Sunday, November 1, 2015

‘வாட்ஸ் அப்’ நண்பர்கள் உதவியால் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது சவுதியில் இறந்த தொழிலாளி உடல்

Return to frontpage

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள துக்காச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(52). கடந்த 23 ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் உள்ள நஜாரம் மாகாணத்தில் முகமது அல் சுகூர் என்பவரின் பண்ணையில் தோட்டத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த ஜூன் 15-ம் தேதி மாரடைப்பால் பாஸ்கரன் இறந்து விட்டதாக தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கரனின் மனைவி அமுதா(45), மகன் கார்த்திகேயன்(26), மகள் பூங்கோதை(24) உள்ளிட்டோர், அவரது முதலாளியை தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.

அப்போது, “பாஸ்கரனின் உடலை அனுப்புவதில் சட்டச் சிக்கல்கள் உள்ளன. அதனால், சவுதியிலேயே அடக்கம் செய்துவிடுகிறோம். அதற்குப் பதிலாக ரூ.7 லட்சம் பணம் தருகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார். அதற்கு ஒப்புக்கொள்ளாத பாஸ்கரன் குடும்பத்தினர், “பணம் தேவையில்லை, உடலை அனுப்பி வையுங்கள். நாங்கள் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

எனினும் உடலை அனுப்பாததால், அவரது உடலை மீட்க குடும்பத்தினர் கடந்த 5 மாதங்களாக போராடி வந்தனர். இதுகுறித்து கடந்த மாதம் ‘தி இந்து’வில் செய்தி வெளியானது.

இதுகுறித்து தகவலறிந்த, தமிழ்நாடு சமூக சேவை சர்வதேச கழகப் பொதுச் செயலாளரான பட்டுக்கோட்டை ஏ.பிரபாகரன், சவுதியில் உள்ள நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ‘வாட்ஸ் அப் நண்பர்கள் குழு’ உறுப்பினர்கள் அப்துல் காதர், முருகன் ஆகியோர் மூலம் தீவிர முயற்சி எடுத்து, பாஸ்கரனின் உடல் சென்னை கொண்டுவரப்படும் என்று கடந்த வாரம் தெரிவித்தார்.

அதன்படி, பாஸ்கரனின் உடல் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு, பாஸ்கரனின் மகன் கார்த்திகேயன், பட்டுக்கோட்டை பிரபாகரன், அமைப்பின் சென்னை மாவட்ட நிர்வாகி கிஷோர் ஆகியோர் உடலைப் பெற்று, ரயில் மூலம் நேற்று கும்பகோணத்துக்குக் கொண்டு வந்தனர்.

பின்னர், சொந்த ஊரில் இறுதிச் சடங்கு செய்யப்பட்டு, பாஸ்கரனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நவ.16 முதல் மத்திய படை பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

Return to frontpage

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நவம்பர் 16-ம் தேதி முதல் மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான தொகையை தமிழக அரசு ஒரு வாரத்தில் டெபாசிட் செய்யவும் உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் முதல் அமர்வு நீதிமன்றத்துக்குள் அவரது எதிரில் அமர்ந்து சில வழக்கறிஞர்கள், சட்ட மாணவர்கள் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்தது. சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றின் பாதுகாப்பை மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) போன்ற சிறப்பு அமைப்பிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘‘உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை ஆகியவை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மத்திய பாதுகாப்பு படை தேவையில்லை. தமிழக காவல் துறை பாதுகாப்பே போதும்’’ என்று தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது. ‘‘இதை மீறி மத்திய பாதுகாப்பு படையை அமர்த்தினால் பிரச்சினை ஏற்படக்கூடும்’’ என்று மத்திய அரசு தெரிவித்தது.

‘‘உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போலீஸார் இடையே பரஸ்பரம் நம்பிக்கை இல்லாததால், சிறிது காலமாவது உயர் நீதிமன்ற பாதுகாப்பை நிபுணத்துவம் பெற்ற சுதந்திரமான அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்’’ என்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான முதல் அமர்வு தெரிவித்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு முன்பு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகினர். மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ராஜேந்திர சதுர்வேதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

‘காவல், பொது அமைதி என்பது மாநில அரசு விவகாரம். மாநில அரசு கோரினால் மட்டுமே மத்திய படையை அனுப்ப வேண்டும். மத்திய படைகளை நியமித்தால் அனைவரது கைப்பைகள், சூட்கேஸ்கள் சோதிக்கப்படும். இதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். மத்திய படையினருக்கு உள்ளூர் மொழி தெரியாததால் பதற்றம் அதிகமாகி நிலைமை இன்னும் மோசமாகும். அவர்களுக்கும் மாநில போலீஸாருக்கும் அதிகார வரம்பு தொடர்பான பிரச்சினைகளும் எழும். 2009-ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால், நுழைவுவாயில்களில் ஏற்கெனவே கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்’ என்று மத்திய அரசிடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உயர் நீதிமன்றத்துக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு தேவைப்பட்டால், 650 காவலர்கள் தேவை. அவர்களுக்கு ஓராண்டுக்கு ரூ.32.73 கோடி செலவாகும். குறைந்தபட்சம் 6 மாதங்கள் என்றால் ரூ.16.60 கோடி தேவை. மத்திய படை பாதுகாப்பு தேவை என்றால், இத்தொகையை டெபாசிட் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு மத்திய அரசின் மனுவில் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

நீதிமன்ற பாதுகாப்பு விவகாரத்தை அரசியலாக்குவது வேதனை அளிக்கிறது. இது ஈகோ பிரச்சினை அல்ல. உயர் நீதிமன்றப் பாதுகாப்பு முக்கியம் என்ற அடிப்படையில் ஆராயவேண்டும். உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு மத்திய படைதான் பாதுகாப்பு வழங்குகிறது. இது வழக்கமானதுதான்.

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் 2 வெடிகுண்டு புரளி சம்பவங்கள் நடந்தன. சில வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற அறைக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். நீதிமன்றத்துக்குள் பதாகைகளை எடுத்து வருபவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை.

நீதிமன்ற வராண்டாவில் குழுவாக நின்று கோஷமிடுவது, நீதிமன்றத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்துவது போன்றவை ஆரோக்கியமானது அல்ல. இவற்றை கருத்தில் கொண்டுதான் மத்திய பாதுகாப்பு படை தேவை என்கிறோம்.

எனவே, சிஐஎஸ்எப் படையை உயர் நீதிமன்ற பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கான தொகையை மத்திய அரசிடம் தமிழக அரசு இன்னும் 7 நாட்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும். அதன்பிறகு, உயர் நீதிமன்றத்தில் சிஐஎஸ்எப் படையினரை பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளி விடுமுறைக்குப் பிறகு நவம்பர் 16-ம் தேதி உயர் நீதிமன்றம் திறக்கப்படும்போது இங்கு புதிய பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 17-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

நீதிபதிகள் இவ்வாறு உத்தரவிட்டதும், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி தெரிவித்தார்.
Keywords: சென்னை உயர் நீதிமன்றம், நவ.16 முதல் மத்திய படை பாதுகாப்பு, உச்ச நீதிமன்றம், தமிழக அரசு மேல்முறையீடு

விகல்ப்: ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் பயணிகளுக்கு புது திட்டம் .... பிடிஐ

Return to frontpage

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணிகளுக்காக, விகல்ப் என்ற புதிய திட்டத்தை ரயில்வே துறை ஞாயிற்றுக்கிழமை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், முன்பதிவு செய்த ரயிலில் டிக்கெட் உறுதி ஆகவில்லை என்றால், அதே மார்க்கத்தில் ஓடும் அடுத்த ரயிலில் டிக்கெட் உறுதி செய்யப்படும்.

இந்த மாற்று ரயில் திட்டத்தை நவம்பர் 1-ஆம் தேதி முதல் டெல்லி - லக்னோ மற்றும் டெல்லி - ஜம்மு வழித்தட்டத்தில் ஓடும் ரயில்கள் முன்பதிவில் சோதனை செய்யவுள்ளனர்.

தற்போதைக்கு விகல்ப் திட்டத்தை, இணையம் மூலம் அடுத்த 6 மாதங்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்தவர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் இது மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் இரண்டு ரயில்களுக்கும், இரண்டு வழித்தடங்களில் மட்டுமே செல்லுபடியாகும் என்று மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இணையம் மூலம் டிக்கெட் பதிவு செய்யும்போது, விகல்ப் என்ற தேர்வையும் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், அதே பாதையில் ஓடும் அடுத்த ரயிலில் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கும். இதன்மூலம் காத்திருப்புப் பட்டியலில் இருப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பும், பதிவு செய்யாமல் காலியாக இருக்கும் டிக்கெட்டுகளும் நிரப்பப்பட்டு இரண்டு விதங்களில் ரயில்வே துறையின் நோக்கம் நிறைவேறுகிறது.

விகல்ப் தேர்வை தேர்ந்தெடுத்தவர்களுக்கு, உறுதி செய்யப்பட்ட டிக்கெட் குறித்த எஸ்.எம்.எஸ் செய்தியும் வரும். மேலும் இதற்கு கூடுதல் கட்டணம் இல்லை. கட்டணங்களில் மாறுதல் இருந்தால் அதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட மாட்டாது. மாற்று ரயிலில் டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பயணியின் பெயர், முதல் ரயிலின் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெறாது. மாற்று ரயிலில் பயணம் செய்பவர்கள் என்ற புதிய பட்டியல் தயார் செய்யப்படும்.

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு எப்போதுமே அதிக மவுசு இருக்கும் நிலையில், குறிப்பாக பண்டிகை சமயங்களில் தேவை அதிகரித்து வருவதால் இந்த திட்டம் பயந்தரக்கூடும் என்ற் எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் சோதனையில் கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து மற்ற வழித்தடங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
Keywords: ரயில் டிக்கெட் முன்பதிவு, ஐஆர்சிடிசி, ரயில் டிக்கெட் பட்டியல், காத்திருப்போர் பட்டியல், ரயில்வே துறை திட்டம், விகல்ப், மாற்று ரயில் ஏற்பாடு

Friday, October 30, 2015

ஆம்புலன்சுக்கு வழிவிடுங்கள்

logo

சாலையில் போக்குவரத்து நெரிசலிலும், சுழல்விளக்கு எரிய ஒரு ஆம்புலன்சு வந்தால் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் நோயாளிதான் மனதுக்கு தெரியும். அத்தனை வண்டிகளும் ஒதுங்கி, அந்த ஆம்புலன்சுக்கு வழிவிடவேண்டும் என்பதுதான் விதி. ஆனால், இது சட்டபூர்வமான விதி என்று சொல்வதைவிட, மனிதாபிமான அடிப்படையில் உயிரைக்காப்பாற்ற செய்யப்படும் கருணை செயல் என்பதே பொருத்தமானதாகும். பொதுவாக, ஏதாவது விபத்து ஏற்பட்டு ஒருவரோ, பலரோ காயம் பட்டுக்கிடந்தால், உடனடியாக 10 நிமிடங்களுக்குள் ஆம்புலன்சு அங்குசென்று அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றால், நிச்சயமாக உயிர்பிழைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான், இந்த 10 நிமிடங்கள் பிளாட்டினம் நிமிடங்கள் என்று அழைக்கப்படுகிறது. முதல் ஒருமணி நேரம் தங்க நேரம் என்று கருதப்படுகிறது.

ஆக, எந்த ஒரு நோயாளியாக இருந்தாலும், அவரை பிளாட்டினம் நேரத்துக்குள் அதிகபட்சம் தங்க நேரத்துக்குள் அவர் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் இடத்தில் இருந்து, மருத்துவமனைக்கு கொண்டுசென்று உரிய சிகிச்சை அளித்தால் எமனிடம் இருந்து தப்பிவிடலாம். அந்த வகையில், உயிரைக்காப்பாற்ற முக்கியபங்கு வகிப்பது ஆம்புலன்சுதான். நோயாளி இருக்கும் இடத்துக்கும், அங்கிருந்து மருத்துவமனைக்கும் மின்னல் வேகத்தில் சென்றாகவேண்டும். அதற்குரிய வழியை விடவேண்டியது சமுதாயத்தின் கடமையாகும். ஆம்புலன்சு என்பது விபத்தில் சிக்கியவர்களை மட்டுமல்லாமல், திடீரென்று பிரசவம், மாரடைப்பு போன்ற நோய்களால் அவதிப்பட்டு சீரியசாக இருப்பவர்களையும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வாகனமாகும்.

தமிழ்நாட்டில் 2008–ம் ஆண்டுக்கு முன்பு ஆம்புலன்சு என்பது கிராமப்புறங்களிலும், ஏழைகளுக்கும் எட்டாக்கனியாக இருந்தது. ஆனால், 2008–ம் ஆண்டு 108 ஆம்புலன்சு சேவை தொடங்கப்பட்டவுடன், பரம ஏழைகள் வீட்டில் யாராவது சுகமில்லாமல் இருந்தால்கூட உடனடியாக 108–க்கு போன் செய்து அரசு மருத்துவமனையில் சேர்த்துவிடலாம் என்றும், சாலையில் ஏதாவது விபத்து நடந்தால் அந்த வழியாக செல்பவர்கள் 108–க்கு தகவல் தெரிவித்து அந்த உயிரைக்காப்பாற்ற உதவும் எண்ணமும் மக்களிடம் வந்துவிட்டது. 108 சேவை தொடங்கப்பட்டு கடந்த வாரம்வரை தமிழ்நாட்டில் 11 லட்சத்து 41 ஆயிரத்து 492 பேர்கள் ஆம்புலன்சு மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். நிச்சயமாக இதில் பெரும்பாலானோர் உயிர்பிழைத்திருப்பார்கள், 108–ஐ மனதில் நிறுத்தி நன்றி சொல்லிக்கொண்டு இருப்பார்கள். ஆனால், சமீபகாலங்களாக ஆம்புலன்சுக்கு சிலர் வழிவிடாமல், ஆம்புலன்சு அபயக்குரல் எழுப்பும் நிலையும், சிறிதும் இரக்கமில்லாமல் ஆம்புலன்சு பின்னால் சென்றால் சீக்கிரம் சென்றுவிடலாம் என்று அதன் பின்னால் செல்லும் வாகனங்களையும் பார்த்தால் நெஞ்சம் கொதிக்கிறது. இந்த அலட்சியப்போக்கு பல உயிரிழப்புகளுக்கு காரணமாக இருக்கிறது. இந்த ஆண்டு கடந்த ஆகஸ்டு மாதம் வரையில் மட்டும் சாலை விபத்துகளில் 10 ஆயிரத்து 583 பேர்கள் உயிரிழந்துள்ளனர். ஆம்புலன்சுக்கு வழிவிடும் உணர்வை வளர்க்க தேவையான விளம்பரங்கள் செய்யப்பட வேண்டும்.

கர்நாடக மாநிலத்தில் ஆம்புலன்சுகளை ஓவர்டேக் செய்பவர்கள் மற்றும் ஆம்புலன்சுகளுக்கு வழிவிடாதவர்களின் லைசன்சுகளை ரத்து செய்வதற்கான உத்தரவுகளை போக்குவரத்து மற்றும் காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படி ஒரு உத்தரவை தமிழ்நாட்டிலும் பிறப்பிக்கவேண்டும். 108 ஆம்புலன்சு ஊழியர்களும் இந்த சேவை தங்களுக்கு கிடைத்த தெய்வீக கடமையாக நினைக்கவேண்டும். ஆம்புலன்சில் அனைத்து உயிர்காக்கும் வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அங்குள்ள ஊழியர்களுக்கு உயர் பயிற்சி அளிக்கவேண்டும்.

Thursday, October 29, 2015

மவுனம் காக்கும் ஜெயலலிதாவும் அதிமுக தேர்தல் வியூகமும் ............... தீபா ஹெச்.ராமகிருஷ்ணன்

Return to frontpage

'வரவிருக்கும் 2016 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் பன்முனைப் போட்டி ஏற்பட்டால் அது எங்களுக்கே சாதகமாக அமையும்' எனக் கூறுகின்றனர் அதிமுக மூத்த தலைவர்கள் சிலர்.

ஒரு பக்கம் ஸ்டாலினின் 'நமக்கு நாமே - விடியல் மீட்புப் பயணம்', 'விஜயகாந்த்தின் மக்களுக்காக மக்கள் பணி' மறுபக்கம் அன்புமணியின் 'மாற்றம், முன்னேற்றம், அன்புமணி' பிரச்சாரம், இன்னொருபுறம் தமிழகத்தில் தங்கள் கட்சியை வலுப்படுத்தும் பாஜகவின் வியூகம், இவையெல்லாம் போதாது என மக்கள் நல கூட்டு இயக்கம் வலுவான மாற்று சக்தியாக அமையும் என்ற வைகோவின் நம்பிக்கை... இப்படி தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது ஆனால், அதிமுகவோ நிதானமான மவுனத்தை கடைபிடிக்கப்படுகிறது.

பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள இந்த நிதானம், மவுனம் குறித்து அதிமுகவின் ஒரு சில தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?

"எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடக்கின்றன. எதிர்க்கட்சிகள் வலுவானதாக இல்லாததால் வரவிருக்கும் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு வெற்றி காணும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எங்களுக்கு வெற்றி பெற்றுத்தர அரசின் சாதனைகள் மட்டுமே போதும்" எனக் கூறுகின்றனர்.

ஆனால், அரசியல் நோக்கர்கள் பார்வை வேறாக உள்ளது. "கடந்த காலங்களை திரும்பிப் பார்க்கும்போது தேர்தல் நெருங்கும் வேளையில் அதிமுக நிச்சயமாக கூட்டணி அமைக்கும் என்றே சொல்ல வேண்டும். 1996 தேர்தல் படுதோல்விக்குப் பின்னர் அதிமுக பொதுச் செயலாலர் ஜெயலலிதா தேர்தலுக்கு முன்னதாக வலுவான கூட்டணியை உருவாக்குவதில் திறம்பட செயல்பட்டிருக்கிறார். இதன் காரணமாகவே 2001, 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்கு வங்கியை அதிமுகவுக்கு சாதகமாக அவரால் திருப்ப முடிந்தது" என்கின்றனர் அவர்கள்.

இப்போதைக்கு, ஆளுங்கட்சியின் ஒரு பகுதி தலைவர்கள், தமிழகத்தில் பன்முனைப் போட்டி ஏற்பட்டால் அது தங்களுக்கே சாதகமாக அமையும் என நம்புகின்றனர். அதேவேளையில், தேர்தல் நெருங்கும் தருவாயில் எதிர்க்கட்சிகள் வலுப்பெறலாம் என்பதையும் அவர்கள் மறுக்கவில்லை என்பதே உண்மை.

அதிமுகவுக்கு நிலவும் சாதகமான சூழல் குறித்து மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆக் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்-ன் இணை பேராசிரியர் சி.லக்‌ஷ்மணன் கூறும்போது, "எதிர்க்கட்சிகள் வலுவான அணியாக திரளவில்லை. அவர்களது எதிர்ப்புக் குரல் ஒன்றுபட்டு ஒலிக்கவில்லை. இது அதிமுகவுக்கு சாதகமே. ஆனால், திமுக தனது உட்கட்சிப் பூசல்களை சீர் செய்து எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டினால், அது அதிமுகவுக்கு பெரும் சவாலாக அமையும்.

அண்மையில் நடைபெற்ற கவுரவக் கொலைகள் தொடர்பாக அரசு மவுனம் காத்து வருவது தலித்துகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற அரசின் சில சறுக்கல்களில் எதிர்க்கட்சிகள் ஆதாயம் தேடலாம்" என்றார்.

இதை முற்றிலுமாக மறுத்த அதிமுக மூத்த தலைவர் ஒருவர், "எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டாலும்கூட அதிமுகவே தனிப் பெரும்பான்மை உள்ள கட்சியாக வெற்றி பெறும். காரணம், முதல்வர் ஜெயலலிதாவின் பல்வேறு திட்டங்கள். அரசு அமல்படுத்தியுள்ள நலத்திட்டங்களால் மக்கள் பெருமகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த 2014 மக்களவை தேர்தலில் கட்சிக்குக் கிடைத்த 40% வாக்குகள் மேலும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது. இதுதவிர அரசு அறிவித்துள்ள விலையில்லா பொருட்கள் திட்டம் பெரும் பலமாக அமையும். அண்மையில், உருவாகியுள்ள மக்கள் நல கூட்டியக்கத்தால் எங்களுக்கு ஆதரவாக வாக்குகள் பிரியும்" என்றார்.

விவசாயிகள், தொழிலாளர்கள் அதிருப்தி:

அதிமுக வட்டாரம் 2016 தேர்தல் வெற்றி தங்கள் வசம் என்று கூறினாலும், பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறுகையில், "விவசாயிகள். விவசாயி தொழிலாளர்கள், சிறு, குறுந் தொழிலாளர்கள் மத்தியில் ஆளும் கட்சி மீது அதிருப்தியே நிலவுகிறது.

காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினை தீர்க்கப்படாததாலும்; வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான விலை நிர்ணய கோரிக்கைகளை இன்னும் நிறைவேற்றப்படாததாலும் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்குவது குறைக்கப்பட்டது விவசாய தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. நோக்கியா, பாக்ஸ்கான் ஆலைகள் மூடப்பட்டதால் தொழிற்சாலை ஊழியர்கள் பலரும் அதிருப்தியிலேயே இருக்கின்றனர்" என்றார்.

ஆனால், இதை மறுக்கும் அதிமுக ராஜ்யசபா எம்.பி. ரபி பெர்ணாட், "அதிமுக மக்கள் அபிமானத்தைப் பெற்றுள்ளது. இலவச திட்டங்களால் மட்டுமே உருவானது அல்ல அந்த அபிமானம். எனவே, எங்களுக்கு வெற்றி நிச்சயம்" என நம்பிக்கை தெரிவித்தார்.

பெயர் வெளியிட விரும்பாத, அதிமுகவை கூர்ந்து கவனித்து வரும் அரசியல் நோக்கர் ஒருவர் கூறும்போது, "அதிமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டது. எனவே, மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோது பெற்ற வெற்றியைப் போல் வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்" என்றார்.

ஆனால் தேர்தல் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற ரிஸ்க் எடுக்க ஜெயலலிதா துணிந்து நிற்க மாட்டார் என்றே தெரிகிறது. 2001-ல் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி உதவியுடன்; 2011-ல் தேமுதிக, இடது சாரிகள் கூட்டணி உதவியுடனும் ஆட்சியைக் கைப்பாற்றினார் என்பதை மறுக்க முடியாது.

2004 மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்தாலும், மதிமுகவுடன் கூட்டணி ஏற்படுத்தி திமுகவை மைனாரிட்டி அரசு என்ற நிலைக்குத் தள்ளினார் ஜெயலலிதா.

இத்தகைய சூழலில் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, "நடைபெறும் அரசியல் மாற்றங்களை எல்லாம் தீவிரமாக அலசி ஆராய்ந்த பிறகு கட்சியின் நன்மைக்கு ஏற்றவாறு முதல்வர் ஜெயலலிதா நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார். திமுக என்னதான மெனக்கிட்டு மெகா கூட்டணி அமைக்க அடித்தளம் இட்டாலும், அதை முறியடிக்கும் திட்டங்களை அவர் ஏற்கெனவே நிச்சயம் வகுத்து வைத்திருப்பார்" என்றார்.

தமிழில்: பாரதி ஆனந்த்

மகாமக விழாவுக்காக புதிய இணையதளம் தொடக்கம்..dinamani


By தஞ்சாவூர்,

First Published : 29 October 2015 12:21 AM IST


கும்பகோணத்தில் மகாமகம் விழா தொடர்பான புதிய இணையதளத்தை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகத் திருவிழா 2016 ஆம் ஆண்டு பிப். 22-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்காக தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கும்பகோணம் மகாமக விழா தொடர்பான புதிய இணையதளத் தொடக்க விழா கும்பகோணம் நகராட்சி படேல் மன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், புதிய இணையதளத்தை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் பேசியது:
மகாமக விழாவின் முக்கிய தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காகப் புதிய இணைதளத்தைத் தொடங்குவது எனத் தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கும்பகோணத்தில் உள்ள தங்குமிடம், கோயில்களின் தல வரலாறு போன்ற தகவல்களுடன் www.onlinethanjavur.com/mahamaham என்ற பெயரில் புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் மகாமக விழாவின் சிறப்புகள், பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள், பணிகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இணையதளத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.

தூய்மை உணவே முதல் தேவை!

Dinamani

By நெல்லை சு. முத்து

First Published : 29 October 2015 01:24 AM IST


"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்ற நிலை மாறிவிட்டது. இன்று "கலப்பட' உண்டி கொடுத்தோர் உயிர் பறித்தோரே என்று புது இலக்கியம் எழுதவேண்டி வரும். காரணம், இன்றைக்கு ஒவ்வா உணவினால் வரும் நோய்கள் பற்றிய அக்கறை அதிகரித்து வருகின்றது.
அதிலும், சமீபத்தில் "லிஸ்டிரியா மோனோ சைட்டோஜென்கள்' எனும் நுண்கிருமித் தாக்கத்தினால் பரவும் நோய்கள் படுபிரபலம். "லிஸ்டிரியாசிஸ்' என்கிறார்கள். வேறு ஒன்றுமில்லை. இது ஒருவகை ஹிஸ்டிரியா மாதிரி, மனநோய். குறிப்பாக, இறைச்சி மற்றும் பால் பொருள்களினால் பரவும் ரகம். இது காய்ச்சல், உடல்வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு என்று முன்னும் பின்னும் ஓட ஓட விரட்டும்.
அதிலும் வயதானவர்கள், கர்ப்பிணிகள், மழலைகள், நோயெதிர்ப்புத் திறன் குன்றிய நோஞ்சான்கள் என்றும் ஆள் பார்த்துத் தாக்கும் நுண்கிருமி.
ஒரே கலப்பட உணவை, ஒரே முறையில் தயாரித்து, ஒரே பந்தியில் அல்லது ஒரே தட்டில் இட்டுப் பரிமாறிச் சாப்பிட்டாலும் இத்தகைய நோய், சிலரைத்தான் குறிவைத்துத் தாக்குமாம். கர்ப்பிணிகள் என்றால் "கன்னிக்குட'த்தில் மிதக்கும் இந்த பாக்டீரியா மண்ணிலும் மனித இரத்தத்திலும் "ஹாய்யாக' வசிக்கும்.
பாலாடைக் கட்டி, சுட்ட மாமிசம் என அதி வெப்ப உணவும், அதிகுளிர் பதனப் பெட்டியும் இவற்றின் சுகவாச ஸ்தலங்கள். அதனால் பொதுவாக, உணவுகளைக் குளிர்பதனப் பெட்டிகளில் பனி உறைநிலை அளவுக்கேனும் பாதுகாக்க வேண்டும் என்கிறோம்.
இன்னொரு கலப்பு நோய், "டோக்சோபிளாஸ்மோசிஸ்'. இதற்கு "டோக்சோபிளாஸ்மா கொண்டாயி' என்ற முகிழ் உயிரி ஒட்டுண்ணியே காரணம். அரைவேக்காட்டு இறைச்சிக் கொழுப்பும், விலங்குகளின் மலம், சிறுநீர்க் கழிவுகளுமே இந்த ஒட்டுண்ணிக்கு வாடகை இல்லாத குடியிருப்புகள்.
பொதுவாக, வெப்ப நகர்ப்புறங்களிலும், ஈரப்பதம் மிக்க சேரிகளிலும் இவற்றின் இனப்பெருக்கம் அதிகம். இந்த நோய் சுண்டெலிகளை எளிதில் தாக்கும். அவற்றைத் தின்னும் பூனைகள் மலத்தின் வழி இந்த ஒட்டுண்ணி மனித உடம்புக்குள் ஏற்றுமதி ஆகும்.
மனித உடலில் முட்டைகளாகி வாழ்நாள் முழுவதும் உடம்புக்குள் பதுங்கியே இருக்கும். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், இந்நோயாளி, தனக்கு இத்தகைய சுகக்கேடு உண்டு என்றே உணர்வதும் கிடையாது. ஊழலுக்குள் மூழ்கி இருப்பதால், உணராமலே வாழும் அரசியல்வாதிகள் போல.
பலரும் தங்களுக்கு புளுக்காய்ச்சல் என்று நினைத்துக்கொண்டு கண்ணில் கண்ட மாத்திரைகளைத் தாங்களே வாங்கிச் சாப்பிடுவார்களாம். குருதிநீரில் "ஐ.ஜி.ஜி.' எனப்படும் "இம்மியுனோ குளோபுலின்-ஜி' என்ற புரதத்தினை ஆராய்ந்தால் நோய் கண்டு அறியலாம்.
ஆனால், நோயின் உக்கிரம் மூளையைப் பாதிக்கும்போதுதான் பித்துப் பிடித்தது தெரியவரும். பாதிப் பேர் தாங்கள் பேசுவது என்னவென்று புரியாமல் மேடையில் உளறுவார்கள். விழித்திரை அழற்சியால் கண்கள் கூசும். உங்கள் கண்ணில் நீர் வடிந்து கொண்டே இருக்கும். அப்புறம் என்ன, பார்வை மங்கும்.
வழக்கம்போல, கர்ப்பிணிகளுக்கான அபாயம் வேறுமாதிரி. இந்நோய் தாக்கினால் கருவில் வளரும் சிசுவைப் பாதிக்கும். பிள்ளை பிறந்து பல மாதங்களுக்குப் பின்னர் கூட கண்பார்வைக் கோளாறு வரலாம். வலிப்பு உண்டாகலாம். புத்தி மந்தம் ஆகலாம்.
ஆக, இந்தக் "கலாம்' வேறு மாதிரி. (பாருங்கள் அமெரிக்காவில் ஒரு கிருமிக்கு "கலாம்' பெயரை வைத்து மானத்தை வாங்குகிறார்கள்? நிலாத் தரையில் நம் நாட்டுச் சந்திரயானின் "மிப்' மோதுகலன் விழுந்த இடத்திற்கு அல்லவா "கலாம்' பெயரை வைத்து இருக்க வேண்டும்?)
இத்தகைய நச்சு ஒட்டுண்ணியில் இருந்து உங்களைக் காத்துக்கொள்ள வேண்டுமா? உணவை 74 பாகைக்கேனும் சூடாக்கி உண்ணுங்கள். விண்வெளியின் "கிரையோஜெனிக்' பொறிகலன் அளவுக்கு பனி உறைநிலைக்கும் கீழ் உணவைப் பத்திரப்படுத்தவும், பழங்களைத் தோல் உரித்துச் சாப்பிடவும். ஆடு, மாடுகள் மாதிரி அப்படியே தோலோடு விழுங்காதீர்கள்.÷
"இருட்டுக் கடை அல்வா' மகிமை அறிவோம். ஆனால், இருட்டுக் கடைகளாகப் பாதையோரம் வைத்திருக்கும் "தாபா' (இந்தச் சொல்லினைப் புரட்டிப் படியுங்கள் "பாதை' ஆகும்!) மேஜைகளில், வெட்டிக் கிடைப்பதை "வெட்டி' விழுங்குவானேன்?
செக்கச்சிவந்த காதல் பெண்களைப் பிச்சுப் பிச்சுத் தின்னவா என்று சிலர் பாடல் எழுதினாலும் எழுதினார்கள். நம்மூர் இளைஞர்கள் சிலர், செக்கச்செவேல் என்றிருக்கும் சிகப்பான மாமிசத் துண்டுகளையே காதலிக்கிறார்கள். அவற்றைப் பொரித்து எடுக்க இருட்டுக்கடைகளில் கொதிநிலை அதிகமான பன்றிக் கொழுப்பு கையாளப்படுகின்றது. நாடாப் புழுக்களின் கோடை வாசஸ்தலம் அது.
வீட்டுச் சமையல் அறையில் அன்பு அன்னை அல்லது மனைவி (ஆண்களும் சமைக்கலாம், தப்பு இல்லை.) சமைத்த உணவில் எறும்பு கண்டால் கொதிக்கிறோம். ஆனால், கொதிக்கும் வாணலியில் குதூகலிக்கும் பன்றிக்கொழுப்பில் செய்த உணவை விரும்பி உண்ணுவதோ?
உடலில் அதுவும் சிறுகுடலில் ஒட்டினாலும், கத்திரியால் வெட்டினாலும் தலைசாயாத இந்த நாடாப் புழுக்களின் முட்டைகள் நரகத்தில் கொதிக்கும் கொப்பரையிலும் உயிர்வாழக் கூடியவை. பிறகென்ன, உண்டவர் மண்டையிலும் மூளைக்குப் பக்கத்தில் "பிளாட்' போட்டுக் குடியேறும். கண்கள் சிவக்கும். முகம் வலிப்பில் ஒரு பக்கம் கோணல் ஆகும். நாளாவட்டத்தில் பைத்தியம் உத்தரவாதம்.
கலப்பட உணவால் நோய்கள் ஒருபக்கம். நல்ல உணவிலும் ஊட்டச்சத்துக் குறை பலவீனம் இன்னொரு பக்கம். அதிலும் உலகத்தில் ஏழில் ஒருவருக்கு இத்தகைய நுண்ஊட்டச் சத்துக் குறைபாடு உள்ளதாம். குறிப்பாக, இந்தியாவில் மூன்று குழந்தைகளில் ஒருவர் இத்தகைய சவலைப் பிள்ளைதானாம்.
குறிப்பாக இரும்புச் சத்து, துத்தநாகம், "வைட்டமின் ஏ மற்றும் அயோடின் ஆகிய சத்துக் குறைபாட்டினர் உலகில் பாதிக்குமேல் இருக்கிறார்களாமே. பிறந்த ஆறு மாதம் முதல் மூன்று ஆண்டுகளுக்குள் இரும்புச் சத்துக் குறை உடைய குழந்தைகள் ஐந்துக்கு நாலு பேர் என்றால் வேறு என்ன சொல்ல?
ஒரு கிலோ பாசிப் பருப்பில் ஏறத்தாழ 160 மில்லி கிராம் துத்தநாகம் உள்ளது. அதனால் தானிய உணவு நன்று.
ஏ வைட்டமின் குறைபாட்டினால் மழலைப் பிஞ்சுகளில் மூவரில் இரண்டு பேர் சிகிச்சை பெற வேண்டி இருக்கிறதாம். சிகப்பான உணவே சிறந்தது என்று உணவியல் விஞ்ஞானிகளும் பரிந்துரைக்கின்றனர்.
கண் நலம் பேணவும், புற்றுநோய் வராமல் காக்கவும் காரோட்டினாய்டுகள் இயற்கைச் சத்து உதவும். இது ஏ வைட்டமின்களின் தாய். கண், சுவாச மண்டலம், சிறுநீர்ப் பாதை, சிறுகுடல் எங்கும் முறையான பாதுகாப்புப் படலம் பூசுவது இந்த வைட்டமினின் தொண்டு. பொதுவாக, இளஞ்சிகப்பு, மஞ்சள் நிறக் காய்கனிகளில் இந்தச் சத்து அடங்கி இருக்கிறது.
இவற்றில் 700}க்கும் மேற்பட்ட திசு வேதிமங்கள் உள்ளன. அவற்றில் வெறும் 24 சத்துகள் மட்டுமே நம் அன்றாட உணவில் இடம்பெறுகின்றன. காரட், தக்காளி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கீரை வகைகள், புதினா போன்ற காய்கறிகள் உடலுக்கு நல்லது.
எப்படியோ, தொழிற்சாலைகளில் லைக்கோப்பீன், பீட்டா - காரோட்டீன், காந்தாக்சந்தைன், சீயாக்சந்தைன், அஸ்டாக்சந்தைன் ஆகிய ஐந்து காரோட்டினாய்டுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
அதிலும் ஏ வைட்டமின் அளவு மீறினாலும் சில சிரமங்கள் எழும். உடம்பில் தோல் உலரும். தலை அரிப்பு எடுக்கும். தலைமுடி உதிரும். கல்லீரல் பாதிக்கும். பசி எடுக்காது. குமட்டல் வரும்.
அயோடின் குறைவால் முன்கழுத்துக் கழலை நோயாளிகள் இந்தியாவில் 85 சதவீத மாவட்டங்களில் வசிக்கிறார்கள். வீடு கட்டி வாழ வேண்டும். விவசாயத்தையும், காப்பாற்றிப் போற்ற வேண்டும். இயற்கையை மட்டுமே நம்பினால், நவீன மக்கள் பெருக்க உலகினில் வளர்ந்துவரும் இந்த அதீத சூறைநோய்களுக்கு ஈடுகட்ட முடியாது. இதற்காகதான் நுண்ஊட்டச் சத்துகளையும் வலியுறுத்துகிறோம்.
பேய் முக நாய்களையும், ஆனை உயரப் பூனைகளையும் சமூக அந்தஸ்து கருதி வளர்ப்பவர்களுக்கும் ஒரு சொல். வேலைக்கு போகும் முன் நீங்கள் குளிக்கிறீர்களோ இல்லையோ, செல்லப் பிராணிகளை குளிப்பாட்டுங்கள். இல்லையென்றால் சம்பாதித்த பணம், கால்நடை மருத்துவச் செலவுக்கே போதாது. வருமானத்தில் பாதியை நாய் மேனியில் உலா போகும் நாடாக் கிருமி ஒட்டுண்ணிகளை ஒழிப்பதற்காகச் செலவிட வேண்டி வரும்.
சீனாவில் தயாரித்து மலிவான விலையில் பெட்டிக் கடைகளில் விற்பனை ஆகும் 'அஞ்சு ரூபா' பிஸ்கெட்டுகளிடம் கவனம் தேவை. செல்லப் பிராணிகளின் 'நாய் பிஸ்கோத்துகளை' செல்லக் குழந்தைகள் திருடிச் சுவைத்தால் சின்ன வயதிலேயே சிறுநீரகக் கற்கள் உபாதை வருகிறதாம். அயல்நாட்டில் சமீபத்திய உணவியலாளர் எச்சரிக்கை செய்துள்ளனர்.
இத்தனைக்கும் மத்தியில் அழற்சி அல்லது ஒவ்வாமை என்ற நோய் சர்வ சாதாரணம். மூக்குச்சளி பிடித்து விட்டதோ, மூக்கினுள் "ஃபுளுட்டிக்காசோன் புரொப்பயனேட்', "ட்ரை அம்சினோலோன்', "மொமெட்டாசோன்', "பியுதிசோனாய்டு' என்று சொட்டு மருந்துகள் இருக்கவே இருக்கின்றன.
தூசியும், கரப்பான் பூச்சியும் உண்டாக்கும் அதே அழற்சியை நாய், பூனை ஆகிய செல்லப் பிராணிகளும் இலவசமாக உங்களுக்கு வழங்கக் கூடும். எச்சரிக்கை. வயதான பிராணிகளின் மாமிசத்தையும் விற்றுப் பணம் பண்ணுகிறார்களாம் சில கடைக்காரர்கள். கன்றுக்குட்டி இறைச்சி என்று கதைக்கிறார்களாமே.
போகட்டும். ஒரு வழியாக, வாய் வழியாக, இத்தனை அழுக்கும் உள்ளே செலுத்துகிறோம்.
முதலில் அளவான தூய்மை உணவு. பின்னர்தான் வளமான தூய்மை இந்தியா.

கட்டுரையாளர்:
இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).
தூசியும், கரப்பான் பூச்சியும் உண்டாக்கும் அதே அழற்சியை நாய், பூனை ஆகிய செல்லப் பிராணிகளும் இலவசமாக உங்களுக்கு வழங்கக் கூடும், எச்சரிக்கை.

NEWS TODAY 25.01.2026