Wednesday, December 13, 2017

தாய், குழந்தை மரணம் : டாக்டர் ஆஜராக உத்தரவு

Added : டிச 13, 2017 04:34

மதுரை: ஸ்ரீவில்லிப்புத்துார் அரசு மருத்துவமனையில் தாய் மற்றும் அவரது வயிற்றிலிருந்த குழந்தை இறந்ததற்கு, 50லட்சம் ரூபாய் இழப்பீடு கோரிய வழக்கில், சம்பந்தப்பட்ட டாக்டர் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்துார் ராஜா தாக்கல் செய்த மனு:எனது மனைவி மரியலில்லி பவுலின். எங்களுக்கு 2 மகன்கள் பிறந்தனர். 2011 ல் மீண்டும் மனைவிகர்ப்பமுற்றார். 2011 செப்.,23 ல் ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு பணிபுரிந்த ஒரு டாக்டரை அழைக்க, செப்.,26 இரவு அவரது வீட்டிற்குசென்றேன். அங்கு அவர் தனியாக மருத்துவமனை நடத்தி வந்தார். எனது மனைவியை காப்பாற்ற உதவுமாறுகெஞ்சினேன். அவர், 'மனைவி, குழந்தை நன்றாக உள்ளது,' என்றார். பின் மனைவி மற்றும் அவரதுவயிற்றிலிருந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறினர். இச்சம்பவத்திற்கு காரணமான சம்பந்தப்பட்ட டாக்டர் மற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், 50 லட்சம் ரூபாய்இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ராஜா மனு செய்திருந்தார்.


நீதிபதி ஆர்.மகாதேவன்,'' சம்பந்தப்பட்ட டாக்டர் டிச.,21 ல் ஆஜராக வேண்டும்,'' என உத்தரவிட்டார்.

மருத்துவ கல்வி இயக்குனர் நியமனம் ரத்து : பணிமூப்பின் படி பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

Added : டிச 13, 2017 00:58

மதுரை: மருத்துவக் கல்வி இயக்குனராக, எட்வின் ஜோவை நியமித்த, தமிழக அரசின் உத்தரவு மற்றும் அவருக்கு பதில், ரேவதியை நியமிக்கும் தனி நீதிபதியின் உத்தரவை, உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. 'தகுதி, திறமை, பணிமூப்பு அடிப்படையில் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

கோவை அரசு மருத்துவக் கல்லுாரி டீனாக இருந்த, எட்வின் ஜோவை, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்து, ஏப்., 25ல், தமிழக சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டது.
இதை எதிர்த்து, மதுரை, தபால் தந்தி நகர், ரேவதி, 'கரூர் மருத்துவக் கல்லுாரி டீனாக உள்ளேன்; பணிமூப்பு அடிப்படையில், மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க தகுதிகள் உள்ளன.
'எட்வின் ஜோவிற்கு தகுதிகள் இல்லை; அவரது நியமனத்தில் விதிமறல் உள்ளது. நியமன அரசாணையை ரத்து செய்ய வேண்டும். எனக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மனு செய்தார்.
இதை விசாரித்த தனி நீதிபதி, 'எட்வின் ஜோவை, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்த அரசாணையை ரத்து செய்கிறேன். 


'மனுதாரருக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும்' என, செப்., 20ல் உத்தரவிட்டார். 


இதை எதிர்த்து, சுகாதாரத் துறை முதன்மை செயலர் மற்றும் எட்வின் ஜோ மேல்முறையீடு செய்தனர்.


நீதிபதிகள், எம்.வேணுகோபால், அப்துல் குத்துாஸ் அமர்வு விசாரித்தது. இதற்கிடையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரி டீன், மீனாட்சிசுந்தரம், 'மருத்துவக் கல்லுாரி இயக்குனர் பதவி உயர்வில், என் பெயரையும் பரிசீலிக்க வேண்டும்.
'என்னையும், ஒரு எதிர் மனுதாரராக இணைத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும்' என, மனு செய்தார்.


நீதிபதிகள் உத்தரவு:


அரசின் நிர்வாக ரீதியான முடிவுகளில் தலையிட்டு, ஒருவருக்கு பதவி உயர்வு அளிப்பது தொடர்பாக, நீதிமன்றம் நேரடியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. எட்வின் ஜோவை, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமித்த அரசாணையை ரத்து செய்கிறோம்.
ரேவதிக்கு பதவி உயர்வு அளித்து, மருத்துவக் கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும் என்ற, தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்கிறோம்.


எட்வின் ஜோ, ரேவதி, மீனாட்சிசுந்தரம் ஆகியோரின் தகுதி, திறமை, பணிமூப்பு அடிப்படையில், சட்டத்திற்கு உட்பட்டு, மறு பரிசீலனை செய்து, சுகாதாரத் துறை முதன்மை செயலர், ஆறு வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்; வழக்கை பைசல் செய்கிறோம்.
இவ்வாறு உத்தரவில் கூறினர்.
சபரிமலை வரும் பெண்கள் பம்பையில் விரட்டி பிடிப்பு

Added : டிச 13, 2017 00:45

சபரிமலை: சபரிமலைக்கு கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகளவில் வந்த, 10 - 50 வயதுடைய
பெண்களை, பம்பையில் போலீசார் தடுத்து வருகின்றனர். போலீசாருக்கு, 'டிமிக்கி' கொடுத்து ஓடும் பெண்களை, பம்பையில், போலீசார் விரட்டி பிடிக்கின்றனர்.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள், சன்னி தானம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, உழைக்கும் பெண்கள் அமைப்பு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில், இன்னும் தீர்ப்பு வரவில்லை.


இதற்கிடையில், சமூக வலைதளங்களில், பெண்கள், சபரிமலைக்கு செல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதித்துள்ளதாக, தகவல் பரப்பப்பட்டு வருகிறது; இதை தேவசம் போர்டு மறுத்து வருகிறது. ஆனாலும், இந்த சீசனில் அதிகமான பெண்கள் வருவதாக,
பம்பையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் போலீசார் தெரிவித்தனர்.
இப்படி வரும் பெண்களை கண்காணிக்க, பம்பை கணபதி கோவிலின் கீழ் பகுதியில்,
தேவசம் போர்டு பெண் ஊழியர்கள் மற்றும் பெண் போலீசார் நியமிக்கப்
பட்டுள்ளனர். இந்த சீசனில் இதுவரை, 1,000 பெண்கள் வந்துள்ளதாகவும், அதில் பெரும்பகுதியினர், ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.பம்பைக்கு, தங்கள் உறவினர்களுடன் வரும் பெண்கள், போலீசாரின் கையை தட்டி விட்டு, சன்னிதானம் நோக்கி ஓடுகின்றனர். இவர்களை, பெண் போலீசார் விரட்டி பிடிக்கின்றனர். இவ்வாறு தடுக்கப்படும் பெண்கள், தேவசம்போர்டு பெண் ஊழியர்கள் பாதுகாப்பில் பம்பையில்தங்கவும், உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீட்' தேர்வு வினாத்தாள் : சி.பி.எஸ்.இ., திட்டவட்டம்

Added : டிச 13, 2017 01:40

புதுடில்லி: 'அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும், 'நீட்' தேர்வுக்கு ஒரே மாதிரி வினாத்தாள் வழங்கப்படும்' என, மத்திய கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும், மருத்துவக் கல்வி சேர்க்கைக்காக, 'நீட்' எனப்படும், தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை, மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த தேர்வை, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. கடந்த ஆண்டு, ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன; இதனால், பெரும் சர்ச்சைகள் எழுந்தன.


இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்த போது, சி.பி.எஸ்.இ., சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:
'நீட்' தேர்வை, ஹிந்தி மற்றும் ஆங்கில வழியில் தான், பெரும்பாலோர் எழுதுகின்றனர். மாநில மொழிகளில், குறைவானவர்கள் தான் எழுதுகின்றனர். அதனால் தான், சில பிரச்னைகள் ஏற்பட்டன. இதை தவிர்க்க, அடுத்த ஆண்டு முதல், 'நீட்' தேர்வுக்கு, நாடு முழுவதும், ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மலேஷியா, சிங்கப்பூருக்கு விமான சுற்றுலா

Added : டிச 13, 2017 00:25

சென்னை: இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., மலேஷியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கு, விமான சுற்றுலாவை அறிவித்துள்ளது.

* மலேஷியா மற்றும் சிங்கப்பூருக்கு, ஏழு நாட்கள் சுற்றுலா, 24ல், திருச்சி; 25ல், சென்னையில் இருந்து, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான கட்டணம், ஒருவருக்கு, திருச்சியில் இருந்து, 63 ஆயிரம் ரூபாய், சென்னையில் இருந்து, 62 ஆயிரம் ரூபாய்


* இலங்கைக்கு, ஆறு நாட்கள் சுற்றுலா, சென்னை மற்றும் மதுரையில் இருந்து, ஜன., 23ல், தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம், ஒருவருக்கு, மதுரையில் இருந்து, 39 ஆயிரத்து, 200 ரூபாய், சென்னையில், இருந்து, 41 ஆயிரம் ரூபாய்


* மேலும் விபரங்களுக்கு, சென்னை, ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40682; மதுரை அலுவலகத்தை, 98409 02915 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு: 6 பேருக்கு தூக்கு தண்டனை



உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு திருப்பூர் கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது.

டிசம்பர் 13, 2017, 05:45 AM
திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 22). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் திண்டுக்கல் மாவட்டம் பழனி திருநகரை சேர்ந்த சின்னசாமியின் மகள் கவுசல்யா(20) என்பவர் 2-ம் ஆண்டு படித்தார்.
ஒரே பஸ்சில் கல்லூரிக்கு சென்றபோது சங்கருக்கும், கவுசல்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுடைய காதலுக்கு கவுசல்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 12-7-2015 அன்று சங்கரும், கவுசல்யாவும் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு கவுசல்யா கல்லூரிக்கு செல்லாமல் தனது கணவர் வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி சங்கரும், கவுசல்யாவும் உடுமலை பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தின் முன்பு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த கூலிப்படை கும்பலால் கொடூரமாக வெட்டப்பட்டனர்.

படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சங்கர் பரிதாபமாக இறந்தார். தீவிர சிகிச்சைக்கு பின் கவுசல்யா வீடு திரும்பினார். இந்த சாதி ஆணவக்கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி (45), தாய் அன்னலட்சுமி (40), தாய் மாமா பாண்டித்துரை(49), கூலிப்படையை சேர்ந்த ஜெகதீசன்(31), மணிகண்டன்(25), செல்வக்குமார்(25), கலை தமிழ்வாணன்(24), தன்ராஜ்(23), மதன் என்கிற மைக்கேல்(25), கல்லூரி மாணவரான பிரசன்னகுமார்(19), மணிகண்டன் ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

உடுமலை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
பின்னர் திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது.

இந்த வழக்கில் டிசம்பர் மாதம் 12-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். இதைத்தொடர்ந்து நேற்று காலை திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

குற்றம்சாட்டப்பட்ட கவுசல்யாவின் பெற்றோர் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கோவை சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். கவுசல்யாவின் தாய் மாமா பாண்டித்துரையை திருச்சி சிறையில் இருந்து அழைத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் மதியம் 12 மணிக்கு சங்கர் கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக சங்கரநாராயணன் தலைமையில் மேலும் 3 அரசு வக்கீல்கள் ஆஜரானார்கள். குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து வழக்கு குறித்து குற்றம் சாட்டப்பட்டவர்களில் 11 பேரிடமும் கேட்கப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அனைவரும் தங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டனர்.

ஆனால் இந்த வழக்குக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்படக்கூடாது என்று அரசு வக்கீல் சங்கரநாராயணன் தனது தரப்பு வாதத்தை வைத்தார்.
ஆனால் கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு மேலும் ஒரு மகன் இருப்பதால் அவருக்கு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று எதிர்தரப்பு வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர்.

மதியம் 12.30 மணி வரை இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதையடுத்து தண்டனை விவரம் 1.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்து ஒத்திவைத்தார். மீண்டும் மதியம் 1.30 மணிக்கு மாவட்ட நீதிபதி அலமேலு நடராஜன் கோர்ட்டுக்கு வந்தார். பின்னர் ஒவ்வொருவருக்குமான தண்டனைகள் குறித்து அவர் தீர்ப்பு கூறினார்.

அதன்படி, கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, கூலிப்படையாக செயல்பட்ட ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலைதமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல் ஆகிய 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

தன்ராஜூக்கு சாகும் வரை வெளியே வர முடியாத வகையில் ஆயுள் தண்டனை விதித்தும், கூலிப்படையினருக்கு அடைக்கலம் கொடுத்த பட்டி வீரன்பட்டியை சேர்ந்த மணிகண்டனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.

மேலும் சின்னசாமிக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு அதில் ரூ.1 லட்சம் அரசுக்கும், மீதம் உள்ள ரூ.2 லட்சத்தில் ரூ.1 லட்சத்தை கவுசல்யாவுக்கும், ரூ.1 லட்சத்தை சங்கரின் தந்தை வேலுசாமிக்கும் இழப்பீடாக வழங்க வேண்டும். அதுபோல் ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலைதமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அதில் தலா ரூ.5 ஆயிரம் அரசுக்கும், தலா ரூ.1½ லட்சத்தை கவுசல்யாவுக்கும், வேலுசாமிக்கும் சரிபாதியாக இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.

இந்த வழக்கில் கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, தாய் மாமா பாண்டித்துரை, கல்லூரி மாணவர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேரின் குற்றங்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். தீர்ப்பை தொடர்ந்து 8 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச்சென்றனர்.
ஆளில்லாத தீவுகளில் தேடவேண்டும்





‘ஒகி’ புயல்பாதிப்பால் கரைக்கு திரும்பாத மீனவர்களெல்லாம் ஆள்இல்லாத தீவுகளில் ஒதுங்கியிருக்கலாம்.

டிசம்பர் 13 2017, 03:00 AM

தமிழ்நாட்டில் 13 கடலோர மாவட்டங்கள் இருந்தாலும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் போன்ற ஒருசில மாவட்ட மீனவர்களுக்குத்தான் இலங்கை கடற்படையால் பிரச்சினை ஏற்படுகிறது. கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் உள்ள மீனவர்களுக்கு இந்த பிரச்சினைகள் கிடையாது. ஏனெனில், அவர்கள் ஒரேநாளில் கடலுக்குச்சென்று பாக்ஜலசந்தியில் மீன்பிடித்து திரும்புவதில்லை. ஆயிரம் கடல்மைல் தூரத்துக்குமேல் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவார்கள். ஏறத்தாழ 50 நாட்கள்வரை இவர்கள் கடலுக்குள் இருப்பது வழக்கம். கடந்த மாதம் 29, 30–ந்தேதி வீசிய ‘ஒகி’ புயலால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான மீனவர்கள் நூற்றுக்கணக்கான படகுகளில் சென்றிருந்தார்கள். இப்போது அவர்களில் பலர் திரும்பிவிட்டாலும், இன்னும் 472 பேர் கரைக்கு திரும்பவில்லை என்று அரசு கூறுகிறது. அவர்களை இன்னும் சிறப்பு முயற்சி எடுத்து மீட்கவேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பல இடங்களில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த சாலைமறியல், ரெயில்மறியல் போராட்டத்தையொட்டி, 17 கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்கள் உள்பட 13 ஆயிரத்து 815 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்குகளையெல்லாம் வாபஸ் பெறவேண்டும். மாநில கடல் எல்லை 12 கடல்மைல் தூரம்தான். இந்திய கடல்எல்லை 200 கடல்மைல் தூரம். அதற்குமேல் ஆயிரம் கடல்மைல் தூரமுள்ள சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்குச் சென்றுதான் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மீன்பிடிப்பார்கள். ஆனால், இப்போது காணாமல்போன மீனவர்களை தேடும்பணி இந்திய எல்லைக்குள்தான் நடக்கிறது. சிறப்பு பொருளாதார கடல்பகுதியிலும், அதற்கு அப்பால் சர்வதேச கடல்பகுதியிலும் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்களை தேடும்பணி நடைபெறவில்லை. அங்கு ‘ஒகி’ புயல்பாதிப்பும் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது, இல்லாமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. அந்த மீனவர்களெல்லாம் ஆள்இல்லாத தீவுகளில் ஒதுங்கியிருக்கலாம். மொராக்கா, மாலத்தீவு போன்ற பகுதிகளில்கூட ஒதுங்கியிருக்கலாம் என்று மீனவர்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். எனவே கடலோர காவல்படை கப்பல்களும், நமது ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களும் ஆயிரம் கடல்மைல் தூரம்வரை சென்று அங்கும், ஆள்இல்லாத தீவுகளிலும் தேடவேண்டும்.

பல மீனவர்கள் 25–ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 3 நாட்களுக்கு முன்பு வந்தால்போதும் என்ற உணர்வுடன் இன்னமும் தொலைத்தூரத்தில் மீன்பிடித்துக்கொண்டிருப்பார்கள் என்று அவர்கள் குடும்பத்தினர் நம்புகிறார்கள். அவர்களை உடனே கரைக்கு திரும்ப வேண்டுகோள் விடுக்கும் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் அடிகளார் பேச்சை, கடற்படை ஒலிநாடாவில் பதிவுசெய்து அதை கடற்படை கப்பல்களிலிருந்தும், ஹெலிகாப்டர்களிலிருந்தும் வயர்லெஸ் மூலம் ஒலிபரப்பு செய்ய எடுத்துச்சென்றிருக்கிறார்கள். மீனவர்களின் வேண்டுகோள்படி, இந்த கப்பல்களும், விமானங்களும் ஆயிரம் கடல்மைல் தூரம்வரை சென்று, இந்த உரையை அதிக சத்தத்துடன் ஒலிபரப்புச்செய்து மீனவர்களை கரைக்கு திரும்ப செய்யவேண்டும்.

NEWS TODAY 27.01.2026