Thursday, February 11, 2016

விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை


பொதுமக்கள் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம்: தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை

THE HINDU TAMIL

ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம் என்று தமிழக மருந்து கட்டுப்பாடு துறை இயக்குநர் அப்துல்காதர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் மற்ற பொருட்களைப் போலவே மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு மருந்து வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி கடந்த ஆண்டு அக்டோபர் 13,14 ஆகிய தேதி களில் நாடு முழுவதும் உள்ள 8 லட் சம் மருந்து கடைகளை அடைத்து 40 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட் டனர்.

ஆன்லைனில் வேண்டாம்

ஆன்லைன் மருந்து விற்ப னைக்கு தடை விதிக்கக்கோரி மத் திய அரசை மருந்து வணிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற னர். இந்நிலையில் மத்திய மருந்து கட்டுப்பாட்டு மையம், ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதற்கு அனுமதி இல்லை. ஆன்லைனில் யாராவது மருந்து விற்றால் அவர்கள் மீது நட வடிக்கை எடுக்கலாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.

தமிழக மருந்து கட்டுப்பாடு துறையும் தீவிரமாக செயல்பட்டு ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்த சிலர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம் என்று தமிழக மருந்து கட்டுப்பாடு துறை தெரிவித்துள்ளது.

கடும் நடவடிக்கை

இது தொடர்பாக தமிழக மருந்து கட்டுப்பாடு துறை இயக்குநர் அப்துல்காதர் கூறியதாவது:

ஆன்லைனில் விற்கப்படும் மருந்துகளின் தரத்தை கண்டுபிடிப் பது கடினம். இதனால் மக்கள் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப் புள்ளது. ஆன்லைனில் மருந்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மருந்து கட்டுப்பாடு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நட வடிக்கை எடுத்து வருகிறோம். பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம். டாக்டர் பரிந்துரைச் சீட்டை காண்பித்து மருந்து கடைகளில் மருந்துகளை வாங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆன்லைனில் 19 நிறுவனங்கள்

இதுபற்றி தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் கூறியதாவது:

நாடு முழுவதும் 19 நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்று வருகின்றன. ஆன்லைனில் மருந்து கள் விற்பனைக்கு இதுவரை யாருக்கும் உரிமம் வழங்கவில்லை. ஆனால் சட்டத்தை மீறி மருந்து களை விற்பனை செய்து வருகின் றனர். இதனால் போலி மற்றும் தரமில்லாத மருந்துகள் புழக்கத்தில் வருவதற்கு வாய்ப்புள்ளது.

மருந்து என்பது மற்ற பொருட்களைப் போல் இல்லை, உயிர் காக்கும் பொருளான மருந்துகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும். மக்கள் டாக்டரின் பரிந்துரைச் சீட்டுடன் வந்து மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி உட்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Wednesday, February 10, 2016

நகை வாங்க ‘பான் கார்டு’ எதற்கு?

logo


கடந்த ஜனவரி மாதம் முதல் ரூ.2 லட்சத்துக்குமேல் நகை வாங்கும்போது, வருமானவரித்துறையிடம் விண்ணப்பம் செய்து பெற்ற நிரந்தர கணக்கு எனப்படும் ‘பான் கார்டு’ விவரத்தை கொடுக்கவேண்டும் என்ற மத்திய அரசாங்கத்தின் உத்தரவை எதிர்த்து, இந்தியா முழுவதிலும் உள்ள நகைக்கடைக்காரர்கள் இன்று ஒருநாள் அடையாள கடை அடைப்பு நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். நாடு முழுவதிலும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நகைக்கடைகள், 300 சங்கங்களின் கீழ் இயங்குகின்றன. தமிழ்நாட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகைக்கடைகள் இருக் கின்றன.

கருப்பு பணத்தை ஒழிக்கவும், வருமானவரி கட்டுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ‘பான் கார்டு’ கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சார்பில் கூறப்படுகிறது. இந்த புதிய கட்டுப்பாடு காரணமாக, கடந்த ஒரு மாதத்திலேயே நகைக்கடைகளில் விற்பனை 30 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டதாக நகைக்கடை அதிபர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன. இந்த விற்பனை வீழ்ச்சியால் அரசாங்கத்துக்கு கிடைக்கவேண்டிய மற்ற வரிகளின் வருமானமும் நிச்சயமாக குறைந்து இருக்கும். நகைக்கடைகளில் தற்போது உள்நாட்டு விற்பனை ஆண்டுக்கு ரூ.2 லட்சத்து 51 ஆயிரம் கோடியாகும். இந்தியாவில் உள்ள தங்க விற்பனையில் 50 சதவீதம் தமிழ்நாட்டில்தான் நடக்கிறது. 2018–ம் ஆண்டில் இந்த விற்பனை ரூ.5 லட்சம் கோடிக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒருமாதத்தில் 30 சதவீத விற்பனை குறைந்துவிட்டதால், தங்கத்தை யாரும் வாங்காமல் இருந்துவிட்டார்கள் என்று பொருளல்ல. ‘பான் கார்டு’ கேட்காத வியாபாரிகளிடம் வாங்கியிருப்பார்கள், அல்லது கிராமப்புறங்களில் உள்ள நகை தொழிலாளர்களிடம் வாங்கியிருப்பார்கள்.

இந்த திட்டத்தை நாட்டில் அனைவரும் ‘பான் கார்டு’ வாங்கியபிறகு, அல்லது வாங்க வைத்தபிறகு கொண்டுவந்து இருக்கலாம். ஏனெனில், இந்தியா முழுவதுமே இப்போது 22 கோடியே 30 லட்சம் பேர்களுக்குத்தான் ‘பான் கார்டு’ கொடுக்கப்பட்டுள்ளது. நகை வாங்க வருபவர்களில் 70 சதவீதம் பேர் கிராமப்புறத்தில் இருந்து வருபவர்கள்தான். பொதுவாக நகை வாங்க வருபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பார்கள். அதுபோல, கிராமப்புறங்களில் இருந்தும், வீடுகளில் சுபகாரியங்களுக்கும், பெண்களுக்கு அணிகலன்களுக்காகவும் நகை வாங்க வருவார்கள். இதுமட்டுமல்லாமல், விவசாய வருமானத்துக்கு வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு இவ்வளவு நாளும் ‘பான் கார்டு’க்கு அவசியமே இருந்திருக்காது. மேலும், தங்கத்தின் விலை தற்போது உயர்ந்துகொண்டே போகிறது. நேற்று காலையில் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 288 ரூபாய் அதிகரித்து, ரூ.21 ஆயிரத்து 344–க்கு விற்பனை ஆனது. ரூ.2 லட்சம் என்றால், செய்கூலி, சேதாரம், கல் விலை எல்லாம் கணக்கிட்டால் 7 சவரன்தான் தேறும். இப்போது திருமண நேரம். இந்த நேரத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் 7 பவுன் என்பது சாதாரணம். மேலும், ரூ.2 லட்சம் என்பதை சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வயிற்றைக்கட்டி, வாயைக்கட்டி கொஞ்சம் கொஞ்சமாக ரொக்கமாகவே சேர்த்து வைத்திருப்பார்கள். அவர்களிடம் ‘பான் கார்டு’ கேட்டால், இந்த பணம் எங்கிருந்து வந்தது? என்று கேட்பார்கள், நோட்டீசு அனுப்புவார்கள், வருமானவரி வளையத்துக்குள் தேவை இல்லாமல் விழவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் என்ற பயம் மக்களுக்கு இருக்கிறது.

பொதுமக்கள் வாங்கும் தங்கத்துக்கு நகைக்கடைகள் பல்வேறு வகைகளில் அரசுக்கு வரியை கட்டுகிறார்கள். ஆகவே, வருமான இழப்பு என்பது இருக்காது. மேலும், வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்து, தங்கம் வாங்கவரும்போது பணப்புழக்கம் அதிகரிக்கும். அது பொருளாதாரத்துக்கும் நல்லது. எனவே, தங்கம் வாங்குவதற்கு ‘பான் கார்டு’ தகவல் தரவேண்டும் என்பது உள்பட எந்தவித கட்டுப்பாடும் தங்கம் வாங்க வருபவர்களுக்கு, மத்திய அரசாங்கத்தால் விதிக்கப்படக்கூடாது.

Tuesday, February 9, 2016

குடும்ப வன்முறையும், குழந்தைகளும்

Dinamani



By அ. கோவிந்தராஜூ

First Published : 09 February 2016 01:18 AM IST


நான் பணியாற்றும் பள்ளியில், வாராந்திர விடுமுறைக்குப்பின் அன்றும் வழக்கம்போல் மழலையர் வகுப்புகள் தொடங்கின. குழந்தைகளின் பெயரைச் சொல்லி அழைக்க, யெஸ்! மிஸ். யெஸ்! மிஸ்.. என்று குழந்தைகள் சொல்ல, ஆசிரியை வருகைப் பதிவு எடுத்து முடித்தார். அப்போது ஒரு குழந்தை எழுந்து "மிஸ் எங்கம்மா செத்துப் போயிட்டாங்க' என்று சொல்ல ஆசிரியைக்குத் தூக்கி வாரிப் போட்டது.
உடனே, அந்தக் குழந்தையை அழைத்துக்கொண்டு எனது அறைக்கு வந்தார். மெதுவாக அச் சிறுமியிடம் பேசிப் பார்த்தேன். என்னிடமும் அப்படியேதான் சொன்னாள். ஆசிரியையிடம் சிறுமியின் அப்பாவைத் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு பேசச் சொன்னேன்.
இதற்கிடையில், அக்குழந்தையிடம் பேசியபோது அதிர்ச்சித் தகவல் ஒன்றைச் சொன்னாள். பேச்சின் இடையே அவளுடைய அப்பா கொத்தனார் வேலை செய்வதாகச் சொன்னாள்.
மீண்டும் உள்ளே வந்த ஆசிரியை கண்ணீர் மல்க ஏதோ சொல்ல விரும்பினார். ஒரு பலூனைக் கையில் கொடுத்து ஊதி விளையாடுமாறு அக்குழந்தையை வெளியே அனுப்பினேன். "ஹாய்! ப்ளூ பலூன்' என்றபடி வெளியில் சென்றாள். அக் குழந்தை சொல்வது உண்மைதான் என்றும் நேற்றுதான் காரியம் எல்லாம் முடிந்தது என்றும் அச் சிறுமியின் அப்பா சொன்னதாக என்னிடம் தெரிவித்தார்.
அச் சிறுமியைக் கவனமாகக் கண்காணிக்குமாறு ஆசிரியையிடம் சொல்லி அனுப்பினேன். என்றாலும் என் மனம் என்னவோ இதையே நாள் முழுவதும் அசைப் போட்டுக் கொண்டிருந்தது. அச் சிறுமியின் தளிர் விரலைப் பிடித்தபடி அடிக்கடி பள்ளிக்கு வரும் அந்த இளம்தாய் என் மனத் திரையில் தோன்றி மறைந்தார்.
கணவன் - மனைவி வாய்ச் சண்டை முற்றி வன்முறையில் முடிந்தது. அவர் சமையல் கட்டுக்குள் ஓடி மண்ணெண்ணையை மேலே ஊற்றிக்கொண்டு பற்ற வைத்துக் கொண்டார். அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நான்கு நாள்களுக்குப்பின் உயிரை விட்டார். கடைசி நேரத்தில் கணவன் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதால், "ஸ்டவ் வெடித்து ஆடையில் தீப்பற்றிக் கொண்டதாக' மரண வாக்குமூலம் கொடுத்தார். பிரச்னை அதோடு முடிந்தது.
இந்தப் பிரச்னையில் அதிகப் பாதிப்பு அந்தக் குழந்தைக்குதான். அந்தக் கோரக்காட்சி, நேரில் பார்த்த குழந்தையின் ஆழ் மனதில் பதிவாகி இருக்கும். வளர்ந்து பெரியவளாகும்போது தன் அப்பாவை ஒரு கொலைகாரனாகப் பார்ப்பாள்.
அது மட்டுமா? தான் செய்யாத தவறுக்கு அக் குழந்தை வாழ்நாள் முழுதும் தாய்ப் பாசத்துக்கு ஏங்கித் தவிப்பது எந்த விதத்தில் நியாயமாகும்? ஒவ்வோர் அம்மாவுக்கும் ஒரு வாசனை உண்டு. அதை அவளுடைய குழந்தை மட்டுமே முகர்ந்து உணர முடியும். அந்த வாசனையையும், தாயின் மடி சுகத்தையும் குழந்தைக்கு வேறு எவராலும் தர முடியாது.
உலகிலேயே அதிகமான குடும்ப வன்முறை நம் நாட்டில் நிகழ்வதாகவும், நம் நாட்டில் மட்டும் பார்த்தால் தமிழ் நாட்டில்தான் அதிகம் எனவும் ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.
குடும்ப உறுப்பினர்கள் கடுங்கோபம், வெறுப்பு, பொறாமை, அவமதிப்பு, பேராசை, கடுங்காமம், தான் என்ற தன்முனைப்புப் போன்ற எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வதால்தான் குடும்ப வன்முறைகள் உருவாகின்றன.
இந்த எதிர்மறை எண்ணங்கள் செயல் வடிவம் பெறும்போது சிக்கல் பெரிதாகிறது. வீட்டில் பெரியவர்கள் இருந்தால் எடுத்துச் சொல்லி அல்லது இடித்துச் சொல்லி சமாதானப்படுத்துவார்கள். கூட்டுக்குடும்ப அமைப்பு இப்போது சிதைந்து விட்டதால் குடும்பச் சண்டையைத் தடுத்து நிறுத்துவாரில்லை.
ஒரு கணவன் மனைவியைத் தாக்குவது (physical abuse), கெட்ட வார்த்தைகளால் திட்டுவது (verbal abuse), அவளுடைய சுய கௌரவத்திற்குப் பங்கம் ஏற்படுத்துதல் (emotional abuse), அவளுடைய விருப்பத்திற்கு மாறான அல்லது இயற்கைக்கு மாறான பாலியல் நுகர்வு (sexual abuse), அவளுடைய பெற்றோரிடம் பணம் வாங்கி வரச்சொல்லுதல் அல்லது சம்பளப் பணத்தைப் பிடுங்கிக்கொண்டு பூ பொட்டு வாங்குவதற்குக்கூட காசு தராமல் இருப்பது (Economical abuse) மற்றும் குடி போன்ற பல காரணங்களால் குடும்ப வன்முறைகள் தோன்றுகின்றன.
வன்முறையின் தாக்கம் எல்லை மீறும்போது கண நேரத்தில் கொலையிலோ, தற்கொலையிலோ முடிந்து விடுகின்றன. அதன் பிறகு அக்குடும்பம் புயலில் சிக்கிய கப்பல் போல தடுமாறுகிறது, சில சமயம் தடம் மாறுகிறது. இத்தகைய குடும்பங்களில் வாழும் சின்னஞ் சிறிய அரும்புகள் அன்புக்காக ஏங்கி அலை மோதுகின்றன.
கணவனும் மனைவியும் பொழுதுக்கும் சண்டையிடும் குடும்பங்களில் தற்கொலை, கொலை, மணமுறிவு முதலியவை ஏற்பட்டு, வளரும் குழந்தைகளின் மனநிலை வெகுவாகப் பாதிக்கப்படும், படிப்பில் பின்தங்கும்.
குடும்ப வன்முறைகளைத் தவிர்ப்பது எப்படி? குடும்பத்தில் உள்ள அனைவரும் சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அற வழியில் பொருளீட்டி, செலவைக் குறைத்துச் சேமிக்க வேண்டும். கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
இருவரும் ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசினாலே பாதிச் சிக்கல் தீர்ந்து விடும். ஆணாதிக்கப் போக்கை அறவே விட்டொழிக்க வேண்டும். மனைவிதான் வீட்டைப் பெருக்க வேண்டும் என்பதில்லை; கணவரும் பெருக்கலாம். செய்யும் தவறுகளைப் பெரிதுபடுத்தி வாதம் செய்வதை நிறுத்தி, மன்னிக்கும் மனப் பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தீயினால் சுட்ட புண்ணின் வடு மறைந்துவிடும். ஆனால், நாவினால் சுடும்போது ஏற்படும் வடு மறையவே மறையாது என்று வள்ளுவர் சொல்லுவதை கணவன் - மனைவி இருவரும் உணர வேண்டும்.
கணவன் - மனைவி சண்டை முற்றி அதன் வீச்சு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டால், உடனே கணவன் வீட்டை விட்டு வெளியே சென்று கோபம் தணிந்ததும் திரும்ப வேண்டும். இல்லையேல், ஒரு நாவலை எடுத்துச் சென்று அறையினுள் உட்கார்ந்து படிக்க வேண்டும்.
திருக்குறள் இன்பத்துப் பாலில் கணவன் - மனைவி உறவை நட்பு எனக் குறிப்பிடுவார் திருவள்ளுவர். எனவே, பெற்றோர் நண்பர்களாக வாழத் தொடங்கினால் மட்டுமே குடும்பச் சண்டைகள் ஒழிந்து இல்லந்தோறும் மகிழ்ச்சிப் பொங்கும். அங்கே குழந்தைகள் மன வளத்துடன் வளரும்.
இது சாத்தியமா? சாத்தியம். மனமிருந்தால் மார்க்கமுண்டு.

கூட்டங்களின் கொடிய முகம்


Dinamani


By எஸ். ஸ்ரீதுரை

First Published : 08 February 2016 01:05 AM IST


நம் நாட்டில் சட்ட திட்டங்களை மதிப்பது என்பதே ஓர் அலாதியான விஷயம்.
வலியோர் - எளியோர், பணக்காரர் - ஏழை, அதிகாரி - கடைநிலை ஊழியர், அரசியல் கட்சியினர் - சாதாரண பொதுமக்கள் என்ற எதிரெதிர்ப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் சட்டதிட்டங்களை மதித்து நடப்பதில் வெளிப்படையான வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன.
கூட்டங்கள் - தனி மனிதர் என்ற இன்னொரு பிரிவையும் சேர்த்தே அவதானிக்க வேண்டியுள்ளது. நியாயமான விஷயத்தைக் கேட்கவே ஒரு தனி மனிதன் தயங்க வேண்டியுள்ளது. ஆனால், கூட்டமாகப் பலர் சேர்ந்துவிட்டால் எத்தகைய அக்கிரமங்களையும் அரங்கேற்றி விடலாம் என்பது புதிய கலாசாரமாகியுள்ளது.
தனி மனிதன் ஒருவன் சற்றே நாகரிகம் கொண்டவன் போல் நடந்து கொண்டாலும், பல தனி மனிதர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டமாக உருவானால், அவர்களில் ஒவ்வொரு மனிதனும் ஒரு காட்டுமிராண்டி ஆகி விடுகிறான் என்பது இப்போது பொது விதி ஆகியிருக்கிறது.
பெங்களூருவில் ஒரு தான்சானிய மாணவி எல்லோரும் பார்க்கப் பலரால் தாக்கப்பட்டதை வர்ணிக்கக் காட்டுமிராண்டித்தனம் என்பதை விட வலுவான வார்த்தை ஒன்று கிடைத்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது.
சாலையில் விபத்து நேர்கிறது என்னும் போது, விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற முனைபவர்களைக் காட்டிலும், விபத்துக்குக் காரணமானவர்கள் என்று ஒரு கூட்டத்தால் கருதப்படுபவரை அடித்துத் துவைக்கும் நிகழ்ச்சிகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன.
திருட வந்து மாட்டிக் கொள்பவனை அல்லது மாட்டிக்கொள்பவளைக் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துக் குற்றுயிரும் குலை உயிருமாக ஆக்குவது அவ்வப்போது செய்தியாகி வருகிறது. நிஜத் திருடர்களை விட, திருடர்களாகத் தவறாக எண்ணப்படுபவர்களும் கூட இதிலிருந்து தப்ப முடிவதில்லை.
அரசியல் கட்சிகளோ, ஜாதி இயக்கங்களோ ஓர் ஊரில் மாநாடு கூட்டிவிட்டால் போதும், அந்தப் பகுதி மக்கள் படும் அவதி சொல்லி முடியாது.
ஓட்டல்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் வம்பு வளர்த்துப் பணம் கொடுக்காமல் போவது, தங்களுக்கு எதிரான இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட சிலைகள், அலுவலகங்கள், பேனர்கள், போஸ்டர்கள் ஆகியவற்றைச் சேதப்படுத்துவது, நினைவுச் சின்னங்களைச் சிதைப்பது இவையெல்லாம் தாராளமாக அரங்கேறும்.
நகரமே குலுங்கியது, சாலைகள் கிடுகிடுத்தன என்று மறுநாள் செய்தி வரவேண்டும் என்பதற்காகவே பெரும் கூட்டத்தைக் கூட்டி வித்தை காட்டும் பொறுப்பற்ற தலைமைகளின் கைங்கரியம்தான் இத்தகைய அத்துமீறல்களுக்கு அஸ்திவாரம் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ...?
தனிமாநிலக் கோரிக்கை, இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை என்று போராடும் அரசியல் கட்சியினரும், ஜாதி அமைப்பினரும் அரங்கேற்றும் அராஜகங்கள் ஒன்றா? இரண்டா?
முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற மீனா இனத்தவர் போராட்டம், குஜராத்தில் நடை பெற்ற படேல் இனத்தவரின் போராட்டம், வட இந்தியாவில் ஜாட் உள்ளிட்ட இனத்தவர்கள் அவ்வப்போது நடத்தும் போராட்டம் ஆகியவற்றால் பொதுச் சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நஷ்டங்களும், பொது மக்களுக்கு விளையும் இன்னல்களும் மறக்கக் கூடியவைதானா?
தமிழகத் தலைநகர் சென்னையை எடுத்துக்கொண்டால், சட்டக் கல்லூரி உட்பட, பல்வேறு மாணவர் அமைப்பினர் நடத்தும் போராட்டங்களின் போது எவ்வளவு பொருள்சேதங்களும், உடற்காயங்களும் ஏற்படுகின்றன. இரண்டு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையேயும், ஒரே கல்லூரியைச் சேர்ந்த மாணவர் குழுக்களுக்கிடையேயும் நடைபெறும் சண்டை சச்சரவுகளில் எத்தனை பொதுச் சொத்துக்கள் பாதிக்கப்படுகின்றன?
மாணவர்களின் போராட்டம் மற்றும் சண்டைதான் என்று இல்லை, கல்லூரி மாணவர் அமைப்புத் தேர்தல் வெற்றி மற்றும் நீதிமன்றங்களாலேயே கண்டிக்கப்பட்ட பேருந்து தினம் ஆகிய கொண்டாட்டங்களின் போதும் பொதுப் போக்குவரத்திற்கு எத்தனை இடைஞ்சல்கள்?
கொண்டாட்டத் தருணங்களின் போது கூட்டமாகச் சேருவோர் செய்யும் இடைஞ்சல்களைக் கூட ஒரு மாதிரி பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், பொது இடத்தில் ஏற்படுகின்ற விபத்துகளின் போது, குற்றவாளிகளைத் தண்டிக்கிறோம் என்று கூட்டமாகக் கிளம்புவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
அதிலும், பெங்களூர் சம்பவத்தை எடுத்துக் கொண்டால், இந்த தான்சானியா நாட்டு மாணவிக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமை எல்லாவிதத்திலும் கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
பெங்களூரில் தங்கிப் படிக்கும் ஆப்பிரிக்கப் பின்னணி கொண்ட மாணவர் ஒருவர் கண்மூடித்தனமாகத் தனது மகிழுந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதற்காக, அவரது இனத்தைச் சேர்ந்த மாணவியிடம் ஒரு கூட்டமே வன்முறை செய்வது என்பது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.
அரசியல் தலைவர்கள், கட்சியினர், ஜாதி அமைப்பினர், மாணவர்கள் ஆகியோர் கூட்டமாகத் திரளும் போது உருவாகின்ற ஒருவித கட்டுப்பாடின்மையும் வெறியும் பொதுமக்கள் அனைவரிடமும் பரவி விட்டால், அப்புறம் சட்டம் என்பது எதற்காக இருக்கிறது?
இவ்விதம் வெளிநாட்டுக் குடிமக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை நமது தேசத்தைப் பற்றிய மதிப்பினை உலக அரங்கில் குலைப்பதுடன், பிறநாடுகளுடனான் சுமுக உறவுக்கு வேட்டு வைத்துவிடும்.
சட்டம், கொஞ்சம் தாமதமாகவேனும், தனது கடமையைச் செய்ய நாம் அனுமதிக்க வேண்டும். கூட்டங்கள் அளிக்கின்ற தண்டனைகளும், சட்டத்தின் பார்வையில் தண்டனைக்குரியவைதான் என்பதைப் பொதுமக்கள் உணரவேண்டும்.

Monday, February 8, 2016

வாழ்வு இனிது: நடப்போம், நலம் பெற!

Return to frontpage

நடை அழகு

பிறந்த குழந்தை தானாகவே புரண்டு படுத்து, பிஞ்சுக் கால்களை மடித்துத் தவழத் தொடங்குவதைக் காட்டிலும் நெகிழச் செய்வது தத்தித் தத்தி நடக்கத் தொடங்கும் தருணம்தான். நடை அத்தனை மகத்துவமானது. ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரை உலகின் பெருவாரியான மக்கள் நடையின் மூலமாகத்தான் பயணித்தனர். நடப்பது என்பது சுவாசிப்பதைப் போன்ற இயல்பான செயல்பாடு. அதை நீரிழிவு வரும் நிலையிலோ வந்த பிறகோ மருத்துவர் சொன்ன பிறகும்கூட செய்யத் தயங்கும் அளவுக்கு மனச் சோம்பலுக்கு ஆளாகிவிட்டோம் நாம்.

நட ராஜா!

எரிக்கப்படாத கலோரிகள் உடல் பருமனை அதிகரித்து மாரடைப்பு, நீரிழிவு, மூட்டு வலி, மறதி உள்ளிட்ட நோய்களுக்கு இட்டுச்செல்லும். கலோரிகளை எரிக்கச் சிறந்த வழி நடை. ஒரு மணி நேரம் சுறுசுறுப்பாக நடந்தால் 415 கலோரிகள் எரிக்கப்படும். 6 இட்லியில் கிடைத்த கலோரிகளை ஒரு மணி நேர நடை மூலம் சமன்படுத்தலாம். ஒரு மசாலா தோசையில் 415 கலோரிகள் உள்ளன. மதிய சாப்பாட்டில்1200 கலோரிகள். சாப்பாட்டுப் பிரியராக இருந்தால் நிச்சயம் காலையும் மாலையும் இரு மணிநேரம் நடந்தாக வேண்டும்.

அரசியல் நடை

அரசியல் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் பல்வேறு விதமான தொழிலாளர்களும் நீதி கேட்டோ, நிதி கேட்டோ, ஓட்டு கேட்டோ நடைப் பயணம் மேற்கொள்கின்றனர். சட்டத்தை மீறி உப்பு காய்ச்ச நடந்தது, பூதானம் கோரி நடந்தது, மதுவிலக்குக்காக நடப்பது என்று நடைப் பயணம் சாத்வீகப் போராட்டங்களின் வழிமுறையாகவும் அமைகிறது. கோட்டை நோக்கி, முதல்வரின் வீடு நோக்கி, பிற நாட்டுத் தூதரகங்களை நோக்கி ... என நடைப்பயணங்கள் தொடர்கின்றன.

வீர நடை, விழிப்புணர்வு நடை

மிடுக்கான நடை எனபது ராணுவத்தினரின் வழக்கமான பயிற்சிகளில் ஒன்று. என்.சி.சி. போன்ற தேசிய மாணவர் படையினரும் ஆண்டில் ஒரு நாள் சாலை அணிவகுப்பு என்ற பெயரில் சில கிலோ மீட்டர்கள் நடக்கின்றனர். புற்று நோய், சர்க்கரை நோய் விழிப்புணர்வு போன்ற சமூக, மருத்துவ நோக்கங்களுக்காக மாரத்தான் நடைக்கும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

கலோரி எதிரி அல்ல

கலோரி என்றாலே உடல் நலத்துக்கு எதிரிபோலப் பார்க்கப்படுகிறது. ஆனால் அது நம் உடலுக்கு அத்தியாவசியமான ஆற்றல். உணவுப் பண்டங்கள் அனைத்திலும் வெவ்வேறு சதவீதத்தில் கலோரிகள் உள்ளன. அன்றாடம் நாம் செய்யும் வேலைகளுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவது கலோரிதான். வேலை செய்யச் செய்ய கலோரிகள் எரிக்கப்படும். எரிக்கப்படாத கலோரி கொழுப்பாக மாறி உடல் பருமனை அதிகரித்துவிடும். நமது அன்றாடச் செயல்களின் மூலம் 60% கலோரிகள் எரிந்துவிடும். மீதமுள்ள கலோரிகளை எரிக்கக் கூடுதல் உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி தேவை.

ஆன்மிக நடை

ஆதி சங்கரர், மத்வாசாரியர், ராமானுஜர், விவேகானந்தர், சிவானந்தர், ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள், விசிறி சாமியார், சைவ மடாதிபதிகள், ஆசார்ய துளசி உள்ளிட்ட ஜைன தீர்த்தங்கரர்கள், சீக்கிய மத குருக்கள்,இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், கிறிஸ்துவின் சீடரான புனித தாமஸ் உள்ளிட்டவர்கள்,அன்னை தெரசா, சத்ய சாய் பாபா உள்ளிட்டவர்கள் நடந்தே தம் பணிகளைச் செய்தனர். பக்தர்களும் திருவிழாக்களை ஒட்டியும் பிரார்த்தனையின் பேரிலும் பாதயாத்திரை செல்கிறார்கள்.

வியர்த்தால் எடை குறையுமா?

உடலின் வெப்ப நிலை அதிகரிக்கும்போது மீண்டும் குளிரூட்டவே வியர்வை சுரக்கிறது.ஆக, வியர்த்தால் எடை குறையாது என்கின்றனர் நிபுணர்கள். நம் உடலில் 450 கிராம் எடையைக் குறைக்க 3500 கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். ஆனால் வியர்வை மூலமாக உடலில் இருக்கும் நீரின் எடை மட்டுமே குறைகிறது.

சரியான நடை

நடப்பது இயல்பானதுதான் என்றாலும் எல்லோரும் சரியாக நடக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. முதுகெலும்பு நேராக இருக்க, கைகளை முன்னும் பின்னும் வீசி, பாதங்களைத் தரை மீது அழுத்திப் பதித்து நடக்க வேண்டும். என்னதான் டிரெட் மில்லில் நடைபயின்றாலும் காற்றோட்டமான வெளியில் சுறுசுறுப்பாக நடப்பதற்கு இணையாகாது. இறுக்கமான உடை அணிந்தோ, பளு தூக்கிக்கொண்டோ, மிகவும் நிதானமாகவோ நடந்து பயனில்லை. நடக்கும்போது பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.

வியர்வை நச்சுக் கொல்லி

வியர்வையை வைத்து கலோரி எரிவதைக் கணக்கிட முடியாது. ஆனால் அது உடலிலுள்ள நச்சுத்தன்மையை வெளியேற்ற உதவுகிறது. விறுவிறுப்பாக நடந்து வியர்க்கும்போது எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. தோல் மீது படிந்திருக்கும் கழிவுகள் அகலும், சிறு நீரகத்தில் கல் உருவாகாமல் தடுக்கப்படும், சளி காய்ச்சல் ஏற்படுத்தும் வைரஸ், பாக்டீரியாக்கள் அழிக்கப்படும்.

நோய் அகற்ற நடை…

தினந்தோறும் 30 நிமிட விறுவிறுப்பான நடை மாரடைப்பு, வலிப்பு, நீரிழிவுநோய், மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் உள்ளிட்ட நோய்களைத் தடுக்க உதவும். தசைகளுக்கு வலு சேர்க்கும், அதிகாலை சூரிய ஒளியில் நடப்பதன் மூலம் வைட்டமின் டி கிடைத்து எலும்புகள் வலுப்பெறும்.

வாழ்க்கையோடு கலந்தது…

இந்திய விவசாயிகளின் எண்ணிக்கை 26 கோடியே 30 லட்சம். எவ்வளவுதான் நவீன தொழில்நுட்பங்கள் வேளாண்மையில் புகுத்தப்பட்டாலும் விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் மட்டுமே இன்றும் நாம் சோற்றில் கைவைக்க முடியும். நாற்று நடுதல் முதல் நீர்ப் பாசனம், களை பறித்தல், அறுவடை வரை விவசாயிகள் தினசரி 15 கி.மீ. நடக்கிறார்கள். அதுவே அவர்களுடைய உடல் ஆரோக்கியத்துக்கும் ஆதாரமாகிறது. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் பேசிக்கொண்டே சராசரியாக நாள் தோறும் 40 கி.மீ. நடக்கிறார்கள்.

Sunday, February 7, 2016

கண்ணா இவர்களையும் காப்பாற்று!


Dinamani


By ஜோதிர்லதா கிரிஜா

First Published : 06 February 2016 05:20 AM IST


பல்லாண்டுகளுக்கு முன்னால், கல்கி இதழில் ஒரு சிரிப்புத் துணுக்கு வந்தது. எழுதிப் படமும் வரைந்தவர் அமரர் சாமா. அரைகுறை ஆடையணிந்து தெருவில் சுற்றும் பெண்களைப் பார்த்தபடி, மகாபாரத திரெளபதி கவலையுடன் கண்ணா இவர்களையும் காப்பாற்று என்று வேண்டிக்கொள்ளுவார்.
இந்நாளில் சில பெண்கள் கால்களில் எதுவுமே அணியாதது போல் தோல் நிறத்து ஒட்டுறைகளை (லெக்கின்ஸ்) அணிந்து செல்வதைப் பார்த்தால் திரெளபதி கண்ணனைக் கூப்பிட மாட்டார் என்றே தோன்றுகிறது. ஏனெனில், இத்தகைய பெண்களைக் கண்ணனாலும் காப்பாற்ற முடியாது என்று அவருக்குத் தெரியும்.
அண்மையில், "டீன் ஏஜ்' பெண்களுக்கான பனியன்கள் மிகவும் அருவருப்பான வாசகங்களைத் தாங்கி வருகின்றனவே, பெண்ணுரிமை அமைப்புகள் இவற்றைக் கண்டுகொள்ள மறுப்பது ஏன்? எனும் வாசகர் ஒருவரின் கேள்விக்கு, அசிங்கத்தைத் தாங்கிக்கொள்ளுவது அவர்களின் அடிப்படை உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. தவிர, இதையெல்லாம் தடுக்க முயல்வது பெண்ணியத்துக்கு எதிரானது எனும் துக்ளக் ஆசிரியர் சோவின் பதிலில் ஒலிப்பது நையாண்டி மட்டுமன்று; கசப்பும் வேதனையும் கூட அதில் ஒலிக்கின்றன.
பெண்ணுரிமைவாதிகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் பேசுவதையும், எழுதுவதையும் கவனிக்கும்போது அப்படித்தான் என்னைப்போன்ற பெண்ணுரிமைவாதி
களுக்கும் தோன்றுகிறது.
இதுபோன்ற வக்கிரமான வாசகங்கள் உள்ள பனியன்களைத் தயாரிப்பவர்களும் கண்டனத்துக்கு (ஏன் தண்டனைக்கும்) உரியவர்களே. முக்கால் நிர்வாணப் படங்களுடன் ஏடுகளை வெளியிடும் பத்திரிகைக்காரர்களும் கூடத்தான்.
இருக்க வேண்டிய அடிப்படைக் கூச்சநாச்சங்களைக் கூடத் துறந்து விட்டுச் சில பெண்கள் இப்படி அலைந்து கொண்டிருப்பதற்குப் பொறுப்பு ஏற்கவேண்டியவர்கள் பல தரத்தினராவர். இவர்களில் இப் பெண்களின் பெற்றோரும் அடங்குவர்.
நம் பெண்களில் சிலர் ஏனிப்படித் தரந்தாழ்ந்து போயினர் என்பதற்கான பல காரணங்களிடையே கூட்டுக் குடும்பங்கள் குலையத் தொடங்கி உள்ளதால் கவனிக்கவோ, கண்டிக்கவோ, வழிகாட்டவோ வீட்டில் பெரியவர்கள் அற்றுப் போனதும் ஒரு காரணமாகும்.
கண்ணியமாக உடையணியும் பெண்களையும், சின்னஞ்சிறு அறியாச் சிறுமிகளையும் கிழவிகளையும்கூடச் சில ஆண்கள் விட்டு வைப்பதில்லை என்கிற கசப்பான உண்மையையும் இங்கே சொல்லத்தான் வேண்டும்.
எனவே, அவர்களின் தவறான நடத்தைக்குப் பெண்களின் உடையைக் காரணம் காட்ட முடியாது என்கிற வாதத்தைச் சில பெண்ணியக்காரர்கள் முன்வைப்பதை புறந்தள்ளவும் முடியாது. ஆனால், இது விவாதத்துக்கு மட்டுமே சரியாக இருக்கலாமே தவிர, இதில் விவேகம் துளியும் இல்லை.
கண்ணிய உடையணிபவர்களே சீண்டப்படும் போது, வெளிப்பாடாக உடையணிபவர்கள் இன்னும் அதிக ஆபத்தைத் தாங்களாகவே தேடிக் கொள்ளுகிறார்கள் என்கிற வாதத்தில் பெண்ணியக்கவாதிகள் என்ன தவற்றைக் காண்கிறார்கள் என்று நமக்குப் புரியவில்லை.
சில நாள்களுக்கு முன்னால், அனைத்திந்திய மாதர் இயக்கத்தோடு தொடர்பு உடைய ஒரு தலைவி, Youlook sexy (நீ செக்ஸியாகத் தோன்றுகிறாய்) என்று ஓர் ஆண் ஒரு பெண்ணிடம் கூறினால் அதை ஒரு compliment (பாராட்டு) ஆக எடுத்துக்கொள்ள வேண்டுமேயல்லாது பெண்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது என்று திருவாய் மலர்ந்தார். இதைப் படித்த போது அதிர்ச்சியாக இருந்தது.
செக்ஸி என்பதற்குக் கண்ணியமான பொருளும் உள்ளதோ என்றறியச் சில அகராதிகளைப் புரட்டினால், எல்லாவற்றிலுமே, பாலுணர்வைத் தூண்டும்படியான என்கிற பொருளே தரப்பட்டிருந்தது. இத்தகையப் பாராட்டுக்கு நன்றி கூறி ஒரு பெண் புன்னகை செய்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும்?
சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்: "தன் மனைவியைத் தவிர வேறு பெண்மணி ஒவ்வொருத்தியும் ஓர் ஆணுக்கு அன்னையாகவே தோன்ற வேண்டும். பால் வேற்றுமையைப் புறக்கணித்துவிட்டு, ஆண்களுடன் பழகத் தெரிந்து கொள்ளாத அமெரிக்கப் பெண்கள் உண்மையான முன்னேற்றத்தை அடையப் போவதில்லை... அமெரிக்க ஆண்கள் பெண்களை வணங்கித் தலை தாழ்த்தி, அவர்கள் முதலில் அமர ஆசனம் அளிக்கிறார்கள்.
அதே மூச்சில், "ஓ உன் விழிகள் எவ்வளவு அழகானவை' என்று ஒரு பெண்ணின் அழகைப் புகழ்கிறார்கள். இந்த அளவுக்கு ஆடவர்க்கு எப்படித் துணிச்சல் வந்தது? பெண்களாகிய நீங்கள் இதை அனுமதிக்கலாமா? இத்தகையச் சொற்கள் ஆண் -பெண்களை இழிவு நோக்கியே இட்டுச் செல்லும்'.
}விவேகானந்தரின் இந்த அறிவுரையை, மேற்சொன்ன பெண்ணுரிமை இயக்கத் தலைவி பிற்போக்குத்தனம் என்பாரோ?
ஆண்களைத் திருத்த வேண்டும்தான். அதற்கான முயற்சிகளும் தேவையே. ஆனால், அது மெத்தக் கடினம். எனினும், நல்ல ஆண்கள் நிறையவே இருக்கிறார்கள்.
அவர்களின் கண்ணியத்தையும் நாசமாக்கும் இழி செயலை, தங்களின் தவறான நடையுடைபாவனைகள் வாயிலாக பெண்கள் செய்யக் கூடாது. சம உரிமை என்பதன் பெயரால் பெண் தன்னைத் தாழ்த்திக் கொள்ளக் கூடாது.
ஒரு பெண் எதிர்ப்பட்டால், விலகி வழி விட ஓர் ஆணுக்குத் தோன்றும்படி அவள் உடையணிந்திருக்க வேண்டுமேயல்லாது, விரசமான சொற்களை அவளை நோக்கிச் சொல்லும் வக்கிரத்தை, அவளது தோற்றம் விளைவிக்கக் கூடாது.
சில நாள்களுக்கு முன், ஒரு பெண்ணுரிமைவாதி "இருட்டில் உலாவுவது ஆண்களுக்கு மட்டுமே உள்ள உரிமையா?' எனும் கேள்வியை எழுப்பி அந்த உரிமை பெண்களுக்கும் உண்டு என்று வாதிட்டார். சில வாதங்கள் கேட்பதற்கு மட்டுமே சரியானதாக இருக்கும். நடைமுறை என்கிற ஒன்றையும் நினைத்துப் பார்க்கும் அறிவு நமக்கு வேண்டும்.
ஆண்கள் அனைவரும் திருந்திய பின் (அதாவது அத்தைக்கு மீசை முளைத்து அவள் சித்தப்பா ஆனதன் பிறகு), இது போன்ற அசட்டுத்தனங்களைப் பெண்கள் செய்யட்டும்.
மேலும், இது போன்ற உடைகள் ஆரோக்கியத்துக்கு ஊறு செய்பவை. இவற்றைத் தயாரிப்பதையும் அரசு தடை செய்ய வேண்டும்.

கொடிதினும் கொடிது - முதுமையில் தனிமை

Dinamani


By இரா. கதிரவன்

First Published : 06 February 2016 05:19 AM IST


யாண்டு பல ஆக நரை இல ஆகுதல் - எனத் துவங்கும் பாடல் ஒன்று புறநானூற்றில் உண்டு.

பண்பாலும் அறிவாலும் நிறைந்த மனைவி மக்கள், கற்றறிந்த சான்றோர் வாழும் ஊர், அறம் வழுவா நல்லாட்சி தரும் அரசு - தீங்கு செய்யா அரசன் ஆகியோர் அமைந்தமையால், தமக்கு முதுமை எய்தியும், நரை விழவில்லை என, ஒரு புலவர் எழுதிய பாடல். இது அந்தக் கால நிலை...
இன்றைய காலகட்டத்தில், முதியோர் நிலை எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க எத்தனிப்போம். கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில்,மருத்துவ வசதிகள் மற்றும் கல்வி வசதிகள் அநேகமாக எல்லாப் பகுதிகளிலும் சென்றடைந்திருக்கின்றன. இது தவிரவும், மத்திய - மாநில அரசுகளின் திட்டங்கள் எல்லோருக்கும் உணவு என்ற உணவுப் பாதுகாப்பினை பெருமளவுக்கு உறுதி செய்கின்றது
.
இந்தச் சூழலில் மக்களின் ஆயுள்காலம் அதிகரித்திருக்கிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில், மக்களின் சராசரி ஆயுள்காலம் 43 ஆண்டுகளாக இருந்தது. இப்போது, மேற்சொன்ன காரணங்களால்,சராசரி ஆயுள்காலம் 62-ஐ எட்டியிருக்கிறது.

இன்றைய தினம், பெண்கள் கல்வியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆண் - பெண் இரு பாலரும் வேலைக்குச் செல்லுதல் - குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அளவு சுருங்கியிருப்பது - கூட்டுக் குடும்ப முறை அநேகமாக இல்லாதிருப்பது, நகரமயமாதல் காரணமாக கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடும்பங்கள் இடம் பெயருதல் மற்றும் முக்கியமாக உலகமயமாதல் காரணமாக வேலை செய்யும் ஆண் - பெண் இரு பாலரும் புலம் பெயருதல் போன்றவை, சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்த மாற்றங்கள், வயோதிகத்தை அடைந்தவர்கள் பால் ஏற்படுத்தும் தாக்கத்தைக் காண முற்படுவோம்.

முதியோர்களை மூன்று முக்கிய பிரிவினர்களாக பிரிக்கலாம்.
அவர்களது பிள்ளைகளுடன் அல்லது உறவினர்களோடு வசிப்பவர்கள்.
கணவன் - மனைவி என்று இருவர் மட்டும் தனியாக வசிப்பவர்கள்.
ஆணோ அல்லது பெண்ணோ தனியாக வசிப்பவர்கள்.
மத்திய அரசின் புள்ளியியல் துறை கணக்கெடுப்புப்படி, இந்திய மக்கள்தொகையில், 1960-ஆம் ஆண்டு மக்கள்தொகையில் ஐந்து சதவீத மக்கள் 60 வயதை கடந்தவர்களாக இருந்தார்கள். 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகையில், சுமார் 10 சதவீதம் பேர் 60 வயதைக் கடந்தவர்கள்.
இந்த வயோதிகர்களில், சுமார் 20 சதவீதம் பேர் கணவன் - மனைவி என்ற இருவர் மட்டும், வேறு துணை ஏதுமின்றி வாழ்கின்றனர். மேலும், ஐந்து சதவீதம் பேர் எந்தத் துணையும் இன்றி தனித்து வாழ்கின்றனர்.
ஆக, தற்போதைக்கு சுமார் 10 கோடிக்கும் மேல் 60 வயதைக் கடந்தவர்கள். இவர்களில் கணவன் - மனைவி மட்டுமோ அல்லது துணையின்றியோ வாழ்வோரின் எண்ணிக்கை சுமார் மூன்று கோடியைத் தாண்டும். வயோதிக தம்பதியினர், தனித்து வாழும் முதியோர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், பிள்ளைகள் அல்லது உறவினர் என எவரும் இல்லாதவர்கள், ஏழ்மையில் உழல்பவர்கள் என்ற பிரிவினராக இருக்கின்றனர்.

சில பொதுவான விஷயங்கள்: ஒரு குறிப்பிட்ட வயதினைத் தாண்டி வசிக்கின்ற எல்லோரையும் முதுமை பீடிக்கின்றது. முதுமையில் கணிசமானவர்கள் எதிர்கொள்ளும் சில பொதுவான பிரச்னைகள்: மற்றவர்களால் உதாசீனப்படுதல், பொருளாதார ரீதியில் பிறரைச் சார்ந்திருக்கும் நிலை, தளர்ச்சியுறும் உடல்நலம், குடும்பத்தினரிடமிருந்து தனிமைப் படுதல், பிறரோடு ஒன்ற முடியாத நிலை, பிறர் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளாகுதல், வாழ்க்கையில் பிடிப்பின்மை அல்லது அலுப்பான சூழல்.

முதுமை என்பது ஏதோ ஒரே இரவில் வந்துவிடுவதில்லை. எனவே, முதுமை எய்தும் முன்னரே, தன்னை அதற்குத் தயார்படுத்திக் கொள்ளுதல் முக்கியம். தவிரவும், முதுமை யாரைப் பீடிக்கிறதோ அவர்களை மட்டுமல்ல, அவர்களை சுற்றி இருப்பவர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, முதுமையை எய்துபவர்கள் மட்டுமல்ல, அவர்களைச் சேர்ந்தவர்களும்கூட தம்மை, இந்தப் புதிய சூழலுக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதியோர் எதிர்கொள்ளும் பிரச்னைகளை இரு முக்கியப் பிரிவாகப் பிரிக்கலாம். முதல் பிரிவு அவர்களது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்படுதல், அது தொடர்பான பிரச்னைகள்.

இதன் காரணமாக, இவர்கள் வெளியில் எங்கும் செல்ல இயலாமல் வீட்டில் சிறைவாசம்போல் முடங்கிக் கிடத்தல், வீட்டில் சிறு சிறு வேலை செய்ய இயலாமை, மளிகை, கறிகாய், அத்தியாவசியப் பொருள்கள் வாங்க பிறரைச் சார்ந்திருத்தல், சமூகத் தொடர்பு அற்றுப் போகுதல், எழுதப் படிக்க இயலாமை உள்ளிட்ட பிரச்னைகள். இந்தப் பிரச்னைகள் அனைத்தும் உடல் சார்ந்தவை. இவர்களைச் சுற்றி இருப்பவர்கள், அக்கறையோடு சிறு சிறு உதவிகள் செய்தால்கூட, ஓரளவு இப்பிரச்னைகளை முதியோரால் சமாளிக்க இயலும்.

அடுத்தது, மனம் சார்ந்த பிரச்னைகள்: பிறரைச் சார்ந்திருப்பது, அவர்களால் உதாசீனப்படுவது, நிந்திக்கபடுவது, பய உணர்வு, தனிமை உணர்வு போன்றவற்றால் அவதிப்படுவது, நேரத்தை உபயோகப்படுத்த இயலாமை, பொழுதுபோக்கின்மை மற்றும் வாழ்வில் சுவாரசியமின்மை போன்றவை ஏற்படுத்தும் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகும்.
இவர்களது மிக முக்கிய தேவை என்பது, அன்பு, ஆதரவு, கரிசனம், இன்சொல், கவனிப்பு போன்றவைதான். ஆனால், முதியோர் அனுபவிக்கும் பிரச்னைகளில் மிகக் கொடுமையானது,அவர்கள் அனுபவிக்கும் தனிமைதான்.

உதாரணத்துக்கு, ஒரு பெரிய நிறுவனத்தில் அல்லது கல்லூரியில் பலரோடு சேர்ந்து பணி செய்த ஒருவர், தனிமையில் பேச்சு துணைக்கூட இன்றி இருப்பது, தன் மனதில் தோன்றும் கருத்துகளை பகிர்ந்து கொள்ளக்கூட எவரும் இல்லாது இருத்தல், தனது சுக, துக்கங்களை மனம் விட்டு பேச முடியாது இருத்தல் போன்ற விஷயங்கள் அவர்களை கொடுமைப்படுத்துகின்றன.

வேலைக்கார ஆள் அல்லது வீட்டுக்கு வரும் விற்பனை பிரதிநிதி ஆகியோரோடு மட்டுமே பேசக்கூடிய அவல நிலையில் இருக்கும் முதியவர்கள், இன்று சென்னை போன்ற பெரு நகரங்களில் ஏராளம். வாரம் ஒரு நாளோ அல்லது மாதம் ஒரு நாளோ, அயல் நாட்டிலிருந்து வரும் தொலைபேசி அழைப்பு ஒன்றுதான், அவர்களுக்கு எங்கோ ஒரு மகன் அல்லது உறவினர் இருக்கிறார் என்பதற்கான ஒரே அடையாளம்.
தவிரவும், இவர்களின் இந்தப் பிரச்னைகளை பிறரோடு பகிர்ந்து கொள்ள முடியாதபோது, அவற்றுக்கு தீர்வு என எதுவும் கண்ணில் தெரிவதுமில்லை. நகரங்களோடு ஒப்பிடுகையில் கிராமங்களில் நெஞ்சில் கொஞ்சம் ஈரம் ஒட்டிக் கொட்டிருப்பது என்னவோ உண்மை.

வயோதிகர்களை அவர்கள் தனிமையில் இருந்தால்,அவர்களை வீட்டில் எட்டிப் பார்ப்பது, பேச்சுக் கொடுப்பது, சிறு சிறு உதவிகள் செய்வது என்ற பழக்கம் நம் கலாசாரா ரீதியாக இன்னும் கிராமங்களில் மறையாமல் இருப்பது சற்று ஆறுதலான விஷயம். ஆனால், பெருநகரங்களில் பக்கத்து வீட்டுக்காரரைத் தெரியாது என்று கூறுவது போலி கெளரவம்.
முதியோரின் இத்தகைய பிரச்னைகளை அரசு அடையாளம் கண்டு கொண்டிருக்கிறது. அதனால் சில சட்ட ரீதியான நடவடிக்கைகளை அரசு செய்துள்ளது. முதியோருக்கு உதவ முற்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு ஊக்கம் மற்றும் சலுகைகள் தருவது, முதியோர் பிரச்னைகள் - தீர்வுகள் குறித்த தகவல் திரட்டுதல் மற்று ஆய்வு ஆகியனவற்றுக்கு உதவி, ரயில் பிரயாணம் மற்றும் சேமிப்பு ஆகியவற்றில் சலுகைகள் என்ற விஷயங்களில் நடவடிக்கை எடுத்திருக்கின்றன.
முதியோர் படும் இன்னல் குறித்து சராசரி மனிதர்கள் என்ன செய்ய முடியும்? நாளை நமக்கு முதுமை வரும்போது எந்த வகையில் நாம் நடத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோமோ, அதேபோல இன்று நம் முன் நடமாடும் முதியோரை நாம் நடத்த வேண்டும் என்ற கருத்தினை அனைவரும் மனதில் பதித்துக் கொள்ளும்போது, நம்மைச் சுற்றியுள்ள முதியோர், நமக்கு அன்னியர்களாகத் தெரிய மாட்டார்கள்.

நாம் எங்கோ சந்திக்கும் ஒரு முதியவர் அல்லது மூதாட்டியின் உடல் நலம் விசாரிப்பதோ அல்லது பேச்சுக் கொடுப்பதோகூட அவர்களுக்குப் பெரும் ஆறுதல் தரும். அதுகூட முடியவில்லை என்றால், ஒரு சிறு புன்னைகைகூட அவர்களுக்கு நிம்மதி தரும்.

பெரும்பாலான முதியோர்கள் ஏங்குவது நிச்சயமாக பணத்துக்காக அல்ல. அவர்களின் தேவை கொஞ்சம் அன்பு, கரிசனம், நல்லதாக நான்கு வார்த்தைகள், முடிந்தால் கொஞ்சம் உதவி அவ்வளவுதான். இதனை செய்யும் திறன் நம் எல்லோரிடமும் இருக்கிறது.

முதுமை ஒரே இரவில் வந்துவிடுவதில்லை. முதுமை யாரைப் பீடிக்கிறதோ அவர்களை மட்டுமல்ல, அவர்களை சுற்றி இருப்பவர் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, முதுமையை எய்துபவர்கள் மட்டுமல்ல, அவர்களைச் சேர்ந்தவர்களும்கூட தம்மை, இந்தப் புதிய சூழலுக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

NEWS TODAY 29.01.2026