Friday, December 22, 2017

2 ஜி தீர்ப்பு: சட்ட வல்லுநர்கள் மாறுபட்ட கருத்து

By DIN  |   Published on : 22nd December 2017 02:25 AM  |

2 ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் வெளியான தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
அப்போதைய மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவின் செயல்பாடுகளால் அரசுக்கு ரூ.1 லட்சத்து 70,000 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது. கனிமொழி, தயாளு அம்மாள், ஆ.ராசா உள்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்தத் தீர்ப்பு தொடர்பாக சட்ட வல்லுநர்கள் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்;
முன்னாள் அட்டார்னி ஜெனரல் சோலி சோரப்ஜி: நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதா? இல்லையா? என்று கருத்துக் கூற இயலாது. அதேவேளையில், இது இறுதித் தீர்ப்பு இல்லை என்று வேண்டுமானால் கூறலாம். அடுத்தகட்டமாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் சிபிஐ-க்கு உள்ளது.

மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே: இந்த வழக்கை விசாரித்த விசாரணை அமைப்புகள், போதிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தவறிவிட்டன. அதன் காரணமாகவே இத்தகைய தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் சிபிஐ போன்ற அமைப்புகளின் விசாரணை நடவடிக்கைகளில் சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது.

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜித்குமார் சின்ஹா: 2 ஜி வழக்கை விசாரித்த சிபிஐயும், அமலாக்கத் துறையும் முதலில் அதை தீவிரமாகக் கையாண்டன. அதன் பின்னர் வழக்கின் விசாரணை பின்னடைவைச் சந்தித்தது. அதன் தொடர்ச்சியாகவே வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் துரதிருஷ்டவசமானது.

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எஸ்.சோதி: ஆதாரங்கள் இல்லையென்றால் வழக்கு நிரூபணமாகாது என்பதே நிதர்சனம். இந்த வழக்கில் வாதாடியவர்கள் அனைவரும் மிகப் பெரிய சட்ட வல்லுநர்கள். இருப்பினும், எந்த ஆதாரமும் இல்லையென்றால், உண்மையிலேயே அது பொய்யான குற்றச்சாட்டாகத்தான் இருக்க முடியும். தற்போது அது தெளிவாகியுள்ளது.

இவ்வாறாக பல்வேறு சட்ட நிபுணர்கள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இதனிடையே, 2 ஜி தீர்ப்பு தொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) பதிவிட்டுள்ள மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், 'வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது; குற்றங்கள் நிரூபிக்கப்படாதது அவமானத்துக்குரியது' என்று தெரிவித்துள்ளார்.

மேல்முறையீடு: சிபிஐ, அமலாக்கத் துறை முடிவு

By DIN | Published on : 22nd December 2017 04:45 AM

2ஜி அலைக்கற்றை வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் தயாள் கூறுகையில், '2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஆய்வு செய்தோம். அதில் சிபிஐ தரப்பு வாதங்களும், ஆதாரங்களும் நீதிமன்றத்துக்கு முழுமையாகப் போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளது தெரிகிறது. எனவே, இது தொடர்பாக அடுத்தகட்ட சட்டபூர்வ நடவடிக்கையை சிபிஐ எடுக்கும்' என்றார்.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 60 நாள் அவகாசத்தை சிபிஐ-க்கு நீதிமன்றம் அளித்துள்ளது. அந்தக் காலகட்டத்துக்குள் தில்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமலாக்கத் துறையும் மேல்முறையீடு: இதனிடையே, 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட 19 பேருக்கு எதிராக கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது.

'2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கருப்புப் பணம் பெருமளவில் பரிமாறப்பட்டுள்ளது மற்றொரு முக்கியக் குற்றமாகும். இதில் உள்ள பல உண்மைகளை சிறப்பு நீதிமன்றம் முறையாகக் கருத்தில் கொள்ளவில்லை. எனவே குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்' என்று அமலாக்கத் துறை கூறியுள்ளது.

2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, கருப்புப் பண முறைகேடு வழக்கை அமலாக்கத்துறையும் பதிவு செய்திருந்தது. முன்னதாக, சிபிஐ தொடுத்த வழக்கில் இருந்து 19 பேரையும் விடுவித்த சிபிஐ நீதிமன்றம், அமலாக்கத்துறை தொடுத்த வழக்கில் இருந்தும் அவர்களை விடுவிப்பதாகவும் தீர்ப்பு கூறியது.
நன்கு திட்டமிடப்பட்ட குற்றப்பத்திரிகை: 2ஜி வழக்கு தீர்ப்பில் நீதிபதி

Published : 21 Dec 2017 15:28 IST



2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்.பி., கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் எவ்விதமான குற்றச்சாட்டுமே நிரூபிக்கப்படவில்லை, போதுமான ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருமே வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார்.

நீதிபதி ஓ.பி. ஷைனியின் தீர்ப்பின் விவரம்:

2ஜி அலைக்கற்றை வழக்கின் தொடக்கத்தில், சிபிஐ தரப்பு மிகவும் உற்சாகத்துடன், ஆர்வத்துடன் வழக்கை எதிர்கொண்டது. ஆனால், வழக்கின் விசாரணை முன்னேற்றம் அடைந்தபோது, மிகுந்த எச்சரிக்கையுடன், பாதுகாப்புடன் சிபிஐ அணுகியது, இதனால் அரசுத் தரப்பு எதை மெய்ப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறது என்பதைக் கண்டுபிடிப்பது கடினமாகியது. வழக்கின் முடிவில், அரச தரப்பு வாதங்களின் தரநிலை என்பது, ஒட்டுமொத்தமாக மோசமடைந்து, எந்தவிதமான வழிகாட்டுதலும் இல்லாமல், அதைரியமாகப் போய்விட்டது.

இந்த வழக்கில் தொடக்கத்தில் ஆ.ராசாவின் செயல்பாடுகளைக் காட்டிலும், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களின் செயல் அல்லது செயல்பாடின்மை குறித்துதான் அதிகமான விவரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மூளையாக இருந்து அ.ராசா தான் சதி செய்தார் என்பதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.

ஆ. ராசா இந்த விவகாரத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன், தடையின்றி, தன்னிச்சையாக செயல்பட்டு ஏதும் தவறு இழைத்தார்; சதி செய்தார்; ஊழல் செய்தார்; என்பதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தவறான அடிப்படையில், குறிப்பிட்ட பகுதிகள் குறித்தும், தீவிரமாக ஆய்வு செய்யப்படாமலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் போது சில சாட்சியங்களின் வாக்குமூலங்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆனால், நீதிமன்ற விசாரணையின் போது, அவர்களை நீதிமன்ற கூண்டில் கொண்டு வந்து அதை நிரூபிக்க அரசு தரப்பால் முடியவில்லை. இறுதியாக சாட்சியங்களின் வாக்குமூலங்கள் வாய்மொழியாக இருந்தாலும், அரசு தரப்பு அளித்த அறிக்கைக்கும் அதற்கும் இடையே முரண்பாடுகள் இருக்கின்றன. இது சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது.

குற்றப்பத்திரிகையில் சிபிஐ தரப்பு பதிவு செய்துள்ள பல்வேறு விஷயங்கள் உண்மையில் சரியானது அல்ல. குறிப்பாக, நுழைவுக் கட்டணத்தை மீண்டும் மறு ஆய்வு செய்யக் கோரி நிதித்துறை செயலாளர் தீவிரமாக பரிந்துரை செய்தார் என்பதும், ஆ.ராசா மூலம் எல்.ஓ.ஐ. பிரிவு நீக்கப்பட்டது என்றும், நுழைவுக்கட்டணம் டிராய் நிறுவனத்தால் மறுஆய்வு செய்ய பரிந்துரை செய்யப்பட்டது என்பதிலும் உண்மையில்லை.

மேற்கூறப்பட்ட விஷயங்களை தீவிரமாக நான் ஆய்வு செய்ததில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது எந்த விதமான குற்றத்தையும் நிரூபிப்பதில் அரசுத் தரப்பு தோல்வி அடைந்துவிட்டது. நன்கு திட்டமிட்டு தயார் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிலக்கல், 'பார்க்கிங்'கில் பக்தர்கள் கடும் அவதி

Added : டிச 22, 2017 00:50

சபரிமலை: நிலக்கல், வாகன நிறுத்துமிடத்தில், போதிய வழிகாட்டுதல் இல்லாமல் தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் சிரமப்படுகின்றனர். கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பஸ்கள், வேன்கள், நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இங்கிருந்து பக்தர்கள் கேரள அரசு பஸ்கள் மூலம், பம்பை செல்ல வேண்டும். இதுபோல, கூட்டம் அதிகமாகும் போது, சிறிய வாகனங்களும், பம்பையில் பக்தர்களை இறக்கிய பின் நிலக்கல் செல்ல வேண்டும்.இந்த வாகனம் நிறுத்துமிடம், 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுகின்றன. ஆனால், எந்த வாகனம் எங்கு நிற்கிறது என்பதை பக்தர்கள் கண்டுபிடிப்பது சிரமம். போதிய வழிகாட்டுதல் பலகைகள் இல்லை. மலையேறி தரிசனம் முடிந்து வரும் பக்தர்கள், உடல் தளர்ச்சியுற்று வருகின்றனர். இங்கு வந்த பின், தங்கள் வாகனங் களை கண்டுபிடிக்க முடியாமல்அலைவது தினசரி காட்சியாக உள்ளது. டிரைவருக்கு போன் செய்து, கேரள அரசு பஸ் ஸ்டாண்ட் அருகில் வர சொன்னால், அங்கு நீண்ட நேரம் பஸ்களை நிறுத்த, போலீசார் அனுமதிப்பதில்லை.இதனால் ஒரு நாள் முழுவதும் நிலக்கல்லில் தவிக்கும் சூழ்நிலையும் பக்தர்களுக்கு ஏற்படுகிறது'இதை தவிர்க்க, மாநிலங்கள் வாரியாக எந்தெந்த பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப் படுகின்றன என்பதை, வரைபடத்துடன் கூடிய போர்டுகளாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பக்தர்கள் விரும்புகின்றனர்.

சி.பி.ஐ., சொதப்பியதால் நொண்டியடித்த வழக்கு
ராஜாவின் அதிரடி வாதத்தால் கிடைத்தது பலன்

'2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், ராஜா உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டு இருப்பதன் பின்னணி குறித்து, சி.பி.ஐ., மற்றும் பாட்டியாலா கோர்ட் தரப்புகளின், தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:



பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், குறைந்த விலைக்கு ஸ்பெக்ட்ரத்தை விற்றதால், பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகக் கூறி, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான, சி.ஏ.ஜி., அறிக்கை தாக்கல் செய்தது.
குறுக்கு விசாரணை

இந்த அறிக்கையின் பரபரப்பாலும், அரசியல் புற அழுத்தம் காரணமாகவும், இந்த பிரச்னை,
விஸ்வரூபம் எடுத்தது.ஆனால், இந்த வழக்கு, முழுக்க முழுக்க தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ரீதியில் அமைந்தது என்பது, பலருக்கும் புரியவில்லை. முக்கிய ஆவணங்கள் இருப்பது தெரியாமல், அவற்றை கைப்பற்றுவதற்கு முன்பாகவே, உச்ச நீதிமன்றம் தலையிட்டதன் அடிப்படையில், சி.பி.ஐ., அவசர கோலத்தில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

இது தான், இவ்வழக்கின் மிகப்பெரிய சறுக்கல். கிரிமினல் வழக்கறிஞர் என்பதால், ராஜா மிகவும் சாமர்த்தியமாக, முக்கிய ஆவணங்கள் இருப்பதையே வெளிக்காட்டாமல், கைது செய்து சிறையில் தள்ளிய போதும் கூட அமைதி காத்தார்; அதை விட, குற்றப் பத்திரிகையை, சி.பி.ஐ., தாக்கல் செய்யும் வரை, எதுவும் பேசாமல் இருந்தார்.

ஜாமினில் வெளியாகி, விசாரணை துவங்கிய பின்பே, தொலை தொடர்புத் துறை, பிரதமர் அலுவலகம், நிதியமைச்சகம், 'டிராய்' என, பல்வேறு இடங்களில் இருந்த ஆவணங்களை, கோர்ட் மூலமாகவே வரவழைக்க செய்தார். எந்தெந்த குற்றங்கள் எல்லாம், ராஜா செய்ததாக கூறப்பட்டதோ, அவற்றுக்கு ஒப்புதல் அளித்து, கையெழுத்தும் போட்டிருந்த முக்கிய அதிகாரிகள் தான், சி.பி.ஐ.,யின் முக்கிய சாட்சிகள்.

இவர்களைகுறுக்கு விசாரணை செய்வது, ராஜாவுக்கு மிக எளிதாகவும் போய்விட்டது. தவிர, சி.பி.ஐ., சுமத்தும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும், ஆவணங்களை அள்ளிப் போட்டபடியே இருந்தார். இதனால், பல நேரங்களில், நீதிபதி, சைனியே, 'இதில் வழக்கு எங்கே உள்ளது?' என, சி.பி.ஐ., தரப்பை கடிந்து கொள்ள நேர்ந்தது.'ஸ்பெக்ட்ரம் விலை வேறு; ஸ்பெக்ட்ரத்தை வாங்குவதற்கான நுழைவு கட்டணம் வேறு.

'நுழைவு கட்டணத்தை உயர்த்தாமல் போனதற்கு, அரசின் கொள்கை முடிவு காரணமே தவிர; நானல்ல' என, பார்லிமென்ட், ஜே.பி.சி., ஆகிய இடங்களில் வாதிட்டு தோற்றாலும், ராஜா நம்பிக்கை இழக்கவில்லை; காரணம், கோர்ட்டில், ஆவணங்கள் மட்டுமே செல்லுபடியாகும்.
சமாதானம்

அது தெரிந்த ராஜா, மிகத் தெளிவாக,ஆவணங்கள் மூலமே கோர்ட்டில் பேசினார். இந்த வழக்கின் நெளிவு சுளிவுகளை அறிந்தவன் என்பதால், தன்னால் மட்டுமே, சி.பி.ஐ.,யை கையாள முடியும் என்பதை புரிந்து வைத்திருந்து, தனக்காக ஆஜரான, பிற வழக்கறிஞர்களை தவிர்த்து, பல நேரங்களில், தானே முன்வந்து, அசாத்திய உறுதியை விசாரணையின் போது சுட்டிக்காட்டினார்.

பெரும்பாலான வேளைகளில், கூண்டில் ஏற தயங்காமலும், தானே வாதிடவும் செய்தார். சி.பி.ஐ., மூத்த வழக்கறிஞர், குரோவருக்கும், ராஜாவுக்கும், பல நேரங்களில், நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டு, நீதிபதி தலையிட்டு, சமாதானம் செய்ய வேண்டி யிருந்தது.'ராஜாவோ, அவரது உறவினர்களோ, முறைகேடான வழியில் சொத்து

சேகரிக்கவில்லை' என, கோர்ட்டில், சி.பி.ஐ., வெளிப்படையாக ஒப்புக் கொண்டது.

'ஸ்பெக்ட்ரத்தை பெற்றது, தகுதியுள்ள நிறுவனங்கள் தான்' என்பதை, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலும், சட்டத் துறை செயலரும் ஒப்புக் கொண்டு, அதிகாரபூர்வ கடிதமே அளித்தனர்.ராஜா, இறுதியாக, தன் வாதத்தை முடித்த போது கூறியதாவது:

கண் பார்வையற்ற நான்கு பேர், யானையை தொட்டுப் பார்த்தனர். காலை தொட்டவர் துாண் என்றார். வாலை தொட்டவர் கயிறு என்றார். காதை தொட்டவர் முறம் என்றார். உடலை தொட்டவர் சுவர் எனக் கூறியதாக, கதை உள்ளது. இதே போலத்தான், ஸ்பெக்ட்ரம் குறித்த போதிய புரிதலின்றி, சி.ஏ.ஜி., - சி.பி.ஐ., - ஜே.பி.சி., அமலாக்கத் துறையினர் அணுகியதாலேயே, இத்தனை பிரச்னை. இவ்வாறு அவர் வாதாடினர்.

அதை கேட்டதும், நீதிபதி உட்பட, கோர்ட்டிலிருந்த அனைவரும், பலமாக சிரித்து விட்டனர். அன்றைய தினம் தான், தீர்ப்பு எழுதும் தேதியை, முடிவு செய்யும் தீர்மானத்திற்கே, நீதிபதி, ஓ.பி.சைனி வந்தார்.துவக்கம் முதலே, சி.பி.ஐ., தரப்பு மிக பலவீனமாக இருந்தது. அதனால் தான்,

சந்தேகத்தின் பலனை கூட, தனக்கு சாதகமாக கேட்காமல், தான் குற்றமற்றவன் என்ற ஒரே நிலைப்பாட்டில், உறுதியாக நின்று விடுதலையாகி உள்ளார், ராஜா.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆர்.ஏ.சி., பயணியருக்கு போர்வை ரயில்வே வாரியம் உத்தரவு

Added : டிச 21, 2017 23:01

பிலாஸ்பூர், ரயில்களில், 'ஏசி' பெட்டிகளில், ஆர்.ஏ.சி., டிக்கெட்டில், ஒரு படுக்கையை பகிர்ந்து கொள்ளும் இரு பயணியருக்கும், போர்வை வழங்க, ரயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
ரயில்களில், 'ஏசி' பெட்டிகளில், உறுதியான முன்பதிவு டிக்கெட்டுடன் வரும் பயணியருக்கு, இரண்டு போர்வைகள், ஒரு கம்பளி, ஒரு தலையணை, ஒரு துண்டு ஆகியவை வழங்கப்படும். முதல் வகுப்பு, 'ஏசி' மற்றும், 'ஏசி சேர் கார்' பெட்டிகளில், ஆர்.ஏ.சி., டிக்கெட் பயணியர் அனுமதிக்கப்படுவதில்லை.இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு, 'ஏசி' பெட்டிகளில், ஆர்.ஏ.சி., டிக்கெட் வைத்துள்ள பயணியர் அனுமதிக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு போர்வைகள் தரப்படுவதில்லை. இந்த பெட்டிகளில், ஒரு படுக்கையை இருவர் பகிர்ந்து கொள்வர். போர்வைகள் தரப்படாததால், குளிரில் நடுங்கியபடியே, இவர்கள் பயணம் செய்வர்.இந்நிலையில், ஆர்.ஏ.சி., டிக்கெட்டுடன், 'ஏசி' பெட்டியில் பயணம் செய்யும் இரண்டு பயணியருக்கும், மற்ற பயணியருக்கு வழங்குவது போல், போர்வை, கம்பளி வழங்கும்படி, தென் கிழக்கு மத்திய ரயில்வேயின் அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும், ரயில்வே வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
பரபரப்பை ஏற்படுத்திய ஜெயலலிதா சிகிச்சை வீடியோ





இந்தியா முழுவதுமே இப்படியும் நடக்குமா?, நடக்க முடியுமா? என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்த சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடந்தது.

டிசம்பர் 22 2017, 03:00 AM
இந்தியா முழுவதுமே இப்படியும் நடக்குமா?, நடக்க முடியுமா? என்று ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்த சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடந்தது. தொகுதி முழுவதும் பணமழை கொட்டோ கொட்டோவென்று கொட்டியது. நேற்று தேர்தல் தினத்தன்றுகூட, பணம் பரிமாறப்பட்டதாக புகார்கள் கூறப்பட்டன. ஆள்–அம்பு–சேனை என்று பெரியபடை வைத்திருக்கும் தேர்தல் கமி‌ஷனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. புதுப்புது டெக்னிக்குகளில் பணப்பரிமாற்றம் நடந்தது. இந்தநிலையில், தேர்தலுக்கு முந்தையநாள் பிற்பகலில் தலைமைச் செயலகத்திலேயே டி.டி.வி.தினகரனின் முக்கியமான ஆதரவாளரான வெற்றிவேல் ஒரு வீடியோவை வெளியிட்டார். ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது, ஒரு அறையில் படுத்தபடி பழச்சாறு அருந்திக்கொண்டு இருப்பது போன்ற 20 வினாடிகள் ஓடிய அந்த வீடியோவை வெளியிட்டார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல சர்ச்சைகள்–சந்தேகங்கள் எழும்பிக்கொண்டிருக்கின்றன. கடந்த சனிக்கிழமைக்கூட அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி கூறும்போது, ‘ஜெயலலிதா மிகவும் கவலைக்கிடமான நிலையில் மூச்சுத்திணறலோடு கடந்த ஆண்டு செப்டம்பர் 22–ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்’ என்று தெரிவித்தார். அப்படியானால், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் ஏன் காய்ச்சலோடும், நீர்ச்சத்து குறைவோடும்தான் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்று கூறப்பட்டது? என்று கேட்டதற்கு, ‘அவருடைய உண்மையான உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டால், பொதுமக்களின் ஆத்திரத்தால் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடும்’ என்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று கூறியிருக்கிறார். முதல்–அமைச்சரின் உடல்நிலை குறித்து உண்மையான நிலவரத்தை கொண்ட மருத்துவ அறிக்கையை வெளியிடவேண்டாம் என்று அறிவுறுத்தியது யார் என்பதில் மக்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு, அந்த ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆணையம் அமைக்கப்பட்ட நேரத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தனிப்பட்டமுறையில் நேரடியாக அறிந்தவர்களும், நேரடித்தொடர்பு உடையவர்களும் அதுகுறித்து அவர்களுக்கு தெரிந்த தகவலை விசாரணை ஆணையத்திடம் அளிக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இப்போது வெற்றிவேல் எங்களிடம் இதுபோல மேலும் பல வீடியோக்கள் இருக்கிறது என்று கூறினார். மேலும் விசாரணை ஆணையம் என்னை அழைக்கவில்லை, அழைத்திருந்தால் அவர்களிடம் கொடுத்திருப்பேன். அதனால்தான் ஆணையத்திடம் கொடுக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். வெற்றிவேல் மீது போலீசில் புகார் கொடுத்துள்ள விசாரணை ஆணையம், உடனடியாக யார்–யாரிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக என்னென்ன ஆதாரங்கள் இருக்கிறதோ அதையெல்லாம் தரவேண்டும் என்றும் அறிவிக்கவேண்டும். மருத்துவமனை தகவல்கள் மாறி மாறி வந்து கொண்டிருக்கும் நேரத்தில், அவரது மரணத்துக்கான உண்மையான காரணம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மிகவிரைவில் இதுபோன்ற வீடியோ உள்பட அனைத்து ஆதாரங்களையும் திரட்டி முழுமையான விசாரணை முடித்து தாக்கல் செய்யும் அறிக்கையில்தான் உலகுக்குத் தெரியும். அதைத்தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.



NEWS TODAY 28.01.2026