், இந்த தேர்வை எழுத முடியாத அளவில்தான் நமது ஆசிரியர் கல்வித்தரம் இருக்கிறது என்ற அதிர்ச்சியான தகவலை தமிழக கல்வித்துறையும், சமுதாயமும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

பல ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்கள், துணிவில்லாமல் இந்தத்தேர்வை எழுதவே இல்லை. தற்போது, தமிழ்நாட்டிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகங் களில், கடந்த ஜூன் மாதம் 30–ந்தேதி நிலவரப்படி
2 லட்சத்து 29 ஆயிரத்து 400 இடைநிலை ஆசிரியர்களும், 3 லட்சத்து 92 ஆயிரத்து 383 பட்டதாரி ஆசிரியர்களும், 2 லட்சத்து 70 ஆயிரத்து 912 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் பதிவு செய்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டுமென்றால், தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்விலும், மத்திய கல்வி திட்டத்துக்காக நாடு முழுவதிலும் வேலைவாய்ப்பு பெறக்கூடிய மத்திய ஆசிரியர் தகுதித்தேர்விலும் வெற்றிபெற்றால்தான் முடியும். இவர்கள் மட்டுமல்ல, எதிர்காலத்தில் ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் படித்து முடித்து வெளியேவரும் ஆசிரியர்களும் இனி வேலை வாய்ப்பு பெறவேண்டும் என்றாலும் சரி, திறமைமிக்க மாணவர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றாலும் சரி, அவர்களின் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். நவீன தொழில் நுட்பத்துக்கேற்ப ஆசிரியர்களுக்கு வீடியோ கான்பரன்சிங், ஆன்–லைன், இண்டர்நெட் மூலம் கல்வி கற்றுக்கொடுக்க பயிற்சி அளிக்கவேண்டும். அறிவாற்றல்மிக்க ஆசிரியர் களால்தான் ஒளிமிகுந்த மாணவர் சமுதாயத்தை படைக்கமுடியும்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...