Wednesday, April 6, 2016

எம்ஜிஆர் 100 | 37 - ‘‘நான் பெறாத அந்தப் புள்ள நீதாம்பா’’!

தனக்கு சோடா வாங்கிக் கொடுத்த மூதாட்டியை அரவணைத்துக் கொள்கிறார் எம்.ஜி.ஆர்.

எம்ஜிஆர் 100 | 37 - ‘‘நான் பெறாத அந்தப் புள்ள நீதாம்பா’’!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
M.G.R. நடித்து வெளியாகி பெருவெற்றி பெற்று, அதன் பிறகு வெளியான பல படங்கள் அதே ஃபார்முலாவை பின்பற்றும் அளவுக்கு தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட படம் ‘எங்க வீட்டுப் பிள்ளை’. இது வெறும் படத்தின் பெயர் மட்டுமல்ல; இந்தப் பெயரை சொல்லி உரிமை கொண்டாடும் அளவுக்கு மக்களின் நம்பிக்கையைப் பெற்றவராக எம்.ஜி.ஆர். விளங்கினார்.

நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டையில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான பஸ் டிரைவர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டது. காலில் பலத்த காயம். அறுவை சிகிச்சை செய்து காலை எடுக்காவிட்டால் உயிரே பறி போகும் அபாயம். ‘பிறருக்கு பாரமாக இருப்பதை விட சாவதே மேல்’ என்ற எண்ணத்தில் அறுவை சிகிச்சைக்கு டிரை வர் மறுத்தார். பெற்ற மனம் கேட் குமா? மகனைக் காப்பாற்றத் துடித்தார் தாய். ஆனால், அவர் என்ன சொல்லியும் மகன் கேட்கவில்லை. ‘காலை இழந்து வாழ்வதை விட சாவதே மேல்’ என்று உறுதியாகக் கூறிவிட்டார்.

எம்.ஜி.ஆர். ரசிகனான தன் மகன் அவர் சொன்னால் கேட்பான் என்ற நம் பிக்கை பிறந்தது அந்தத் தாய்க்கு. எம்.ஜி.ஆரை சந்தித்து தன் மகனின் நிலையைக் கூறி அவரைக் காப்பாற்றும் படி கேட்டுக் கொண்டார். அந்த தாயின் வேண்டுகோளை ஏற்று மருத் துவமனைக்கே எம்.ஜி.ஆர் சென்று தனது ரசிகரை சந்தித்து ஆறுதலும் தைரியமும் கூறினார்.

சூரியனைக் கண்ட பனி போல டிரைவ ரின் கவலையும் அச்சமும் மிச்சமில்லா மல் பறந்தன. அறுவை சிகிச்சைக்கு சம் மதித்தார். பாதிக்கப்பட்ட கால் அகற்றப் பட்டு டிரைவர் உயிர் பிழைத்தார். எம்.ஜி.ஆரின் செலவிலேயே அவருக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டது. பின்னர், அவர் கடை வைத்து நடத்தவும் எம்.ஜி.ஆர். உதவி செய்தார். டிரைவராக இருந்தவர் முதலாளியாகிவிட்டார்.

நல்ல நிலைமைக்கு வந்தவுடன் தாயும் மகனும் எம்.ஜி.ஆரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினர். தங்கள் விருப் பத்தை எம்.ஜி.ஆருக்கு தெரியப்படுத்தி சந்திக்க அனுமதி கோரினர். அதற்கு எம்.ஜி.ஆர். அளித்த பதில் இது...

‘‘தன் மகன்களில் ஒருவனாக கருதித்தான் என்னைத் தேடி அந்த அன்னை வந்தார். டிரைவரை நானும் என் சகோதரனாக நினைத்துத்தான் உதவி செய்தேன். தாயாக, தம்பியாக எப்போது வேண்டுமானாலும் அவர்கள் என்னைப் பார்க்க வரலாம். நன்றி சொல்வதற்கு என்று வந்தால் நான் அந்நியனாகி விடுவேன். வயது முதிர்ந்த தாயை அந்த சகோதரர் நன்றாக கவனித்துக் கொண்டாலே போதும். அதுவே என்னைப் பார்ப்பதற்கு சமம்.’’

‘ஆனந்த ஜோதி’ திரைப்படத்தில் இடம் பெற்ற, ‘ஒருதாய் மக்கள் நாமென் போம், ஒன்றே எங்கள் குலமென்போம்...’ பாடலுக்கு எம்.ஜி.ஆர். வெறுமனே வாயசைத்து விட்டுப் போனவர் அல்ல, அதன்படியே வாழ்ந்தவர்.

1967-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் பரங்கிமலைத் தொகுதியில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டார். துப்பாக்கி யால் சுடப்படுவதற்கு முன் அங்கு பிரச்சாரத்துக்கு சென்றிருந்தார். எம்.ஜி.ஆரை பார்த்த ஒரு மூதாட்டி அன்புடன் அவருக்கு சோடா வாங்கிக் கொடுத்தார். அவரை எம்.ஜி.ஆர். நெகிழ்ச்சியுடன் அணைத்துக் கொண்ட அந்தப் புகைப்படம் மிகவும் பிரபலம். தேர்தல் பிரசார சுவரொட்டிகளில் அந்தப் படம் முக்கிய இடம் பிடித்தது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில் இடம் பெற்ற ‘பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?...’ பாடல் காட்சி மதுரை வைகை அணையில் படமாக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் எம்.ஜி.ஆரை பார்க்கத் திரண்டனர். மக்கள் தாகத்தில் தவிக்கக் கூடாது என்று 2 லாரிகளில் தண்ணீரும் மோரும் கொண்டு வரச் சொல்லி திரண்டிருந்த மக்களுக்கு கொடுக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார்.

பயங்கர கூட்டம், எந்தப் பக்கம் திரும் பினாலும் மக்கள் தலைகள். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆரை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஒரு மூதாட்டி எம்.ஜி.ஆர். இருக்கும் இடத்துக்கே வந்துவிட்டார். அவரிடம் பரிவோடு பேசிய எம்.ஜி.ஆர்., அவரது குடும்பம் குறித்து விசாரித்தார்.

‘‘உங்களுக்கு பிள்ளைகள் இருக் காங்களாம்மா?’’

‘‘இருக்காங்கப்பா’’ என்று பதிலளித்த மூதாட்டியிடம், ‘‘என்ன பண்றாங்க?’’ என்று அடுத்த கேள்வியை கேட்டார் எம்.ஜி.ஆர்.

‘‘ஒரு புள்ள பட்டாளத்துல இருக்கு. இன்னொரு புள்ள சினிமாவுல இருக்கு’’

மூதாட்டியின் இந்த பதிலால் எம்.ஜி.ஆருக்கு வியப்பு. சினிமாவில் இருக்கிறார் என்றால் நிச்சயம் தனக்குத் தெரிந்திருக்கும் என்று எண்ணியபடியே கேட்டார்… ‘‘சினிமாவில் இருக்கும் பிள்ளையின் பெயர் என்ன?’’

‘‘நான் பெறாத அந்தப் புள்ள நீதாம்பா’’

பதிலளித்த அந்தத் தாயின் கண்கள் மட்டுமல்ல; அவரை அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆரின் கண்களும் பனித்தன.

- தொடரும்...

படங்கள் உதவி : ஞானம், செல்வகுமார்

இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்தியது எம்.ஜி.ஆர்.தான். அவர் முதல்வராக இருந்தபோது குடிசைவாழ் மக்களுக்கு இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டத்தை தொடங்கினார். அதன் ஒரு பகுதியாக 2-7-1985 அன்று சென்னை துறைமுகம் பகுதியில் குடிசைவாசிகளுக்கு இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டது.

எம்ஜிஆர் 100 | 36 - M.G.R. ஆத்திகரா? நாத்திகரா?

எம்ஜிஆர் 100 | 36 - M.G.R. ஆத்திகரா? நாத்திகரா?

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. ஆத்திகரா? நாத்திகரா? இந்தக் கேள்வி குறித்து அந்தக் காலத்தில் திண்ணைகளில் பட்டிமன்றமே நடக்கும். கடவுள் நம்பிக்கை என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம் என்றாலும் லட்சக்கணக்கானோர் பின்பற்றக் கூடிய ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை விவாதிக்கப்படுவது இயல்புதான். அதுவும் எம்.ஜி.ஆர். திமுகவில் இருந்தவர் என்னும்போது இந்தக் கேள்வியின் வீரியம் கூடியது.

திமுக ஒரு ‘நாத்திகக் கட்சி' என்று அந்தக் காலத்தில் மட்டுமல்ல; இப் போதும் கூட தவறான கருத்து சில ரிடம் இருக்கிறது. பேரறிஞர் அண்ணா வைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறை யில் அவர் நாத்திகர். ஆனால், அவர் தொடங்கிய திமுக ‘நாத்திகக் கட்சி' என்று அவர் அறிவித்தது இல்லை. 1953-ல் தந்தை பெரியார் ‘பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம்’ அறிவித்தார். அப்போது, அந்தப் போராட்டம் குறித்து அண்ணாவிடம் கேட்கப்பட்டது. அவர் அதற்கு ‘‘நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம். பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டோம்’’ என்று பதிலளித்தார்.

எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தபோது கழுத்தில் மணிமாலையுடன் நெற்றியில் திருநீறு அணிந்து இருப்பார். அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுகவில் சேர்ந்த பிறகு மதச் சின்னங்களை அணிவ தில்லை. மேலும், திமுகவில் சேர்ந்த பிறகு புராண, பக்திப் படங்களில் நடிப்பதை தவிர்த்தார். இதனால், தேடி வந்த பல பட வாய்ப்புகளை நிராகரித்தார்

ஆண்டவனின் பெயரால் மூடநம்பிக் கையைப் பரப்புவதும் மக்களை ஏமாற்று வதுமான காரியங்கள் கூடாது என்றுதான் எம்.ஜி.ஆர். கருதினாரே தவிர, கடவுள் மறுப்பு கொள்கையை அவர் பிரச்சாரம் செய்தது இல்லை. ‘கோயில் கூடாது என் பது அல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது’ என்பது தானே திராவிட இயக்கத்தின் நோக்கம்.

எந்த மதத்தினரின் நம்பிக்கைகளை யும் எம்.ஜி.ஆர். புண்படுத்தியதும் இல்லை. தனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்பதை அவர் மறுத்ததும் இல்லை. நாடகக் கம்பெனி யில் நடித்துக் கொண்டிருந்தபோது திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை தரிசித்திருக்கிறார். ‘மர்மயோகி’ படம் வெளியானபோது இரண்டாவது முறையாக திருப்பதி போய்வந்ததை எம்.ஜி.ஆரே கூறியிருக்கிறார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது நண்பரும் தீவிர முருக பக்தருமான சாண்டோ சின்னப்பா தேவர், தினமும் கோயிலில் எம்.ஜி.ஆர். பெயருக்கு அர்ச்சனை செய்து மருத்துவமனை சென்று பிர சாதம் கொடுப்பார்.

பின்னர், குணமாகி ‘விவசாயி’ படப் பிடிப்பின்போது மருதமலை சென்று முருகன் கோயிலில் சின்னப்பா தேவரால் அமைக்கப்பட்டிருந்த மின் விளக்கு வசதியையும் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத் தார். ‘தனிப்பிறவி’ படத்தில் ஜெய லலிதா பாடும் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். முருகன் வேடத்தில் தோன்றுவார். அது ஜெயலலிதா காணும் கனவுக் காட்சி. ‘உழைக்கும் கரங் கள்’ படத்தில் சிலை திருட்டை தடுப்பதற் காக சிவன் போல வேடம் அணிந்து வந்து வில்லன்களை விரட்டுவார்.

‘பொம்மை’ இதழின் இரண்டா வது ஆண்டு மலருக் காக, எம்.ஜி.ஆரை ஜெயலலிதா பேட்டி கண்டார். அந்தப் பேட்டியில் ‘‘உங் களுக்கு கடவுள் நம் பிக்கை உண்டா?’’ என்ற ஜெயலலிதா வின் கேள்விக்கு கொஞ்சமும் தயங் காமல் ‘‘நிச்சயமாக உண்டு’’ என்று எம்.ஜி.ஆர். பதி லளித்தார். தனது கடவுள் நம்பிக் கையை அவர் மூடி மறைத்ததே இல்லை. அதற்காக, பரிவாரங் கள் புடைசூழ, சகல மரியாதைகளுடன் ஆர்ப்பாட்டமாக அவர் கோயிலுக்குச் சென்றதில்லை.

பின்னாளில், படப் பிடிப்புக்காக கர் நாடகா சென்றிருந்த போது, இயக்குநர் சங்கர் அவரை கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அதன் பிறகு பலமுறை மூகாம்பிகை கோயி லுக்குப் போய் தரிசித்திருக்கிறார். ‘‘மூகாம்பிகை வடிவில் என் தாயை பார்க்கிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘நம்நாடு’ படத்துக் காக ‘ஆனந்த விகடன்’ இதழில் அவரது சிறப்பு பேட்டி வெளியானது. அந் தப் பேட்டியில் எம்.ஜி.ஆரின் கருத்துகள் கடவுள் நம்பிக்கை பற்றிய அவரது தெளிவான சிந்தனையைக் காட்டியது.

அந்தப் பேட்டியில், ‘‘பக்தி பரிசுத்த மானது. பக்தன் பரிசுத்தமானவன். முன்பெல்லாம் மக்கள் கடவுளை தங்கள் மனதில் வைத்திருந்தார்கள். இப்போதோ, கடவுள் கோயில்களில் இருப்பதாகத்தான் நினைக்கிறார்கள். இதனால்தான் பிரச்சினைகளே வந்தன’’ என்று எம்.ஜி.ஆர். கூறியிருந்தார்.

1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்வரானதும் வித்தியாசமான முறையில், ‘பொம்மை’ இதழுக்காக அவரை நடிகை லதா பேட்டி கண்டார். ‘‘காஞ்சிப் பெரியவரை சமீபத்தில் தரிசித்துப் பேசினீர்களா?’’ என்று லதா ஒரு கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலளித்த எம்.ஜி.ஆர்., ‘‘ஒரு நல்ல துறவியை, பற்றில்லாத மனத்தினரை, பிறருக்காக வாழ்வதே மாந்தர் கடமை என்ற தத்துவத்தின் ஒட்டுமொத்த உருவமாக காட்சியளித்த ஒரு பெரியவரை நான் கண்டேன்’’ என்று பரமாச்சாரியாரைப் பற்றி கூறினார்.

எம்.ஜி.ஆர். ஒருபோதும் தன்னை நாத்திகராகக் காட்டிக் கொண்டது இல்லை.

எல்லோரையும் தனது சொந்தங் களாகக் கருதிய எம்.ஜி.ஆர். நடித்த ‘தொழிலாளி’ படத்தில் அவர் பாடி நடித்த அருமையான பாடல் இது…

‘ஆண்டவன் உலகத்தின் முதலாளி

அவனுக்கு நானொரு தொழிலாளி

அன்னை உலகின் மடியின் மேலே

அனைவரும் எனது கூட்டாளி…’

- தொடரும்...

படங்கள் உதவி : ஞானம், செல்வகுமார்

தனது தலைவரான அண்ணாவுக்கு தலைவராக விளங்கிய தந்தை பெரியார் மீது எம்.ஜி.ஆருக்கு மிகுந்த மதிப்பு உண்டு. 1978-79ல் எம்.ஜி.ஆர்.ஆட்சியில் பெரியார் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரியார் நினைவுத் தூண் எழுப்பப்பட்டது.

பெரியாரின் பொன்மொழிகள் நூல் வடிவில் கொண்டுவரப்பட்டன. அவரது வாழ்க்கை வரலாறு மாவட்ட தலைநகரங்களில் ஒளி-ஒலி காட்சியாக நடத்தப்பட்டது. பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை எம்.ஜி.ஆர். அமல்படுத்தினார். 1979-ம் ஆண்டு பெரியார் பிறந்த நாளில் ஈரோட்டை தலைநகராகக் கொண்டு பெரியார் மாவட்டத்தை உருவாக்கினார். இருவருக்குமே டிசம்பர் 24-ம் தேதிதான் நினைவு நாள்!

குறள் இனிது: ஆராயாத தேர்வு... தீராத தொல்லை!

குறள் இனிது: ஆராயாத தேர்வு... தீராத தொல்லை!

சோம.வீரப்பன்
எனக்குத் தெரிந்த ஒருவர் வங்கி பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதற்கு இரு காரணங்கள். ஒன்று அவருக்கு பேசிக்கொண்டே இருப்பது பிடிக்கும்! இரண்டு அவரால் வங்கியின் கிளைகளில், களத்தில் தாக்குப்பிடிக்க முடியவில்லை! அவர் பெயர் குமார் என்றே வைத்துக்கொள்ளுங்களேன்.

இம்மாதிரியான பயிற்சிகளின் நோக்கம் என்ன? வங்கியின் சேவைகள் குறித்த அறிவை வளர்ப்பது; வாடிக்கையாளர்களைக் கவரும்படி பேசுவது, பணியாளர்களிடம் வேலை வாங்குவது போன்ற திறமைகளை மேம்படுத்துவது என்பவை மட்டுமில்லையே? பயிற்சி பெறுபவரின் அணுகுமுறையை (attitude) நல்வழிப்படுத்துவதும் தானே? அதாவது பணி செய்யும் நிறுவனத்தின் மீதான நல்லெண்ணத்தை, அக்கறையை அதிகரிப்பது, நிர்வாகத்தின்மேல் நம்பிக்கையைக் கூட்டுவது,வாடிக்கையாளர்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவது போன்றவையும் தானே?

அப்படியானால், பயிற்சி பெற்று திரும்புபவர் பயிற்சிக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் அதிக உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் இருக்க வேண்டுமில்லையா?

ஆனால் குமாரிடம் பயின்றவர்கள் ஏதோ சில புதிய கலைச்சொற்களைக் (jargons) கற்று வந்தார்களே தவிர, வங்கியின்பால் இருந்த ஈர்ப்பு முன்பிருந்ததைக் காட்டிலும் வெகுவாகக் குறைந்தே காணப்பட்டது. காரணம், அவர் வங்கியின் பாரம்பரியத்தை, அது பல சவால்களை எதிர்கொண்டு மீண்டது போன்றவற்றைச் சொல்லாமல், போட்டி அதிகமாகி விட்டதாகவும் எதிர்காலம் அச்சுறுத்துவதாகவும் கூறித் தம் வங்கியைத் தாழ்த்தியே பேசுவார்.

உணவு வேளைகளிலோ, வங்கியின் உயரதிகாரிகள் என்ன உங்களை எல்லாம் விட அனுபவசாலிகளா? சும்மா காக்கா பிடித்து மேலே போய் நம்மையே அதிகாரம் பண்ணுகிறார்கள்' என்கிற ரீதியில் பேசுவார்! விளைவு? ஒவ்வொரு வாரமும் பயிற்சிக்கு வரும் சுமார் 50 பேர் மனதில் விஷம் விதைக்கப்பட்டது! சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதையாகி விட்டது வங்கிக்கு. பயிற்சி பெற்றுத் திரும்பியவர்கள் தங்கள் பங்கிற்குத் தத்தம் அலுவலகங்களில் இம்மாதிரியான தவறான கருத்துகளைப் பரப்பலானார்கள். தேவையின்றி வங்கியின்பால் கசப்புணர்ச்சியே பரவியது!

ஒருவரைச் சரியாக ஆராயாமல் பணியமர்த்தினால், அது வழிவழியாகத் துன்பத்தைத் தரும் என்கிறது குறள். பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, பணியாளரின் திறமையையும் குணத்தையும் ஆராய்ந்து பார்க்காமல் வேலை கொடுத்தால் யாருக்கும் இதே கதிதான்! யோசித்துப் பாருங்கள். மற்றவர் தவறுகளை கண்டுபிடித்துச் சொல்ல வேண்டிய ஆய்வுத் துறையில் பணியமர்த்தப்பட்டவரே சரியில்லையெனில் என்னவாகும் ? விளம்பரங்கள் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதால், சில நிறுவனங்களின் முதன்மை அதிகாரிகள் அத்துறையைத் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பார்கள்.

நம் நாட்டில் பிரதம மந்திரிகள் மாறினாலும் அணுசக்தி, விண்வெளி இலாகாக்கள் பிரதமரை விட்டு மாறுகின்றனவா? நம்பிக்கைக்குரிய விஞ்ஞானிகள் இருப்பதனால் தான் இஸ்ரோ ஒரே சமயத்தில் 22 செயற்கைக்கோள்களை விண்ணில் விரைவில் ஏவவுள்ளது தம்பி!

பணக்காரர்கள் இறந்தபின் கோடிக்ணக்கான சொத்துக்கள் அவர்களது பணியாளர்கள் பெயரிலேயே உயில் எழுதி வைக்கப்பட்டிருப்பது தெரியவரும் காலமிது! தீர விசாரித்தே பணியமர்த்துங்கள் அண்ணே!!
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும் (குறள் 508)

- somaiah.veerappan@gmail.com

வருகிறது `ஆர்கானிக் காபி’!

வருகிறது `ஆர்கானிக் காபி’!


காலை எழுந்தவுடன் காபி, அது இல்லையேல் நம்மில் பலருக்கு பைத்தியம் பிடித்தது போலாகிவிடும். காபி என்ற பெயரில் ஏதேனும் ஒன்றை சூடாகக் குடிப்போர் சிலர். ஆனால் பெரும்பாலும் டிகாஷன் காபிக்கு அடிமையானோர் ஏராளம். இத்தகைய டிகாஷன் காபியின் சுவையை சிலாகித்து பேசுவோரும் உண்டு. காபியில் கஃபீன் என்ற பொருள் உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்ற மருத்துவ ஆலோசனை கூறுவோரில் பலரும் காபியின் சுவைக்கு அடிமை என்பதுதான் நிஜம்.

விரைவிலேயே ஆர்கானிக் காபி விற்பனைக்கு வர உள்ளது. இத்தகைய காபியை அளிக்கப் போவது கேரள மாநிலத்தில் உள்ள கூட்டுறவு அமைப்பினர்தான்.

கோட்டயத்தைச் சேர்ந்த விவசாயிகள் முற்றிலும் ரசாயன உர கலப்பில்லாத இயற்கை உரங்களின் மூலம் விளைவிக்கப்படும் ஆர்கானிக் காபி-யை விற்பனை செய்ய நாடு முழுவதும் விற்பனையகங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

மன்னர்காடு சோஷியல் சர்வீசஸ் சொசைட்டி (மாஸ்) என்ற கூட்டுறவு அமைப்பு இந்த காபி விற்பனையகத்தைத் தொடங்க உள்ளது. சங்கிலித் தொடர் விற்பனையகமாக நாடு முழுவதும் தொடங்க உள்ள இந்த விற்பனையகத்துக்கு `காபி டே மோன்ட்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதலாவது விற்பனையகம் கேரளத்தில் தொடங்கப்பட்டு பிறகு படிப்படியாக விரிவாக்கம் செய்யப் போவதாக `மாஸ்’ அமைப்பின் தலைவர் பிஜுமோன் குரியன் தெரிவித்துள்ளார்.

வெறுமனே ஆர்கானிக் காபியை மட்டும் இங்கு விற்பனை செய்யாமல் பிற ஆர்கானிக் தயாரிப்புகளான பழங்கள், காய்கறிகளை விற்பனை செய்யவும் `மாஸ்’ திட்டமிட்டுள்ளது.

2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கூட்டுறவு அமைப்பில் 5 ஆயிரம் விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் சாகுபடி செய்யும் பரப்பளவு 3,110 ஹெக்டேராகும். உறுப் பினர்கள் 18 கிராமங்களில் பரவியுள்ள னர். காபி, கோகோ பிற நறுமண பொருள்களை ஐரோப்பிய நாடுகளுக்கு `மாஸ்’ ஏற்றுமதி செய்கிறது.

இந்த சங்கம் ஆண்டுக்கு 4,000 டன் நறுமணப் பொருள்கள், 6 ஆயிரம் டன் கோகோ, 2,600 டன் காபி மற்றும் 1,850 டன் பழ வகைகளை உற்பத்தி செய்கிறது. இந்த சங்கத்தின் உறுப்பினர்கள் தமிழகத்திலும் ஆர்கானிக் காபியை பயிரிடுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளுக்கு ரசாயன உரக் கலப்பில்லாத பொருள்களை ஏற்றுமதி செய்யும் அங்கீகாரம் பெற்ற சங்கமாக `மாஸ்’ திகழ்கிறது. கடந்த ஆண்டு ரூ. 30 கோடியை ஏற்றுமதி வருமானமாக இது திரட்டியுள்ளது.

இந்த சங்கத்தின் உற்பத்திகளுக்கான தேவை ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. வருடந்தோறும் 20 சதவீத வளர்ச்சியை பெற்று வருவதாக குரியன் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சந்தையில் காபி கொட்டை களின் விலை வீழ்ச்சியடைந்து வந்த போதிலும், ரசாயன உரக் கலப்பில்லாத தங்கள் சங்கத்தின் ஆர்கானிக் காபி கொட்டைகளுக்கு கடும் தேவை இருப்பதாக பெருமையோடு குறிப்பிடுகிறார் குரியன். ஆர்கானிக் காபி கொட்டைகளுக்கு அதிக விலை கிடைப்பதால் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு அதிக விலை தர முடிகிறது. இது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக குரியன் தெரிவித்துள்ளார்.

இடுக்கி மாவட்டத்தில் ஆர்கானிக் பொருள்களை சாகுபடி செய்வதற்கான மையத்தை உருவாக்கி அதை ஊக்குவித்தும் வருகிறது மாஸ். இங்கு 12 வகையான ரசாயன கலப்பில்லாத பொருள்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்தியாவில் உரக் கலப்பில்லாத பொருள்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதனால் இத்தகைய பொருள் களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதாகக் கூறுகிறார் குரியன்.

சுதேசியாக உருவாக்கப்பட்டுள்ள ரசாயன உரக் கலப்பில்லாமல் விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் காபி-க்கு அமோக வரவேற்பிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

``மாஸ்’ முயற்சிக்கு மிகப் பெரும் ``மாஸ்’’ உருவாகும்.

வேகமாய் வளரும் ஊழல்

சிந்தனைக் களம் » சிறப்புக் கட்டுரைகள்


நேருவின் மருமகன் பெரோஸ் காந்தி ‘முந்த்ரா ஊழலை’ நாடாளுமன்றத்தில் எழுப்பினார்

இந்தியாவின் தூதராக 1948-ல் பிரிட்டனில் பணியாற்றிய வி.கே. கிருஷ்ண மேனனைத் தொடர்புபடுத்தி ‘ஜீப் ஊழல்’ வெளியானது. இந்திய ராணுவத்துக்காக 200 ஜீப் ரக வாகனங்கள் வாங்க ரூ.80 லட்சம் வழங்கப்பட்டது. அவற்றில் 155 மட்டுமே வந்து சேர்ந்தன. ரூ.20 லட்சம் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக மேனன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளினார் அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு. 1959-ல் நாட்டின் ராணுவ அமைச்சராகவும் மேனனை நியமித்தார்.

அரசுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி. விதிமுறைகளை மீறி, தொழிலதிபர் முந்த்ராவின் நிறுவனங்களில் செய்த ரூ.1.24 கோடி முதலீடு ஒரு ஊழலாக வெடித்தது. 1958-ல் முந்த்ரா ஊழலை நேருவின் மருமகன் பெரோஸ் காந்தி நாடாளுமன்றத்தில் எழுப்பினார். முந்த்ராவுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது நிதியமைச்சராக இருந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி, நிதித்துறை செயலர் எச்.எம். படேல் ஆகியோர் பதவி விலகினார்கள்.

அலைக்கற்றை ஊழல்

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஊழலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அமைச்சர் ஆ. ராசா பதவி விலகினார். நாட்டின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை அளித்த பிறகும்கூட இன்னும் விசாரணை அளவிலேயே இருக்கும் இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

அரசு நிறுவனமான ‘ஏர்-இந்தியா’ தனக்கான தேவையைவிட இரு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் விமானங்களைக் கடனுக்கு வாங்கியது. இதற்குக் காரணம் விமானக் கொள்முதலுக்காக அந்த நிறுவனத்தால் கொடுக்கப்பட்ட தரகுதான் என்று பின்னர் தெரியவந்தது. அப்போது விமானப் போக்குவரத்து அமைச்சராக பிரஃபுல் குமார் படேல் பதவி வகித்தார். விமானங்களை இரு மடங்காக வாங்கினாலும் வருவாய் தரும் விமான வழிப்பாதைகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு இப்போது ரூ.35,000 கோடி கடனும், தொடர் இழப்பும் ஏற்பட்டிருக்கின்றன.

மக்கள் நல திட்ட ஊழல்

அரசுக்குத் தேவைப்படும் கொள்முதல்களில் மட்டுமல்லாமல், மக்கள் நலத்திட்டங்களிலும் கணிசமான அரசுப் பணம் தனியார் நிறுவனங்களுக்கு மடைமாற்றி விடப்படுகிறது. ஏழை மக்களுக்கான மண்ணெண்ணெயில் 40%, டீசலுடன் கலப்படம் செய்வதற்குக் கடத்தப்படுகிறது. மகாத்மா காந்தி பெயரிலான தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் 50% உரிய பயனாளிகளுக்குச் சென்று சேர்வதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இப்படி அரசின் கொள்முதல், விநியோகம், மக்கள் நலத் திட்டங்களுக்கான தொகை கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்டும்கூட அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், இடைத் தரகர்கள், அதிகாரத் தரகர்கள் என்று யாருமே வழக்குகளில் சிக்குவதோ தண்டனை பெறுவதோ மிக மிகக் குறைவு. கொள்ளையில் கிடைக்கும் பணம் மேல்நிலையிலிருந்து கீழ்நிலை வரையுள்ள அதிகாரிகள், அரசியல் தலைவர்களிடையே பகிர்ந்துகொள்ளப்படுவதால் யாரும் தண்டனை பெறுவதில்லை, ஊழலும் வெளியே தெரியாமல் மறைக்கப்படுகிறது.

தேசியமய நோக்கம்

1969-ல் தனியார் வங்கிகளையும் காப்பீட்டு நிறுவனங்களையும் இந்திரா காந்தி தேசியமய மாக்கினார். விவசாயிகளுக்கும் கிராமப்புற ஏழைகளுக்கும் வங்கிக் கடன்கள் கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம் என்று கூறப்பட்டது..

ஆனால் நடைமுறையில் விவசாயிகளுக்கும் கிராமப்புற ஏழைகளுக்கும் சிறு, நடுத்தரத் தொழில் முனைவோர்களுக்கும் வங்கிக் கடன் கிடைப்பது எளிதல்ல. வங்கிகளிலேயே ‘உள்நபர்கள்’ இடைத் தரகர்களாகச் செயல்பட்டு வங்கிப் பணத்தை, தங்களைக் கவனிப்பவர்களுக்குக் கொடுத்து, கூடுதல் வருமானம் பெறுகின்றனர். இப்போது இந்தத் தொகை இமாலய அளவுக்கு உருவெடுத்துவிட்டது.

சமதர்மம் (சோஷலிசம்) என்பது சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கானது; ஆனால் வரிவிதிப்பு என்பது ஏழைகளிடமிருந்து திருடி பணக்காரர்களுக்குக் கடனும் சலுகைகளும் வழங்குவதாக மாறிவிட்டது. வரி ஏய்ப்பும், ‘ஹவாலா’ என்று அழைக்கப்படும் சட்ட விரோதப் பணப் பரிமாற்றங்களும் அரசின் ஆசியோடு நடக்கின்றன. வரி விலக்கு பெற்ற நாடுகளாக சில நாடுகள் அறிவிக்கப்படுகின்றன. அந்நாடுகளின் முகவரிகளில் நிறுவனங்களைப் பதிவுசெய்துகொண்டு கருப்பை வெள்ளையாக்கிக் கொள்கின்றனர் தொழில் அதிபர்கள். இதற்காக ஏற்றுமதி மதிப்பைக் குறைத்தும், இறக்குமதி மதிப்பை அதிகரித்தும் போலியாக ஆவணங்களைத் தயாரித்துக் காட்டி இடைவெளியாகத் திரளும் பெரும் பணத்தை அப்படியே விழுங்குகின்றனர்.

ராஜீவும் ராவும்

1980-களில் ராஜீவ் காந்தியும் 1990-களில் நரசிம்ம ராவும் ‘லைசென்ஸ்-பர்மிட்-கோட்டா’ ராஜ்யத்தை ஒழிக்க முயன்றார்கள். முதலீடு, விற்பனை, வருமானம் போன்றவற்றுக்கு அரசு சில சலுகைகளை அளித்தாலும் அரசு இலாக்காக்களின் அதிகாரவர்க்கக் கட்டமைப்பு அப்படியே தொடர்கிறது. எனவே அதன் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும், ஊழல்களும் தொடர்கின்றன. இப்போதைய வித்தியாசம் என்னவென்றால் முன்பைவிடப் பல மடங்குக்குப் பணம் மடைமாறுகிறது.

இத்தகைய ஊழல்களை விசாரிக்கும் நடை முறைகளும் ஆண்டுக்கணக்காக மாற்றமில்லாமல் அப்படியே தக்கவைத்துக்கொள்ளப்படுகின்றன.

கோடிக் கணக்கில் பணம் கொள்ளையடிக்கப் பட்டால் அதை விசாரிக்கவும் தவறிழைத்தவர்களைத் தண்டிக்கவும் அரசு வலுவான கட்டமைப்பை உருவாக்காமல் இருப்பதால், தொழிலதிபர்களுடன் கூட்டுக் சேர்ந்து கொள்ளையடிப்பதே லாபம் என்று அதிகாரிகள் முடிவெடுக்கின்றனர். அப்படியே குற்றச்சாட்டுகள் பேரில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தாலும் அது ஆண்டுக் கணக்கில் நீடித்து, கடைசியில் ‘போதிய ஆதாரங்கள் இல்லை’யென்று வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது அல்லது சிறு தொகை மட்டும் அபராதமாக விதிக்கப்பட்டு வழக்கு முடிக்கப்படுகிறது.

அரசின் வளம், நிதி ஆகியவற்றை விநியோகிப் பதற்கான அமைப்புகள் தவறு செய்தால் தண்டிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளுக்கு ஆள் பலமோ, அதிகாரமோ வழங்கப்படுவதில்லை. அதன் தலைவர்களே பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், ஆளும் கட்சியின் தயவில் பதவி வகிப்பவர்கள் என்பதால் தங்களைப் போன்ற அதிகாரிகளைக் கடுமையாகத் தண்டிக்க அவர்கள் முன்வருவதில்லை.

மொரிஷியஸ், சிங்கப்பூர்

மொரிஷியஸ் நாட்டில் மூலதன ஆதாய வரி இல்லை. எனவே அங்கிருந்து முதலீடு செய்யப் படுவதாகக் காட்டி வரி விதிப்பிலிருந்து தப்புகின்றனர். சில சிங்கப்பூர் வங்கிகள் பங்கேற்புப் பத்திரங்கள் மூலம், முதலீட்டாளர் யார் என்றே அறிவிக்காமல் முதலீடு செய்யச் சட்டரீதியாக இடம் தருகின்றன. இதைப் போன்ற வழிகளால் கருப்புப் பணம் பெருகுவதுடன் வெள்ளையாக்கப்பட்டு புழக்கத்துக்கும் வந்துவிடுகிறது. வரி ஏய்ப்பு மிக எளிதாகவும் சட்டபூர்வமாகவும் நடக்கிறது. இப்படியொரு ஏற்பாட்டை அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் வேண்டுமென்றே உருவாக்காமல், தற்செயலாக நடந்திருக்கிறது என்று நம்ப நீங்கள் தயாரா?

இப்போதுள்ள அரசும் முந்தைய நிர்வாக நடைமுறைகளை அப்படியே காப்பாற்றத்தான் நினைக்கிறது; இதை மாற்ற வேண்டும் என்ற விருப்பமோ நியாயமான சந்தை உருவாக வேண்டும் என்ற வேட்கையோ இப்போதைய அரசுக்குக் கிடையாது. ஊழலுக்கு எதிராகப் பேசும். ஆனால் ஊழலுக்கு வகை செய்யும் வழிமுறைகளை மாற்றாது, கருப்புப் பணம் புழங்குவதற்காகச் செய்துகொள்ளப்பட்ட ஏற்பாடுகளைக் களையாது. மிகப் பெரிய ஊழல் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்கப் போதிய எண்ணிக்கையில் நீதிபதிகளையும் நீதிமன்றப் பணியாளர் களையும் நியமிப்பதுகூட இல்லை. ஊழலுக்கு எதிரான, கருப்புப் பணத்துக்கு எதிரான இயக்கம் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்புதான்; மேடைப் பேச்சுக்கு மட்டும்தான்.

- எஸ்.எல். ராவ், பயன்பாட்டுப் பொருளாதாரத்துக்கான தேசியப் பேரவையின் உறுப்பினர்.

தமிழில்: சாரி

பணியிட மாறுதலுக்கு பிறகும் டெல்லியில் அரசு வீடுகளை காலி செய்யாத 40 ஐஏஎஸ் அதிகாரிகள்: மத்திய அரசின் உதவியை கோருகிறார் அர்விந்த் கேஜ்ரிவால்

பணியிட மாறுதலுக்கு பிறகும் டெல்லியில் அரசு வீடுகளை காலி செய்யாத 40 ஐஏஎஸ் அதிகாரிகள்: மத்திய அரசின் உதவியை கோருகிறார் அர்விந்த் கேஜ்ரிவால்

ஆர்.ஷபிமுன்னா

பணியிட மாறுதலுக்கு பிறகும் டெல்லியில் 40 ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் அரசு வீடுகளை காலி செய்யாமல் இருப்பதாக மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது. இந்த வீடுகள் காலி செய்யப்படுவதற்கு மத்திய அரசின் உதவியை நாடியுள்ளார் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச கேடர்களின் ஐஏஎஸ் அதிகாரிகள் டெல்லி மாநில அரசு அல்லது மத்திய அரசுப் பணியில் இணைந்து பணி யாற்றுவது வழக்கம். இந்த கால கட்டத்தில் டெல்லியின் முக்கியப் பகுதிகளில் உள்ள அரசு வீடுகள் அல்லது பங்களாக்கள் அவர் களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

இந்த அதிகாரிகள் பணி ஓய்வு அல்லது பணியிட மாறுதலுக்குப் பின் தங்கள் வீடுகளை காலி செய்ய குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படுகிறது. இந்நிலையில் இந்த அவகாசம் முடிந்த பிறகும் 40 ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் வீடுகளை காலி செய்யாமல் இருப்பதாக கேஜ்ரிவால் அரசு அடையாளம் கண்டுள்ளது.

இவர்களின் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ள கேஜ்ரிவால் அரசு, இவர்கள் வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் தங்கள் வீடுகளை காலி செய்ய நிர்ப்பந்திக்குமாறு கோரியுள்ளது. டெல்லியில் அரசு குடியிருப்புகள் பற்றாக்குறை நிலவுவது இதற்கு காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது “மிகவும் மோசமான நிலையில் இருக்கும் குடியிருப்புகளே எங்களுக்கு தரப்படுகிறது.

இதில் பலரும் லட்சக்கணக்கில் செலவு செய்து குடியிருக்க வேண்டியுள்ளது. இவ்வாறு செலவு செய்த அதிகாரிகள் சில மாதங்கள் கூடுதலாக தங்க விரும்புவது உண்டு. மேலும் குழந்தைகளின் கல்வி இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. என்றாலும் கேஜ்ரிவால் அரசு - மத்திய அரசு இடையிலான அரசியல் மோதலே இதன் பின்னணி காரணம். தங்கள் பேச்சை கேட்காதவர்களை குறிவைத்து கேஜ்ரிவால் அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது” என்றார்.

முன்னதாக இந்த வீடுகள் தொடர்பான கணக்கெடுப்பை டெல்லி அரசு கடந்த சில மாதங்க ளாக தொகுத்து வந்தது. பிறகு கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வீடு களை காலி செய்ய அதிகாரி களுக்கு நிர்ப்பந்தம் தருவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸும் அளிக்கப்பட்டது. என்றாலும் இதற்கு எந்தப் பலனும் இல்லாததால் தற்போது மத்திய அரசை கேஜ்ரிவால் அரசு அணுகியுள்ளது.

அரசு வீடுகளுக்காக ‘எஸ்டேட் ரூல்ஸ்’ என்ற விதிகள் உள்ளன. இதன்படி அதிகாரிகள் வீடுகளை காலி செய்ய 3 மாதம் அவகாசம் தரப்படுகிறது. இதன் பிறகு 2 ஆண்டுகள் வரை சந்தை மதிப்பில் வாடகை வசூலிக்கலாம்.

இதன் பிறகும் காலி செய்யாதவர்களை சட்டப்பூர்வ மாக வெளியேற்றலாம். என்றாலும் வடகிழக்கு மாநிலங்கள் உட்பட சில சிக்கலான மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவோ ருக்கு 3 மாதங்களுக்கு பதிலாக 2 ஆண்டுகள் அவகாசம் தரப்பட்டுள்ளது.

மருத்துவக் கவுன்சிலுக்குச் சிகிச்சை தேவை!

Published: April 6, 2016 08:35 ISTUpdated: April 6, 2016 08:57 IST

மருத்துவக் கவுன்சிலுக்குச் சிகிச்சை தேவை!


மருத்துவர்களுக்கும் இதர அதிகாரிகளுக்கும் வழிகாட்டு நெறிகளை நிர்ணயிக்க வேண்டிய மருத்துவக் கவுன்சிலுக்குத் தலைவராக இருந்தவரே லஞ்சம் வாங்கியதற்காகக் கைது செய்யப்பட நேர்ந்தது அதிர்ச்சியளிக்கிறது என்று தனது அறிக்கையில் கண்டித்திருக்கிறது.

நாடாளுமன்ற நிலைக் குழு. 120 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் சுகாதார சேவையும் மருத்துவக் கல்வியும் முறையான கட்டுப்பாடுகளின்றி நிர்வகிக்கப்படுவது அதிர்ச்சி தருகிறது. ஒருபுறம் மருத்துவக் கல்விக்காகும் செலவு மாணவர்களால் தாங்க முடியாத அளவுக்கு இருக்கிறது. மறுபுறம் மருத்துவக் கல்வி நிர்வாகமும் வெளிப்படையாக இல்லாமல் திரைமறைவிலேயே நடக்கிறது.

தரமான மருத்துவக் கல்விக்கும் மருத்துவ சேவைக்கும் நேரடிப் பொறுப்பாளரான ‘இந்திய மருத்துவக் கவுன்சில்’ (எம்.சி.ஐ.) அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்ட உயர் அமைப்பாகும். உயர் கல்வி நிறுவனங் களை ஆய்வுசெய்து அங்கீகாரம் வழங்கும் பொறுப்பும் அதிகாரமும் அதற்குத் தரப்பட்டிருக்கிறது. மருத்துவர்களைப் பதிவு செய்யும் உயர் அமைப்பும் இதுதான். இப்படிப்பட்ட மருத்துவக் கவுன்சில் தன்னுடைய கடமையை ஒழுங்காகச் செய்யத் தவறியதல்லாமல் ஊழலிலும் திளைத்தது மன்னிக்க முடியாத தவறு. லஞ்சம் வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு மருத்துவக் கவுன்சிலின் தலைவர் 2010-ல் கைது செய்யப்பட்டார். அந்தக் கவுன்சிலே தாற்காலிகமாகப் புதிதாக மாற்றியமைக்கப்பட்டது.

தனியார் மருத்துவக் கல்லூரியின் உயர் கல்வி இடங்கள் ரூ.50 லட்சம் வரை நன்கொடை பெற்றுக்கொண்டு விற்கப்படுவதாக வரும் செய்திகளைச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்றக் குழு, அதைத் தடுக்கத் தவறியதற்காக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்திருக்கிறது. தனியார் பெருநிறுவனங்களைப் போன்ற பெரிய மருத்துவமனைகளைத் தர ஆய்வு செய்வதிலும், புதிய மருத்துவப் படிப்புகளைத் தொடங்க அனுமதிப்பதிலும் ஒரேயொரு முகமையை அனுமதிப்பதில் உள்ள ஆபத்தையும் அறிக்கை உணர்த்துகிறது.

மருத்துவக் கல்வி அமைப்பையும் மருத்துவமனைகளின் நிர்வாகத்தையும் நீண்ட காலமாகச் சீரமைக்காமல் அப்படியே நீடிக்கவிட்டது தவறு. இனியும் இதில் சமரசத்துக்கு இடமில்லை. மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் நல்ல தரத்தில் நிர்வகிக்கப்பட வேண்டும். அதற்கான நிர்வாகம் வெளிப்படையாக இருக்க வேண்டும். அது மக்களுடைய நலனையும் பொது நலனையும் மட்டுமே கருதிச் செயல்பட வேண்டும். இதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இருந்தால் மருத்துவ சேவை தனிப் பிரிவாகவும் மருத்துவக் கல்வி தனிப் பிரிவாகவும் பிரிக்கப்பட வேண்டும். மருத்துவக் கல்லூரிகளுக்கான பாடத்திட்டம், மாணவர்களுக்கான குறைந்தபட்சத் தகுதிகள், பாடத்திட்டம், பயிற்சிகள் போன்றவை நல்ல தரத்தில் முறையாக நிர்ணயிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட வேண்டும்.

மத்திய அரசு நியமித்த ரஞ்சித் ராய் சவுத்ரி தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி 2 தனித்தனி வாரியங்களை இதற்காக ஏற்படுத்த வேண்டும். பட்ட வகுப்பு, முதுநிலைப் பட்ட வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சிகளை மேற்பார்வையிடுவது, நிறுவனங்களை மதிப்பிடுவது போன்றவற்றை அந்த வாரியங்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று சவுத்ரி குழு பரிந்துரை செய்திருந்தது. மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தத் தவறியது மட்டுமல்லாமல் ஊழலுக்கும் வழிவகுத்துவிட்ட இப்போதைய மருத்துவ உயர் கல்வி நிர்வாக அமைப்பை இனியும் இப்படியே நீடிக்கவிடுவது சரியல்ல. இது ஆதிக்க சக்திகள் பலனடைய மட்டுமே வழிவகுக்கும். ஒருபுறம் மருத்துவத்தில் உயர் படிப்பு படிக்க உண்மையான ஆர்வத்தோடு காத்துக் கிடக்கும் தகுதியாளர்கள் ஏராளமாக இருக்க, ஒரு சில இடங்களை மட்டுமே வைத்துக்கொண்டு நல்ல விலைக்கு விற்கும் இந்த வியாபாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மருத்துவக் கவுன்சிலுக்கே இப்போது சிகிச்சை தேவைப்படுகிறது. அரசு தயங்கக் கூடாது!

NEWS TODAY 31.01.2026