Thursday, March 10, 2016

துபாயில் வரலாறு காணாத கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்பு

துபாயில் வரலாறு காணாத கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்பு

First Published : 10 March 2016 10:21 AM IST
துபாயில் வரலாறு காணாத கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
மழையே காணாத வரண்ட பூமியான துபாயில் நேற்று ஒரே நாளில் மட்டும் 29 செ.மீ., மழை பெய்துள்ளது. இதனால் அங்கு சாலை முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலையில் சென்ற வாகனங்கள் தண்ணீரில் சிக்கிக் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மணிக்கு 127 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசி வருகின்றது. நேற்று மட்டும் 250 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக அபுதாபி விமான நிலையம் 3 மணி நேரம் வரை மூடப்பட்டது. பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றும் கனமழை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இணையதளமும், தகவல்களும்..


DINAMANI


By ஜி. சசிகுமார்

First Published : 10 March 2016 01:46 AM IST


இணையம் இன்றி அணுவளவும் அசையாது என்பதுதான் இன்றைய நிலை. துவக்க காலத்தில் தகவல் பரிமாற்றத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இணையம், தற்போது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, குழந்தைகளுக்கான பொருள்கள் முதல் பெரியவர்களுக்கான மருந்து, மாத்திரைகள் வரை அனைவருக்கும் தேவையான, அனைத்து விதமான பொருள்களையும் இணையதளங்கள் மூலமாக வீட்டில் இருந்தபடியே தற்போது வாங்க முடிகிறது.
மேலும், வங்கிக் கணக்கைச் செயல்படுத்துதல், பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பணிகளையும் இணையம் மூலமாகவே செய்து முடிக்க முடிகிறது.
இன்னும் இதுபோல எண்ணற்ற சேவைகளையும் எதிர்காலத்தில் மக்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகளும் இடையறாது நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு இணையத்தின் பயன்பாடு ஒருபுறம் இருக்க, தற்போது மிகப் பெரிய தகவல் சேகரிப்பு மையமாகவும் திகழ்கிறது இணையம். இதில் கிடைக்காத தகவல்களே இல்லை எனும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்தத் தகவல்கள் சரியாவைதானா என்ற கேள்வியை எழுப்ப வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக, தமிழ்ச் சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ள ஒரு தளத்தில் அசோகமித்திரனின் "புலிக்கலைஞன்' எனும் சிறுகதையும் இடம் பெற்றுள்ளது. அதில், வாய்ப்புக் கேட்டு சினிமா அலுவலகத்துக்குச் செல்லும் அந்தக் கதையின் நாயகன் அங்கிருப்பவர்கள் முன்பாக புலி வேஷமிட்டு ஆடிக் காட்டும் பகுதி இடம் பெறவேயில்லை. அதுதான் அந்தக் கதையின் முக்கியப் பகுதியாகும்.
ஆனால், அது இல்லாததால் அந்தக் கதை அதன் தன்மையையே இழந்து, வாசகருக்குப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அந்தக் கதையை புத்தகத்தில் வாசித்தவர்களுக்கு அதன் உண்மையான வடிவம் தெரியும். ஆனால், இணையதளத்தின் மூலமாக, முதன்முதலாக அந்தக் கதையை வாசிப்பவர்களுக்கு அதில் உள்ள கதையின் உண்மை வடிவமே அதுதான் என்ற எண்ணத்தையே உருவாக்கும்.
இதேபோல, தமிழில் உள்ள தகவல் களஞ்சியம் தளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் பெரியாரைப் பற்றி தவறான தகவல்கள் வெளியிடப்பட்டன. அதுகுறித்து அந்த அமைப்பினர் கண்டனம் தெரிவித்த உடன், சரியான தகவலையும் தெரிவித்ததையடுத்து அது சரி செய்யப்பட்டது.
சமீபத்தில் கூட, அதே தகவல் தளத்தில், முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவைப் பற்றியும் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டன. அதுகுறித்தும் சுட்டிக் காட்டிய பின்னர் அவை நீக்கப்பட்டன.
இதேபோல, மக்களவை பா.ஜ.க. பெண் உறுப்பினர் அஞ்சு பாலா இறந்துவிட்டதாகவும், மேலும் அவரைப் பற்றித் தவறான தகவல்களும் அந்தத் தகவல் தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதுகுறித்து அவர் மக்களவையிலும் புகார் எழுப்பியுள்ளார் என்பது தற்போதைய செய்தி.
இதெல்லாம் நமக்குத் தெரியவரும் மிகச் சில உதாரணங்களே. இவற்றில் சில தகவல்கள் தமிழில் வெளியானதாலும், அந்தத் தகவல்களைப் பற்றி நாம் ஏற்கெனவே தெரிந்திருந்ததாலும், அவை தவறாக வெளியிடப்பட்டபோது சுட்டிக்காட்டப்பட்டன.
ஆனால், இதேபோல ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களை முதன்முதலாகப் படிக்கும்போது அதன் உண்மைத் தன்மையை நாம் எப்படிக் கண்டுகொள்வது?
இணையத்தில் உள்ள தேடுபொறியின் உதவியுடன் நாம் தேடும் தகவல்கள் சில இணையதளங்கள், வலைப்பூக்கள், மின் இதழ்(நூல்)கள், முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் போன்றவற்றில் இருந்தே நமது பார்வைக்குக் கிடைக்கின்றன.
இதில், முகநூல் மூலமாக வெளியிடப்படும் தகவல் பகிர்வு குறித்து இங்கு குறிப்பிடுவது மிகவும் முக்கியம். ஏனெனில், முகநூலில் குறிப்பிட்ட சிலவற்றைத் தவிர பெரும்பாலும் வெளியிடப்படுவது தவறான தகவல்களே.
இதற்கு சமீபத்திய உதாரணமாக சென்னை வெள்ள நிவாரணச் சம்பவத்தைக் கூறலாம். வெள்ளத்தின்போது முகநூல் நண்பர்கள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப் பெரிய அளவிலான உதவிகளைச் செய்தனர். அவ்வாறு தொடர்பு கொள்ளுமாறு முகநூலில் வெளியிடப்பட்ட செல்லிடப்பேசி எண்கள் பெரும்பாலும் தவறானவையாகவே இருந்தன.
குறிப்பாக, வெளியூரைச் சேர்ந்தவர்களின் எண்களே அதில் அதிக அளவில் வெளியிடப்பட்டிருந்தன. இதை, முகநூலிலேயே பலர் சுட்டிக்காட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இணையத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் போலி இணையதளங்கள். இதற்கு உதாரணம்,
பிரபல தனியார் தொலைக்காட்சியின் இணையப் பக்கத்தை தேடினால் அதே முகவரியில், அதே பெயரில், வேறுவிதமான பக்க வடிவமைப்புடன் ஆனால், முற்றிலும் வேறு தகவல்களைக் கொண்ட இணையதளம் காட்சிக்குக் கிடைக்கும். இவையெல்லாம் நம் பார்வைக்கு கிடைக்கப் பெற்ற மிகச் சில உதாரணங்களே ஆகும்.
இந்நிலையில், தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் செய்முறைப் பயிற்சிக்காக மாணவ, மாணவிகளைப் பல்வேறு தகவல்களைச் சேகரித்து வரச் சொல்கின்றனர். இதற்காக அவர்கள் நாடுவதும் இணையதளங்களைத்தான்.
இதுமட்டுமன்றி, எம்.ஃபில்., பி.ஹெச்டி. உள்ளிட்ட ஆராய்ச்சிப் படிப்புகள் மேற்கொள்வோரும் முன்பெல்லாம் நூலகம் சென்று தகவல்கள் திரட்டி வந்தனர். ஆனால், அந்த நிலை மாறி, தற்போது அவர்களின் முதல் தகவல் சேகரிப்பு மையமாக இணையதளங்களே உள்ளன.
இதுபோல, பல்வேறு தகவல்கள் வேண்டுவோரும் அதற்காக இணையத்தையே நாடுகின்றனர்.
இணையம் ஒரு தகவல் தொடர்புச் சாதனம் என்பதிலும், இன்றைய நிலையில் அனைத்துத் துறைகளிலும் அதன் பயன்பாடு அளப்பரியது என்பதிலும் எள்ளளவும் ஐயமில்லை.
ஆனால், அதில் பதிவேற்றம் செய்யப்படும் தகவல்கள் சரியானவையா என்பதே தற்போது நம்முன் எழுந்துள்ள மிகப் பெரிய கேள்வி.

Wednesday, March 9, 2016

கல்விக் கடனை கட்டவில்லை எனக்கூறி மாணவியின் குடும்பப் படத்துடன் பேனர்: வங்கிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

THE HINDU TAMIL 9.3.2016

கல்விக் கடனை வசூலிக்க பொது இடத்தில் மாணவியின் போட்டோவுடன் ஃபிளெக்ஸ் வைத்து அவமானப்படுத்தியதற்காக ஏன் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கூடாது என கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் சம்பந்தப்பட்ட வங்கிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் தனது மகளின் பொறியியல் படிப்புக்காக மஞ்சூரில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையில் 2009-ல் ரூ.2 லட்சம் கல்விக் கடன் பெற்றிருக்கிறார். திருப்பிச் செலுத்துவதற்கான தவணைக் காலம் 2014 ஜூன் மாதம் தொடங்கிய நிலையில், ஜூலை 2014-ல் ஒரு லட்சம் ரூபாயை மொத்தமாக செலுத்தி இருக்கிறார் கிருஷ்ணன்.

ஆனால், 2015 ஜனவரியில் கல்விக் கடனை திருப்பிச் செலுத்தச் சொல்லி அழுத்தம் கொடுத்திருக்கிறது வங்கி நிர்வாகம். திரும்பத் திரும்ப வங்கியில் இருந்து வந்த நெருக்கடிகளை தாங்க முடியாமல் உடல் நலம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணன் 01.02.15-ல் உயிரிழந்தார்.

இந்நிலையில், இவர்கள் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என கிருஷ்ணன் அவரது மனைவி சரஸ்வதி மற்றும் அவரது மகள் ஆகியோரின் புகைப்படங்களோடு பொது இடத்திலும் கிளைக்கு அருகிலும் ஃபிளெக்ஸ் போர்டுகளை வைத்தது வங்கி நிர்வாகம்.

இதைப் பார்த்துவிட்டு, கிருஷ்ணனின் மகளுக்கு ஆதரவாக திரண்ட பொதுமக்கள் வங்கிக் கிளையை முற்றுகையிட்டு பிரச்சினையைக் கிளப்பவும் போலீஸ் தலையிட்டு ஃபிளெக்ஸ் போர்டுகளை அப்புறப்படுத்தியது. இது தொடர்பாக மனித வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கும் கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கம் 06.07.15-ல் கடிதம் எழுதியது.

இதையே வழக்காக எடுத்துக் கொண்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம், நீலகிரி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைவர், கிளை மேலாளர் ஆகியோருக்கு 06.08.15-ல் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து கிருஷ்ணனின் மகளிடம் வருத்தம் தெரிவித்துக் கொண்ட வங்கி கிளை நிர்வாகம், ‘டேட்டா என்ட்ரியில் நடந்த தவறால் அவரது பெயர் வராக்கடன் பட்டியலில் தவறுதலாக சேர்க்கப்பட்டுவிட்டது. இப்போது அந்த தவறு சரிசெய்யப்பட்டு, நீத்துவின் விருப்பப்படி தவணைக் காலமும் திருத்தி அமைக்கப்பட்டுவிட்டது’ என்று மனித உரிமைகள் ஆணையத்துக்கு பதில் கொடுத்தது.

இதை ஏற்க மறுத்த ஆணையம், ‘கல்விக் கடனை திருப்பிச் செலுத்தாவிட்டாலும் மாணவரின் போட்டோவை பிரசுரிக்கக் கூடாது என்ற மத்திய நிதியமைச்சகத்தின் உத்தரவை பின்பற்றவில்லை. இதன் மூலம், அரசியலமைப்பின் பிரிவு 21-ல் கூறப்பட்டுள்ள, நாட்டில் கவுரவமாக வாழும் உரிமையை பறித்து மாணவியை அவமானப்படுத்தி இருக்கிறீர்கள். இதற்காக நீத்துவுக்கு வங்கி நிர்வாகம் ரூ.ஒரு லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என ஏன் உத்தரவிடக் கூடாது?’ என விளக்கம் கேட்டு சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைவருக்கு கடந்த 2-ம் தேதி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

இந்த விவகாரத்தை சுமூகமாக முடிக்க நடவடிக்கை எடுத்த வங்கிக் கிளையின் முன்னாள் துணை மேலாளர் ஸ்ரீதரிடம் இதுகுறித்துக் கேட்டபோது, “முன்பு இருந்த மேலாளர், தவணை விடுப்புக்கான காலத்தை குறைத்து கணக்கிட்டுவிட்டதால் நடந்த தவறு இது. இதை எடுத்துச் சொல்லி கிருஷ்ணனின் மகளிடம் மன்னிப்பு கோரி புகாரை திரும்பப் பெற வைத்தோம். ஆனாலும், மனித உரிமை ஆணையம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது என்றால் வங்கி நிர்வாகம் தான் இனி முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

எம்ஜிஆர் 100 | 17 - நிழலில் எதிரிகள்; நிஜத்தில் நண்பர்கள்

‘அன்னமிட்ட கை’ படத்தில் எம்.ஜி.ஆர் - நம்பியார்.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்..the hindu tamil

M.G.R. பற்றி பேசினால் நம்பியார் பற்றி பேசாமல் இருக்க முடியாது. எம்.ஜி.ஆர். படங்களில் வில்லனாக நம்பியார் வந்த பிறகுதான் படத்தில் விறுவிறுப்பு கூடும். படத்தில்தான் எம்.ஜி.ஆருக்கு அவர் வில்லனே தவிர, உண்மையில் நெருங்கிய நண்பர். எம்.ஜி.ஆரை பெயர் சொல்லி அழைக்கும் உரிமை பெற்ற ஒரு சிலரில் நம்பியாரும் ஒருவர். ரொம்ப ஜாலியான பேர்வழியும் கூட. அவரது நகைச்சுவையை எம்.ஜி.ஆரும் விரும்பி ரசிப்பார். இருவரும் நிழலில் எதிரிகள். நிஜத்தில் நண்பர்கள்.

எம்.ஜி.ஆர். கத்தி சண்டைக் காட்சிகளில் நடிப்பதை பார்த்து அவரை ‘அட்டை கத்தி வீரர்’ என்றெல்லாம் அக்காலத்தில் விமர் சனங்கள் எழுந்தது உண்டு. ஆனால், உண்மை யான கத்தியைக் கொண்டே எம்.ஜி.ஆர். படங்களில் சண்டை போட்டிருக்கிறார். அவர் பயன்படுத்திய கத்திகள் சென்னையில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

‘சர்வாதிகாரி’ படத்தில் நம்பியாருடனான வாள் சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆரின் கத்தி நம்பியாரின் கட்டை விரலை ஊடுருவிவிட்டது. அதே போல, ‘அரசிளங்குமரி’ படம் எம்.ஜி.ஆரின் வாள் வீச்சுக்காகவே புகழ் பெற்றது.

அந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கும் நம்பி யாருக்கும் ஆக்ரோஷமான சண்டை. ஒரு நாள் படப்பிடிப்பில் நம்பியாரின் கத்தி எம்.ஜி.ஆரின் கண்ணுக்கு மேலே புருவத்தில் பட்டு கிழித்து விட்டது. படத்துக்கான மேக் அப் இல்லாமல் எம்.ஜி.ஆர். தனது வழக்கமான தோற்றத்தில் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இடது புருவத்தில் அந்தத் தழும்பு தெரியும்.

படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆரின் புருவத் தில் நம்பியாரின் கத்தி பட்டு ரத்தம் கொட்டுகிறது. இன்னும் இரண்டு அங்குலங்கள் கீழே பட்டிருந் தால் எம்.ஜி.ஆரின் கண் பார்வை பறிபோயிருக் கும். அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். ஓடி வந்த உதவியாளர் ஒருவர், எம்.ஜி.ஆரின் புருவத்தில் ரத்தம் கொட்டிய இடத்தில் துணியை அமுக்கிப் பிடித்தபடி, நம்பியாரைப் பார்த்து, ‘‘என்னண்ணே, பார்த்து செய்யக் கூடாதா? நீங்க கூடவா இப்படி?’’ என்று இரைந்தார். நம்பியாருக்கும் வருத்தம்.

எம்.ஜி.ஆர். உடனே, ‘‘அவருக்கு என் மீது கோபம் இல்ல; அந்தக் கத்திக்குத்தான் என் மீது கோபம்’’ என்று சொல்லி அந்த இடத்தில் சகஜ நிலையை ஏற்படுத்தினார்.

பின்னர், நம்பியாரைப் பார்த்து, ‘‘ஏன்யா இப்படி செஞ்சீரு?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.

‘‘நியாயமாக பார்த்தால் எனக்கு நீங்கள் நன்றி சொல்லணும்’’ - நம்பியார் பதில்.

தெரியாமல்தான் என்றாலும் கத்தியாலும் குத்தி விட்டு, அதற்கு நன்றி வேறா? என்று நினைத்த படி ‘‘ஏன்?’’ என்று கேட்ட எம்.ஜி.ஆருக்கு, ‘‘டைரக்டர் சொன்ன இடத்தில் குத்தாமல் இருந்ததற்காக’’ என்று மேலும் புதிர் போட்டார் நம்பியார்.

‘‘டைரக்டர் என்ன சொன்னார்?’’ - வியப்புடன் கேட்டார் எம்.ஜி.ஆர்.

‘‘நெஞ்சில் குத்தச் சொன்னார்’’ என்ற நம்பியாரின் பதிலைக் கேட்ட எம்.ஜி.ஆர். சிரித்த சிரிப்பால் படப்பிடிப்பு அரங்கமே அதிர்ந்தது.

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அவரைப் பார்க்க அவரது வீட்டுக்கு நம்பியார் சென்றுள்ளார். அமைச்சர்கள் உட்பட வி.ஐ.பி-க்கள் எம்.ஜி.ஆரை பார்க்க காத்திருந்தனர். நம்பியார் வந்துள்ள விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப் பட்டது. அவர் உடனே தனது அறையின் கதவைத் திறந்து நம்பியாரைப் பார்த்து உள்ளே வரும்படி சைகை காட்டிவிட்டு சென்றார்.

தங்களைத்தான் எம்.ஜி.ஆர். கூப்பிடுகிறார் என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்த அமைச்சர்கள் சிலர் எம்.ஜி.ஆர். அறைக்குச் சென்றனர். நம்பியார் வராததைப் பார்த்த எம்.ஜி.ஆர். மீண்டும் தனது அறையின் கதவைத் திறந்து, நம்பியாரைப் பார்த்து ‘‘உன்னைத்தான். உள்ளே வாய்யா’’ என்றார். நம்பியார் உள்ளே வந்த பின் உதவியாளரிடம் எல்லோருக்கும் காபி கொண்டு வருமாறு எம்.ஜி.ஆர். கூறினார். அந்த உதவியாளரை நம்பியார் தடுத்து, ‘‘எனக்கு மட்டும் ஒரு காபி கொண்டு வாருங்கள்’’ என்றார்.

அங்கிருந்த அமைச்சர் ஒருவர் நம்பியாரைப் பார்த்து, ‘‘ஏன், நாங்க என்ன பாவம் செஞ்சோம்?’’ என்று நம்பியாரிடம் கேட்டார். அதற்கு, ‘‘இங்கே நான் மட்டும்தான் விஐபி’’ என்ற நம்பியாரின் பதிலால் எம்.ஜி.ஆர் மட்டுமின்றி கேள்வி கேட்ட அமைச்சர் உட்பட எல்லோரும் சிரித்தனர்.

நகைச்சுவை உணர்வு உள்ளவர்களால்தான் நல்ல நகைச்சுவையை ரசிக்க முடியும். எம்.ஜி.ஆருக்கு நகைச்சுவை உணர்வு அபாரம்.

பல்வேறு இடையூறுகளுக்கு இடையே வெளி நாடுகளில் எம்.ஜி.ஆர். எடுத்து வெளியிட்டு மிகப் பெரும் வெற்றி பெற்ற ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில்தான் நடிகை லதா அறிமுகம். முதல் படத்திலேயே கதாநாயகி. அதிலும் உச்ச நட்சத்திரமான எம்.ஜி.ஆருக்கு ஜோடி. ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர். என்ற ஆளுமை முன் நடிப்பதில் லதாவுக்கு உள்ளூர நடுக்கம். படத்தின் இயக்குநரும் எம்.ஜி.ஆர்தான். லதா நடித்த காட்சிகளில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு நடிக்கவில்லை. காரணம் கேட்டார் எம்.ஜி.ஆர்.

‘‘சார், உங்கள் முன் நடிக்க எனக்கு தயக்க மாக இருக்கிறது’’ என்றார் லதா. இவ்வளவு ஏற்பாடுகளுக்குப் பிறகு, நடிக்கத் தயக்கம் என்றால் யாருக்குத்தான் கோபம் வராது? ஆனாலும், லதாவின் நிலையை எம்.ஜி.ஆர். புரிந்துகொண்டார்.

அவருக்கு தைரியம் ஏற்படுத்த எம்.ஜி.ஆர். சொன்னதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த லதா, இயல்பான நிலைக்கு வந்து நன்றாக நடிக்கத் தொடங்கிவிட்டார். லதாவின் தயக் கத்தை போக்குவதற்காக எம்.ஜி.ஆர். கேட்ட கேள்வி...

‘‘பேசாமல் படத்தின் கதாநாயகனை மாத்திட லாமா?’’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம்

‘நாடோடி மன்னன்’ படத்தை எம்.ஜி.ஆர். தானே தயாரித்து, இயக்கி, கதாநாயகனாக நடித்தார். பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தின் வெற்றி விழா 16.10.1958-ல் மதுரையில் நடந்தது. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து விழா நடந்த தமுக்கம் மைதானம் வரை 4 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் மக்களின் ஆரவார வரவேற்புக்கு இடையே எம்.ஜி.ஆர். ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

எம்.ஜி.ஆர். சென்ற சாரட் வண்டிக்கு முன் உலக உருண்டையின் மீது 110 பவுனில் தங்க வாள் எடுத்துச் செல்லப்பட்டது. விழாவில் எம்.ஜி.ஆருக்கு தங்க வாளை நெடுஞ்செழியன் பரிசளித்தார். முதன்முதலில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த திரைப்பட வெற்றி விழா இதுதான்!

Saturday, March 5, 2016

பொருந்தா இரக்கம் அல்ல!


Dinamani


By ஆசிரியர்

First Published : 05 March 2016 12:59 AM IST


ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பின் அம்சங்களை, அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள பொறுப்புடன் தமிழக அரசின் கோரிக்கையைப் பரிசீலிக்கிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டிருப்பது இந்த 7 பேரும் விடுதலை செய்யப்படும் வாய்ப்புகள் மீது அவநம்பிக்கை கொள்ளச் செய்கிறது.
ஏனென்றால், உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், "....நம்பிக்கையின் ஒளிக்கீற்று அவர்களுக்கு ஆதரவாக (விடுதலை செய்வது) அமைந்தால், சமூக நலன் கருதாமல் பொருந்தா இரக்கமாக முடியும்' என்று தெரிவித்திருக்கிறது. ஆகவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு அப்பாற்பட்டு, மத்திய அரசு இந்த விவகாரத்தை அணுகினால் மட்டுமே 7 பேருக்கும் விடுதலை கிடைக்கக்கூடும். அப்படி மத்திய அரசு செயல்படுமா என்பதுதான் இன்று தமிழகத்தில் பலருக்கும் எழும் கேள்வி..
1993-ஆம் ஆண்டில் நடைபெற்ற மும்பை குண்டு வெடிப்பு வழக்கில், பயங்கரவாத சக்திகளுக்கு உதவி செய்ததாக நடிகர் சஞ்சய் தத் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையை முடித்து, நூறு நாள்களுக்கு முன்னதாகவே நன்னடத்தைக்காக தண்டனைக் குறைப்புடன் விடுதலையாகியுள்ள நிலையில், ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளின் மீதான குற்றச் செயல், தண்டனை ஆகியவற்றையும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலக்கட்டம் இது.
சஞ்சய் தத் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவிகள் செய்ய நேரிட்டதற்குத் திரைப்படத் துறையைச் சார்ந்த நட்பு வட்டாரம்தான் காரணமே தவிர, பயங்கரவாதிகளின் கொள்கை, தாக்குதல் திட்டம் எல்லாவற்றுக்கும் அவர் அப்பாற்பட்டவராக, தொடர்பு இல்லாதவராக இருந்தார் என்பதால்தான் அவருக்கு 5 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்கூட, இதேபோன்று, ராஜீவ் காந்தி கொலையில் நேரடியாகத் தொடர்புடையவர்கள், தொடர்பு இல்லாமல் உதவி செய்தவர்கள் என்று வகைப்படுத்தி மீள்ஆய்வு செய்ய வேண்டிய தருணம் இது.
இந்த நேரத்தில் இந்த விவகாரத்தை, தமிழக முதல்வர் தனது தேர்தல் உத்தியாக பயன்படுத்துகிறார் என்று விமர்சனம் செய்து, அரசியலாக்குவதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. ஒருவேளை, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கக்கூடிய தருணம் இதுவே என்று முதல்வர் ஜெயலலிதா கருதினால் அதைக் குறை காண வேண்டியதும் இல்லை.
ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்யக்கூடாது என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுவே மத்திய அரசின் செயல்பாட்டுக்கு பெருந்தடையாக இருந்துவரும் காங்கிரஸ் கட்சிக்கு பதிலடியாக, 7 பேரையும் விடுவிக்கும் முடிவை மோடி அரசு எடுக்கக்கூடிய ஆதரவான சூழ்நிலையாக மாறவும் வாய்ப்பு உள்ளது. அதனால், இதனைத் தேர்தல் உத்தியாகப் பார்க்க வேண்டியதில்லை.
ஈழத்தமிழர் பிரச்னை அரசியல் மேடையில் மட்டுமே சலனங்களை ஏற்படுத்தின என்பதும் வாக்கு வங்கிகளில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தியதே இல்லை என்பதும் தமிழகத் தேர்தல்களைக் கடந்த கால் நூற்றாண்டாகப் பார்த்துவரும் நோக்கர்கள் அறிவார்கள். ஈழத்தமிழர் பிரச்னை தமிழ்நாட்டின் அடிநாதமாக, உயிர்ப்புள்ளதாக இருந்திருந்தால், மதிமுக பொதுச் செயலர் வைகோ என்றைக்கோ தமிழக முதல்வராகியிருப்பார். ஆகவே, இதைத் தேர்தல் உத்தி என்று மலினப்படுத்துவது அர்த்தமற்றது.
சஞ்சய் தத்துக்கு அளிக்கப்பட்ட அதே விதமான குறைவான தண்டனையும், நன்னடத்தைக்கான தண்டனைக் குறைப்பும் பெறும் அளவுக்கு தகுதியுடையவர்கள், ராஜீவ் கொலைத் திட்டம் பற்றிய முழுமையான அறிதல் இல்லாமல் உடன் இருந்தவர்கள் என்ற அளவில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருக்கும் நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகியோர். இந்த நான்கு பேரையும் உடனடியாக விடுதலை செய்வதில் எந்தவிதத் தடையோ, சட்டச் சிக்கலோ இருக்க முடியாது. இந்த நான்கு பேரும் அவர்கள் செய்த குற்றத்துக்கு மேலதிகமான தண்டனையை கடந்த 24 ஆண்டுகளாக அனுபவித்துவிட்டனர். அவர்களது ஆயுள் தண்டனையைக் குறைத்து விடுதலை செய்வதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.
ராஜீவ் கொலைத் திட்டம் பற்றி அறிந்தவர்கள் என்பதாக நீதிமன்றத்தால் கருதப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் விடுதலையில் மட்டுமே காங்கிரஸ் கட்சியினர் மற்றும் சிலருடைய எதிர்ப்புகள் இருக்கும். இதிலும்கூட, இவர்கள் 24 ஆண்டுகள் சிறையில் கழித்தவர்கள் என்பதாலும், தண்டனை எப்போது நிறைவேற்றப்படுமோ என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் செத்து பிழைத்துக் கிடப்பவர்கள் என்பதையும் மத்திய அரசு கருதிப் பார்க்க வேண்டும்.
இவர்களில் யாரும், விடுதலைக்குப் பிறகு ஆப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா போல தமிழ்நாட்டில் ஒரு கட்சியை நடத்தி, ஆட்சியைப் பிடித்துவிடப் போவதில்லை. அல்லது இவர்கள் மீண்டும் தாக்குதலுக்காக திட்டமிடுவார்கள் என்பதற்கும் வாய்ப்பில்லை. இவர்கள் மீதான இரக்கம், நீதிமன்றம் குறிப்பிடுவதைப்போல பொருந்தா இரக்கமாக அமைந்துவிடாது.
ராஜீவ் காந்தியின் மகள்வழி பெயர்த்தி மிராயா வதேரா தமிழ்நாட்டுக்கு வந்து கூடைப்பந்து விளையாடும் அமைதிச் சூழலில், அனைவரும் அனைத்தையும் மறந்துவிட்ட வேளையில், இன்னமும் 24 ஆண்டுகளாக ரத்தக்கறையின் மிச்சத்தைத் துடைக்காமல் வைத்திருக்க வேண்டுமா? இரக்கம் உள்ளவர்கள் பாக்கியவான்கள் என்கிறது விவிலியம்!

PhD research period is also teaching experience: UGC



Period spent on acquiring a PhD degree without any leave will now be counted as teaching experience of candidates applying for direct recruitment to vacant positions of faculties or promotion in the higher educational institutions.

The University Grants Commission (UGC) recently approved a proposal in this regard at a meeting here.

“The period of active service spent on pursuing research degree, ie, for acquiring PhD degree simultaneously without taking any kind of leave may be counted as teaching experience for the purpose of direct recruitment/promotion to the post of associate professor and above.” the commission decided .

The commission’s decision was seen in the academic circles as an effort to primarily facilitate filling up of posts lying vacant in large numbers across the country’s universities and other higher educational institutions.

Many of the universities and other higher educational institutions demand at least two to three years teaching experience for recruitment to vacant posts of faculties.

“We have large number of unemployed meritorious PhD holders. The decision to treat the period spent by them in acquiring a PhD degree as teaching experience will not only open doors of employment to many of such degree holders, but also facilitate institutions fill up their teaching positions lying vacant for years,” official sources said.

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு மறுசீராய்வு மனு மீதான விசாரணை 11–ந் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுடெல்லி, 

தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து அ.தி.மு.க.வினர் நடத்திய போராட்டத்தில் கோவை வேளாண் பல்கலைக்கழக பஸ் எரிக்கப்பட்டதில் 3 மாணவிகள் கருகி பலியானார்கள். இந்த வழக்கில் முனியப்பன், நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அதனை சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டும் என மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மறுசீராய்வு மனுக்கள் மீது 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்ற உத்தரவின் அடிப்படையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், அருண் மிஸ்ரா, பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆஜரானார். குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் நாகேஸ்வர ராவ், மற்றும் சுசில் குமார் ஆகியோர், இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல. அந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டபோது அதன் காரணமாக எதிர்பாராதவிதமாக நடைபெற்றதாகும். எனவே மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று வாதிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆயுள் தண்டனை என்பது எத்தனை ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பது பற்றியும், இவர்களின் கருணை மனுக்கள் நிலுவையில் இருந்துவரும் நிலையில் தண்டனையை குறைத்தால் அது குற்றவாளிகளுக்கு இரட்டை சலுகைகள் வழங்கியதுபோல் இருக்கும் என்பது குறித்தும் நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றனர். இந்த வழக்கின் விசாரணை 11–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

NEWS TODAY 31.01.2026