Tuesday, June 5, 2018

நீட் தேர்வு தோல்வி..! தற்கொலை செய்து கொண்ட மாணவி 

கார்த்திக்.சி

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா என்பவர் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.



2018-ம் ஆண்டின் மருத்துவப் படிப்பின் நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதில், இந்தியா முழுவதும் தேர்வு எழுதிய 13,26,725 பேரில் 7,14,598 பேர் கவுன்சலிங்குக்குத் தகுதி பெற்றுள்ளதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. தமிழக மாணவர்கள் 1,14,602 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தநிலையில், நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் விழுப்புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரதீபா என்ற என்பவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கூலித் தொழிலாளியின் மகளான அவர் 12 வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்தவர். நேற்று, வந்த நீட் தேர்வு முடிவில் அவர் 39 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. அந்த விரக்தியில் அவர் நேற்று தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர், கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருந்தார். அந்த மதிப்பெண்ணைக் கொண்டு தனியார் மருத்துவமனையில்தான் சேருவதற்கான வாய்ப்பு இருந்த நிலையில், பணம் இல்லாத காரணத்தால் அப்போது மருத்துவத்தில் சேரவில்லை. ஏற்கெனவே, நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தினால் அரியலூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்தநிலையில் தற்போது விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கலைஞராக இருப்பதன் முக்கியத்துவம்!: சட்ட மன்ற விவாதத்தில் நாட்டுக்கே முன்னுதாரணர் அவர்

Published : 04 Jun 2018 07:15 IST

என்.ராம்




இந்திய அரசியலின் மிக மூத்த ராஜதந்திரியும், பன்முகத்தன்மைக்கு வரலாற்று உதாரணருமான கலைஞர் முத்துவேல் கருணாநிதி, அரசியல் களத்தில் நிகழ்த்தியுள்ள சாதனைகள் இன்னொருவரால் எட்டவோ மிஞ்சவோ கூடியவை அல்ல. இந்தியாவில் வேறு எவரும் தன் கட்சிக்கு இத்தனை நீண்ட காலம் தலைமை வகித்தது கிடையாது; அண்ணா மறைந்ததி லிருந்து திமுகவில் எதிர்ப்பே இல்லாத தலைவராக நீடித்தவர். தமிழக முதல்வராக ஐந்து முறை அவர் பதவி வகித்ததோடு, இந்திய அரசியலிலேயே தனித்துவராக 60 ஆண்டுகள் தொடர்ந்து தான் போட்டியிட்ட ஒவ்வொரு சட்ட மன்றத் தேர்தலிலும் வென்றிருக்கிறார்.

அறிவார்த்தமும் இலக்கிய நயமும் வரலாற்றுப் பின்னணியும் குத்தலும் நகைச்சுவையும் கொண்ட உணர்ச்சியூட்டும் அவரது பேச்சாற்றல் அவருடைய கட்சி, திராவிட இயக்கத்தைத் தாண்டி மாநிலத்துக்கான உரிமைகளைப் பெற்றிட தமிழ்நாட்டுக்குக் கிடைத்த பெரிய சொத்து. அரசியலைத் தாண்டி 60 ஆண்டு களுக்கும் மேலாக கலை, இலக்கியம், இதழியல் துறைகளில் அவர் அளித்துவரும் பிரமிப்பூட்டும் பங்களிப்பு ஏனைய அரசியல் தலைவர்களிடமிருந்து அவரைத் தனித்துக் காட்டுவதாகும்.

1968 ஏப்ரல்-மே மாதங்களில் முதல்வர் அண்ணா வாஷிங்டன் வந்திருந்தபோது கொலம்பியா பல்கலைக்கழக இதழியல் மாணவனாக நான் உடன் சென்றிருந்தேன். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1969-ல் புதிய முதல்வர் கலைஞரை ‘தி இந்து’ நாளிதழின் இளம் நிருபராகச் சந்தித்தேன். அன்று தொடங்கி, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டை நெருங்கும் எங்கள் இடையேயான நட்பு ஒரு அரசியல் பத்திரிகையாளர் - அரசியல் தலைவர் இடையிலான தொழில்ரீதியிலான உறவுக்கு அப்பாற்பட்டது.

எல்லாக் காலகட்டங்களிலும் எளிதில் அணுகக் கூடியவராகவும் அவருடைய கருத்துகளோடு உடன்படாவிட்டாலும் - விமர்சித்தாலும் நட்பு பாராட்டக் கூடியவராகவுமே அவர் இருந்திருக்கிறார். அரசியல், வரலாறு, இலக்கியம் - சில வேளைகளில் கிரிக்கெட் என்று பலதும் அவருடன் விவாதித்திருக்கிறேன். பள்ளிப் படிப்பை முடிக்காதவராக இருக்கலாம்; மிகச் சில அரசியல்வாதிகள்தான் அவரைப் போல ஆழ்ந்த படிப்பாளிகள், அயராத எழுத்தாளர்கள்.

கலைஞரின் வாசிப்பு ஆர்வம் காலையில் ‘தி இந்து’ நாளிதழில் தொடங்கி விரிவடையும். பேசும் வார்த்தைகளுக்கும் எழுதும் எழுத்துகளுக்கும் உள்ள மதிப்பையும் வலிமையையும் உணர்ந்த தலைசிறந்த தேசியத் தலைவர்கள் வரிசையில் வருபவர் அவர் - திலகர், காந்தி, நேரு, இஎம்எஸ், அண்ணா ஆகியோரின் வரிசையில் வைக்கத் தக்கவர். மேடைப் பேச்சாளர், பத்திரிகையாளர், திரைப்பட கதை-வசனகர்த்தா, கவிஞர் என்று பல முகங்களைக் கொண்ட கலைஞருக்கு எழுதுவது யோகா போல - தினமும் செய்ய வேண்டிய பயிற்சி. அவர் நிறுவிய ‘முரசொலி’க்கு அவர் எழுதியது மட்டுமே பல லட்சம் வார்த்தைகளைத் தாண்டும்.

திராவிட இயக்கத்தை அருகிலிருந்து கவனிப்பதிலும் ஆய்வுசெய்வதிலும் எனக்குத் தொடக்கத்திலிருந்தே அரசியல்ரீதியிலான ஆர்வம் இருந்தது. 1979 பிப்ரவரி ‘எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி’ இதழில் திராவிட இயக்கம் தொடர்பாக நான் எழுதியிருந்த கட்டுரை நினைவுக்குவருகிறது. ‘திமுக போன்ற கட்சிகள் பிராந்தியக் கட்சிகள்’ என்றும், ‘இந்திய ஜனநாயகத்துக்கு இரண்டு கட்சி ஆட்சி முறைதான் நல்லது’ என்றும் ஆணவத் தோரணையில் தேசியர்கள் தெரிவித்த கருத்துகளை அந்தக் கட்டுரையில் கடுமையாக விமர்சித்திருந்தேன். மாநில உரிமைகளையும் சுயாட்சியையும் வலியுறுத்தும் திமுகதான் இப்படிப்பட்ட அதிகாரக் குவிப்புவாதத்துக்குச் சரியான ஜனநாயக பதிலடி என்றும் குறிப்பிட்டிருந்தேன். தமிழ்நாட்டின் சுயமரியாதை இயக்கத்துக்கு மிக உயர்ந்த சமூக, அரசியல், வரலாற்று முக்கியத்துவம் இருப்பதை என்னுடைய பல கட்டுரைகளில் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். ஆதிக்க சாதியினரின் அடக்குமுறை, மூடநம்பிக்கைகள், பிற்போக்குத்தனமான சமூகப் பழக்கவழக்கங்கள், பகுத்தறிவற்ற சிந்தனை ஆகியவற்றுக்கு எதிராக முற்போக்கான போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும் திராவிட இயக்கத் தின் மீது எனக்கு மதிப்பு உண்டு.

கலைஞரின் தோள்களிலேயே இந்திய அரசியல் போக்குகளின் ஊடாக அடுத்தடுத்து மாற்றங்களைக் கொண்டு திராவிட இயக்கத்துக்கு என்று ஒரு தனித்த பாதையை அமைக்க வேண்டிய பிரதான பொறுப்பு ஏறியது. இந்தச் சவாலை நம்பிக்கை, துணிச்சல், இடையறாத முயற்சி, சிறந்த வியூக ஆற்றல் ஆகியவற்றோடு அவர் தொடர்ந்து எதிர்கொண்டார்.

அண்ணா தலைமையில் 1967-ல் திமுக பெற்ற வெற்றி இந்திய அரசியல் வரலாற்றில் எப்படி ஒரு முக்கியமான நிகழ்வோ, அப்படி 1969-ல் காங்கிரஸ் கட்சி பிளவுபட்டபோது, இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸை கலைஞர் ஆதரித்ததும் முக்கிய மான நிகழ்வானது. அன்று தொடங்கிய தேசிய அரசியலுடனான அவருடைய கூட்டணி மன்மோகன் சிங் தலைமையிலான சமீபத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வரையில் தொடர்ந்து இந்திய அரசியலின் பாதையையே மாற்றியிருக்கிறது. அரசியல் கூட்டணிகளை உருவாக்குவதில் அவர் வல்லவர்; தோழமைக் கட்சிக்காரராக அவர் காட்டும் நீக்குப்போக்கான அணுகுமுறையும், சமயங்களில் காட்டும் உறுதியும் கண்டிப்பும் மாநில - தேசிய அரசியலை வழிநடத்தியுள்ளன.

ஒரு முதல்வராக நிர்வாகத் திறமை, பிரச்சினைகளை வேகமாகக் கிரகித்துக்கொள்ளும் ஆற்றல், விரைந்து முடிவெடுக்கும் சுறுசுறுப்பு, அரசியல் நாகரிகம், எளிதில் அணுகக்கூடிய தன்மை, சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களுக்கும் பலன் தரும் சமூகநலத் திட்டங்கள் போன்றவற்றுக்காக அறியப்படுபவர் கலைஞர். அரசியல்ரீதியாக அவரை விமர்சித்தவர்களும் எதிர்த்தவர்களும் அனேகம். ஆனால், அவர்களுடனும் நல்ல நட்பைத் தொடர்ந்துவந்தார். திமுகவிலிருந்து விலக்கப்பட்ட பிறகு, அதிமுகவைத் தொடங்கி வெற்றிகரமாக வலம்வந்த எம்ஜிஆருக்கும் கலைஞருக்கும் இடையே நிலவிய பரஸ்பர அன்பும் மரியாதையும் கொண்ட நட்பையே ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.

சட்ட மன்ற நிகழ்ச்சிகளுக்குக் கலைஞர் தரும் மரியாதையும் அதில் பங்கேற்பதில் அவர் காட்டும் ஆர்வமும் அசாதாரணமானவை. பேரவை விவாதங்களில் மாற்றுக் கருத்துகளை நாசூக்காகத் தகர்ப்பதிலும் தன்னுடைய கருத்துகளைப் புகுத்துவதிலும் சமர்த்தர். மாற்றுக் கட்சியினரின் கருத்துகளை ஏற்பதிலும் தன்னுடைய கருத்துகளை ஏற்க வைப்பதிலும் சிறந்த ஜனநாயகவாதி. மன்றத்தில் பேசுகையில் அவர் குரலில் ஆணவமோ ஆதிக்க உணர்வோ எள்ளலோ என்றைக்குமே எதிரொலித்ததே கிடையாது. நாடு முழுவதுமே உள்ள முதல்வர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இந்த விஷயத்தில் அவர் நல்ல உதாரணர்.

கலைஞர் எப்போதும் முக்கியமானவர். வெறுப்பரசியலும் வகுப்புவாதமும் ஒற்றைக் கலாச்சாரமும் தலையெடுக்கும் காலகட்டத்தில் அவருடைய முக்கியத்துவத்தை நாடு மேலும் உணர்கிறது!

-என்.ராம், மூத்த பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர்

தமிழில்: வ.ரங்காசாரி

’தெற்கிலிருந்து ஒரு சூரியன் நூலிலிருந்து...’

நூலைப் பெற: 7401296562

நெட்டிசன் நோட்ஸ்: இளையராஜா - இது வெறும் பெயரல்ல; இரு தலைமுறையின் மூச்சு

Published : 02 Jun 2018 15:11 IST


தொகுப்பு: இந்து குணசேகர்

 


இளையராஜா | கோப்புப் படம்.

இசையமைப்பாளர் இளையராஜா தனது 75-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதுகுறித்து இளையராஜாவின் ரசிகர்களும், நெட்டிசன்களும் தங்கள் வாழ்த்தைப் பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் விவரம்... இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

vishal

பணிச்சுமையில் போட வேண்டாம் என்று சுழ்நிலை கூறினாலும் இதயம் கேட்க மறுக்கின்றது தென்றல் வந்து தீண்டியது உண்மையில் மேஸ்ட்ரோவின் இசையில் இளையராஜா #HBDIlayaraja

K.R.Venkadesh

‏#HBDIlayaraja இசை என்னும் கலையின் வாயிலாக மக்கள் மனதை வென்ற இசைஞானி இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

Guruparan

‏#HBDIlayaraja அழவைக்கும் ... ஆர்ப்பரிக்கும் ... ஆறுதல் தரும் ... உள்ளே புகுந்து மனிதம் தொடும் .. இசைக்கு ... பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கிரியேட்டிவ் ЯΛJ ™

‏காதல் பெருகியதற்கும் தற்கொலைகள் குறைந்ததற்கும் இசைஞானியும் ஒரு காரணம்தான்! இசை வாழ்க பல்லாண்டு!
https://twitter.com/UnimaginableBad/status/1002777154323484673

கோ.ஸ்ரீதரன்

தினம் இரவு நான் எவ்வூரிலிருந்தாலும் என் அம்மாவை என்னிடம் கொண்டு வந்துவிடும் வேலை ராஜாவுடையது ...!

வேதாளம்

உணர்வுகளைத் திரை வடிவிலும் இசை வடிவிலும் நம்மிடம் கடத்த இவர்களை மிஞ்ச யாரும் இங்கு இல்லை

வாலி

யுத்த காலத்தில் (யாழ்ப்பாணத்தில்) என் பதின்ம வயதுக் காலத்தில் எங்களுக்கு உயிரூட்டியது #ராஜா_இசை இல்லையேல் நாங்கள் அப்போதே தன்னம்பிக்கையை இழந்து இருப்போம்

யாத்ரீகன்

‏இளையராஜா பத்தி சொல்றதுக்கு நிறைய இருக்கு.

ஆனா அதைவிட கேட்கிறதுக்கு

நிறைய இருக்கு.

νєттιιѕм

‏சொற்களால் சிலவற்றை விவரிக்கவோ/வெளிப்படுத்தவோ இயலாது. அதுவே ராஜா எனைப் பொறுத்தமட்டில் :)

உன் இசை வாழி.

துரோனா ©

‏கற்பனா சக்தியின் உச்சம்தான் இளையராஜா. மனதில் யோசிக்கும் இசை வடிவங்கள் அடுத்த வினாடிகளில் இசைக் குறிப்புகளாய் வந்துவிழும். இதற்குக் காரணம் தாம் விரும்பியவாறே வளைந்து கொடுக்கும் ராகங்கள்தான்.

$мιℓєу Saravana

‏இசைஞானி வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற பெருமையை விடவா இசையை ரசிப்பவர்களுக்கு இருந்து விடப் போகிறது

Dark Knight

‏புதுராகம் படைப்பதாலே நீயும் இறைவனே!

கா(லா)க்கொடுமை!!

‏வருடங்கள் மெல்லச் சாக அணுவளவும் குறையாத அன்னை அன்பைப்போல் உன் தாலாட்டு..

ச ப் பா ணி

‏BGM கேட்டாலே சீன் என்னன்னு சொல்லக்கூடிய படங்கள் இதயம், நாயகன், அபூர்வ சகோதரர்கள், மெளனராகம், புதுப்புதுஅர்த்தங்கள், சின்ன கவுண்டர்

தஞ்சை தர்மா

‏"இளையராஜா" இது வெறும் பெயர் மட்டுமல்ல

இரு தலைமுறையின் மூச்சுக் காற்று

abisheik Raj

‏நாம மறந்தாலும் பிரைவேட் பஸ்கள் இளையராஜாவை தினமும் கொண்டாடிக் கொண்டே தான் இருக்கின்றன...!!!

Bala Chakravarthi



இதன் உச்சியில்...

ஒரு கோப்பை தேநீர்...

ஒரு நூறு ராஜா பாடல்கள்...

ஒரு ப்ளூடூத் ஸ்பீக்கர்...

போதும்..!

ஆக்டோபஸ்

‏நீங்கள் இசையாய் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த யுகத்தில் உங்கள் இசையைக் கேட்டு லயிக்கும் வரம் பெற்றோம்...

வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.

Being Human®

‏ராஜாவின் சிறந்த பாடல்கள் இரண்டு அல்லது மூன்றின் இணைப்பை எடுத்துப் பதிவிடலாம் என ஒருமணிநேரம் உன்குழலில் தேடிப்பார்த்தாகி விட்டது.வெகுநேரத்திற்குப் பிறகு ஒரு உண்மை புரிந்தது.

அது சாத்தியமில்லை.!

முகிலன்™

‏காற்றில் இசையை கலப்படம் செய்தவர்களில் இளையராஜாவிற்கு பெரும்பங்கு உண்டு என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.,!

Prasanth

தனிமையான பேருந்து நேரப் பயணங்களிலும், தனிமையான இரவுகளிலும் நம்முடன் துணையாய் இருக்கும் ராஜா சார்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அருண்காந்த் ✨™

‏செல்போன் எந்ந கம்பெனியா, மாடலா இருந்தாலும் ராஜா பாட்டு இல்லாத

ஒரு செல்போனையும் தமிழ்நாட்டுல பாக்க முடியாது

படைப்பாளிக்குக் கர்வம் என்று சொல்பவர்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ளவேண்டும்.அவன் உங்கள் புறக்கணிப்பை எல்லாம் மிதித்து முன்னேறியவன். #HBDRajaSir

திரு

‏என் இரவை அழகாக்கும் இறைவனுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் #HBDRajaSir

writer settu

‏ராஜாவின் இசை என்பது இந்த உலகத்தின் நாம் எந்த ஓரத்தில் இருந்தாலும் நம்மை அவர் வாழும் உலகத்திற்கும் நம்மை சார்ந்த உலகத்திற்கும் அழைத்துச் செல்வார் !

குழந்தை அருண்

‏மழை..

நீ..

நான்..

காபி..

ராஜா சார்..

ஆல்டைம் பர்ஃபெக்ட் காம்போ..

சூர்(ப்)பனகை

‏பயணங்களில் மொபைல் சார்ஜ் இல்லாம ஸ்விட்ச் ஆஃப் ஆனாலும் ராஜா சார் பாட்டு மட்டும் காதில் தானா ஒலிச்சிக்கிட்டே இருக்கும்...!

Pradeep

‏வாழ்த்த வயதுமில்லை வார்த்தைகளுமில்லை

அச்சச்சோ...!

‏காலை எழுந்ததும் இளையராஜா பாட்டு.... தூங்கும்போதும் இளையராஜா பாடல்... ஆபிஸ் ல வேலை பார்க்குறப்பவும் இளையராஜா பாடல்... வேறென்ன வேண்டும் #HBDRAJASIR இந்த வாழ்விற்கு

பொம்மையா முருகன்

‏நம் வாழ்க்கையின் ரீவைண்ட் பட்டனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்... #HBDRajaSir

Dr. Sarankumar MD

‏சாகாவரம் பெற்றுவிட்டப் பெருமிதத்தில் புன்னகை பூக்கிறது உன் ஹார்மோனியம் நுழைந்து வெளிவந்த காற்று!

லதா கார்த்திகேசு

‏#காற்று உள்ளவரை

#இசை இருக்கும்

#மூச்சு_காற்று உள்ளவரை

#ராஜா_இசை இருக்கும் #HBDRAJASIR

ஒரு தல இராவணன்

‏மழைக்கால பேருந்து பயணங்களில் ஜன்னலோர இருக்கை ராஜா பாட்டு!

சொர்க்கம்

உழவர் மகன்

‏கோட்டை இல்லை, கொடியும் இல்லை அ(எ)ப்பவும் தான்

கவிதா சொர்ணவல்லி

தடுமாறிய அத்தனை தருணங்களிலும் கைநீட்டி அழைத்து சென்றிருக்கிறீர்கள் ஒரு வழிகாட்டி நட்சத்திரத்தைப் போல.

அழுதழுது அயர்சியுற்ற நாட்களிலெல்லாம், பேரன்புடன் அரவணைத்திருக்கிறீர்கள் ஒரு மழையைப்போல .

திக்குதெரியாமல் விக்கித்து போன பொழுதுகளிலெல்லாம் ஆவேசமாக உங்களிடம சரணடையும் நேரத்தில், பெருங்கனிவுடன் தலை தடவி விட்டிருக்கிறீர்கள் மென்பனி ஒன்றைப் போல.

முதல் வெட்கத்தில், முதல் காதலில், முதல் முத்தத்தில், முதல் அரவணைப்பில், முதல் அழுகையில்... நீங்கள் இல்லாமல் கடந்த "முதல்" எது மிச்சம் இருக்கிறது இந்த வாழ்வில்??

வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நீங்கள் உடனிருந்திருகிறீர்கள் ராஜா, கண்டுகொள்ளப் படாவிடினும், தன் பணி செய்யும் நிலவைப்போல.

உறைந்து போன, கடக்க முடியாத இக்காலக்கட்டதை நான் உங்களின் கை பிடித்தே கடக்கிறேன் ராஜா. ஒரு எகிப்திய myth போல நீங்கள் என் வாழ்வில். உங்களைப் பின் தொடரும், உங்களின் மீது பெரு மையல் கொண்ட சிறு பெண் போல நான்.

இதை எழுதிக் கொண்டிருக்கும் இத்தருணத்திலும், நீங்கள் இசைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்னருகில் அமர்ந்து. என்னையறியாமல் வடிந்தோடும் சில துளி கண்ணீருடன், உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தட்டச்சிக்கொண்டிருக்கிறேன். உணர்வு மேலெழுச்சியில் "நீங்கள் என் கடவுள் அல்லவா" என்றும் எழுதத் தோன்றுகிறது.

எதுவாகினும் நீங்கள் இல்லாமல் இவ்வாழ்வு இல்லை ராஜா. இப்பிறவி பெருங்கடலை கடக்க உதவி செய்யும் பெரும் படகோட்டி நீங்கள். உங்கள் பின் பயணிக்கும் சிறு மீன் நான்.

இன்னம் இன்னமும் பல நூறு ஆண்டுகள் நீங்கள் நீடூழி வாழ வேண்டும் ராஜா. என் போன்ற தத்தளிக்கும் மனதுகளுக்காக. இத்தருணத்தின் உங்களை அணைத்துக் கொள்கிறேன் ராஜா. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Narasimahan Ramakrishnan

இளையராஜா ரசிகர்களை பட்டியல் போட்டால் என்னை பின்வரிசையில் தான் சேர்த்துக்கொள்வேன். அவரது இசையை கேட்டு ரசிக்கும் தீவிரத்தின் அடிப்படையில் அல்ல, அவரது இசை நுட்பங்களை ரசிக்கும் திறனின் நுட்பன்களின் அடிப்படையில். அவரது இசைப்பற்றி அதி தீவிர ரசிகர்கள் எழுதுவதையும், பேசுவதையும் கேட்கும் போது எப்படி எல்லாம் ரசிக்கின்றனர் என்று வியக்கவே தோன்றுகிறது. ராஜாவை ரசிக்க இன்னமும் கற்றுக்கொள்ள வேண்டும்.

Mani Mkmani

ஒரு பாட்டில் இவன் வைக்காத ரகளை இல்லை. அறிந்ததில் யாவரையும் விட பெரும் கலகக்காரன். இவனைக் கேட்கும் தருணங்களில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது திடுக்கிடுகிறது.

Kuppuswamy Ganesan

இளையராஜாவின் அத்தனை ஆயிரம் அற்புதங்களில் ஒரேயொரு பாடலை மட்டும் சொல்லவேண்டுமென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாடலைச் சொல்வோம்.

எனக்கு இது. நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தின் உறவெனும் பாடல்.

அன்றும்

இன்றும்

என்றும்.

Joseph Anto

வாழ்க்கைல கொண்டாட்டமான நாட்கள் இரண்டே இரண்டு தான்.

1. சம்பளம் வர்ற நாள்.

2. இளையராஜா பொறந்த நாள்.

#HappyBirthdayIlaiyaraaja

Jeyaseelan Jey

காதல்,கோபம்,சோகம்,மகிழ்ச்சி,தனிமை,விழாக்கள்,ஆர்க்கெஸ்ட்ரா,இழப்பு,வருகை,வாழ்த்து என வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களும் ராஜாவின் இசை இல்லாமல் நிறைவடைவதில்லை நம் தமிழ்ச்சமூகத்திற்கு... அந்த இசைக்கு இன்று பிறந்த நாள்...

வாழ்த்துகள் #ராஜா..எப்போதும் வாழ்க உங்கள் இசை போல...


Post Comment View Comments
புதுமை நாயகன்!

Published : 04 Jun 2018 07:11 IST

பிரேம்

 


இளையராஜா திரையிசை வித்தகர் என்பது அனைவருக்கும் தெரியும். திரைப்படம் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால்கூட அவரை விரிவாகச் செயல்பட விடாமல் தடுத்ததும் திரைப்படம்தான். திரைப்படம் எனும் வடிவம்தான் இந்தியாவில் இசைக்கான பெரிய வெளிப்பாட்டு வடிவமாக இருப்பதால், அவர் அதற்குள் அடங்கிவிட்டார். மற்ற நாடுகளில் இருப்பதுபோல் இசைக்கென்று தனியாக ஒரு களம் இருந்திருந்தால் அவர் ஒரு இசைப் படைப்பாளியாக இன்னும் பெரிய அளவில் சாதித்திருப்பார். அதற்கான கற்பனை வளமும், அதற்கான வடிவங்களை உருவாக்கும் திறனும் இளையராஜாவிடம் உண்டு.

இளையராஜாவைப் பொறுத்தவரை எண்ணிக்கை அளவில்கூட உலக அளவில் உள்ள பெரிய இசைப் படைப்பாளிகளைவிடப் பல மடங்கு அதிகம் செய்திருக்கிறார். திரையிசையில் கோலோச்சிய அதேசமயம், வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் சாஸ்திரிய சங்கீதத்தில் தன்னுடைய மேதமையை வெளிப்படுத்தவும் அவர் தவறவில்லை. ராகம் என்பது ஏற்கெனவே இருக்கும் வடிவம். அதை இன்னும் செழுமையாக்கிவிடுகிறார் இளையராஜா. ஒரே பாடலில் வெவ்வேறு அடுக்குகளை வைக்கிறார். புதிய இசைப் படைப்பாகத் தான் அதைக் கொடுக்கிறார். இவையெல்லாம்தான் அவருடைய மிகப் பெரிய பங்களிப்பு.

ஆயிரம் படங்கள் என்றால் வெறும் படங்கள் அல்ல, பின்னணி இசை, தொடக்க இசை, சில சமயம் லீட் மோடிஃப் என்று சொல்லக்கூடிய தொடர்ந்து ஒலிக்கக்கூடிய.. கதைக்கே உரிய சில பாடல்களைப் படத்தில் அங்கங்கே கொடுப்பார். புதிய வடிவங்களை உருவாக்கக்கூடியவர் அவர். தொடர்ந்து பரிசோதனை முயற்சிகளையும் மேற்கொள்கிறார். அவர் இசைக் கருவிகளை பயன்படுத்தும் விதம் இன்னொரு சிறப்பு. தில்ருபா போன்ற மிக அரிதான கருவி கள் உட்பட ஏராளமான கருவிகளை அவர் பயன் படுத்தியிருக்கிறார். அவர் பயன்படுத்தியிருக்கும் தோல் இசைக் கருவிகளையும் தேர்ந்தெடுத்த கலைஞர்களையுமே தனித்த ஒரு ஆய்வாக்கலாம். ஒரு 4-5 நிமிடப் பாடல்களில் பல விதமான இசைக் கருவிகளுக்கான சின்னச் சின்ன பகுதிகளை அவர் கொடுக்கிறார். அவரது சில பாடல்களுக் கான இசையை ஒரு பெரிய தனி இசையாகக்கூட வளர்த்தெடுக்க முடியும்.

நாட்டார்/நாட்டுப்புறப் பாடல்கள் நிறைய இருந்தாலும் அவற்றை மொத்த மாக விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய வடிவங்களுக்குள் அடக்கிவிடலாம். நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் அவர்களு டைய குரல் வளம் ஆகியவற்றால்தான் தனித்துத் தெரிகிறார்கள். ஒரு திரையிசை அமைப்பாளர் அதற்குள் அடங்கி கிராமிய சினிமா பாடல்களைக் கொடுத்துவிட முடியாது. ஆகையால், அடிப்படை யான சட்டகத்தை எடுத்துக்கொண்டு, ஒரு வடிவத்தைப் புதிதாக அவர் உருவாக்குகிறார். அதிலும் அவரது படைப்பாற்றலுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. ‘நாயகன்’ படத்தின் ‘தென் பாண்டிச் சீமையிலே’ ஒரு சிறந்த உதாரணம்.

உலக அளவில் இருக்கக்கூடிய இசை யின் பின்னணி தமிழ்ச் சமூகத்தின் உணர்வுகளுக்கு ஒரு அடையாளத்தைத் தருவதாக இருந்ததில்லை. உலகமயமா தல் சூழலில்கூட அது நிறைவேறவில்லை.

தமிழ்ச் சமூகத்துக்குப் பலவும் வெளியிலிருந்து வருபவைதான். அவரது இசை மூலமாகத் தமிழர்கள் தங்களின் உணர்வுகளுக்கு ஒரு அடையாளம் கிடைப்பதாக நினைக்கிறார்கள்.

-பிரேம், எழுத்தாளர், ‘இளையராஜா:

இசையின் தத்துவமும் அழகியலும்’

நூலின் ஆசிரியர்களில் ஒருவர்.

நீட் தேர்வில் தமிழகத்தில் 40% பாஸ்; பீகார் மாணவி முதலிடம் - தமிழக மாணவி 12-ம் இடம்


Published : 04 Jun 2018 15:38 IST

புதுடெல்லி

 



நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் பீகாரைச் சேர்ந்த மாணவி கல்பனா 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அதேசமயம் தமிழகத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று 12 -ம் இடம் பிடித்துள்ளார்.

நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
 
இந்த ஆண்டு முதல் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகள் மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்பவருக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி நீட் தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்தது.

நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சுமார் ஒன்றரை மணிநேரம் முன்னதாக, 12:30 மணியளவில் வெளியாகின.

இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத மொத்தம் 13,26,725 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 12,69,922 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களில் 7,14,562 பேர் தகுதி பெற்றுள்ளனர். பீகாரைச் சேர்ந்த மாணவி கல்பனா 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

தெலுங்கானா மாணவர் ரோகன் புரோஹித் 690 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தையும், டெல்லி மாணவர் ஹிமான்ஷூ சர்மா 690 மதிப்பெண் பெற்று மூன்றாவது இடத்தையும், டெல்லி மாணவர் ஆரோஷ் தமிஜா 686 மதிப் பெண் பெற்று 4வது இடத்தையும், ராஜஸ்தான் மாணவர் பிரின்ஸ் சவுத்திரி 686 மதிப்பெண் பெற்று 5வது இடத்தையும் பிடித்துள்ளார்.

மகாராஷ்டிரா, ஆந்திரா, பஞ்சாப், டெல்லி என மற்ற மாநில மாணவ, மாணவியர் அடுத்தடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று 12 இடம் பிடித்துள்ளார்.

தமிழகத்தில் 40% பாஸ்

தமிழகத்தில் 12 லட்சம் மாணவ, மாணவியருக்கும் அதிகமானோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அவர்களில், 1, 14,602 மாணவ, மாணவியர் நீட் தேர்வை எழுதினர். தேர்வு எழுதியவர்களில் 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் 39.55 சதவீதமாக உள்ளது.

இந்திய அளவில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 50 பேரில் தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி மட்டுமே இடம்பிடித்துள்ளார்.

இதுபோலவே புதுச்சேரியில் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 4573 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 4462 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 1768 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

மதிப்பெண் - தகுதி

பொது பிரிவில் 119 மதிப்பெண் வரை தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதர பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிரிவில் 118 - 96 மதிப்பெண் பெற்றவர்கள் தகுதி உடைவயர்கள் ஆவர்.

இதன்படி, பொதுப்பிரிவில் 6,34,897 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பிற்பட்டோர் பிரிவில் 54,653 பேரும், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 17209 பேரும், பழங்குடியினர் பிரிவில் 7446 பேரும் தேர்வாகியுள்ளனர்.
வரவிருக்கும் விசேஷங்கள்
  • ஜூன் 15 (வெ) ரம்ஜான் பண்டிகை
  • ஜூன் 21 (வி) ஆனி உத்திரம்
  • ஜூலை 17 (செ) தட்சிணாயன புண்ணிய காலம்
  • ஜூலை 21 (ச) தினமலர் நிறுவனர் டிவிஆர்., 34 வது நினைவு நாள்
  • ஜூலை 27 (வெ) சங்கரன்கோயில் ஆடித்தபசு
  • ஆகஸ்ட் 03 (வெ) ஆடிப்பெருக்கு
'ஈரோடு' எழுத்து மாற்றம் : அரசுக்கு பரிந்துரை

Added : ஜூன் 05, 2018 01:20


ஈரோடு: ஈரோடு பெயரில், விரைவில் எழுத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. விரைவில் அரசாணை வெளியாகும் எனத் தெரிகிறது.தமிழில், ஈரோடு என்பதை, ஆங்கிலத்தில், 'erode' என, எழுதப்படுகிறது. தமிழ் உச்சரிப்புக்கு தகுந்தாற்போல், ஆங்கில உச்சரிப்பு இல்லை. ஆங்கில வார்த்தையில் கடைசியில் உள்ள, 'இ' என்ற எழுத்துக்கு பதிலாக, 'டு' என்ற எழுத்தை கடைசியில் சேர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் தமிழில் உச்சரிப்பது போன்று ஆங்கிலத்திலும், சரியான உச்சரிப்பு அமையும்.எனவே, ஆங்கிலத்தில் ஒரே ஒரு எழுத்தை மட்டும் மாற்றியமைக்க, கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரை கடிதம், ஈரோடு கலெக்டர் பிரபாகர் மூலம், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஓரிரு நாட்களில், 'erodu' என ஆங்கிலத்தில் உச்சரிக்கும் வகையில், அரசிடம் இருந்து அறிவிப்பு வெளிவரும். அதன் பின், அரசிதழில் அரசாணையாக வெளியிடப்படும். இதற்கான நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது என, வருவாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.

NEWS TODAY 14.02.2026