Tuesday, April 12, 2016

: வரலாறு காணாத வெயில்: புவனேஸ்வரில் 47.5 டிகிரி செல்சியஸ் கொளுத்தியது

சத்யசுந்தர் பாரிக்

ஒரு வாரத்திற்கும் மேலாக ஒடிசா மாநில கடற்கரை மாவட்டங்கள் குறிப்பாக புவனேஸ்வரில் தணியாத வெயில் கொளுத்தி வருகிறது. வெப்ப அலையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

30 ஆண்டுகால வெயில் வரலாற்றை முறியடிக்கும் விதமாக புவனேஸ்வர் நகரில் திங்களன்று 47.5 டிகிரி செல்சியஸ் வெயில் வாட்டியது. ஏப்ரல் மாதத்தில் பதிவாகும் அதிகபட்ச வெயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

காலையிலிருந்தே சூரியன் தனது உக்கிரத்தை காட்டத் தொடங்கியுள்ளது. காலை 11.30 மணியளவில் 44 டிகிரி செல்சியஸைத் தொட்டது வெப்ப நிலை. நண்பகலுக்குள் மேலும் 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்தது. ஒரு மணிநேரம் கழித்து 45.2 டிகிரி செல்சியஸாக இருந்தது, இது ஏப்ரல் 23, 1985 அன்று அடித்த வெயிலைக் காட்டிலும் சற்று கூடுதலானது.

மதியம் 2 மணியளவில் வெயில் 45.7 டிகிரி செல்சியஸ் என்று அதிகரித்து உச்சம் பெற்றது. இது இயல்பான வெப்ப நிலையைக் காட்டிலும் 7-8 டிகிரி கூடுதலாகும். இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நிறைய மரங்கள் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டதினால் வெயிலின் தாக்கம் அதிகமிருப்பதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பள்ளிகள் காலையில் தொடங்கி மதியத்துக்குள் முடிக்கப்படவேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல் கடும் உழைப்பு தொடர்பான பணிகள் காலை 11 மணி முதல் 3 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.

ஒடிசா மாநில வானிலை ஆய்வு மைய இயக்குநர் சரத் சந்திர சாஹூ கூறுவதாவது: "வானிலையில் மாற்றம் எதுவும் இல்லை. காற்று மேல்நோக்கி நகரவில்லை, இதனால் மேகங்கள் உருவாவதற்கான நிலைமைகள் சுத்தமாக இல்லை. கடந்த அக்டோபர் மாதம் முதலே மாநிலத்தில் மழை இல்லை. மண்ணும் வறண்ட மண் என்பதால் உஷ்ணம் பிரதிபலிக்க உதவுகிறது.

மேற்கு மற்றும் வட-மேற்கு பகுதியிலிருந்து வரும் உஷ்ணக் காற்று மத்திய இந்தியாவைக் கடந்து செல்கிறது. இதனாலேயே இப்பகுதியில் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெயில் கொளுத்துகிறது. திங்களான இன்று மதியம் 2 மணியளவில் உச்சமடைந்த வெப்ப அளவு ஏப்ரல் மாதத்தில் 1952-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச பதிவாகியுள்ளது.

இடிமழைக்கு வாய்ப்பில்லாததால் அடுத்த வாரமும் இதே நிலையே நீடிக்கும். கடற்காற்றும் மந்தமடைந்திருப்பதால் ஒடிசாவில் நிலைமைகள் மோசமாக உள்ளன” என்றார்.

இன்று மதியம் 2 மணியளவில் புவனேஷ்வரில் 17 இடங்களில் வெப்ப அளவு 40 டிகிரி செல்சியஸைக் கடந்து சென்றுள்ளது என்கிறது வானிலை ஆய்வு மையம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------: குறள் இனிது: வேலைக்கேற்ற ஆளா, ஆளுக்கேற்ற வேலையா..?

சோம.வீரப்பன்

ஏப்ரல் வந்தாச்சு! புதிய நிதியாண்டு தொடங்கி யாச்சு! இனி பணி உயர்வுக்கான போட்டிகள், நேர்முகத் தேர்வுகள் ஆரம்பித்து விடும்! ஆனால், பலகாலம் தங்கள் நிறுவனத்திலேயே பணிசெய்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று மேலதிகாரிகளுக்குத் தெரியாதா என்ன? பிறகு எதற்கு இந்த மாதிரி நேரில் கூப்பிட்டு நேரத்தை வீணடிக்க வேண்டும்' என்று சிலர் நினைப்பதுண்டு.

கொஞ்சம் யோசித்தால் இதன் காரணம் புரியும். பதவி உயர்வு என்பதும் அந்த உயர் பதவியைப் பொறுத்தவரை புதிதாய் ஆள் எடுப்பது போலத்தானே? என்ன, அந்த நிறுவனத்திற்குள்ளாகவே பொருத்தமானவரைத் தேடுவார்கள்!

ஒருவர் படித்தவரா, நம்பிக்கைக்குகந்தவரா, ஆரோக்கிய மானவரா என்பதையெல்லாம் பார்த்து நிறுவனத்தில் சேர்த்துக் கொள்வதா இல்லையாவென முடிவெடுக்கலாம்.

ஆனால், அவரை எந்தப் பணியிலமர்த்துவது என்பது அவர் என்ன படித்திருக்கிறார், அவரது முன் அனுபவம் என்ன, அவரது தனித்திறமை என்ன என்பனவற்றை வைத்துத்தானே முடிவெடுக்க முடியும்?அதனால் தானே ஆள் எடுக்கும் பொழுது இரண்டு மூன்று சுற்றுகள் வைத்து தகுதியற்றவர்களைப் படிப்படியாகக் கழற்றி விடுகிறார்கள்!

எனது நண்பர் ஒருவர் வங்கியில் 75 கிளைகள் உள்ள கோட்டத்தின் துணைப் பொது மேலாளர். மிக நன்றாய் வர்த்தகம் செய்து வருடாந்திர இலக்குகளை கடந்திருந்தார். எனவே பொதுமேலாளர் பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வு வந்த பொழுது மிக உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் சென்றார். தான் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார். ஆனால் அங்கோ கேள்விகள் வேறு விதமாக இருந்தன.

வங்கி எதிர்காலத்தில் எவ்வித போட்டிகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும், அவற்றை எப்படி சமாளிப்பது, வங்கிகளை இணைக்கும் பொழுது ஒரே பகுதியிலிருக்கும் வங்கிகளை இணைப்பது நன்மை பயக்குமா, வட்டி விகிதங்கள் எப்படி மாறலாம் என்கிற ரீதியில் பல கேள்விகள். அக்கேள்விகள் எல்லாம் கற்பனையானவை என்றும், இப்பொழுது தேவையற்றவை என்றும் பதில் கூறிவிட்டார் நண்பர். கொடுத்த வேலையை நான் ஒழுங்காய் செய்து முடித்துவிட்டேன், மேன்மேலும் கொடுத்துப் பாருங்கள் முடித்துக் காட்டுவேன், அவ்வளவுதான், இதைவிட வேறென்ன வேண்டும் என்று கிட்டத்தட்ட வாக்குவாதத்திலேயே இறங்கி விட்டார்!

வங்கிக்கு அப்பொழுது தேவைப்பட்டது எதிர்காலத்தை எதிர்கொள்ளக்கூடிய, சிந்திக்கக்கூடிய, வியூகங்களை வகுக்கக்கூடிய ஒரு பொதுமேலாளர். எனவே நமது நண்பரை விட்டுவிட்டு வேறு ஒருவருக்குத்தான் அப்பதவி உயர்வு கொடுக்கப்பட்டது.

பலரும் பதவி உயர்வை முன் செய்த நல்ல பணிக்குப் பரிசாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால் உண்மை அதுவா? ஏற்கெனவே நல்ல பணியாற்றியவர் வருங்காலத்திலும் சிறப்பாகப் பணியாற்றுவார் என்று வேண்டுமானால் நம்பிக்கை கொண்டு முன்னுரிமை கொடுக்கலாம்.ஆனால் அவரிடம் அடுத்த பதவிக்குத் தேவையான சிறப்புத் தகுதிகளும் இருக்கிறதா என்றும் பார்க்கத்தானே வேண்டும்? பதவி உயர்வை மேல்பதவியில் செயலாற்றி மிளிர்வதற்கான ஒரு வாய்ப்பாய்க் கருதினால் பிரச்சினை இருக்காது!

சரியாக ஆராயாமல் பணியமர்த்தாதீர்கள்; அத்துடன் பணியமர்த்தப் படுபவரின் திறன்களை ஆராய்ந்தே வேலை கொடுங்கள் என்கிறார் வள்ளுவர்.

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்

தேறுக தேறும் பொருள் (குறள்: 509)

- சோம.வீரப்பன்
somaiah.veerappan@gmail.com

உக்ரைன் மருத்துவ கல்லூரியில் இந்திய மாணவர்கள் 2 பேர் குத்திக்கொலை

உக்ரைன் மருத்துவ கல்லூரியில் இந்திய மாணவர்கள் 2 பேர் குத்திக்கொலை..DAILY THANTHI

புதுடெல்லி,

உக்ரைன் மருத்துவ கல்லூரியில் இந்திய மாணவர்கள் 2 பேர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டனர். படுகாயம் அடைந்த மற்றொரு மாணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்திய மாணவர்கள்
உக்ரைன் நாட்டில் உள்ள உஷ்கோராடு மருத்துவ கல்லூரியில் உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த பிரணவ் ஷைன்தில்யா, காசியாபாத்தைச் சேர்ந்த அன்குர் சிங் மற்றும் ஆக்ராவைச் சேர்ந்த இந்திரஜித்சிங் சவுகான் ஆகியோர் படித்து வருகிறார்கள்.

இவர்களில் பிரணவ் சைன்தில்யா 3–ம் ஆண்டு படித்து வந்தார். அன்குர் சிங் 4–ம் ஆண்டு படித்து வந்தார்.

2 மாணவர்கள் கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 3 மணிக்கு இந்திய மாணவர்கள் 3 பேரையும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கத்தியால் சரமாரியாக குத்தினர். இந்த கொலைவெறி தாக்குதலில் மாணவர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர், அந்த மாணவர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த பிரணவ் சைன்தில்யாவும், அன்குர் சிங்கும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்திரஜித்சிங் சவுகான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்திய மாணவர்கள் குத்திக்கொலை செய்யப்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

3 பேர் கைது
இந்த நிலையில் மாணவர்களை கத்தியால் குத்திய 3 பேரும் உக்ரைன் நாட்டு எல்லையை தாண்டி தப்பி செல்ல முயன்றபோது பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து மாணவர்களின் பாஸ்போர்ட்டுகள், ஆவணங்கள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சம்பவம் குறித்து உக்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரி சுவரப் கூறுகையில், ‘மாணவர்கள் கொலைக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார், பல்கலைக்கழக பொறுப்பு அதிகாரிகளிடம் கேட்டு வருகிறோம். உடல்களை இந்தியா எடுத்துச்செல்வதற்கான நடவடிக்கைகளில் தூதரகம் ஈடுபட்டு வருகிறது. உக்ரைன் வெளியுறவுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே 2 மாணவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

பேஸ்புக் லைவ்.

பேஸ்புக் லைவ்..DAILY THANTHI

பேஸ்புக்கில் மெஸேஞ்சர் வசதி, சாட்டிங் செய்ய உதவுகிறது. தற்போது இதில் 'லைவ்' எனும் வசதி கூடுதலாக சேர்க்கப்படுகிறது. இது வீடியோ சாட்டிங்போல முகம் பார்த்து பேச உதவுகிறது. உரையாட விரும்புபவர்கள் 'லைவ்' வீடியோ பொத்தானை 'ஆன்' செய்து வைத்துக் கொண்டால், நண்பர் குழுவினர் முகம் பார்த்து உரையாட முடியும். முக்கியமான இந்த வசதி பேஸ்புக் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பான வாணவேடிக்கை..

பாதுகாப்பான வாணவேடிக்கை...DAILY THANTHI
THALAYANGAM

பழையகாலங்களில் கடைபிடித்துவரும் பல மரபுகள், வழக்கங்கள், காலப்போக்கில் அவ்வப்போது உள்ள சூழ்நிலைகளுக்கேற்ப மாறினாலும், இறைவழிபாட்டு தலங்களில் உள்ள சில மரபுகள் மட்டும் மாற்றம் காணாமலேயே இருக்கிறது. பழையகாலங்களில் கிராமப்புறங்களில் கோவில் திருவிழாக்களில் பக்தர்களை அதிகம் ஈர்க்கும்வகையில், சிறப்பு வழிபாட்டுமுறைகள் கடைபிடிக்கப்படுவதோடு, தீபங்களால் அலங்கரிக்கப்படுவதும், வழிபாட்டுதலங்களுக்கு முன்புறம் நாதஸ்வரம், மேளம், நையாண்டி மேளம், கரகாட்டம், வில்லுப்பாட்டு போன்ற கிராமிய கலைகள் இடம்பெறுவதும், அன்றுமுதல் இன்றுவரை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திருவிழாவின் இறுதிநிகழ்ச்சியாக வாணவேடிக்கைகள் நடத்துவது எல்லா ஊர்களிலும் ஒரு மரபாக கடைபிடிக்கப்பட்டுவருகிறது. அதுபோல, கேரளாவில் உள்ள கொல்லம் நகரத்தின் மிக அருகில் இருக்கும் பரவூரில் உள்ள புற்றிங்கல் தேவி திருக்கோவிலில் நடந்த வாணவேடிக்கை, பல உயிர்சேதங்களையும், ஏராளமானவர்களுக்கு காயமும் ஏற்படுத்தி, இந்தியாவையே உலுக்கிவிட்டது. இந்த திருக்கோவிலில் மீனா–பரணி திருவிழா முடியும் அன்று நடந்த வாணவேடிக்கை இதுவரையில் 110 பேர்களுக்குமேல் பலிவாங்கிவிட்டது. 400 பேர்களுக்குமேல் பலத்தகாயத்தோடு பல்வேறு மருத்துவமனைகளில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இங்கு வாணவேடிக்கை நிகழ்ச்சி என்பதோடு, இருகோஷ்டிகளுக்கு இடையே வாணவேடிக்கை போட்டியே நடந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வாணவேடிக்கையை பார்க்க இரவு முழுவதும் காத்திருந்திருக்கிறார்கள். அதிகாலை 3.30 மணிக்கு வானத்தில் போய் வெடிக்கவேண்டிய ஒரு வாணவெடி கீழேவிழுந்து அதிலிருந்து கிளம்பிய தீப்பொறி அருகிலே வெடிகள் சேமித்துவைக்கப்பட்டிருந்த அறைக்குள் விழுந்து, அங்கிருந்த வெடிகள் எல்லாம் மொத்தமாக வெடித்ததால் இவ்வளவு உயிர்கள் இழப்பு ஏற்பட்டது மட்டுமல்லாமல், 1.5 கி.மீ. சுற்றளவில் உள்ள வீடுகளில் எல்லாம் பெரியசேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்டவுடன், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்கள். நரேந்திரமோடி அனைத்து உதவிகளையும் வழங்கியிருக்கிறார்.

‘ஆபத்து காலத்தில் உதவுபவர்தான், உண்மையான நண்பர்’ என்ற வகையில், தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெறும் ஆறுதல் வார்த்தைகளை மட்டும் கூறாமல், உடனடியாக தமிழகத்திலிருந்து மருத்துவ நிபுணர்களையும், தேவையான மருந்துகளையும் அனுப்பியது, தமிழர்களின் தயாளகுணத்தை பறைசாற்றியுள்ளது. இந்த வாணவேடிக்கை இவ்வளவு சோகமயமானது என்றாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற திருவிழாக்கள், மக்கள் கூடும் இடங்களில், வாணவேடிக்கை தொடர்பாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை சுட்டிக்காட்டும் ஒரு பாடமாக அமைந்துவிட்டது. பழையகாலங்களில் கோவில்களுக்கு அருகில் திறந்தவெளி மைதானங்களில் வாணவேடிக்கைகளை நடத்துவார்கள். ஆனால், இப்போதோ கோவில்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் வந்துவிட்டன. வெடிமருந்து விதிகள்படி, எந்த ஒரு வாணவேடிக்கைகள் என்றாலும், பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு இடங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் நடத்தப்படவேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, பட்டாசுவெடிக்கும் நிகழ்ச்சிகளெல்லாம் இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை கண்டிப்பாக நடத்தக்கூடாது என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளது. இதுபோல, 15 கிலோ எடை அளவுக்குத்தான் பட்டாசுகள் வெடிக்கப்படவேண்டும். ஆனால், பரவூரில் நடந்த வாணவேடிக்கையில் இந்தவிதிகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.

கோவில் திருவிழாக்களில் வாணவேடிக்கை என்பது நமது பாரம்பரிய நடைமுறையில் ஒன்றாகும். குறிப்பாக கிராமப்புறங்களில் சப்பரம் தூக்கிக்கொண்டு வரும்போதும், தேர் இழுத்துக்கொண்டு வரும்போதும் அதற்கு முன்பு வாணவேடிக்கைகள் நடத்தப்படுவது மரபு. அதற்கு தடைவிதிப்பது என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவே, வாணவேடிக்கைகளை பாதுகாப்பாக நடத்துவதற்கு கோவில் நிர்வாகம், கிராம நிர்வாகிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, ஆபத்தில்லாத வாணவேடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்.

அரசியலில் இது சகஜமப்பா!...DINAMANI

அரசியலில் இது சகஜமப்பா!...DINAMANI

By  - விக்கிரமசிங்கன் -

தமிழக சட்டப் பேரவையைப் பொருத்தவரை மிகுந்த நகைச்சுவை உணர்வுடன், அதே நேரத்தில் சற்றும் தரம் குறைந்துவிடாமல் விமர்சனங்களை எதிர்கொள்பவர் என்கிற பெருமை ராஜாஜியைத்தான் சாரும். சட்டப் பேரவை விவாதங்களில் அவர் சொன்ன பதில்கள் சிரிப்பலையை எழுப்பும். அவரது குட்டிக் கதைகளும், உவமைகளும் எதிர்க்கட்சியினராலும் ரசிக்கப்படும்.
 தமிழக அரசியலில் முதல் முதலில் தரக்குறைவான முறையில் பேசியவர் என்கிற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் பெரியார்தான். திராவிடக் கழகத்திலிருந்து திமுக பிரிந்திருந்த நேரம். திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கிய அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களைத் தாம் பேசும் கூட்டங்களில் எல்லாம் "........பயலுவ...' என்று தொடர்ந்து வசைபாடி வந்தார் அவர்.
 அப்போதெல்லாம் திமுக பொதுக்கூட்டங்களில் அண்ணாவின் பேச்சைக் கேட்பதற்கென்றே கூட்டம் கூடும். திமுக சாராத பொதுமக்களும் கலந்து கொள்வார்கள். சங்கீதக் கச்சேரிகளில் ரசிகர்கள் தங்கள் விருப்பமான பாடல்களைப் பாடும்படி துண்டுச்சீட்டில் எழுதி அனுப்புவதுபோல, அண்ணாவிடம் துண்டுச் சீட்டில் கேள்விகளை எழுதி அனுப்புவார்கள். அண்ணாவும், எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பார்.
 கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் ஒருவர், "பெரியார் உங்களை இப்படித் தரக்குறைவாகத் குறிப்பிட்டு வசைபாடுகிறாரே...?' என்று துண்டுச் சீட்டில் எழுதி அண்ணாவுக்கு அனுப்பினார். அண்ணா தனக்கே உரித்தான நகைச்சுவை உணர்வுடன், "நாங்கள் அவரைத் தந்தை என்கிறோம். அவரோ எங்களை வேசி மகன் என்கிறார்' என்று கூறிய பதிலால் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.
 ஆனால், அதற்குப் பிறகும் பெரியார் திமுகவினரை வசைபாடுவதை நிறுத்தவில்லை. 1962, 1967 தேர்தல்களில் "காமராஜர்தான் பச்சைத் தமிழன். இவர்கள் ................' என்று தொடர்ந்து வசைபாடி திமுகவுக்கு எதிராகப் பிரசாரம் செய்து வந்தார். 1967-இல் திமுக ஆட்சிக்கு வந்ததும், முதல்வரான அண்ணா தனது அமைச்சரவை சகாக்களுடன் நேரில் சென்று பெரியாரிடம் ஆசி வாங்கினார். அத்துடன் அவர்களுக்குள் இருந்த பகை விலகியது. தனது பெருந்தன்மையால் அதுவரை வசைபாடிய பெரியாரைத் தனது புகழ்பாட வைத்துவிட்டார் அண்ணா.
 தமிழக சட்டப் பேரவையில், அவையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் எழுந்த முதல் தரக்குறைவான பேச்சுக்கு சொந்தக்காரர், இன்று தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியாகத் திகழும் கருணாநிதிதான் என்றால் இன்றைய தலைமுறையினருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால், அதுதான் உண்மை.
 அன்று ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் குறிப்பிடத்தக்க உறுப்பினர் அன்றைய பேசின் பிரிட்ஜ் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த டி.என். அனந்தநாயகி. ஒருமுறை அவர் சட்டப் பேரவையில் திமுகவை விமர்சிக்கும் விதத்தில், "எங்கே இருக்கிறது திராவிட நாடு?' என்று கேள்வி எழுப்பினார்.
 எதிர்க்கட்சி வரிசையில் இருந்த மு. கருணாநிதி எழுந்து நின்றபோது, அவை ஒரு வினாடி மெளனமானது. அவர், "அந்த நாடாவை அவிழ்த்து...' என்று கூறி, சற்று நிறுத்தி, பிறகு, "நான் குறிப்பிட்டது பாவாடை நாடாவை அல்ல, கோப்புகளின் நாடாவை' என்று கூறும்போதே அவையில் ஒரே கூச்சலும் கண்டனமும் எழுந்தன என்று அன்றைய காலகட்டக் காங்கிரஸ் தலைவர்கள் மேடையில் பேசுவதுண்டு.
 தரக்குறைவான மேடைப் பேச்சுகளும், சட்டப் பேரவை விவாதங்களும் 1962-க்குப் பிறகு திமுக கணிசமான உறுப்பினர்களுடன் அவைக்கு வந்தபிறகுதான் தமிழகத்தில் தலைதூக்கியது. திமுகவில் அண்ணா, நெடுஞ்செழியன் போன்ற மிகவும் கண்ணியமாகப் பேசும் தலைவர்களும் நிறையவே இருந்தனர் என்றாலும், இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்டத் தலைவர்களின் பேச்சுகள் தரக்குறைவாகவே இருந்தன.
 அரசியல் மேடைகளில் காமராஜரும், பக்தவத்சலமும், பின்னாளில் எம்.ஜி.ஆரும். மிகவும் தரக்குறைவாக விமர்சிக்கப் பட்டார்கள். கேலி செய்யப்பட்டார்கள். அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜருக்கு ஆங்கிலம் தெரியாது என்பதைக் கிண்டல் செய்து மிக அதிகமாகப் பேசப்பட்டது. இவையெல்லாமே, அண்ணாவின் காலத்திற்குப் பிறகுதான் மிகவும் தரம் தாழத் தொடங்கியது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை.
 தமிழக அரசியலில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானவர்களில் திமுக தலைவர் கருணாநிதியும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரைவிடவும் அதிகமாக விமர்சிக்கவும், கேலி செய்யவும், வசைபாடவும் செய்யப்பட்டவர் இன்றைய முதல்வர் ஜெயலலிதாதான்!
 எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜெ, ஜா என்று ஜெயலலிதாவும், வி.என். ஜானகியும் இரண்டு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டபோதுதான் அவர் மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஜானகி அணியைச் சேர்ந்த பலரும் நா கூசாமல் ஜெயலலிதாமீது வைத்த விமர்சனங்கள்தான் தமிழக அரசியலில் மிகவும் தரக்குறைவான விமர்சனங்களாக இருக்கும்.
 வேடிக்கை என்னவென்றால், இப்படி மிகவும் தரம் தாழ்ந்து ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்தவர்கள் அனைவருமே 1991-க்குப் பிறகு அவரது அமைச்சரைவையில் அமைச்சர்களாகவும் கட்சிப் பொறுப்புகளிலும் இருந்தனர், இருக்கின்றனர் என்பதுதான். அதை ஜெயலலிதாவின் பெருந்தன்மை என்பதா, இவர்களின் நல்ல காலம் என்பதா தெரியவில்லை.
 ஜாதியைக் குறிப்பிட்டு கருணாநிதி விமர்சிக்கப்படுவதும், பழிக்கப்படுவதும் புதிதொன்றும் அல்ல. அப்படி அவரை விமர்சித்தவர்கள் பட்டியலில் இப்போது வைகோவும் சேர்ந்திருக்கிறார், அவ்வளவே!
 1993-இல் மதிமுக பிரிந்தபோது, அப்போது திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த நாஞ்சில் மனோகரன் எழுதிய "கருவின் குற்றம்' கவிதையின் சாராம்சமும் இப்போது வைகோ தெரிவித்திருக்கும் கருத்தும் வேறுவேறல்ல. அவர் நாகரிகமாகச் சொன்னார். இவர் கொச்சையாகக் கூறியிருக்கிறார் அவ்வளவே!
 இப்போது வைகோவை அவரது கருத்திற்காகக் கண்டித்திருப்பவர்கள் பட்டியலில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் இருப்பதுதான் நகைச்சுவை. அவர் இதற்கு முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த போது, "கருணாநிதி எல்லாவற்றையும் ஊதி ஊதிப் பெரிதாக்குகிறார்' என்று கூறி வாங்கிக் கட்டிக் கொண்டது அவருக்கு மறந்து போயிருக்கக் கூடும்.
 வெகுண்டு எழுந்த கருணாநிதி, காங்கிரஸ் தலைமையிடம் ஆவேசமாக முறையிட, தில்லியிலிருந்து இளங்கோவனுக்கு "டோஸ்' விழ, அவர் கோபாலபுரத்துக்கு ஓடிப்போய் மன்னிப்புக் கேட்க, அந்தக் கோபத்தை மனதில் வைத்துக்கொண்டு 2009 மக்களவைத் தேர்தலில் அவரைத் திமுக தோற்கடிக்க.... அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா... என்று கருணாநிதியும் இளங்கோவனும் இப்போது கைகோத்திருக்கிறார்கள்.
 தமிழக அரசியலில் காங்கிரஸ், ஜனதா, இடதுசாரிகள், பாஜக உள்ளிட்ட தேசியக் கட்சித் தலைவர்கள் யாருமே தரக்குறைவாகப் பேசியதாக சரித்திரம் இல்லை. பெரியாரின் பேரன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஒருவர் மட்டும்தான் இதற்கு விதிவிலக்கு. தரக் குறைவாகவும், கீழ்த்தரமாகவும் பேசுபவதைப் பெருமையாகவே கருதுபவர்கள் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே. அதனால்தான் தேசிய கட்சிகளால் தமிழகத்தில் செல்வாக்குப் பெற முடியவில்லையோ என்றுகூடத் தோன்றுகிறது.
 நாங்கள்தான் ஜனநாயகக் காவலர்கள் என்றும், பலருக்கு வழிகாட்டிகள் என்றும் பீற்றிக் கொள்ளும் அமெரிக்காவிலேயே, இதுபோன்ற தரக்குறைவான விமர்சனங்களைத் தடுக்க முடியவில்லை, நம்மால் எங்கே முடியப் போகிறது?
 ÷வைகோ பேசியது பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வந்துவிட்டது. நாம் நனி நாகரிகம் பற்றிப் பேசுகிறோம். அரசியல் கட்சிகளில் இரண்டாம் கட்ட, முன்றாம் கட்டப் பேச்சாளர்கள் பேசுவதைக் கேட்டால், தமிழ் எழுத வராது. கெட்ட வார்த்தைதான் எழுதவரும்.
 ÷அப்படியானால், இது எங்கேபோய் முடியும்? கிரேக்க நாடக ஆசிரியர் அரிஸ்டோபேன்ஸ் கூறியதை மறுபடியும் படித்துப் பாருங்கள். ஜனநாயகம் இருந்தால் அரசியல்வாதிகள் இருப்பார்கள். அரசியல்வாதிகள் இருந்தால் வசைமாரி பொழிவார்கள். தரக்குறைவாகத் தாக்குவார்கள். அரசியலில் இது சகஜமப்பா!

தேவை பொறுமை எனும் மருந்து

தேவை பொறுமை எனும் மருந்து...DINAMANI

By பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்காபாத்தில் வறட்சிக் கொடுமையால் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த 40 மாணவர்கள், தாங்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி தர வேண்டும் என மரத்வாடா ஆட்சியருக்குக் கடிதம் எழுதியுள்ள சம்பவம் மாணவரிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
 சமீப காலமாக பள்ளி, கல்லூரி, பல்லைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களிடையே, குறிப்பாக, தொழில் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடையே தற்கொலை எண்ணம் உருவாகி வருவது வேதனை தரும் விஷயம்.
 மாணவர்களைப் பெற்றோர்களும், கல்லூரி நிர்வாகமும் வாட்டி வதைப்பது, அதனால் ஏற்படும் மனஉளைச்சல், சோர்வு தான் இத்தகைய தற்கொலைச் சம்பவங்களுக்குக் காரணம் என மனோதத்துவ நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
 அதிலும் குறிப்பாக, ஏழை, எளிய நடுத்தர மக்களின் பிள்ளைகள் கடினப்பட்டு உழைத்து, படித்து நிறைய மதிப்பெண்கள் பெற்ற பின்பு, அவர்களைப் புகழ் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் சேர்த்து விட்டால் அதன் பின்பு தான் பிரச்னையே ஆரம்பமாகிறது.
 அங்கு ஏற்கெனவே பயிலும் பணக்காரப் பிள்ளைகளின் நடவடிக்கைச் சூழல்கள், பல்வேறு மொழி பேசும் மாணவர்கள், அவர்களின் நடை, உடை பாவனைகள், தன்னைவிட அதிக மதிப்பெண்களைப் பெற்று விட்ட மற்ற மாணவர்களைக் கண்டு அதனால் ஏற்படும் பொறாமை உணர்வு, கடனை வாங்கி கல்லூரியில் சேர்த்து விட்ட பின்பு, அடுத்து வரும் ஆண்டுகளில் கல்லூரிக் கட்டணம் கட்ட முடியாமல் இருக்கும் பெற்றோர்களின் தவிப்பு, அதனால், தாங்கள் கல்லூரி நிர்வாகத்திடமும், சக மாணவர்களிடையேயும் பெறும் அவமானம் இதெல்லாம் தற்கொலை எண்ணத்தைத் தூண்டுகின்றன.
 படித்தால் வேலை கிடைக்குமா, நாம் பெற்றோர்களை கடனாளியாக்கி விட்டோமே என்ற மனச் சோர்வு, பிடிக்காத பாடப் பிரிவில் மாணவர்களைச் சேர்த்து படிக்குமாறு வற்புறுத்துதல், அரசு ஒதுக்கீட்டில் வரும் மாணவர்களைப் புறக்கணித்தல் ஆகியனவும் மாணவர்களுக்குத் தற்கொலை எண்ணங்களைத் தூண்டுகின்றன.
 நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10% பேருக்கு மன நோய் அல்லது மன அழுத்தம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தற்கொலை செய்பவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
 எது கேட்டாலும் வாங்கிக் கொடுத்து, பிள்ளைகளைக் கண்டிக்கும் பழக்கம் இல்லாத பெற்றோர்களிடையே வளரும் குழந்தைகளுக்கு, பிறர் கண்டித்தால் அதைத் தாங்கிக் கொள்ளும் மனநிலை இல்லாமல் போய்விடுகிறது. பெற்றோர்கள் தங்கள் மன அழுத்தத்தை பிள்ளைகளிடம் காட்டக் கூடாது.
 வளர்ந்து விட்ட தொழில்நுட்ப யுகத்தில் எங்கும் போட்டி, எதிலும் போட்டி என்ற போக்கு அவர்களை பெரும் பரப்பரப்புக்கு ஆளாக்கி விட்டது.
 மாணவர்களின் மனநிலையை உணர்ந்து அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் ஆசிரியர்களின் பணி இருக்க வேண்டும். மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
 தங்கள் மீது அக்கறை இருப்பதாலேயே அவ்வப்போது பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்லூரி நிர்வாகமும் கண்டிக்கின்றனர் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.
 அவ்வப்போது அபாயகரமான முடிவுகளை எடுப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
 மதிப்பெண்களைக் குறைவாகப் பெற்றுவிட்டால், தங்களின் வாழ்க்கைப் பாதையே மாறி விட்டதாக நினைத்து சில மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை மாய்த்துக் கொள்கிறார்கள்.
 இத்தகையச் சூழ்நிலையில் துன்பங்களையும், துயரங்களையும், போராட்டங்களையுமே துணையாகக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி அடைந்து முன்னுக்கு வந்த வல்லுநர்களைக் கொண்டு மாணவர்களை ஆற்றுப்படுத்துல் நடத்த வேண்டும். மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிக்கப் போவதில்லை என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
 அதே நேரத்தில், கல்லூரி நிர்வாகமும் மாணவர்கள், பெற்றோர்கள் - ஆசிரியர்களிடையே நல்லிணக்கம் கொண்டு கல்லூரிக் கட்டணம் கட்ட வசதியில்லாமல் துயரில் இருக்கும் மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படும் வகையில், "நம் கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு கண்டிப்பாக வளாக நேர்காணலில் வேலை கிடைக்கும், நீ வேலை கிடைத்த பின்பு கட்டணம் செலுத்தினால் போதும்' என்று கூறி அவர்களின் தற்கொலை எண்ணத்தை கைவிடச் செய்து மகிழ்ச்சி அலைகளை அவர்கள் மனதில் ஏற்படுத்தினால், அவர்கள் படிப்பில் மீண்டும் நாட்டம் செலுத்துவதோடு, தற்கொலை எண்ணமும் மறையும்.
 தோல்வி, துன்பம் ஏற்படும்போது அதைக்கண்டு துவளாமல், அது வெற்றியின் முதல் படிக்கட்டு என்றுணர வேண்டும். குறிப்பாக, பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களிடையே பொறுமை எனும் மருந்தை ஊட்ட வேண்டும்.

எரிகிற வீட்டில்...!

எரிகிற வீட்டில்...!
By ஆசிரியர்
First Published : 11 April 2016 01:47 AM IST   DINAMANI

கேரள மாநிலம், பரவூர் அருகே உள்ள புற்றிங்கல் கோயில் திருவிழாவில் நேரிட்ட வெடிவிபத்தில் 106 பேர் உயிரிழந்திருப்பது நாடு முழுவதும் மிகப்பெரும் வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கோயில் தரைமட்டமாகிவிட்டது. பல நூறு பேர் தீக்காயம் அடைந்து கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கோயில் விழாவில் வழக்கமாக நடைபெறும் இரு குழுக்களுக்கு இடையேயான வாண வேடிக்கைப் போட்டிக்கு இந்த ஆண்டு காவல் துறை தடை விதித்தது என்றும், இதனால் கடைசி நேரத்தில் காவல் துறை அனுமதி இல்லாமலேயே வாண வேடிக்கை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. காலம் காலமாக நடந்துவரும் இக்கோயில் வாண வேடிக்கை போட்டியை ஏன் காவல் துறை தடுத்தது என்பது புரியாத புதிர்.

தென்னிந்தியாவில், குறிப்பாக கேரளம் மற்றும் தமிழ்நாட்டில், கோயில் திருவிழாகளில் வாண வேடிக்கை என்பது விழாவுடன் பிரிக்க முடியாத மரபாகவே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் இத்தகைய வாண வேடிக்கை என்பது கோயில் விழாக் குழுவின் செலவாக அமையும். ஆனால் கேரளத்தில், பெரும்பாலும் அந்தக் கோயில் சார்புடைய கிராமத்தினர் தங்களுக்குள் வசூல் செய்து வாண வேடிக்கை நடத்துகிறார்கள்.

புற்றிங்கல் பகவதி அம்மன் கோயில் மட்டுமன்றி, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நெம்மாறா பகவதி அம்மன் கோயில் திருவிழாவிலும் வெடி விழா இரு கிராமத்தினருக்கு இடையே போட்டியுடன் நடத்தப்படுவது வழக்கமாக இருக்கிறது. எந்த கிராமத்தின் வெடிகள் அதிக சப்தத்துடன் வெடிக்கின்றன, வாணப்பூக்கள் எவ்வளவு அழகாக இருந்தன என்பதை வைத்து யாருடைய வெடிவிழா சிறப்பாக இருந்தது என்பதைத் தீர்மானிப்பார்கள்.

திருச்சூர் பூரம் விழாவின் முடிவில், நள்ளிரவுக்குப் பின், திருச்சூர் வடக்குநாதன் கோயில் மைதானத்தில் நடைபெறும் வாண வேடிக்கை மிகவும் பிரபலமானது. பூரம் விழா நாளில், மாலைப்பொழுதில் யானையின் மீது இரு தரப்பினரும் வண்ண அலங்காரக் குடைகளை மாற்றும் அழகை ரசித்த பிறகு, இரவு வாண வேடிக்கையை ரசிக்காமல் கூட்டம் கலைவதில்லை.

புற்றிங்கல் பகவதி அம்மன் கோயில் வெடிவிழாவில் இரு தரப்பினருக்கும் இடையே வாண வேடிக்கை போட்டி கூடாது என்று காவல் துறை கூறியதால், இதை ஏற்க மறுத்து கோயில் நிர்வாகத்தினர் கடைசிவரை அதிகாரிகளுடன் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. அனுமதி கிடையாது என்று முடிவு செய்த பிறகு, பல்லாயிரம் மக்கள் கூடும் பகுதியில் வெடிமருந்துகளைக் குவித்து வைக்க அனுமதித்தது ஏன்? அனுமதியின்றி விழாக் குழுவினர் வாண வேடிக்கை நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன், தடுப்பு நடவடிக்கையாக காவலர்களை அங்கே நிறுத்தி வைக்கத் தவறிய காவல் துறை மீது யார் வழக்குப் பதிவு செய்வார்கள்?

வெடிவிழா நடத்தப்படும் கோயில்கள் அனைத்திலுமே இதற்கென தனி மைதானம் கோயில் முன்பாக அல்லது கோயில் அருகே இருக்கும். வாண வெடி தயாரிப்போர் ஒருசில நாள்களுக்கு முன்பாகவே அங்கே வந்து, வாண வெடிக்கான குழிகள் அமைக்கவும், மூங்கில் கோபுரம் அமைக்கவும் தொடங்கிவிடுவார்கள். அந்த மைதானத்துக்குள் யாரும் நுழையாமல் பார்த்துக்கொள்வார்கள். வெடிவிழா வழக்கமாக இரவு 11 மணிக்கு மேல்தான் தொடங்கும். அந்த நேரத்தில் மின்சாரத்தை துண்டித்துவிடுவதே வழக்கம். அந்த நேரத்திலும், வாண வேடிக்கை குழுவினரின் ஆட்கள் அந்த மைதானத்தின் எல்லையில் நின்று யாரும் உள்ளே போகாதபடி கண்காணிப்பார்கள்.

இத்தனை நடைமுறைகளையும் மீறி, வாண வெடி மருந்துகள் கோயில் வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்ததாகவும், அதில் ஒரு தீப்பொறி விழுந்து விபத்து நேரிட்டதாகவும் கூறப்படுவது பல சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது. வாண வேடிக்கை நடக்கும் மைதானத்தில் எத்தனை பெரிய விபத்து நடந்தாலும், வாண வெடி ஊழியர்கள்தான் பலியாவார்கள். பார்வையாளர்கள் இத்தனை பேர் பலியாக வாய்ப்பில்லை. வாண வெடி மேலெழாமல் பக்கவாட்டில் பறக்கும்போது சில பார்வையாளர்கள் பாதிக்கப்படுவதுண்டே தவிர, இவ்வாறு நூற்றுக்கும் மேற்பட்டோர் சாகவும், 200 பேர் காயமடையும்படி ஆனதில்லை.

காவல் துறை கடைசி வரை அனுமதி வழங்க மறுத்ததால், அவசர அவசரமாக இந்த வாண வேடிக்கையை நடத்தி முடித்துவிட வேண்டும் என்கின்ற முனைப்புதான் தவறுகளுக்கும், விபத்துக்கும் காரணமாக இருந்ததா? அல்லது கேரளத்தில் இத்தகைய வெடி விழாகளை ஒழித்துவிட வேண்டும் என்கிற சதி வலைப்பின்னல்தான் இதற்கு அச்சாரமா?

இந்த விபத்துக்கான காரணங்களை நிச்சயமாக ஒரு குழு ஆய்வு செய்து சொல்லும். ஆனால், அவர்கள் காவல் துறையைக் குற்றம் சொல்லப்போவதில்லை. இனி எல்லா கோயில்களிலும் வாண வேடிக்கைகளைக் கட்டுப்படுத்துவார்கள். காவல் துறையினர் முன்னிலையில், அவர்கள் அனுமதிக்கும் வெடிகளை மட்டும், அனுமதிக்கும் எண்ணிக்கையில் வெடிக்கும்படி பரிந்துரைக்கலாம்.

கோயில்களில் யானைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கெனவே நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. இப்போது கோயில்களில் வாண வேடிக்கையும் கூடாது என்று ஒலிமாசுக்கு எதிரான ஆர்வலர்களால் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, அவசர அவசரமாகப் பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் கேரளம் விரைந்திருக்கிறார்களே, இது அப்பட்டமான அரசியல் ஆதாய முயற்சியாகத் தெரியவில்லையா? "எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம்!' என்கிற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது!

NEWS TODAY 31.01.2026