Tuesday, December 12, 2017

தேர்தல் பிரசாரமா : மறுக்கும் நடிகர் கவுண்டமணி

Added : டிச 12, 2017 00:09

சென்னை: 'நான் எந்த கட்சியிலும் இல்லை; எந்த கட்சியையும் ஆதரித்து பிரசாரம் செய்யவில்லை' என, நடிகர் கவுண்டமணி விளக்கம் அளித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல், டிச., 21ல், நடக்கிறது. அ.தி.மு.க., வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க., வேட்பாளர் மருதகணேசிற்கு ஆதரவாக, அக்கட்சிகளை சேர்ந்த நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் நடிகர், நடிகையர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். நட்சத்திர பட்டாளங்கள் ஆதரவு திரட்டினால், வாக்காளர்களை எளிதாக கவர முடியும் என, அரசியல் கட்சிகள் கணக்கு போட்டு, இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, டிச., 14ல், காமெடி நடிகர் கவுண்டமணி, பிரசாரம் மேற்கொள்வார் என்ற தகவல் பரவியது. இது தொடர்பாக, நமது நாளிதழில், நேற்று செய்தி வெளியாகி இருந்தது.

இது தொடர்பாக, நடிகர் கவுண்டமணி நேற்று, வெளியிட்ட அறிக்கை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஒரு கட்சிக்கு ஆதரவாக நான் பிரசாரம் செய்யப்போவதாக, செய்தி வந்துள்ளது; அது, உண்மைஅல்ல. நான் எந்தக் கட்சியையும் சாராதவன்; அரசியலிலும் இல்லாதவன். நான் எந்தக் கட்சியையும் ஆதரித்து பிரசாரம் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெற்றோரை கைவிடும் ஊழியர்களுக்கு அபராதம்

Added : டிச 12, 2017 00:47

போபால்: பெற்றோரை பராமரிக்காத அரசு அதிகாரிகள், ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து, பெற்றோரின் கணக்கில் செலுத்த, மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.மத்திய பிரதேசத்தில், முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், தங்கள் பெற்றோரை பராமரிக்காமல், தனியே தவிக்கவிடுவது அதிகரித்து வருகிறது.


இதையடுத்து, மாநில அரசு, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்தது; அதில் கூறப்பட்டுள்ள தாவது:பெற்றோரை பராமரிக்காமல் கைவிடும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். அந்த தொகையை, அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து, பெற்றோரின் வங்கிக் கணக்கிற்கு செலுத்த வேண்டும்.
ஒரு பெற்றோரின் நான்கு பிள்ளைகள் அரசு பணியில் இருந்தால், ஒவ்வொருவரிடமும், தலா, 2,000 ரூபாய் வீதம் வசூலித்து, பெற்றோரின் அடிப்படை தேவைகளுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அசாம் மாநிலத்தில், 'பெற்றோர் பொறுப்பு மற்றும் கண்காணிப்பு மசோதா' ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.அதன்படி, வயதான பெற்றோர் மற்றும் உடல் ஊனமுற்ற சகோதர,சகோதரியரை பராமரிக்காத ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து, 10 சதவீதம் பிடித்தம் செய்யவும், அந்த தொகையை, பெற்றோரின் வங்கிக் கணக்கில் செலுத்தவும் வகை செய்யப்பட்டுஉள்ளது.
கல்லூரி மாணவர்கள் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

Added : டிச 12, 2017 00:13



சென்னை: சென்னையை சேர்ந்த பல்வேறு கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், 4,000 பேர் நேற்று, அ.தி.மு.க.,வில் இணைந்தனர். சென்னை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி ஆகியோர் முன்னிலையில், இணைப்பு நிகழ்ச்சி நடந்தது. இளைஞர் அணி முன்னாள் செயலர், ஆதி ராஜாராம் ஏற்பாட்டில், கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், கட்சியில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சியில், பன்னீர் செல்வம் பேசியதாவது: உங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. தமிழகத்தின் முன்னேற்றம், உங்கள் கையில் உள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், மாணவர்களின் பங்கு தான் முக்கியமாக இருந்தது. அதன் காரணமாக, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, 50 ஆண்டுகளாக, காங்கிரசால் ஆட்சிக்கு வர முடியாத நிலையை உருவாக்கியது. உங்கள் சக்தி, அ.தி.மு.க., வளர்ச்சிக்கு வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இணை ஒருங்கிணைப்பாளர், பழனிசாமி பேசியதாவது: நாங்கள் எல்லாம், கல்லுாரியில் படிக்கும்போதே, அ.தி.மு.க.,வில் இணைந்தோம். பல ஆண்டுகள் உழைத்து, இந்த நிலைக்கு வந்துள்ளோம். உழைப்புக்கும், விசுவாசத்திற்கும், பதவி கிடைக்கக் கூடிய, ஒரே இயக்கம் இது. வேறு எந்த கட்சியிலும், இது கிடைக்காது. மற்ற கட்சிகளில், வாரிசு அடிப்படையில் தான், பதவி கிடைக்கும். தொழில் அதிபர், மிட்டா மிராசுதாரர்கள் தான், அந்த கட்சிகளில் பதவிக்கு வர முடியும்.சாதாரண தொண்டனும், உயர்ந்த பதவிக்கு வரக்கூடிய கட்சி, அ.தி.மு.க., மட்டுமே. அ.தி.மு.க.,வில் இணைந்து உள்ளதால், உங்களுடைய வருங்காலம் பிரகாசமாக இருக்கும். கட்சிக்கு உழைத்து, விசுவாசமாக இருந்தால், நீங்கள் நினைக்கும் பதவி, உங்களை தேடி வரும்.
இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், துணை ஒருங்கிணைப்பாளர்கள், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
சவுதியில் 2018 முதல் சினிமாவுக்கு அனுமதி

Added : டிச 12, 2017 02:19 |



  ரியாத்: வளைகுடா நாடான, சவுதி அரேபியாவில், சினிமா திரையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. '2018 மார்ச் முதல், திரைப்படங்கள் ஒளிபரப்பாகும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

முஸ்லிம் நாடான, சவுதி அரேபியாவில், பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன; ஆண்களுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக, முகமது பின் சல்மான், 32, பதவியேற்ற பின், பல்வேறு சமூக சீர்த்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 2018 ஜூன் முதல், பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து, கலாசார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. சமீபத்தில், தேசிய தினத்தில், ஆண்களும், பெண்களும் இணைந்து பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், 35 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த, சினிமா ஒளிபரப்புக்கு, மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2018 மார்ச் முதல், படங்கள் திரையிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, முஸ்லிம் மதத் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
வங்கிகளில் பொதுமக்களின் பணத்தை முழுமையாக பாதுகாப்போம் மத்திய அரசு அறிவிப்பு



வங்கிகள் திவால் ஆகும் நிலைமை ஏற்பட்டாலும், பொதுமக்களின் பணத்தை முழுமையாக பாதுகாப்போம் என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

டிசம்பர் 12, 2017, 05:30 AM

புதுடெல்லி,

நிதி தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு (எப்.ஆர்.டி.ஐ.) என்ற புதிய மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம், பாராளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நிறைவேற்றப்படவில்லை. தற்போது, பாராளுமன்ற கூட்டுக்குழு இம்மசோதாவை ஆய்வு செய்து வருகிறது.

விரைவில் தொடங்க உள்ள பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதே சமயத்தில், இதில் உள்ள சில அம்சங்கள், பொதுமக்களின் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்துக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியவை என்று பொருளாதார நிபுணர்களும், எதிர்க்கட்சியினரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனங்கள், பங்குச்சந்தை நிறுவனங்கள் போன்றவை திவால் ஆகும் நிலைமை ஏற்படும்போது, அதை சரி செய்வதற்காகவே இந்த மசோதா கொண்டுவரப்படுகிறது.

இதற்காக, ‘தீர்வு கழகம்’ என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்படும். இது, வங்கிகளின் வாராக்கடன்களை குறைத்து எழுதி, வங்கிகள் திவால் ஆகாமல் தடுக்கும். தற்போது, ரூ.1 லட்சம் வரையிலான அனைத்து சேமிப்பு தொகையும் ‘சேமிப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத கழக சட்டம்‘ மூலம் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், இந்த புதிய மசோதா, மேற்கண்ட சட்டத்தை ரத்துசெய்ய வழிவகுக்கிறது.

இதனால், பொதுமக்களின் சேமிப்பு தொகைக்கு ஆபத்து நேருமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. வங்கிகள் திவால் ஆவதை தடுக்க, பொதுமக்களின் பணம் எடுத்து பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த விதிமுறையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று இதுபற்றி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:–

எப்.ஆர்.டி.ஐ. மசோதா குறித்து வதந்தி பரப்பப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளையும், நிதித்துறை நிறுவனங்களையும் பலப்படுத்த உறுதி பூண்டுள்ளதாக மத்திய அரசு ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது. வங்கிகளை பலப்படுத்துவதற்காகவே, வங்கிகளில் ரூ.2 லட்சத்து 11 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளோம்.

இது, வங்கிகளை பலப்படுத்துவதற்குத்தான். இதற்காக, வங்கிகள் திவால் ஆகும் நிலைமை ஏற்படும் என்று அர்த்தம் அல்ல.

ஒருவேளை, வங்கிகள் திவால் ஆகும் நிலைமை ஏற்பட்டாலும், வங்கிகளில் பொதுமக்கள் போட்டு வைத்துள்ள பணத்துக்கு மத்திய அரசு முழு பாதுகாப்பு அளிக்கும். அதில் மத்திய அரசு மிகத்தெளிவாக உள்ளது.

மேலும், இந்த மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு செய்து வருகிறது. அக்குழு என்ன சிபாரிசு செய்தாலும், அதை பரிசீலிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது.

இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

Monday, December 11, 2017

Award for diabetologist 

Special Correspondent 
 
Chennai, December 11, 2017 00:00 IST
 



Senior diabetologist V. Seshiah became first Indian to be honoured with the Lifetime Achievement Award at the International Diabetes Federation Congress in Abu Dhabi recently. The federation has members from 170 countries. Dr. Seshiah is the Pro-Chancellor of Maher University and founder of Dr. V. Seshiah and Dr.V. Balaji Diabetes Care Centre. He is a professor with Tamil Nadu Dr. MGR Medical University.
ஓய்வூதியர்களை அலைக்கழிக்காதீர்கள்... தமிழக அரசுக்கு வேண்டுகோள்

By தி. வேணுகோபால் | Published on : 11th December 2017 02:37 AM |



தமிழக அரசுப் பணிநிறைவுற்று ஓய்வூதியம் பெறுவோர், அவரவர் விருப்பப்படி, நேரடியாகப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்தோ அல்லது சென்னை நகரிலுள்ள ஓய்வூதிய அலுவலகம் (Pension Pay Office) அல்லது மாவட்டங்களிலுள்ள அரசுக் கருவூலம் வழியாகவோ தங்கள் ஓய்வூதியத்தைப் பெற்று வருகின்றனர். 

சென்னை ஓய்வூதிய அலுவலகம் அல்லது மாவட்டக் கருவூலம் வழியாக ஓய்வூதியம் பெறுவோரின் ஓய்வூதியமும், அவரவர்களின் வங்கிக் கணக்கில் உஇந முறையில் செலுத்தப்பட்டு, தேவைப்படும்போது பணம் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நேரடியாகப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து ஓய்வூதியம் பெறும்முறை கடந்த 1988-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் 30 ஆண்டுகளாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
மாதந்தோறும் பணிநிறைவு பெறும் அரசு ஊழியருள், நேரடியாகப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து ஓய்வூதியம் பெற விருப்பம் தெரிவிப்போரே அதிகமாகும். பொதுத்துறை வங்கிகளின் சேவையைப் பெறுவது எளிதானதாக இருப்பதே இதற்குக் காரணமாகும்.
ஆண்டிற்கொருமுறை ஓய்வூதியர்கள் தாங்கள் உயிரோடிருப்பதற்கான சான்றிதழைத் தாங்கள் ஓய்வூதியம் பெறும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். கருவூலம் அல்லது ஓய்வூதிய அலுவலகத்தில் இதனை ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களிலும், பொதுத்துறை வங்கியெனில் நவம்பர் மாதத்திலும் சமர்ப்பிக்க வேண்டும்.


ஒரு குறிப்பிட்ட வங்கிக் கிளையில் நேரடியாக ஓய்வூதியம் பெறும் ஒருவர் மிக எளிதாக இதனைச் சமர்ப்பித்துவிட முடியும். ஆனால் ஓய்வூதிய அலுவலகத்தில் அவர் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட வங்கிக்கிளையில் ஓய்வூதியம் நேரடியாகப் பெறுவோர் மிகச் சிலரே. ஆனால் ஓய்வூதிய அலுவலகத்தில் அதிக எண்ணிக்கையிலான ஓய்வூதியரிடையே அவர் சிரமப்பட வேண்டும்.


ஓய்வூதியம் தொடர்பான குறைகளைச் சம்பந்தப்பட்ட வங்கிக்கிளை மேலாளரிடம் தெரிவித்துத் தீர்வு காண்பது எளிது. ஆனால் ஓய்வூதிய அலுவலகத்தில் இதனை எதிர்பார்க்கவே இயலாது. அங்கும் இங்கும் அவர் அலைக்கழிக்கப்படுவது உறுதி.


கடந்த 2017 ஜூன் மாதத்தில் ஓர் ஓய்வூதியர் தன் உயிர்த்திருக்கும் சான்றை சமர்ப்பித்தபோது அச்சான்றிதழின் நகலில் அதனைப் பெற்றுக் கொண்டதற்கான ஏற்பறிப்பைத் தர அங்கிருந்த அரசு ஊழியர் மறுத்துவிட்டார்.


நிலைமை இவ்வாறிருக்க தற்போது அரசு, பொதுத்துறை வங்கிகளிடமிருந்து நேரடியாக ஓய்வூதியம் பெறும் முறையை ரத்து செய்து அனைவருமே ஓய்வூதிய அலுவலகம் அல்லது கருவூலம் மூலமாகவே ஓய்வூதியம் பெற வேண்டுமெனவும், இம்முறை இவ்வாண்டு இறுதிக்குள் அதாவது 31.12.2017-க்குள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் ஆணை வழங்கியுள்ளது. (அரசாணை எண்.268, நிதித் (ஓய்வூதியம்) துறை நாள் 18.09.2017).
இவ்வாணை ஓய்வூதியர்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இம்மாற்றத்திற்கான காரணங்களாக மேற்குறித்த அரசாணையில் கூறப்பட்டுள்ள குறைகள் பின்வருமாறு:


1. வங்கி ஊழியர்கள் ஓய்வூதிய விதிகள் குறித்து அறிந்திராததால், அவ்வப்போது அவர்கள் ஓய்வூதிய அலுவலகம் (அ) கருவூலகங்களிடம் விளக்கங்கள் கோருகின்றனர். ஓய்வூதிய ஆவணங்கள் வங்கிகளிடம் உள்ளதால் அவற்றைப் பெற்று விளக்கங்கள் வழங்குவது சிக்கலான நடைமுறையாக உள்ளது. 


2. ஓய்வூதியர் குடும்ப நலத் தொகைப் பிடித்தம் தொடர்பான விவரங்களை வங்கிகள் உரிய நேரத்தில் வழங்காததால், அவ்விவரங்களை ஓய்வூதிய இயக்குநருக்கு அனுப்புவதில் தாமதம் நேருகிறது. 


3. உயிரோடிருப்பதற்கான சான்று ஓய்வூதிய அலுவலகம் மற்றும் கருவூலகங்களால் ஏப்ரல் - ஜூன் மாதங்களிலும், பொதுத்துறை வங்கிகளால் நவம்பர் மாதத்திலும் பெறப்படுவதால் ஓய்வூதியரிடையே குழப்பம் ஏற்படுகிறது. 


4.மாதந்தோறும் ஓய்வூதியச் செலவினம் மற்றும் ஊதியக்குழு நிலுவைத் தொகை வழங்கல், கூடுதல் ஓய்வூதியச் செலவினம் ஆகியவற்றைப் பல்வேறு வங்கிகளிடமிருந்து பெறுவதில் சிரமம் நேருகிறது. அவ்வாறே ஓய்வூதிய மிகைப் பற்றுப் பிடித்தம் மற்றும் வழங்கப்படாத ஓய்வூதியம் குறித்த விவரங்களைப் பெறுவதில் சிரமங்கள் உள்ளன. 


5. ஓய்வூதியர் இறந்த பிறகும் அவருடைய கணக்கில் உள்ள வாங்கப்படாத ஓய்வூதியத் தொகை வங்கிக் கடனுக்குக் கழிக்கப்படுகிறது. இது தவறான நடைமுறையாகும். இறந்த பிறகு ஓய்வூதியரது கணக்கில் சேர்க்கப்படும் ஓய்வூதியத் தொகை அரசுக்குரியதாகும்.
மேற்கூறிய பிரச்னைகள் யாவும் நிர்வாகப் பிரச்னைகளாகும். அவை சில சிறு நடைமுறை மாற்றங்களின் மூலம் சரி செய்யப்படக் கூடியவையே. இனம் 5-இல் சொல்லப்பட்டுள்ள பிரச்னை ஓய்வூதிய அலுவலகம் அல்லது கருவூலம் மூலமாகப் பெறும் ஓய்வூதியர் இனத்திலும் நேரக்கூடியதே. ஓய்வூதியர் இறந்தது பற்றிய தகவல் கிடைக்குமுன் அவருடைய வங்கிக் கணக்கில் உஇந மூலமாகக் கருவூலம் செலுத்தும் தொகையும் வங்கியால் ஓய்வூதியரின் கடனுக்காக எடுத்துக் கொள்ளப்படுவது இயல்பான நடைமுறையே. எனவே அதற்காகப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து நேரடியாக ஓய்வூதியம் பெறும் முறையை மாற்றுவது தீர்வாகாது. 


முப்பதாண்டுக்கால நடைமுறையில் உள்ள இம்முறையை மாற்ற வேண்டுமென ஓய்வூதியர்களோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதியர் சங்கங்களோ கோரிக்கை ஏதும் முன்வைக்கவில்லை. இம்முறை தங்களுக்குச் சிரமங்கள் தருவதாக ஓய்வூதியர்கள் யாரும் கூக்குரல் எழுப்பவில்லை. மாறாக ஆண்டுதோறும் பொதுத் துறை வங்கிகளிடம் நேரடியாக ஓய்வூதியம் பெற விருப்பம் தெரிவிப்போர் எண்ணிக்கையே அதிகரித்துச் செல்கிறது.
மேலும் தற்போது அரசு ஆணை வழங்கியுள்ள நடைமுறை மாற்றத்தால் எழும் நிர்வாகப் பிரச்சினைகளை அரசு கருத்தில் கொள்ளவில்லை.


மேற்கூறிய அரசாணையிலேயே, தற்போது சுமார் 79,114 ஓய்வூதியர்கள் நேரடியாகப் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து ஓய்வூதியம் பெறுகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பணிச்சுமை முழுவதும் இப்போது ஓய்வூதிய அலுவலகத்திற்கும் கருவூலங்களுக்கும் மாற்றப்படுகிறது. இப்பணியை மேற்கொள்ள அங்குப் பணியாளர்கள் உள்ளனரா அல்லது கூடுதல் பணியாளர்கள் வழங்கப்படுமா என்பதை அரசு பரிசீலிக்கவில்லை. பொதுத்துறை வங்கிகள் ஆட்சேபம் ஏதும் தெரிவிக்காத சூழ்நிலையில் அரசு ஏன் இப்பணிச் சுமையை ஏற்கத் துடிக்கிறது என்பது தெரியவில்லை.


அரசாணையில் கூறப்பட்டுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதும், நடைமுறையை மாற்றுமுன் ஓய்வூதியர்களின் விருப்பத்தை அறிவதும் அரசின் கடமையாகும். ஓய்வூதியர்கள் விரும்பாத நிலையில் இந்நடைமுறை மாற்றம் அவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துவதோடு அவர்களையும் மூத்த குடிமக்களையும் போராட வீதிக்கு அழைத்து வரும் என்பதை அரசு கருத்தில் கொள்ளவேண்டும்.

பணி ஓய்வு பெற்ற நிர்வாக அலுவலர் (காவல்துறை).

NEWS TODAY 27.01.2026