Thursday, February 18, 2016

ஊழியரல்லர் பணியாளரே!


Dinamani

By சமதர்மன்

First Published : 18 February 2016 01:51 AM IST


ஊதியம், பணி இந்த இரண்டு சொற்களுக்கும் மலையளவு வேறுபாடு உண்டு. சொற்பமான ஒரு தொகையைப் பெற்றுக்கொண்டு ஒரு பணியினை செவ்வனே செய்து முடிக்கும் செயலே ஊழியம் ஆகும். ஊழியம் என்னும் சொல் சேவை எனவும் பொருள்படும்.
அதேவேளையில், ஒரு கணிசமான தொகையை மாத ஊதியமாக பெற்றுக் கொண்டு ஒரு வேலையை செய்வது பணி ஆகும். அனைத்து தரப்பு அரசுப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அரசு ஆசிரியர்களின் பணி இத்தகையதே.
எனவே, அரசு வேலை செய்யும் கடைநிலைப் பணியாளர் முதல் மேல்நிலை அதிகாரி வரையிலும், துவக்கப்பள்ளி ஆசிரியர் முதல் கல்லூரி பேராசிரியர் வரையிலும் உள்ள அனைவரையுமே அரசுப் பணியாளர் என்றே வகைப் படுத்த முடியும்.
அரசுப் பணியாளர்களுக்கு உரிய அகவிலைப் படி உயர்வு உ ள்பட பல பண பலன்களை அரசு பட்டியலிட்டு வழங்கியே வருகிறது. தனியார் நிறுவனப் பணியாளருக்கோ அல்லது சுயதொழில் புரிவோருக்கோ இத்தகைய பண பலன்கள் சாத்தியமற்றவையே.
அரசுப் பணியாளர்களை அரசு செல்லப் பிள்ளைகள் போல நடத்தி வந்தாலும் அதைப் பொருள்படுத்தாமல் கோரிக்கை மேல் கோரிக்கை வைத்து அரசுக்கெதிராக போராடவே அனைத்து தரப்பு அரசுப் பணியாளர்களும் முன் வருவது அரசிடமும் பொது மக்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
சம்பளம், சலுகைகளை மட்டும் உயர்த்திக் கேட்கும் இவர்கள், ஊதிய உயர்வுக்கு ஏற்ப பணியை அரசு அதிகப்படுத்தினால் ஏற்றுக்கொள்வதில்லை. தனியார் நிறுவனங்கள் பணிச் சுமையைக் கூட்டிய பின்பு தானே ஊதிய உயர்வினை அறிவிக்கின்றன.
அனைத்து தரப்பு அரசுப் பணியாளர்களுக்கென இருக்கும் வாக்கு வங்கியை கருத்தில் கொள்ளாமல், அரசு கீழ்க்கண்ட சட்டதிட்டங்களை நடைமுறைப் படுத்தி நிர்வாகத்தை துரிதப்படுத்தலாம்.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் காலதாமதம் இன்றி உரிய நேரத்தில் அலுவலகம் வருவதை உறுதி செய்யவும், அலுவலகம் அல்லது பள்ளி முடியும் முன்பே வீட்டிற்கு செல்வதைத் தடுக்கவும் பயோ - மெட்ரிக் முறையிலான வருகைப் பதிவேடு முறையை நடைமுறைப் படுத்தலாம்.
ஆண்டுதோறும் அரசளிக்கும் 100 நாள்களுக்கும் மேற்பட்ட விடுமுறைகளை அனுபவித்த பிறகும், போலியான மருத்துவக் காரணம் காட்டி கணக்கு வழக்கு இன்றி விடுப்பு எடுக்கும் அரசுப் பணியாளர்களால் நிர்வாகத் தேக்கம் ஏற்படுகிறது. இத்தகைய செயலில் ஈடுபடும் அரசுப் பணியாளர்களின் சம்பளத்தைப் பிடித்தம் செய்யலாம்.
அனைத்து தரப்பு அரசுப் பணியாளர்களின் பணிச் செயல்பாட்டைக் கண்காணிக்க அலுவலகம் மற்றும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தலாம்.
அரசு நிர்ணயம் செய்திருப்பதைவிட குறைந்த அளவில் பணி செய்வோரைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.
அரசுப் பணியாளர்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கையானது பெரும்பாலான நேரங்களில் காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட வெறும் ஆணையாகவே இருப்பதால், சம்பளப் பிடித்தம், பதவி இறக்கம், பணி நீக்கம் என குற்றத்திற்கு ஏற்ப உடனடி தண்டனையை அரசு வழங்கலாம்.
பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றை பொத்தாம்பொதுவாக முதலில் பணியில் சேர்ந்தோருக்கே முன்னுரிமை என 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பாணியில் வழங்காமல் தகுதி, திறமை உள்ள அரசுப் பணியாளர்களுக்கு மட்டுமே வழங்கலாம். இது அரசுப் பணியாளர்களிடையே போட்டி போட்டுக்கொண்டு வேலை செய்யும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
திறமையுடன் செயல்படும் அரசுப் பணியாளர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கலாம். இதன்மூலம் திறமையற்ற அதிகாரிகள் உருவாவதைத் தடுக்கலாம்.
பணி நிரந்தரம் என்னும் கொள்கையைக் கைவிட்டுவிட்டு, தகுதி இருக்கும் வரையில் மட்டுமே ஒருவருக்கு அரசுப் பணி வழங்கலாம். ஆண்டுதோறும் மருத்துவப் பரிசோதனையை அரசே பணியிடத்தில் நடத்தி மருத்துவ தகுதியற்றவர்களை விருப்ப ஓய்வுத் திட்டத்தில் (VRS) ஓய்வளிக்கலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக, கையூட்டு மற்றும் கிம்பளம் பெறுபவர்கள் ஆதாரத்துடன் பிடிபடும் பட்சத்தில் அவர்களைப் பாரபட்சம் பாராமல் உடனடியாக பணி நீக்கம் செய்யலாம்.
அரசின் இது போன்ற நியாயமான நடவடிக்கைக்கு எதிராக கோஷம் போடும் அரசுப் பணியாளர் சங்கவாதிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கலாம்.
லஞ்ச லாவண்யத்தில் திளைத்த அரசு அலுவலர்கள் தகுந்த ஆதாரத்துடன் பிடிபடும் வேளையில், அவர்கள் அதர்ம வழியில் சேர்த்த சொத்துகளை அரசு பறிமுதல் செய்யலாம்.
சரி.. இது ஒரு புறம் இருக்க.. விஷயத்துக்கு வருவோம்.
மக்கள்தொகை அதிகம் கொண்ட நமது நாட்டில், மக்களுக்குரிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டிய தேவை இங்கு அதிகமாக உள்ளது; ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் தீர்வு காணப்பட வேண்டிய கோரிக்கை மனுக்களுடன் பொது மக்கள் கூட்டம் அலைமோதும் வேளையில், நிலைமையின் தீவிரத்தை உணராமல் வேலைநிறுத்தம் செய்பவர்கள் ஊழியரல்லர், வெறும் பணியாளரே.

நல்லார் ஒருவர் உளரேல்...


Dinamani

By வ.மு. முரளி

First Published : 16 February 2016 01:22 AM IST


முன்பின் தெரியாத பயணிக்காக தனது வாகனத்தை அடகுவைத்த சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரை உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் எப்படிப்பட்ட நாட்டில் வாழ்கிறீர்கள் என்பதில் உங்களையே பெருமிதம் கொள்ளச் செய்யும் நிகழ்வு அது.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் கே.ரவிசந்திரன் (57), ஆட்டோ ஓட்டுநர். ஆட்டோ ஓட்டுவது ஒன்றுதான் அவருக்கு வருமானம்.
இரு மாதங்களுக்கு முன் ராமாபுரத்திலிருந்து திருவல்லிக்கேணிக்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் அவரது ஆட்டோவில் பயணித்தார். அண்ணா சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது திடீரென பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக ஓட்டுநர் ரவிசந்திரன் அந்தப் பயணியை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரிலுள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார். தவிர, பயணியின் மகனுக்கும் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
அங்கு பயணியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது இருதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதாகவும், அவருக்கு அறுவைச்சிகிச்சை மூலம் இருதயத்தில் "பேஸ் மேக்கர்' சாதனத்தை உடனடியாகப் பொருத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
அதற்கு சுமார் ரூ. 47 ஆயிரம் செலவாகும் என்ற நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அந்தப் பயணியிடம் அந்த அளவு பணமில்லை. சென்னைக்கு விரைந்து வந்த மகனும் குறைந்த அளவு பணமே வைத்திருந்தார்.
அப்போது ரவிசந்திரன் சற்றும் யோசிக்காமல், தனது பிழைப்புக்கு ஆதாரமாக இருக்கும் ஆட்டோவை அடமானம் வைத்து பணம் திரட்டி மருத்துவமனையில் கட்டிவிட்டார். அதையடுத்து, அந்தப் பயணிக்கு இருதய அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று, அவரும் உடல்நலத்துடன் ஊர் திரும்பிவிட்டார்.
இதையறிந்த அண்ணாநகர் குடியிருப்போர் நலச்சங்கம், ஆட்டோ ஓட்டுநர் ரவிசந்திரனை பாராட்டி கெளரவித்தது. இந்தச் செய்தி, "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளியாகி இருக்கிறது.
அதன்பிறகு அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு பல நல்லுள்ளங்கள் நிதியுதவி செய்ததால், தனது ஆட்டோவை அவர் மீட்டுவிட்டார் என்பது தனிக்கதை. ஆனால், முன்பின் தெரியாத யாரோ ஒருவருக்காக தனது ஆட்டோவை அடமானம் வைக்கும் பெருந்தன்மையும் காருண்யமும் யாருக்கு வரும்?
இதுபற்றி தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன், 1956-இல் இதே சென்னையில் நடந்த மற்றொரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
சென்னையின் ஜெமினி ஸ்டுடியோ முன்பு அதிகாலை வேளையில் ஒரு சாலைவிபத்து. இளைஞர் ஒருவர் விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அனைவரும் அலுவலகத்துக்கு விரைந்துகொண்டிந்த நிலையில், யாருக்கும் காயமடைந்த இளைஞரைக் கவனிக்க நேரமில்லை.
அப்போது அந்த வழியே வந்த கூலிவேலை செய்யும் மூதாட்டி ஒருவர் அந்த இளைஞனைக் கண்டு பதைபதைத்தார். அருகில் இருந்த ஆட்டோவை வரவழைத்து, அந்த இளைஞரை அதில் கிடத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தார் அந்த மூதாட்டி.
சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் அந்த இளைஞர் உயிர் பிழைத்தார். அதுமட்டுமல்ல, மயங்கிக் கடந்த அந்த இளைஞரின் சிகிச்சைக்காக, தனது மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்தார் அந்த ஏழைத் தாய்.
இந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்த அந்த மூத்த பத்திரிகையாளர், எல்லாக் காலங்களிலும் இத்தகைய உத்தமமான மனிதர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். நாம் தான் அறிவதில்லை என்றார்.
சிந்தித்துப் பாருங்கள். அறிமுகமில்லாத மேற்கு வங்கப் பயணிக்காக தனது வாழ்வாதாரமான ஆட்டோவை அடமானம் வைத்த ஆட்டோ ஓட்டுநரும், சாலையில் கிடந்த இளைஞனைக் காப்பதற்காக தனது மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்த மூதாட்டியும் எதற்காக அவற்றைச் செய்தார்கள்?
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியும் மயிலுக்குப் போர்வை தந்த பேகனும் இலக்கியத்தில் இடம்பெற்றார்கள். அவர்களின் பரம்பரை நீட்சியா இவர்கள்? எதுவாயினும், தங்கள் எதிர்காலத்தைவிட நிகழ்காலத்தில் செய்ய வேண்டிய கடமையின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.
இந்த இடத்தில் 20 அம்சக் கோரிக்கைகளுக்காக காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டிருக்கும் அரசு ஊழியர்களையும், அவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கும் ஆசிரியர்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்களது செயலின் அர்த்தமின்மை புரியும்.
ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றம் செய்யக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். தங்கள் உரிமைகளுக்காகப் போராட அவர்களுக்கு உரிமை உண்டுதான். ஆனால், அவர்களின் போராட்டம் மக்கள்நலனைப் புறக்கணிப்பதாக இருக்கக் கூடாது.
மக்கள் அளிக்கும் வரிப்பணத்தில்தான் தாங்கள் ஊதியம் பெறுகிறோம் என்பதை அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மறந்ததால், அரசுப் பணிகள் பல நாள்களாக முடங்கிக் கிடக்கின்றன. இது கடமை தவறுவது அல்லவா? கடமையை நிறைவேற்றுபவருக்கே உரிமைகள் உண்டு என்பார் மகாத்மா காந்தி. அதை நமது தமிழக அரசுப் பணியாளர்கள் மறந்தது ஏன்?
சாலையில் அடிபட்டுக் கிடந்தவரைக் கண்டு வாடிய மூதாட்டி அளித்த மூக்குத்திக்கு, நமது அரசு ஊழியர்கள் பெறப்போகும் லட்சக் கணக்கான ஓய்வூதியம் நிகராகுமா?
நிர்வாக இயந்திரத்தின் உறுப்புகளான அரசு ஊழியர்கள் சமுதாயத்தில் ஒரு சதவீதம் பேர் கூட இல்லை. ÷ஆனால், இந்த நாடு உயிர்ப்புடன் திகழ்வது, தன்னலமற்ற சேவைக்கு உதாரணமான ஆட்டோ ஓட்டுநர் ரவிசந்திரன், யாரோ ஓர் இளைஞனைக் காப்பாற்ற தனது மூக்குத்தியைக் கழட்டிக் கொடுத்த ஏழை மூதாட்டி போன்றவர்களால் தான்.
இதைத்தான், "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என்று ஒளவைப் பாட்டி மூதுரையில் கூறிச் சென்றாரோ?

Wednesday, February 17, 2016

கேஜ்ரிவாலுக்கு எத்தனை மதிப்பெண்?



பாஜகவின் நெருக்கடிகளையும் கடந்து சரியான திசையில் செல்கிறது ஆம் ஆத்மி அரசு

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரசு ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. அரசின் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கு முன்னால் டெல்லி அரசின் அமைப்பு குறித்து அலசுவது அவசியமாகிறது. டெல்லி முழு அதிகாரம் பெற்ற மாநிலம் அல்ல, மைய அரசின் நேரடி நிர்வாகத்தின்கீழ் வரும் ஒன்றிய ஆட்சிப் பகுதி (யூனியன் டெரிடரி). டெல்லியில் ஐந்து நகராட்சி அமைப்புகள் உண்டு. புதுடெல்லி மாநகராட்சி வாரியம் பகுதி மத்திய அரசின்கீழ் வருவது. இதன் நிர்வாகத்தில் டெல்லி அரசுக்கு மிகச் சிறிய பங்குதான் உண்டு. இவை தவிர, வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி ஆகிய இதர மூன்று மாநகராட்சிகளும் மத்திய அரசின்கீழ் வருபவைதான். கன்டோன்மென்ட் நகராட்சி மற்றொரு தனி அமைப்பு.

டெல்லியில் காவல்துறை மைய அரசின் உள்துறை அமைச்சகத்தின்கீழ் வருகிறது. டெல்லி அரசுக்கு இதில் அதிகாரம் இல்லை. அரசுக்குச் சொந்தமான நிலப் பகுதிகளை நிர்வகிக்கும் டெல்லி மேம்பாட்டு வாரியம் (டிடிஏ) மைய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் வருகிறது. இதிலும் டெல்லி அரசுக்கு அதிகாரம் இல்லை. மைய அரசால் நியமிக்கப்படும் துணை நிலை ஆளுநர்தான் இதன் தலைவர்.

காற்றில் விடப்படும் வாக்குறுதி

ஒவ்வொரு தேர்தலின்போதும் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து தரப்படும் என்று மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசுகள் கூறும், தேர்தலுக்குப் பிறகு மறந்து விடும். கடந்த தேர்தலின்போதும் பாஜக அளித்த வாக்குறுதி அப்படியே ஆனது. ஆக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களால் நிர்வகிக்கப்படும் இதர மாநில அரசுகளையும் டெல்லி அரசையும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் டெல்லி அரசின் அதிகார எல்லை வரம்புக்கு உட்பட்டதே. மைய அரசின் அதிகாரம் எங்கே முடிகிறது, மாநில அரசின் அதிகாரம் எங்கே துவங்குகிறது என்று பிரித்தறிய முடியாத சிக்கலான அமைப்பைக் கொண்டது டெல்லி.

2012 நவம்பரில் உருவாகி, 2013 நவம்பரில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் குறுகிய கால ஆட்சி நடத்தியது ஆம் ஆத்மி கட்சி. 2015 பிப்ரவரி தேர்தலில் அறுதிப்பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களைப் பெற்று - 70 தொகுதிகளில் 67-ல் வெற்றி கண்டு ஆட்சி அமைத்தது. ஊழலற்ற நிர்வாகம், இலவச வைஃபை, 500 பள்ளிகள், 20 கல்லூரிகள், டிடிஏ சீரமைப்பு, லோக் பால் சட்டம் எனப் பல வாக்குறுதிகளை வழங்கிய ஆம் ஆத்மி கட்சியின் அரசு, இந்த வரம்புகளுக்குள் என்ன செய்திருக்கிறது அல்லது செய்யவில்லை?

மின் கட்டணம், குடிநீர்

ஆட்சிக்கு வந்ததும், ஆம் ஆத்மி அரசு செய்த முதல் நடவடிக்கை - முந்தைய 42 நாள் அரசின்போது செய்ததுபோலவே குறிப்பிட்ட யூனிட்டுகள் வரை மின் கட்டணத்தைக் குறைத்தது, குறிப்பிட்ட அளவுக்குக் குடிநீரை இலவசமாக்கியது. நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களுக்குப் பெரும் பயனைத் தரும் இந்த நடவடிக்கை வரவேற்பு பெற்றது. மேல்தட்டு மக்களுக்கும்கூட இதனால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை. அதுமட்டுமின்றி, கடந்த ஓராண்டில் தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாத வகையில் நிர்வகித்துள்ளது. குறிப்பாக, லட்சக்கணக்கான அடுக்கக வீடுகளுடன் உருவாக்கப்பட்ட துவாரகா பகுதியில் பெரும்பாலான பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் இருக்கவில்லை, அல்லது போதுமான அளவுக்கு இல்லை. எல்லாரும் நிலத்தடி நீரையும் தண்ணீர் லாரிகளையும் மட்டுமே நம்பியிருந்தனர். அங்கே இப்போது குடிநீர் விநியோகத்தில் பெருமளவுக்கு முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது. தண்ணீர்க் கட்டணத்தைக் குறைத்தபோதிலும், விநியோகத்தை முறைப்படுத்தியதன் மூலம் டெல்லி குடிநீர் வாரியம் லாபத்தில் இயங்குவதாகவும் தெரியவருகிறது.

ஆம் ஆத்மி கட்சிக்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும், மின் துறையில் தனியார்மயத்தை அறிமுகம் செய்து மின் தடையைப் பெருமளவு போக்கியிருந்தது. அதே நிலை இப்போதும் தொடர்கிறது. டெல்லியில் மின் தடை அறவே இல்லாத அல்லது அரிதாகவே தடை ஏற்படும் நிலைதான் உள்ளது.

போக்குவரத்துத் துறையை எடுத்துக்கொண்டால், போக்குவரத்துக் கழகப் பேருந்துகள்தான். 40 ரூபாய் பாஸ் வாங்கி, ஒரு நாள் முழுவதும் ஏசி இல்லாத எந்தப் பேருந்திலும் பயணம் செய்யலாம். 50 ரூபாய் பாஸில் ஏசி பேருந்து உட்பட எந்தப் பேருந்திலும் பயணம் செய்யலாம் என்பது டெல்லிக்கே உரிய சிறப்பு. ஓராண்டில் கட்டண உயர்வு ஏதும் இல்லை. முந்தைய அரசுகள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலங்கள் கட்டுவதில் முனைந்திருந்தன என்றால், இந்த அரசு வாக்களித்தபடி கடைக்கோடிப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் பேட்டரி ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், மெட்ரோவை இணைக்கும் வேன்கள் ஆகியவற்றைப் பரவலாக்கியுள்ளது. சில பேருந்துகளில் இலவச வைஃபை பெயரளவுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சோதனை முயற்சி

சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கை ஒற்றை, இரட்டை இலக்கத்தில் முடியும் வாகனங்கள் குறிப்பிட்ட நாட்களில் ஓடக் கூடாது என்ற சோதனை முயற்சி. ஜனவரி 1 முதல் 15 வரை மேற்கொண்ட இந்த முயற்சி கார் வைத்திருப்பவர்களுக்கு அதிருப்தி தருவதாக இருக்கலாம். ஆனால், சாலையில் அதிக கார்கள் இல்லாததால் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்து வோருக்கு மிகப்பெரிய வரமாக அமைந்தது. காற்று மாசும் ஓரளவுக்குக் குறைந்தது. இதே திட்டத்தை, ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்த இருப்பதாகவும் மோட்டார் பைக்குகளையும் இதில் சேர்க்க இருப்பதாகவும் தெரிகிறது.

ஊழலை ஒழிப்பதற்காக இணையத்தைப் பயன்படுத்தும் முயற்சிகள் கணிசமாக நிகழ்ந்திருக்கின்றன. நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அனுமதி பெறுவதற்கு ஒவ்வொரு துறையிடமும் ஓடுவதற்குப் பதிலாக ஒற்றைச்சாளர முறையை அறிமுகம் செய்து, இணைய வழி அனுமதி பெறுவதற்கு வழி செய்தது. சாதிச் சான்றிதழை இணையவழி பெற வழி செய்தது. குடும்ப அட்டை முதல் வாகனப் பதிவு வரை சாமானிய மக்களின் பல்வேறு விண்ணப்பங்கள்மீது குறிப்பிட்ட நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. பிறப்பு இறப்புச் சான்றிதழ்களையும் இணைய வழியில் பெற முடியும். அரசு அலுவலகங்களில் கூட்டம் கூட்டமாகக் காத்திருக்கவும், லஞ்சத்துக்கு வழிசெய்த பல வேலைகளை இணையத்தின் மூலமே செய்ய முடியும் என்பது குறிப்பிடத் தகுந்த மாற்றமாகும்.

அதேபோல, அதிகாரிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் அதிகாரமும் அதே அதிகாரிகளிடம் இருந்தது. அந்த நிலை மாற்றப்பட்டு, ஊழல் கண்காணிப்பு ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நிலம் கையகப்படுத்தலுக்கான நிவாரணத் தொகை உயர்த்தப்பட்டது. ஓராண்டில் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை. டெல்லி அரசின்கீழ் வரும் 38 மருத்துவமனைகளிலும் அத்தியாவசிய மருந்துகள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் ஒரு மருத்துவரைக் கொண்ட சிறிய மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இவையெல்லாம் சாமானிய மக்களின் ஆதரவைப் பெறும் திட்டங்கள்.

சோதனையே சாதனை

அமைச்சராக இருந்த தோமர், போலிச் சான்றிதழ் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதும், ஆசீம் அகமத் கான் ஊழல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்டதும் ஆம் ஆத்மி கட்சி அரசுக்கு ஏற்பட்ட சோதனைகள். ஊழல் குற்றச்சாட்டு வீடியோ வெளியானதும் அமைச்சர் நீக்கப்பட்டார், சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது, இது வேறெந்தக் கட்சியும் அரசும் செய்யாதது என சோதனையை சாதனையாக மாற்றிக்கொண்டார் கேஜ்ரிவால்.

தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் படுதோல்விக்குப் பிறகு, கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியின் மேம்பாட்டுக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்று சொன்னது சம்பிரதாயத்துக்காகவே என்பது அடுத்த ஓராண்டில் நிரூபணம் ஆனது.

ஆம் ஆத்மி கட்சி உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்த லோக் பால் மசோதா கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா முந்தைய மசோதாவிலிருந்து மாற்றப்பட்ட வடிவம்தான். ஆனால், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்குமா என்பது பெரிய கேள்விக்குறிதான். அதேபோல, மாநகராட்சிகள், டெல்லி மேம்பாட்டு வாரியம் போன்ற அமைப்புகளைச் சீரமைக்கும் வாக்குறுதியையும் டெல்லி அரசு எளிதாகச் செய்துவிட முடியாது. புதிய பள்ளிகள், கல்லூரிகள் கட்டுவதற்கும் நிலத்துக்காக மத்திய அரசின் கையைத்தான் எதிர்பார்க்க வேண்டும். டெல்லி அரசு - துணை நிலை ஆளுநர் (மத்திய அரசு) மோதல்கள் தொடரும் நிலையில், இவையெல்லாம் எந்த அளவுக்கு நிறைவேறும் என்பதைக் கணிப்பது சிரமம்.

அரசியல் ரீதியாகப் பார்த்தால் கேஜ்ரிவால் மத்திய அரசுக்கு நெருக்கடியும் கொடுக்கிறார், நெருக்கடிக்கும் ஆளாகிறார். உள்கட்சி விவகாரத்தில் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வின்போதே அரசியல் விவகாரக் குழுவை ஓரங்கட்டிய கேஜ்ரிவால், அடுத்த சில நாட்களில் தந்திரமாகக் காய் நகர்த்தினார். பெங்களூருவில் ஆயுர் வேத சிகிச்சைக்காகச் சென்றுவிட்ட நேரத்தில், அரசியல் விவகாரக் குழுவின் உறுப்பினர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் மீது தனது ஆட்களை விட்டு தாக்குதல் நடத்தச் செய்தார். அடுத்த சில நாட்களில் இருவரும் நீக்கப்பட்டார்கள். ஆம் ஆத்மி கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது ஒருகோடி ரூபாய் நன்கொடை கொடுத்த பிரசாந்த் பூஷண், கட்சிக்கு வழிகாட்டக்கூடிய சிந்தனையாளராக இருந்த யோகேந்திர யாதவ் இருவரையும் நீக்கிய பிறகு, கட்சிக்குள் எதிர்ப்பு இல்லாமல் பார்த்துக்கொண்டார். அரசியல் விவகாரக் குழுவின் வழிகாட்டல்படி நடந்திருந்தால் போலிச் சான்றிதழ் கொடுத்தவரோ, சாராய விநியோகம் செய்தவரோ ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் ஆகியிருக்க முடியாது.

சரியான திசை

அதே நேரத்தில், யோகேந்திர யாதவ் போன்றவர்களின் ஆலோசனைப்படி தேர்தலுக்கு முன்பு இளைஞர்கள், பகுதிவாழ் மக்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் போன்றவர்களுடன் கலந்தாலோசித்து, டெல்லிக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க ‘டெல்லி டயலாக் கமிஷன்’ என்ற முறையை ஆம் ஆத்மி கட்சி அறிமுகம் செய்தது. அது இப்போது ‘மொகல்லா சபா’ என்ற வடிவிலும் ‘டெல்லி டயலாக் கமிஷன்’ வடிவிலும் முன்வைக்கப்படுகிறது. மக்களுடன் நேரடித் தொடர்பு, அவர்களுடன் கலந்துரையாடியே முடிவுகள் எடுக்கப்படுவதாகக் காட்டுதல் என்னும் திசையில் சரியாகவே போய்க்கொண்டிருக்கிறார்.

ஓராண்டில் உடனடிப் பிரச்சினைகளில் ஆம் ஆத்மி அரசு ஓரளவுக்கு நன்றாகவே செயல்பட்டிருக்கிறது. தொலைநோக்குத் திட்டங்களை மதிப்பிட காலம் ஆகும்! அது மத்திய அரசின் ஒத்துழைப்பைப் பொறுத்தே இருக்க முடியும்.

- ஆர். ஷாஜஹான், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தொடர்புக்கு: shahjahanr@gmail.com

அரசு ஊழியர் போராட்டம் தீவிரம் ஆகிறது

தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் 7-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. தங்கள் கோரிக்கை தொடர்பாக சட்டப்பேரவையில் எந்த அறிவிப்பும் வெளியாகாததால், சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

போராட்டத்தை இன்று (பிப்.17) முதல் தீவிரப்படுத்த உள்ளதாக அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கடந்த 10-ம் தேதியில் இருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 7-வது நாளாக போராட்டம் நீடித்தது. அனைத்து மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை சேப்பாக்கம் அருகே எழிலகம் வளாகத்தில் நேற்று காலை யில் திரண்ட அரசு ஊழியர்கள் கோரிக் கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். வளாகத்துக்கு உள்ளேயே பேரணியும் சென்றனர். நேற்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து ஏதாவது அறிவிப்புகள் வெளி வரும் என்று அவர்கள் காத்திருந்தனர்.

ஆனால் எந்த அறிவிப்பும் வராததை தொடர்ந்து அவர்கள் எழிலகம் வளா கத்தை விட்டு வெளியேறி பேரணியாக தலைமைச் செயலகத்தை முற்றுகை யிட புறப்பட்டனர். ஆனால் பாதுகாப் புக்கு நின்றிருந்த போலீஸார் எழிலகத் தின் அனைத்து வாயில்களையும் அடைத்து, தடுப்பு ஏற்படுத்தி, அரசு ஊழியர்கள் வெளியேறாமல் சூழ்ந்து நின்று கொண்டனர்.

இதனால் போலீஸாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தடுப்புகளை அகற்றிக் கொண்டு அரசு ஊழியர்கள் வெளியேறினர். அவர்களை போலீஸார் தடுக்க முயல, இரு தரப்புக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் அரசு ஊழியர்கள் சிலர் மயங்கினர். சிலர் காயம் அடைந்தனர்.

வெளியேறிய அரசு ஊழியர்கள் மெரினா கடற்கரை காமராஜர் சாலை யில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் காமராஜர் சாலை முழுவதும் சுமார் 2 மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீ ஸார் வலுக்கட்டாயமாக சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். நூற்றுக் கணக்கானவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையில், போராட்டத்தை இன்று (பிப்.17) முதல் தீவிரப்படுத்த உள்ளதாக அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர் ஆர்.தமிழ்செல்வி கூறிய தாவது:

போராட்டத்தை இன்றுமுதல் இன்னும் தீவிரப்படுத்த இருக்கிறோம். பட்டதாரி மற்றும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் உட்பட பல சங்கத்தினருடன் இணைந்து புதிய போராட்டக் குழுவை உருவாக்கி இருக்கிறோம். இதன் மூலம் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். நீதித்துறை ஊழியர் சங்கத்தினர், டாக்டர்கள் சங்கத்தினர், செவிலியர் சங்கத்தினர் உட்பட அரசு சார்ந்த பல முக்கிய சங்கத்தினர் எங்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

17-ம் தேதி (இன்று) முதல் அவர் களும் எங்களுடன் இணைந்து போராட இருக்கின்றனர். தாலுகா வாரியாக தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்செல்வி தெரிவித்தார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை உடனே அறிவிக்க மோடிக்கு ஜெ. வலியுறுத்தல்

முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடி | கோப்புப் படம்

2014-15 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது இணங்க தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அரசு விரைவில் உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக புதன்கிழமை அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், "2014-15 மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து 2014 ஜூலை 17-ல் நான் தங்களுக்கு எழுதிய கடிதத்தில், பட்ஜெட் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்திருந்தேன்.

அதுமட்டுமல்லாது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை டவுன், ஈரோடு பெருந்துறை மற்றும் மதுரை மாவட்டம் தோப்பூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் ஓர் இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்கலாம் என்ற பரிந்துரையையும் தெரிவித்திருந்தேன்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் 22 முதல் 25 தேதி தமிழக அரசு பரிந்துரைத்த இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், மத்திய அரசு எந்த இடத்தை தேர்வு செய்திருக்கிறது என்பது குறித்து தமிழக அரசுக்கு பதில் அளிக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டால் தமிழக மக்கள் பெரும் பயனடைவர்.

எனவே, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் எது என்பதை மத்திய அரசு விரைவில் அறிவிக்க தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா மவுனத்தின் மர்மம் என்ன?

Return to frontpage

வெ.சந்திரமோகன்


மக்கள் நலக் கூட்டணியினர் உற்சாகமான பிரச்சாரங்களில் இருக்கின்றனர். திமுக கூட்டணிக் கணக்கை ஆரம் பித்துவிட்டது. வெகு விரைவில் தேர்தல் அறிக்கையும் வந்துவிடும் என்கிறார்கள். பாஜக, பாமக இரண்டும் ஒருபுறம் தனித்தனிக் கூட்டணிகளை அமைக்கும் கோதாவில் இருந் தாலும், மறுபுறம் தேர்தல் பணிகளையே தொடங்கிவிட்டன. தேமுதிக எந்தப் பக்கம் என்பதை இன்னமும் இறுதியாக அறிவிக்காவிட்டாலும், திமுக அல்லது பாஜகவோடு அது கை கோக்கும் என்பது ஊருக்கே தெரிந்திருக்கிறது. ஆனால், பிரதான கட்சியும் தேர்தல்களில் முந்திக்கொள்ளும் கட்சியுமான அதிமுக தரப்பிலிருந்து, கூட்டணி தொடர்பாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த தேர்தல் முன்னோட்டக் கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “கூட்டணியைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். ஜெயலலிதா பார்த்துக்கொள்வார்” என்று குறிப்பிட்டி ருக்கிறார். ஆனால், ஜெயலலிதாவோ அமைதி காக்கிறார். காங்கிரஸை அவர் பரம வைரியாக்கிவிட்டார். தேமுதிகவும் அந்தப் பட்டியலில் இப்போது சேர்ந்துவிட்டது. கம்யூனிஸ்ட்டுகளும் தனிப் படகில் பயணம் கிளம்பிவிட்டனர். எதற்காகக் காத்திருக்கிறார் ஜெயலலிதா?

இது ஜெ. கணக்கு

எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவுக்கு இருந்துவரும் வாக்கு வங்கி, அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் ஏற்ற இறக்கங்களைக் கண்டாலும், திமுகவோடு ஒப்பிடும்போது என்றைக்கும் அதிகமாகவே இருந்திருக்கிறது. அதிலும் கடந்த கால் நூற்றாண்டுத் தேர்தல்கள் அதிமுகவை மேலேயே கொண்டு வைத்திருக்கின்றன.

1991-ல் அதிமுக 44.4% வாக்குகளைப் பெற்றிருந்தது. 1996 தேர்தலில் கடுமையான எதிர்ப்பலை உருவாகியிருந்த சூழலில், திமுக - தமாகா கூட்டணி வென்றது. இத்தேர் தலில் அதிமுகவின் வாக்கு வங்கி 27.08% ஆகக் குறைந்தது. 2001-ல் மீண்டும் வென்று ஆட்சிக்கு வந்த போது, அதிமுக 31.4% வாக்குகளைப் பெற்றிருந்தது. 2006 தேர்தலில் திமுகவிடம் தோற்றபோதும், முந்தைய தேர்தலைவிட அக்கட்சிக்கு 1.2% வாக்குகள் அதிகம் கிடைத்திருந்தன - 32.6% வாக்குகளை வாங்கியிருந்தது. 2011 தேர்தலில் அதிமுக 38.4% வாக்குகள் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. இப்படிச் சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரங்களைத் தாண்டி, சமீபத்திய 2014 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக 37 தொகுதிகளில் வென்றபோது அதன் வாக்கு வங்கி, 44.3% ஆக உயர்ந்திருந்தது. மறுபுறம், 23.6% வாக்குகளையே திமுக வாங்கியிருந்தது. ஜெயலலிதா மவுன மர்மத்தின் மைய ஆதாரம் இந்த வாக்குக் கணக்கு தரும் துணிச்சல்தான்.

சிதறும் கட்சிகளும் ரகசிய சிரிப்பும்

தமிழகத்தில் 1991-க்குப் பிறகு திமுக, அதிமுக என்று இரு கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருக்கின்றன. ஆனால், இந்த முறை கடந்த சட்டப்பேரவைத் தேர்த லுக்குப் பின் பெரிய அளவில் அரசியல் சூழலில் மாற்றங்கள் இல்லை.

இதனாலேயே 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு தொடர் வெற்றிகளைக் குவித்ததுபோல், இந்த முறையும் நடக்கும் என்று அதிமுகவினர் பேசிவந்தார்கள்.

ஆனால், வெள்ளத்துக்குப் பின் சூழல் மாறியது. தலைநகரிலும், கடலூர் - சிதம்பரத்திலும் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகள், மெத்தனமான ஆட்சி நிர்வாகம் தொடர்பாக எழுந்த விமர்சனங்கள், நிவாரணப் பணிகளிலும் அதிமுக நிர்வாகிகள் நடத்திய கேலிக்கூத்துகள் பெரிய அளவில் அதிருப்தியை உருவாக்கின. எனினும், இந்த அதிருப்தியின் பலன்கள் எதிர்க் கட்சிகளைச் சென்றடையும் வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்று நம்புகிறார் ஜெயலலிதா.

பிஹார் தேர்தலுக்குப் பின் நாடு முழுவதும் மகா கூட்டணி தொடர்பான சிந்தனைகள் வலுப்பெற்றபோதும் தமிழகம் நேர் எதிரான முடிவை நோக்கி நகர்ந்தது. இங்கே ஆளுங்கட்சிக்கு எதிரான கட்சிகள் திரளவில்லை. மாறாக, முன்பைக் காட்டிலும் மேலும் சிதறின. திமுக ஒருபுறம், கம்யூனிஸ்ட்டுகள் ஒருபுறம், பாமக ஒருபுறம், பாஜக ஒருபுறம் என ஆளுக்கு ஒருபுறம் திரும்பி நிற்கும் நிலையில், ஆட்சிக்கு எதிரான ஓட்டுகள் தானாகச் சிதறும் என்று நினைக்கிறார். அதில் உண்மையும் இல்லாமல் இல்லை.

திமுக போனால் அதிமுக, அதிமுக போனால் திமுக எனும் சூழல் மாறி இரண்டுக்கும் ஒரு மாற்று வேண்டும் என்ற குரல்களை இந்த முறை அதிகம் கேட்க முடிகிறது. இந்தக் குரல்கள் சொற்பமானவை என்றாலும், அவை பொதுத் தளத்திலிருந்து ஒலிப்பவை என்பது முக்கியமானது. அதாவது, கட்சி வாக்கு வங்கியைத் தாண்டி தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் வாக்குகள். அவைதான் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையை எப்போதும் எதிர்க் கட்சிக்கு ஆதரவாகத் திருப்பிவிடக் கூடியவை. ஆனால், இந்தக் குரல்களில் பெரிய சேதாரம் இம்முறை ஏற்படும் வாய்ப்புகள் தெரிகின்றன. முக்கியமாக, மக்கள் நலக் கூட்டணி கணிசமான சேதத்தைத் திமுகவுக்குக் கொடுக்கக் கூடும்.

இப்படிப்பட்ட சூழலில், ஜெயலலிதாவின் முக்கிய மான கவனம் ஒரேயொரு விஷயத்தில்தான் இப்போது இருக்கிறது என்கிறார்கள். திமுக பக்கம் போய்விடாமல் தேமுதிகவைப் பார்த்துக்கொள்வது. திமுக காங்கிரஸ் கூட்டணி அமைந்திருப்பதை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா வேறு விமர்சித்திருக்கிறார். திமுக கூட்டணியில் தேமுதிக சேராவிட்டால், காங்கிரஸ் ஓட்டுகளை இழுக்க தமாகா, தலித்துகள் ஓட்டுகளை இழுக்க இந்தியக் குடியரசுக் கட்சி, முஸ்லிம்கள் ஓட்டுகளை இழுக்க மனிதநேய மக்கள் கட்சி, வன்னியர் ஓட்டுகளை இழுக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இப்படி சமூகங்கள் சார்ந்த சின்னச் சின்னக் கட்சிகளின் துணை போதும்; ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறார் ஜெயலலிதா.

எண்களின் சாதகம்

எப்போதுமே கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களைக் கறாராகப் பேச ஒரு வசனத்தைப் பயன்படுத்துவார் ஜெயலலிதா. “தோற்கும் ஐம்பதில் நிற்க வேண்டுமா, ஜெயிக்கும் ஐந்தில் நிற்க வேண்டுமா?” என்பதே அந்த வியூகம். சின்ன கட்சிகளுடன் கூட்டணி வைக்கும்போது குறைந்தது 175 தொகுதிகளிலேனும் நிற்க முடியும். மூன்றில் இரு பங்கு இடங்களை இழந்தாலும் பெரும்பான்மை கிடைத்துவிடும் என்று அவர் கணக்குப் போடுகிறார்.

சரி, ஒருவேளை தேமுதிகவை திமுக இழுத்துவிட்டால்? அப்போது கணக்கு மாறும். மேலும் சில கட்சிகளை அதிமுக குறிவைக்கும். அப்போது அணிகளையும்கூட அது தகர்க்கும் என்கிறார்கள். மவுனத்தின் மர்மம் விலகும் நாள் வெகு தொலைவில் இல்லை!

தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in

Tuesday, February 16, 2016

நியாயங்கள் பொதுவானவை... புரியாமல் போனவை!

vikatan.com

நியாயங்கள் பொதுவானவை... புரியாமல் போனவை!

தலையாரிக்கு ஒரு சட்டம்... தலைமைச் செயலருக்கு ஒரு சட்டமா?
ரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினார்கள்... ஊழல் செய்தார்கள் என்று யாராவது புகார் கொடுத்தால், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவுசெய்து உடனே களத்தில் இறங்கிவிடும். இன்ஸ்பெக்டர், மின்வாரிய ஊழியர், வி.ஏ.ஓ., ஆர்.டி.ஓ என்றால் கேட்கவே தேவையில்லை. ஆக்‌ஷன் அதிரடியாக இருக்கும். ஆனால், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், அரசுத் துறை இணைச் செயலாளர், அதற்கு மேல் தகுதியில் இருக்கும் அதிகாரிகள் ஊழல் செய்தார் என்று புகார் கொடுத்தால், அதில் ஆக்‌ஷன் ஆமை வேகத்தில் இருக்கும். காரணம், விதிமுறைகள் அப்படி.
ஆளுக்கொரு நியாயம்...

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற முதல் ரக அதிகாரிகள் மீது, லஞ்சப் புகார் கொடுத்தால், அதை லஞ்ச ஒழிப்புத் துறையில் தனியாக எடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை ஆணையரின் மேஜைக்குக் கொண்டு போவார்கள். அவர் அதை, தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு தபாலில் அனுப்பி வைப்பார். அத்தோடு அங்கு லஞ்ச ஒழிப்புத் துறையின் வேலை முடிந்துவிடும். 

அதன்பிறகு, தலைமைச் செயலாளர் அந்தப் புகாரை படித்துப் பார்த்துவிட்டு, அதைக் கவனிக்கலாம் என்று அவர் நினைத்தால், ஒரு குழுவை அமைப்பார். அந்தக் குழு, அந்தப் புகாரை பரிசீலனைசெய்து, அலசி ஆராய்ந்து, இதில் வழக்குப் பதிவுசெய்யலாம் என்று அறிக்கை கொடுத்தால், அதன்பிறகுதான் லஞ்ச ஒழிப்புத் துறை அதில் வழக்கையே பதிவுசெய்யும். இல்லை யென்றால், அதுவும் இல்லை. தமிழக அரசாங்கத்தில் மட்டுமல்ல... மத்திய அரசிலும் இதுதான் நிலை.
மத்திய அரசு vs உச்ச நீதிமன்றம்

அரசின் நடைமுறைகளால் வெறுத்துப்போன வினித் நாராயணன் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் போட்டார். அதன்படி தவறு செய்பவர்கள் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும், அவர் மீது உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு ஒரு சட்டம், கீழ்நிலை அரசு ஊழியர்களுக்கு ஒரு சட்டம் என்று இருக்கக் கூடாது என்று கோரினார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘இது சரியான கோரிக்கை. இனி அப்படியே செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

ஆனால், மத்திய அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தவில்லை. மாறாக, 1998-ம் ஆண்டு ஓர் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. அதன்படி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி, அரசு உயர் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமானால், அதற்கு அரசாங்கத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என வசதியாக சட்டம் இயற்றிக்கொண்டது. மத்திய அரசின் இந்தச் சட்டத்தை எதிர்த்து, சுப்பிரமணியன் சுவாமியும் பிரசாந்த் பூஷணும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அந்த வழக்கை விசாரித்தது. 5 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், “உச்ச நீதிமன்றம் ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை வலுவாக எடுக்க நினைக்கிறது. ‘லஞ்ச ஒழிப்புச் சட்டம்’ என்ற ஒன்று இருப்பதே லஞ்சம் வாங்குபவர்களையும் ஊழல் செய்பவர்களையும் கட்டுப்படுத்து வதற்குத்தான். ஆனால், அரசாங்கம் வைத்துள்ள விதிமுறைகள், அதற்கு நேர்மாறாக தவறு செய்பவர்களைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப் பட்டதாக உள்ளது. எனவே, இனிமேல் இதுபோன்ற நடைமுறைகளைக் கைவிட்டு, தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதற்குமேல், அதில் பிடிவாதம் பிடிக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த மத்திய அரசு, ஆட்டத்தில் இருந்து விலகிக்கொண்டது. மத்திய அரசு ஊழியர்கள் யார் தவறு செய்தாலும் அதில் புகார் வந்தால், சி.பி.ஐ நடவடிக்கை எடுக்கலாம் என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டது.

தமிழக அரசு திருத்தவில்லை!

மத்திய அரசே உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டாலும், தமிழக அரசுக்கு அதை ஏற்க மனமில்லை. வழக்கம்போல், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு ஒரு நடைமுறை, மற்ற அரசு ஊழியர்களுக்கு ஒரு நடைமுறை என்றே வைத்திருந்தது. இதை மாற்றச் சொல்லி வழக்கறிஞர் புகழேந்தி என்பவர், 2010-ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். வினித் நாராயணன் வழக்கு தீர்ப்பு, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை எல்லாம் மேற்கொள் காட்டி அவருடைய வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதாடினார். இதையடுத்து, இதில் தமிழக அரசின் நிலை என்ன என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்குப் பதில் சொன்ன அரசாங்கம், விரைவில் புதிய அரசாணையைக் கொண்டுவருவோம். அதில், தவறு செய்யும் அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்களைச் சமமாக பாவித்து ஒரேவிதமான நடவடிக்கை எடுக்க வழி செய்யப்படும் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
‘சரி, தமிழக அரசும் திருந்தப்போகிறது. இனி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் தவறு செய்தால், அவர்கள் மீதும் வழக்குப் பதியப்படும்’ என்று வழக்கறிஞர்கள் புகழேந்தியும், மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனும், பொதுமக்களும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளும் நினைத்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், கடந்த 2-ம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் இருந்து ஓர் அரசாணை வந்தது. சரியாக அது அரசாங்க ஊழியர்கள் அனைவரையும் சமமாக பாவித்தே வெளியாகி இருந்தது. 

அதில், ‘‘தவறு செய்தவர்கள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தாலும் சரி... சாதாரண தலையாரி, வி.ஏ.ஓ என யாராக இருந்தாலும் சரி... அத்துடன் பொது ஊழியர்கள் என்று சொல்லப்படும், பஞ்சாயத்து போர்டு தலைவர் தொடங்கி அமைச்சர் வரை யாராக இருந்தாலும் ஒரே நடைமுறைதான். இனி ஐ.ஏ.எஸ் அதிகாரி மட்டுமல்ல, தலையாரி லஞ்சம் வாங்கினால் கூட அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்யக் கூடாது. மாறாக அந்தப் புகாரை அரசாங்கத்துக்கு அனுப்பி, அரசாங்கத்தின் கருத்தை அறிய வேண்டும். அரசாங்கம் அவர் மீது வழக்குப் பதிவு செய்யலாம் என்று சொன்னபிறகுதான் லஞ்ச ஒழிப்புத் துறை தனது வேலையைத் தொடங்க வேண்டும்’’ என்று அந்த அரசாணை சொல்கிறது. தற்போது இதை எதிர்த்து புகழேந்தி, நீதிமன்றத்தில் வழக்கு நடத்திக்கொண்டிருக்கிறார். மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாதாடிக்கொண்டிருக்கிறார்.

 - ஜோ.ஸ்டாலின்

அரசாணைக்கான அவசரம் ஏன்?
சென்னை உயர் நீதிமன்றத்தில் சந்திரசேகர் என்பவர் ஒரு வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர் ஆகியோர், சென்னை மருத்துவக் கல்லூரியில் விதிமுறைகளை மீறி, எண்டோகிரையானலஜி துறையில் இணைப் பேராசிரியர் பதவியிடத்தை உருவாக்கி உள்ளனர். இது குறிப்பிட்ட ஒருவருக்கு தவறான வழியில், பதவி உயர்வு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள பணியிடம். எனவே, தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறை செயலாளர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தங்களுக்குச் சிக்கலாகும் என்ற நிலையில், இப்படி ஓர் அரசாணையை தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. 

போஸ்ட் ஆபீஸ் வேலையை மட்டுமே செய்யும்!


தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் விதிமுறையைத் திருத்தச் சொல்லி நாம் வழக்குத் தொடுத்துள்ளோம். ஆனால், தமிழக அரசு தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக் கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் விதிமுறைகளை வகுத்து அரசாணை வெளியிடுகிறது. தற்போது வெளியாகி உள்ள அரசாணையின்படி, யார் லஞ்சம் வாங்கினாலும் ஊழல் செய்தாலும் அவர் பஞ்சாயத்து போர்டு தலைவர், தலையாரி, வி.ஏ.ஓ., ஆர்.டி.ஓ., தலைமைச் செயலாளர், கவுன்சிலர், எம்.எல்.ஏ., அமைச்சர்... என யார் மீதும் வழக்குப் பதிவுசெய்ய முடியாது. வரும் புகார்களை அரசாங்கத்துக்கு அனுப்பும் போஸ்ட் ஆபீஸ் வேலையை மட்டும்தான் இனி லஞ்ச ஒழிப்புத் துறை செய்ய முடியும். நாடு முழுவதும் லோக்பால், ஜன் லோக்பால் என்று புதிய சட்டங்களைக் கொண்டுவர வேண்டும் என்ற கருத்து வலுபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு வழிகாட்டி உள்ளது. இவை அத்தனையும் மீறி, இவற்றுக்கு நேரெதிராக தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய அரசாணை தமிழகத்தை ஊழல் மாநிலமாக்கவே வழி செய்யும்’’ என்றார்.

NEWS TODAY 29.01.2026