Monday, February 6, 2017

'முதலில் உங்கள் செல்வாக்கை நிரூபியுங்கள்!'  - சசிகலா தூதுவரிடம் கடுகடுத்த பா.ஜ.க.


#VikatanExclusive



கார்டன் வட்டாரத்தை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது அந்நிய செலாவணி மோசடி வழக்கு. மன்னார்குடி உறவுகள் மீதான வழக்குகளை துரிதப்படுத்தத் தொடங்கிவிட்டது மத்திய அரசு. ' மத்திய அரசிடம் நெருங்குவதற்கு கார்டன் தரப்பினர் கடும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அவர்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.

அ.தி.மு.கவின் புதிய பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் அவரது அக்கா வனிதாமணியின் மகன் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது, 1996ம் ஆண்டில் அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளை சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து வந்தது. கடந்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி, இந்த வழக்கில் இருந்து சசிகலாவையும் தினகரனையும் விடுவித்தது நீதிமன்றம். இதனை எதிர்த்து, மத்திய அமலாக்கப் பிரிவு உதவி இயக்குநர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், ' வெளிநாட்டில் இருந்து சுசிலா என்பவரது பெயருக்கு வந்த 19 லட்சத்து 91 ஆயிரத்து 610 அமெரிக்க டாலரை, சித்ரா என்பவருக்குக் கடனாகக் கொடுத்துள்ளார். இந்தப் பணத்தில் 3 கோடி 52 லட்சத்தை சசிகலாவுக்கு கடனாக கொடுத்துள்ளார். 25 காசோலைகளில் 2 காசோலைகளை வி.என்.சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு கொடுத்துள்ளார். மீதமுள்ள காசோலைகள் எந்த பெயரும் குறிப்பிடாமல் கொடுக்கப்பட்டுள்ளன. சசிகலாவுக்கு வந்துள்ள பெரும் தொகை, முறையான அனுமதியின்றி வந்துள்ளது. எனவே, இவர் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய முகாந்திரம் உள்ளது' எனக் குறிப்பிட்டிருந்தார். அதேபோல், தினகரன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும் அமலாக்கத் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதியரசர் சொக்கலிங்கம், பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் நிறுவனங்களின் அன்றாட நிர்வாகத்தில் சசிகலா உள்ளிட்டோர் பங்கெடுத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இதனால் சசிகலா, தினகரன் ஆகியோர் அந்நிய செலாவணி வழக்கை எதிர்கொள்ள வேண்டும். சசிகலா தன்னை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. சசிகலா, தினகரனை விடுவித்து எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' என உத்தரவிட்டார்.

" நடராசன் மீதான லெக்சஸ் கார் இறக்குமதி வழக்கு வேகம் பிடித்துள்ளது. ஜெயலலிதா உயிரோடு இந்த சமயத்தில் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதைக் கொண்டாடினார் சசிகலா. தினகரன், சுதாகரன் மீதான வழக்குகளும் நெருக்க ஆரம்பித்துவிட்டன. மன்னார்குடி உறவுகளை குறிவைத்து, மத்திய அரசு வலுவாக இறங்கி அடிக்க ஆரம்பித்துவிட்டதை அதிர்ச்சியோடு கவனிக்கிறார் சசிகலாவின் கணவர் நடராசன். ' மோடி நல்லவர்' என பகிரங்கமாக பேசினாலும், மத்திய அரசின் பார்வை கார்டன் பக்கம் திரும்பவில்லை" என விவரித்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர், " தமிழகத்தில் தாங்கள் நினைத்தப்படி எதுவும் நடக்கவில்லை என்ற ஆதங்கம் மன்னார்குடி உறவுகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. பன்னீர்செல்வத்திற்கு பிரதமர் அலுவலகம் கொடுக்கும் முக்கியத்துவதை அவர்கள் ரசிக்கவில்லை. ' காங்கிரஸ் பக்கம் நாங்கள் செல்லவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தலில் உங்களுக்கு ஆதரவு கொடுக்கிறோம். நீங்கள் சொல்வதைக் கேட்கிறோம்' என டெல்லி லாபி மூலம் பா.ஜ.க தலைமைக்கு வேண்டியவர்களிடம் பேசியுள்ளனர் கார்டன் தரப்பினர். இதற்காக அனுப்பப்பட்ட தூதுவரிடம் பேசிய பா.ஜ.க அகில இந்திய நிர்வாகி ஒருவர், ' குடியரசுத் தலைவர் தேர்தலை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. நாங்கள் நிறுத்தும் வேட்பாளரை நீங்கள் எதிர்த்தால், தி.மு.க எங்களுக்கு ஆதரவு கொடுக்கும். உங்களிடம் மொத்தமாக 5 சதவீத வாக்குகள் இருக்கின்றன. தி.மு.கவிடம் ஒன்றரை சதவீத வாக்குகள் உள்ளன. நவீன் பட்நாயக், நிதிஷ் குமார், சந்திரசேகர ராவ், ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் எங்கள் வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பார்கள். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பலத்தோடு பா.ஜ.க இருக்கிறது.

பொதுக் கருத்தின் அடிப்படையில்தான் ஜனாதிபதியை தேர்வு செய்வோம். தற்போது எதிரணிகள் ஆளுக்கொன்றாக சிதறிக் கிடக்கிறது. எந்த வகையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வேட்பாளர்களை நிறுத்த மாட்டார்கள். எங்களுக்குத் தேவை, 2019-ம் ஆண்டில் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதுதான். அதற்குத் தேவை, 1998 மற்றும் 99-ம் ஆண்டில் வாஜ்பாய்க்குக் கிடைத்த வெற்றிக் கூட்டணி, பிரதமர் மோடிக்கும் அமைய வேண்டும். இதையொட்டித்தான் அகில இந்திய தலைமை மாநிலங்களில் அரசியல் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் எங்களுடைய முதல் தேர்வாக தி.மு.க இருக்கிறது. அதனால்தான், பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கருணாநிதி வரவேற்றதையும் பாராட்டினார் மோடி. அவரது உடல்நிலை குறித்துப் பிரதமர் அக்கறையோடு விசாரிக்கிறார். ஸ்டாலினிடம் நல்ல அணுகுமுறையில் இருக்குமாறு ஆளுநருக்குத் தெரிவித்திருக்கிறோம். அதனால்தான், ஸ்டாலினுக்கும் கருணாநிதிக்கும் பொங்கல் வாழ்த்து சொன்னார் ஆளுநர். தி.மு.க ஒரு பலமான கட்சியாக இருக்கிறது.

'சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸால்தான் தி.மு.க தோற்றது' என பா.ஜ.க நிர்வாகிகள் சொன்னதை தி.மு.க நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டார்கள். சரக்கு சேவை வரி மசோதாவை அ.தி.மு.க எதிர்த்தபோதும், தி.மு.க எங்களை ஆதரித்தது. 2014 மற்றும் 2016-ம் ஆண்டு தேர்தல்களில் அ.தி.மு.க எங்களை ஏமாற்றிவிட்டது. இப்போது நீங்களே பல பிரிவுகளாக சிதறிக் கிடக்கிறீர்கள். தற்போதுள்ள சூழலில், அ.தி.மு.கவில் எந்த அணிக்கு, நாங்கள் ஆதரவாக செயல்படுவது? உங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால், உள்ளாட்சித் தேர்தலை நடத்தி செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டுங்கள். 'நாங்கள்தான் பலத்தோடு இருக்கிறோம்' என்பதைக் காட்டுங்கள். ' உள்ளாட்சி தேர்தலை நீங்கள் புறக்கணிக்கக் காரணமே, தனி அணியாக தீபா நிற்பதால்தான்' என எங்களுக்கு அறிக்கை வந்துள்ளது. நீங்கள் இன்னமும் காங்கிரஸைக் கழட்டிவிடவில்லை என்பதைத்தான் நாங்கள் நம்புகிறோம்' என எச்சரிக்கும்விதமாகவே பேசியிருக்கிறார். பிரதமரை நெருங்க வேண்டும் என்ற கார்டனின் முயற்சிகள் கைகூடவில்லை" என விவரித்து முடித்தார் அவர்.

லெக்சஸ் வழக்கு, பெரா வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கு என கடந்த காலங்களில் ஆடிய ஆட்டத்திற்கான வினைகளை ஒவ்வொன்றாக அனுபவிக்கின்றனர் மன்னார்குடி உறவுகள். சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை பதற்றத்தோடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா.

-ஆ.விஜயானந்த்

திங்கள் கிழமையை இப்படியும் எதிர்கொள்ளலாம் பெண்களே!


ஞாயிற்றுக்கிழமை' என்றவுடனே மனம் சந்தோஷப்படுவதுபோலவே திங்கள் கிழமை என்று சொன்னவுடனே சட்டென்று ஒரு சுணக்கம் வந்துவிடும். நேற்று ரிலாக்ஸாக இருந்த உடலை, மனதை மீண்டும் சுறுசுறுப்புக்குக் கொண்டு வருவது எளிதல்ல. பெண்களும் இதில் விதிவிலக்கு இல்லையே. பெண்களுக்கு ஞாயிறன்றும் வீட்டு வேலைகள் அதிகளவிலிருந்தாலும் நம்முடைய கணவருக்கு, நம்முடைய பிள்ளைகளுக்கு என அந்த வேலைகளையும் செய்யும்போது அந்த வேலை சுமையாக தெரிந்திருக்காது. அதனால் பெண்களுக்கும் திங்கள் சோர்வு படர்ந்த பொழுதாகத்தான் விடியும்.

சரி, அதற்காக காலண்டரில் திங்கள் கிழமையே இல்லை என்று அறிவித்துவிட முடியாது அல்லவா. அதனால் அதை எதிர்கொள்வதில் வித்தியாசம் காட்டி அசத்தலாம் பெண்களே!

வாரத்தின் ஒரு நாள்தான்: இன்று திங்கள் கிழமை என்பதை கொஞ்சம் மாற்றி, வாரத்தின் முதல் நாள், எனவே உற்சாகத்தோடு வரவேற்போம் என எண்ணுங்கள். மேலும், திங்கள் கிழமையும் வாரத்தின் ஒரு நாள்தான், செவ்வாய்கிழமை எப்படி புறப்படப் போகிறமோ அதேபோல இன்றைக்கும் என நினையுங்கள். இது நம்மை நாமே பழக்கிக்கொள்ளும் ஒரு வகை மனப் பயிற்சிதான். அதனால், பழகப்பழக இது நம் வசமாகும்.

சோம்பலை அனுமதியுங்கள்: திங்கள் கிழமை என்றதுமே சோம்பலை விரட்ட வேண்டும் என நினைத்து, ரொம்ப சீக்கிரமே எழுந்திருத்தல் தொடங்கி எல்லாவற்றிலும் பரப்பரப்பு காட்டுவீர்கள். அது தேவையற்ற பதற்றத்தைத்தான் தரும். எனவே அதைத் தவிர்த்து, இன்று சோம்பலாகத்தான் இருக்கும் என ஒத்துக்கொள்ளுங்கள். அதைத் தவிர்க்காமல் ஆனாலும் குறித்த நேரத்தில் வேலைகளை முடிக்க முடியும் எனும் நம்பிக்கையும் கொள்ளுங்கள்.

புதிய விளையாட்டு: பெண்களுக்கு திங்கள் கிழமையின் பெரும் வேலையே, குழந்தைகளைத் தூக்கத்திலிருந்து எழுப்புவதுதான். ஏனென்றால் நேற்று விடுமுறை நாள் என்பதால் இரவில் அதிக நேரம் டிவி பார்த்துகொண்டு, காலையில் எழுந்திருக்க நேரம் கடத்துவார்கள். அதனால், புதிய விளையாட்டுகளை இன்றிலிருந்து தொடங்குங்கள். முதல் நாளே, அந்த விளையாட்டைப் பற்றி சுவாரஸ்யமாக சொல்லி வைத்துவிடுங்கள். காலையில், உறங்கும் பிள்ளைகளின் காதில் மெதுவாக அந்த விளையாட்டின் பெயரைச் சொன்னதும் துள்ளி எழுவார்கள். அப்படிச் செய்வதன் மூலம் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று நீங்கள் புதிய விளையாட்டுகளைத் தேடித் தெரிந்துகொள்வீர்கள். இரண்டு, நீங்களும் குழந்தைகளுடன் விளையாடி புத்துணர்ச்சியாவீர்கள்.

நேரம் மிச்சமாக்கும் சமையல்: வழக்கமாக பெண்களின் திட்டமிடலைக் காலி செய்வது சமையல்தான். பருப்பு வேகவில்லை. குக்கர் விசில் அடிக்க லேட்டாவது... என ஒவ்வொரு நாளையும் டென்சனாக்குவது சமையல்தான். அதனால், திங்கள் கிழமையில் விரைவாக செய்யும் உணவு வகைகளை மட்டுமே செய்யுங்கள். காலை ஒரு வகையும் மதியத்திற்கு ஒன்றும் எனச் செய்யாமல், இரண்டுக்கும் சேர்த்து ஒரே வகை உணவைச் சமைக்கலாம். வீட்டினர் கேட்டால், 'Monday Special' என்று சொல்லுங்கள். இரண்டு வாரங்கள் கழித்து, அவர்கள் இதற்கு பழகி விடுவார்கள். அல்லது சமையல் செய்ய உதவிகள் செய்ய முன் வருவார்கள். இரண்டில் எதுவானாலும் நல்லதுதான்.

அலுவலகம் செல்வோர்: அலுவலகம் செல்லும் பெண்களுக்கு, வீட்டினரைத் தயார் செய்வது, தான் புறப்படுவது என இரட்டைச் சுமை. அதனால், அலுவலகத்தில் குவிந்திருக்கும் வேலைகளை வீட்டிலேயே நினைக்காதீர்கள். இதுபோலதானே சனிக்கிழமையும் இருந்தது. சமாளித்துக்கொள்ளலாம் என்று தயாராகுங்கள். அலுவலகத்துக்கு சரியான நேரத்துக்கு சென்றாலே முக்கால் பகுதி டென்சன் குறைந்து விடும். அதற்கு என்ன செய்யலாம் என்பதை மட்டும் திட்டமிடுங்கள்.

தித்திக்கும் இனிப்பாகட்டும் திங்கள் கிழமை.
பன்னீர்செல்வம்

பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி வரமா... சாபமா?


முதல்வர் பதவி, ஒ.பன்னீர்செல்வத்துக்கு வரமா? சாபமா? என்ற முடிவுக்கு வரமுடியவில்லை. ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து விலகும் சூழல் ஏற்படும் போதெல்லாம் முன்னிறுத்தப்பட்டது இவர் தான். 'பதவியை திரும்பக் கொடு' என்று கேட்டாலும் சிரித்துக் கொண்டே கொடுத்துவிட்டுச் செல்வதும் இவர் தான். 'பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டுப் போன்றது' என்பார் அறிஞர் அண்ணா. அவருடைய இந்த வரி நாவலர் நெடுஞ்செழியனுக்கு பிறகு ஓ. பன்னீர்செல்வத்திற்குத்தான் சரியாகப் பொருந்தி போகிறதோ என்று தோன்றுகிறது. தோளில் கிடக்கிற துண்டைத் தொடர்ந்து நழுவ விடுவதற்கு நிர்பந்திக்கப்பட்டவர் ஒ.பன்னீர்செல்வம். 2001 - ல் இருந்து தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் போடி நாயக்கனுர் தொகுதிகளில் வெற்றிப் பெற்று சட்டமன்றத்திற்கு வந்தவர். பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, நிதித் துறை ஆகிய துறைகளின் அமைச்சராகவும் இருந்துள்ளார்.

டான்சி வழக்கு தந்த முதல்வர் பதவி

ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவர் ஒ. பன்னீர்செல்வம் என்று சொல்வார்கள். 2001 - ல் அமைச்சராக பதவி ஏற்றபோது ஒ.பன்னீர்செல்வம் மானியக் கோரிக்கையைச் சரியாக படிக்காத காரணத்தால் அவையில் இருந்தவர்கள் நகைத்தாகவும் அரசியல் ஆர்வலர்கள் சொல்வார்கள். அதே ஆண்டு டான்சி வழக்கு காரணமாக முதல்வர் பதவியை, ஜெயலலிதா தொடர முடியாத நிலை ஏற்பட்டபோது முதலமைச்சராக பதவி ஏற்றார் ஒ .பன்னீர்செல்வம். 2002 வரை முதல்வராக பதவி வகித்து வந்த ஒ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் வார்த்தையைத் தட்டாமல் கடைமை ஆற்றினார். பின்னர், டான்சி வழக்கில் இருந்து ஜெயலலிதா நீக்கப்பட்டதும் மீண்டும் முதல்வர் பதவி வேண்டும் என்றார். அப்படியே சிரித்துக் கொண்டே பொறுப்பை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கு தந்த முதல்வர் பதவி

இதனைத் தொடர்ந்து 1991 - 96 ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 2014 - ல் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவித்தது. அதன் காரணமாக மீண்டும் பதவியில் இருந்து இறங்கினார். சிறையில் இருந்த ஜெயலலிதா, பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியை ஏற்குமாறு கூறினார். ஜெயலலிதாவின் உத்தரவின்படியே ஒ.பன்னீர்செல்வமும் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார். பின்னர் 2015 - ஜெயலலிதா சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்தார். குமாராசாமியின் இந்தத் தீர்ப்பு குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் வெளியில் வந்த ஜெயலலிதா மீண்டும் முதல்வர் 'பதவியைக் கொடு' என்றதும் சிரித்துக் கொண்டே பதவியைக் கொடுத்தார். இந்த நிலையில் (2016 மே மாதம் ) கடந்த ஆண்டு தமிழநாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.

கண்ணீரில் வந்த முதல்வர் பதவி

அ.தி.மு.க இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் கடந்த செப்டம்பர் 22 - ம் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நலமாக இருக்கிறார் என்று மருத்துவமனை அறிக்கைகள் சொல்லின. 70 நாட்கள் சிகிச்சைப்பெற்று வந்தவருக்கு தீடீரென ஏற்பட்ட மாரடைப்பால் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்து விட்டார் என்ற அறிவிப்பை வெளியிட்டனர்.ஜெயலலிதாவின் மரணம் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மரண அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களில் முதலமைச்சராக ஒ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். அவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இந்த நிலையில் ஜெயலலிதா அறிமுகபடுத்தியவர் என்பதால் பன்னீர்செல்வத்தை முதல்வராக தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டனர். முதலமைச்சராக ஒ. பன்னீர் செல்வம் இருந்தாலும் அ.தி.மு.க-வின் அசைக்க முடியாத சக்தியாக சசிகலா நடராஜன்தான் செயல்பட்டு வருகிறார் சொல்லபட்டது.

அதனை உறுதிபடுத்தும் விதமாக கடந்த டிசம்பர் 31 - ம் தேதி அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலா நடராஜன் பதவி ஏற்று காண்பித்தார். இந்த நிலையில் சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கான காய்களை நகர்த்தி வருகிறார் என்று தகவல் வெளியானது. இது குறித்து செய்தியாளர்கள் ஒ.பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது சிரிப்பையே பதிலாக தந்தார். அவருடைய இந்தச் சிரிப்புக்கு பின்னால் மறைந்த உண்மை இதுதான் என்று தற்போது உறுதியாகிட்டது. அதேபோன்று முதல்வர் பதவிக்கான காய்களை சசிகலா நகர்த்தியது உண்மையாகி விட்டது.

ராயப்பேட்டையில் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் (5.2.2017 ) ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற அ.தி.மு.க.,வின் எம். எல். ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக சசிகலா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஒ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தின் முதல்வராக சசிகலா - நடராஜன் பதவி ஏற்பது உறுதியாகி விட்டது. பதவியை இப்போதும் சிரித்துக் கொண்டே விட்டுகொடுத்துள்ளார் ஒ.பன்னீர்செல்வம். ஆனால், இந்தச் சிரிப்புக்கு பின்னால் உள்ள அர்த்தம்தான் என்ன என்பது புரியவில்லை. ஜெயலலிதாவுக்காக விட்டுக்கொடுத்த சிரிப்புக்கும் சசிகலாவுக்காக விட்டுக்கொடுக்கும் சிரிப்பும் நிச்சயம் வித்தியாசம் இருக்கக்கூடும்.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்


- கே.புவனேஸ்வரி

முதல்வர் பதவிக்காக ஏன் அவசரப்பட்டார் சசிகலா?!' - ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா பின்னணி  #VikatanExclusive


தமிழ்நாட்டின் மூன்றாவது பெண் முதல்வராக பதவியேற்க இருக்கிறார் சசிகலா. 'எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்றத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட அதேநேரத்தில், உறவுகளின் அழுத்தம் தாங்க முடியாமல் அப்போலோ மருத்துவமனையின் எல் வார்டில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் ம.நடராசன். மன்னார்குடி உறவுகளின் ஆட்டமும் தொடங்கிவிட்டது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து 60 நாட்கள் நிறைவடைவதற்குள், தமிழக முதல்வர் நாற்காலியை எட்டிப் பிடித்துவிட்டார் சசிகலா. 'தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுகிறேன்' என ஆளுநருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். எண்ணூர் அருகே கடலில் கலந்துள்ள கச்சா எண்ணெய்யால் ஏற்பட்டுள்ள சீரழிவுகளை ஆய்வு செய்வதற்காக நேற்று காலை சென்றிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். அந்தநேரத்தில், 'கார்டனுக்கு வாருங்கள்' என அழைப்பு வந்தது. முன்பே தயாரிக்கப்பட்டு வைத்திருந்த ராஜினாமா கடிதத்தில் அவரைக் கையெழுத்துப் போட வைத்துள்ளனர். மதியம் 1.30 மணியளவில் கையெழுத்திட்டார் ஓ.பி.எஸ். அவரிடம் பேசிய சசிகலா, 'உங்கள் மரியாதை காக்கப்படும். எந்தவித தயக்கமும் உங்களுக்குத் தேவையில்லை' எனக் கூறியிருக்கிறார். கார்டன் முடிவை அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டனர். மாலை எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, நான்கு கையெழுத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன. 'அப்போலோவில் ஜெயலலிதா இறந்த அன்று, கையெழுத்து வாங்கினார்கள். இப்போதும் நான்கு இடங்களில் கையெழுத்து போடச் சொன்னார்கள். போட்டோம்' என உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர் சில எம்.எல்.ஏக்கள். கூட்டத்தில், 'என்னை முதல்வராக பதவியேற்குமாறு தொண்டர்கள் வலியுறுத்தி வந்தனர். சகோதரர் பன்னீர்செல்வமும் வலியுறுத்தினார்' என விளக்கம் அளித்தார் சசிகலா. கடந்த 27-ம் தேதி நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், பன்னீர்செல்வத்தை கூட்டத்தோடு கூட்டமாக அமர வைத்தார் சசிகலா. நேற்று மேடையில் அமர்ந்திருந்தார் ஓ.பி.எஸ். அவர் வழக்கம் போல அமைதியாக இருக்க, எடப்பாடி பழனிச்சாமிதான் பூரிப்பில் இருந்தார்" என விளக்கிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்,

"நீலாங்கரையில் உள்ள சசிகலா உறவினர் வீட்டில்தான் அனைத்து ஆலோசனைகளும் நடைபெற்றன. 'பிப்ரவரி 8-ம் தேதி மாலையில் இருந்து தைப்பூச தினமான 9-ம் தேதிக்குள் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும். இந்தமுறை தவறவிட்டால், உங்கள் ஜாதகப்படி, அடுத்த 6 மாதங்களுக்கு நல்ல தேதிகள் இல்லை' என கார்டன் ஜோதிடர்கள் கணித்துக் கொடுத்துள்ளனர். 'சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறதே' என சிலர் எடுத்துச் சொல்லவும், சசிகலாவிடம் பேசிய மன்னார்குடி உறவுகள், 'ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரம் அடைந்ததால், முதல்வர் பதவி குறித்து சிந்திக்க முடியவில்லை. நாளுக்கு நாள் பன்னீர்செல்வம் செல்வாக்கு கூடிக் கொண்டே போகிறது. குடியரசு தினவிழாவில் குடும்பத்துடன் பங்கேற்கிறார். 'சட்டசபையில் ஜெயலலிதா அமர்ந்த நாற்காலியில் அமர மாட்டேன்' என்றவர், தற்போது அவருடைய நாற்காலியில் உட்கார்ந்துவிட்டார். பா.ஜ.க தலைவர்கள் கொடுக்கும் தைரியத்தில்தான் இப்படிச் செயல்படுகிறார். இது தொடர்ந்தால், கட்சியின் கட்டுப்பாடும் நமது கையைவிட்டுப் போய்விடும்.

உளவுத்துறையை அறிக்கையை கவனமாகப் பாருங்கள். 'கட்சியிலும் ஆட்சியிலும் நமக்கு இடைவெளி அதிகமாக இருப்பதாக' சுட்டிக் காட்டியுள்ளது. நடப்பது அ.தி.மு.க ஆட்சியா... பா.ஜ.க ஆட்சியா என்ற சந்தேகத்தை அரசியல் கட்சித் தலைவர்களே எழுப்புகின்றனர். மத்திய அரசை எதிர்த்துப் பேசினாலும், 'கட்சியைப் பற்றிப் பேச இவர்கள் யார்?' என சிலர் கிளம்புகின்றனர். இனியும் நாம் காத்திருக்க வேண்டாம்' என விளக்கிய பிறகே, பதவி ஏற்பு வைபவத்திற்கு சம்மதித்தார் சசிகலா. சட்டமன்றத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட தகவல், ஊட்டியில் இருந்த ஆளுநர் வித்யாசாகர் ராவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், டெல்லியில் இருந்தும் அவருக்கு அவசர அழைப்பு வந்துள்ளது. ஜனநாயகரீதியாக எம்.எல்.ஏக்கள் ஒன்று சேர்ந்து புதிய முதல்வரை தேர்வு செய்துள்ளனர். இதற்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்" என்றார் விரிவாக.



"அமைச்சரவை மாற்றத்தை கட்சியின் சீனியர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். யாருக்கு எந்தப் பதவி என்பது குறித்த விவாதம்தான் தலைதூக்கியுள்ளது. மீண்டும் அவை முன்னவராகவும் நிதியமைச்சராகவும் பன்னீர்செல்வம் தொடர்வதற்கு வாய்ப்பு அதிகம். முதலமைச்சரிடம் உள்ள துறைகளில், காவல்துறையை தவிர்த்து வேறு சில துறைகளை ஓ.பி.எஸ் பக்கம் ஒதுக்குவது குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருகிறார் சசிகலா. நேற்று எம்.எல்.ஏக்கள் கூட்டம் முடிந்த பிறகு, 'நாங்கள் சொல்லும் நபருக்குத்தான், அமைச்சர் பதவி' என மன்னார்குடி உறவுகள் கூடுதல் அழுத்தம் கொடுத்துள்ளனர். கூடவே, திவாகரனுக்கும் தினகரனுக்கும் இடையில் நிலவிவந்த பனிப்போர் உச்சகட்டமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. இதில் இருந்து தப்பிப்பதற்காக, ரத்தக் கொதிப்பு எனக் கூறிவிட்டு அப்போலோவில் வி.ஐ.பிக்கள் சிகிச்சை எடுக்கும் எல் வார்டில் அனுமதிக்கப்பட்டார் நடராசன். அவரது இந்தச் செய்கையால், உறவுகளுக்கு கூடுதல் ரத்தக் கொதிப்பு ஏற்பட்டுள்ளது.

நடராசன் ஆதரவாளர்களோ, 'நாம் எதிர்த்து அரசியல் செய்தால், ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைக்க முடியும். பயந்து பின்வாங்கிக் கொண்டிருந்தால் எதையும் சாதிக்க முடியாது. பா.ஜ.கவை எதிர்த்தால்தான் அ.தி.மு.க வளரும்' எனப் பேசி வருகின்றனர். ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்கள் கிளைவிடுவதால், அப்போலோ பிரதாப் ரெட்டியையும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்டையும் பிரஸ் மீட் வைத்து விளக்குமாறு கூறியுள்ளார் சசிகலா. இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து ஜெயலலிதா சிகிச்சை குறித்து விளக்குகிறார் பிரதாப் ரெட்டி. அதிகாரத்தில் அமரும்போது, 'மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெறும் வகையில் செயல்பட வேண்டும்' என விரும்புகிறார். ஆனால், ஆட்சியை சமாளிப்பதைவிடவும் உறவுகளை சமாளிப்பதுதான் சசிகலா முன்நிற்கும் பெரும் சவாலாக இருக்கிறது" என்கிறார் கார்டன் உதவியாளர் ஒருவர்.

புதிய அமைச்சரவைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது போயஸ் கார்டன். சுபயோக சுப தினத்தில் கோட்டையை நோக்கிப் பயணமாக இருக்கிறார் சசிகலா. அதற்குள், 'சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வாரத்திற்குள் தீர்ப்பு' என அதிர வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். 'பொதுச் செயலாளருக்கு எதிராக தீர்ப்பு வந்தாலும், இன்னொரு முறை தற்காலிக முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்தை அமர வைக்க மாட்டார் சசிகலா' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில்.

-ஆ.விஜயானந்த்

Saturday, February 4, 2017

Photo published for Dear Chennai, the oil spill from Ennore even reached Marina lighthouse

#ChennaiOilSpill

குளத்தில் இறங்கி கருவேல மரங்களை வெட்டி அகற்றினார் வைகோ!



நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டி அருகே கருவேல மரங்களை வெட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அகற்றினார்.

சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது.

இந்நிலையில், வைகோ இன்று கருவேல மரங்களை அகற்றும் நடவடிக்கையில் இறங்கினார். நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டி அருகே மேலமரத்தோணி பெரியகுளத்தில் கிராம மக்களுடன் சேர்ந்து கருவேல மரங்களை வெட்டி வைகோ அகற்றினார்.

பணிந்தது தமிழக அரசு'!ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்ற அதிகாரிகள்


யார் பாடம் கற்றுக்கொண்டு இருக்கிறார்களோ இல்லையே தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை கற்றுக்கொண்டுள்ளது என்கிறார்கள் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள்.

நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட ஆசிரியர்கள் முடிவு செய்தி இருந்தனர்.இதற்காக மாநில அளவில் இருந்து 10 ஆயிரம் ஆசிரியர்கள் திரண்டு வந்திருந்தனர்.அவர்களை செங்கல்பட்டு,கிழக்குக் கடற்கரை சாலை ,பூந்தமல்லி என்று சென்னைக்கு வெளியே மடக்கி தமிழகக் காவல்துறை கைது செய்தனர்.ஆனாலும் திட்டமிட்டப்படி சுமார் 4,000 பேர் தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதனால் அரண்டு போன காவல்துறை அதிகாரிகள் உடனடியாகப் பள்ளிக்கல்வித்துறை செயலருக்குத் தகவல் தெரிவித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.போராட்டம் நடத்திய ஒரு மணி நேரத்தில் பேச்சுவார்த்தைக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இறங்கி வந்தது இன்றுதான் என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தினர் ஆச்சரியத்தோடு.



இது தொடர்பாக,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ச.மோசஸிடம் பேசினோம்.அவர் கூறுகையில்,"எங்களின் கோரிக்கைகளை நேரில் அழைத்துக் கேட்டு நிறைவேற்றுவதாக உறுதியளித்த பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.எங்களின் 15 அம்ச கோரிக்கைகளில்,4 அடிப்படைக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற அரசு உறுதியளித்துள்ளது.அதன்படி,புதிய பென்சன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை விரைந்து பெறப்பட்டு அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பை 8வது ஊதியக்குழு பரிந்துரையில் ஈடுசெய்யப்படும், அரசாணைக்கு முரணாக தொடக்க கல்வித்துறை இயக்குநர் பிறப்பித்த 5 ஆணைகள் திரும்ப பெறப்படும்.

ஊராட்சிகளைத் தவிர்த்த மற்றப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சுகாதார அலுவலர்களை நியமிக்க உத்தரவுகள் விரைவில் வெளியிடப்படும்.உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலக காலிப்பணியிடங்கள் ஓரிரு நாட்களில் நிரப்பப்படும்,காலிப்பணியிடங்கள் நிரப்ப அடுத்தவாரம் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என்று உறுதியாகத் தெரிகிறது.

இது எங்களுக்கு,எங்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.அதில் மகிழ்ச்சியே.ஆனால் இந்த நிலையை எட்ட நாங்கள் பெரிய பெரிய போராட்டங்களையெல்லாம் நடத்தவேண்டி இருந்தது.10 ஆயிரம் பேரைத் திரட்டி சென்னையில் தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிடுகிறோம் என்று அறிவித்தாலும் அறிவித்தோம்.அதில் இருந்து எங்களை போலீசார் துருவித்துருவி விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர்.போராட்ட நாளான இன்று காலையிலேயே என்னை சென்னை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்துக்கொண்டனர்.எங்கள் சங்கத்தின் மற்ற நபர்களோடு எனக்கு தொடர்பு எதுவும் இல்லாமலும் போலீசார் செய்துவிட்டனர்.



உங்களின் கோரிக்கைகள் என்ன சார்,சொல்லுங்க நாங்க பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளோடு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்கிறோம் என்றும் அவர்கள் கூறினார்கள்.எனக்கு இருந்த போன் தொடர்பையும் நீங்க பறித்துக்கொண்டீர்கள்.அப்புறம் எப்படி நான் போராட வருபவர்களை நிறுத்த முடியும் என்றேன்.உடனே அவர்கள் செய்த ஏற்பாட்டின்படி வேறு ஒரு போன் கிடைத்தது.அதில் மற்றவர்களை தொடர்பு கொண்டு பேசுவதற்குள் காலை மணி 11 ஆகிவிட்டது.அதற்குள் சுமார் இரண்டாயிரம் பேர் டி.பி.ஐ. அலுவலகத்தை முற்றுகையிடத் தொடங்கிவிட்டனர்.இன்னும் 8 ஆயிரம் பேர் செங்கல்பட்டு வழியாகவும்,கிழக்குக் கடற்கரை சாலை வழியாகவும்,பூந்தமல்லி வழியாகவும் வந்து கொண்டு இருக்கிறார்கள் என்ற தகவலும் கிடைத்தது.கூட்டம் பெருகினால் பிரச்னை பெரிதாகும் என்று கருதிய போலீசார் உடனடியாக என்னையும் எங்கள் சங்கத்தின் முதன்மைப் பிரதிநிதிகளையும் அழைத்துக்கொண்டு தலைமைச் செயலகம் சென்றனர்.

அங்கு,பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அறையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, முதன்மைச் செயலாளர் டி.சபீதா, தொடக்கக்கல்வி இயக்குநர் இளங்கோவன், இணை இயக்குநர் சசிகலா ஆகியோர் இருந்தனர்.எங்களின் கோரிக்கைகளை அவர்கள் கேட்டனர்.முதலில் அவர்கள் மிகக் கடுமையாகப் பேசினர்.பின்னர் எங்களின் சிக்கல்களை புரிந்துகொண்டு இறங்கி வந்தனர்.அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர்" என்று விவரித்தார் பரபரப்பாக.


- சி.தேவராஜன்

NEWS TODAY 24.08.2026